ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 15
கிராமத்து நிலவின் தாழ்வாரத்தில் ஓர் உரையாடல்..
இளங்காலை வெயிலை உறிஞ்சியபடி உடலை முறித்துக் கொண்டிருந்தது ஜன்னல், நிலைக்கதவுகள். நான் நிலைவாசல் கடந்து சோம்பலை முறித்துக் கொள்கிற போதே தன்னியல்பில் உடலின் ஒவ்வோர் அசைவும் அதற்கேயுரிய நடன பாவணைகளை வெளிப்படுத்திய வண்ணமாயிருந்தது. மெலிசாக வீசுகிற இளங் காற்றுக்கு உடலை ஒப்புக் கொடுத்தபடியே சாலையோரம் அசடாய் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்தை நான் நிதானமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். பச்சைக் கொடியசைத்து வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக பூக்கள் ததும்ப நிறைவாயிருந்தது அம்மரம். அவையெல்லாம் இரவு வானில் பூத்துவிட்டு மரத்தில் இளைப்பாற வந்து அமர்ந்துவிட்ட நட்சத்திரங்கள் தானோ என்று இருளுக்கும் பகலுக்குமான அகாலத்தில் மனமோ இரசனையால் நிரம்பிக் கொண்டது.
முற்றத்தில் கைகள் சிவக்க மண்பானையில் செம்மண் குளைத்து நட்டு வைத்த காட்டு ரோஜா செடிகள் யாவும் இதழ் முழுக்க வர்ணங்களைப் பூசிக் கொண்டு விதவிதமாய் முகத்தைக் காட்டி குழந்தைமையாய் சிரித்துக் கொண்டிருந்தன. பூவிதழ் விளிம்பில் திரண்டு ததும்பி நிற்கிற ஒற்றைப் பனித்துளி, எப்படியாவது உதட்டு மேலிருந்து விழக் காத்திருக்கும் மழலையின் வாநீரை எனக்கு நினைவுபடுத்திவிடும். இப்படி நேற்றிரவு பூத்த நட்சத்திரங்களையும், கிளையில் துளிர்த்த பூக்களையும் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று குழந்தைகளின் ஞாபகங்கள் நறுமணம் போல மனதிற்குள் வந்து நிறைந்து கொள்கிறது. எல்லாவற்றிலும் தென்படுகிற ஒரு குழந்தைமையை மனம் எப்படியோ கண்டெடுத்துவிடுகிறது போல. மரத்தடி நிழலில் திறந்த புத்தகத்தினுள் எதார்த்தமாய் வந்து விழுகிற பன்னீர் பூவைப் போல மழலைக் குரலில் பூத்துச் சிரிக்கிற காளீஸ்வரி, பிரியாவின் முகங்கள் மெல்ல என் ஞாபகக் கேணியிலிருந்து மேலெழும்பி வருவதை நன்றாகவே உணர முடிகிறது.
சாலைத் திருப்பத்தில் தலை நிறையப் பூச்சூடி நிற்கிற வேப்பம் மரத்தில் சூல் தரிக்காது வாடிப் போகிற தனித்த மலட்டுப் பூக்களைப் பற்றி இதுவரை எவராவது அக்கறை கொண்டிருப்பார்களா என்று ஒருகணம் நிதானமாய் யோசித்துப் பார்க்கிறேன். அத்தனைக் கோடி நட்சத்திரத் திரள் கூட்டத்திலிருந்தும் அன்றாடம் தொலைந்து போகிற ஏதோவொரு விண்மீனை நினைத்து மனிதன் எப்போதாவது கவலை கொண்டிருப்பானா என்றும் சிந்தித்துப் பார்க்கிறேன். இப்படி மனிதப் பார்வைகளுக்கு அப்பால் தொலைந்து போன நட்சத்திரங்களையும், மலர்ந்தும் மலராத பூக்களையும் போல, இத்தனைக் கோடி குழந்தைகளில் எவரது பார்வைக் கோணத்திற்குள்ளும் வந்துவிடாத இந்த காது கேளாத குழந்தைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கையில் சுருக்கென்று அடிவயிற்றில் ஏதோவொன்று பிரவச வலியாய் தைப்பது போலிருக்கிறது.
பெத்த புள்ளைங்க பத்தோட பதினொன்னா, இதுவும் இருந்துட்டுப் போவட்டுமே! என்றபடி அறியாமையின் பாதாளத்தில் தங்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாக்கிவிடுகிற எத்தனையோ பெற்றோர்களுக்கு மத்தியில், தாமாக சிகிச்சைக்கு ஒப்புக் கொண்ட காளீஸ்வரி, பிரியாவின் குடும்பங்களை ஏனோ இக்கணத்தில் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. சென்னை வந்து பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான வெளிச்சத்தின் நம்பிக்கையை கண்கள் முழுக்க நிறைத்துக் கொண்டு மிளிர்ந்த அந்தக் கண்களைக் கண்ட நொடியில், இனி எல்லாமே சாத்தியமாகிவிடும் என்கிற சுடர் என்னுள்ளும் பற்றிக் கொண்டு கமழத் துவங்கிவிட்டது. ஆனாலும் எதிர்க்காற்றுக்கு அசட்டுத் தைரியத்தோடும், சிணுங்களோடும் முகிழ்த்தபடி எரிகிற அந்த அகல் விளக்கின் ஒளியை அணைத்துவிடுவதற்கு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் சிறிய தும்மலொன்றே போதுமானது என்கிற பயம் எனக்குள் இன்னமும் பதட்டத்தை விதைத்தபடியே தான் இருக்கிறது.
“கொழந்தைக்கு காது கேக்கலைன்னு சென்னைக்கு அழைச்சுட்டு போய், மூளைக்குள்ள ஆபரேசன் பண்ணப் போறதா சொல்லுறீங்களே, கேக்கவே பயமால்ல இருக்கு?” என்றபடி வழமையான ஆழிச் சங்கொன்றை எடுத்து பெற்றோரின் காதிலே ஊதிவிட்டால், அதுவொன்றே போதாதா? இந்நாள் வரையிலும் பெற்றோரிடம் அக்கறையாய் அடைகாத்து வந்த நம்பிக்கையின் வெளிச்சத்தை அது கருமேகம் சூரியனை மறைப்பது போல் செய்துவிடாதா? இவையெல்லாம் நினைத்து நினைத்து அது விரல் தொடுகிற ஒரு தொட்டாச்சிணுங்கியின் பேரதிர்ச்சியைப் போல ஒரு நடுக்கத்தை எனக்குள் நேற்றிரவிலிருந்து ஏற்படுத்திய வண்ணமாகவே இருக்கிறது.
சென்னைக்கு வந்து பரிசோதனையின் மூலமாக, சிகிச்சையின் வழியாக, பயிற்சியின் தொடர்ச்சியாக நன்றாகக் கேட்டுப் பேசுகிற குழந்தைகளைப் பார்த்தவுடன் வருகிற பரவச உணர்வினால், பெற்றோர்களின் ஆழ்மனதிற்குள் கிளர்ந்த நம்பிக்கையை நான் அப்படியே புடம் போட்டு ஆபரேசன் செய்து கொள்கிற நாள் வரையிலும் தக்க வைத்திருக்க வேண்டும். பசியைப் போக்குவதற்குப் பற்ற வைத்த வள்ளலாரின் நெருப்பைப் போல அணையாது அவர்களுக்குள் கிளர்ந்த பரவசத்தின் தீயைப் பேணிக் காக்க, அவர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்தபடியே தொடர்ச்சியாக அவர்களோடு இயங்கவும் வேண்டும்.
இங்கு, நான் இல்லாத சிறு இடைவெளியையும் நிரப்பிக் கொள்ள அக்கம் பக்கத்து அறியாமை நிறைந்த மனிதர்கள் எப்போதும் தயாராகவே இருப்பார்கள் என்பதே எனக்குள் ஒருவித பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. எனக்குள் துளிர்க்கிற அதீத கவலையெல்லாம் ஏதோதொரு அசந்தர்பத்தில் அறியாமையின் இருளுக்குள் தங்களது வெளிச்சத்தைத் தொலைத்தபடி, தங்கள் குறைபட்ட பிள்ளைகளை அந்த இருட்டுக்குள்ளே வாழ்வதற்கு பணித்துவிட்டால் இதுவரை முயற்சித்த எல்லாமும் பாழாகிவிடும் என்பதே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், பெற்றோர்களைக் காட்டிலும் நான் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் அசட்டுத்தனத்தை எண்ணித் தான் அதிகமாக அச்சப்பட வேண்டியதாக இருக்கிறது.
இளவெயில் பட்டு உடல் விறுவிறுத்துக் கொள்கிற போதே நிதானம் பிறந்து மனம் தெளிவடையத் துவங்கிவிட்டது. இன்று இரண்டு குடும்பங்களையும் எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென்கிற உறுதிப்பாட்டில் மெல்ல வாகனத்தில் கிளம்புகிற போதே சிலுசிலுவென்று அடிக்கிற காற்றில் உடலும் மனமும் இதமாய் நனையத் துவங்கிவிட்டது. நெடுநாளைக்கு அப்புறமாக குழந்தைகளின் வீடுகளைத் தேடிப் பயணப்படுகிற புத்துணர்வில் தன்னியல்பில் வந்து உதட்டில் ஒட்டிக் கொள்கிற சிரிப்பில் அசடாய் நான் கனிந்து நெகிழ்ந்து கொண்டிருந்தேன். அவர்களின் வீடுகளை நெருங்க நெருங்க மழலையின் பிஞ்சுக் கரங்களிலிருந்து வண்ண வண்ணக் கோடுகளின் கிறுக்கல்கள் வழியாக காகிதத்தில் ஓவியமாய் உருக்கொள்கிற கிராமத்தின் சாயலைப் போலொரு அற்புதமான ஊருக்குள் நுழைந்துவிட்டதான பரவசம் எனக்குள் கூடிவரத் துவங்கிவிட்டது.
