புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்




தோழர் கே. முத்தையா பன்முகத்திறன் கொண்ட ஒரு பேராளுமை. பத்திரிகையாசியர், நாவலாசிரியர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், அமைப்பாளர் என அவர் தொடாத துறைகள் இல்லை. தொட்டத் துறைகள் அத்தனையிலும் மிளிர்ந்தவர்.

அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், பேராவூரணி பொன்னாங்கன்னி காடு கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், பள்ளிப் படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின்பு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பொருளாதாரப் படிப்பில் சேர்ந்தார். விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழுந்த நேரமது. அண்ணாலை பல்கலைக்கழகத்தில் பொதுவுடமை இயக்கச் சிந்தனை கொண்ட மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களுடன் தோழர் கே. முத்தையாவும் இணைந்தார். விடுதலைப் போராட்டத்திலும், மாணவர் போராட்டத்திலும் ஈடுபட்ட காரணத்தினால், பல்கலைக்கழக இறுதித் தேர்வை அவரால் எழுத முடியவில்லை. மாணவனாக இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அதன்பின் இறுதிவரை போராட்டமே அவரது வாழ்க்கை முறையானது.

‘ஜனசக்தி’யின் பொறுப்பாசிரியராகவும், பின்னர் நீண்டகாலம் ‘தீக்கதிர்’ ஏட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு பல்கலைக்கழகத்தைப் போன்று பலநூறு பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் அவர். ‘செம்மலர்’ ஏட்டைத் துவக்கி முதல் ஆசிரியராக தோழர் கு. சின்னப்ப பாரதி நடத்தினார். சில மாதங்களுக்குப் பின்பு தோழர் கே. முத்தையா, ‘செம்மலர்’ ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார். செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினர். தோழர் கே. முத்தையா சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும், கௌரவத் தலைவராகவும் பல பத்தாண்டுகள் பணியாற்றி வழிகாட்டினார்.

‘செம்மலர்’ ஏட்டின் அவர் தொடராக எழுதிய இரண்டு நாவல்கள், ‘உலைக்களம்’, ‘விளைநிலம்’ ஆகியன ஆகும். இந்த இரண்டும் இன்றைக்கும் குறிப்பிடத்தக்க நாவல்களாக விளங்குகின்றன. தமிழகத்தின் பொதுவுடமை இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, கருத்து மோதல்கள், களப்போராட்டங்களை அருமையான கலைவடிவத்தில் பேசும் நாவல்கள் இவை.

1948 முதல் 1962 வரையிலான பொதுவுடமை இயக்க வரலாற்றின் போக்குகளை இவ்விரண்டு நாவல்களும் துல்லியமாக படம்பிடித்துக் காட்டியவை.

‘செவ்வானம்’, ‘ஏரோட்டி மகன்’, ‘புதிய தலைமுறைகள்’ என தோழர் கே. முத்தையா எழுதிய மூன்று மேடைநாடகங்கள், தமிழகத்தில் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளன. சில இசைப்பாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.

இலக்கியத் திறனாய்வில், மார்க்சிய அணுகுமுறையை பின்பற்றியவர்களில் தோழர் கே. முத்தையாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்கச் சமுதாயம்’, ‘இராமாயணம்- உண்மையும் புரட்டும்’, ‘சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்’ உள்ளிட்ட ஆய்வு நூல்கள் இன்றளவும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. திருக்குறள் குறித்து அவர் எழுதியுள்ள நூலும் முக்கியமான ஒன்று.

ஒரு பத்திரிகையாளராக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள அவர், மார்க்ஸ் எழுதிய ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி, பலநூறு எழுத்தாளர்களை உருவாக்கியவர் அவர். அதை ஒரு இயக்கமாக அவர் செய்து வந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை ஒரு கர்மயோகியைப் போல செயல்பட்ட அவரது பெருமையை ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ போன்ற ஏடுகளும், ‘தமுஎகச’ போன்ற அமைப்புக்களும் இன்றளவும் எடுத்துரைக்கின்றன.

படைப்புகள்

* சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்(1981)

* இராமாயணம் ஒரு ஆய்வு(1981)

* வீர பரம்பரை

* சட்டமன்றத்தில் நாம்

* திமுக எங்கே செல்கிறது

* இதுதான் அண்ணாயிசமா?

