கவிஞர் சே.கார்கவியின் கவிதைகள்

கவிஞர் சே.கார்கவியின் கவிதைகள்




நீருக்கு முளைத்த பாதங்கள்
*********************************
ஒரு சூழல் ஒருவனை முட்டாளாக மாற்றும்
அறிவாளியாக நடிக்கச் செய்யும்..
மரம் வெட்டத் துணிபவனுக்கு
அமர்ந்து வெட்ட இடம் தேடுவது முக்கியமாகிறது
கணுவோடும் தூரோடும் விளையாடும் அளவிற்கு
வயது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது…!

ஒரு கல் எறிந்த ஆற்றில்
நீர் செல்லும் வழி எல்லாம் கல்லின் நகர்வு இருக்கத்தான் செய்கிறது
நீர் மேல் பரவளையங்களின் தடயம் முடியும் வரை…!

நிலாவை சுமந்தபடி நகரும் நீருக்கு
அவ்வப்போது இடை கிள்ளி சலசலப்பைத் தருகிறது காற்று…!

காற்றுக்காகப் பல கயிறு திரிக்கப்பட்டுப்
புல்லாங்குழல் துளைக்குள் நுழைத்து

சிறை வைக்கின்றன இராகங்கள்…!

யாருக்குத் தெரியும்
அந்த நதியும்
சிறு கல்லும்
சில் காற்றும்
மரம் உடைந்து கீழ் விழுந்த முட்டாளும்
வழி தவறி புவி விழுந்த வான் வழிப்போக்கர்கள் என்று…..!

கொஞ்ச நேரம் இரு
***********************
கொஞ்ச நேரம் இரு
மெல்ல வருட மழை வரும்
கொஞ்ச நேரம் இரு
இன்றும் நாளையும் நல்லது நடக்கும்
கொஞ்ச நேரம் இரு
உண்மையில் வந்துவிடுகிறேன்
கொஞ்ச நேரம் இரு
தூரிகையேந்தி தும்பி வரும்…..

கொஞ்ச நேரம் இரு
அறுவடைக்கு மழை நின்றுவிடும்
கொஞ்ச நேரம் இரு
வறுமையில் பசி தானாக மறந்துவிடும்
கொஞ்ச நேரம் இரு
பசியை மறைக்க நட்சத்திரம் தோன்றும்
கொஞ்ச நேரம் இரு
அம்மா அப்பா வானில் வருவார்

கொஞ்ச நேரம் இரு
கூரை கிழித்து சூரியன் வருவான்
கொஞ்ச நேரம் இரு
குளிர்ச்சி பொங்க நிலா வருவாள்
கொஞ்ச நேரம் இரு
கிரகரணம் மறைந்து போகட்டும்
கொஞ்ச நேரம் இரு
புவிஈர்ப்பு பரவலாகட்டும்

கொஞ்ச நேரம் இரு
ஆதாமும் ஏவாளும் உறங்கச் செல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
மலைப்பாம்பு பயமுறுத்தாமல் செல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
ஆப்பிள் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கட்டும்
கொஞ்ச நேரம் இரு
ஏதேன் திட்டம் உறங்கிப் போகட்டும்……!

கொஞ்ச நேரம் இரு
நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பக்தனுக்கும் புரியட்டும்

கொஞ்ச நேரம் இரு
பசிக்காக அழும் குழந்தைக்கும் இயற்கை
சமாதானம் சொல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
மழலையின் அருகே நாய்க்குட்டி துள்ளட்டும்
கொஞ்ச நேரம் இரு
மழலையிலே மனிதம் பிறக்கட்டும்

கொஞ்ச நேரம் இரு
பார்வையில் பட்ட
அனைத்தும்
கவிதையாய் உருவெடுக்கட்டும்……

கவிஞர் சே கார்கவி

இசை வாழ்க்கை 75: பாடலின் பொன் வீதியில் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 75: பாடலின் பொன் வீதியில் – எஸ் வி வேணுகோபாலன்




தபேலா பிரசாத் அவர்களுடைய மகன் ரமணா அவர்களுக்கு என் மட்டற்ற அன்பு உரித்தாகிறது. கேட்ட அலைபேசி எண்ணை விரைந்து பெற்றுத் தந்தார். அதனால் தான், ஷெனாய் சத்யம் அவர்களைக் குறித்த கட்டுரையை மறுநாளே அவருடைய மகன் ஷெனாய் இராமச்சந்திரன் வாசித்துவிட்டார். வாசித்தது மட்டுமல்ல அத்தனை நெகிழ்ந்து போனார். அவரோடு அன்றிரவு நிகழ்ந்த உரையாடலில் அவருக்கு சொல்ல நிறைய செய்திகள் இருந்தன. அறிமுகம் அற்ற ஓர் எளிய மனிதரது அன்பை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி இசையார்வம்தான் முக்கியம், பெரியவர் சிறியவர் அறிந்தவர் அறியாதவர் என்பதெல்லாம் கடந்தது இந்த நேயம் என்றார்.

பம்பாய் திரையுலகில் புகழ்பெற்ற நவுஷத் போன்றவர்கள் இசையிலும் வாசித்தவர் தனது தந்தை சத்யம், 47 வயதிலேயே காலமாகி விட்டார் என்றார். தனது பாட்டனார் நாராயணசாமி (சத்யம் அவர்களுடைய அன்புத் தந்தை) விஜயநகர அரசவை ஆஸ்தான ஷெனாய் வித்வான் ஆக இருந்தவர் என்ற இராமச்சந்திரன், தனது மகன் கிஷோர் குமார் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர் என்றாலும், தனது இசையை, பாரம்பரிய செய்திகளை தொழில்நுட்ப உதவியுடன் ஆவணப்படுத்த அவர் தான் தன்னை உந்தித் தள்ளி உதவிக் கொண்டிருப்பது என்றார். நான்கு தலைமுறைக் கதை இது!

ஆவணி பிறந்தது, திருமண நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள் வந்த வண்ணம்….என் தங்கை ஆண்டாள் மகள் திருமண நிகழ்வில் சாக்ஸஃபோன் இசையோடு வந்திறங்கி இருந்தவர், சுதாகர் தான்! அறிமுகமாகி சரியாக ஓராண்டு கழித்து மீண்டும் பார்க்கையில் அத்தனை பூரிப்பு.

வேறொரு திருமண வரவேற்பில், வயலின் புல்லாங்குழல் தபேலா கீ போர்டு கூட்டணியில் இசை வாழ்க்கை.