மண்பாதையின் விளிம்பில் மனிதச்சங்கிலியாய் கைகோர்த்து நிற்கிற பள்ளிச்சீருடைக் குழந்தைகளைப் போல, நீர்மருது மரங்கள் யாவும் காற்றுக்குத் தலை உலுப்பியபடியே மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. சாலையிலிருந்து விலகி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் வரையிலும் கண்ணுக்குள் நிறைந்து கொள்கிற நீண்ட பச்சை வயல்களின் காற்றுக்கு இசைந்த அசைவுகள் யாவும் எனக்குள் ஒருவித ஆனந்தப் பரவச நிலையை நினைவுபடுத்தியபடியே இருக்கிறது. தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பால் மாடுகளின் கணங்.. கணங்.. கென ஒலிக்கிற காண்டா மணியின் சப்தங்கள் உள்ளுக்குள் ஏதேதோ செய்துவிடுகிறது.
தார்ச்சாலை, செம்மண் புழுதிபடிந்த சாலையாய் உருக்கொள்கையில் ஊரின் உதட்டிற்கு சிவப்புச் சாயம் பூசியதைப் போலொரு அழகு கிடைத்துவிடுகிறது. கிடத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பிலிருந்து நேற்றைய சாரலில் நனைந்த பிசுபிசுத்த ஈரமான நெடியொன்று வெட்டவெளியெங்கும் கமழ்ந்தபடியே இருந்தன. வண்ண வண்ண ஓவியங்களாய் விரிகின்ற இயற்கையின் பேரழை கண்களுக்குள் நிறைத்துக் கொண்டும், பால்மடி கட்டிய நெல்மணிகளின் வாசத்தையும், வகிடெடுத்து சீவியதைப்போல நிலத்தில் உழப்பட்ட மண்கட்டியின் வாசத்தையும் நெஞ்சுக்குழிக்குள் சுமந்து கொண்டு குழந்தைகளின் வீடுகளை நோக்கி நான் மழைக்கால தையிலான் குருவிகளைப் போன்ற உற்சாகத்தோடு பயணித்துக் கொண்டிருந்தேன்.
குழந்தைகளைத் தேடி கிராமம் கிராமமாக கூட்டைத் தொலைத்த குருவியைப் போலத் திரிந்த போது மனதிற்குள் முளைத்த கேள்விகளின் திகைப்பில் அப்போதெல்லாம் கண்ணில் படாத கிராமத்தின் அழகிய காட்சிகள், இப்போது வலிய வந்து பார்வைக்குள் நிறைகின்றன. ‘என் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்’ என்று வார்த்தைகளால் துரத்திய அதே வீடுகளிலிருந்து மீண்டும் வந்த அழைப்பின் கரங்களைப் பற்றியபடியே இப்போது திரும்பவும் நான் சென்று கொண்டிருக்கிறேன். தோல்வியின் முகத்தை சுமந்தபடி வீடு திரும்பிய அந்த நாளிற்கும், நம்பிக்கையினால் வெற்றியின் விளிம்பை தொட்டுவிட்ட இந்த நாளிற்குமான இடைவெளியை எண்ணி எனக்குள் கிளர்ந்த மட்டற்ற மகிழ்ச்சியை நான் எப்படி விளக்குவது?
கட்டாயம் இம்முறை அக்குடும்பத்தோடு மட்டுமே பேசிக் கொள்கிற முன்முடிவோடு நான் செல்லவில்லை. அக்குழந்தையின் மேல் அபிப்பிராயம் கொண்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும், உறவினர்களையும் ஒருசேர அமர்த்தி வைத்துப் பேசி அறுவைச் சிகிச்சையைப் பற்றிய அச்சத்தைப் போக்கிக் கொள்வதற்கான உந்துதலை அவர்களிடமிருந்தே துவங்குவதற்கான முயற்சியைத் தான் நான் இப்போது முன்னெடுத்திருக்கிறேன். இப்பெற்றோர்களை சமாளித்துவிடுவதற்கான எல்லா விதமான சாத்தியப்பாடுகளையும் கைப்பற்றி வைத்திருக்கும் நான், வெறும் கையோடுதான் உற்றார் உறவினர்களைச் சந்திக்கிற தீர்மானத்தோடு போய்க் கொண்டிருக்கிறேன். அவர்களைச் சமாளிப்பது சிரத்தையான காரியமென்றாலும்கூட, இப்போது கிடைத்த சிறு வெற்றியின் தீப்பந்தத்தைப் பற்றிக் கொண்டதன் நம்பிக்கையில் தான் இப்போது இங்கு வந்து நான் சேர்ந்திருக்கிறேன்.
குழந்தைக்குத் தலையில் ஆபரேசன் செய்துவிடப் போகிறார்கள் என்கிற பதட்டமும், அந்தச் சிகிச்சையால் பேசாதக் குழந்தை பேசிவிடப் போகிறதாம் என்கிற ஆச்சரியமும் கலந்த தண்டோரா செய்திகள் கிராம மக்களிடையே சமீப நாட்களாய் பலவிதங்களில் பரவியிருந்தது. மருத்துவர் வருகிறார் என்கிற எதிர்பார்ப்புகளோடு, அப்படி அவர் என்ன சொல்லிவிடப் போகிறார் என்கிற ஆர்வமும் கூடிய கண்களை அக்குழந்தையின் வீட்டுமுன் சாணம் மொழுகிய வாசல் முற்றத்தில் கூடியிருக்கிற அத்தனை பேர் முகத்திலும் ஒருசேர என்னால் காண முடிந்தது. உண்மையில் அத்தனை பேரையும் முன்னிரவில் நிலாச்சோறாக கூடி அமர வைத்துப் பேசுகிற வாய்ப்பை எண்ணி உள்ளார எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அத்தனையும் தாண்டி கிராமத்தின் எகத்தாளப் பேச்சுக்கும், நறுக்கென்று கடிபடும்படியாக கேட்கப்படுகிற கேள்விகளுக்கும், அப்பாவியாய் கேட்கிற சந்தேகங்களுக்கும் நிதானமாய் பதில் சொல்கிற அளவிற்கு எனக்குப் பக்குவம் இருக்கிறதா என்கிற தடுமாற்றமும் எனக்குள் மெல்ல உருவாகி வருவதை உணர முடிகிறது.
தெருவிளக்கைச் சுற்றியலையும் ஈசல்களைப் போல பத்திற்கும் மேற்பட்ட கூட்டத்தில் ஒருவனாக நாங்கள் அங்குமிங்கும் முளைத்திருக்கிற கூரை வேயப்பட்ட சின்னஞ்சிறு வீடுகளடங்கிய தெருவின் மண்சாலைக்கு நடுவே வட்டமாக அமர்ந்திருந்தோம். பிறைநிலா வானிற்குக் கீழே சோடியம் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அந்த முன்னிரவில் எல்லோர் முகங்களிலும் அது ஆரஞ்சு வண்ணமாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எல்லோரது தூசி படித்த கண்களும் எனை நோக்கியே அம்பெய்வதைப் போலக் காத்திருந்தன. எனக்கோ எதிலிருந்து துவங்குவது, எங்கிருந்து அவர்களை அழைத்துச் செல்வது என்கிற குழப்பத்தில் விழித்தபடியே இருக்க, வெற்றிலைக் காம்பை நுனிவிரலில் கிள்ளிப் போட்டு வாயில் ஒதுக்கியபடியே பக்கத்தில் நின்ற தாத்தா தன் பேச்சால் முதல் சுழியைப் போட்டு வைத்தார்.
ஐயா, நீங்க சொல்லுத எல்லாத்தையும் கேட்டுக்கிடுதோம். ஆனா இது பச்சப் புள்ளைங்க பாத்துக்கிடுங்க. ஆபரேசன்னு இல்லாம ஊசி, மருந்துல சரி பண்ணிடலாமான்னு நீங்க தான் கொஞ்சம் பாத்துச் சொல்லணும்?
தாத்தா, நாம என்ன, இந்தக் கொழந்தைக்கு ஆசைப்பட்டா ஆபரேசன் பண்ணுதோம் சொல்லுங்க. சென்னைக்கு, நாங்க எல்லாரும் போயி செக்கப் பண்ணி பாத்தப் பெறவு தான ஆபரேசன் செய்யனுங்குற முடிவுக்கே வந்துருக்கோம். காதுல சீலு கட்டி, அழுக்கு கூடிப் போய், அதனால காது கேக்காம போச்சுன்னாகூட மருந்து ஊத்தியே புள்ளைய சரிகட்டிப்புடலாம். ஆனா, இது நரம்பு பிரச்சனையாப் போச்சே. அதனால மிஷின வச்சே வயித்தியம் பாக்க வேண்டியதாயிடுச்சு. அதையும் கொஞ்சம் நீங்க புரிஞ்சுக்கிடனும்.