* மார்க்சியமும் தமிழ் கலை இலக்கியங்களும்

* தத்துவத்தின் வறுமை (காரல் மார்க்ஸ்-எழுதியது-தமிழாக்கம்)

* தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம் (1968)

* தமிழ் இலக்கிய வரலாறு

நாவல்கள்

* உலைகளம் (முதல் நாவல்)

* விளைநிலம்(1989)

நாடகங்கள்

* செவ்வானம் (நாடகம்)

* புதிய தலைமுறை (நாடகம்)

* ஏரோட்டி மகன் (நாடகம் (2012) 

The definitive version of the Herman Brock novel Article By S. Devadoss ஹெர்மன் ப்ரோக் நாவலின் அறுதி வடிவம் - சா. தேவதாஸ்

ஹெர்மன் ப்ரோக் நாவலின் அறுதி வடிவம் – சா. தேவதாஸ்

கடவுளர் தெய்விக மானவரல்ல என்பதை
அறிய சிரிப்பெழுந்தது, கடவுளரிடம்
சிரிப்பை வரவழைத்தது மனிதரே
மனிதரிடம் சிரிப்பை மூட்டியது மிருகங்கள் என்பது போல…

சிரிப்பில் விலங்கு, மனிதன், கடவுள் மூவரையும் ஒருங்கிணைத்து விடும் ஹெர்மன் ப்ரோக் ஆஸ்திரிய நாட்டு நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாளர், நாடகாசிரியர் (1886-1951). பொறியாளராகப் பயிற்சி பெற்று,  தந்தையின் ஜவுளித் தொழிலை நிர்வகித்து, பின் எழுத்தாளரானவர். யூதராயிருந்து கத்தோலிக்கரானவர். 1938இல் ஆஸ்திரியா, ஜெர்மனி வசமானதும் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஹெர்மன், ஜேம்ஸ் ஜாய்ஸ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் தலையீட்டால், விடுபட்டு, இங்கிலாந்து வந்து, பின் அமெரிக்காவில் தங்கி இயங்கியவர். அதுவரை நாவலின்  உச்சம் என்றால் ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலீஸஸ்தான். ஹெர்மனின் Sleepwalkers, The Death of Uirgiltக்குப் பின் யுலீஸஸைத்தாண்டி ஓரடி எடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்பட்டது.

ஒரு வாக்கியம், ஆறேழு வரிகள் ஒரு பத்தி என நீண்டு செல்ல, முடிவி்ல்லாத எண்ணவோட்டங்களாக போய்க் கொண்டேயிருக்கிறது அவரது எழுத்து. ஒரு தொடரை, வாக்கியத்தை ஆரம்பிக்கும்போதே அவ்வெழுத்தாளருடன் கலைஞனும் தத்துவாசிரியனும் தீர்க்கதரிசியும் இசைவாணனும் இணைந்து கொள்கின்றனர். அரும்பும் அழகிலிருந்து இசைப்பாடலாக புலம்பித் திரியும்….. வரை பரவசக் காட்சிகள், தீவிர சிந்தனைத் தெறிப்புகள், தத்துவ விசாரம், ஆன்மாவின் வேட்கை என விரிந்து செல்கிறது. படைப்பின், பிரபஞ்தத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான வரலாற்றின் கதி, தத்துவப்போக்கு, மனித உச்சம் அதவ பாதாளம் என அனைத்தும் துவக்கமாகின்றது. கவிதையும் உரைநடையும் இணைந்து உறைந்து கிடக்கும் பனிக்கட்டியைக் காட்டும்போது, தெறித்து வீழும் எரிமலைப் பிழம்பையும் தகிக்கச் செய்து விடுகிறார்.

ஈஸிட் என்னும் காப்பியத்தை கவிதையில் வடித்த விர்ஜிலின் இறுதி 18 மணிநேரங்களை தன் நாவலின் காலமாக பின்புலமாக்கி, தன் நிறைவுறாத பிரதியை எரித்து விடும் முனைப்பில் உள்ள விர்ஜிலையும் அப்பிரதியை எப்படியேனும் பாதுகாத்து வெளியிட்டுவிடும் முனைப்பில் உள்ள மன்னன் அகஸ்டஸையும் உரையாட வைக்கின்றார் ஹெர்மன்.

ஒட்டுமொத்த வாழ்வையும் தன் பிரதியில் உள்ளடக்கிட விரும்பும் அதே வேளையில் ஒட்டு மொத்த வாழ்விலிருந்து விடுபட்டுவிடும் வைராக்கியமும் இங்கே சேர்ந்து விடுகின்றது. ‘‘ஒரு சிந்தனை ஒரு கணம் – ஒரு வாக்கியம்’’ என்ற ரீதியில் ஹெர்மன் தியானிக்கிறார் இப்பிரதியில் சற்று கவனம் பிசகினாலும் இப்பிரக்ஞையோட்டம் பிடிபடாது நழுவிப் போகிறது, அதன் திசைவழியை அறிய இயலவில்லை. எதுவும் கருத்துக்களாக இல்லாததால், சுலபத்தில் உள்வாங்கிக் கொள்ள இயலாததாக, தர்க்கத்தில் சிக்காததாக இருந்து விடுகிறது.