வாதாபி கணபதிம்
மருத மலை மாமணியே
பொன் மாலைப் பொழுது
வளையோசை கலகல…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
கண்ணாளனே…

என்று போய்க் கொண்டிருந்த இனிய மாலை நேரமது. ஓ ரசிக்கும் சீமானே பாடலின் சரணங்களில் அத்தனை வளைவுப் பாதையிலும் அசாத்திய நேர்த்தியோடு அந்த இளம் பெண் வயலினில் கொண்டு வந்தார், முழு பாடலையும்! ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ புல்லாங்குழலில் இளைஞர், வயலினில் இந்த இளம் பெண், ராஜாவின் அபாரமான பாடலை உருகியுருகி வாசித்தனர் இருவரும். எழுந்துவர விருப்பமின்றி நாங்கள் விடைபெறும் போது அந்தக் கலைஞர்கள் கண்களால் நன்றி தெரிவித்து வாசிப்பு தொடர்ந்தது மறக்க முடியாதது.

பட்டுக்கோட்டை தனபால், ரசனை மிக்க எளிய தோழர். அவருடைய மகன் விவேகானந்தன் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு முதல் நாள் டிக்கெட் போட்டு, இணையர் ராஜியோடு அங்கே சென்றபிறகு திரும்பி வர வழிகளைத் தேடி மீண்டும் ரயில் பயணமே வாய்த்த அனுபவங்கள் சுவாரசியமானவை.

ஒரு நாள் முன்னதாகத் தஞ்சை போய் இறங்கி இருந்தோம். பெரிய கோயில், அரண்மனை, சிற்பங்கள் எல்லாம் நேரமெடுத்து மிகவும் நெருக்கமாகப் பார்த்துப் பரவசத்தோடு அறைக்குத் திரும்பி இருந்தோம். மறுநாள் என்ன நிகழ்ச்சி, எப்போது வர வேண்டும் என்று தெரிந்து கொள்ள முயலும்போது, “நாளை காலை 11 மணிக்கு வந்துருங்க தோழர், பார்த்திபன் நாதஸ்வரம்…முக்கியமா நீங்க அமர்ந்து ரசிக்கணும்” என்று அலைபேசியில் சொன்னார் தனபால். எந்தெந்தப் பாடல்கள் என்று மகள் பாரதியும், புதுகை பூபாளம் பிரகதீஸ்வரனும் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்று கூடுதல் ஈர்ப்பு விசையும் அழுத்தினார்.

எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் தன்னுடைய இணையரோடு தஞ்சைக்கு வந்தவர், மறுநாள் காலையில் எங்களையும் உடன் அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை நோக்கிப் பயணம் செய்ய, ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா….’ என்று விளித்து வரவேற்றார் பார்த்திபன். அடுத்த ஒன்றரை மணி நேரம் அந்தக் குழுவின் வாசிப்பில் எங்களை ஒப்புக்கொடுத்து உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்தோம்.

புல்லாங்குழலில் பைரவன் அசத்திக் கொண்டிருந்தார். கீ போர்டில் சசி அபாரம். தவில் கலைஞர் பெயரென்ன என்று கேட்டபோது, ‘வில்லுக்கு விஜயன் மாதிரி தவிலுக்கு விஜயன் இவர்’ என்று அவரை அறிமுகம் செய்வித்தார் பார்த்திபன். தபேலாவில் சுதந்திர குமார்!

மனத்திற்கு மிகவும் நெருக்கமான மெல்லிசையாக அடுத்தடுத்து நாதஸ்வரத்தில் வார்த்துக் கொண்டே வந்தார் பார்த்திபன். பயண நாளில் அலைபேசியில் சேமித்துக் கொள்ள வாய்ப்பில்லையே என்று மனமின்றி மறுத்துக்கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தவன், தன்னையும் மீறி ஒரே ஒரு பாடலின் ஒரு சரணத்தை மட்டும் அலைபேசியில் சிறைப்பிடித்தேன்.

திரை இசையில் புகழ் பெற்ற பின்னணி பாடகர் தாமே இசையமைத்துப் பாடித் தானே நடித்திருந்த மிகவும் கொண்டாடப்படும் பாடல் அது! வாட்ஸ் அப்பில் அதை அன்றே பகிர்ந்து கொள்ளவும், பெரிய கொண்டாட்டமான மறுமொழி வந்து கொண்டே இருக்கிறது.

‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலைப் பற்றிப் பேசுகையில், தமக்கு ஆதர்சமாக இருக்கும் இந்துஸ்தானி இசையொன்றில் லயித்தே அந்தப் பாடலுக்கான மெட்டு அமைத்ததாகத் தன்னடக்கத்தோடும் நேர்மையாகவும் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார் பாலு. சிதார், புல்லாங்குழல், தபேலா (டிரம்பெட் கூட என்று நினைக்கிறேன்) என்று காதலுக்கான ஒரு ஜுகல்பந்தி இந்தப் பாடல்.

ஒரு நாயகன் இப்படி முன்மொழியும் காதலைக் கேட்டு உருகாத பெண் இருக்க முடியுமா என்பது மாதிரியான உருக்க மொழியில் பிசைந்து ஊட்டுவார் எஸ் பி பி. ஆணவப் படுகொலைக்குத் துடிக்கும் பெற்றோர் முன்பாக இந்தப் பாடலை ஒலிக்கவிட்டால், சாதீய இறுக்கத்தைக் கூடக் கரைத்துவிடும் சாத்தியங்கள் இருக்கும்படியான கீதம் இது.

பாடலின் தொடக்கத்தில் சிதார் பேசுகிறது. சொல்லப்போனால், ‘ஏன் சொல்லாமல் இருக்கிறாய் உன் காதலை’ என்று நாயகனைச் சீண்டிச் சிணுங்கும் குரல் தான் அது. அங்கே புல்லாங்குழல் பற்றிக் கொள்கிறது. அதற்கான மேடையைத் தாளக்கட்டு இதயத் துடிப்பாக ஏந்தி வருகிறது. காதலின் பரிதவிப்புக்கு மேலும் இசைக்கருவிகளும் துடிக்க, பாலு தொடங்குகிறார், ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே…’ என்று பல்லவியை. முதல் சொல்லான வண்ணத்தில் அந்த வ எனும் எழுத்திலேயே இதய தாபத்தைச் சொல்லிவிட முடிகிறது அவருக்கு! ‘வானம் விட்டு வாராயோ’ என்ற அடித்த அடியில், வா ராயோ என்ற விளியில் எத்தனை காதல் ஏக்கம் சொட்டுகிறது அவரது குரலில்! ‘விண்ணிலே பாதை இல்லை’ என்பதில் உனக்குத் தெரியாதா என்ன என்ற எடுப்பு. ‘உன்னைத் தொட ஏணி இல்லை’ என்பதில் எட்ட முடியாத இடத்தையும் எட்டிவிடுகிறது அவரது காதல் குரல்.

சரணத்திற்குப் போகுமுன் பல்லவியைத் திரும்ப இசைக்கையில் இரண்டு அடிகளைப் பாடி மீண்டும் ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ என்று முதலடியில் வந்து நிறுத்துகையில், கேட்கும் இதயங்களை எத்தனை நெருக்கமாக்கிக் கொண்டு விடுகிறார், பாலு!

