Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் சமூக-பொருளாதார மேம்பாடு: ஒரு நூற்றாண்டின் ஒப்பாய்வு



சுருக்கம்

சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டும் நாட்டின் முக்கிய தரவுகோல்களாகும். சமூக மேம்பாடு அடைய, சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கல்வி, சுகாதரம், வேலைவாய்ப்பு போன்றவற்றினைச் சமஅளவில் அனுகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகும். இவற்றை நாம் “சமூக நீதி” என்கிறோம். பொருளாதார வளர்ச்சி சமூக மேம்பாட்டைத் தவிர்த்து அடைய முடியாது. இந்தியா பல்வேறு இன, மத, மொழி குழுக்களை உடையது. இக்குழுக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. சமூகச் சீர்திருத்தங்களால் இவ்ஏற்றத்தாழ்வினைக் குறைக்க முடியும். இந்தியாவில் புத்தர் தொடங்கி, இன்றுவரை சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இச்சீர்திருத்தங்களை அரசியல் வழியாகக் கடந்த காலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு வந்திருக்கிறது. தமிழ்நாடு சமத்துவம், சமூக நீதியின் உரைவிடமாகும். வள்ளலார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரால் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது. இக்கருத்துகளை நடைமுறைப்படுத்த கடந்த ஒரு நூற்றாண்டாக 1921ஆம் ஆண்டு நீதிக் கட்சி தொடங்கி, தற்போது உள்ள திராவிடக் கட்சி ஆட்சி வரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் பல முயற்சிகளை எடுத்துள்ளன. அதன் பயன் தமிழ்நாடு இந்திய அளவில் ஒரு முன்மாதிரி மாநிலமாக, சமூக-பொருளாதார நிலைகளில் இனம் காணப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் கடந்த ஒரு நுற்றாண்டாகத் தமிழ்நாட்டை ஆண்ட மூன்று கட்சிகளின் (நீதிக் கட்சி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, திராவிடக் கட்சி) ஆட்சிக் காலங்களில் கல்வி, சுகாதாரம், தொழில் துறை, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்பதை ஒப்பீட்டு அளவில் மூன்று கட்டங்களாகப் பிரித்து ஆய்விட முனைகிறது இக்கட்டுரை இரண்டாம் நிலைப் புள்ளி விவரங்களை அரசு ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து இவ்வாய்விற்குப் பயன்படுத்தியுள்ளது.

முன்னுரை

உலகில் உள்ள சமூகக் குழுக்கள் பலவேறு நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளப் பெரும்சவால்களை எதிர்கொண்டன. வலிமையான சமூகக் குழுக்கள் மற்றவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அவற்றை அழித்தொழிக்கும் செயலையும் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் செய்துகொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூதாயம் தங்களின் உரிமைகளைப் பெற, சிலர் தலைமையின் விழித்தெழுந்து வெகுகாலம் போராடவேண்டியுள்ளது. சமுதாயத்தில் காலம்காலமாகக் காணப்படும் ஆண்டான் அடிமையினையும், சமுதாயத்தில் புரையோடி இருந்த மூடநம்பிக்கைகளைப் போக்கவும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அறிஞர் பலர் விதைத்துச் சென்றுள்ளனர். இந்தியாவில் சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்களில் புத்தர் தொடங்கி, இன்று வரை பலர் உண்டு. மனித மேம்பாடு சமூகச் சீத்திருத்தங்களினால் தான் அடைய முடியும் என்று கடந்த ஒரு நூற்றாண்டாக நாம் கண்கூடாக அறிந்திருக்கிறோம்.

இந்தியாவில் பல சமூகச் சீர்திருத்தவாதிகள் இருந்தாலும் அவர்களில் மகாத்மா ஜோதிராவ் புலே, ஸ்ரீ நாராயண குரு, தந்தை பெரியார் போன்றோரால் சமுதாயத்தின் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள்களின் உரிமைகளைப் பெறப் பெரும் பங்காற்றியவர்களாவார்கள். இவர்களின் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அரசியல்தளங்களில் நாளடைவில் உள்வாங்கிக்கொண்டு நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது. சமூதாயம் மேம்படும்போது அதன் சஙகலித்தொடராக பொருளாதாரநிலை மேம்படத்; தொடங்கும். இதனால் வறுமை ஒழியும், சமத்துவம் ஊண்றத் தொடங்கும். இந்தியாவில் குறிப்பிட்ட சில (தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா) மாநிலங்கள் சமூக-பொருளாதார தளங்களில் உயர்நத்து நின்று உள்ளடக்கிய வளர்ச்சியின் வழியில் பயனிக்கிறது.

இந்தியாவில் உள்ள மநிலங்களில் தமிழ்நாடு சமூக-பொருளாதார தளத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பல வழிகளில் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது. இடஒதுக்கீடு, ஆண்-பெண் சமத்துவம், கல்வி அறிவு, அளவான குடும்பம், இருமொழிக்கொள்கை என்ற சமூக நிலையிலும் வேளாண்மை, தொழில் துறை மேம்பாடு என்ற பொருளாதாரத் தளத்திலும் இந்தியாவிலேயே முன்னேடியான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் 4 விழுக்காடு நிலப் பங்கினைப் பெற்றுள்ளது ஆனால் 5.96 விழுக்காடு மக்களைப் பெற்றுள்ளது. பொருளாதார நிலையில் தமிழ் நாடு ஒட்டுமொத்தத் தேசிய வருமானத்திற்கு 8.59 விழுக்காடு பங்கினை அளித்து இரண்டாவது இடத்தை மார்ச்சு 2021இல் வகிக்கிறது (https://statisticstimes.com/economy/india/indian-states-gdp.php). பத்தாண்டுகளுக்கு (2000-01ல்) முன்பு இது 7.62 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது (Shanmugam 2012). இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டை, கடந்த 100 ஆண்டுகளாக ஆண்ட அரசியல் கட்சிகள் என்றால் அது மிகையாகாது. சமூகச் சீர்திருத்தங்களைத் தமிழ்நாட்டில் பரப்பியவர்களில் முதன்மையானவர்கள் இராமலிங்க அடிகளார், பெரியார், அண்ணா, கலைஞர் முதலியோர். இதன் விளைவு தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில்  இல்லாத வகையில் சக மனிதனை மனிதனாக மதிக்கக்கூடிய நிலையும், சாதிய அடையாளங்களைப் பெயருக்குப் பின்னால் துறந்த நிலையும் இன்று காண முடிகிறது. மேற்கண்ட அறிஞர்களின் கருத்துகளைச் செயல் வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்தியது தமிழ்நாட்டை ஆண்ட அரசியல் கட்சிகளே ஆகும்.

அவ்வகையில் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அரசியல் தளங்களை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம் அவை நீதிக் கட்சிக் காலம், இந்திய தேசிய காங்கிரஸ் காலம், திராவிடக் கழகங்களின் (திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) காலம் எனலாம். திராவிடக் கட்சிகளின் ஆணி வேராகத் திகழ்வது நீதிக் கட்சியாகும். இக்கட்சியின் ஆளுகை தொடங்கப்பட்டு (சட்டமன்றம் 17.12.1920 தொடங்கப்பட்டது இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளது) 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து நீதிக் கட்சி முன்னெடுத்த செயல்பாடுகளை திராவிடக் கட்சிகள் ஏற்றது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் ஏற்று அதே வழியில் சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இதன் வெளிப்பாடு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்சசி, தொழில் நுட்ப மேம்பாடு எனப் பல தளங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இந்தப் பின்னணியில் இக்கட்டுறையின் முதன்மை நோக்கம் தமிழ்நாட்டை ஆண்ட இம்மூன்று கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் கல்வி, சுகாதாரம், தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை ஒப்பீட்டு அளவில் மூன்று கட்டங்களாகப் பிரித்து ஆய்விட முனைகிறது இக் கட்டுரை இரண்டாம் நிலைப் புள்ளிவிவரங்களை அரசு ஆவணங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து இவ் ஆய்விற்குப் பயன்படுத்தியுள்ளது.

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள்

சென்னை மாகாணம் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. 1953ல் ஆந்திரப்பிரதேசம் மொழிவாரிய மாநிங்கள் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்றது. நவம்பர் 1, 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு புதிய சென்னை மாகாணம் உருவானது. மாநிலத்தின் சிலபகுதிகள் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி பொன்ற மாநிலங்களுக்குச் சென்றது (Perumalswamy 1985). சென்னை மாகாணம் என்று இருந்ததை, திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்ச்சியில் அமர்நததும் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் 14 ஜனவரி 1969 முதல் நடைமுறைக்கு வந்தது.

அட்டவணை 1: தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளும் முதலமைச்சர்களும்

கட்சிகள்

ஆண்டு

முதலமைச்சர்கள்

நீதிக் கட்சி

1920 முதல் 1937 முடிய

ஏ.சுப்பராயலு ரெட்டியார், பனங்கல் அரசர், பி.சுப்பராயன், பி. முனுசாமி நாயுடு, ராமகிருஷ்ண ரங்கராவ், பி.டி.ராஜன், குர்மா வெங்கட ரெட்டி நாயுடு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி

1937 முதல் 1967 முடிய

சி.ராஜகோபாலாச்சாரி, டங்குத்துரி பிரகாசம், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, கு.காமராஜ், எம்.பக்தவச்சலம்,

திராவிடக்
கட்சிகள்

1967 முதல் 2021 தற்போது வரை

சி.என்..அண்ணாதுரை, எம்.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின்

ஆதாரம்: Ramakrishnan T (2021): “T.N. Legislature Turns 100,” The Hindu, 1.8.2021, p.4.

நீதிக்கட்சி 17.12.1920 முதல் 14.07.1937 வரை 17 ஆண்டுகள் அன்றைய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தது. இதில் திரு.ஏ.சுப்ராயலு ரெட்டியார் தொடங்கி திரு. குமார வெங்கட்ட ரெட்டி நாயுடு வரை 7 முதலமைச்சர்கள் (தொடக்கத்தில் மாநிலப் பிரதமர் என அழைக்கப்பட்டனர்) ஆட்சி செலுத்தினர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 14.07.1937 முதல் 06.03.1967 முதல் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டது. இதில் திரு.சி.ராஜகோபாலாச்சாரி தொடங்கி, திரு. எம். பக்தவச்சலம் முடிய 6 முதலமைச்சர்கள் ஆட்ச்சி செய்தார்கள். திரு. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், திரு. காமராஜ் போன்ற திறன்மிக்க முதலமைச்சர்கள் இவர்களில் அடங்குவர்.

திராவிடக் கழகக் கட்சிகள் 06.03.1967 முதல் தற்போது வரை 54 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் சி.என். அண்ணாதுரை தொடங்கி, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முதலமைச்சராக இக்காலக்கட்டங்களில் ஆட்சியிலிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது திரு.மு.க.ஸ்டாலின் முதல்வராகத் தொடர்கிறார். 1921 முதல் தற்போது வரை 22 முதல்வர்களைத் தமிழ்நாடு கண்டுள்ளது.

இக்காலகட்டங்களில் பல புகழ்மிக்க வல்லவர்கள் தமிழகச் சட்டமன்றத்தில் கோலாச்சியவர்கள் பலர் அவர்களில் முக்கியமானவர்கள் எ. ராமசாமி முதலியார், எ. லட்சுமணசாமி முதலியார், சத்திய மூர்த்தி, சி.பி. ராமசாமி ஐயர், பி.டி. ராஜன், ஆர்.கே.சண்முகம் செட்டியார், கிருஷ்ணய்யர், சி.சுப்பரமணியம், ஆர்.வெங்கட்டராமன், கே.வினாயகம், இராமசாமி படையாச்சியார், வி.ஆர்.நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், என்.சங்கரய்யா, நல்லக்கண்ணு, ஆர்.உமாநாத், குமரி ஆனந்தன், துரைமுருகன் இவர்களின் சட்டமன்றச் செயல்பாடுகள் தமிழக மேம்பாட்டிற்குப் பெருமளவில் உதவியது என்றால் அது மிகையாகாது.