மொழியில் சிக்கவோ விவரிப்பில் பிரச்சனைகளோ இல்லாமல் தெளிவாகவே எடுத்துரைக்கிறார் ஹெர்மன். ஆனால் அது அனுபவ விவரிப்பாக இல்லை. கருத்துக்களின் மோதலாக முரணாக இல்லை. சிந்தனையின் வடிவம் மொழியின் வெளிப்பாடு பெறும் முன்னரே, பிரக்ஞையோட்டத்தைக் கைப்பற்றிடும் எத்தனமாகி விடுகிறது. அப்போது உரைநடை கவிதையின்  நெருக்கமும் நெகிழ்ச்சியும் கொண்டு விடுகிறது. இங்கே வெளிப்பாட்டினை விடவும் பதிந்தால் போதும் என்ற நெருக்கடி அவசரம், மரணத்தின் மிதவையில் திரும்பிக் கொண்டிருக்கும் விர்ஜில், எண்ணவோட்டங்களின் அலையடிப்பில் அகமன நினைவோட்டங்களில் ஆழ்ந்தவராக இருக்கிறார். சிலுவைப்பாடுண்ட கிறித்துவின் தனிமையும் அத்தீவிரத்தில் மின்னல் வெட்டில் பிரக்ஞை உச்சத்தில் பொறி பறந்திடும் கீற்றுக்களும் இங்கே நெருக்கம் காண்கின்றன.

ஆயுள் முழுதும் உடல் நலமின்றியும் தன்பால் காமத்தினராயும் விளங்கிய, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த விர்ஜில் (கி.மு.10-19), மன்னன் அகஸ்டஸின் வேண்டுதலால், தனது இறுதி 11 ஆண்டுகளில் ஈனிடை எழுதிக் கொண்டிருக்கிறார். ரோமானியரின் தேசிய இலக்கியமாக விளங்கப்போகும் அது, ட்ராய் நகரம்  வீழ்ந்ததும், வீரன் ஈனியஸ் அகதியாகி, இத்தாலிய இளவரசன் டர்னஸுடன் சண்டையிட்டு, ரோம்நகரம் நிர்மாணம் ஆவதற்கு காரணமாயிருப்பதை விவரிக்கிறது.

கி.மு. 19 இல் தனது கையெழுத்துப் படியை திருத்திச் சரி செய்ய, கிரேக்கம் சென்ற விர்ஜில், ஏதென்ஸில் அகஸ்டஸைச் சந்திக்கிறார். ரோம் திரும்பிவிட முடிவெடுத்த வேளையில், காய்ச்சல்கண்டு பிரண்டிஸியம் துறைமுகத்திலேயே இறந்துபோகின்றார்.

தனது பிரதி முழுமைபெறாது இருப்பதால் அதனை நூலாக வெளியிட வேண்டாம் என மன்னனிடம் வாதிடுகிறார். 11 ஆண்டுகாலம் உழைத்து உருவாக்கிய காவியத்தை வெளியிட விரும்பாததற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் எனச் சந்தேகம் வருகின்றது மன்னன் அகஸ்டஸுக்கு. அது தனது முடிவில்லை, கடவுளின் முடிவு என்று சொல்லிப் பார்க்கிறார் விர்ஜில். மன்னன் சமாதானமாகவில்லை.

உங்கள் கவிதையில் மிக உயரிய விஷயஞானம் உள்ளது. நூல் முழுவதும் ரோம் பிரகடனம் செய்யப்படுகிறது. கடவுளர், வீரர், குடியானவர்  ஆகியோருடன் ரோமினைப் புரிந்து கொள்கிறீர்கள். அதன் கீர்த்தியையும், பக்தியையும் விவரிக்கிறீர்கள். ரோம் முழுமையினையும் ட்ரோஜன் மூதாதையரிலிருந்து அதன் காலகட்டத்தினையும் உள்ளடக்குகிறீர்கள். இது போதாதா…? என்று குறுக்கீடு செய்கிறான். ஒரேயொரு பார்வையில் தனியொரு படைப்பில் தனியொரு கண்ணோட்டத்தில் வாழ்வனைத்தையும் கொண்டு வந்துவிடுகிறீர்கள். இது போதா? என்கிறான். வாழ்வைப் புரிந்து கொள்வதை நோக்கியது உங்கள் இலக்கில்லை எனில் வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறான். மரணத்தைப் புரிந்து கொள்வதை நோக்கியது என்கிறார் விர்ஜில்.

