என் பள்ளியில் படிக்கும் 5 ம் வகுப்பு குழந்தை ஒருவருக்கு நேற்று நடந்த நிகழ்வு.
குழந்தை நினைவு தெரியும் முன்பே தாயார் வேறொருவருடன் சுயவிருப்பம் பேரில் குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டார். முன்னாள் கணவருடனான மனதொத்த பிரிவு ஏற்பட்ட பின் , இவர்களது வாழ்க்கையும் இயல்பாகிப் போனது.
இக்குழந்தை இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது உடல் முழுக்க தழும்போடு பள்ளிக்கு வந்த அதிர்ச்சி , இன்றும் நினைவில் இருக்கிறது. காரணத்தை கேட்டபொழுது , “அப்பா அடித்துவிட்டார் ! ” என சாதாரணமாக கூறி விளையாட சென்று விட்டார்.
அதற்குப் பிறகான இந்த மூன்று வருடங்களில் பல தழும்புகள் இன்றும் என்னுள் பல நினைவுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
சாத்தியமுள்ள இடங்களில் ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகளை இணைத்து நடத்தலாம். ஆனால் கட்டாயம் கூடாது என்கிற அறிவிப்பிற்கேற்ப , குழந்தையின் கல்வி ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு அருகமை குடும்பத்தோடு இணைந்த கற்க பெற்றோரிடம் வலியுறுத்தினோம்.
தேனொழுகிய சொற்களால் எங்கள் முயற்சிக்கு பாராட்டைத் தெரிவித்துவிட்டு , குழந்தை மேலே தேள் போல கொட்டி இருக்கிறார் அவரது அப்பா.
குழந்தைகளிடையே நடந்த சாதாரணமான உரையாடலுக்கு அவரது அப்பா தந்த அடி என்னை என்னவோ செய்து விட்டது.
போனவருடம் தமக்குப் பிறந்த மகளைப் பார்த்துக் கொள்ளும் கூலியில்லா ஆயாவேலைக்கு இந்த குழந்தையைப் பயன்படுத்திக் கொள்வதால் இவரது குழந்தைமையும் , அறிதல் பொருட்டான ஆர்வமும் பகிரங்க கொலை செய்யப்பட்டதற்கு நானும் சாட்சி என்பதுதான் மீளா வருத்தமே !
இதையொட்டி ஊராரிடம் பேசி மாற்று நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஒருதடவை இதுகுறித்து பேசியதற்கு , “என்னோட குடும்பத்துல தலையிட நீங்க யாரு ? TC கொடுங்க, வேற ஸ்கூல்ல சேர்த்துக்குறேன்” சொல்லிவிட்டு ,எனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டார். அதற்கு பிறகு இன்று வரை பள்ளிக்கு வந்ததும் இல்லை.
Image
கற்பூரம் போல சொல்பவனவற்றையெல்லாம் கேள்வி கேட்டு விளங்கி புரிந்து கொள்ளும் இந்த குழந்தையின் குடும்ப சூழ்நிலை இப்படியானதாக இருக்கிறது.
28ல் 14 குழந்தைகள் இணைய வசதி / வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர்.அருகமை இணைப்பு என்பதைக் கருத்தில் கொண்டாலும் கூட இன்னும் 5 குழந்தைகளை இணைத்துவிடலாம். மீதமுள்ள 9 குழந்தைகள் அசமத்துவப் புறக்கணிக்கப்பு செய்யப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை. நாமே அந்த குடியிருப்புப் பகுதிக்கு சென்று ஒருங்கிணைக்கலாம் என்றால் , தற்பொழுது எங்கள் பகுதியில் பரவி வருகின்ற கொரோனா தொற்று இன்னும் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான மன உளைச்சலில் கடந்த ஒருவாரமாக சிக்கித் தவிக்கிறேன்.
இதில் மதிப்பீட்டுப் பணிகளுக்காக நீங்கள் என்னென்ன யுக்திகளைக் கையாண்டிருக்கிறீர்கள் என்கிற புள்ளி விபரம் வேறு அடிக்கடி கேட்கப்படுகிறது.
கற்றலே சென்று சேராத சூழலில் மதிப்பீட்டை எப்படி மேற்கொள்வது ?
ஆசிரியர்களற்ற இணையவழி கற்றலுக்கு இப்புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை இருக்கிறது. பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரு ஆசிரியரே தொழில்நுட்ப வசதியின் மூலம் பலருக்கும் உணர்வற்ற கற்பித்தலை மேற்கொள்ளலாம். இதன் மூலம் அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள், கற்பித்தல் என்பதில் இருந்து தரமிறக்கப்பட்டு கண்காணிப்பாளராக உருமாற்றம் அடைவர். கண்காணிப்பாளருக்கு பெரிதாக கல்வித்தகுதி தேவையில்லைதானே.இது மேற்கண்ட குழந்தைகளைப் போலிருப்பவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும்?
அவள் தழும்பையும் , எனது முற்றுப்பெறா மன உளைச்சலையும், இந்த தேசியக்  கல்விக் கொள்கையின் மூலம் நாம் அறுவடை செய்ய உள்ள அடைவுகளின் முன்னோட்டமாக கருதுகிறேன்.
அதுபோலவே , ஒருங்கிணைந்த பள்ளி வளாகமென்ற பெயரில்  10 கிமீ சுற்றளவில்  உள்ள பள்ளிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதென்பதில் இதுமாதிரியான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் மீதான ஆசிரியரது அக்கறையும் , உதவியும் முற்றிலும் அழிந்துபோகும் அபாயசூழலும் உள்ளது. இந்த குழந்தைகள் பள்ளிக்கே கூட வராமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை வந்தாலும் கூட கற்றல் சூழலில் எந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக பங்கெடுக்கும் என்பதும் தெரியவில்லை.
Image
மையப்படுத்தப்படும் அதிகார அமைப்பில் , இந்த குக்கிராம குறிஞ்சிப் பூவெல்லாம் நசுக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அல்லது நசுக்கப்பட்ட சுவடே தெரியாத அளவில் தனது அதிகார சுவையை ருசித்துக் கொண்டிருக்கும்.
– காண்டீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *