இசை வாழ்க்கை 81: யார் சொல்லித் தந்தார் இசைக் காலம் என்று! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 81: யார் சொல்லித் தந்தார் இசைக் காலம் என்று! – எஸ் வி வேணுகோபாலன்




குவிகம் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர்கள் கிருபானந்தன், சுந்தரராஜன் இருவரும் அருமையான மனிதர்கள். அன்பு கொண்டாடிகள். கொரோனா ஊரடங்கு காலத்தில் உணர்வுகள் முடங்கிவிடாதிருக்க வாரம் தவறாமல் இணைய வழியில் சிறப்பான நிகழ்ச்சிகள் தொடங்கியது இப்போதும் தொடர்கிறது. டிசம்பர் 18 ஞாயிறு மாலை நிகழ்ச்சியில், திரைப்படப் பாடல்களை முன் வைத்து உரை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்றுக் கொண்டேன்.

அதற்குப் பிறகு அந்த நாளில் திருச்சியில் இருக்க வேண்டிய அலுவல் அமைந்துவிட்டது. அதனால் திருச்சியில் எந்த இடத்தில் அமர்ந்து சிக்கல் இராது இசைப்பாடல்கள் பற்றிப் பேசுவது என்று யோசிக்கவே தேவையின்றி பளிச்சென்று நினைவுக்கு வந்தார் நியூரோ மருத்துவர் – தமிழ் ஆர்வலர் – திருக்குறள் கொண்டாடி மருத்துவர் சுப திருப்பதி! மதுரை பல்கலை மேனாள் துணை வேந்தர் வ சுப மாணிக்கனார் அவர்களுடைய சகோதரர் பேரன் இவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தினமணிக் கதிரில் வந்த இவரது மனசாடுதல் என்ற சிறுகதை வாசித்துப் பாராட்டிப் பலரோடு பகிர்ந்தபோது, மருத்துவர் சுப்பிரமணியன் மூலம் இவரது அறிமுகம் வாய்த்தது. விஷயத்தைச் சொன்னதும், காத்திருப்பேன், அவசியம் எங்கள் இல்லத்திற்கு வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

கடந்த ஞாயிறு அவரது இல்லத்தில் நுழையும்போதே, அவருடைய தந்தையர் வெளியே வந்து, நீங்கள் இன்னார் தானே, அனுமானத்தில் கேட்டேன் என்று வரவேற்று அமர வைத்தார். ‘இரண்டு ஆண்டுகளுக்குமுன் மருதகாசி நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை தமிழ் இந்து நாளேட்டில் எழுதி இருந்தீர்கள், உங்கள் எண் கேட்டு வாங்கி அழைத்துப் பேசினேன், நினைவு இருக்கிறதா?’ என்று அசத்தினார். அடுத்தடுத்து அவரது கேள்விகளும், உரையாடல்களும் திரைக்கவிஞர்கள் பற்றியதும், அவரவர் முத்திரைப் பாடல்கள் பற்றியதுமாக அமைந்து அதிரவைத்தது. பெரியவரின் அபார நினைவாற்றல், இசையார்வம் குதூகலிக்க வைத்தது. அவரது அனுமதியோடு பின்னர் முதல் தளத்தில் மருத்துவர் ஏற்பாடு செய்திருந்த அறையில் கணினி முன்பு அமர்ந்து இணைய நிகழ்ச்சியில் இணைந்த அடுத்த ஒரு மணி நேரம் அருமையாக அமைந்தது.

கதை சொல்லும் பாடல்களும், பாடல்கள் சொல்லும் கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன திரைப்படங்களில்! 35 நிமிட உரைக்குப் பின் சுருக்கமாகப் பேசிய அன்பர்கள் பலரும் அவரவர் தேர்வுப் பாடல்கள் குறிப்பிட்டுச் சிறப்பாகத் தங்கள் கருத்துகள் பகிர்ந்தனர். வருகை தந்தோருக்கு மனநிறைவு தந்த நிகழ்ச்சி அது.