எப்படி? வாழ்வின் அளப்பரிய அர்த்தம், மரணத்தால் வெளிப்படும் அர்த்த முழுமையிலிருந்த வர முடியும் எனது செயல்பாடு கவிதையாயிருக்கும் பட்சத்தில் அது தான், இலக்கு ஏனெனில் அது தான் தூய கவிதையின் இலக்கு.

விர்ஜில் இறந்ததும் முழுமையாகாமல் விடப்பட்டிருந்த வரிகள் சரி செய்யப்பட்டும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் ஈனிடை வெளியிட ஏற்பாடு செய்தார் என்கிறது வரலாறு.

அகதியாகும் ஈனியஸ் ரோமின் நிர்மாண வீரனாக, ஈனிடின் நாயகனாக இருப்பதில் தன்னை அடையாளங் கண்டு கொள்ளும் ஹெர்மன், தன்னுயிர் பரிதவிக்கையிலும் எழுத்தின் நாணயத்திற்காக உண்மைக்காக நோக்கத்திற்காக இறுதிக் கணம் மட்டும் போராடிப் பார்க்கும் விர்ஜிலிடமும் தன்னைக் கண்டு கொள்ளவே செய்கிறார். அவரது வாழ்வும் அவரது எழுத்தும் அதுவாக அமைந்து போனதால். அவசரத்தில் கொந்தளிப்பில் எழுதும்போதும் நாவலின் முழுமையினைக் கைப்பற்றி விடுவதிலேயே கவனம் குவிப்பு கொண்டிருந்தார்.

மிலன் குண்டேரா வாதிடுவதன் நாவல்கலையின் சாரத்தை நிறைவேற்றுபவராக ஹெர்மன் ப்ரோக்கும் ராபர்ட் மூஸிலும் உள்ளனர். இருவரும் ஆஸ்திரிய நாவலாசிரியர்கள். நாவலிடத்தே அளப்பரும் பொறுப்புகளைத் தந்து, கவிதை, மாயப்புனைவு, தத்துவம், செறிவான வாசகம் கட்டுரை என அனைத்தையும் ஒன்றிணைத்துவிடும் அளப்பரும் ஆற்றல் கொண்டதாக ஆக்கிவிடுவார் ஹெர்மன். “நாவல் மட்டுமே கண்டறியக் கூடியதை” கண்டறிந்திட முற்பட்டவர்.

அத்துடன் தன் பிற்கால வாழ்வில் அய்ரோப்பிய அகதிகளுக்கு உதவிடும் அமைப்பை நிறுவிடும் அக்கறையும் ஆர்வமும் மிகுந்திருந்தவர் ஹெர்மன்.

மரணம் பற்றிய தனது அறிவின் மூலமாக முடிவிலியை உணர்ந்து கொள்பவனே, படைப்பினைத் தக்க வைத்துக் கொள்பவனாக, ஒட்டுமொத்தப் படைப்பில் தனியொரு பகுதியினையும் தனியொரு பகுதியில் ஒட்டு மொத்தப் படைப்பினையும் தக்க வைத்துக் கொள்பவனாக மாறுகிறான். ஏனெனில் பகுதியால் தன்னை தக்க வைத்துக் கொள்ள இயலாது. தனது சட்டப்பூர்வ சூழலினூடேதான் தனது உணர்த்துதல்களில் மட்டுமே அதனை தக்க வைத்துக் கொள்ள இயலும்…” என்பது போன்று ஒவ்வொரு பத்தியினையும் செதுக்கிச் செதுக்கி தன் நாவல் என்னும் பிரும்மாண்ட சிற்பத்தை உருவாக்கி நிறுத்துகிறார் ஹெர்மன்.

Water, Fire, Earth, Air என்னும் நான்கு பதிகளாக ஒரு இசைக் கோவையை அமைத்து, சந்தத்துடன் இணக்கத்துடன் இணைத்து மாபெரும் இசைக் கோவமாக இசைக்கவிடுகிறார் ஹெர்மன்.

ஜெர்மனியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ழீன் ஸ்டார் அண்டர் மெயர் ஒரு கவிஞர்  4 ஆண்டு கால ஈடுபாட்டில், உழைப்பில் இதனை முடித்துள்ளதாகக் கூறுகிறார். இந்த நாவலை எழுதுவது சவாலான நடவடிக்கை எனில், மொழி பெயர்ப்பதும் சவாலான நடவடிக்கையே.