அந்தத் தாத்தா புரிந்தும் புரியாமலும் ஒரு கோணத்தில் தலையாட்டி வைத்தார். எனக்கு இத்தகைய தலையசைப்பின் மீது தான் அச்சமே இருக்கிறது. வெளியே கேட்கப்படுகிற கேள்விகளுக்கு அவர்களுக்குத் தக்க பதிலொன்று கிடைக்காத பட்சத்தில், கிடைத்த பதிலிலிருந்து அவர்களுக்குச் சாதகமான விளக்கத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இப்படியான யோசனைக்கெல்லாம் மனதை ஒப்புக் கொடுத்துவிட்டால் யாரையும் கறையேற்ற முடியாது என்கிற அவசரத்தில் நான் நிதானத்திற்கு வருவதற்குள், அடுத்த கேள்வியை அருகிலிருந்த பாட்டியொருவர் இயல்பாய் கேட்டு வைத்தார். கைகளை பின்புறமாக சாய்த்து ஊன்றியபடி இருகால்களையும் நீட்டி கூனல் விழுந்த முதுகை வளைத்து அவர் பேசிய விதம் ஒரு குழந்தையின் செய்கையை எனக்கு நினைவுபடுத்தியபடியே இருந்தது.
ஏஞ் சாமி, நரம்பு பெலமில்லாம இருக்குன்னு சொல்லுதீகளே, சத்து டானிக் கொடுத்தே தேத்திப்புட மாட்டீகளா?
பாட்டிம்மா, இது சத்து மாத்திரை, டானிக்கால சரிபண்ணுத இலேசுபட்ட காரியமில்ல. அப்படி, ஒரு நரம்பு விசயத்தை சரி பண்ணிடவும் முடியாது. ஒருதடவை நரம்பு பாதிச்சுடுச்சுன்னா மறுக்கா மருந்து கொடுத்து தேத்திடவும் முடியாது, பாத்துக்கிடுங்க. நாம மாசக்கணக்கா மருந்த கொடுத்துப் பாக்குறோம்னு காத்துக் கெடந்தோம்னா கொழந்தையைக் குணப்படுத்த நாமளே தாமதப்படுத்துற மாதிரியா ஆகிடும். இப்படி நரம்பு பிரச்சனையா இருக்குற புள்ளைங்களுக்கு மிஷினால மட்டுந்தான் வயித்தியமே பண்ண முடியும். அதுக்கு இந்த சத்து டானிக், சத்து ஊசில்லாம் பிரயோசனப்படாது, கேட்டுக்கிட்டியா பாட்டி!
ஆரம்பத்திலிருந்தே எதையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்த அந்த தாத்தா வெற்றிலை போட்டுச் சிவந்த உதட்டைச் சுழித்து வாய்க்குள் காற்றையும் நீரையும் ஒருசேரக் கொப்பளித்து காற்றுக்குமிழ்களாக தூர அவற்றை உமிழ்ந்தார். அதுவரை நிதானத்தோடு மண்ணைக் கிளறிக் கொடுத்து குஞ்சுகளை தன்னியல்பில் மேய்த்துக் கொண்டிருந்த கோழிகள் விருட்டென்று சப்தம் கேட்டு பறந்து போய் வேறொரு குப்பையில் அமர்ந்து எக்கிப் பார்த்தது. மடமடவென எழுந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டவர் தொண்டையைச் செருமிக் கொண்டே மறுபடியும் பேச ஆரம்பித்தார்.
இந்த நாட்டு மருந்துலயே எல்லாத்தையும் சரி பண்ணுறதா பேசிக்குறாங்களே, அதோட சமாச்சாரம் எப்படி இருக்கும்னு பாத்துக்க முடியாதுங்களா?
ஐயா, இப்போ, கொழந்தைக்கு பிரச்சனை என்னான்னு பாத்தாச்சு. அதுல நூறு சதவீதம் காது கேக்க வாய்ப்பில்லைன்னு ரிப்போட்டும் வந்துருச்சு. இப்ப போயி நாம அவங்க சொல்லுதாங்க, இவங்க சொல்லுதாங்கன்னு போய் அலைஞ்சுப் பாத்தோம்னா பிரச்சனை ஒன்னும் மாறப் போறதில்லை. ஆனா, நம்ம புள்ளைக்கு வைத்தியம் செய்யுறதை ரொம்ப காலம் தள்ளிப் போடுத மாதிரியா ஆகிடும். சாமிக்கு நேந்துக்கிட்டா நாளைத் தள்ளிப் போட முடியுங்களா? அது மாதிரித் தான் இதுவும். காலா காலத்துல வயித்தியம் செஞ்சிடனும். இல்லைன்னா புள்ளைக்கு தான் கேடு, பாத்துக்குங்க. அதனால நம்ம புள்ளைக்கு அடுத்ததா என்ன வைத்தியம் பாக்கனுங்குறப் பத்தி யோசிக்குறது தான் நம்ம புள்ளைக்குமே நல்லது.
அருகே வயக்காட்டிலிருந்த மேய்த்த பசுவையும் கன்றையும் ஒருசேரக் கயிற்றில் பிடித்தபடி ஒருவர் கூட்டத்தையே எட்டிப் எட்டிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். கன்றுக்குட்டி தன் முகத்தை பசுவின் பக்கம் சாய்த்தவாறு உரசிக் கொள்ள தனது சொரசொரப்பான வாழைப்பூ நிறத்திலான நாக்கை சுழற்றி மடித்து அது தனது கன்றை நக்கிக் கொடுத்தது. அதனது லயிப்பில் தன் உருண்டையான கண்களை தளர்த்திக் கொண்டு கிறங்குகையில் அவரது கணப்புச் சத்தத்தைக் கேட்டு விழித்தபடி இன்னும் நெருக்கமாக பசுவிடம் அணைந்து ஒட்டிக் கொண்டது. அவர் மாடுகளின் கயிற்றை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு தன் போக்கில் கேள்வியை கூட்டத்திற்கு நடுவே சுருக்குக் கயிற்றை வீசுவதைப் போல சுண்டி தூக்கிப் போட்டார்.
ஐயா, நீங்க பேசுறது எல்லாஞ் சரித்தேன். ஆனா ஆபரேசன் பண்ணிக்க கிராமத்தான் எங்களுக்குத் தான் பயமா இருக்குது பாத்துக்கிடுங்க. ஆபரேசன்னு இல்லாம வெளிய மிஷின மாட்டிக்கிடுற மாதரி இந்தப் புள்ளைங்களுக்கு ஏதும் செஞ்சுற முடியாதுங்களா?
ஐயா, புள்ளைக்கு நரம்பு பிரச்சனைங்குறதால மிஷின மாட்டித்தான் வைத்தியமே பாத்தாகனும். அதை காக்ளியார் இம்பிளாண்ட் கணக்கா ஆபரேசனப் பண்ணிச் சரி செய்யனுமா இல்ல, சும்மா வெளியவே மாட்டி ஹியரிங் எய்டு கருவி வச்சே குணப்படுத்திடலாமான்னு மட்டும் தான் அடுத்ததா யோசிச்சு முடிவு பண்ண வேண்டியிருந்துச்சு. ஆனா, சென்னைக்குப் போயி அங்கின ஹியரிங் எய்டு மிசினையும் புள்ளைக்கு சூதானமா மாட்டிப் பாத்தாச்சு. நூறு சதவீதம் நரம்பு பாதிச்சதுனால இந்தக் கொழந்தைக்கு அதனால பிரயோசனம் இருக்காதுன்னு தெளிவா சொல்லிப்புட்டாங்க. அதுக்கு அப்புறமா தான நம்ம புள்ளைக்கு ஆபரேசன்னு முடிவு பண்ணி, நமக்கு சொல்லி அனுப்பிருக்காங்க!
நான் பேசுவதைக் காதில் போட்டுக் கொண்டே பசுவையும் கன்றையும் தலை திரும்பிப் பார்த்தார். திகைத்து நின்ற கன்றையும், தாய்மையில் கனிந்து நிற்கிற பசுவையும் ஒருமுறை நிறைவாக பார்த்துச் சிரித்துவிட்டு கழுத்துப் பட்டையில் பட்டுபோல் மின்னுகிற தோலைத் தடவிக் கொடுத்தபடி ஹோய்.. ஹோய் என்று சப்தமிட அவை தலை உலுப்பியபடி ம்ம்மே.. என்றபடி முன்னே நகரத் துவங்கியது. அவரும் தன்னியல்பில் கடந்து போகிற பாதசாரியைப் போல கூட்டத்திலிருந்து விலகிச் செல்ல, கூட்டம் சுறுசுறுப்படையத் துவங்கிவிட்டது.
இதுதான் கிராமத்தின் இயல்பா? யாரோ ஒருவருக்கு துயரமென்றதும் ஓடி வந்து ஆறுதல் சொல்வதும், சொல்லாலே அவர்களைச் சமாதானப்படுத்தித் தேற்றிவிடுவதும், அப்புறம் தன் போக்கில் எல்லாமே இங்கு இயற்கை தான் என்பது போல கலைந்து செல்வதுமான இம்மக்களின் இயல்பை புரிந்து கொள்ள இன்னும் எனக்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ, தெரியவில்லை. இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையிலேயே ஓரமாய் அமர்ந்து கொட்டைப் பாக்கை இடித்துக் கொண்டிருந்த பாட்டி கூடவே ஒரு கேள்வியையும் போட்டு இடித்து வைத்தார்.