சமூக மேம்பாடு – கல்வி, சுகாதாரம்

தமிழ்நாட்டில் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 3 விழுக்காடு பங்குகொண்ட சில முன்னேறிய வகுப்பினர் கல்வி, நிருவாகம், வேலைவாய்ப்பில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதனால் இதர பிரிவினர் பெருமளவிற்குக் கல்வி-வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணர் அல்லாத கல்வி பெற்றவர்கள் கல்வி, நிருவாகம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் புறக்கணிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக, பி.டி.தியாகராய செட்டியாரால் ‘தென்இந்திய நல உரிமைக் கூட்டமைப்பு’ 1916ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இது பின்னால் ‘நீதிக் கட்சி’ என்று அழைக்கப்பட்டது (Mohan Ram 1974). அன்றைய நிலையில் மக்கள் தொகையில் 3.2 விழுக்காடாக மட்டுமே இருந்த பிராமணர்கள், மொத்தமான 130 உதவி ஆட்சியாளர்களில் 77 பேர் இருந்தனர், அதாவது 55 விழுக்காடு ஆகும். இதுபோன்றே நீதித்துறை, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் உயர்பதவிகளில் இவர்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்தது. 1920ல் சென்னை மாகாணத்தில் ஆட்சியினைப் பிடித்த நீதிக்கட்சி, தொடக்கக் கல்வி பெறுவதை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டம் மெட்ராஸில் (ஆயிரம் விளக்கு பகுதியில்) 1925ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, மாணவர்களுக்கான உறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டது, 1920ஆம் ஆண்டு மெட்ராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தொடக்கக் கல்வி கட்டாயம் என்றானது. இதனால் பெருமளவிற்குத் தொடக்கக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன, உயர்கல்வி பெறுவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம் இயற்றப்பட்டது, ஆந்திரா பல்கலைக்கழகம் (1929ஆம் ஆண்டு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (1926ஆம் ஆண்டு) போன்றவை தொடங்கப்பட்டன. வேலைவாய்பில் பிராமணர் அல்லாதோர் பயனடையும் வகையில் இந்தியாவில் முதன்முதலாக இடஒதுக்கீடு 16 செப்டம்பர் 1921ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 1928ஆம் ஆண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவு நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் கல்வி அறிவு பெற்றோர் 1921 மற்றும் 1941ஆம் ஆண்டுகளுக்கிடையே இரண்டுமடங்கு அதிகரித்தது. வேலைவாய்ப்பினை அனைத்துப் பிரிவினரும் பெற இந்தியாவிலேயே முதன்முதலாக அரசு தேர்வாணைக்குழு 1929ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது (ஜெயராமன் 2021).

அடுத்து வந்த காங்கிரஸ் அதிக அளவில் தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. மேலும் இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தில் முதன்முதலாகத் தனிஒதுக்கீடு 1947ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டிற்கு எதிராக நீதி மன்றத்தின் மூலம் முட்டுக்கட்டை ஏற்பட்டபோது தமிழகமே கொதித்து எழுந்தது. அதற்குத் தலைவணங்கிய ஒன்றி அரசு, 1950ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுப் பிற்படுத்தப்பட்டோரும் பயன்பெறும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் 300 மக்கள் தொகையுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்பப் பள்ளியினை அமைக்கத் திட்டமிட்டார். மதிய உணவுத்திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்தி ஏழை எளிய மக்கள் கல்வி பயில வழிவகை செய்தார். இதனால் 1951ஆம் ஆண்டு 16037 எண்ணிகையிலான ஆரம்பப் பள்ளிகள் 1967ஆம் ஆண்டு 33529 பள்ளிகளாக உயர்ந்தன. இதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1951ஆம் ஆண்டு 1852 மில்லியனிலிருந்து 1961ஆம் ஆண்டு 3558 மில்லியனாக உயர்தது. 1969ஆண்டு கணக்கின்படி 30663 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது இதனால் 18.32 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். இலவசச் சீருடைத் திட்டம் இக்காலகட்டங்களில் தான் தொடங்கப்பட்டது. இது போன்றே உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

அட்டவணை 2: தமிழ்நாட்டின் மக்கள்தொகையும் கல்வியறிவும்.

ஆண்டு

மக்கள்தொகை (மில்லியன்)

கல்வியறிவு (%)

கல்வியறிவு வீதத்தின் மாற்றம்

1921

21.63

7.60

நீதிக் கட்சி

+  6.70 %

1931

23.47

11.30

1941

26.27

14.30

1951

30.12

20.00

இந்திய தேசிய காங்கிரஸ்

+  25.43 %

1961

33.69

31.47

1971

41.20

45.43

1981

48.14

54.39

திராவிடக் கட்சிகள்

         +  34.90 %

1991

55.86

62.66

2001

62.40

73.45

2011

72.15

80.33

ஆதாரம்: Government of India,  various  Population Census, Director of Census of India

1956-57ஆம் ஆண்டு 3 பல்கலைக் கழகங்கள், 56 கலைக்கல்லூரிகள் (அரசு மற்றும் தனியார்) செயல்பட்டு வந்தன இதில் 42000 மாணவர்கள் பயின்றனர். 1968-69ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ் வழி கல்வி பயில வழிசெய்யப்பட்டது. 23 ஜனவரி 1968 முதல் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டது இதன்படி தாய்மொழியுடன் ஆங்கிலம் அல்லது இந்திய மொழி அல்லாத ஒன்றைப் படிக்க வழிவகை செய்தது. இது தமிழகம் முழவதும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகப் போரட்டங்கள் வெடித்தது. அன்றை ஒன்றிய அரசு இந்தி திணிப்பினைப் கைவிட்டது. ஆங்கிலம் இணைப்பு மொழியானதால் உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் தழிழர்கள் செல்லவும், அறிவினைப் பெருக்கிக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. இதன் விளைவு இன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழர்கள் உலஅளவில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். ஆங்கில இணைப்பு மொழி தமிழர்களின் போராட்டத்தால் பெறப்பட்டதால் தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் ஆங்கில மொழி அறிவினை வளர்க்க உதவியது. இதனால் இன்று உலகில் பல நாடுகளிலும் இந்தியர்கள் உயர்பதவிகளை அலங்கரிக்கின்றனர்

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் சமூக உரிமை, நீதி மற்றும் மேம்பாடு; தலையானதாக இருந்து வருகிறது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்து சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் 69 விழுக்காடு முறையை நடைமுறைபடுத்தினர். நாட்டிலேயே முதல் முதலில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் சரியான பங்கினைப் பெறமுடியாமல் போன சில குறிப்பிட்ட சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கி அவர்களின் மேம்பாட்டிற்குத் திராவிடக் கழகங்களின் ஆட்சிக்காலங்களில் சமூக நீதியினை வலுவாக நிலைநாட்டியுள்ளது. மேலும்; மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு, மண்டல் கமிஷன் நடைமுறைபடுத்த அழுத்தம் தரப்பட்டு 1992இல் நடைமுறைபடுத்தப்பட்டது. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை பல்வேறு திட்டங்கள் (இலவச மிதிவண்டி, மடிக்கணினி, மதிய உணவுத் திட்டம், இலவசப் பேருந்து பயணம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குக் கட்டணச் சலுகைகள்) நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டன. 2017-18ஆம் ஆண்டின்படி உயர் கல்வி நிறுவனங்களின் (பொதுக் கல்வி) எண்ணிக்கை 1535ம், தொழில் நுட்பக் கல்லூரிகள் 580ம், தொடக்க, இடைநிலை கல்வி நிறுவனங்கள் 45161ம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 8312ம் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. (GoTN 2020). இந்தியாவில் அதிக அளவு கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுபவர்கள் 50 விழுக்காடு அளவிற்கு உள்ளனர், தொடக்கக் கல்வியில் முழு அளவிலான மாணவர் சேர்க்கை, படிப்பைத் தொடர முடியாமல் இடைநிறுத்தம் ஏற்படும் அளவு மிகக் குறைவாகவும் உள்ளது.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை பெரிய அளவில் இயற்கை வளங்கள் இல்லை, ஆனால் மனிதவளம் அதிக அளவில் உள்ளது. கல்வி அறிவு மனிதனின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டான மாநிலமாகத் தற்போது தமிழ்நாடு திகழ்கிறது. கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காட்டை அடிப்படையாகக்கொண்டு நாட்டின் கல்வி நிலையினை அளவிட முடியும். அவ்வகையில் நீதிக் கட்சி காலத்தில் கல்விஅறிவு பெற்றவர்கள் அளவு 1921ஆம் ஆண்டு 7.6 விழுக்காடாக இருந்து 1941ஆம் ஆண்டு 14.30 விழுக்காடாக அதிகரித்தது, அதாவது 6.7 விழுக்காடு கூடுதலானது (அதாவது ஒரு 10 ஆண்டுக்குச் சராசரியாக 3.35 விழுக்காடு உயர்ந்துள்ளது). இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இது 25.43 விழுக்காடு கூடுதலாக அதிகரித்து, 1971ஆம் ஆண்டு 45.43 விழுக்காடாக உயர்ந்தது (அதாவது ஒரு 10ஆண்டிற்குச் சராசரியாக 8.47 விழுக்காடு உயர்ந்துள்ளது) மேலும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இது 34.9 விழுக்காட்டுப் புள்ளிகள் கூடுதலாக அதிகரித்து. 2011ஆம் ஆண்டின்படி 80.33 விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர் (அதாவது ஒரு 10ஆண்டிற்குச் சாராசரியாக 8.72 விழுக்காடு உயர்ந்துள்ளது).

சமூக மேம்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்வது சுகாதாரமாகும். இவற்றின் வெளிப்பாடடை பல காரணிகளைக்கொண்டு (பிறப்பு வீதம், இறப்பு வீதம், குழந்தை இறப்பு வீதம், கருவுறுதல் வீதம், பாதுகாப்பான மகப்பேறு வீதம்) அளவிட முடிந்தாளும் ஆயுள் எதிர்பார்ப்பு என்பது மூலம் அளவிடுவது இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒற்றைக் காரணியாகக் கொள்ளமுடியும். இதன் பொருள் ஒரு நபர் எத்தனை ஆண்டுகள் ஆயுள் நீடிப்புடன் வாழமுடியும் என்பதாகும். இது, முழக்க சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பினைப் பொறுத்தது. நீதிக் கட்சிக் காலத்தில் ஆண்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு 1911-21ஆம் ஆண்டில் 19.75ஆண்டுகள் என்றிருந்தது. 1931-41ஆம் ஆண்டில் 36.22 ஆண்டுகளாக உயர்ந்தது இதுபோலவே, பெண்களின் வயது இவ்வாண்டுகளில் 24.33லிருந்து 36.17 ஆண்டுகளாக உயர்நதது. இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1941-51 மற்றும் 1961-71ஆம் ஆண்டுகளுக்கிடையே கூடுதலாக 16.47 ஆண்டுகள் ஆண்களுக்கும் 11.94 ஆண்டுகள் பெண்களுக்கும் அதிகரித்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் 1961-71 மற்றும் 2013-17ஆம் ஆண்டுகளுக்கிடையே 22.4 ஆண்டுகள் ஆண்களுக்கும் 27.2 ஆண்டுகள் பெண்களுக்கும் கூடுதலாக ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதாவது 2013-17ஆம் ஆண்டுக் கணக்கின்படி 69..90 ஆண்டுகள் ஆணகளுக்கும் 73.70 ஆண்டுகள் பெண்களுக்கும் ஆயள் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு பெருமளவிற்கு ஆண்களைவிட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கான கல்வி, வேலைவாய்பபு, சுகாதாரப் பாதுகாப்பு. சுயதொழில் செய்ய உதவி, பெண்கள் சுய உதவிக் குழக்கள், பெண்குழந்தைகளைப் பாதுகாப்பது போன்ற சில முக்கிய திட்டங்கள் திராவிடக் கழகங்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதைக் குறிப்பிடலாம். இது மட்டுமல்லாமல் சுகாதாரக் கட்டமைப்பை பெருமளவிற்கு வலுபடுத்தியதையும் குறிப்பிடலாம்.

