நூல் அறிமுகம்: உஷா தக்கரின் “காங்கிரஸ் வானொலி” – அருண்குமார் நரசிம்மன்
இந்திய விடுதலைப்போராட்டமும் காங்கிரஸ் வானொலியும்
இந்தியா கிழக்கிந்திய கம்பெனியிடமும் பிறகு பிரித்தானியா ஆங்கிலேய அரசிடமும் 200 ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த 200 ஆண்டுகளில் நம் இந்தியர்களை ஆங்கிலேய பிரித்தானிய அரசும் அதன் அதிகாரிகளும் எவ்வாரெல்லாம் கொடுமை செய்து துன்புறுத்தினார்கள் என்பது உலக சரித்திரத்தில் இந்தியர்களின் குருதியால் அழிக்க முடியாவண்ணம் எழுதப்பட்டுள்ளது.
நம்முடைய விடுதலை போராட்டதை பற்றியும் ஆங்கிலேயர்களின் கோரத்தாண்டவத்தையும் இந்தியாவின்
பாமர மக்களுக்கும் நமது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வதில் ஊடகங்களின் (அச்சு மற்றும் வானொலி) பங்கு மிகப்பெரியதாகும்.
இந்தியாவின் சாமானிய மக்களுக்கு அச்சு ஊடகத்தின் மூலம் அவர்களின் சுதந்திரப் போராட்ட தாகத்தினை அச்சுஊடகத்தார் தணித்தனர். அதேவேளையில் வானொலி தொழில்நுட்பம் தெரிந்த சிலர் வானொலி மூலம் அந்த தாகத்தினை போக்க முயற்சி செய்தனர்.
அதன் ஒரு முயற்சி தான் அன்றைய பம்பாய் நகரில் தலைமறைவாக நடத்தப்பட்ட “காங்கிரஸ் ரேடியோ.” 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை துவங்கினார். அப்போது 22 வயதேயான உஷா மேத்தாவும் அவரின் நண்பர்களும் காங்கிரஸ் வானொலியை உஷா மேத்தாவும் அவரின் சகாக்களும் மூன்று மாதங்கள் பம்பாயில் பல்வேறு இடங்களில் ஒலிபரப்பிகளை இயக்கி ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களில் மண் தூவி ரகசியமாக வைத்து ஒலிபரப்பு செய்து வந்தனர்.
உஷா மேத்தாவின் இந்த சாகசத்தை பற்றி அவரால் ஈர்க்கப்பட்ட உஷா தாக்கர் காங்கிரஸ் ரேடியோ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பென்குவின் பதிப்பகத்தாரால் இந்த புத்தகம் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்தில் வானொலியின் பங்கை பற்றி தெரிந்து கொள்ள 288 பக்கங்களை கொண்ட இந்த காங்கிரஸ் ரேடியோ புத்தகம் உதவும்.
இந்தியாவில் எங்கிருந்தோ 42.34 மீட்டர் அலைவரிசையில் இது உங்கள் காங்கிரஸ் வானொலி என்று உஷா மேத்தாவின் குரல் தேசம் முழுவதும் ஒலித்ததாக நூலாசிரியர் உஷா தாக்கர் இந்த புத்தகத்தை துவங்குகிறார். இந்த வானொலி மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸின் மிக முக்கியமான தலைவர்களின் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் மக்களுக்கு தேசபற்றுஊட்டும் விடயங்களையும் ஒலிபரப்பி வந்தது.
இந்த வானொலியானது சிட்ட காங்கிலிருந்து ஜாம்ஷெட்பூர் வரை அன்றாடம் நிகழும் விடுதலை போராட்ட நிகழ்வுகளை பற்றிய செய்திகளை மூன்று மாதங்கள் தொடர்ந்து வழங்கியது. காங்கிரஸ் வானொலியை உஷா மேத்தாவும் அவரின் சகாக்களும் மூன்று மாதங்கள் பம்பாயில் பல்வேறு இடங்களில் ஒலிபரப்பிகளை ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களில் மன் தூவி ரகசியமாக வைத்து ஒலிபரப்பு செய்து வந்தனர்.
இதற்குண்டான கருவிகளை கமுக்கமாக பல்வேறு நிறுவனங்களிருந்தும் நபர்களிடமிருந்தும் பெற்று நடத்தி வந்தனர். மூன்று மாதத்திற்கு பிறகு ஒரு நாள் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது உஷா மேத்தாவும் இந்த வானொலியை நடத்தி வந்தவர்களும் அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
பாபுபாய் காக்கர் இந்த வானொலி நடத்த நிதியை திரட்டினார், முக்கிய சோசியலிஸ்ட் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோஹியா, சந்திரகாந்த் ஜாவேரி மற்றும் விட்டல்தாஸ் கே. ஜாவேரி ஆகியோர் இந்த வானொலி இயங்க பெரிதும் உதவினர்.
இந்த நிறுவனத்தின் தலைமை அமைப்பாளராக, விட்டல்தாஸ் ஜாவேரி, ரேடியோ பொறியியலில் நன்கு பயிற்சி பெற்ற நரிமன் அபர்பாத் பிரிண்டரை அணுகி, காங்கிரஸ் வானொலிக்கு ஒலிபரப்பிற்கான கருவிகளை தயாரிக்க கேட்டுக்கொண்டார். பம்பாயின் சிகாகோ வானொலி நிறுவனத்தின் உரிமையாளரான நானிக் மோத்வானி இந்த வானொலிக்கான உபகரணங்களை வழங்கி உதவி செய்தார்.
இந்த புத்தகம் படித்து முடித்தபின் எனக்கு ஒரு திரில்லர் கதை படித்த உணர்வு வந்தது அதேபோன்று இந்த வானொலி புத்தகத்தை படிக்கும் உங்களுக்கும் வரும் என்று நான் நம்புகிறேன்.
– அருண்குமார் நரசிம்மன்