திரைப்பாடல்களில் படத்தின் கதையைச் சொல்லும் வழக்கம், கட்டியக்கார மரபிலும் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். ‘லவ குசா படத்தின் ஜெகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே, உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே’ என்ற பாடல் இளமைக் காலத்தில் மிகவும் ஈர்த்த ஒன்று. ஒட்டுமொத்த இராமாயணத்தை எப்படி ஓர் இசைப்பாடல் சொல்லிவிட முடியும் என்று பாடிக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. ‘மந்தரையின் போதனையால் மனம் மாறி கைகேயி…என்று இழுக்கும் இடத்தில் மனம் மிகவும் வேதனைப்படும். தங்கையின் போதனையில் தசகண்ட ராவணன் ஜானகி தேவியைச் சிறையெடுத்தான்…என்று இடைவெளி விட்டு, ‘நெஞ்சம் கனலாகிக் கண்கள் குளமாகித் தம்பியுடன் தேவியைத் தேடிச் சென்றான்…இராமன் தேடிச் சென்றான்’ என்ற இடத்தில் அழுத நினைவு கூட உண்டு. அந்தத் துயரமெல்லாம் எப்போது பஞ்சாய்ப் பறக்குமெனில், ‘இராமசாமியின் தூதன் நானடா இராவணா’ என்றான் என்ற இடத்தில் தான்….அங்கே பிடிக்கும் வேகம், கலங்கிய மக்கள் மகிழ்ந்திட இராமன் அரசுரிமை கொண்டான்.. என்ற இடம் வரை ஓட்டம் தான்….அந்தப் பாடல் பிடிபட்டதற்கு முக்கிய காரணமான என் அன்புத் தமக்கை கீதாவின் நினைவுகளும் சூழ்கின்றன இப்போது அந்தப் பாடலை நினைக்கையில், கதைகளும் பாடல்களுமான இளமைக்கால வாழ்க்கையில் தம்பிகளுக்கு அப்படியான அக்கா வாய்ப்பது போல் வரமொன்று உண்டா !

அந்தப் பாடலை நிகழ்ச்சியில் குறிப்பிடவில்லை ! நிகழ்ச்சியில் பேசிய பாடல்களைக் கடந்தும் நிறைய நினைவில் இருக்கின்றன கதை சொல்லும் பாடல்கள்…. சொல்ல நேரம் காணாது! மிகக் குறைந்த வரிகளில் முழு திரைக்கதையை அடையாளப்படுத்தி விடும் பாடல்கள் உண்டு. ‘அய்யனுடன் கோயில் கொண்டாள் திருமகளாம் நங்கை, அடிவாரம் தனிலிருந்தாள் அலமேலு மங்கை’ என்ற அவள் ஒரு தொடர்கதை படத்தின் பாடல், படத்திற்கு அப்பாலும் உள்ள கதைகளையும் பேசிவிடும்.

கண்ணதாசன், எம் எஸ் வி அப்படியாக உருவாக்கிய சிறப்பான திரைப்பாடல்கள் வரிசையில் ஒன்று, படம் வந்த போதே கவனத்தை ஈர்த்தது. எஸ் பி பாலசுப்பிரமணியன் – வாணி ஜெயராம் இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே தேன், இந்தப் பாடல் சற்று வித்தியாசமான சுவையில் அமைந்தது. ஈர்ப்பு இருந்தும் வலுக்கட்டாயமாக மறுத்துக் கொள்ளும் காதலை ஒரு கட்டத்தில் இறங்கிவந்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணின் உளவியல், அவளைச் சீண்டியபடியே அரவணைக்கக் காத்திருக்கும் காதலனின் கருத்தியல் இவற்றை முன்வைக்கும் பாடலில் வேறோர் உருக்கமான ஜோடியின் கதையும் பேசப்படுகிறது. இயற்கையின் வஞ்சனையில் செவிப்புலன் இழந்த தொழிலாளி அவன், அவளோ நம்பிக்கை துரோகத்தின் விளைவை வயிற்றில் சுமந்திருக்க வெளியேற்றப்பட்ட உழைப்பாளி!

கண்ணதாசனைத் தவிர யார் எழுதியிருக்க முடியும் அந்த வரிகளை….மெல்லிசை மன்னரின் மேதைமையை யார் மறுக்க முடியும் அந்தப் பாடலில்!