மென்மையான பல்லவியில் இருந்து சரணத்தை நோக்கிய நடையில், ஒரு துள்ளாட்ட தாள கதிக்கு மனத்தைக் கொண்டுபோய்ப் பின்னர் தெள்ளிய நீரோடையில் கலக்கவிட்டு, ‘பக்கத்தில் நீயும் இல்லை’ என்று சரணத்தை எடுக்கிறார் பாலு. ‘பார்வையில் ஈரமில்லை’ என்கிற வறண்ட தருணத்தைக் கண்ணீரில் நனைக்கிறார். ‘சொந்தத்தில் பாஷை இல்லை’ என்பதில் அந்த பாஷையை என்னமாக இதயத்தில் இருந்து பேசுகிறார். ‘சுவாசிக்க ஆசை இல்லை’ என்கிற இடம்….அந்த ஆசையில் குவிக்கிறார் மொத்த ஆசையையும்…. ‘தள்ளித் தள்ளி நீ இருந்தால்’ என்பதைத் துள்ளித் துள்ளி இசைக்கும் பாலு, ‘சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை’ என்று சரணம் முழுக்க காதல் சங்கதிகளை இசையின் சங்கதிகளாக அடுக்குகிறார்.

சரணத்தில் வரிகளை இரண்டாம் முறை இசைக்கையில் பின்னணியில் மென்மையாக ஒலிப்பது சாக்ஸஃபோன் ஆக இருக்கக் கூடும். இரண்டாம் சரணத்தை நோக்கிய நடையில் சாக்ஸஃபோன் இசையில் காதலை மேலும் ததும்ப வைக்கிறார் இசையமைப்பாளர் எஸ் பி பி.

இரண்டாம் சரணம் காதலை இன்னும் நெருக்கமாக இழையவிடுகிறது. ‘நங்கை உந்தன் கூந்தலுக்கு’ என்பதில் அந்தக் கூந்தலுக்கு மட்டுமே போடும் சங்கதிகளில், நாயகன் உரிமையோடு நாயகியின் கூந்தல் வாசத்தில் பெருமூச்செடுக்கும் தருணத்தை வழங்குகிறது பாலுவின் குரல். ‘நட்சத்திர பூ பறித்தேன்’ என்பது அவளுக்காக எடுத்த பாடு. ‘நங்கை வந்து சேரவில்லை’ என்பது ஆதங்கம். ‘நட்சத்திரம் வாடுதடி’ என்பது நட்சத்திரத்திற்கான கவலையா என்ன…நாயகனது தாபம்….அதனால் தான், இந்த நான்கு வரிகளையும் இரண்டாம் முறை பாடுகையில் அந்த ‘வாடுதடி’ அப்படி வாட்டி எடுக்கும்படி இசைக்கிறார் பாலு.

‘கன்னி உன்னைப் பார்த்திருப்பேன், கால் கடுக்கக் காத்திருப்பேன்; என்பன பொதுவான ஏக்கம் தான் என்றாலும், ‘கால் கடுக்க’ என்ற இடத்தில் பாலு கொடுக்கும் அழுத்தம் காதல் தோல்வியில் வாடுபவரை மட்டுமல்ல, காதல் இணையராக வாழ்வோரையும் உருக்கிப் போடும்.

பாடலின் தாளக்கட்டு எப்போது சமன நிலையில் ஒலிக்கிறது, எப்போது வேகமெடுக்கிறது, எப்போது பட்டென்று நிறுத்திச் சிறு இடைவெளியில் மீண்டும் எடுக்கிறது என்பதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் இன்பத்தை மேலும் கூட்டுகிறது.

வாட்ஸ் அப்பில் பார்த்திபன் நாதஸ்வர வாசிப்பு பகிர்வுக்கு வந்த பதில்களில் ஒன்று மிக முக்கியமானது, உறவினர் மாதவ வெங்கடேஷ் அனுப்பி இருந்தது. பார்த்திபன், தொலைகாட்சி நேயர்களுக்கு மிகவும் பரிச்சயமான இசைக்கலைஞர் என்பதை அது வரை அறியாதிருந்திருக்கிறேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாகப் பாடவும் செய்தவர் என்கிற வரியை மாதவன் குறிப்பிட்டிருந்தார். பார்த்திபன் யார் முன்பு பாடினார் என்பதைப் பின்னர் தேடிக் கண்டடைந்த போது அவரது திறமையின் மீதும், அதையெல்லாம் காட்டிக் கொள்ளாத மிகுந்த தன்னடக்கத்தின் மீதும் பெரிதும் காதலுற்றேன்.

‘இதோ இதோ என் பல்லவி’ என்ற அருமையான பாடலை பார்த்திபன் நாதஸ்வர இசையில் குழைத்துக் குழைத்து இசைக்க எதிரே நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டிருக்கும் எஸ் பி பாலசுப்பிரமணியன் நெகிழ்ந்து நெகிழ்ந்து ரசித்துக் கேட்கிறார்.

https://youtu.be/ALsvtWfakYI

அதோடு நிற்கவில்லை….. ஒரு சரணத்தைத் தனது குரலில் பாடியும் காட்டி இருக்கிறார் பார்த்திபன், அப்போது எஸ் பி பி முகத்தில் வெளிப்படும் பூரிப்பும் அடுத்தவர் திறமையைப் பாராட்டிக் கொண்டாடும் உள்ளன்பும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. பாலு தனது இசையில் கொணரும் நுட்பமான அம்சங்களை அப்படியே உள்வாங்கி அதை அவருக்கான மரியாதையாக அவருக்கே வழங்கி இருந்த பார்த்திபன், எஸ் பி பி மறைந்த போது கரைந்து போய் தனது இழப்பை வாய்மொழியாகவும் நாதஸ்வர இசையாகவும் வெளிப்படுத்திய பதிவும் யூ டியூபில் இருக்கிறது.

எஸ் பி பி அவர்களது இரண்டாவது நினைவு நாள் சூழும் இவ்வேளையில் பார்த்திபன் அவர்களது இசையை நேரே கேட்டு ரசிக்க முடிந்தது முற்றிலும் நூதன அனுபவம்.

அன்றைய திருமண வரவேற்பில் புல்லாங்குழல் இசைக்கலைஞர் பைரவன் கிளாரினெட் எடுத்து வாசித்தது, எழுபதுகளில் வானொலியில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்த மிக இனிமையான காதல் பாடல்களில் ஒன்று. டி எம் சவுந்திரராஜன், எஸ் ஜானகி குரல்களில், எம் எஸ் வி இசையில் உருவான பஞ்சு அருணாசலத்தின் பாடல் அது.