ஏய்யா சாமி, புள்ளைங்களுக்கு ஆபரேசன், மிஷின்னு எதுவுமே இல்லாம அதுக்குன்னு இருக்க பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டோம்னா, அவங்களே பதனமாச் சொல்லி பேச வச்சுப்புடுவாங்களாமே, அப்படியா?
ஆச்சி, இங்க பாத்துக்கிடுங்க. நம்ம புள்ளைக்கு காது கேக்கல. இப்போ, நீங்க பேசுறத நான் கேக்கேன். அதனால உங்ககிட்ட நான் பேசிட்டு இருக்கேன். அதே மாதிரி, அந்தக் கொழந்தைக்கும் பேசுறத கேட்டா தான, என்னான்னு புரிஞ்சுக்கிட்டு அதுவும் பேசும். இந்தக் கொழந்தைங்களுக்கு காது கேக்குறதுல தான் பிரச்சனையே தவிர, பேசாம இருக்குறது இல்ல. அத மொதல்ல விளங்கிக்கிடனும். இந்தப் புள்ளைங்கல்லாம் காது கேக்காததுனால தான் பேசாம இருக்குதுங்க. அதனால மொதல்ல அவங்களுக்கு காது கேக்குறதுக்குத் தான் வயித்தியம் பண்ணியாகனும். புரிஞ்சுக்கிட்டீங்களா!
ஆனா, பேச்சுப் பள்ளிக்கூடத்துல அந்தக் கொழந்தைங்களுக்கு காது கேக்க வைக்குறதுக்கான பக்குவத்த பண்ணுறதில்ல. நம்ம மொகத்தப் பாத்து, உதட்டப் பாத்துப் பேசுறதுக்கும், அப்புறமா கை சாடை போட்டுப் பேசுறதுக்கும் தான் புள்ளைங்களுக்கு அங்கின சொல்லித் தர்றாங்க. அப்போ, அவங்களுக்கு காது கேக்கலைங்குற பிரச்சனை அப்படியே தான இருக்கப் போவுது. அதனால, நாம மொதல்ல காது கேக்காம இருக்குறதுக்கு வயித்தியம் பாத்துக்கிடது தான் நல்லது. அப்படி மிஷினை மாட்டுனதுக்கு அப்புறமா, இந்த மாதிரி பேச்சுப் பயிற்சி கொடுத்தோம்னா, நாம பேசுறதக் கேட்டு அவங்களும் சுத்தபத்தமா பேச ஆரம்பிச்சுடுவாங்க. என்ன, கேட்டுக்கிட்டியா பாட்டி!
ம்ம்ம்… என்றபடி இடித்த கொட்டாம் பாக்கை இரும்புக் குவளையிலிருந்து விரலிடுக்கில் இணுக்காக எடுத்து வாயில் ஓரமாய் ஒதுக்கிவிட்டுக் கொண்டார். விரல்களைக் கடிக்க முயலுகிற பால் பற்கள்கூட முளைத்திடாத பச்சைக் குழந்தை போல வாயில் வாநீர் வழிய அவர் மெல்லுகிற அழகை நான் நிதானமாக இரசித்தபடியே இருந்தேன். அவர் மீண்டும் தன் சுருக்குப் பையிலிருந்து வெற்றிலையை உருவியெடுத்து அதன் கூர்முனையை தன் பழுத்த விரல்களால் ஒரு சுண்டு சுண்டிவிட்டு சுண்ணைம்பை பச்சைக் குழந்தையை தழுவுவது போல தடவிக் கொடுத்தபடி வாயிலிட்டுக் கடித்துக் கொண்டார். கிராமங்களில் பார்க்கப் பார்க்க சலித்திடாத காட்சிகளுள் வயதானவர்களின் குழந்தைமைகள் ஏராளம் இருக்கின்றன போலும். உண்மையில் அதைக் காணக் கிடைத்தவர்களோ பாக்கியவான்கள் தான்.
ஆனா, இந்தச் சின்ன வயசுலயே ஆபரேசன் பண்ணனுமா? கொஞ்சம் பொறுத்துப் பண்ணக் கூடாதுங்களா?
குடத்தை இடுப்பில் தூக்கிக் கொள்வது போல வளர்ந்துவிட்ட தன் பிள்ளையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு தண்ணீர் ஊற்றிப் பிசைந்த சோற்றை பிள்ளைக்கு ஊட்டியபடியே பெண்ணொருவள் வாசல் வெளியே நின்று கொண்டு தனது சந்தேகத்தை சபைக்கு முன் கேட்டு வைத்தாள். அந்தக் குழந்தைக்கு இந்தக் கூட்டம் திருவிழாவைக் கொண்டாட்டத்தை நினைவுபடுத்தியிருக்கும் போல. அந்தப் பக்கமே கைகாட்டி அம்மாவின் சட்டையைப் பிடித்திழுக்க அந்த பிஞ்சுக் கரங்களின் இழுபறிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தபடியே கூட்டத்தின் முகப்பிற்கு வந்து கேட்பதற்கு லாகுவாக நின்று கொண்டாள்.
அம்மா, இங்க பாருங்க, வெளிநாட்டுல பொறக்குற புள்ளைங்களுக்கு ஆறு மாசத்துலயே வெளியில மிசின மாட்டி பேச வச்சிடுதாங்க. ஆனா பாருங்க, நம்ம கொழந்தைங்களுக்கு அஞ்சு வயசு ஆவப்போது, இன்னும் வைத்தியம் பண்ணுறதப் பத்தியே யோசிச்சுட்டு இருக்கோம். இப்போ கொழந்தைங்க தவக்குறதுக்கு ஒரு பருவம், எழுந்து, உக்காந்து, நடக்க ஒரு பருவம்னு இருக்குத மாதிரி புள்ளைங்க கேட்டுப் பேசுறதுக்கும் ஒரு பருவம் இருக்கு. அததை அந்தந்தக் கால கட்டத்துல சொல்லிக் கொடுக்கலைனா புள்ளைங்களுக்கு சுத்தமா பேச முடியாம போயிடுது. உலகம் முழுக்க ஆராய்ச்சிலாம் பண்ணிப் பாத்துட்டு என்ன சொல்லுதாங்கன்னா, ஒரு வயசுக்குள்ளயே கொழந்தைங்களோட கொறையக் கண்டுபிடிச்சு குணப்படுத்திட்டோம்னா பேச்சுச் சுத்தம் அப்படித் தெளிவா, நம்மளக் கணக்கா இருக்குமாம். அப்படியெல்லாம் புள்ளைங்க நம்மளாட்டம் பேச வேணாமா? அதுக்கு சின்ன வயசுப் புள்ளைலயே வயித்தியம் பண்ணா தான் சரியாவும்..
தான் பிசைந்து ஊட்டுகிற சோற்றைக் குதப்பியபடியே உதட்டைப் பிதுக்கி வெளியே தள்ளுகிற பிள்ளையின் வாயைத் துடைத்தபடியிருந்த அந்த அம்மா அதட்டலோடு மீண்டும் மீண்டும் சாப்பிட வைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தையோ புருவத்தை சுளித்து அழுதுவிடுகிற தோரணையில் அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்க்க, சுச்சுச்சுச்..சோ.. என்றபடி உச்சி முகர்ந்து கண்ணத்தைக் கிள்ளி ஒரு முத்தமிட்டார். அந்தக் குழந்தை மறுபடி நெற்றியை அகலமாக்கி கண்ணங்கள் நிறைய தெத்துப் பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டது. அந்தச் சிரிப்பிற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல சட்டென்று சோற்றை வாயிற்குள் திணிக்க உதப்ப முடியாமலே குழந்தை மென்று விழுங்கிக் கொண்டது. அவளும் ஒரு குழந்தையாகி வெவ்வவ்வே.. என்பதைப் போல விரலை ஒடித்து வக்கனம் காட்டி சிரித்துக் கொண்டாள். அம்மாவும் குழந்தையும் பேசிச் சிரித்துக் கொள்ளுகிற காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று கண்கள் விலகி இந்தப் பெற்றோர்களின் பக்கமாய் திரும்பியது. அவர்களும் என்னைப் போல அவற்றையெல்லாம் பார்த்துத் தாழ்த்திக் கொண்ட முகத்தோடு தன் மகளின் வியர்க்காத முகத்தை வலிய தனது சோலை முகப்பால் துடைத்துவிட்டுக் கொண்டார்.
நான் எதையுமே பார்க்காதது போல கூட்டத்தின் மீது கண்களை அலையவிட்டேன். எல்லோருக்குமே ஒருவித சங்கடம் இருக்கும் போல. அவரவர் தங்களது ஆற்றாமையைப் போக்கிக் கொள்ள ஏதோவொரு கேள்வியைக் கேட்டுவிட்ட பின்னால் தங்களின் மனக்குறை தீர்ந்துவிடும் என்பது போல எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தனர். அடுத்தடுத்து விடாமல் வருகிற மழைத்துளி போல கேட்கப்படுகிற கேள்விகளுக்கு நிதானமாய் நான் பதிலளித்தபடியே அவ்வப்போது ஓரக் கண்ணால் அவர்களைத் தயக்கத்தோடே பார்த்துக் கொண்டேன்.
சார், பேச்சுவாக்குல நீங்களே சொல்லுதீங்க, ஆறு வயசு வரைக்கும் பண்ணலாம்னு. அப்புறம் எதுங்குங்கய்யா இப்பவே அவசரப்படனும்?
யண்ணே, இங்க பாருங்க. ஆறு வயசுங்குறது ஆறு லட்சம் பெருமான ஆபரேசனை இலவசமா பண்ணிக்கிட அரசு நமக்குத் தர்ற சலுகை தான். அந்த வயசுக்குள்ள பண்ணிக்கிட்டாத்தான் அரசு காப்பீட்டுத் திட்டம் வழியா இந்த ஆபரேசனை இலவசமா செஞ்சுக்கவே முடியும். ஆனா அதுக்காக ஆறு வயசு வரைக்கும் காத்துக் கெடக்கனும்னு கிடையாது, பாத்துக்கிடுங்க. கொழந்தை கேக்குறதப் புரிஞ்சுக்கிட்டு பேசுற பக்குவம் மூணு வயசுக்குள்ளயே நல்லா வளந்துடுது. அப்போ இருந்து நாம சிகிச்சையை தள்ளிப் போடப் போட அந்த வைத்தியத்தோடு பெலனும் கொறைச்சலாத்தான் போவும். அதுவே ஆறு வயசுக்கு மேல ஆகுறப்போ அதோட முழு பெலனும் கிடைக்காமப் போயிடுது. அதனால, எந்த வயசுல புள்ளைங்களோட கொறைய நாம கண்டுபிடிக்குறமோ அப்பவே போயி சிகிச்சை எடுத்துக்கிடது தான் அவங்களுக்கு நல்லது, கேட்டுக்கிட்டீங்களா?
மேற்கொண்டு கூட்டத்திலிருந்து எழுகிற ஒவ்வொரு கேள்வியின் தருவாயிலும் நான் குதூகலத்தில் திளைத்துக் கொண்டிருந்தேன். நிஜத்தில் நான் இப்படியொரு தருணத்திற்காகத் தான் அவசர அவசரமாக இங்கே வந்திருந்தேன். அவர்களுக்கோ குழப்பம் தீர நிறைய பதில் தேவை, எனக்கோ குழப்பம் தீர நிறைய கேள்விகள் தேவை. அதனால் அவர்களிடமிருந்து கேள்விகள் வர வர எனக்குள்ளிருந்த மருத்துவன் ஏனைய தகவலோடு துள்ளிக் குதித்தபடி மெல்ல மெல்ல கயிற்றைப் பிடித்து அடிமனதின் ஆழத்திலிருந்து மேலேறி வந்து கொண்டிருந்தான். நான் கொஞ்சம் அக்கறையோடு தலையில் குட்டு வைத்து உள்ளுக்குள் இருந்த மருத்துவனை சிரமப்பட்டே அமைதியாக உட்கார வைக்க வேண்டியிருந்தது.
இது மூளைக்குள்ள மிஷின வச்சி பண்ணுத ஆபரேசன்னு பேசிக்கிடுதாங்களே, அது உண்மைதானுங்களா?
யக்கோவ், அதுல ஒரு பாதி உண்மையும் இருக்குது, பொய்யும் இருக்குதுங்க. இப்போ, நம்ம கொழந்தைக்கு உள்காதுல இருக்குற நரம்புல தான் பிரச்சனை. ஆனா மத்தபடி உள்காதோட எலும்பு, உறுப்பு எல்லாம் நல்லாத்தான் இருக்குது. இந்த மாதரி பிரச்சனைல்லாம் பொறக்குற ஆயிரம் புள்ளைங்கள்ல ஆறு கொழந்தைக்கு இருக்குது, பாத்துக்கிடுங்க. அதனால இந்த மாதரியா பிரச்சனை இருக்குறவங்களுக்கு வெறுமனே தோலுக்கு கீழ சின்னதா சிப் கணக்கா வச்சு பண்ணி ஆபரேசன்ல சரி பண்ணிடுதாங்க. அதாவது காதுக்குப் பின்னாடி துருத்திட்டு இருக்கே ஒரு எலும்பு, அதுக்கும் தோலுக்கும் இடையில தான் சிப் கணக்கா ஒரு மிஷின வைப்பாங்க.
ஆனா நீங்க சொல்லுதீங்களே மூளையில வச்சு ஆபரேசன் பண்ணிடுவாங்கன்னு. அந்த ஆபரேசன யாருக்குப் பண்ணுவாங்கன்னா, உள்காதே வளர்ச்சி இல்லாம, மூளைக்குப் போற நரம்பு மட்டுமே சரியா இருக்குங்குற புள்ளைங்களுக்கு மட்டும் தான் அப்படி பண்ணுவாங்க. இந்த மாதரிக் கொறையுள்ள புள்ளைங்கல்லாம் ரொம்பவும் அபூர்வமாத் தான் பொறக்குதாங்க. ஆனா அந்தப் புள்ளைங்களுக்கும்கூட மூளையில பண்ணுத ஆபரேசன எந்த பிரச்சனையும் இல்லாம கெட்டிக்காரத்தனமா டாக்டருங்க பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க. அப்படி ஆபரேசன் பண்ணிக்கிட்ட கொழந்தைங்களுமே இப்பவும் சொகமாத் தான் இருக்காங்க, அதையும் கேட்டுக்கிடுங்க.
எனது குழந்தையின் பெற்றோர்கள் கூட்டத்தினுள் கேட்கப்படுகிற எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின்னாலும்கூட சிறிய தூசி போன்ற உறுத்தல் உள்ளுக்குள் இருந்திருக்கும் போல. அவர் தனது குழப்பத்தின் கேள்வியை அவருக்கேயுரிய பயத்தின் சாயலில் தயங்கித் தயங்கியே என்னிடம் கேட்கத் துவங்கினார். எவ்வளவு தான் சுற்றியுள்ள உலகமே சமாதானம் சொன்னாலும் தன்னைத் தானே தேற்றிக் கொள்கிற காலம் வரையிலும் மனிதர்களுக்கு ஆறுதல் கிடைப்பதேயில்லை போலும். இதையெல்லாம் விளங்கிக் கொண்டவனாக நானும்கூட அத்தகைய புரிதலின் நிதானத்தோடு தான் அவரிடம் பேசத் துவங்கினேன்.
ஆனாலும் புள்ளைக்கு எதாச்சும் ஆயிடுமோன்னு பயமாத்தான் இருக்குதுங்க சார்!
அம்மா, பிரசவ வலியை தாக்குப் புடிச்சுக்கிட்டு தான் நாம புள்ளைய பெத்துக்கிடுதோம். அதுக்காக வலியை நெனைச்சுக்கிட்டு புள்ளை வேணாம்னு இருந்திட முடியுமா, சொல்லுங்க. இப்போ, நம்ம புள்ளைக்கு என்ன பிரச்சனைன்னு பாத்தாச்சு. அதுக்கு வைத்தியம் இதுதான்னும் தெரிஞ்சுக்கிட்டோம். இதுக்கு மேலயும் நாம பயந்துக்கிட்டு புள்ளைக்கு வயித்தியத்தை தள்ளிப் போடுறது, சரியில்லை பாத்துக்கிடுங்க.
அவ்வளவு துயரத்திலும் தூங்கிவிட்ட தன் பிள்ளையை மடியில் கிடத்தி நெஞ்சுக்கூட்டில் தட்டிக் கொடுத்தபடியே மெலிதாக அவர் வலிந்து சிரித்துக் கொண்டதை தெருவிளக்கின் ஆரஞ்சு விளக்கொளியில் நான் இரகசியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் கூட்டம் ஏதோ சலசலப்போடே இருந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஈரக்காற்று கொஞ்சம் நிதானத்தோடு அங்கே வீசத் துவங்கியிருந்தது. காற்றின் ஈரப்பசையை குடித்துவிடுகிற தாகத்தோடு தட்டான்கள் தலையை உருட்டியபடி இலாவகமாய் பறந்தலைந்தபடி இருந்தன. நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். அதன் ஏக்கம் காற்றின் வேகத்தினுள் நுழைந்து சுளித்தபடி எங்கோ கரைந்து போனது. அப்போது கல்லூரிப் பெண்ணொருவள் முன்வந்து பொருத்தமான கேள்வியை பொதுவாய் கேட்டு வைத்தார்.
ஏதோ ஹியரிங் எய்டுன்னு சொல்லுறீங்ளே, அப்படின்னா என்னாதுங்க சார்?
எல்லாருமே கேளுங்க, ரொம்ப முக்கியமான கேள்வியத் தான் இந்தப் பொண்ணு கேக்குது. மொதல்ல, இந்தப் பேரப் பாத்த ஒடனே பயந்துட வேணாம். ஒங்க எல்லோருக்குமே ஈசியா புரியுத மாதரியே சொல்லுதேன், சரிங்களா.