பல்லவியே அழகியல் கவிதை வரியில் தொடங்கி விரிவடைகிறது. அந்தப் பொருளடர்த்தி, பாடல் நெடுக பரவுகிறது. இரகசியக் குரலைப் போலவே கசியும் மென்மையான இசையில் எஸ் பி பி தொடங்குகிறார், இலக்கணம் மாறுதோ….என்று! அந்த வரியின் அழகில் சொக்கும்போதே, ஆலாபனையில் வளர்த்தெடுக்கிறார் அந்தக் கடைசிச் சொல்லை, அந்தக் கடைசி எழுத்தை….. காற்றில் சுழன்றுவரும் ஆடையைச் சட்டென்று கைகளால் பற்றி இறுகச் சுற்றித் தக்கவைத்துக் கொள்வதுபோல் அந்தத் தாளக்கட்டு (மிருதங்கமாக இருக்குமோ?) பரவசப்படுத்திப் பாடகரைப் பல்லவியை மீண்டும் பாடத் தூண்டுகிறது !

‘இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ’ என்பது பாடல் வருமுன்பே கால காலமாகக் கவியரங்குகளில், தமிழ் மன்றங்களில் சர்ச்சையில் இருந்த விவாத வரி. அதை நெகிழ்வுத் தன்மையைக் கொண்டாடும் காதல் வரியாகக் கட்டமைக்கிறார் கண்ணதாசன்!

பல்லவியில் அடுத்த வரி இன்னும் சிறப்பானது! ‘இது வரை நடித்தது அது என்ன வேடம்…இது என்ன பாடம்’ என்பது இன்னும் நெருக்கமான காதல் வரி! அதில், வேடத்தை நீட்டி இசைக்கும் எஸ் பி பி, பாடத்தைப் பதமாக முன்வைப்பதிலும் அத்தனை அழகு!

பல்லவியிலிருந்து வேக திசைக்கு நகரும் சரணத்தை நோக்கிய வழித்தடத்தை வயலின்களும், புல்லாங்குழலும் உடன்பட்டும் முரண்பட்டும் முன்மொழிந்தும் வழி மொழிந்துமாக அந்தக் காதல் இதயங்களை அப்படியே பிரதியெடுக்கும் மாயத்தை நிகழ்த்துகிறார் எம் எஸ் வி. பிடிவாதமான மனத்தை எப்படி நாயகி இளக வைத்துக் கொண்டு விட்டாள் … என்று வியப்பதுபோல் சீண்டுவதாக அமையும் முதல் சரணத்தின் வரிகளில் ரசிகர்கள் ஆழ்ந்து திளைத்திருந்த கல்லூரி நாட்கள் நினைவில் வந்து போகிறது!

‘கல்லான முல்லை, இன்றென்ன வாசம்?’ என்கிற முதலடியில் அந்த வாசம் பரவ வேண்டிய தொலைவுக்கு சங்கதிகள் போட்டு இசைப்பார் பாலு. ‘காற்றான ராகம்’ என்ற வரி மிகுந்த காற்றோட்டமான வெளியில் ஒலிக்கும். ‘ஏன் இந்த கானம்?’ என்கிற வீச்சு அம்சமானது. வெண்மேகம் கார்மேகமானதைக் கொஞ்சும் அடுத்த வரியைத் தொடர்ந்து, ‘மன்மதன் என்பவன் கண் திறந்தானோ’ என்ற வரி, மூத்த தலைமுறையினரின் பேச்சு மொழியின் கவிதை வடிவம். ‘பெண்மை தந்தானோ’ என்பது இயல்புணர்ச்சியைக் கூட ஆண் மேலாதிக்க நிலையிலிருந்து பார்க்கும் பிரயோகம். இந்தக் கொடுமையை, ‘கம்பன் ஏமாந்தான்’ என்ற மற்றபடி அருமையான பாடலிலும் கவிஞர் செய்திருப்பார். ‘யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று…’ எனும் இடத்தில் பாலுவின் முத்திரை சிரிப்பு.

பல்லவிக்கு மீளும் எஸ் பி பி அந்த முதல் வரி ஆலாபனையை இன்னும் சொக்கவைக்கும்படி மனத்தில் நிற்கவைக்கிறார். இரண்டாம் சரணம், நாயகியின் தன்னிலை விளக்கம். வாணி ஜெயராம் குரலினிமை மட்டுமல்ல, தன்னை நிறுவிக்கொள்ளும் பெண் மனத்தின் பிடிமானத்தை மொழியும் அவரது ஆற்றலும் துலங்குகிறது. ‘என் வாழ்க்கை நதியில் கரையொன்று கண்டேன்…உன் நெஞ்சில் ஏதோ….கறை ஒன்று கண்டேன்’ என்பதில் அந்த ‘ஏதோ’ எத்தனை கற்பனை விவரிப்புக்குள் நுழைந்து நுழைந்து வருகிறது! ‘புரியாததாலே திரை போட்டு வைத்தேன்’ என்பதில் அந்தப் ‘புரியாததாலே’ அத்தனை கிறக்கமூட்டும் சுயகழிவிரக்கம். ‘திரை போட்டபோதும் அணை போடவில்லை’ என்று கொண்டு வந்து நிறுத்துமிடம் அத்தனை அழகு. ‘மறைத்திடும் திரை தனை விலக்கி வைப்பாயோ, விளக்கி வைப்பாயோ’ என்பதில் சொற்ஜாலமும் செய்கிறார் கவிஞர்.

அங்கிருந்து, வேறு ஜோடியைப் பாட இருக்கும் சரணங்கள் என்பதால், பல்லவிக்குப் போகாமல் மூன்றாம் சரணத்தை நோக்கி வயலின்களும், குழலும் பேசிக்கொண்டே போக, டிரம்பெட் மொழியும், சிலிர்க்கவைக்கும் சிதார் சிற்றிசையும் தொட்டுக் கொடுக்க, ‘தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை’ என்று எடுக்கிறார் எஸ் பி பி. ‘தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை; என்கிற வரியை, கவிஞர் எந்தத் தருணத்தில் எழுதியிருப்பார்! அதோடு மட்டுமா…. ‘தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்…பாடாமல் போனால் எது தெய்வம் ஆகும்’ என்ற வரியை லட்சக்கணக்கானோர் (இந்த எண்ணிக்கை குறைவோ!) கொண்டாடிய நாட்கள் நினைவில் இருக்கிறது. சரணம் முழுவதையும் ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்துச் சங்கதிகளோடு இழைத்து இழைத்துப் பாடி இருப்பார் பாலு.

அங்கிருந்து பல்லவிக்கு வராமல் நான்காவது சரணத்தை நோக்கிய இசையின் திசையில், தனக்கு உற்ற துணையான காது கேளாத துணை பாத்திரத்தை , ‘மணியோசை என்ன, இடியோசை என்ன…எது வந்த போதும் நீ கேட்டதில்லை’ என்று தொடங்குவது காத்திரமான விளக்கம். ‘நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன்’ என்பது பரவச அறிமுகம். சரணத்தின் நிறைவில் வாணி ஜெயராமின் ஹம்மிங், உருக்கமான சூழலின் உருவகமாக மலர்கிறது. பல்லவியில் அவர் நிறுத்தி நிறைவு செய்யுமிடம் இன்னும் அம்சமாக அமைகிறது.

தந்திக்கருவிகளும் குழலும் இன்ன பிற இசைக்கருவிகள் ஒரு புறம் இயங்க, தாளக்கருவிகளின் சுகமான வழிநடைப்பயணம் பாடலை இன்னும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கிறது. கமல், சுமித்ரா ஒரு பக்கமெனில், அனந்து, ஷோபா இன்னொரு பக்கம். அனந்துவின் வெகுளித் தன உடல் மொழியும், ஷோபாவின் குழந்தைமையும் மறக்க முடியாதது. பாடலை நினைக்கும்தோறும் ஷோபாவின் துயரமிக்க முடிவு நெஞ்சை அறுக்கவே செய்யும்

தனக்குத் தானே பேசிக்கொள்ளும் தாத்தா பாட்டிகளை யார் தான் பார்த்திருக்க மாட்டோம்! மனத்தின் குரலாக இசை மலர்கிறது, திரைப்படங்களில். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதை வசனம் சொல்ல முடியாது, காட்சி மொழி தான் சொல்ல வேண்டும். அதன் சாத்தியங்களில் அதிகம் பயணப்படாத காலங்களில் இசைப்பாடல்கள் நிரப்பிக் கொண்டிருந்தன அந்த இடத்தை, வசனங்களைக் காட்டிலும் தூக்கலாகக் கூட! பாடல்கள் அற்ற படங்களும் பேசப்பட்டதுண்டு, ‘அந்த நாள்’ போல! ஆனால், பாடல்கள் பேசிக் கொண்டே இருக்கின்றன, நம்மோடு காலத்தைக் கடந்தும்! நமது நினைவுகள் ஒளி, ஒலி அலைகளால் நிரம்பி இருக்கின்றன! மின்னலைக் காணும்போதே இடியைக் கேட்கத் தயாராகிறது உள்ளம். இசையைக் கேட்கும்போதோ, கதைக்குத் தயாராகிறது உள்ளம்.

