அஞ்சலகம் மீதான காதல் கவிதை – சத்யா சம்பத்

அஞ்சலகம் மீதான காதல் கவிதை – சத்யா சம்பத்




16 வயதில் என் மாமன் பட்டாளத்து பாபு மேல் காதல்,
18 வயதில் திருமணத்தில் வளர்ந்தது,
இப்போது அஞ்சலகம் மீதும் படர்ந்துள்ளது ஏனெனில்!
மாதம் ஒரு முறை மாமன் அனுப்பும் அன்பைச் சுமந்து வருவதால்!
அஞ்சலகத்தின் ஒட்டடை என் மனதை பதைக்க வைக்கும்
மாமன் அன்பில் தூசு விழுமோ என்று!
மாதம் ஒருமுறை அஞ்சலகத்தைச் சுத்தம் செய்ய வைத்தது என் காதல்!
மாமன் அனுப்பும் மணியாடரில் அலுக்கு படியுமோ என்று!
வருடம் ஒரு முறை அஞ்சலகத்தை வெள்ளை அடிக்க வைத்தது என் காதல் !
தினம் கேட்கும் போஸ்ட் மேனின் மணி ஓசைக்கு
எண்ணெய் போட வைத்தது என் காதல்!
என் மகள் மீதான பொன்மகள் திட்டம் வளர்ந்து கைகொடுக்க
விஜயதசமியை அஞ்சலகத்தில் சிறப்பிக்க வைத்தது என் காதல்!
ஆர்.டி யில் குருவியைப் போல் சேர்த்ததைக் கொண்டு
பல நகைக்கு உரிமைகாரியாக்கியது என் காதல்!
அலைப்பேசி, இணைய வழி என்று பல வழிகள் வந்தாலும்
என் மாமனின் கடுதாசி,
மணியாடருக்கு ஈடாகாது.
அதற்கான காத்திருப்பு, தவிப்பு, காதல் என
எதையும் தருவதில்லை இன்றைய வழிமுறைகள்.
அஞ்சலகத்தில் கேட்கும் முத்திரை ஓசையும்,
போஸ்ட்மேனின் மணி ஓசையும்
நம் வீடு நெருங்க நெருங்க
காதலின் ஆழம் புரியும்!
மனம் பதைத்து மெய்சிலிர்க்கும்
அஞ்சலகம் மீதான காதல்!!!!

– சத்யா சம்பத்

அன்பின் பதிலி கவிதை –  அகவி

அன்பின் பதிலி கவிதை – அகவி




கடிதம் எழுதுதல்
தன்னை எழுதுதல்

இப்போதெல்லாம்
கடித கர்ப்பிணி
யாய்
தினம்தினம் அலையும்
தபால்காரரை
காணவே முடியவில்லை

நொடியில்
குரல் கேட்கும்
முகம் பார்க்கும் காலமிது
அன்பின் கசிந்துணர்வை தரவோ பெறவோ
இயலுகிறதா
நவீன கரங்களால்.

அன்புள்ள
எனத் தொடங்கி
உயிருக்குள்
உயிர் ஊறவைக்கும்
கடுதாசி காலம்
அரிதாகிப்போனது

உறவுமுறைக் கடிதங்கள்
எனும் பாடத்தை
நடத்தி முடித்தேன்.
பின் பயிற்சிக்காக
ஐம்பது அஞ்சல் அட்டை வாங்கி அப்பாவுக்கோ அம்மாவுக்கோ
கடிதம் எழுதுங்கள்
என்றேன்

சிலர் மட்டும்
மாமாவுக்கு
சித்தப்பாவுக்கு
தாத்தாவுக்கு என எழுதினர்
பிறகுதான் தெரிந்து
திடுக்கிட்டேன்
இவர்களுக்கு தாய் தந்தை
இல்லை என்று

பதிலித் தாய் தந்தையாய்
மாமா, தாத்தா
சித்தப்பா
போதுமா
மனிதராக இருக்கும்
எவரும் இருக்கலாம்
பதிலித்தாய் தந்தையாய்
இன்று
பதிலித் தபால்காரராய் இருக்கும்
கூரியர் இளைஞரைப் போல.