பாடலின் மிகச் சிறப்பான இடங்கள் ஒன்றுவிடாமல் தனது வாசிப்பில் அம்சமாகக் கொண்டுவந்தார் பைரவன். அதை ஏன் அலைபேசியில் சிறைப்பிடிக்கவில்லை என்று அன்பர்கள் வாட்ஸ் அப்பில் கேட்டிருந்தனர். மணமக்களை வாழ்த்த மேடைக்குச் சென்றிருந்த நேரமது.

வயலின்களின் சிறகடிப்பில் தொடங்குகிறார் மெல்லிசை மன்னர். துள்ளல் தாளக்கட்டில் ஜானகி உள்ளத்தைத் தொடும் ஹம்மிங் எடுக்கிறார். அதில் டி எம் எஸ் மென்மையாக வந்து கலக்கிறார். ‘காதலின் பொன் வீதியில்’ என்று எத்தனை காதல் சொட்டும் குரலில் பல்லவியை இசைக்கிறார் எஸ் ஜானகி. ‘காதலன் பண் பாடினான்’ என்பதில் ‘பாடினான்’ என்பதிலேயே இழைக்கிறார் இன்னும் நெருக்கமான காதலை.

‘பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன்’ என்று விரியும் பல்லவியை, அதே தாள லயத்தில் வேறு மெட்டில் எடுக்கிறார் டி எம் எஸ். பொன் வீதியில் என்பதை இரண்டாம் முறை பாடுகையில் அந்த வீதி மேலும் ஒளிர்கிறது. ‘நான் ஒரு பண் பாடினேன்; என்ற இடத்திலும், ‘பண்ணோடு ஒருத்தி வந்தாள்.. என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்’ என்பதில் அந்த ‘வந்தாளிலும்’ அவரது குரல் இன்னும் நெருக்கமான உணர்வுகளைப் பரவ விடுகிறது. பிறகு பல்லவியை ஜானகி பாடிய மெட்டிலேயே இசைக்கிறார் டி எம் எஸ்.

பல்லவியின் அழகை அந்தத் தாளக்கட்டு மேலும் மெருகேற்றிக் கொடுக்கிறது. பல்லவியிலும் சரணங்களிலும் மிருதங்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் மெல்லிசை மன்னர் என்று தோன்றுகிறது.

முதல் சரணத்தில் விரிவான சங்கதிகளுக்கு இடம் கொடுக்க பாடல் வரிகளை இரண்டிரண்டு முறை பாடகர்கள் இருவரும் பாடுவதற்கான நேரத்தை வழங்க, சரணங்களை நோக்கிய நகர்வை விரைந்து அமைத்துக் கொள்கிறார் மெல்லிசை மன்னர். முதல் சரணத்திற்கு வயலின்களின் வேகத் துடிப்பு. இரண்டாம் சரணத்திற்குப் புல்லாங்குழலின் உயிர்த்துடிப்பும் வயலின் இணைப்பும்.

‘திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக’ என்கிற முதல் சரணத்தில் குயிலாகவே ஒயிலாக ஒலிக்கிறது ஜானகியின் குரல். ‘இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக’ என்கிற வரிகளில் பொங்கும் காதலின்பம் இப்போதும் கேட்க வைத்துக் கொண்டிருக்கிறது பாடலை.

‘இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்’ என்று வந்து இணையும் டி எம் எஸ், அடுத்த வரிகளைக் கிறக்கம் ஊட்டும் வண்ணம் இசைக்கிறார். ‘தேன் கொள்ள வந்தேன் மனம் போல’ என்ற அடியில் கொள்ள முடியாத அளவு காதலைக் கொள்ளை கொள்ளையாக வழங்கும் குரல் அது. ‘என் மனதிலே உன் நினைவுகளே…அதை அள்ளி வந்தேன் உனக்காக’ என்பதில் காதலை எத்தனை ‘அள்ளி’ வழங்கும் குரல் அது!

சரணத்திலிருந்து பல்லவிக்குப் போகும் டி எம் எஸ், ‘பண் பாடினேன்’ என்பதில் எழுப்பும் சங்கதிகள் இன்னும் அபாரமானவை. இரண்டாம் சரணம், ‘விழி ஓரங்களில் சில நேரங்களில்’ என்று டி எம் எஸ் தொடங்க, எஸ் ஜானகி வளர்த்தெடுத்து, டி எம் எஸ் மேலும் தொடுக்க ஜானகி முடிக்க இசையின்பமாக விளைகிறது.

கவியாகும், கவிதைகளில், கலையாகும், அந்தக் கலைகளிலும், பேரின்பம், இன்ப வாசலிலே….என்று சரணத்தின் ஒவ்வோர் அடியின் கடைசி சொற்களை அந்தாதி பாணியில் பஞ்சு அருணாசலம் தொடுத்திருப்பதில் பாடலின் ஒலிக்குறிப்பும், இசைக்குறிப்பும் மேலும் இனிமையாகி விடுகிறது. பாடல் முழுக்க தாளத்தின் சுவை அலாதியானது. மென்மையான ஹம்மிங் உடன் பாடல் நிறைவடையும்போது காற்றில் கலந்துவிடுகிறது காதல்.

‘ஊர் வந்து சேர்ந்தேன் என்றன் உளம் வந்து சேரக் காணேன்’ என்று போகும் சீட்டுக்கவியைப் பள்ளிக்கூட நாட்களில் வித்துவான் சம்பந்த முதலியார் நடத்தியது பட்டுக்கோட்டையிலிருந்து திரும்பியதும் கூட எதிரொலிக்கிறது. பார்த்திபன் நாதஸ்வரத்தில் லயித்திருந்த உள்ளத்தோடு தேடித் தேடிக் கேட்டபடி போய்க்கொண்டிருந்தது பொழுது.

கடந்த வாரத்தில் எதிர்பாராமல் மூத்த பெண்மணி ஒருவரை அவரது இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்திப்பு அது. கணவரை அண்மையில் பறிகொடுத்திருத்த அவரது ஓய்வூதியம் தொடர்பாக அங்கே செல்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவரைத் தொல்லைப் படுத்தாமல் விடைபெறவே விரும்பியும், தற்செயலாக ஒரு தருணத்தில் இழக்க மாட்டாத உரையாடல் வாய்த்தது.

“நீங்கள் சிறந்த பாடகி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், மேடையில் பாடி இருக்கிறீர்களா?” என்று கேட்கவும், நூறு கச்சேரிகளாவது செய்திருப்பேன் என்றார் அவர். யாரிடம் கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் மிகப் பெரிய திறப்பு, தனது இளமைக் காலத்திற்குள் அவர் பயணம் செய்து திரும்பும் கால எந்திரத்தின் விசையை அழுத்திக் கொடுத்தது அந்தக் கேள்வி.

சேலத்தில் இருக்கையில், தஞ்சையைச் சார்ந்த நாயனக்காரர் தனுஷ்கோடி, தற்செயலாக வீட்டுக்கு வந்தவர் ஒரு சிறுமியின் குரலினிமை கேட்டு வியந்து அடுத்த மூன்றாண்டுகள் ஒற்றை நயா பைசா வாங்கிக் கொள்ளாமல் வாய்ப்பாட்டு கற்பித்துச் சென்றிருக்கிறார்.

இலேசாகத் துளிர்த்த கண்ணீர்த் துளியில் புன்னகையும், பெருமையும் ஒளி வீசியது. இளைய மகனை மடியில் வைத்து சங்கீதம் கற்பித்த இசை வாழ்க்கை, மூன்று பெரிய அறுவை சிகிச்சைகளால் நாபிக் கமலத்தில் இருந்து குரலெடுத்து சிரமப்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற மருத்துவ ஆலோசனையின் நிமித்தம் தடைபட்டுப் போனது என்றார்.

இப்போது பாட முடியுமா என்றவுடன் 86 வயதிலும் உடல் உபாதைகளை மீறி இரண்டொரு வரிகளை இசைக்கவும் செய்தார் திருமதி வனஜா. அஞ்சல் ஊழியர்களது போராட்ட நாயகர், எழுத்தாளர் வி என் ராகவன் அவர்களது காரியம் யாவினும் கைகொடுத்த வாழ்க்கை இணையர் அவர்! நம்பிக்கையும், தனக்கு உதவியாக இருப்போர் பற்றிய உள்ளன்பும் பெருகிய குரல் அது.

நேயத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் இசை உன்னதமானது. உள்ளத்தைத் தொடும் இசை அதனால் தான் கண்ணீர் பெருக வைக்கிறது. இசையால் பெருகும் கண்ணீர் உள்ளத்தைப் பளிங்கு போல் துடைத்துக் கொடுக்கிறது. இருளகற்றி வெளிச்சம் பரவ வைக்கிறது !

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




துளைகளற்ற புல்லாங்குழல்…!
***********************************
மொத்தமும் ஊமையாகிய வனத்திலே
புழுக்கள் நிண்டி நெளிந்து
கொழுத்துப்போன
மொத்தக் காட்டில்
அளவெடுத்து
அழகாக்கி
தூர் பார்த்து முட்கள் முறித்து
மெல்ல மெல்ல அடித்து
பதமான தீமூட்டி
நீட்டி மடக்கி
துளை கிழித்து
பட்டை பரத்தி
பக்கங்களில் துளைகளிட்டு
மொத்த இசையும் அறியாத கலைஞனின் கையில்
துளைகளை மையப்படுத்தாமல்
அடைபட்டு கிடக்கிறது வாழ்க்கையெனும் இசை
இப்படி
முடித்து அடுக்கப்பட்ட பல நூறு துளைகளற்ற புல்லாங்குழல்களாய்….!

காடு வேண்டி விண்ணப்பம்…..!
***************************************
காளான்களின் குடிசையில் கையேந்திய சிறு வண்டிற்கு
உணவில்லை என்றுகூறாது
உணவிட
நிதம் செமித்து மென்று தள்ளிய
மொத்த இலைகளின் கூண்டுக்குள்ளே
இளைப்பாறி உருட்டிச் செல்கிறது
பசிபோக்க நேரமின்றி
மழையாயினும் வெயிலாயினும்
நடைமேலே நடைபோடும்
ஓயாத உழைப்பின் மேல்
ஓங்கி அறையாமல்
ஒத்தடம் கொடுக்கிறது
ஒரு துளி மழை
சிதைந்த நிலமெல்லாம்
வேரூன்றி நிற்கிறது
காடு வேண்டி விண்ணப்பத்தில் விதைகளைத் தாங்கி….!

கனா கண்டு எழமுடியவில்லையே…!
*******************************************
வானவில்களில்
வளைந்தாடிய பதுமையின் விரல்களில்
புதுப்புது பிறைகள்…
போத்தென இடை வளைய
ஊடல் குழையும் நேரமிது
யார் எடுத்த மூங்கிலில்
கானம் பிறப்பெடுத்து ஓடுகிறது
ஐம்பொன் செம்பெடுத்து
ஆரவாரமின்றி
அசைந்தாடுகிறது
அவள் புருவம் நிறைந்ததொரு
ஆசை ஆணை
அதில் வலம் வந்து வளைக்கத் தூண்டுகிறது
எனது பேராசை வானை….!

கவிஞர் சே கார்கவி

இசை வாழ்க்கை 73: இசை போல் வந்த உறவு – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 73: இசை போல் வந்த உறவு – எஸ் வி வேணுகோபாலன்



இசை போல் வந்த உறவு
எஸ் வி வேணுகோபாலன்

கடந்த வாரம் புறநகர் ரயிலில் கடற்கரை ரயில் நிலையம் இறங்கப் போகிற நேரத்தில், ஓர் அருமையான இசைப்பாடலின் தொடக்கப் புல்லாங்குழல் இசையை அப்படியே ஓர் அன்பர் தமது குழலில் வாசித்தது கேட்டதுமே தலையைத் திருப்பிப் பார்க்காமலே தெரிந்துவிட்டது அது யாராகத் தான் இருக்க வேண்டும் என்று… மாதக் கணக்கு ஆகிவிட்டது அவரைப் பார்த்து.

சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து திரும்பிப் பார்த்தால் அவரே தான்… “துளசி” என்று காதல் இணையை ஓர் இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் இன்ப அதிர்ச்சியில் இரைந்து விளித்தேன் …அவரும் கண்டுணர்ந்து விட்டார்…

‘பெயரை மறந்துவிட்டேன் சார், உங்களை இன்னார் என்று நினைவிருக்கிறது’ என்று கைகளை அருகே வந்து பற்றிக் கொண்டார். ‘உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது, இப்போது தான் வெளியே வருகிறேன்’ என்றார். இருநூறு ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து அவர் கையில் திணித்து, ‘உள்ளே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் துளசி’ என்றேன். ‘உங்கள் நம்பர் சொல்லுங்கள், இழந்துவிட்டேன்’ என்று சொல்லிக் குறித்துக் கொண்டேன்.

‘கடற்கரை நிலையம் வந்துவிட்டது’ என்று சொன்னேன், ‘எந்த பிளாட்பார்ம்?’ என்று கேட்டார், எட்டிப்பார்த்து, இரண்டாவது என்று சொல்லிவிட்டு, ‘உங்கள் வாசிப்பை இடையே நிறுத்திவிட்டேன், மன்னிக்க முடியாத தவறு, அந்தத் தொடக்க வாசிப்பு எனக்காக, ப்ளீஸ்’ என்றேன். ‘உங்களுக்கு இல்லாமலா !’ என்று தோளில் மாட்டிக்கொண்டிருந்த பைக்குள் கையை வைத்து சரியான குழலை வெளியே எடுத்து வாசித்தார்…’பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடலின் திறப்பை! அருகே இருந்தவர்கள் யாரும் ஓடிப்போய் இறங்க எத்தனிக்காமல் நின்று கேட்டுக் கொண்டிருக்க, ‘போதும் துளசி, இறங்கலாம்’ என்று அவரோடு சேர்ந்து இறங்கினேன், அவருக்கு இனி துணை தேவையில்லை, தனது கம்பு வைத்துத் தட்டிப் பார்த்துத் தனது வழி செல்லத் தொடங்கினார்.

ஆனால், இசை அங்கே நிற்கவில்லை. அதே பெட்டியில் இருந்து இறங்கி என்னைத் தொடர்ந்து வந்த ஓர் இளைஞர் என்னிடம், “சார், ரயில் பயணத்தில் தான் அறிவீர்களா அவரை, உங்கள் நீண்ட கால நண்பரா, அவரைப் பார்த்ததும் ஒரு பரவச உணர்ச்சி உங்களுக்குள் பரவுவதைப் பார்த்து அசந்து போய்விட்டேன்…உங்கள் கண்களை, உடல் மொழியை, அவரது சிலிர்ப்பை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்” என்று ஆங்கிலத்தில் அவர் விவரித்த துடிப்பில் இசை ததும்பிக் கொண்டிருந்தது. ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சக்கரதர் எனும் அந்த இளைஞரை மீண்டும் காண வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ, துளசியை நினைக்கும் போதெல்லாம் இவரது முகமும் நிழலாடும் உள்ளத்தில். அன்பு கொண்டாடிகள் இசை கொண்டாடிகள் அன்றி வேறென்ன…

கண் பார்வையற்ற துளசிக்கு, எனது குரல் உள்ளே பதிவாகி இருக்கிறது. எனது குரலே என் ஆதார் எண் அவருக்கு. ஸ்பரிசத்தை விட ஒரு பயோமெட்ரிக் உண்டா என்ன, இந்த உலகத்தில்! தொடுதலில் மூளை உணர்ந்துவிடுகிறது இன்னார் என்று, அது மற்ற கதவுகளை உடனே திறந்து கொடுத்துவிடுகிறது, புன்னகை அரும்பிவிடுகிறது, விட்ட இடத்திலிருந்து உரையாடல் தொடர ஆரம்பித்துவிடுகிறது.

கேட்புத் திறன் பற்றிய மிக வித்தியாசமான குறுங்கட்டுரை ஒன்று நேற்றிரவு தேடியெடுத்து வாசித்தது, உங்களுக்கும் பகிர்ந்து கொள்ளவேண்டியது.  https://www.evelyn.co.uk/hearing-essay/

காதுகளால் மட்டும் தான் நாம் கேட்கிறோம் என்று குறுக்கிப் பார்க்காதீர்கள் என்பது தான் அதன் அடிநாதம். மூளைக்குச் செய்தி தான் வேண்டும், அதற்கு ஒலி அதிர்வுகள் வந்தடைந்தால் போதும். மேளச் சத்தம் நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா, அப்போது அந்தக் கருவியின் அதிர்வுகளும் பாருங்கள், ஒரு மரம் காற்றில் அசையும் அதிர்வுகள் கவனியுங்கள். அதைப் பார்க்கும்போதே அந்த ஓசை வந்தடைந்துவிட முடியும். ஐம்புலன்களில் மற்ற நான்கு புலன்களும் உறுதுணையாக இருந்தே ஓசையைக் கடத்திக் கொடுக்கின்றன, நாமறியாமல் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்…என்று எழுதிச் செல்பவர் ஒரு தேர்ச்சியான இசையமைப்பாளர்.

ஸ்காட்லாந்தில் பிறந்த அவருக்கு வயது 57. தனது எட்டாம் வயதிலேயே செவித்திறன் வலுவிழந்து, அடுத்த சில ஆண்டுகளில் முற்றாக இழந்தவர். ஆனால், எவ்லின் க்ளென்னி, ‘கேட்புத் திறன் பறிகொடுத்ததால், அதிர்ஷ்டவசமாக கவனிக்கும் ஆற்றல் வளர்த்துக் கொண்டேன், இந்த உலகில் உற்று கவனிக்கும் தன்மையை மனிதர்கள் வளர்த்துக் கொண்டால் எத்தனையோ சச்சரவுகளைத் தீர்த்து விட முடியும்’ என்கிறார்.

Music Life 73: A Relationship Like Music - SV Venugopalan இசை வாழ்க்கை 73: இசை போல் வந்த உறவு - எஸ் வி வேணுகோபாலன்

எவ்லின் க்ளென்னி பெயரை அறிய வைத்ததற்கு எங்கள் மகள் இந்துவுக்கும், என் சி இ ஆர் டி பாட திட்டக் குழுவுக்கும் நன்றி சொல்லவேண்டும். அவளது பள்ளிக்கூட நாட்களில் படித்தறிந்தது. இப்போது க்ளென்னி அவர்களது இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன செய்திகள்.
இசைக்கான கிராமி விருதுகள் இருமுறை பெற்றவர், குறைந்த பட்சம் 100 சர்வதேச விருதுகள் பெற்றிருப்பவர். பியானோ சிறப்பாக வாசித்தவர், பின்னர் தாளக் கருவிகளின் அபார இசைக்கலைஞராக அறியப்படலானார். தான் சொந்தமாகவும், தனித்தும், குழுவினரோடும், புதிதாகவும், ஏற்கெனவே இசைக்கப் பட்டவற்றை மெருகேற்றியுமாக எவ்லின் க்ளென்னி 40 குறுந்தகடுகள் வெளியிட்டிருக்கிறார். உற்றுக் கேளுங்கள் என்பது தான் அவரது மிகப் பெரிய இயக்கமாக இருக்கிறது என்கிறது இணைய தள குறிப்பு.

ஏற்கெனவே பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான OBE (ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர்) அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. லண்டனில் 2012ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியில் க்ளென்னி தலைமை ஏற்று வாசித்தது முக்கியமானது. அதன் காணொளிப் பதிவுகள் வியக்க வைக்கின்றன.

ஏதேனும் நிகழ்ச்சிகளுக்காகத் தன்னை அழைப்போர் யாருக்கும் தனது அறிமுகக் குறிப்புகளில் தனது காது கேளாமை பற்றி எழுதித் தருவதில்லை என்றும், ஆனாலும், ஊடக நிருபர்களது கவனம் அந்தப் புள்ளியிலேயே உறைந்திருக்கிறது என்றும் வேதனையோடு சொல்கிறார் க்ளென்னி.

காலணிகள் அணியாத வெறுங்கால்களோடுதான் அவர் மேடையில் நிற்பார், அவருக்கு அதிர்வுகளைப் பெருமளவு கொண்டு சேர்ப்பவை அந்தக் கால்கள்! எல்லாம் தெரியவந்தாலும், ‘காது கேட்காத உங்களால் எப்படி இசை அமைக்க முடிகிறது?’ என்ற அதே அரதப்பழசான கேள்வியைத் தான் எங்கே போனாலும் துரத்தித் துரத்திக் கேட்கின்றனர் அவரை.