கதைக்குள் பாடலும், பாடல்களுக்குள் கதைகளும் நிலை பெற்றுவிட்டன, திரை இசையில்! இசையில் லயிக்கிற மனிதர்கள் வாழ்க்கையை ரசிக்கவும் சற்று எளிதாகிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

இசை வாழ்க்கை 76: மெட்டு விரிந்த இசையினிலே – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 76: மெட்டு விரிந்த இசையினிலே – எஸ் வி வேணுகோபாலன்




எழுபத்து ஐந்தாவது கட்டுரை மிகுந்த நெகிழ்ச்சி அடையும் வண்ணம் வரவேற்பு பெற்றது. எல்லோருக்கும் நிறையவே நன்றி சொல்ல வேண்டியவனாகிறேன்.

புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன் மூலம் எண் கிடைக்கப் பெற்று அனுப்பிய கட்டுரை நாதஸ்வரக் கலைஞர் பார்த்திபன் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது. ‘அற்புதம்… நன்றி அய்யா’ என்று பதில் வந்தது. அடுத்த நாள் கடலூரில் வசித்து வரும் அவரை அழைத்துப் பேசுகையில் மிகவும் தன்னடக்கத்தோடு உரையாடினார். இத்தகைய கலைஞர்களுக்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெறுவதுதான் அவர்களுக்கான உண்மையான பாராட்டு.

கட்டுரையை அடுத்து நாதஸ்வர இசைக்கலைஞர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். தனது நெகிழ்ச்சியைக் குரல் வழி பதிவு செய்து அனுப்பி இருந்தார். பின்னர் அழைத்தும் பேசினார். பள்ளி மாணவர்களுக்கு காற்றுக் கருவிகள் வாசிப்பு பற்றிய ஆர்வம் தூண்டும் இரண்டு நாள் முகாம் நடத்தி, பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம், இந்த கருவிகள் அடுத்தடுத்த தலைமுறைகள் பாதுகாத்து எடுத்துச் செல்ல வேண்டிய சமூக சொத்து என்றார்.

தோழர் பிரகதீஸ்வரன், ‘காதலின் பொன் வீதியில்’ பாடலை முன்பெல்லாம் வேகமாகக் கடந்து போனவர், பின்பொரு கச்சேரியில் யாரோ பாடும்போது கேட்டு ரசித்தவர், இப்போது மேலும் நெருக்கமாக உணர்வதாகக் குறிப்பிட்டார் . கட்டுரையில் பார்த்திபன் பற்றிய குறிப்புகளைக் கொண்டாடிய அவர், ‘பொதுவாக விஸ்தார வாசிப்பு தான் நாதஸ்வரத்தில் கொண்டாடிக் கேட்பது. அந்தக் கலைஞர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை இன்புற வைப்பதும் அதில் தான்! ஆனால், பார்த்திபன் வாசிப்பில், மூச்சுக் காற்றைக் கட்டுக்குள் வைத்துக் கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்திக் கட்டுடையாமல் குழையக் குழைய வாசிக்கும் நேர்த்தி தான் அபாரம்’ என்றார்.

நண்பர் மோகன சுப்பிரமணியன் இலேசில் கருத்து சொல்லும் தோழரில்லை – உள்ளத்தைத் தொடவேண்டும் எந்தப் படைப்பும்! ஒரு நாள் கடந்தபின் வந்த அவரது அழைப்பில் ஒலித்தது குரல் அல்ல, இசை, சமூகக் கரிசனமிக்க இதயத்தின் பரவச இசை. இந்தக் கட்டுரை என்னென்னவோ செய்கிறது என்னை, இந்தத் தொடரை நிறுத்த உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று ஓங்கி ஒலித்த முரட்டுப் பாச மழையின் ஓசை!

தொண்ணூறு வயது கடந்தும் இடையறாது சமூகப் பங்களிப்பு ஆற்றிவரும் கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன் அவர்கள், ‘படித்துக் கொண்டே இருக்கலாம். (கட்டுரை) கரும்பா, அதனின்று எடுத்துக் கிடைத்த கருப்பஞ் சாறா என்று ஐயுறும் வண்ணம் உள்ளது’ என்று எழுதியதோடு, கட்டுரையைத் தனது நட்பு வட்டத்திற்கும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

‘குழந்தைகள் தங்களுக்கு வாய்த்த நொறுக்குத் தீனியை வைத்து வைத்து சாப்பிடுவார்களே, அப்படி எடுத்து எடுத்து வாசிக்கத் தோன்றுகிறது 75வது கட்டுரையை’ என்று எழுதி இருக்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும் கவிஞருமான ஏ எம் சாந்தி.

தோழர் தனபால் மகள் பாரதி முற்றிலும் ரசனைக்கு ஆட்பட்டிருக்கும் ஓர் உற்சாக தளத்தில் இருந்து அழைத்துப் பேசியது மறக்க முடியாதது. அத்தனை ஆனந்தக் களிப்பும் குதூகலமும் அவரது குரலில்!

மின் ஆற்றல் எந்திர ஆற்றல் ஆகிறது. மின்னாற்றல் ஒளியாற்றல், ஒலி ஆற்றலாக உருப்பெறுகிறது என்றெல்லாம் அறிவியல் பாடத்தில் இளவயதில் படித்திருக்கிறோம். இசையைக் காட்சிப்படுத்தவோ, காட்சியை வாசிக்க வைக்கவோ, வாசிப்பை இசையாக உணரவோ இயலுமா தெரியவில்லை. ஆனால், இசையார்வம் கொண்டவர்களுக்கு இசை குறித்த வாசிப்பு, செவிகளில் இசையாக ஒலிக்கும் மொழி பெயர்ப்பு எப்படி நிகழ்கிறது!

கம்ப ராமாயணச் செய்யுளில் இந்த வரி மிகவும் பேசப்படுவது: ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்’. இராமன் வில்லைக் கையில் எடுத்ததை அவையில் உள்ளோர் பார்க்கின்றனர், அது முறிக்கப்படும் ஓசையைக் காதில் கேட்கின்றனர்! இது அந்த செயல்பாட்டின் வேகத்திற்கான குறிப்பு மட்டுமன்று. ஒரு காட்சியின் அழகியல்! இதைப் போலவே தான், மேடைகளில் இசைக்கலைஞர்கள் தங்களது இசைக்கருவியை எடுப்பதைக் காண்கிறோம். அதனிலிருந்தும் பெருகும் இசையைக் கேட்கிறோம்.

ஒரு பறவையின் சிறகடிப்பை இசையால் படம்பிடிக்க முடியும் என்பதை பி சுசீலாவை வைத்துக் கேட்க வைத்தனர் மெல்லிசை மன்னர்கள். எழுத்தாளர் மு சுயம்புலிங்கம் அவர்களது சிறுகதை ஒன்றில் கவண் எறிந்து குருவியைப் பிடிக்கத் துரத்துபவனுக்கு அந்தப் பறவை எப்படி சவால் விடுத்து வெவ்வேறு இடமாகப் பறந்து போய்க் கொண்டே இருக்கிறது என்பதை அமர்க்களமாகக் கொண்டுவந்திருப்பார். போக்கு காட்டிக்கொண்டே செல்லும் அந்தக் குருவி போய் உட்காரும் இடமான கொல்லைப்புறம் ஒன்றில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் தன்னெதிரே தென்படும் அவனைத் தவறாகப் புரிந்து கொண்டு அடித்து விரட்டத் துரத்தவும் வந்த வழியே தலை தெறிக்க ஓடுவான் அவன், குருவியோ அசையாமல் ஒரு மரக்கிளையில் இருந்தபடி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் என்று முடியும் கதை. சொக்க வைத்துச் சிக்க வைக்கும் குருவியை முன்னிலைப்படுத்தி அந்தக் குறிப்பிட்ட படத்திற்கான காதல் பாடலைக் கவிஞர் கண்ணதாசன் எப்படி பல்லவியில் எடுத்தார் என்பது எண்ணியெண்ணி இன்புற வைப்பது.

புதிய பறவை திரைப்படத்தின் முதல் ஒலிப்பதிவே ‘சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து’ பாடல் தானாம்! காதல் உணர்வுகளைக் கண்களாலேயே கடத்திவிட முடியும். வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாத இடம் அது என்பார் வள்ளுவர். தான் நோக்குங்கால் நிலம் நோக்கி, நோக்காத போது தான் நோக்கி மெல்லச் சிரிக்கும் காதலியை அறிமுகம் செய்பவரும் அவரே.

தனக்குள் ஊறும் உணர்வுகளை நேரடியாகச் சொல்லாமல் வேறு யார் யாருக்கோ நிகழ்வதாக அடுக்கிக் கொண்டே போகும் சுவாரசியமான காதல் பல்லவி தான் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து! ஒரு ஜோடி காதல் குருவிகளின் அந்தரங்க பரிபாஷையில் தொடங்குகிறது பாடல். அதை விரிந்த செவ்வானம் ரசித்துக் கடலில் போய்க் கலக்கும் உணர்வுகளாக விரிகிறது வயலின் இசை. அதன் இன்பத்தில் துள்ளும் தாளக்கட்டில் மலராக விரியும் மொட்டில் வண்டு வந்து மூழ்கவும், அதை அந்தக் காட்டுவெளி முழுக்கக் கொண்டு சேர்க்க மூங்கிலில் காற்று மோதிக் கிளர்த்துகிறது காதலின் புல்லாங்குழல் இசையை!

பறவைகளின் அழகு அவற்றின் பறத்தல் மட்டுமல்ல, ஒயிலாக அவை தங்களுக்கு உகந்த திசையில் ஒரு வட்டமடித்துத் தரையை நோக்கி வேகமாகக் கீழ் நோக்கி வருவதுபோல் வந்து மீண்டும் மேலெழும்பித் தங்களது தேர்வில் ஒரு மரக்கிளையில், வீட்டு மேற்கூரையில், தானியங்கள் உலர்த்தி இருக்கும் கட்டாந்தரையில் அல்லது மொட்டை மாடியில் இறங்கும் அழகு அத்தனை ரசமானது.

இந்தக் காட்சியின்பத்தின் இசை அனுபவமாக இந்தப் பாடலை வழங்கி இருப்பது மெல்லிசை மன்னர்களின் அபார மேதைமை. அருமையான தாளக்கட்டில் மிதந்து மிதந்து பறக்கின்றது பி சுசீலாவின் குரல். சரணத்திற்குப் போகையில், உயரத்தை எட்டும் கிறக்கத்தில் ஒரு கொண்டாட்ட ஹம்மிங்… சரணத்தின் நிறைவுத் தரையிறக்கத்தில் குதூகலமாக ஒரு ‘ஹோய்’ ! குருவிகள் ஒயிலாகத் தலையை ஒடித்து ஒடித்துத் திரும்பிப் பார்க்கும் அழகை, ஒவ்வொரு வரியிலும் வார்த்தைகளின் சங்கதிகளில் கொண்டு வந்திருப்பார் சுசீலா.

சிட்டுக்குருவி…என்ற முதல் சொல்லிலேயே ஒரு கதை சொல்லி போல் அத்தனை இழைத்துத் தொடங்குகிறார் சுசீலா. ‘முத்தம் கொடுத்துச் சேர்ந்திடக் கண்டேனே’ என்பதில் நெருக்கமான மனிதருக்கு மிகவும் நெருக்கமான அனுபவக் கடத்தலாக ஒலிக்கிறது. செவ்வானம் என்பது ஒற்றைச் சொல், ஆனால் வானம் என்பது அகன்று பரந்து விரிந்திருப்பது. ஆகவே, அந்தச் செவ்வானத்தை அத்தனை நகாசு வேலைகள் செய்து இசைக்கிறார் அவர். ‘மொட்டு விரிந்த மலரினிலே’ என்ற வரியில் தலைப்படும் வேகமும், ‘வண்டு மூழ்கிடக் கண்டேனே’ என்பதில் அந்த மூழ்கிட என்ற சொல்லில் நம்மை மூழ்கடிக்கும் இலாவகமும் அற்புதமாய் ஒலிக்க, ‘மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே’ என்பதை அடுத்து வரும் அந்த ‘ஹோய்’ தான் தரையிறங்கல் !

