யார் கைகளில் இந்து ஆலயங்கள் ?கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகளுக்கு அது யார் கையில் இருந்தால் என்ன என்ற கேள்வி கேட்கும் மிக அதிமேதாவி பிற்போக்குவாதிகள் அனைவருக்கும் பதில் சொல்லும் விதமாக இந்த புத்தகம் இருக்கிறது. மசூதிகளையும் தேவாலயங்களையும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பராமரிக்கும் போது இந்துக்கள் என்ன ஏமாளிகளா அதனை எங்களிடம் விட்டு விடுங்கள் என்று பிஜேபி சங்பரிவார் கூட்டங்கள் சமீப காலமாக கலகக்குரல் களை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே வருகின்றனர், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சிலைகள் கடத்தப்படுகின்றன அதற்கெல்லாம் காரணம் இந்து அறநிலையத்துறையின் கீழ் கோவில்கள் இருப்பதுதான் எனவே கோவில்களில் பாதுகாக்க அதை எங்களிடம் ஒப்படையுங்கள் ஓலமிடுகிறார்கள்.
ஆனால் அந்த அறைவேக்காட்டு அறிவாளிகளுக்கு எப்படி புரிய வைப்பது இப்போதும் கோவில்கள் இந்துக்கள் கைகளில்தான் இருக்கிறது ,இந்து அறநிலையத்துறையில் ஒருவர் பணியாற்ற அவர் இந்துவாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதி இருக்கிறது, அப்படி இருக்க அவர்கள் சொல்லும் அந்த “இந்துக்கள் யார்” பிராமணர்கள் கைகளிலும் சனாதன வாதிகள் கைகளிலும் கோவில்கள் செல்ல வேண்டும் அப்போதுதான் கோவில் சொத்துக்களை கொள்ளை அடிக்க முடியும் ,ஆதினங்கள் மடாதிபதிகள் சொகுசு வாழ்க்கை வாழ முடியும்.199 பக்கம் கொண்ட இந்தப் புத்தகம் வாசிப்பவரை அடடே! அப்படியா!! என ஆச்சரியப்பட வைக்கும், சில இடங்களில் சிரிக்கவும், அதே அளவு கோபம் கொள்ளவும் செய்யும். புத்தகம் மூன்று பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது முதல் பகுதி பொதுவான மதம் , கோவில், தத்துவங்கள் அதன் தோற்றங்கள் என இன்றைய நிலைமைகளோடு விவரிக்கப்பட்டிருக்கும்.
இரண்டாம் பகுதி சட்டம் படித்து விட்டு தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் அஷ்ரத் பேகம் அவர்களின் தந்தை இந்து அறநிலையத்துறை இணை ஆணையராக பணியாற்றிய தோழர் ஜெயராமன் அவர்கள் நேர்கானல் நாகை மாவட்டம் கொள்ளிடக் கரையில் பிறந்தவர். சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் தலித் மக்களுக்கு ஆதரவாக நின்றதால் சொந்த கிராமத்தில் சாதி விளக்கு செய்யப்பட்டவர் என அவரின் அறிமுகமே அட்டகாசமாக இருக்கிறது. கடவுள் நம்பிக்கையற்ற ஒரு கம்யூனிஸ்ட் கோவில் ஆணையராக எவ்வளவு சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதை அவரை வாசிக்க நமக்கு தெரியும்.
தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோயில் முதல் சிறிய கோவில்கள் வரை அவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓரளவுக்கு நமக்கு படம் பிடித்துக் காட்டும் அவருடைய நேர்காணல் பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைக்கு சற்றும் குறைவானது அல்ல தமிழகம் முழுவதும் கோயில்களும் மசூதிகளும் பின்னிப்பிணைந்த உறவுகளைக் கொண்டுள்ளது எந்த அளவுக்கு எனில் வைணவத்தின் தலைமை இடமான ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார் என்ற அம்மன் சன்னதி இருக்கிறது அந்த அளவிற்கு முஸ்லிம்களும் இந்துக்களும் காலம் தொட்டே ஒற்றுமையோடு வாழ்ந்துள்ளனர்.
துலுக்க நாச்சியார்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு புதிய யானை வாங்குவதற்கு சென்னையில் வழக்கு தொடர்ந்து புது யானை வாங்குவதற்கு காரணமாக இருந்தவர் ஒரு முஸ்லீம் நீங்கள் ஒரு முஸ்லீம் நீங்கள் ஏன் கோயிலுக்கு யானை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறீர்கள் என நீதிபதி கேட்ட போது அவர் சொன்ன பதில் சங்கர நாராயணன் கோவிலில் இருந்து தான் காலம் தொட்டு இன்றுவரை மசூதிக்கு வெளிச்சத்திற்கு எண்ணெய் கொடுக்கிறார்கள்.அதேபோன்று ஆத்தூர் வண்டி காளியம்மன் கோவில் பல்லக்கின் நான்கு பக்கங்களில் ஒருபுறம் முஸ்லிமம் இன்னொரு புறம் கிறிஸ்தவர்களும் சுமக்கிறார்கள்.எட்டுக்குடி கோவில் சாமி புறப்பாட்டின் போது முஸ்லிம்கள் தீபாரதனை பெறுகிறார்கள், திருவிழா முடிந்த பின் மூன்று மதத்தினரும் வந்தபிறகு அவர்கள் முன்னிலையிலேயே கோவில் வரவு-செலவு பார்க்கப்படுகிறது.
இப்படி ஏராளமான நிகழ்வுகளை தன சொந்த அனுபவங்களோடு அடுக்கி வைத்துக் கொண்டே போகிறார் ஜெயராமன். இன்னும் தலித்துகள் நுழைய முடியாத கோவில்கள். தலித்துகள் ஏற முடியாத கோவில் தேர்கள் என தமிழகம் முழுவதும் நிரப்பி இருக்கிறது. இவற்றை எல்லாம் தன் பணியாற்றிய இடத்தில் மாற்றி இருக்கிறார், கும்பகோணம் மகாமகத்தை வெற்றிகரமாக முடித்தவர், பிரமாண்டமான திருவண்ணாமலை கோவில் நடை பாதை அமைத்தவர், 10 ஆண்டுகளாக பண பற்றாகுறையினால் வெகு நாட்களாக உடைக்காமல் இருந்த கோவில் மண்டபத்தை பத்தாண்டுகள் கழித்து தீர்மானித்த விலையை காட்டிலும் குறைந்த செலவில் உடைத்தவர் , திருவண்ணாமலை கோவில் விவசாய நிலத்தை மேம்படுத்தி 1200 மூட்டை நெல் அறுவடை செய்தவர், கம்யூனிஸ்ட் என்பதாலேயே தண்ணீர் இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டவர்,கம்யூனிஸ்ட என்பதாலேயே சில கோவில்களுக்கு விரும்பி அரசால் நிர்ணயிக்கப்பட்டவர்.
ஆதினங்களுக்கும் மடாதிபதிகளுக்கும் எதிரான பல தீர்மானங்கள் கொண்டு வந்தவர் தமிழகத்திலேயே கோவில் துணிகளை அதிக ஏலத்திற்க்க விற்றவர், தமிழகத்திலேயே முதல் முறையாக செருப்புக்குப்புக்கு டோக்கன் போடும் பழக்கத்தை ஒழித்தவர், என இந்த புத்தகத்தை வாசிக்கும்போது ஜெயராமன் நம் முன் ஊர் பண்ணையாரை அடக்கிய எண்பதுகளின் கதாநாயகனைப் போல் உயர்ந்து நிற்கிறார் ஆனால் அவரை நேரில் சந்தித்தால் நிச்சயம் நம்முடைய எண்ண பிம்பங்கள் அனைத்தையும் தூளாக்கும் மனிதராக வேட்டி ஜெயராமன் புன்னகைப்பார்.
இந்து அரநிலயதுறையின் கீழ் கோவில் இருப்பதால் என்ன நடக்கும் என்பதையும், தமிழக கோவில்களில் நிகழும் மதசார்பற்ற போக்குகளையும், இன்னும் தீர்க்க முடியாமல் இருக்கும் இடியாப்ப சிக்கலான வடகலை தென்கலை பற்றியும் ,நாம் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் ஒரு வாசலைத் திறந்து விடுகிறது.
உண்மையான வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருக்கும் மதத்தை பலாத்காரமான முறையில் அழிக்க முயற்சிப்பது இயக்கவியலுக்கு முரணானது என்கிறார் மாமேதை லெனின். அந்த வகையில் பொதுவுடமைகாரர்கள் கோவிலின் அங்கமாக மாறினால் தான் அதன் பேரால் நிகழும் சுரண்டலை தவிர்க்க முடியும் என மூன்றாம் பாகத்தில் விவரிக்கப்படுகிறது.
எழுத்தாளர் ரமேஷ்பாபு
பேரம்பிற்குரிய தோழர் ரமேஷ்பாபு அவர்களின் ஆக்கத்தில் உருவான புத்தகம். எப்போதும் அவர் எழுத்தில் ஒரு பாணி இருக்கும் அது வாசிப்பவரை அவருக்கு அருகில் உட்கார்ந்து உரையாடுவதை போலவே உணரவைக்கும்,அதேசமயம் இந்துத்துவவாதிகள் கோவில்களை ஆக்கிரமிக்க துடிக்கும் இந்த காலத்திற்கு ஏற்ற புத்தகமாகவும் உள்ளது, பல பணிகளுக்கு மத்தியில் தோழர் ரமேஷ்பாபு அவர்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது அவருக்கு தோழமை கலந்த வாழ்த்துக்கள். திருவண்ணாமலை நடைபாதை அமைக்க குறைந்த விலையில் இரும்பு தூண்களை கொடுத்த அந்த முஸ்லிம் சகோதரரின் முகம் இன்றும் என் கண்களில் அப்படியே இருகிறது என்று ஜெயராமன் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார், ஆதேபோன்று ஜெயராம் அவர்களின் புகைபடமும் இதில் இடம்பெற்று இருந்தால் புத்தகம் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் முகம் பதித்து இருக்கும் .
“தோழர் ரமேஷ்பாபுவின் ஊடே தோழர் ஜெயராமனோடு உரையாடுங்கள்”
புத்தகப்பெயர் : யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
எழுத்தாளர் : எஸ்.ஜி. ரமேஷ் பாபு
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 170/-
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/yaar-kaikalil-indhu-alayangal/
தோழமையுடன்
எஸ்.குமரவேல்.. ( S. Kumaravel Cdm )
கடலூர் மாவட்டச் செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
புத்தகத்தின் விமர்சனம் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது…