தீபச்சுடராய் ஒளிர்விட்ட உனை கண்டு பிரகாசித்த வேளையில் எரிமலையாய் தகித்து வெதும்பினாய்
நெருப்பென்று நினைத்தேன் !
விதைத்ததை முளைக்கவைத்த உனை விளைநிலமாய் பார்த்த வேளையில்
பாலைவனமாய் வரண்டு போனாய்
நிலமென்று நினைத்தேன் !
தென்றலென படர்ந்த உனை இன்பமென ரசித்த வேளையில்
புயலாய் மாறி நிலைகுலைய வைத்தாய்
காற்றென நினைத்தேன் !
ஒடையாய் நடனித்த உனை ஒவியமாய் உருவகித்த வேளையில் காட்டாற்று வெள்ளமாய் தறிகெட்டுத் தலும்பினாய்
நீரென்று நினைத்தேன் !
நீலக் குடையென உனை தொட்டுவிடத் துடித்த வேளையில்
முடிவற்ற வெற்றிடமாய் ஊடுருவினாய்
ஆகாயமென்று நினைத்தேன் !
நீ யாரென்று கூறாது
ஒரு நிலையில்லா உருகொண்டு எனை
பல நேரம் அழ வைத்தாய்
சில நேரம் மகிழ வைத்தாய்
துயர் வரும் தருணம் துணிவை அளித்தாய்
அச்சத்தை அகற்றி அடியெடுக்க வைத்தாய்
சினம் கொண்ட சூழலில் நிதானிக்க செய்தாய்
உனை எதிர்கொள்ள போராடி
தோற்று துவண்டு
கட்டி இழுக்காமலும் வெட்டித் தள்ளாமலும் அமர்ந்த போது,
நான் நெருப்பல்ல நிலமல்ல காற்றல்ல நீரல்ல ஆகாயமல்ல
உன் மனம் என உணர்த்தி அமைதியை அளித்தாய் !!!.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


இயற்கை கொடுத்த அனைத்து அற்புதமும் சீர்கெட்டு போய் விட்டதன் வருத்தம். வெட்ட வெளிச்சமாகியது. மனதை வருத்த மனக்கதவுக்குள் நுழைந்தது. ஆ அது மனம் அந்த மனம் நினைத்தால் அனைத்தும் சீராகும் என சொல்லாமல் சொல்லி வைக்கிறது.சிறப்பு தோழர்.
நன்றி தோழர்
மனம் எனும் மாயாவியை பற்றி அருமையான பதிவு👌💐வாழ்த்துகள் தோழர்💐💐💐
நன்றி தோழர்