இந்நாவலையும் ஒரு கவிதையாகவே பார்க்கிறார் மொழி பெயர்ப்பாளர். கவிதையை மொழி பெயர்ப்பது எவ்வளவு சிரமமிக்கதோ அவ்வளவு சிரமமிக்கதாக இம்மொழி பெயர்ப்பும் இருந்திருப்பதைக் குறிப்பிடுகிறார். இந்நாவல் தனியொரு தன்னுணர்ச்சிப் பாங்கான பீறிடலாகவோ, தனியொரு மையக் கருத்திழையில் அமைந்த கவிதைகளின் தொடர்ச்சியாக இல்லாத போதும், ஒரு கவிதையே 500 பக்கங்களில் தன் தொன்மையான இதிகாசங்களுடன் தொடர்புடையதாக, இரு பண்புகளை உள்ளார்ந்ததாகப் பெற்றிருக்கிறது. வெளிப்பாட்டின் முழுமை வார்த்தைகளில் மட்டுமின்றி அவற்றிற்கிடையிலான வெளியிலும் அமைந்துள்ளது. இரண்டாவது பண்பு அதன் இசைக் கட்டமைப்பு…’

மிருகத்தையும் மனிதனையும், தெய்வத்தையும் சிரிப்பை முன்னிட்டு ஒரு வரிசையில் நிறுத்திவிடும் ப்ரோக், சிரிப்பினை மரணத்தின் சகோதரியாயும் சித்தரித்து விடுகிறார்.

‘‘ஆணோ பெண்ணோ அல்லாத சிரிப்பு, பாழின் வெற்று தடதடப்பே’’ என்னும்போது, ஒரு வட்டத்தை முழுமை செய்து விடுவார்.

ஆதாரங்கள்:

  1. The Death of virgil/ iterman Broch/Tr by Jean Start Untermeyer/ Vintage international 1945(1995)
  2. The Art of Fiction- Interview with milan kundera/ par is Review, 194 Summer.
Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்

நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் – சா. தேவதாஸ்




ஜப்பானில் 19 வயதான இளைஞன் 1968-இல் நான்கு பேரைக் கொலை செய்தபோது, ஜப்பானியர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். 28 ஆண்டுகள் கழித்து அவனை ஜப்பானிய அரசு தூக்கிலிட்டபோது எந்தச் சலனமும் இல்லை.
Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்ஆம், நோரியோ நகயாமா என்னும் இளைஞன் அவன். ஜப்பானின் ஒவ்வொரு மூலையிலும் வறுமை பதுங்கி இருந்த துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாடு முனைப்பு கொண்டிருந்த அறுபதுகளில் தான் இந்நிகழ்வு.

1949-இல் வறுமை பீடித்த குடும்பத்தில் ஏழு உடன்பிறந்தவர்களுடன் ஒரு குழந்தையாயிருந்தவன் அவன். சூதாடியான தந்தை ஒரு நாள் சாலையோரத்தில் இறந்து கிடந்தார். 5 வயது நிரம்பிய அவனை விட்டுவிட்டு மற்ற ஏழு குழந்தைகளுடன் வேறொரு நகருக்குச் சென்றுவிட்டாள் அவனது தாய்.
Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்ஜப்பானின் வடகோடியில் -1400க்குச் சென்றுவிடும் குளிருள்ள பகுதியில் பிறந்து வளர்ந்த நகயாமா, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறான். ஜப்பானிலிருந்த அமெரிக்க ராணுவத்தளத்தில் ரகசியமாக ஒரு கைத்துப்பாக்கியினை எடுத்துக் கொண்டவன், 1968-இல் இரு மாதங்களில் இரு மெய்க்காவலர்களையும், இரு ஓட்டுனர்களையும் கொள்ளையடித்து கொலை செய்துவிட்டான். 28 வருடங்கள் சிறைவாசத்திலிருந்த அவனை 1997-இல் ஜப்பான் தூக்கிலேற்றியது.

28 ஆண்டுகால சிறைவாசத்தின்போது உளவியல், தத்துவம், தாஸ்தோயவ்ஸ்கி, செகாவ், மார்க்ஸ் எனத் தீவிரமாக வாசித்தான். சக கைதி ஒருவருடன் அரசியல் கோட்பாடுகளை உரையாடி அறிந்து கொள்கிறான். ஒன்பது நாவல்கள் எழுதி முடிக்கின்றான். அவனது முதல் நாவலை (Tears of Ignorance) வாசிக்கும் ஒரு பெண், சிறை வாழ்வின்போதே அவனை மணந்து கொள்கிறாள். குற்றம் என்றால் என்ன, சமூகத்தில் எங்கே கருக்கொள்கிறது எப்படி வளர்கிறது என்றெல்லாம் புரிதல் கிடைக்கிறது அவனுக்கு.