அட்டவணை 2: தமிழ் நாட்டில் ஆயுள் எதிர்பார்ப்பு (ஆண்டுகள்)

ஆண்டு

ஆண்கள்

பெண்கள்

ஆண்கள்-மாற்றம்

பெண்கள்-மாற்றம்

1911-1921

19.75

24.23

நீதிக் கட்சிக் காலம்

16.47

நீதிக் கட்சிக் காலம்

11.94

1921-1931

28.71

30.94

1931-1941

36.22

36.17

1941-1951

35.03

37.23

இந்திய தேசிய காங்கிரஸ் காலம்

11.28

இந்திய தேசிய காங்கிரஸ் காலம்

10.33

1951-1961

41.09

39.24

1961-1971

47.50

46.50

1971-1981

52.50

51.90

திராவிடக் கட்சிகள் காலம்

22.40

திராவிடக் கட்சிகள் காலம்

27.20

1981-1991

57.40

58.50

1991-2001

63.80

66.70

2001-2011

67.60

71.40

2013-2017

69.90

73.70

Source: GoTN (2020): “Statistical Hand Book 2019,” Government of Tamil Nadu , Chennai .

நீதிக் கட்சிக் காலத்தில் நோய்த் தடுப்பு மற்றும் தொற்று நோயினைக் கட்டுப்படுத்த முதன்முதலாகப் பொது சுகாதாரத்துறை 1923ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1955ஆம் ஆண்டு மாநிலத் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம் (நுஅpடழலநநள’ ளுவயவந ஐளெரசயnஉந ஊழசிழசயவழைn) கொண்டுவரப்பட்டது. 1966ஆம் ஆண்டு குடும்ப நலத்துறைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு மருத்துவக் கல்வி இயக்குநர் மூலமாக நடைமுறைபடுத்தப்பட்டது. 1966ஆம் ஆண்டு 1249 அரசு சுகாதார மையங்களாக இருந்து 2017-18ஆம் ஆண்டு 11137 ஆக உயர்ந்துள்ளது (GoTN 2020). இதுபோலவே 1968ல் 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலை தற்போது 25 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் பெண்கல்வி, சமத்துவம் போன்றவற்றில் தமிழ்நாடு சிறப்பாக முன்னிலையில் உள்ளதற்கு அரசின் திட்டங்கள் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளன.

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், மருத்துவக் காப்பீடு, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், பெண்கள் மேம்பாட்டுக் கழகம், மகிளிருக்கென அன்னை தெரசா பல்கலைக்கழகம் போன்றவை திராவிடக் கட்சிகளின் முக்கிய சமூகநலத் திட்டங்களாகும். இதன் விளைவு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கருவுறுதல் வீதம் தமிழ்நாட்டில் மிகக்குறைவான அளவாக ஒரு தாய்க்கு 1.6 குழந்தைகள் என்று பதிவாகியுள்ளது, மருத்துவமனைகளில் சென்று தாய்மார்கள் பாதுகாப்புடன் குழந்தை பிரசவிக்கும் அளவு 99 விழுக்காடு ஆகும் (இந்திய அளவில் 78.9 விழுக்காடு), குழந்தை இறப்பு வீதம் 1000ம் குழந்தைகளுக்கு 21 (இந்திய அளவில் 42) எனப் பல நிலைகளில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டைப் பொதுமக்கள் இயல்பாகவே எந்த உந்துதலும் இல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையினைத் தற்போது காணமுடிகிறது.

ஆட்டவணை 3: தமிழ்நாட்டின் சுகாதரா பாதுகாப்பின் வெளிப்பர்டு

குறியீடுகள்

அலகு

ஸ்ரீஆண்டு

1951

1971

2017

பிறப்பு வீதம் (CBR)

1000 மக்களுக்கு

19.1

(40.8)

31.4 (36.9)

14.9 (20.2)

,இறப்பு வீதம் (CDR)

1000 மக்களுக்கு

17.1 (25.1)

14.4 (14.9)

6.7

(6.3)

மொத்த கருவுருதல் வீதம் (TFR)

ஒரு பெண்ணிற்காகச் சாராசரி குழந்தை

NA

3.9

(5.2)

1.6

(2.4)

பேறுகால இறப்பு வீதம்

1 லட்சத்திற்கு

1050*

(1000)

450

(800)

63

(122)

பாதுகாப்பான மகப்பேறு

(Institutional Delivary)

விழுக்காடு

NA

82.8

(38.6)

99

(78.9)

குழந்தைகள் இறப்பு வீதம்

1000 குழந்தைகளுக்கு

120

(186.7)

113 (129)

21

(42)

Note: * 1965 as reference period; NA- Not Available

Source: Velappan 1986;  GoTN, Statistical Handbook 2019 and World Bank (https://data.worldbank.org).

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தொழில் மற்றும் வேளாண்மைத் துறைகள்

தொழில் துறையினை மேம்படுத்த, நீதிக் கட்சி ஆட்சியில் மாநிலத் தொழில் உதவிச் சட்டம் 1922ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி தொழில் தொடங்குவதற்குக் கடன் வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் (பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்துஸ்த்தான் போட்டோ தொழிற்சாலை (உதகமண்டலம்), பல்நோக்கு மின்சாரம் தயாரித்தல், கல்பாக்கம் அனல் மின் நிலையம், சக்கரை ஆலைகள், நூற்பாலைகள், திருச்சி பாரத் கனரக மின் உற்பத்திபாக நிறுவனம்;, 22 தொழிற்பேட்டைகள் (கிண்டி, அம்பத்தூர், ஓசூர், திருச்சி, இராணிப்பேட்டை, விருதுநகர் உட்பட) தொடங்கப்பட்டன. கோயம்புத்தூரில் காட்டன் மற்றும் சர்க்கரைத் தொழில்கள் தொடங்கப்பட்டன. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு, வேளாண்மை நீர்ப்பாசனத்திற்கு மின்மோட்டார் பயன்படுத்துவது போன்றவை நடைமுறைபடுத்தப்பட்டன. இதன் விளைவு இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அன்றைய நிலையில் மூன்றாம் இடத்தில் தொழில் துறை உற்பத்தியில் அங்கம் வகித்தது (Velappan 1986)..

வேளாண்மை வளர்ச்சிக்காகப் பவானி, வைகை, அமராவதி, சாத்தனூர், கிரு~;ணகிரி, பரம்பிக்குளம், வீடூர் போன்ற நீhத்;தேக்கங்கள் காங்கிரஸ் ஆட்ச்சியில் கட்டப்பட்டன. ஜமின்தார் ஒழிப்புச் சட்டம் நிரைவேற்றப்பட்டு 20 மில்லியன் குத்தகைதாரர்களுக்கு நில உரிமை வழங்கப்பட்டது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்டத் தொழில் மையம், தமிழ்நாடு சிறுதொழில் கழகம், தொழில் நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், என ஏராளமாகத் தொடங்கப்பட்டன. வேளாண்மையினை மேம்படுத்த இலவச மின்சாரம், நமக்கு நாமே, குடிமறாமரத்து, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம், உழவர் சந்தைகள் என வேளாண்துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆட்ச்சிக் காலத்தில் 58.01 லட்சம் எக்டர் நிகர சாகுபடி பரப்பாக 1950-51இல் இருந்தது திராவிடக் கட்சிகளின் காலமான 2017-18இல் 46.38 லட்சம் எக்டராகக் குறைந்துள்ளது ஆனால் வேளாண்சாரா நிலப்பயன்பாடு 1961-61இல் 12.95 லட்சம் எக்டராக இருந்தது 2017-18இல் 22.01 லட்சமாக அதிகரித்துள்ளது. 1950-51இல் மொத்தப் பயிரிடும் பரப்பில் 50.9 விழுக்காடு நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்றது 2017-18இல் 57 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதோபோல் 1955-56இல் உணவு தானிய உற்பத்தி 40.88 லட்சம் டன்னாக இருந்தது 2017-18இல் 107.13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. திராவிடக் கழகங்கள் ஆட்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாகப் பணப்பயிர் அதிகப் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவு வேளாண்சார் தொழில்களான பஞ்சாலை தொழிற்சாலைகள், சர்கரை ஆலைகள் அதிக அளவில் பல தமிழ்நாட்டின்; பல மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது. 1960-61இல் 3000 சிறு தொழில் நிறுவனங்கள் இருந்த நிலையில் 2017-18இல் 23.6 லட்சம் சிறு, நடுத்தரத் தொழில்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. இதன்வழியாக அதிக அளவிற்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது மேலும் ஏற்றுமதியும் நடைபெறுகிறது (Perumalsamy, 1985; GoTN 2020).

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்பதில் தமிழ்நாடு முன்ணனியில் உள்ளதைத் தற்போதும் காண முடிகிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மையானது. உலகப் புகழ்பெற்ற ஹ_ண்டாய், ஃபோர்ட், ரெனோல்டு, பி.எம்.டபில்யு, அசோக் லைலேண்டு, டி.வி.எஸ் என மோட்டர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சென்னை ‘இந்தியாவின் டெட்ராயிட்’ என அழைக்கப்படுகிறது.

இன்று இந்திய அளவில் தமிழ்நாடு தொழில் உற்பத்தியில் 11 விழுக்காடும், தொழில் நிறுவனங்களில் 17 விழுக்காடும், தொழில் துறை வேலைவாய்ப்பில் 16 விழுக்காடும், அந்நிய நேரடி முதலீட்டில் 6 விழுக்காடு பங்குகளைத் தற்போது பெற்றுள்ளது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டில் முன்னியில் இருப்பதற்கு மற்றொரு காரணம் இயற்கையாகவே நீண்ட கடற்கரையைப் (1076 கி.மீ) பெற்றுள்ளது, இந்தியாவில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் 3 (சென்னை, தூத்க்குடி, எண்ணூர்) தமிழ்நாட்டில் உள்ளது, பன்னாட்டு விமான நிலையங்கள் 4 உள்ளது. சாலை-இரயில் போக்குவரத்து நாட்டின் பல பகுதிகளையும் நேரடியான இணைப்பினைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், திராவிடக் கட்சிகள் ஒன்றிய அமைச்சரவையில் பங்கேற்றதையும் அவர்களால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியதையும் குறிப்படலாம். இன்று திருப்பூர் (பின்னலாடை), சென்னை (வாகன உற்பத்தி), கோயம்புத்தூர் (மோட்டர் உற்பத்தி), மதுரை (வாகன உதிரி பாகங்கள்), திருச்சி (வேளாண்சார் மதிப்புக் கூட்டல் உற்பத்தி), சிவகாசி (பட்டாசு) போன்ற நகரங்கள் உலக அளவில் தொழில் துறைகளில் குறிப்பிடும் இடத்தை பெற்றுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ்நாடு இந்தியாவில் நகரமயமாதலில் முதன்மையானதாகும் (49 விழுக்காடு அளவில் மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்). இதனால் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் அதிக அளவில் ஒட்டுமொத்த மாநிலப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பினை அளிக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இயற்கைவள ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனால் மனிதவள ஆதாரங்கள் அதிகம் குறிப்பாகத் திராவிடக் கட்சிகள் பின்பற்றும் இருமொழிக்கொள்கையின் விளைவு, தொழில் நுட்ப மேம்பாட்டில் பன்னாட்டு அளவில் சிறந்து விளங்குகிறது. உலக அளவிலும் பல வல்லுநர்களை உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியான சேவைத்துறையின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டெட், வங்கித்துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவம், காப்பீடு, சுற்றுலா, போன்றவற்றின்; தலைசிறந்து விளங்குகிறது. சென்னை நகரம் இந்தியாவின் மருத்துவத்திற்கான மையமாகத் திகழ்கிறது.

துறைவாரியான மேம்பாடு

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

வரைபடம் 1: தமிழ்நாட்டின் துறைவரியான பங்களிப்பு- 1960-61 மற்றும் 2017-18 ஒப்பீடு

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

ஆதாரம்: Tamil Nadu An Economic Appraisal and Tamil Nadu Statistical Hand Book 2019.