ஹம்ம்.. இப்போ மேடைல ஒருத்தர் மைக்க புடிச்சு பேச்சிட்டு இருக்காருன்னு வச்சுக்குவோம். நீங்கல்லாம் பின்னாடி வரிசைல உக்காந்துருக்கீங்க. உங்க பக்கத்துல ஸ்பீக்கர் இருக்குறதுனால அவரு பேச்சுறது அத்தனையும் சுத்த பத்தமா கேக்குது, கேக்கும் தான?
சரி, அதையே மைக் இல்லாம அவரு பேசிருந்தா உங்களுக்குக் கேக்குமா, கேட்டுருக்காது. அதாவது அவரு பேசுற சத்தம் அந்த மைக்கு வழியா உள்ளாரப் போயி, அவரு பேசுறதவிட இன்னும் சத்தமா சுருதியக் கூட்டி அது ஸ்பீக்கர் வழியா வந்து தான் உங்களுக்குக் கேக்குது, புரிஞ்சுதா? இதை வெளங்கிக்கிட்டா ஹியரிங் எய்டு மிசினை பத்தியும் நாம புரிஞ்சுக்கிடலாம்.
ஹியரிங் எய்டுங்குறதும் ஒரு காது கேக்குற மிசினுதான். அதாவது கொஞ்சம் சத்தமா பேசுனாத் தான் கேக்குங்குறவங்களுக்கு இந்த மிசினை மாட்டி காது கேக்க வச்சுப்புடலாம். இந்த மிசின்லயும் நம்ம அண்ணாச்சி மைக்க புடிச்சு பேசுற மாதரியே குட்டியா மைக்கு இருக்கும். ஏன்னா, இந்தக் கொறைபாடு இருக்குறவங்களுக்கு பக்கத்துல இருக்குறவங்க பேசுறதே குசுகுசுன்னு கேக்க மாட்டுதே!
இந்த மைக்குல இருந்து வர்ற சத்தத்தை வாங்கிட்டு, அந்த மிசினுக்குள்ள இருக்குற சிப்பு என்னா பண்ணுதுன்னா, சொளவுல குருணை பொறுக்குற மாதரி நுட்பமா கேக்குத சத்தங்களை பிரிச்சுப் போட்டு அதை இன்னும் சத்தமா ஸ்பீக்கர் வழியா காதுக்குள்ளார அதிகமாக்கிக் கொடுக்குது.
இதுல முக்கியமா வெளங்கிக்கிட வேண்டிய விசயம் என்னான்னா, இப்போ அண்ணாச்சி மேடையில பேசுறதை ஒரே சத்தத்துல தான் இந்த ஸ்பீக்கர் எல்லாமே கூட்டிக் குடுக்கும். ஆனா ஹியரிங் எய்டு மிசினைப் பொருத்தவரைக்கும் அது அப்படியில்ல. அந்தந்த கொழந்தைக்குன்னு ஏத்த எறக்கமா இருக்குற காது கேக்குற கொறைபாட்டப் பொறுத்து அதுக்கேத்த மாதரி தான் மிசினை செட்டப் பண்ணி கொழந்தைங்களுக்கு மாட்டிவிட்ருப்பாங்க. அப்போ அந்த கொழந்தைக்கு எவ்ளோ சத்தம் தேவையோ அதுக்கேத்த மாதரியே பக்குவமா சத்தத்தை அதிகரிச்சுக் கொடுத்து காது கேக்க வைக்கிற வேலையத்தான் இந்த ஹியரிங் எய்டு மிசினு செய்யுது பாத்துக்கிடுங்க. ஆனா, இந்த ஹியரிங் எய்டு மாட்டுறதுக்கு ஆபரேசன்லாம் தேவையில்ல, சும்மா காதுல மாட்டிக்கிட்டாலே போதும்.
அதே மாதிரி ஏதோ காக்ளியார் இம்பிளாண்ட்னு ஆபரேசன் பண்றதா சொல்றீங்களே, அது வழியா எப்படிங்கய்யா காது கேக்கும்?
தான் கேட்டுக் கொண்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்ட உற்சாகத்தோடு அடுத்த கேள்வியையும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டார். உண்மையில் இந்தக் கேள்வியை கேக்கத் தெரியாமல் விளித்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு இந்தப் பெண்ணின் சந்தேகம் எல்லோருக்குமானதாக ஆகிவிட்டிருந்தது. நான் அவரது கேள்விகளை அங்கீகரிக்கும் விதத்தில் ‘வெரிகுட்’ என்பதான உடல் பாவணைகளை வெளிப்படுத்தியபடியே விசயத்திற்குள் நுழைந்து கொண்டேன்.
இந்தப் பொண்ணு கேக்குத ஒவ்வொரு கேள்வியும் உங்க எல்லோத்துக்குமே தேவையான ஒண்ணு தான் பாத்துக்கிடுங்க. நாஞ் சொல்லுறத சரியா கேட்டுக்கிடுங்க. இப்போ, நான் ஏற்கனவே ஹியரிங் எய்டு மிசினைப் பத்தி சொன்னேன்ல. அதைப் புரிஞ்சுக்கிட்ட பின்னாடி இதுவுமே சுலபம் தான். இப்போ நாம ரேடியோவுல பாட்டு கேக்குதோம். சரியா கேக்கல, காதைத் திருகுற மாதரி இன்னும் பட்டனைத் திருகித் திருகி சத்தத்தை கூட்டிக்கிட்டே போறோம். ஒருகட்டத்துக்கு மேல அந்த ஸ்பீக்கரோட பவர் அவ்ளோ தான்னு முடிஞ்சிடும் இல்லியா, அதே மாதரித்தான் ஹியரிங் எய்டுக்கும் ஒரு எல்லை இருக்கு.
அறுபது, எழுவது பவர் பட்டன் வரைக்கும் காது கேக்கலைன்னாகூட ஹியரிங் எய்டு மிசினை போட்டு சத்தத்தை கூட்டி வச்சு கொழந்தைக்கு காது கேக்க வச்சுப்புடலாம். அதாவது இப்போ, காது கேக்காத புள்ளைங்க வெடி சத்தம் கேட்டா, இடி இடிச்சா மட்டும் தான் திரும்புதுன்னு பெத்தவங்க சொல்லுவாங்க, இல்லியா! அப்படின்னா என்னா அர்த்தம்? அந்த அளவு சத்தத்துல தான் புள்ளைங்களுக்கு காது கேக்கவே செய்யுது, புரியுதுங்களா? அந்த அளவு வரைக்கும் ஹியரிங் எய்டு மிசினால சத்தத்தை கூட்டிக் குடுக்க முடியுமான்னு மொதல்ல நாம செக்கப் பண்ணி பாக்கனும்.
ஆனா எம்பது பவர் வரைக்குமே கொடுத்தாலும் புள்ளைங்களுக்கு காது கேக்காதுங்குற எல்லைக்கு அந்தக் கொறைபாடு போயிடுச்சுன்னா இந்த மிசினால கொழந்தைங்களுக்கு ஒரு பிரயோசனமும் இருக்காது. அப்படியே மிசினை மாட்டிப் பாத்தாலும் ஏதோ மிக்சி ஓடுற மாதரித் தான் அந்தக் கொழந்தைக்கு கொகொரன்னு கேக்குமே தவிர தெளிவான பேச்சுச் சத்தமே இருக்காது. இப்படிக் கேக்குற சக்தி எம்பது பவருக்கும் மேல போகுறப்போ, ஹியரிங் எய்டு மிசினை மாட்டியும் கேக்காதுங்குறப்போ தான் காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசனையே ஆசுபத்திரில பண்ணச் சொல்லுதாங்க, சரியா கேட்டுக்கிட்டீங்களா..
காக்ளியாங்குறது உள்காதுக்குள்ள இருக்குற முக்கியமான உறுப்பு. அந்த உறுப்பு சரியா வேலை செய்ய மாட்டேங்குங்குறதால, அதுக்கு பதிலா ஒரு மிசினை நாம பொருத்துறதால தான் அதனை இம்பிளாண்ட்னு இங்கிலீஸ்ல சொல்லுதோம். அதை காக்ளியாலயே போய் பொருத்துறதால தான் காக்ளியார் இம்பிளாண்ட்னு கூடுதலா வெளக்கம் சொல்லுதாங்க.
இப்போ காக்ளியார் இம்பிளாண்ட்ல ரெண்டு மிசின் இருக்கு பாத்துக்கிடுங்க. அதுல ஒன்னை தான் ஆபரேசன் பண்ணி உள்ள வைக்குதாங்க. இன்னொன்னு வெளியில சும்மா காதுல மாட்டிக்கிடுத மாதரி தான். இதைப் பத்திப் புரிஞ்சுக்க நான் ஒரு உதாரணம் சொல்லுதேன், கேக்குறீங்களா?
நாம போஸ்ட் ஆபிஸ் போறோம். அவங்க என்ன பண்ணுதாங்க, ஒரு குறிப்பிட்ட ஏரியாவச் சுத்தி இருக்குத தபாலை எல்லாம் வாங்கிட்டு வந்து அதையெல்லாம் பின்கோடு வாரியா பிரிச்சு வரிசைப்படுத்தி வைக்கிறாங்களா. அப்புறமா அதை பார்சல் பண்ணி ரயில்லயோ, பஸ்ஸுலயோ அனுப்பி வைக்குறாங்க. அதெல்லாம் அந்தந்த ஏரியாக்குப் போனதும் அங்க இருக்குற போஸ்ட் மேன் என்ன பண்ணுதாரு, அந்த பின்கோடப் படிச்சுப் பாத்துட்டு அதுல இருக்குத வீட்டு நம்பருக்குத் தக்க வண்டியில போய் டோர் டெலிவரி பண்றாரு, சரிதான? இதுல ஒன்னும் கொழப்பம் இல்லியே!