அறியாமையும் வறுமையுமே தன்னை கொள்ளைக்காரனாக, கொலைக்காரனாக ஆக்கியுள்ளன என்று தன் எழுத்தில் பதிவு செய்கிறான். சமூகத்தின் விளிம்பில் உயிர்பிழைக்க படாதபாடுபட்டிருந்த அவன் பலமுறை தற்கொலைக்கு முயன்றவன்.

அவனது குழந்தைப் பருவம், இளமைக் காலச் சம்பவங்கள் சமூக நீதி குறித்த கருத்துக்கள், தன் குற்றங்களுக்கு உந்துதலாக இருந்தவை என்பதை பற்றியெல்லாம் கவிதையும் உரைநடையுமாக நகயாமா எழுதியதே 1971-இல் வெளியான Tears of Ignorance. அவனது நூல்களெல்லாம் ஜப்பானிய மொழியிலிருந்து இன்னும் மொழியாக்கம் பெறவில்லை.

அதிர்ச்சியூட்டும் தன் அனுபவங்களால் அவனது சுயேச்சையான உறுதிப்பாடு நிலைகுலைந்து விடவே, குற்றவாளியாகுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறான்.

நீண்ட கால நோக்கிலுள்ள உந்துதல்கள், குற்றவியல் தன்மையின் தோற்றுவாய்களை கணக்கில் கொள்ளாது, உடனடிக் காரணிகளையும் தவறுகளையுமே ஆராய்ந்து தீர்ப்பளித்துவிடுகிறது நீதி அமைப்பு என்பது நகயாமாவின் குற்றச்சாட்டு.
Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்‘‘நானொரு கைதி, நான்கு பேரைக் கொன்றவன், கொலையை மறப்பது சாத்தியமற்றது என நம்புகிறேன்…’’ என்று ஆரம்பிக்கின்றார் தன் முதல் பதிவை.
இன்னோரிடத்தில் இடம் பெறும் ஒரு பதிவு:

‘‘நான் கொன்றேன். இப்போது அதனை எண்ணிப் பார்ப்பதெனில், அதுவொரு தனித்துவமான கொலை. மக்கள், பிறழ்வு, குரூரம் என்கின்றனர்… அவர்கள் தற்கொலை செய்யும்போது, கைத்துப்பாக்கியை பயன்படுத்தினால், மூளையைக் குறி வைக்கின்றனர். சட்டென்று செத்துவிட விரும்புகின்றனர். இருப்பு பற்றி நான் யோசிக்கையில் எனது கொலை செய்யும் முறை குரூரமானது என்பது நிச்சயம், ஆனால் அறிவாளர்கள் அதனைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள். அதனை நான் சில வார்த்தைகளில் தொகுத்துரைக்க வேண்டுமாயின், எளிதான முறையில் கொன்றுவிட்டேன் என்பதுதான் உண்மை. வருந்துதல் இல்லாமல் மரணம் வாய்த்துவிடும்.”

தனது கொலைகள் குறித்து இப்படி எழுதிவிட்டு, குற்றம் பற்றி பொதுவாக ஆராய்கின்றார்:
குற்றம் என்பது நொடிப்பொழுதில் நிகழ்ந்திடும் அதீத நடவடிக்கைக்கு மேல் ஒன்றுமில்லை. எனவே அத்தருணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு குற்றவாளியை தீர்ப்பிடுவது காழ்ப்புணர்வையே வளர்த்தெடுக்கும். பிற்பாடு, அக்குற்றத்தை உள்ளடக்காமல், ஒட்டுமொத்த காலம் குறித்த சிந்தனையாக அக்கணம் முடிந்து போகும்?

Norio Nagayama: Tears of ignorance Article by Sa. Devadoss. நோரியோ நகயாமா: அறியாமையின் கண்ணீர் - சா. தேவதாஸ்
Image Credit: Amino Apps