பொருளாதார மேம்பாட்டினைத் துறைவாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கழகங்களின் ஆட்சிகளை ஒப்பிடும் போது வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறையின் ஒட்டுமொத்த மாநில மொத்த வருவாயில் 1960-61ஆம் ஆண்டு 51 விழுக்காடாகப் பங்களிப்பு இருந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலமான 2017-18ஆம் ஆண்டு உள்ள ஆண்டுகளில் 12 விழுக்காடு பங்களிப்பாகக் குறைந்துள்ளது (இந்திய அளவில் தற்போது 15.3 விழுக்காடு), தொழில் துறையினை உள்ளடக்கிய இரண்டாம் நிலைத் துறையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 18 விழுக்காட்டிலிருந்த பங்களிப்பு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் 36 விழுக்காடாக இதே காலகட்டங்களில் அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 30.5 விழுக்காடு), இதுபோன்று சேவைத்துறை 31 விழுக்காட்டிலிருந்து 52 விழுக்காடாக அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 54.2 விழுக்காடு) (Rajkumar et al, EPW, 12.07.2021). காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1960-61ல் ரூ.330ஆக இருந்த தலா வருமானம் 1970-71ஆம் ஆண்டு ரூ. 581ஆக அதிகரித்தது. இது தற்போது ரூ.138805 என 2018-19ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மொத்த மாநில வருவாயில் தலா வருமானம் 1960-61 மற்றும் 1970-71ல் 5.82 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் இது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருமடங்காக 11.82 விழுக்காடாக 1980-81 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

அட்டவணை 4: தமிழ்நாட்டின் தலா வருமானப் போக்கு (நிலையான விலையில்)

ஆண்டு

தலா வருமானம் (ரூ.)

சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் (%)

1960-61

      330

இந்திய தேசிய காங்கிரசு காலம் 5.81

1970-71

      581

1980-81

    1269

திராவிடக் கட்சிகளின் காலம் 11.82

1990-91

    2275

2000-01

    53507

2010-11

    78473

2018-19

  138805

ஆதாரம்: Compailed from various Tamil Nadu Statistical Hand Book, published by Government of Tamil Nadu.

வறுமை ஒழிப்பு

ஒட்டுமொத்தப் பார்வையில் நீதிக் கட்சியானது பல்வேறு எதிர்புகளுக்கிடையே சமூகச் சீர்திருத்தத்திற்கு அடிப்படையாகப் பல திட்டங்களைக் குறுகிய காலத்தில் நடைமுறைபடுத்தித் தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு அடிகோலியது. அடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கல்வி மேம்பாட்டிற்கான அடித்தளத்தினையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக-பொருளாதார தளங்களின் தங்களின் சித்தாந்தை நடைமுறைபடுத்தியது, கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு, உள்கட்டமைப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என அனைத்திலும் தடம்பதித்துள்ளது. இதன் விளைவு இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் அதிகஅளவில் குறைத்த மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் 1957-58ஆம் ஆண்டு 67.8 விழுக்காடாக இருந்த வறுமையின் அளவு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் 2011-12ஆம் ஆண்டு 15.80 விழுக்காடாகக் குறைந்துள்ளது அதாவது 1973-74 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புறங்களில் வறுமை 41.63 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்துள்ளது. நகர்புறங்களில் 1973-74இல் 49.4 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்துள்ளனர் இது 2011-12ஆம் ஆண்டு 6.50 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிலேயே பொதுவிநியோகத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது, உணவுப் பாதுகாப்பு (குறிப்பாக மதிய உணவுதிட்டம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து), முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்களைத் திராவிடக் கழகங்களின் ஆட்சிக் காலங்களில் நடைமுறைப்படுத்தியதைக் குறிப்பிடலாம். இவற்றின் ஒட்டு மொத்த விளைவு கிராம-நகர, ஆண்-பெண், வட்டாரங்களுக்கிடையேவும்,  சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வின் இடைவெளி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது.

அட்டவணை 5: தமிழ்நாட்டில் வறுமை வீதம் (விழுக்காடு)

ஆண்டு

கிராமப்புறம்

நகர்புறம்

மொத்தம்

% குறைந்து

1957-58

67.8

1963-64

52.0

1973-74

57.4

49.4

54.6

1977-78

57.7

48.7

54.8

0.15

1983-84

54.0

47.0

51.7

3.13

1987-88

45.8

38.6

43.4

8.27

1993-94

32.5

39.8

35.0

8.36

1999-00

20.6

22.1

21.1

13.9

2004-05

22.8

22.2

22.5

-1.40

2011-12

15.8

6.5

11.2

11.30

1973-74 & 2011-12 , இடையே குறைநத அளவு

41.6

42.9

43.4

ஆதாரம்: Shanmugam, 2012 and  C.Rangarajan 2014.

முடிவுரை

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே கணக்கில் கொண்டு அவற்றின் நிலையினை மதிப்பிடுவது சரியாக இருக்காது சமூகக் கூறுகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று பல பொருளியல் அறிஞர்கள் அன்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே சமூக, பொருளாதாரம் உள்ளடக்கிய கூறுகளான கல்வி, சுகாதாரம், தலாவருமானம் ஆகியவற்றின் வெளிப்பாடான மனிதவள மேம்மபாட்டுக் குறியீட்டை ஐக்கிய நாடுகளின் சபை 1990ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வெளியிட்டு வருகிறது. மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டெண்ணில் தமிழ்நாடு 1981இல் 0.343 புள்ளியில் இருந்தது 2019ஆம் ஆண்டு 0.709 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் உள்ள பெரிய மாநிங்களில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் தமிழ்நாடு சமூக-பொருளாதார நிலைகளில் முன்னேடியாக இருப்பதற்குக் காரணம் சமூகச் நீதி, சமூகச் சீர்திருத்தங்கள் எனத் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படுவதே ஆகும். இதன் விளைவு இயைந்த, நீடித்த வளர்ச்சிக்கான பாதையில் தமிழ்நாடு பயணித்துக்கொண்டுள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு பல நிலைகளில் ஒரு மாதிரிமாநிலமாக தற்போது இருப்பதற்குக் காரணம் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அரசியல் வழியாக அவற்றை நடைமுறைப் படுத்தியதே ஆகும். இவை ஒருபுறம் இருந்தாலும் இந்தியவிற்கே முன்னேடியாக மதிய உணவுத் திட்டம், இட ஒதுக்கீடு, பெண்கள் உரிமை, பொதுவிநியோகம், அனைவருக்குமான கல்வி, சுகாதாரம் திகழ்ந்தாலும் பல உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துக்கொண்ட நிலையினைத் தற்போது காண முடிகிறது. முக்கியமாக கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றை மாநில அரசின் அதிகாரத்திற்கு முழுமையாகக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. நோபல் பரிசுபெற்ற பேரா. அமர்த்தியா சென் தன்னுடைய புத்தமான Development as Freedom என்பதில் தமிழ்நாட்டைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘சுகாதாரப் பாதுகாப்பின் வெளிப்பாட்டினில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக உள்ளது’ என்கிறார். An Uncertain Glory: India and its Contradictions என்ற புத்தகத்தில் தமிழ்நாடு சமூக மேம்பாட்டில் உயர்ந்து இருப்பதால் வறுமை ஒழிப்பு, சமத்துவம் போன்றவற்றில் இந்திய அளவில் உயர்ந்து நிற்கின்ற மாநிலம் என்கிறார்.

முக்கிய சொற்கள்: சமூக-பொருளாதாரம், சமூக நீதி, சுகாதாரம், கல்வி, வறுமை
————————-

முனைவர் பு. அன்பழகன்
இணைப்பேராசிரியர், பொருளியல் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை-5

 

முந்தைய  பொருளாதார கட்டுரைகளை படிக்க கிளிக் செய்க: 

இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி

பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்

பொருளாதார கட்டுரை 3: வரிச்சுமையை மறக்க பக்தியென்னும் மயக்க மருந்து: ஓர் வரலாற்று பார்வை ~ பேரா. மா. சிவக்குமார்

பொருளாதார கட்டுரை 4: கோவிட்-19 பெருந்தொற்றும், இந்திய கிராமப்புற பொதுசுகாதார உள்கட்டமைப்பும் – பேரா. பு. அன்பழகன்

பொருளாதார கட்டுரை 5: இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும்; கோவிட்-19 பெருந்தொற்றும் – பேரா. பு. அன்பழகன்

பொருளாதார கட்டுரை 6: பலன் தருமா தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை? – பேரா. பு. அன்பழகன்

References

Balasubramanian T and K Ayyanar (2020): “Socio-Economic Treands in Tamil Nadu After Independence,” Aegaeum, Vol.8, No.14, pp 1621-1630.

Business Standard (2016): “Tamil Nadu lost due to Bifurcation of Madras: Ramadoss”, 31.10.2016, https://www.business-standard.com/article/news-ians/tamil-nadu-lost-due-to-bifurcation-of-madras-ramadoss-116103101264_1.html\

GoI (2005),”Tamil Development Report,” Planning Commission, Government of India, New Delhi.

GoTN (2020): “Statistical Hand Book 2019,” Government of Tamil Nadu , Chennai

Government of Tamil Nadu (2003): “Tamil Nadu Human Development Report,” New Delhi, Social Science Press.

https://statisticstimes.com/economy/india/indian-states-gdp.php

Mohan Ram (1974): “Ramaswami Naicker and the Dravidan Movement,” Economic and Political Weekly, Vol.9, No.6/8, pp.217-224.

ஜேயராமன், கோவி (2021): “ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்,” பெண்ணைப் பதிப்பகம், கடலூர்.

Pallavi Roy (2011): “Tamil Nadu: Growth in the Time of Clientelism,” Working Paper, SOAS-AFD Research Project, Paris (http://eprints.soas.ac.uk/22131/).

Permalsamy S (1985): “Economic Development of Tamil Nadu,” S.Chand & Company Ltd., New Delhi.

Perumal C A and V K Padmanabhan (1987): “Political Alliances in Tamil Nadu,” The Indian Journal of Political Science, Vol 48, No 4, pp 618-624.

Rajaraman K R (1970): “Tamil Nadu State Administration Report 1968-69,” Government of Tamil Nadu.

Ramakrishnan T (2021): “T.N. Legislature Turns 100,” The Hindu, 1.8.2021, p.4.

Rangarajan C (2014): “Report of the Expert Group to Review the Methodology for measurement of Poverty,” Planning Commission, Government of India.

Shanmugam, K.R (2012): “Monitorable Indicators and Performance: Tamil Nadu,” Madras School of Economics, Chennai.

Thamari Manalan (2018): “Role of Justice Party in Tamil Nadu Politics,” JETIR, Vol.5. Issue 5.

Velappan (1986): “Ecnomic Development of Tamil Nadu,” Emeral Publisher, Madras.

William Joe, Suresh Sharma, Jyotsna Sharma, Y Manasa Shanta, Mala Ramanathan, Udaya Shankar Mishra and B.Subha Sri (2015): “Maternal Mortality in India: A Review of Trends and Patterns,” IEG Working Paper No. 353.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

சமகால மொழி அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் – ச. தமிழ்ச்செல்வன்



வீழ்ந்துவிடா வீரம்! மண்டியிடா மானம்!!” என்பதைத் தன் முழக்கமாகக் கொண்டுள்ள திரு. சீமான் தலைமையிலான ‘நாம் தமிழர் கட்சி’ தன்னைத் தமிழின மீட்புக்கான கட்சி எனப் பிரகடனம் செய்து இயங்கி வருகிறது. அண்மையில் நடை பெற்ற சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி 30,41,974 (6.6%) வாக்குகள் பெற்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில், சீமானின் அறிவியல் பார்வையற்ற அதிரடிப் பேச்சுக்கள் ஒரு பகுதியினரால் கலாய்க்கப்பட்டாலும், மற்றொரு பகுதி இளைஞர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

தமிழ்த்தேசிய அரசியலின் ஒரே முகம் சீமான்தான் என்று சொல்லிவிட முடியாது. அவர் பேசுவதெல்லாமே தமிழ்த்தேசிய அரசியல் என்றும் சொல்ல முடியாது. தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி, தமிழ்த்தேச விடுதலை இயக்கம், தமிழ்ப்புலிகள் இயக்கம், மே-17 இயக்கம் போன்ற, அளவில் சிறிய இயக்கங்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக்கட்சி போன்றவையும் அவ்வப்போது திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழ்த்தேசிய அரசியலை/அதன் பல்வேறு கூறுகளை முன்னெடுத்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். பார்த்தும் வருகிறோம்..

மொழியை அரசியல் அணிதிரட்டலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் இயக்கங்கள் எல்லாமே தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பதாகக் கொள்ளலாம். வர்க்கத்தை அவர்கள் அடிப்படையாக கொள்வதில்லை. மக்கள் கொண்டிருக்கும் பல அடையாளங்களிலும் மொழி அடையாளமே அடிப்படை எனக்கொண்டு அவர்களின் அரசியல் அமைகிறது. வகுப்புவாத இயக்கங்களும் கூட தமிழ்த் தேசியத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்கேற்பவும் சில தமிழ்த் தேசியர்கள் பேசியிருக்கின்றனர்.

1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (தமிழ்நாடு கமிட்டி)யின் 5-ஆவது மாநில மாநாட்டு அறிக்கையில் அன்றைக்கு வளர்ந்து கொண்டிருந்த தி.மு.க பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது:

“இந்தியாவின் இதர சில மாகாணங்களில், காங்கிரஸ் கொள்கையினால் அதிருப்தி அடைந்த மக்களை வகுப்புவாதக் கட்சிகள் ஆகர்ஷிக்க முடிகிற மாதிரி, தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், தவறான கோஷத்தினடிப்படையில் மக்களில் சில பகுதி யினரை தி.மு.க. திரட்ட முடிகிறது. இந்தக் கட்சியின் பால் அனுசரிக்கப்படவேண்டிய கொள்கை, தமிழ் நாட்டில் ஒரு முக்கியமான அரசியல் பிரச்சினையாகும்.

பூர்ஷுவா கட்டுக்கோப்புக்குள்ளேயே, தேர்தல்களை லட்சியமாகக் கொண்டு, பிரச்சாரத்தையே பிரதான வேலையாக வைத்து, ஒரு பூர்ஷ்வா ஸ்தாபன அமைப்பாகத்தான் தி.மு.க. உருப்பெற்று வருகிறது. வர்க்க ஸ்தாபனங்களை வளர்க்க விரும் பாததால், காங்கிரஸ் கட்சியுடன் அடிப்படையான கொள்கைகளில் மோதல் ஏற்பட இடமில்லை .”

அதே அறிக்கை மேலும் குறிப்பிடுவது:

“இவர்களுடைய சமூக அஸ்திவாரத்தைப் பின் வருமாறு நிர்ணயிக்கலாம்: கிராமங்களில் பண வசதியுள்ள விவசாயிகளின் பையன்கள், பள்ளிப்படிப்பு முடிந்து கிராமத்திலிருக்கும் இளைஞர்கள், சில மத்தியதர விவசாயிகள், சிறு தொழில் நடத்துப் வர்கள், மாணவர்கள், ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படாத நகர உழைப்பாளிகளில் ஒரு பகுதி, சர்க்கார் சிப்பந்திகளில் கணிசமான பகுதி, பள்ளி உபாத்தியாயர்களில் ஒரு பகுதி, மேற்கூறிய பகுதிகளிடம் தி.மு.க. மேலும் பரவினால் ஆச்சரியப்படுவதற் கில்லை. இவர்களை அஸ்திவார மாகவும் பிரச்சாரக் கருவிகளாகவும் கொண்டு, இதர தொழிலாளிகள் விவசாயிகளிடம் இவர்கள் செல்வாக்கு நுழைவதும் சாத்தியம். சிற்சில இடங்களில் இது நடைபெற்றும் வருகிறது. –

சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பிரச்னைகளை எடுத்துப் போராட்டங்களை ஒடு முக்கிய அரசியல் வேலையாக திமுக நடத்து தில்லை. பொதுக்கூட்டங்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம்தா ‘அவர்களுடைய பிரதான கட்சி வேலையாயிருக்கிறது.

முதலாளித்துவ வளர்ச்சி ஏற்றத்தாழ்வா இருப்பதும், தமிழ் மக்களை வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, முதலிய பல நெருக்கடிகளுக்கும் ஆளாக்கும் காங்கிரஸ் சர்க்காரின் கொள்கைகளும் நடைமுறையும், திமுக இயக்கம் வளர்வதற்கான சூழ்நிலையை அளிக்கின்றன. தமிழ் மறுமலர்ச்சி, பிரதேச தொழில் வளர்ச்சி, தமிழ் இன எழுச்சி, முதலியவற்றிற்கு தவறான ரூபத்தைக் கொடுத்து இவர்கள் மக்களிடம் ஆதரவு பெற முடிகின்றது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த இந்திய மக்களின் விடுதலை ஆர்வத்திற்கு ஒப்பாக, வடநாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் தமிழனின் விடுதலை இயக்கமாக, தமிழ்நாட்டு நிலைமையை சாமர்த்தியமாகவும், கவர்ச்சிகரமாகவும் திமுக தலைமை வர்ணித்து, மக்களைத் திசை திருப்பி விடுகிறது.”

இந்த வரலாற்று இணைகளைத் தொட்டுக்காட்டுவது அச்சுறுத்த அல்ல. ஆனால் இந்த அறிக்கை ஆய்வு செய்தது போல,. நா.த.க. உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியலை இன்று முன்னெடுக்கும் அமைப்புகளில் இணைந்துள்ள இளைஞர்கள், பொதுமக்களின் வர்க்கப்பின்னணி சமூகப்பின்னணி பற்றியெல்லாம் ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

ஆகவே தமிழ்நாட்டில் பல இயக்கங்களும் தங்கள் வளர்ச்சிக்குத் தேவை என்று கருதும் போதெல்லாம் தமிழ் இன அல்லது தமிழ் இனவாத அரசியல் முழக்கங்களைக் காலம் தோறும் எழுப்பியே வந்திருக் கின்றன. சில சந்தர்ப்பங்களில் சில பிரச்னைகளில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் தமிழ்த்தேசிய வாதிகளின் நிலைபாட்டுக்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுத்ததுண்டு. ஆகவே தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு வரலாறு தமிழ் மண்ணில் இருக்கிறது. ஒரு கட்சி சார்ந்ததாக மட்டும் அது இருக்கவில்லை. பல இயக்கங்களும் கையிலெடுப் பதும் கீழே போடுவதுமான தன்மையுடன் அது இருந் துள்ளது. அந்தந்தக் காலச் சூழலுக்குள் வைத்து அவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மார்க்சும் எங்கெல்சும் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாக்கண்டம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு பிரச்னை தேசிய இனப்பிரச்னை. முதல் உலகப்போரை நோக்கி இட்டுச்சென்ற ‘சந்தைக்கான’ முதலாளித்துவ, பிரபுத்துவப் பங்கீட்டுச் சண்டைக்காலத்தில் ஆக்கிரமிப்பு யுத்தங்களின் மூலம் தேச எல்லைகள் அழிக்கப்படுவதும் மீண்டும் மீண்டும் புதிய தேசங்கள் உருவாக்கப் படுவதும் சிதைக்கப்படுவதுமான நிகழ்வுப்போக்கில். முன்னுக்கு வந்தவை ஆட்சி மொழி, பயிற்றுமொழிப் பிரச்னையும் அதை ஒட்டிய தேசிய இனப் பிரச்னையும்தான். எனவே, தேசிய இனப்பிரச்னை குறித்து ஆழமான கவனத்தை மார்க்சும் ஏங்கெல்சும் செலுத்தினர் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை .

உலகின் முதல் காலனியாக்கப்பட்ட நாடான அயர்லாந்தின் வரலாற்றில் துவங்கி ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வரலாறுகள் எல்லாவற்றையும் ஆழமாக ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதினர். ருஷ்ய தேசிய இனத்தின் ஒடுக்கு முறைக்கு ஆளான பல்வேறு தேசிய இனங்களின் பிரச்னைகள் குறித்து லெனின் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.

மார்க்சியவாதிகளிடத்தும் மார்க்சியவாதிகளாக ஆக விரும்புவோரிடத்தும் தேசிய இனப்பிச்னை குறித்துக் காணப்படும் வேலைத்திட்ட ஊசாலாட்டங் களைப் பரிசீலனை செய்யும் நோக்கத்துடன் தோழர் லெனின் 1913 செப்டம்பர் 5 பிராவ்தா இதழில் எழுதிய “மொழிப்பிரச்னை குறித்து மிதவாதிகளும் ஜனநாயக வாதிகளும்” என்கிற கட்டுரை, மொழி மற்றும் தேசிய இனம் சார்ந்த பிரச்னையை மார்க்சியர் எப்படி அணுகவேண்டும் என்பதற்கான வழிகாட்டும் வாசகங்களைக் கொண்டுள்ளது. அக்கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்: –

“தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையையும் சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராடாத எவரும் மார்க்சியவாதி அல்ல, ஜனநாயகவாதியுங்கூட அல்ல. அது சந்தேகத்துக்கு இடமில்லாதது”

“ பாட்டாளி வர்க்கம் குறித்துப் பேசுகையில் ஒட்டு மொத்தமாய் உக்ரேனியக் கலாசாரத்தை ஒட்டுமொத்தமாய் ருஷ்யக் கலாசாரத்துக்கு எதிராய் வைத்திடுவதானது, முதலாளித்துவ தேசியவாதத்தின் நலனை முன்னிட்டு வெட்கமின்றிப் பாட்டாளி வர்க்க நலன்களுக்குத் துரோகமிழைப்பதே ஆகும்.”

” ஒரு தேசிய இனத்தின் தொழிலாளர்கள் மற்றொன்றின் தொழி லாளர்களிடமிருந்து தனியே பிரிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவதையும், மார்க்சிய ”ஒன்று கலத்தல்” மீதான எல்லாத் தாக்குதல்களையும், பாட்டாளி வர்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒட்டு மொத்தமாய் ஒருதேசியக் கலாசாரத்தை ஒருமித்த தாய் இருப்பதாகப் பாவிக்கப்படும் இன்னொரு தேசிய கலாசாரத்துக்கு எதிராய் வைப்பதற்கான எந்த முயற்சிகளையும், இன்ன பிறவற்றையும் எவ்விதத்திலும் ஆதரித்து நிற்பதானது, முதலாளித்துவ தேசியவாதமே ஆகும். இந்த முதலாளித்துவ தேசியவாதத்தை எதிர்த்து ஈவிரக்க மற்ற போராட்டம் நடத்துவது அத்தியாவசியக் கடமையாகும்.”

இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாக நம்முடைய பார்வை இருக்க வேண்டும். இவற்றில் முதல் பத்தியை மட்டும் எடுத்துக்கொண்டு இனவாத எல்லைக்கும் போகக் கூடாது. எந்தத் தேசிய இனமானாலும் அந்தந்த தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க ‘ஒன்று கலத்தலின்’ மீது நின்றே தேசிய இன விடுதலையைப் பேச வேண்டும் என்கிற வழிகாட்டுதலை லெனின் தருகிறார். இந்தப்பார்வையை உட்கொண்டே நாம் தமிழ்த்தேசியத்தின் வரலாற்றுத் தடங்களைப் பார்க்க வேண்டும்.

தமிழ்த்தேசியத்தின் தடங்கள்:

கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளான எல்லிஸ், பர்னல், ரிச்சர்ட் கிளார்க் போன்றோர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் பின்பற்றும் சட்டங்கள், வழக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பையே ‘திராவிடம்’ என்றனர். ஆனால் அறிஞரும் கிறித்துவ மிசனரியுமான ராபர்ட் கால்டுவெல்தான் முதன் முதலாக ‘திராவிடம் என்பது தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் அடங்கிய மொழிக்குடும்பத்தைக் குறித்தது என்று சொன்னார். (மொழியாகிய தமிழ்-ந.கோவிந்தராஜன் – க்ரியா பதிப்பகம்)

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் எனத்துவங்கி
“கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!” என்கிற பாடலை (இன்று நம் தமிழ்த்தாய் வாழ்த்து) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடுவதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் கால்டுவெல்.

ஆங்கிலேயர்களுக்கு அதுகாறும் எல்லாமே சமஸ்கிருதம் தான். சமஸ்கிருதம் தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்றே ஐரோப்பிய அறிவுலகம் நம்பியது. மாக்ஸ் முல்லர் போன்ற வர்கள் வடமொழி இலக்கியம் – பண்பாடு – கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசி வந்தனர். இதற்குப் பின்னால் ஒரு மொழி அரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழியின் சிறப்புகளையும் அதன் செறிவுமிக்க இலக்கியங்களையும் ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றவர்கள் கிறித்துவப் பாதிரிமார்களே.

1606-ல் இத்தாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ராபர்ட்டி நொபிலி, 1700-ல் இத்தாலியிலிருந்து வந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்ட வீரமாமுனிவர் என்ற கான்ஸ்ட ன்டின் ஜோசப் பெஸ்கி, 1709-ல் ஜெர்மனியிலிருந்து வந்து தமிழ் கற்றுத் தொண்டாற்றிய சீகன் பால்கு, 1796-ல் இங்கிலாந்திலிருந்து வந்திறங்கி திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு ஆங்கி லத்தில் உரை எழுதிய எல்லிஸ் துரை, 1814-ல் ஜெர்மனியிலிருந்து வந்து திரு நெல்வேலியில் ‘சாந்தபுரம் -சந்தோஷபுரம்’ முதலிய பன்னிரண்டு கிராமங்களை உண்டாக்கிய இரேனியுஸ் அடி கள், 1838-ல் இங்கிலாந்திலிருந்து வந்து திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் என்று தமிழுக்குத் தொண்டாற்றித் தமிழ் மக்களை கிறித்துவத்துக்கு ஈர்த்த பாதிரிமார் பலர். –

கிறித்தவ மதமாற்றங்களுக்கு எதிர்வினையாகவும் கிறித்துவமும் தமிழும் என்பதற்கு மாற்றாகவும் சைவமும் தமிழும் என முழங்கித் தமிழ் அரசியலை முன்னெடுத்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர். அவருடைய குரலை தமிழ் நாட்டில் இயங்கிய சைவ மடங்களும் எதிரொலித்துத் தமிழ் அரசியலை (சைவத்தைக் காப்பதற்காக) அதன் ஆரம்ப வடிவில் பரவலாக்கினர். 1848 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியா சாலையை அமைத்தார். சென்னைக்கு வந்து அச்சு இயந்திரம் வாங்கிச்சென்று சைவ நூல்களைப் பதிப்பித்தார்.

சைவ மத அரசியலோடு பிணைந்ததாக இருந்த இப்போக்கைத் தமிழ் மொழிசார்ந்த இயக்கமாக மாற்றித் துணை புரிந்தவை இரண்டு அம்சங்கள். ஒன்று கால்டுவெல் துவக்கிவைத்த ஆரிய – திராவிட எதிர்நிலை மற்றொன்று 19 ஆம் நூற்றாண்டில் துவங்கியிருந்த அச்சுப்பதிப்பு இயக்கம். 1894 ஆம் ஆண்டு எட்டுத்தொகையினுள் ஒன்றான புறநானூறு மூலமும் உரையும் தமிழ்த்தாத்தா எனப் பின்னர் அடையாளப்பட்ட உ.வே.சாமிநாதையர் அவர்களால் பதிப்பிக்கபட்டது. 1000, 2000 எனப் பிரதிகள் அச்சிடப்பட்டு மக்களிடம் பரவியது. தமிழின் தொன்மையும் செறிவும் குறித்த பெருமித உணர்வு பரவிட இது ஒரு ஊக்கமாக அமைந்தது.

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயிற் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே” என்று மகாகவி பாரதி உ.வே. சா.வைப் போற்றியதும் இக்காலத்தில்தான்.

பாண்டித்துரைத்தேவர் 1905 ஆம் ஆண்டு நான்காம் தமிழ்ச்சங்கம் என்கிற அமைப்பை உருவாக்கினார். தமிழ் மொழி சார்ந்த விவாதங்களை அது முன்னெடுத்தது.

தனித்தமிழ் இயக்கம்

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

அப்போது எழுதப்பட்டு வந்த தமிழ் உரைநடை மணி பிரவாளமாக இருந்தது. மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்று வட சொல் ஒன்றென அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவது மணிப்பவளம் என்னும் கலப்படத்தமிழ் நடையாகும்.

இத்தகைய நடையால் தமிழுக்குக் கேடுவிளையும் எனக்கண்ட தமிழறிஞர் மறைமலை அடிகள் 1916 இல் துவக்கிய இயக்கமே ‘தனித்தமிழ் இயக்கம்’.

வேதாச்சல சுவாமிகள் என்கிற தன்னுடைய பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றினார். தன் குடும்பத்தின் அத்தனை பேருடைய பெயர்களையும் திருஞான சம்பந்தன் – அறிவுத் தொடர்பன், மாணிக்கவாசகம் – மணிமொழி, சுந்தரமூர்த்தி – அழகுரு என்று மாற்றப்பட்டன. அவருடைய தங்கை பெயர் திரிபுர சுந்தரி – முந்நகரழகி என்று மாற்றப்பட்டது. மருமகன் பெயர் குஞ்சிதபாதம் – அது தூக்கிய திருவடியாயிற்று.

வெறும் பெயர் மாற்றத்தோடு நில்லாமல், ஆரி யத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் இவ்வியக்கத்தால் முன்வைக்கப்பட்டன. தமிழ்முறைத்திருமணம் என்கிற வழக்கம் இன்றளவும் தொடர்வதைப் பார்க்கிறோம்.

மறைமலை அடிகள், பாரதிதாசன், கா.சுப்பிர மணியபிள்ளை, வ.சுப்பையாபிள்ளை, தேவநேயப் பாவாணர், கா.அப்பாதுரையார், சி.இலக்குவனார், இளவழகனார்,வ.சுப.மாணிக்கனார், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற அறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களாக இருந்தனர். பல்வேறு சிந்தனைப்போக்கு உள்ளவர்களான இவர்கள் தனித்தமிழ் என்கிற ஒரு நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டி ருந்தனர். பல இதழ்களும் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுக்கத் துணை புரிந்தன. மறைமலை அடிகளாரின் “அறிவுக்கடல்” திருவி.க. நடத்திய நவசக்தி,பாவாணர் நடத்திய ‘தென் மொழி’ பாவேந்தர் நடத்திய ‘குயில்’ கி.ஆ.பெ. விசுவநாதத்தின் ‘தமிழர் நாடு’ போன்றவை அவ்விதழ்கள். தனித்தமிழ் இயக்கம் போலவே அதே காலத்தில் பாவாணர் ‘உலகத் தமிழ் இயக்கம்’ என்கிற அமைப்பையும் வ.சுப.மாணிக்கனார் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்கிற இயக்கத்தையும் நடத்தினர்.

‘தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி’ என்கிற சிறு நூலில் இவ்வியக்கம் பற்றிய தன் பார்வைகளை பேராசிரியர் கா.சிவத்தம்பி முன் வைத்துள்ளார். “பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்களை மீட்டெடுத்தல், பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த சாதி மறுப்பு, பெண் விடுதலை, பார்ப்பனியத்துக்கு எதிராகக் கிளர்ந்த ‘தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்’ எனப்பல்வேறு அசைவியக்கங்கள் ஊடாடிய தமிழ்ச்சூழலில் தமிழ், சைவம் என்னும் பின்னணியில் வரும் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார்.” என்பது அவர் கருத்து.

நீண்ட காலமாகத் தமிழ் நிலப்பரப்பில் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த பின்னணியில் ஆட்சி மொழியாகத் தெலுங்கு, மராட்டியம், உருது, பாரசீகம் பின்னர் ஆங்கிலம் முதலியன கோலோச்சியுள்ளன. மக்கள் மொழியாகத் தமிழே இருந்தாலும் அது எப்போதும் ஆட்சிமொழி ஆனதில்லை. இந்த நெடிய மொழித்திணிப்பு வரலாற்றுக்கான எதிர்வினையாகவும் ஏக்கத்தின் வெளிப்பாடாகவும் தனித்தமிழ் இயக்கத்தைக்காண வேண்டும். இதில் ஒரு நியாயப்பாடு இருப்பதை நாம் புறக்கணிக்க முடியாது.

தோழர் ப. ஜீவானந்தம் அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது:

“தனித்தமிழ்ப்போக்கால் லாபம் உண்டா? உண்டு என்பது என் கருத்து. இதனால் தமிழ்மொழி வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கிறது. ஆனால் இதை அளவுக்கு மீறி மொழி வெறியை எட்டுமளவுக்குக் கொண்டுபோகக்கூடாது.கூடுமான வரைக்கும் எல்லாவற்றையும் தமிழிலே, அழகான, எளிய தமிழிலே, எளிதாகப் புரியக்கூடிய தமிழிலே சொல்ல வேண்டும். வேண்டாத இடத்தில் வலிந்து கொண்டு வருவது கூடாது என்ற முறையில் தனித்தமிழ்ப்போக்கு சரியே” என்றார் ஜீவா.

இந்தித்திணிப்பு எதிர்ப்பு இயக்கங்கள்

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

தமிழ்த்தேசிய அரசியல் அலை ஓய்ந்துவிடாமல் காத்த இயக்கங்களில் முக்கியமானவை இந்தி எதிர்ப்பு இயக்கங்கள் எனலாம். 1937-38 காலகட்டத்தில் ராஜாஜி தலைமையிலான அரசு 125 பள்ளி களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியபோது இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது.

சுதந்திர இந்தியாவில் 1950இல் உருவான இந்திய அரசியலமைப்புச்சட்டம் 15 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் இருக்கும் என்றும் 15 ஆண்டுகளுக்குப் பின் ”அல்லது ஆங்கில” என்கிற வாசகம் நீக்கப்படும் என்றும் கூறியது. இது நேருவின் வாக்குறுதி: மீண்டும் 1965 இல் இந்திப் பிரச்னை எழுந்தது. போராட்டமும் வீறு கொண்டு எழுந்தது. கல்லூரி மாணவர்கள் களத்தில் குதித்தனர். பக்தவச்சலம் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். ராஜாஜி உள்ளிட்ட பல கட்சித்தலைவர்கள் போராட்டத்தை ஆதரித்தனர். இரு மாதங்கள் வரை நீடித்த இப்போராட்டத்தில் 70 க்கு மேற்பட்டவர்கள் இறந்தனர், கொல்லப்பட்டனர். அதிகாரபூர்வமாக 70 பேர் என்றாலும் 500 பேர்வரை இறந்திருக்கலாம் என்ற கருத்து வலுவாக உள்ளது.

இதன் தாக்கம் 1967 தேர்தலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தது.ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் திருத்தம் இந்திராகாந்தி பொறுப்புக்கு வந்தபின் கொண்டுவரப்பட்டது.

மொழியுணர்வும் மொழிசார்ந்த அரசியலும் இப்போராட்டங்களால் சூடு தணியாமல் தொடர்ந்தது. உதவியது ஒன்றிய அரசின் பிடிவாதமான மொழிக்கொள்கை எனலாம்.

மொழிவாரி மாநிலங்களுக்கான போராட்டம்

இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்திருந்தாலும், விடுதலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி அக்கருத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் இந்தியாவின் பல்வேறு வட்டா ரங்களில் வாழ்ந்த மக்களின் வேட்கையாகவும் கனவாகவும் அது இருந்தது. விடுதலைப்போராட்டத்தில் எல்லாப்பகுதி மக்களையும் இணைக்க வேண்டிய தேவை இருந்ததால் எல்லா மொழிகளுக்குமான சமத்துவம் பேணப்படும் என்று சொல்லி வந்தது. 1928இல் அனைத்துக்கட்சிகள் மாநாட்டில் அமைக்கப்பட்ட நேரு கமிட்டி முன் வைத்த அறிக்கை மொழி சார்ந்து உண்மையிலேயே ஜனநாயகப் பூர்வமாகப் பேசியது:

“ஒரு பிராந்தியம் தன்னைத் தானே பயிற்று வித்துக் கொள்வதற்கும், தனது சொந்த மொழியின் மூலமாக தனது அன்றாட வேலைகளைச் செய்து கொள்வதற்கும், ஒரு மொழிவாரி மாநிலம் அவசிய மாக இருக்க வேண்டும். அது பல மொழிகளைக் கொண்ட பகுதிகளாக இருக்குமானால், தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுவதோடு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிற்று மொழி மற்றும் பணி மொழிகளும் இருக்கும். எனவே, மொழிவாரி அடிப்படையில் பிராந்தியங்களைப் பிரித்து அமைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். கலாச்சாரத்தின் பல்வேறு விசேஷத் தன்மைகளுடனும் இலக்கிய அம்சங்களுடனும் இணைத்து செல்வது மொழியாகும். மொழிவாரி மாநிலங்களில், இந்த அனைத்து அம்சங்களும் அந்த பிராந்தி யத்தின் பொதுவான வளர்ச்சியில் உதவிகரமாக இருக்கும்” (எஸ்.ஆர்.சி. அறிக்கை , பக். 13). –

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

இந்த அறிக்கையின் ஒரு வார்த்தைக்குக்கூட காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உண்மையாக இருக்கவில்லை. உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்தது. தேச ஒற்றுமை, தேசப்பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, ஐந்தாண்டுத்திட்டம் இதெல்லாம்தான் முக்கியம் என்று சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தது. இதற்கிடையே மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆந்திர இயக்கம் பொட்டி ஸ்ரீராமுலுவின் 58 நாட்கள் உண்ணா விரதத்துக்குப் பிறகான மரணத்தை ஒட்டித் தீவிரமா னது. நாடெங்கும் மொழிவாரி மாநிலங்களுக்கான வெகுஜன எழுச்சியில் கம்யூனிஸ்ட்டுகள் முன்னிலை பாத்திரம் வகித்தனர். வன்முறையால் ஒடுக்க முயன்று தோற்ற நேரு அரசாங்கம் கடைசியில் 1953இல் மாநிலங்கள் சீரமைப்புக் கமிஷனை அமைத்து 01-11-1956 அன்று மொழிவாரி மாநிலங்களை அமைத்தது. 

“தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை” என்கிற நூலில் தோழர் லெனின் எழுதியுள்ள இப்பகுதி இவ்விடத்தில் பொருத்தி வாசிக்கத் தோதாக உள்ளது:

“ருஷ்யாவில் தேசிய இயக்கங்கள் தோன்றி யிருப்பது இதுதான் முதல் தடவையல்ல; அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல. உலகம் முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப் பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. விற்பனைப் பண்ட உற்பத்தியின் – முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்ஷ்வாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப்பட நிலப்பரப்புகள்’ அதற்கு வேண்டும்; அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக்கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.

இங்கேதான் தேசீய இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது. மனித உறவு களுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணி கத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், பெரிய உடைமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்கும் மிகமிக முக்கிய மாகத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும் தான்.

ஆகவே ஒவ்வொரு தேசீய இயக்கத்தின் போக்கும் நவீன முதலாளித்துவத்தின் தேவைகள் மிக நன்றாகப் பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ள தேசீய அரசுகள் அமைப்பதற்கான வழியிலானது. மிகமிகத் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் – இந்த இலக்கை நோக்கி இட்டுச் செல்லுகின்றன.”

இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை வெற்றி கொள்ளாமல் அதனுடன் சமரசம் செய்து கொண்டு தன் கூட்டாளியாகக் கொண்ட இந்தியப் பெரு முதலாளி வர்க்க அரசு பல்தேசிய மொழிகளின் 1. வளர்ச்சிக்குப் பாடுபட மறுத்து ஒற்றை இந்தி மொழியைத் திணித்துத் தன் ஒரே மார்க்கெட்டைப் பிடிக்க முயன்றது எனலாம்.

அடையாள அரசியலின் முக்கியமான ஒரு தேவை – அல்லது கூறு என்னவெனில் நாமல்லாத மற்றமை ஒன்றை எதிர் நிலையில் நிறுத்தி நாம் தமிழரல்லவோ என்கிற அணிதிரட்டலைச் செய்வது. காவிரி நதிநீர்ப் பங்கீடு ஒரு தீராப்பிரச்னையாக கர்நாடகத்துக்கு எதிராக தமிழ் உணர்வைத் தூண்டுகிறது. முல்லைப்பெரியார் அணைப் பிரச்னையில் கேரளம் எதிர்நிலையாக நாம் என்ற உணர்வூட்ட உதவுகிறது.

கச்சத்தீவு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு எனத் தமிழ் மக்கள் பாஜக அரசினால் வஞ்சிக்கப்படுவதான உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சோப லட்சம் இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாகத் திரண்டதில் மற்ற அம்சங்களோடு தமிழ்த்தேசிய அரசியல் கூறும் அதில் உண்டு . இவற்றில் பல மாநில எல்லைசார் பிரச்னைகள், சில அறிவியல் சார்ந்த பிரச்னைகள், சில ஒன்றிய அரசின் கார்ப்பொ ரேட் அடிவருடிக் குணத்தால் வரும் பிரச்னைகள். எல்லாவற்றையும் தமிழ்த்தேசிய அரசியல் தனதாக்கிப் பேசும் வல்லமை கொண்டுள்ளதுஎந்தப்பக்கமிருந்து பந்து வந்தாலும் ஓடி ஓடி அடித்துவிடுகிற மட்டைப்பந்து வீரனைப்போல.

சில அறிவியல் உண்மைகள்:

தமிழ்த்தேசிய அரசியலை எதிர்கொள்ளல் பற்றிய இறுதிப்பகுதிக்கு முன்னால் சில அறிவியல் உண்மைகளைக் குறித்துக்கொள்வது நல்லது. தமிழ்த் தேசியர் காலம் காலமாக முழக்கமாகவே எழுப்பிவரும் சில உணர்ச்சிகரமான வாதங்களை அறிவியலால் எதிர்கொள்ளலாம்.

“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” நம் தமிழ்க்குடி என்பது ஒன்று. சேரன் செங்குட்டுவன் இமயம் வென்றான் இமயத்தில் கல்லெடுத்து கனகவிசயர் தலையில் ஏற்றித் தெற்கே கொண்டு வந்து கண்ண கிக்குச் சிலை வடித்தான்” என்பது இன்னொன்று. இந்த வசனங்களை எள்ளி நகையாடுவதால் எந்தப் பயனும் இல்லை . இதை நம்பும் ஒரு பகுதி மக்களுக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் சொல்லி வென் றெடுப்பதே நம் கடமை. ஆப்பிரிக்காக் கண்டத்துடன் ஒட்டியிருந்த இந்தியத்தட்டு அங்கிருந்து பிரிந்து நகர்ந்து வந்து ஆசியத் தட்டுடன் மோதியபோது உருவான மண் மேடுதான் இமயமலை. அங்கே உள்ள கல்லால் எதையும் செய்ய முடியாது. மண் கட்டிபோல உடைந்து நொறுங்கும் தன்மைதான் இமயமலைக் கல்லுக்கு உள்ளது.ஆகவே சேரன் செங்குட்டுவன் விந்திய சாத்பூரா. மலைகளிலிருந்து கல் கொண்டு வந்தான் என்று சொன்னாலாவது நம்பலாம்.

இன்னொரு நம்பிக்கை – இது இன்றுவரை ஆழமாக தமிழ்ச்சமூக உளவியலில் ஊடுருவி யுள்ளது இலங்கைக்குத் தெற்கே அண்டார்டிகா வரை விரிந்திருந்த குமரிக்கண்டம் அல்லது லெமூரி யாக்கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றினான். அவன் தமிழன். இக்கருத்து 1930-4 களில் துவங்கிய தமிழியக்க அறிஞர்களான மொழிஞாயிறு தேவ நேயப்பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் துவங்கி இன்று யூ ட்யூப்பில் “ஆதி மொழி தமிழ். ஆதி மனிதன் தமிழன்” என முழங்கும் சீமான் வரை உயிர்த்திருக்கிறது.

புவியியல் அறிஞர் சு.கி.ஜெயகரன் அவர்களின் ‘மணல் மேல் கட்டிய பாலம்’ நூலில் உள்ள “குமரிக்கண்டம்-லெமூரியாக்குழப்பம்” என்கிற கட்டுரையின் இப்பகுதி இம்முழக்கங்கள் வெறும் கற்பிதங்கள் எனக் காட்டுகின்றன.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

“பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தான் எழுதிய குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (1941) நூலில் லெமூரியாக் கண்டம் பற்றியும் அதன் நில அமைப்பு, அதில் வாழ்ந்த உயிரினம், மக்கள் பற்றியும் விவரங்களைத் தருகிறார். “இலெமூரியாக் கண்டத்தில் கிழக்குப் பகுதியின் மேல்பகுதியில் சில உயர்ந்த மலைகளே இன்று பஸிபிக் கடலின் தீவுகளாகியிருக்கின்றன. எரிமலைகளும், நில அதிர்ச்சியும் அக்கண்ட முழுமையும் என்றும் குலுக்கிக் கொண்டே இருந்தன. இலெமூரிய வாழ்க்கைக்காலம் நடுக்கற்காலமாகும். உள்நாட்டுச் சதுப்பு நிலங்களிலும், கடற்கரையோரங்களிலும், டினோஸர்கள் வாழ்ந்தன. ஊன்வெறியால் அவை உறுமும் பொழுதும், மரஞ்செடி கொடிகளை நெரித்து அவை நடக்கும் அரவம் கேட்கும் போதும் இலெமூரிய மக்கள் கவலையும், முன்னெச்சரிக்கை யும் கொள்வர்; இலெமூரிய மக்கள் தற்கால மக்களை – விட நெட்டையானவர்; ஆறடிக்கு மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர்; உடலின் எடை 160 – 200 கல் என்று கூறப்படுகிறது.” மேற்கூறிய தகவல்கள் அறிவியல் ஆதாரமற்றவை என்பது தெளிவு. இதில் முக்கியமான குழப்பம் டைனோஸர்களையும் ஆதி மனிதயினத்தையும் சமகாலத்தவராக்கியது. டைனோஸர்கள் அழிந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது என்பது நாமறிந்த அறிவியல் தகவல்.”

குமரிக்கண்டத்தின் வரைபடத்தைக்கூட கற்பனையாக வரைந்துள்ள நம் முன்னோர்கள், அப்படத்தில் குறிக்கப்படும் 700 காத தூரம் என்பது அண்டார்டிகாவையும் தாண்டி பூமிக்கு வெளியே வரை நீள்வதைக் கணக்கிடவில்லை. பய வர்க்கப்போரை நடத்தும் பாதையில் செல்லாத இயக்கங்களுக்கு, இத்தகைய கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. சமூகமும் இவற்றில் ஆவேசம் கொண்டு ஆசுவாசம் அடைகிறது போலும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்றைக்கு மனித குலத்தின் தோற்றமும் பரவலும் பற்றிப் புகைமூட்டமாயிருந்த சித்திரத்தை மேலும் மேலும் தெளிவாக்கி வருகின்றன. மரபணு ஆராய்ச்சியின் மூலம் ஆதிமனிதர்களான ஹோமோ சேப்பியன்கள் உருவான இடம் ஆப்பிரிக்கா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அறிவியலாளர் சு.கி.ஜெயகரன் எழுதிய “மூதாதையரைத் தேடி..” (காலச்சுவடு பதிப்பகம் முதற் பதிப்பு – 1991) என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட இப்பகுதி மேற்படிக் கற்பிதமாக கருதுகோள்களை உடைக்கிறது: 

“மரபியல் ஆய்வுகளும், தொல்லியலாய்வு களும் ஆதிமனித இனம் தோன்றியது ஆப்பிரிக்கா என்பதை உறுதி செய்வதால் அக்கண்டமே மானுடத்தின் தொட்டிலாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 100,000 ஆண்டுகட்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ செபியன் இனக்கூட்டத்திலிருந்து தற்கால மனிதர் தோன்றினர் என்பது ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. இதுவரை தெற்காப்பிரிக்காவில் நடத்தப்பட்ட அகழாய்வு களால் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிரெச்சங்கள், எவ்வாறு ஹோமோ எரக்டஸிலிருந்து பழம் CourCuir Coulu (Archaic Homo Sapian) பரிணமித்து, அதன் வழித் தோன்றலான ஹோமோ செபியன் (தற்கால மனிதன்) உருவானான் என் பதைக் காட்டுகின்றன. இப்பரிணாம வளர்வின் பல்வேறு கட்டங்களைக் காட்டும் தடயங்கள் பல கிடைத்துள்ளன.

மேலும், பழம் ஹோமோ செபியன்கள் அப்போது உருவாகிக் கொண்டிருந்த சஹாரா, கலஹாரி பாலைவனங்களைத் தவிர்த்து அவற்றின் ஓரங்களிலிருந்த மலை, வனப்பகுதிகளிலும், அட்லாண்டிக் கடற்கரையையொட்டி கானகங்கள் இருந்த பகுதிகளிலும் ஏறத்தாழ 200,000 ஆண்டு களுக்கு முன் வாழ ஆரம்பித்தனர். கடற்கரை யோரம் வாழ்ந்த ஆதியினம் ஆழமற்ற கடற்பகுதி களில் கிடைத்த நத்தைகள், மீன்கள் போன்ற புரதச்சத்து அதிகம் கொண்ட உணவை உண்ண ஆரம்பித்தனர். இதனால் இவர்களது மூளையளவு பெருத்தது என அறியப்படுகிறது. இந்த இனத்தின் வழித்தோன்றல்களே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய ஹோமோ செபியன்கள்.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam
Image Courtesy: MtDNA | genetics | Britannica

தாய்வழி வரும் மிட்டோகோண்டிரியல் டி.என்.ஏக்களின் (Mt DNA) ஆய்வுகளும் தந்தை வழிவரும் Y குரோமோசோம் டி.என்.ஏக்களின் ஆய்வுகளும் தற்கால மனிதர் 100,000 மற்றும் 20,00,00 ஆண்டுகட்கு முன் ஆப்பிரிக்காவில் உருவானதை உறுதிப்படுத் துகின்றன. அவர்களின் வழித்தோன்றல்களான தற்கால மனிதர் தலைநிலம் வழியாக ஐரோப்பாவிற்கும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளின் வழியாக இந்தியா, இந்தோ னேஷியா மற்றும் ஆஸ்திரேலியா வரையும் 50,000 – 60,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறினர். அக்கால கட்டத்தில் கடல் மட்டம் 100மீ.க்கும் அதிகமாக தாழ்ந்திருந்ததால், கண்டச் சரிவுகளின் (Contimental Shelf) பெரும்பகுதி நிலமாயிருந்தது. கடற்கரைகள் இன்றிருப்பதைவிட வெகுவாக அகன்றிருந்தன அப்பகுதிகளின் வழியாகவும் ஆதிமனிதக் குடியேற்றங்கள் ஏற்பட்டன.”

இது தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் தொகுத்து எளிய மொழியில் டோனி ஜோசப் என்கிற எழுத்தாளர் “ஆதி இந்தியர்கள்” என்கிற நூலில் அளித்துள்ளார். “கடந்த சில ஆண்டுகளில், உலகம் முழுக்க ஆயிரக் கணக்கான பண்டைய டி.என்.ஏ. மாதிரிகள் படியெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக் கின்றன. இவற்றின் முடிவுகளை வைத்து யார், எங்கு, எப்போது இடம்பெயர்ந்தார்கள், அவற்றின் மூலம் உலகின் பெரிய மக்கள் தொகைக் குழுக்கள் எப்படித் தோன்றின என்பன குறித்த துல்லியமான வரைபடத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.” என்று சொல்லும் டோனி ஜோசப் ஆப்பிரிக்காவிலிருந்து இந்திய நிலப்பரப்புக்குள் சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களே முதல் இந்தியர்கள் என்கிறார். 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஈரானின் ஸாக்ரோஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த உழவர் குழுவை இரண்டாவது இந்தியர்கள் என்கிறார்.

இந்த முதல் இரண்டு குழுக்களும் கலந்து உருவாக்கிய விவசாயப்புரட்சியே ஹரப்பா நாகரிகத்தை நோக்கி இட்டுச்சென்றது. கிழக்கு ஆசியாவிலிருந்து காசி,முண்டாரி போன்ற ஆஸ்த்ரோ -ஆசிய மொழிகளைக் கொண்டு வந்த குழு மூன்றாவது இந்தியர்கள். மத்திய ஆசியாவிலிருந்து நான்காவதாக வந்து சேர்ந்த, ஆரியர் என்று தம்மைக்கூறிக்கொண்ட குழுவை நான்காவது இந்தியர் என்கிறார். இன்று இந்தியாவில் வாழும் நாமெல்லோருமே இந்த நான்கு இந்தியர்களின் கலப்பில் உருவாகி வழிவழியாக வந்தவர்களே. 

இந்த நூல் சங் பரிவாரங்களால் கடுமையாகத் தூற்றப்பட்டு வருவதே இதன் உண்மைத்தன்மைக்கு ஆதாரம் எனலாம். ஆரிய இனம் இந்தியாவின் பூர்வ குடி என்கிற சங் பரிவாரத்தின் கப்ஸாக்களையும் இந்நூல் அடித்து நொறுக்குவதால் சங்கிகள் மூலத்தில் மிளகாய் அரைத்துப் பூசியதுபோல இந்நூலுக்கு எதிராகக் கூக்குரலிட்டு வருகிறார்கள். இத்துடன் சு.கி.ஜெயகரன் எழுதிய “குமரி நில நீட்சி” என்கிற புத்தகம் குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பதற்கான அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களைத் தந்துள்ளது. இந்த இரு நூல்களையும் சேர்த்து வாசிக்க வேண்டும். இவ்விரு புத்தகங்கள் சில முக்கியமான முடிவுகளுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன.

தமிழ் இனத்தின் வரலாறு தெற்கேயிருந்து அல்ல. ஆதி மனிதன் தமிழன் அல்லன். உலகின் எல்லா மனிதர்களும் ஆப்பிரிக்காவிலிருந்து நடந்து நடந்து பரவியவர்களே.

அப்படியானால் நாம் யார்? தமிழர்களாகிய நாம் எங்கிருந்து வந்தோம்? –

“Journey of a Civilization Indus to Vaigai’ (ஒரு நாகரிகத்தின் பயணம்- சிந்து வெளியிலிருந்து வைகை வரை) என்கிற தன் ஆய்வு நூலில் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்குறிப்பிட்ட நூல்களின் தொடர்ச்சியாக புதிய கருதுகோள் ஒன்றை முன் வைக்கிறார். ஹரப்பா நாகரிகம் சிதைந்த பிறகு அங்கிருந்த மக்கள் எங்கே சென்றார்கள்? வடக்கிலிருந்து நகர்ந்து நகர்ந்து அவர்கள் தெற்கே வந்தார்கள். ஊர்ப்பெயர் ஆய்வுகள் மற்றும் சங்க இலக்கியத்திலுள்ள அகச்சான்றுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு இதை அவர் நிறுவுகிறார். ஹரப்பா விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்று என்கிறார். தமிழி, கொற்கை, வஞ்சி போன்ற ஊர்ப்பெயர்கள் ஆப்கானிஸ்தான் தொடங்கி தமிழகம் வரையிலும் நெடுகிலும் இருக்கின்றன.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

பிடிமண் எடுத்துவருவதுபோல மக்கள் இடம் பெயரும்போது புதிய குடியேற்றங்களுக்கு தம் ஊர்ப்பெயரையே வைப்பது மரபு. அதன் வழித் தம் ஊர் நினைவுகளையும் அந்த வாழ்வையும் மீட்டெடுத்துக்கொள்கிறார்கள். சங்க இலக்கியம் அது எழுதப்பட்ட சமகாலத்தைப் பற்றிய இலக்கியமாக மட்டும் இல்லாமல் மீள் நினைவுகளையும் பேசுகிறது. இமயமலையில் உள்ள எருதுகளைப்பற்றியும் தார்ப்பாலைவனத்து ஒட்டகங்கள் பற்றியும் மேற்கிலிருந்து வீசும் வெப்பக்காற்று பற்றியும் அது பேசுவதெல்லாம் இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்குமான இலக்கியமாக அது இருப்பதை நிறுவுகிறது என்கிறார். வைகைக் கரையின் கீழடி வரையிலான தொல்லியல் ஆய்வுகளையும் வரலாற்றுத் தரவுகளையும் கொண்ட மிக முக்கியமான ஆய்வாக இந்நூல் விளங்குகிறது.

ஆக, கதை இப்போது தமிழ்த்தேசியர்களின் கற்பிதங்களையும் காலி செய்து விட்டது. நம்முடைய மூதாதையரும் ஆப்பிரிக்க மண்ணில் தோன்றியவரே. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தேயெல்லாம் மனிதர்களே தோன்றியிருக்கவில்லை. டினோசர்கள் தோன்றி அழிந்த பிறகுதான் இந்தியத்தட்டு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்து நகரத்துவங்கியது. அப்போது மனித இனமே தோன்றியிருக்கவில்லை.

இன்றைக்கும் தமிழ்நாட்டின் குமரிப்பகுதியில் மலையாளம், தமிழ் என இருமொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் கன்னடமும் தமிழும் பேசும் மக்கள் இருக்கின்றனர். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தெலுங்கும் தமிழும் புழங்குகின்றன. மதுரையில் சௌராஷ்ட்ரா, தமிழ் என இருமொழியாளர்கள். ஆந்திராவிலிருந்து நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்ட காலத்தில் புலம் பெயர்ந்து வந்து தமிழ்நாட்டின் கரிசல் வட்டாரத்திலும் கோவைப்பகுதியிலும் குடியேறிய மக்கள் இன்றளவும் தெலுங்கும் தமிழும் பேசுகிறார்கள், உருதும் தமிழும் என இருமொழி பேசும் இஸ்லாமியத் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தமிழர்கள் என்பதை மறுக்கும் தமிழ்த் தீவிர தேசியவாதிகளும் இருக்கிறார்கள். எளிய அருந்ததியர் மக்களைக்கூடத் தெலுங்கர்கள் எனச்சொல்லி வெளியேறச்சொல்லும் குரல்களை நாம் கேட்டிருக்கிறோம். மொழித்தூய்மை வாதம் இனத்தூய்மை வாதம் பாசிசத்தை நோக்கித்தான் இட்டுச்செல்லும்.

அடையாள அரசியலை எதிர்கொள்ள

தமிழ் மொழிக்கென்று சில தனித்தன்மைகளும் செறிவான எழுத்துப்பாரம்பரியமும் உலகில் எம் மொழியிலும் காணக்கிடைக்காத திணைக்கோட்பாடும் பெருமளவுக்கு மதச்சார்பற்ற சங்க இலக்கியமும் போன்ற சிறப்புகள் உள்ளன. அவற்றுக்காக நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். அவற்றைப் பேசவும் வேண்டும். ஒடுக்கும் தேசிய இனம் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற உரையாடல் மார்க்சியத்தில் உண்டு. பொருளாதாரச் சுரண்டல் அல்லாத பிறவகைச் சுரண்டல்களும் மார்க்சிய உரையாடலில் உண்டு. அவற்றை அறிவியல்பூர்வமாக முன்னெடுப்பது அவசியம். 

எப்போதும் அடையாள அரசியல் எழுப்புகின்ற முழக்கங்கள் கோரிக்கைகளில் அடையாள அரசியல் அல்லாத சில நியாயமான பிரச்னைகளும் இருக்கும். ஆவேசமான உணர்ச்சிகளுக்கு அப்பால் துலக்கமாகும் அத்தகைய கோரிக்கைகள் மீது அக்கறை காட்ட வேண்டும்.

தமிழ்த்தேசிய இயக்கத்திற்கு நீண்ட கால வரலாறு இருக்கிறது. அது ஒருபடித்தானதாகவோ, இடையறாத் தொடர்ச்சி உடையதாகவோ இல்லை என்றபோதும். எப்போது என்ன பெயரில் தமிழ்த் தேசிய அரசியல் எழுந்தாலும் இந்த வரலாற்றி லிருந்து நெருப்பெடுத்துத் தங்கள் பந்தங்களை அவர்கள் பற்ற வைப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களைப் பின் தொடரும் எளிய மக்களுடன் அவர்களைப் பொருட்படுத்தி உரையாடலைத் தொடர வேண்டும்.

நன்றி: மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் (ஜூலை)

Indiavil Nigarnokku Nadavadikkaigal (Affirmative Action in India) Book Review by Dravidar Kazhagam General Secretary Veeramani in Tamil

சமூகநீதிக்கு – இதோ ஓர் அறிவாயுதம்! | கி. வீரமணி

இந்தியாவில் நிகர்நோக்கு நடவடிக்கைகள் (Affirmative Action in India) அஸ்வினி தேஷ்பாண்டே  தமிழில்: மருத்துவர். இரா.செந்தில் பாரதி புத்தகாலயம்  விலை: ₹175.00 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com கரோனா காலத்து இடர்ப்பாடுகளிலும், இன்னல் சூழ்நிலைகளிலும், கொள்கை உறவுகளும், கொண்ட நட்புறவுகளும் பலர் நம்மிடமிருந்து பறிக்கப்படும்…