தன்வியின் பிறந்தநாள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : தன்வியின் பிறந்தநாள்
ஆசிரியர் : யூமா வாசுகி
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன் – பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 131
விலை : ₹120.00
தன்வியின் பிறந்தநாள் என்ற இந்த சிறார் சிறுகதை தொகுப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றுள்ளது என்பது பெரு மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
சக உயிர்கள் மீதான அன்பு நேசம் கருணை இவற்றையெல்லாம் மிக எளிய முறையில் குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் இந்த கதைகள் எழுதப்பட்டு இருப்பது இதன் சிறப்பு.
சிறுகதை தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகளில் ஜெய் என்ற அண்ணனும் தன்வி என்ற தங்கையும் முக்கியமான கதாபாத்திரங்கள்.
இயற்கையை மிகவும் நேசிக்கும் சிறுமி தன்வி. அவளுக்கு பிறந்தநாள் வருகிறது. வாழ்த்துவதற்காக அவளுடைய பெற்றோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமல்ல, மரங்கள், விலங்குகள், பறவைகள், சூரியன், நிலா, பாட்டு, ஓவியம் என்று அவள் நேசிக்கும் அத்தனையும் இவளுக்கு வாழ்த்து சொல்லி முத்தமிடக் காத்திருக்கிறது. அத்தனையும் ஒரு மணமிக்க ரோஜாவாக மாறுகிறது. அவள் அதை ஆசையோடு முகர்ந்து முத்தமிடும்போது, மொத்த இயற்கையும் அவளுக்கு வாழ்த்து சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிடுகிறது. எத்தனை அழகான கற்பனை. குழந்தைகள் மட்டுமே இந்த உலகத்தில் இருக்க அத்தனை பொருட்களையும் பேதமின்றி நேசிக்கக் கூடியவர்கள் என்பதை உணர்த்தும் கதை..
காக்கை குருவி எங்கள் ஜாதி என்பார் பாரதியார். இதைச் சரியாக கடைபிடிப்பது குழந்தைகள் தான். ஒரு ஆட்டுக்குட்டிக்கு வீட்டில் மீதமாகும் அனைத்து உணவுகளையும் கலந்து கொடுப்பது அண்ணன் தங்கையின் வழக்கம். அதை தினசரி செய்யும் பொழுது அவர்களுக்குக் கிடைத்த அன்பான அன்பளிப்பு என்ன என்பதைச் சொல்லும் கதை..

ஒரு நாய்க்குட்டிக்கு தனக்கு பெயர் இல்லையே என்பது கவலை. ஜெயின் வீட்டில் அடைக்கலமாகி எப்படி எதற்கு பெயர் கிடைத்தது என்னும் ஒரு கதை..
அம்மாவிற்கு தலைவலிக்கு டீ வாங்க செல்லும் ஜெய், தொடர்ச்சியாக டீக்கடையில் இருந்து தெரிந்தவர்கள் சொல்லும் வேலையை எல்லாம் முடித்துக் கொண்டு
அம்மாவிற்கு டீயை கொண்டு போகும்போது இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. ஜெய் செய்தது சரியா? என்று அவன் செம்பூனை கேட்பதாய் ஒரு கதை..
இந்தப் பத்து கதைகளிலும் மிகவும் விரும்பிய கதை குணசுந்தரி எழுதிய தேர்வு.
வளர்ச்சி குன்றிய குணசுந்தரி என்ற குழந்தை பற்றிய கதை. ஒருங்கிணைந்த கல்வி வாய்ப்பால் அவள் சாதாரண பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளி செல்ல அவள் பயந்தாலும், மெல்ல மெல்ல அவள் அவள் அறிவியலாசிரியர் ராமமூர்த்தி சொல்லும் கதைகளால் ஈர்க்கப்பட்டு , பள்ளிக்கு விரும்பி செல்கிறாள்.
அவள் எப்படி பள்ளியில் அனைவருக்கும் செல்ல பிள்ளையாய் இருந்தாள், அக மாணவர்கள் ஆசிரியர்கள் அவளை நடத்தும் பாங்கு இதையெல்லாம் வாசிக்கும் பொழுது நம் மனம் நெகிழ்ந்து விடும். இந்தக் கதைகளை குழந்தைகள் வாசிக்கும் பொழுது, சிறப்பு குழந்தைகளையும் நேசிக்க வேண்டும் என்ற உண்மையை உணர்வார்கள்.
நூல் அறிமுகம் எழுதியவர்:
பூங்கொடி பாலமுருகன்
மேலும் இதுபோன்ற புத்தகங்களை வாங்க thamizhbook.com இணையதளம் தொடர்பு கொள்ளவும்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