அடுத்து தனது நிலையை சுயவிமர்சனம் செய்து கொள்ளும்போது நகயாமா எழுதுகிறார்:
“இப்போது நான் சிறையில் மேற்கொண்டுள்ள சிறிது வாசிப்பால், என் அறியாமைதான் காரணம் எனக் கண்டறிந்தேன்… நான் ஏன் மாறினேன் என்பதைச் சில வார்த்தைகளில் முடிவுகட்டுவதாயின், என் மோசமான வாழ்வுதான். வறுமையிலிருந்து தோன்றுகிறது அறியாமை” 1970-இல் டோக்கியோ மாவட்ட நீதிமன்ற விசாரணையின்போது, பதிலளித்த நகயாமா இதனை மேலும் வளர்த்தெடுக்கிறார்: “எனது தோற்றுவாயை தாங்கள் நன்கறிவீர்கள். அப்போது நான் அறியாமையில் இருந்தமையால் இவை நடந்தன. வறுமையிலும் அறியாமையிலும் இருந்தேன். என்னைப் போன்றவன் இங்கிருக்க ஒரே காரணம் ஏழையாயிருப்பதுதான். அதனை வெறுக்கிறேன். நான் வெறுப்பதால் குற்றங்களை இழைத்தேன். அனைத்தையும் அனைவரையும் வெறுக்கிறேன்! ஏழைகள் சமூக உணர்வை நாசப்படுத்துகின்றனர். மக்களுக்கிடையிலான உறவுகளை அழிக்கின்றனர், முதலாளித்துவ சமூகம் ஏழையரை உருவாக்குகிறது, எனவேதான் நான் இங்கிருக்கிறேன்”
தான் சந்தர்ப்ப சூழல்களால் பலியானவன், குழந்தைப் பருவம் தொட்டு தன் சமூகச் சூழல் தன்னை விளிம்புநிலைக்குத் தள்ளிவிட்டது, தீவிரமான தீர்மானநிலையை வளர்த்தெடுத்தது என்று நம்பினார் நகயாமா.

குற்றவாளிகள் உருவாகும் போக்கினை தீவிரமாகப் பரிசீலிக்கும் தாஸ்தோயவ்ஸ்கி தன் நாட்குறிப்பில் எழுதுகிறார்.: “…இவர்கள் நிச்சயமாகச் சின்னத் திருடர்களாகி விடுவார்கள். தம் நடவடிக்கைகளிலுள்ள குற்றவியல் பண்பினை உணராமலேயே எட்டு வயதுச் சிறுவர்களிடையேயும் சிறு திருட்டு வேட்கையாகிவிடும். இறுதியில் பசி, குளிர், அடி என எதனையும் தாங்கிக் கொள்வார்கள். சுதந்திரம் என்னும் ஒன்றிற்காக மட்டும்; தம் போக்கிரிகளிடமிருந்து ஓடிவந்து, இப்போது தமது நன்மைக்காக நாடோடி வாழ்வை மேற்கொள்வர்…’’
II
வாழ்வின் அதீதப் புள்ளிக்கு தள்ளப்பட்டு விடுவோர் உயிர்வாழ வழிவகை இல்லாது தவிக்கையில் ஒன்று, தற்கொலை செய்து கொள்கின்றனர் அல்லது பிறரைக் கொல்கின்றனர்- கொள்ளையடிக்கும்போது. நகயாமாவின் கொைலகளின் நோக்கம் பணம் பெறுவதே. பல தற்கொலை முயற்சிகள் மேற்கொண்டிருந்த அவர், ஒரு கட்டத்தில் கொலையாளி ஆகியுள்ளார். அதுவும் மைனர் பருவம் முடிந்து மேஜர் பருவம் தொடங்கிடும் 19வது வயதில், மைனர் பருவத்தில் கொலை செய்திருந்தால் மரண தண்டனையிலிருந்து தப்பியிருக்க முடியும்.
III
1997இல் நகயாமாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதும் Amnesty International வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது:
“28 ஆண்டுகளாக சிறைவாசத்திலிருந்த நன்கறியப்பட்ட எழுத்தாளர் நோரியோ நகயாமா உள்ளிட்ட நான்குபேர் ஆகஸ்டு 1 அன்று ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டனர். கொலைக்காகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நால்வரும், மரண தண்டனை நிச்சயிக்கப்பட்ட 55 கைதிகளிலிருந்து ஏதேச்சையாகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. ஜப்பானில் வழமையாக உள்ளதுபோல, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தூக்கு தண்டனை பற்றி தெரியப்படுத்தப்படவில்லை. நால்வரில் ஒருவர் ஒரு பெண்”

நகயாமா வழக்கு விசாரணையில் இரு கட்டங்கள். முதலில் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதிக்க, உயர்நீதிமன்றம் நகயாமாவின் குடும்ப சூழல்களையெல்லாம் கணக்கில் கொண்டு, ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. “அநாதரவான இடத்திலே கைவிடப்பட்ட அவரது வரலாற்றினை அதீத வறுமையில் வளர்ந்ததை நல்வாழ்வு அமைப்புகள் துணை நிற்காததைப் பரிசீலிக்கையில், அவரது வயதுக்கு ஏற்றவிதத்தில் மனமுதிர்ச்சி வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. சிறையில் மணமுடித்து, தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சற்று ஆறுதல் கிடைக்க முற்பட்டுள்ளார் என்பதும் தெரிகின்றது”