பொறுமையாக எத்தனையோ விளக்கிய பிறகும், இந்தக் கேள்வியிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்த ஒரு செய்தியாளரிடம் வெறுத்துப் போய், “காது கேளாமை பற்றி நீங்கள் அறிய விரும்பினால் ஓர் ஆடியோலஜிஸ்ட் போய்ப் பாருங்கள், நான் இசை உலகத்தைச் சார்ந்தவள்” என்று சொல்லி முடித்துக் கொண்டாராம். அவரது இணைய தளத்தின் பக்கங்கள் எல்லாவற்றிலும், ‘இந்த உலகிற்கு உற்றுக் கேட்கக் கற்பி’ என்ற வாசகம் இருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் பீத்தோவன் அவர்களும் செவித்திறன் பறிகொடுத்தவர் என்றாலும் எண்ணற்ற ரசிகர்களுக்காக இசை தொடுத்துக் கொடுத்து மறைந்தவர்தான். துளசியின் கைகளைப் பற்றும் போது எவ்லின் ஊடாக நாம் பீத்தோவன் தோள்களையும் தழுவிக் கொள்ள முடிகிறது.

ராஜ பார்வையில் கண் பார்வையற்ற கமல்ஹாசன் ஓர் இசைக்கச்சேரியில் வயலின் வாசிக்கும் முக்கியமான காட்சிக்கான இசையமைப்பு அபாரமானது. படத்தில் நாயகி அதற்கு முந்தைய காட்சியில் அவரைத் தவறாகக் கருதியதை நினைத்து நாணுவதும், அந்த இசையில் தன்னைப் பறிகொடுப்பதுமான பின்னணியில் அந்த இசைக்கோவை அப்படியே உள்ளத்தைத் திளைக்கச் செய்து திக்குமுக்காட வைத்துவிடும். ராஜ (முன்) பார்வை என்ற தலைப்பில் இந்தப் படத்திற்கு ஒரு வார இதழில் விமர்சனம் எழுதிய எழுத்தாளர் சுஜாதா, மேற்கத்திய இசைக்கும், கர்நாடக இசைக்குமான தேர்ச்சியான கலவையைப் பிடித்துவிட்டார் ராஜா என்பது போல் குறிப்பிட்டுக் கொண்டாடி எழுதி இருந்தார்.

Music Life 73: A Relationship Like Music - SV Venugopalan இசை வாழ்க்கை 73: இசை போல் வந்த உறவு - எஸ் வி வேணுகோபாலன்

கீ போர்ட், விஜி மேனுவல். வி எஸ் நரசிம்மன் வயலின் வாசிப்பு அது ….. வாசிப்பு அல்ல பொழிவு. பார்வைப் புலனுக்கும், செவிப்புலனுக்கும் உள்ள நெருக்கமான ஒற்றுமையை எவ்லின் க்ளென்னி பேசுவதை இங்கே இசையாகக் கேட்கிறோம். கருவிகளின் அதிர்வுகளை உணர்வுகளின் அதிர்வுகளாக்கி, உள்ளத்தின் அதிர்வுகளாக்கும் இசை.

முதலில் இலேசாக உடலைத் தொட்டுக் கடந்து போகும் குளிர்ந்த காற்று மெல்ல நம்முடலைத் தழுவுகிறது. பின்னர் முடிக்கற்றைகளைப் பறக்க விடுகிறது. இப்போது மேலாடைகள் தங்களைத் தளர்த்திக் கொள்ளப் போராட வைக்கிறது காற்று. பின்னர் காலை வலுவாக ஊன்றி நிற்காவிட்டால் குடை சாய வைக்குமளவு வலுப்பெறுகிறது காற்று. அப்புறமென்ன நம்மையும் அதன் போக்கில் இழுத்துச் செல்லவும், பின்னிருந்து தள்ளிவிடவுமாக இசையின் பன்மைத்துவம் அசர வைக்கிறது. கண்ணுக்குப் புலனாகிறது காற்று, அதிர்வுகளாக! வயல்காட்டில் நிற்கையில் நாற்றுகளின் ஆட்டத்தில் காற்று. கதிர்களின் அதிர்வுகளில் காற்று. காற்றின் இசைக் கச்சேரியில் புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, டிரம்ஸ், கிடார், பியானோ எல்லாம் சேர்ந்து கொள்கின்றன வயலின் பக்கமாக…..வயல் வெளியின் பக்கமாக!

கமல் எத்தனை நுணுக்கமாக அந்த இசையில் தன்னையும் பறிகொடுக்கிறார், மாதவியின் முகத்தில் காதல் படர்வதன் நிறமாற்றம் எப்படி நேர்கிறது என்பதையும் பார்க்க முடியும் அந்த அருமையான காட்சியில்! எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காதது.

ராஜ பார்வையின் அந்தி மழை பொழிகிறது ரசிகர்கள் இதயத்தைக் கொள்ளை கொண்ட பாடல் என்றாலும், காதல் துயரத்தைச் சிந்தும் வயலின் இசையை ஏந்தி வரும் கங்கை அமரனின் பாடல் படத்தின் முக்கியமான ஒன்று. விழியோரத்து….என்று அவர் அந்தப் பாடலை எப்படி விழியில் இருந்து தொடங்கினார் !

படத்தில், இந்தப் பாடல் இடம் பெறும் இடம் கவித்துவமானது. மன உளைச்சலில் இருக்கும் கமல், ரிக்கார்டிங் நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் சரியாக வாசிக்க இயலாமல் திரும்பத் திரும்ப முயன்று தோற்று ஸாரி சொல்லிவிட்டு ஒதுங்கி நிற்க, சக இசைக்கலைஞர் ஒருவர் கையில் எடுக்கவும் சோகத்தை இழைக்கிறது ஓர் ஒற்றை வயலின்….அடுத்த நபர் சரியாக வாசிப்பதில் கமல் எதிர்கொள்ளும் இருப்பு கொள்ளாமை விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

அங்கிருந்து காட்சி, மாதவி வீட்டுக்கு இடம் பெயர, அந்த வயலின் இழைத்த ஏக்கங்களை சசிரேகா அப்படியே சுவீகரித்து எடுத்துக் கொண்டு பல்லவியைத் தொடங்குகிறார், ‘விழியோரத்துக் கனவும் இங்கு கரைந்தோடிடுதே’ என்பதில் மட்டுமே நிறைய செய்திகள். ‘விடியும் என்ற பொழுதில் வந்து இருள் மூடிடுதே’ என்பதில் மட்டுமென்ன இன்னும் ஆயிரம் செய்திகள். ‘கதை போல் வந்த உறவு இடையே இந்தப் பிரிவு’ என்பது சாதாரண விவரிப்பு, ‘இசை கூடிய கவிதை அதன் ஒலி தேய்ந்ததும் ஏனோ’ என்ற இடத்திலும் எத்தனை செய்திகள்…

சசிரேகா முடித்ததும், பல்லவியில் இணைகிறார் கமல். மென்மையாக ஒரு துயரத்தைக் கடத்தும் குரல் அது. பல்லவியை முழுதாகக் கூட அவர் இசைப்பதில்லை… சோக மனநிலையின் பரிதவிப்பு அது. அத்தனை கற்பனையோடு ராஜாவின் இசைக்கோவை.