வயலின் இசையிலும் குழலின் இன்பத்திலும் ஹம்மிங் மிதத்தலிலும் பிறக்கும் சரணத்தில் ‘பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே…’ என்பதில் பறவையின் போக்கு காட்டல் எப்படி வெளிப்படுகிறது! ‘பழக வந்தேன் தழுவ வந்தேன்’ என்ற சொற்களுக்குத் தான் எத்தனை ஒய்யாரம் வாய்க்கிறது… ‘பறவை துணையில்லையே’ என்பதில் எத்தனை தூண்டுதலுக்கான குறிப்பு ஒலிக்கிறது! ‘எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே’ என்பதில், வார்த்தை என்கிற வார்த்தைக்கு எத்தனை சங்கதிகள்…’என்னென்னவோ நினைவிருந்தும்’ என்பதில் அந்த என்னென்னவோ நம்மை என்னென்னவோ நினைவுகளில் ஆழ்த்தி விடுகிறது. ‘நாணம் விடவில்லையே’ என்பது சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு ஒரு பாசாங்குத் தனமான புகார் என்பது அந்தக் காதலின் மதிப்பை மேலும் கூட்டுகிறது. பிறகு வரும் ‘ஹோய்’ தான் இப்போதும் தரையிறங்கல்.

இரண்டாம் சரணத்திலும் அதே வயலின், குழலிசை, ஹம்மிங் என்று வானில் பறக்கத் தொடங்கும் குரலில், ‘ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனா’ என்பதிலேயே ஒரு தேனைச் சுரக்க வைக்கும் கவிஞர் கண்ணதாசன், ‘ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா’ என்பதில் இரண்டாவது பருகுதலுக்கான இன்பத்தையும் சுவைக்க வைக்கிறார். ‘இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா’ என்பதில் சுசீலாவின் குரல் இதமானகாற்று தாலாட்டும் கிளையில் ஊஞ்சலாடும் குருவியாக இசைக்கிறது. ‘இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா’ என்பது காதலின்பத்தின் அடுத்த கட்டம், இப்போது வரும் ‘ஹோய்’ இன்னும் சுகமான தரையிறங்கல்.

சுசீலா எங்கே தொடங்குவார், எந்த இடத்தில் சரியாக தபேலாவின் தாளக்கட்டு தொடங்கும், எங்கே துள்ளலோசை பிறக்கும். எங்கெல்லாம் பாடலின் வளைவுகளுக்கும், தாவுதலுக்கும், தரையிறக்கத்திற்கும் ஒட்டுறவாகத் தாள லயம் ஒலிக்கும் என்பது கூடுதல் இன்பம். சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடிப்பு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

மனிதர்களுக்குப் பறவைகள் மீதுள்ள காதல் அவற்றின் சுதந்திரத்தின் மீதான ஆர்வமாக இருக்கக் கூடும். சிறை பிடிக்கவும் சிறைப் பட்டிருக்கவும் வேட்கை உள்ளோர் பறவைகளை ரசிப்பது நம் வாழ்க்கை முரண். ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்றானே மகாகவி? ‘ஆள்’ என்கிற சொல்லே அடிமைத் தனத்தின் மிச்ச சொச்சம் என்கிறார் ஆய்வாளர் ஆ சிவசுப்பிரமணியன். திருப்பாவை பாசுரங்களில் இருந்தும் (உமக்கே நாம் ஆட் செய்வோம்), தேவாரத்தில் இருந்தும் (ஆளாய் இனி அல்லேன்) வெவ்வேறு தமிழ் இலக்கியங்களில் இருந்தும் அவர் மேற்கோள் காட்டி எழுதி இருப்பதை அவரது ‘தமிழகத்தில் அடிமை முறை’ புத்தகத்தில் காண முடியும்.

அன்புக்கும் இசைக்கும் ‘ஆட்பட்டு’ இருப்பது சிறப்பான விஷயம் தான். இசையில் கலப்பது உள்ளபடியே ஒரு சுதந்திர உணர்வு. இசை ஒரு காந்த விசை என்பதால் அந்தத் திசை நோக்கிய மனத்தின் தேடல் ஒரு விடுதலை உணர்வும் கூட.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

நூல் அறிமுகம் : கண்ணதாசன் எழுதிய *சந்தித்தேன் சிந்தித்தேன்* – உஷாதீபன்

நூல் அறிமுகம் : கண்ணதாசன் எழுதிய *சந்தித்தேன் சிந்தித்தேன்* – உஷாதீபன்

நூல்: சந்தித்தேன் சிந்தித்தேன் ஆசிரியர்: கண்ணதாசன் வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17 2021-ம் ஆண்டில் நான் படித்த இரண்டாவது புத்தகம் இது. தடையில்லாமல் படித்துச் செல்வதற்கு, கவித்துவத்தோடு, மடை திறந்த வெள்ளமாய் எழுதிச் செல்லும் கவியரசர் கண்ணதாசன் புத்தகத்தை விட வேறு…