இப்போ காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசனுக்கு வந்துடுங்க, வந்துட்டீங்களா? இதுல ஆபரேசனப் பண்ணி உள்ள வைக்குற பகுதி ஒன்னும், காதுக்கு வெளியில மாட்டிக்கிற பகுதி இன்னொன்னும் இருக்குன்னு சொன்னேன்ல, இந்த வெளியில மாட்டிருக்க தொரட்டிக் கம்பு மாதரி பகுதியோட மொனையில தான் குட்டியா மைக் இருக்கு. இந்த மைக்கு தான் நம்ம தபால் பெட்டி. சுத்தி இருக்குற ஏரியாவுல இருக்கிற தபால வாங்கி போடுற மாதரி கொழந்தையச் சுத்தி இருக்குற சத்தத்தை எல்லாம் இந்த மைக் வாங்கிகிட்டு மிசினுக்குள்ளார அனுப்புது.
போஸ்ட் ஆபிஸ்ல பின்கோடுக்கு ஏத்த மாதரி பிரிச்சு வைக்கிற வேலை நடக்குத மாதரி, இந்த மிசினுக்குள்ளயும் சுதி அதிகமா இருக்குறது, கொறைச்சலா இருக்குறதுன்னு கேக்குத சத்தத்தை வச்சு அந்தந்த அதிர்வு நம்பருக்கு ஏத்த மாதரியா பிரிச்சுப் போட்டு அதை பின்கோடு கணக்கா குறிச்சு பார்சல் பண்ணி வெளியே அனுப்புது. இப்படி பார்சல் பண்ண சத்தம்லாம் மிசினுல இருந்து போற வயரு வழியா போயி வட்டமா தலையில ஒட்டி வச்சுருக்குற காந்தத்துக்கு வந்து சேருது. இங்கின வட்டமா இருக்குது பாத்துக்கிட்டீங்களா, இது தான் டெலிவரி பாய்ண்ட். இங்கின இருந்து தான் வெளிய இருந்து பார்சல் பண்ண சத்தங்களை உள்ளார இருக்குத மிசினுக்கு பாதிப்பில்லாம பக்குவா அனுப்புது. நம்ம போஸ்ட் ஆபிஸ்ல ரயில்ல பஸ்ஸூ வழியா அனுப்புத மாதரி.
அடுத்ததா பார்சல் பண்ணுன சத்தமெல்லாம் உள்ளாரப் போனதும் அங்குன இருக்குற மிசின் என்ன பண்ணுதுன்னா, அந்த பார்சலைப் பிரிச்சுப் பாத்து பின்கோடு வரிசைப்படி அடுக்கி வச்சுக்கிடுது. பின்ன, அதுல இருந்து கொரங்கு வாலு மாதரியா நீண்டுகிட்டு போகுதுல்ல, அதுக்கு இதெல்லாத்தையும் அனுப்பிடும். அந்த வாலுல தான் பன்னென்டு வகையான மின் தகடுங்க இருக்கும். அந்த தகடுங்க எல்லாம் பியானோ மியூசிக் போடுத பட்டன் மாதிரி சுருதிக்கு ஏத்த கணக்கா வரிசையா இருக்கும். நாம வீட்டு நம்பரைப் பாத்து டோர் டெலிவரி பண்ணுத மாதிரி சுருதி வாரியா சத்தங்களைக் கொண்டு போய் ஒவ்வொரு தகட்டுலயும் பந்துஸ்தா மிசினு சேக்குது.
அதாவது சாதாரணமா வெளிய கேக்குத சத்தத்தை எல்லாம் உள்காது வாங்கி மின்சாரமா மாத்தி நரம்புக்கு அனுப்புத வேலைக்குப் பதிலா, இந்த மிசினு இந்த சத்தங்களை சுருதி வாரியா பிரிச்சுப் போட்டு உள்காதுல இருக்குற நரம்புக்கு அனுப்பி வைக்குது. நம்ம கொழந்தைக்கு மூளைக்கு போற நரம்பு நல்லா இருக்குறதால அது வழியா சத்தமும் பக்குவமா மூளைக்குப் போய் சேந்துடுது. அங்க மூளையுமே நம்மளோட ஞாபகம் எல்லாத்தையும் புரட்டிப் பாத்து, யார் பேசுதா, என்ன பேசுதாங்க அப்படின்னு புரிஞ்சுக்கிட்டு, நம்ம என்ன செய்யனும், என்ன பதிலைச் சொல்லனும்னு நமக்குக் கட்டளையிடுது. இப்படித்தான் நம்மளச் சுத்தி என்னலாம் கேக்குதுன்னு மிசினும், மூளையும் நமக்குப் புரிய வைக்குது. அதைக் கேட்டுட்டு நாமலும் பதிலுக்குப் பதிலு வாயாடிட்டு இருக்கோம். உங்களுக்கு இதெல்லாம் புரிஞ்சதா?
அவர்கள் எதுவும் பேசவில்லை. பார்சல், டோர் டெலிவரி, போஸ்ட் ஆபிஸ் என்று எளிமையாக புரிந்து கொள்கிற வகையில் பேசிய போதும், இந்த ஒரு விளக்கம் மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தெரியும்தான். மருத்துவராகிய எனக்கே இதைப் படித்து புரிந்து கொள்வதற்கு எவ்வளவோ சிரமப்பட்ட போது, இவர்களுக்கு ஒரே சமயத்தில் புரிந்துவிட வேண்டுமென்பது எதிர்பார்ப்பது அபத்தமான விசயம்தான். ஆனால் எப்படியோ ஒரு எளிய உதாரணத்தோடு விளக்கிவிட்ட திருப்தியோடு சுற்றும் முற்றும் பார்க்க, ஓரளவு எல்லோரும் சமாதானமாகிவிட்ட பாவனையில் சில கேள்விகள் கேட்கிற குரல் மட்டுமே அங்குமிங்குமாக கேட்டுக் கொண்டிருந்தது.
ஐயா, நீங்க சொல்லுத மாதிரி வாய் பேசாதே கேக்காத புள்ளைங்கள நானும் பாத்துருக்கேனுங்க. இந்த மாதரி ஆபரேசன் பண்ண கொழந்தைங்கலாம் இன்னும் சரியா பேசாமத்தான் இருக்குது. அதுக்குப் பெசாம ஆபரேசன் பண்ணாமலே இருக்கலாமுங்களே?
ஐயா, நீங்க சொல்லுறதும் ஒருவிதத்துல நெசந்தேன். கொழந்தைக்குப் பேச்சு வரல, காது கேக்கலன்னு ஆசுபத்திரிக்கு போயி இது இலவசமா பண்ணுதாங்கன்னு ஒடனே பெத்தவங்களும் துணிஞ்சு ஆபரேசனப் பண்ணிப்புடுவாங்க. ஆனா அதுல ஒன்னப் புரிஞ்சுக்கிடனும். இந்த வைத்தியங்குறது ஆபரேசன வச்சு மட்டும் இல்லிங்க. அதுக்கப்புறமா பேசுறதுக்கு பயிற்சி கொடுக்குறதுல தான் முழு பெலனும் இருக்கு. பெத்தவங்க சிலரு ஆபரேசன் பண்ணதும் அவங்க கடமை முடிஞ்சதா நெனைச்சுக்கிட்டு அத்தோட பயிற்சிக்கு கூப்பிட்டு போறதயே மறந்துடுதாங்க. அப்படி பயிற்சி எடுத்துக்கிட்டா தானே பேச்சு வரும்?
இந்தப் புள்ளைங்க மிசினு வழியாத் தான் கேட்டுப் பேசப் பழகனுங்குறதால முறையா போய் பயிற்சி எடுத்துக்கிட்டா தான் பேச்சுச் சுத்தமா வரும். அதைப் பலரும் புரிஞ்சுக்கிடது கெடையாது, பாத்துக்கிடுங்க. நீங்க பாத்த புள்ளைங்களும் அப்படிப் பயிற்சிக்கு சரியா போகாத புள்ளையாத் தான் இருக்கும், இல்ல தாமதமா சிகிச்சை பண்ணிக்கிட்ட புள்ளையா இருக்கும். அதனால ஆபரேசன் பண்ணிக்கும் போதே அடுத்ததா பயிற்சி கொடுக்கனுங்குறதயும் பெத்தவங்க புரிஞ்சுக்கிடனும்.
ஆமாங்கய்யா, கொழந்தை ஆபரேசன் பண்ணதும் நம்மள மாதரியே பேசிப்புடுங்களா?
கொழந்தைங்களுக்கு ரெண்டு பிரச்சனை, அதுல ஒன்னுதான் காது கேக்கலைங்குறது, சரியா? இப்போ நாம மிசின் மூலமா ஆபரேசன் பண்ணி காது கேக்க வச்சுடுதோம். ஆனா பேசனுமே! கொழந்தை பொறந்ததுமே பேசிடுதா, இல்லையே! சுத்திக் கேக்குற சத்தத்தை கவனிச்சுப் பாத்துட்டு மொதல்ல புள்ளைங்க அழுதுகிட்டு தான் இருப்பாங்க. அவங்களுக்கு அது சத்தம்னு கூட தெரியாது. காதுக்குள்ள என்னமோ பண்ணுது, ஏதோ போயிடுச்சுங்குற மாதரி தான் கத்திக் கூப்பாடு போட்டு மிசின புடிங்குப் போட பாப்பாங்க.