பல்லவி முடிந்ததும் சட்டென்று இசையை முந்தைய கொண்டாட்ட தருணங்களின் நினைவுக்கு ஏற்ப மாற்றி, அதை அப்படியே வளர்த்துச் சட்டென்று ஓரிடத்தில் ஒற்றை வயலின் இழைப்பில் இப்போதைய சோக கட்டத்திற்கு இலகுவாகக் கைமாற்றிக் கொண்டு வந்துவிடுகிறார் ராஜா. அதன் உருக்கமான வளைவுப் பாதையில் எதிரே வரும் வாகனத்திற்கு இடம்கொடுத்து நிற்பது போல் வயலின் நிற்க, கமல் அருமையான ஹம்மிங் எடுக்கிறார்….அது யாருமற்ற வெளியில் தொலைவில் கேட்கும் பெருமூச்சாக அலைந்தலைந்து எதிரொலிக்க, சசிரேகா வேறொரு வெளியில் நாயகியின் தனிமை பெருமூச்சை ஹம்மிங் மூலம் வெளிப்படுத்த, பாடலின் ஒரே சரணத்தை கமல் எடுக்கிறார்: ‘ஒரு ஓவியக் கவிதை கண்ணீரினில் நனையும் ஒரு காவியக் கனவைத் தினமும் மனம் நினைக்கும்’

உள்ளத்தின் அந்தப் பாடுகளை தபேலா ஆர்ப்பாட்டமின்றி அருமையாகத் தாங்கி ஒலிக்கிறது. ‘இரு காதலர் நடத்தும் தனிமைப் பயணம் ஒரு பாதையில் இருந்தும் அதில் பிரிவென்பதும் ஏனோ’ என்று சசிரேகா சரணத்தை உருக்கமாக முடித்து, அப்படியே பல்லவிக்குப் போய்ப் பாடலை நிறைவு செய்கிறார்.

உலகத்தை உற்றுக் கேட்கக் கற்பிக்க வேண்டும் என்று எவ்லின் க்ளென்னி பல ஆண்டுகளாக முன்னெடுக்கும் அறைகூவல், சமூகத்தில் ஏற்படும் அதிர்வுகளை மௌனமாகக் கடந்து செல்லும் எல்லோருக்குமான அழைப்பு. அலைபேசியில் மட்டுமல்ல, குடும்பத்தில் பணியிடத்தில் பொது வெளியில் கூட எத்தனையோ கவன ஈர்ப்புச் செய்திகள், அழைப்புகள் மிஸ்ட் கால் ஆக நழுவிப் போய்விடுகின்றன. அல்லது அரைகுறையாகக் கேட்டுத் தவறான எதிர்வினைகள் நேர்கின்றன.

அன்போடு அணுகும் உள்ளங்கள் பேசிக் கொள்ளாவிட்டாலும் பரஸ்பரம் அதிர்வுகள் பரிமாறிக் கொள்ளவும், புன்னகை பூக்கவும் சாத்தியமாகிறது. இசை, சமூகத்தின் கூட்டு உளவியலுக்கான அதிர்வுகளை அசாத்தியமாகப் பரவ விடுகிறது. உள்ளுக்குள் தவிக்கும் ஆதங்கப் பள்ளங்களை இசை நதி நிரப்பிக் கண்கள் வழியே ததும்பி வெளியேறி ஆற்றுப் படுத்தவும் செய்துவிடுகிறது. உற்றுக் கேட்கும் ஒவ்வொரு முறையும் இசை, எத்தனையோ புதிய செய்திகள் சொல்லக் காத்திருக்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

ரா.சிவக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்

ரா.சிவக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்




1. மூங்கில் காடே
புல்லாங்குழலாகியது
வண்டுகளின் ரீங்காரம்!

2. கொழுந்து விட்டெறிந்த
வயிற்றுத்தீயை அணைத்தது
கைப்பிடிச்சோறு!.

3. கொட்டிய மழையிலும்
அழியாத வண்ணங்கள்
வானவில்!.

4. பொதுத்தேர்வு முடிவுகள்
தூக்குமேடையாகின
மின்விசிறிகள்!.

5. விலை போகாத பூக்கள்
வாடியது
வயிறு!.

6. எவ்வளவு உடைத்தாலும்
உண்மையை மட்டுமே சொல்கிறது
கண்ணாடி!.

7. குளத்தில் தூண்டில் வீசியதும்
மாட்டியது
நெகிழி!.

8. விழிநீரின் சுமை தாங்காமல்
கனத்தது
இதயம்!.

9. ஒட்டாத பக்கங்களுக்கும்
ஒட்டிய வயிறும் காத்திருந்தன
உலைக்கு!.

10. நிலத்தை விற்றதும்
வாசலில்
கடன்காரன்!.

– ரா.சிவக்குமார்
சென்னை
9884824086

Haiku Kavithaigal By Karkavi ஹைக்கூ கவிதைகள் - கவிஞர் சே கார்கவி

ஹைக்கூ கவிதைகள் – கார்கவி

எட்டிப்பார்க்கும் குழந்தை
எட்டுக்கட்டையை மிஞ்சுகிறது
தாலாட்டு.

கட்டிய புடவையில்
கையசைக்கும்
இளம் புல்லாங்குழல்

உயர்ந்த பனைமரங்கள்
இறக்கியும் தீரவில்லை
ஒற்றயடி பயணபோதை.

நீளமான நடைபாதை
உச்சி வெயிலில் உடன்வரும்
கூன் விழுந்த நிழல்.

புத்தன் பேரனின்
புதிய துண்டிலில் சிக்கியது
நிலா.

திரைக்குள் படர்ந்த இருள்
வேகமாக ஒளியூட்டுகிறது
மின்னிமினிப்பூச்சி.

ஆளில்லாத வாகனம்
அடைக்கப்பட்ட நெகிழியில்
ஐந்தறிவின் தாகம்.

தனிமையில் பறவை
பொழுது சாயும் நேரத்தில்
நிழலோடு உறவாடும் இருள்.

எடுத்தெறிந்த கல்லில்
எத்தனை காயங்கள்
குளத்தில் அலைகள்.

மௌனம்
மொத்தமாக சொல்லிவிடுகிறது
கண்கள்