நகயாமாவுக்கு மனநோய் இருந்ததா என்றறிய இருமுறை உளவியல் பரிசோதனை நடந்தது. 1971இல் நடந்த முதலாவது சோதனையில், அவர் அறிவுத் தெளிவானவரே என்று முடிவானது. 1973-74-இல் நடந்த இரண்டாவது சோதனையில், அவரது மனத்திறன் குறைந்திருப்பதாகத் தெரியவந்தது. ஆனாலும் அது பொருட்படுத்தப்படாமல், குற்றவாளியே என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்து சேர்ந்தது.

இந்தியாவைப் போலவே அரிதினும் அரிதாக மரணதண்டனையை விதிப்பதாக ஜப்பான் கூறிக் கொள்கிறது. ஆனால் சமயங்களில் திடுதிப்பென்று முன்னறிப்பினை குற்றவாளியின் குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்காதபடி இந்தியாவைப் போலவே நிறைவேற்றிவிடும் மரண தண்டனையை வன்முறையின் சுழற்சி என்கிறார் நகயாமா.

இவ்வளவுக்கும் சிறைவாழ்வில், முறையாகப் படிப்பை முடித்திராத நகயாமா தீவிரமாகப் படித்து, மாணவர் இயக்கம் சார்ந்திருந்த சக கைதியுடன் அரசியல்-தத்துவ விஷயங்களை விவாதித்து தெளிவு பெற்றவர். தன் குற்ற நடவடிக்கையிலிருந்து தொடங்கி பல்வேறு விஷயங்கள் சார்ந்து எழுதத் தொடங்கியவர். சுயசரிதம் சார்ந்த (narrative of the self) நாவல் வகைமையில் பங்களிப்பு செய்தவர். 1983இல் ஜப்பானிய புது இலக்கிய விருதினைப் பெற்றவர். தன் முதல் நாவல் வெளியானதும் அதிலிருந்து கிட்டும் வருவாயை, தன் கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கிடைக்கச் செய்தவர் – அது சற்று ஆறுதல் தரும் என்று, அவர் தூக்கிலிடப்படும் முன்பு, தனது நூல்களின் வருவாயை பெருநாட்டின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அனுப்புமாறு ஏற்பாடு செய்தவர்.

மரண தண்டனையை ஒழிக்கப்பாடுபடும் அமைப்புகளுக்கு அவரது வாழ்வும் எழுத்தும் உத்வேகமாய் இருந்து வருகின்றது. சமூகத்திற்கு அபாயகரமானவர்கள் என்றும் அடிப்படையிலேயே மரணதண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. தண்டிக்கப்பட்ட பிறகு, சிறை வாழ்வில் நகயாமா முறையான குடும்ப வாழ்வை மேற்கொள்வதும், அறிவாற்றல் பெற்று எழுத்தாளர் ஆவதும், தன் குற்ற நடவடிக்கைக்குப் பரிகாரம் தேடுவதும், தன்னைப் போல குழந்தைகள் வறுமையில் உழவக்கூடாது என்னும் அக்கறை மிகுந்தும் இருந்துள்ளார். ஒரு குற்றவாளி சீரிய மனிதனாகி எழுத்தாளராகும்போது, படைப்பாற்றல் அவனை நெறிப்படுத்துகிறது. சமூகத்திற்கு அபாயகரமானவனாயிருந்தவன், இப்போது துணை நிற்பவனாய் உதவக் கூடியவனாய் பரிணாமம் கொள்கிறான், பரிமாணம் பெறுகிறான்.

‘தூக்கிலிடப்படுவதன் பொருட்டு சலனமின்றி காத்திருத்தலுக்கு மாறாக, படைப்பாக்க நடவடிக்கை மூலம், சவால்களை எதிர்கொள்ளும் வாழ்வை தெரிவு செய்து, சிறையில் தன் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயன்றார்.’

ஆதாரங்கள்
1. The Death-row killer who inspires the Children of
peru / cherry casey / tr by Hirohiko katayama & Ed Neidhardt.
2. Prison Literature in defense of a sentenced to death defendant in Japan/Lilion Yamamoto/Tr by Felipe Zobaran, pdf.
3. தாஸ்தோயவ்ஸ்கி-ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு, தமிழில்: சா. தேவதாஸ்/ நூல்வனம், 2019.