நாம தான் சுத்தி கேக்குறதுலாம் சத்தம் தான். அதுல குயில் க்கூ.. க்கூ.. ன்னு கத்தும், நாய் இப்படி லொள்.. லொள்..ன்னு கொலைக்கும், வண்டிச் சத்தமா பாம்.. பாம்..னு கேக்கும்னு படிப்படியா சத்தத்த பத்தி சொல்லிக் கொடுக்கனும். அதுக்கப்புறமா அந்த சத்தத்துல இருந்து ஒவ்வொரு வார்த்தையா சொல்லிக் கொடுத்து, அதைப் புரிய வச்சு பேசக் கத்துக் கொடுக்கனும். அஞ்சு வயசுல ஆபரேசன் பண்ணாலும் அவங்கள பொருத்தவரைக்கும் சத்தத்தை கேக்குறதுல அன்னிக்கு பொறந்தவங்களா தான் அர்த்தம். நாம தான் கொஞ்சம் கொஞ்சமா பதனமா சொல்லிக் கொடுத்து பேசக் கத்துக் கொடுக்கனும். அதையெல்லாம் நாம ஆபரேசன் பண்ண ஆஸ்பத்திரிலயே காப்பீட்டு திட்டம் மூலமா இலவசமா ஒரு வருசத்துக்கு சொல்லிக் கொடுத்துடுவாங்க. அப்படி நம்மள மாதரி ஓரளவு பேசக் கத்துகிறதுக்கே ஒரு வருசம் வரைக்கும் ஆகும். அதையுமே நாம புரிஞ்சுக்கிடனும்.
ஐயா, இந்த மிஷினை மாட்டுனா மூளைக்குள்ள துரு புடிச்சுப் போயிடும், பைத்தியம் புடிச்சு புத்தி பேதளிச்சிடும்னு சொல்லுறாங்களே, நெசந்தானுங்களா?
இந்த ஆபரேசன நம்மூர்ல மட்டுமில்ல, ஒலகம் முழுக்க பண்ணிட்டு தான் இருக்காங்க. அப்படிப் பண்ணிட்டு புள்ளைங்களும் நல்லபடியா பேசி, பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு சொகமா வாழ்ந்துட்டுதான் இருக்காங்க. அதனால இப்படி மூளைக்குள்ள பண்ணுதாங்க, துரு பிடிச்சுடும், பையித்தியம் பிடிச்சிடும்னு சொல்லுறதெல்லாம் ஆபரேசன் பத்தின பயத்துலதான் சொல்லுதாங்களே தவிர, அப்படியெல்லாம் இதுவரைக்கும் ஆனதில்ல. அதே போல இந்த ஆபரேசன் ஏற்கனவே சொன்ன மாதரி தோலுக்கும் எலும்புக்கும் நடுவுல தான் பண்ணுதாங்களே தவிர மண்டையோட்டை தாண்டி மூளைக்குள்ள எல்லாம் பண்ணலைங்குற நாமலும் சூதானமா புரிஞ்சுக்கிடனும்.
ஆனா, இதுங்க வெளாட்டுத் தனமா இருக்குதுங்களே, புள்ளைங்க கீழ விழுந்து அடிபட்டு, மிஷினை புடுங்கி எறிஞ்சுட்டா என்னா பண்ணுறது?
அம்மா, நாம சின்னதா காயம் பட்டாலே தண்ணி படாம, தூசி படாம சுத்த பத்தமாக தொடைச்சி மருந்து போட்டுப் பாத்துக்கிடனும். இது மிசினை வச்சு பேசாத புள்ளைய பேச வைக்குற பக்குவமான வைத்தியம். இதுக்கு கொஞ்சம் பந்துஸ்தா பாத்துக்கிட தான் செய்யனும்குறத நாம மொதல்ல புரிஞ்சுக்கிடனும். அதே சமயம் புள்ளைங்களுக்கு ஆரம்பத்துல மிசின் வழியா சத்தம் கேக்கவுமே அது என்னமோ ஏதோன்னு அலறுவாங்க, கத்துவாங்க, மிசின புடிங்கிப் போடத்தான் பாப்பாங்க. ஆனா இது வழியா தான் நம்ம அம்மா சொல்லுறது கேக்குது, சுத்தி எல்லோரும் சொல்லுறத இதை மாட்டிக்கிட்டா தான் புரிஞ்சுக்க முடியும்னு தெரிஞ்சிக்கிட்டான்னா, நீங்களே கழட்டச் சொன்னாக்கூட புள்ளைங்க எடுக்க விட மாட்டாங்க. அதுக்கப்புறமா அவங்களே அந்த மிசின பதனமாப் பாத்துக்குவாங்க. ஆனா அதுவரைக்கும் நாம தான் கொஞ்சம் கவனமா பாத்துக்கிடனும், புரிஞ்சுதாம்மா?
ஐயா, நெசமாவே இது இலவசம் தானுங்களா இல்ல, கூப்பிட்டு போயிட்டு கூடுதலா ஏதும் துட்ட-கிட்ட புடுங்கிப்புடுவாங்களா?
சத்தியமா முழுக்க இலவசந்தானுங்க. புள்ளைங்கள மொதல்ல கூப்பிட்டு போயி செக்கப் பண்ணிட்டு, ஆபரேசன் செஞ்சு, அடுத்ததாத பேச்சுப் பயிற்சி கொடுத்து புள்ளைங்க பேசிப் பழகுற ஒரு வருசம் வரைக்கும் அத்தனைக்குமே ஒத்த பொட்டு காசு கெடையாது, கேட்டுக்கிட்டீங்களா. என்ன, சந்தோசம் தான?
காப்பீடு திட்ட அட்டை எங்களுக்கெல்லாம் இல்லீங்களே, ஒரு அவசர ஆத்தரத்துக்கு ஒத்தசையா இருக்கனும்னா, எங்க போயி எப்படி வாங்குறதுன்னு கொஞ்சம் எங்களுக்கும் உதவி பண்ணுங்கய்யா?
அது ஒன்னும் கஷ்டமான காரியமில்ல கேட்டுக்குங்க. உங்களோட ரேசன் கார்டையோ, ஸ்மார்ட் கார்டையோ கொண்டு போயி வி.ஏ.ஓ ஆபிஸ்ல கொடுத்தா போதும், உங்களோட சம்பாத்தியம் வருசத்துக்கு எழுபத்தி ரெண்டாயிருத்துக்குள்ள இருந்துச்சுன்னா அங்குனயே பாரத்துல கையெழுத்துப் போட்டு வி.ஏ.ஓ கொடுத்துருவாரு. அதுக்கெல்லாம் ஒத்த செலவு கெடையாது, பாத்துக்கிடுங்க. அதை அப்படியே கொண்டு போயி கலெக்டர் ஆபீஸ்ல இருக்குற காப்பீட்டு ஆபிசுல கொடுத்தோம்னா அவுங்க கம்யூட்டர்லயே போட்டோ எடுத்து பத்து நிமிசத்துல கார்டு போட்டுக் குடுத்துடுவாங்க. அத வச்சுக்கிட்டு எங்கனாலும் இலவசமா வயித்தியம் பாத்துக்கிடலாம். மொதல்ல போயி, அத வாங்கி வையுங்க அப்பத்தா, போங்க..
எல்லாம் பேசி முடிந்த பின்னால் மனநிறைவாய் இருந்தது. பிறைநிலாவிலிருந்து பௌணர்மிக்கு உருக்கொள்கிற பரிபூரணத்தைப் போலொரு இடத்தை என் மனம் அடைந்திருந்தது. மெல்ல மெல்ல தங்களுக்குள்ளே பேசிக் கொள்கிற கூட்டம் ஆங்காங்கே கலையத் துவங்க நான் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி எல்லாம் நல்ல படியா முடியும் என்பதாக ஆறுதல் கூறிவிட்டு கிளம்பத் துவங்கினேன். சாப்பிடாமலே உறங்கிவிட்ட அவரது பிள்ளைகளை எழுப்பி அரைத் தூக்க மயக்கத்தில் உணவை ஊட்டிவிட அவர்கள் ஆயத்தமாகவே, எழுந்து வெளியே வந்து நான் வானத்தைப் பார்த்தேன். இன்னும் பௌணர்மி நாளுக்கு கொஞ்ச நாட்களே மீதமிருந்தன. இனி அந்த ஆபரேசன் செய்து கொள்கிற நாளுக்காக இனி காத்திருப்பது மட்டுமே நான் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது.
அடுத்ததாக, சென்னை மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்து குழந்தைகள் இருவரும் ஒருசேர அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதையும், அவர்களுக்குக் கருவிகளைப் பொறுத்தி வாழ்வின் முதன் முதலாக சப்தங்களைக் கேட்டுக் கொண்டு குழந்தைகள் அடைந்த நெகிழ்வான தருணங்களையும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
முந்தைய தொடர்களை படிக்க:
ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14 – டாக்டர் இடங்கர் பாவலன்