The story of the lying man (பொய் மனிதனின் கதை 4) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 4 – ஜா. மாதவராஜ்



“அம்பு போல் நேராக செல்கிறது உண்மை.
பாம்பு போல் நெளிந்து நெளிந்து செல்கிறது பொய்” – சுசி காசிம்

“அவர்கள் 60 பேரைக் கொன்றார்களா,  இல்லையா” என்று மோடி மேடையிலிருந்து கேட்கிறார்.

“ஆம், கொன்றார்கள்” என்கிறது கீழே நின்றிருக்கும் கூட்டம்.

“நாம் அவர்களைக் கொன்றோமா?” அடுத்த கேள்வி. 

“இல்லை” என பெரும் சத்தம்.

“நாம் அவர்கள் கடைகளுக்குத் தீ வைத்தோமா?”. 

“இல்லை”. 

“நாம் யாரையாவது கற்பழித்தோமா?”. 

“இல்லை”. 

“ஆனால் குஜராத்தின் எதிரிகள் குஜராத்தே தீப்பிடித்து எரிவதாகச் சொல்கிறார்கள்” என்று முடிக்கவும் கூட்டம் கோபம் கொண்டு கத்துகிறது.

“நாம் தீவீரவாதிகளா” என்று கேள்வி. 

“இல்லை” என கொந்தளிக்கிறது கூட்டம்.

“நாம் தீவீரவாதிகளானால்…” என்று நிறுத்தி கூட்டத்தைப் பார்க்கிறார் மோடி. நிதானமாய். சட்டென்று உச்சஸ்தாயில் அதி உக்கிரத்துடன்  “பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இருக்காது” என்று முடிக்கிறார். கூட்டம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிக்கிறது.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலை ஒட்டி மோடியின் இந்த வெறியேற்றும் பொதுக்கூட்டப் பேச்சினை அப்படியே இயக்குனர் ராகேஷ் சர்மா அவரது ‘இறுதி தீர்வு” (Final Solution)  என்னும் ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார், 

மோடி குறிப்பிட்ட ‘நாம்’ இங்கே இந்துக்களின் குறியீடாகவும்,, ‘பாகிஸ்தான்’ என்பதை ’மூஸ்லீம்களின் குறியீடாகவும் பகுத்துப் பார்க்க ஆழமான சமூக அரசியல் ஞானமெல்லாம் தேவையில்லை. இந்தியாவை அப்படி அவர்கள் பழக்கி வைத்திருக்கிறார்கள்.

2002 பிப்ரவரி 27ம் தேதி  காலையில் கோத்ராவில்  சபர்மதி ரெயிலில் ஆறாவது கோச் எரிக்கப்பட்டதில், அயோத்திக்கு சென்று திரும்பி வந்த கரசேவகர்களில் 59 பேர் உடல் கருகி இறந்து விட்டதாக எங்கும் காட்டுத் தீயாய் செய்திகள் பரவின. நாடு முழுவதும் பதற்றம் தொற்றியது. கோத்ரா மாவட்ட கலெக்டர், “இது ஒரு விபத்து. திட்டமிட்ட சதியல்ல” என்றே முதலில் ஊடகங்களிடம் சொல்லி இருக்கிறார். அன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஆகாஷவாணியில் முதலமைச்சராக இருந்த மோடி, இந்த கொடிய சம்பவத்திற்கு பின்னால் ஐ.எஸ்.ஐயின் சதி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே  ஐ.எஸ்.ஐ என்றும் பாகிஸ்தான் என்றுமே அவர் கூறி வந்தார். 

இது போன்ற பேச்சுக்களினால் ஏற்பட்ட விளைவுகளையும் அதே ஆவணப்படத்தில் காணலாம். 

வெளிச்சம் குறைந்த டிசம்பர் 15, 2002 இரவு வேளையில், பாரதீய ஜனதா கட்சியினரும், விஸ்வ ஹிந்து பரிஷத்துக்காரர்களும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற்றதை ஆரவாரித்துக்  கொண்டாடுகிறார்கள். வாகனங்கள் அலறும் சத்தங்களின் நடுவே நின்று தலையில் காவித்துணி கட்டிய ஒருவன் “பி.ஜே.பியின் வெற்றி எனது வெற்றி” என்கிறான். பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன் “கடவுளுக்கு நன்றி… முஸ்லீம் தாய்களை புணருங்கள்” என்கிறான்.

மோடியின் வார்த்தைகளையும், அந்த சிறுவனிடம் வெளிப்பட்ட வார்த்தைகளையும் சேர்த்துப் பார்த்தால் குஜராத் வன்முறைகளின் ஊற்றுக்கண்ணை அறிய முடியும். 60 பேரைக் கொன்றார்கள் என கோத்ரா ரயில் எரிப்பை, ஒட்டு மொத்த முஸ்லீம் மக்கள் மீதான இந்துக்களின் வெறுப்பாகவும், ஆத்திரமாகவும், வன்மமாகவும் முன்னிறுத்தியது யார் என்பது தெரியும். 

ரெயில் பெட்டியில் கருகிய கரசேவகர்களின் உடல்களை சட்ட விரோதமாக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான ஜெய்தீப் படேல் வசம் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போனவர்களின் உடல்களோடு ஊர்வலமாய் சென்று  பெரும் கூட்டமாக கலந்து கொண்ட இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கலவரங்களும், வன்முறைகளும் வெடித்தது. முஸ்லீம் மக்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். 

மனிதகுலம் அதிர்ச்சியோடு பார்த்த காட்சிகளும் நிகழ்வுகளும் தேசம் குறித்த நினைவுகளில் உறைந்தே இருக்கின்றன. கருகிய உடல்களும், வெட்டப்பட்ட மனித உறுப்புகளும், வாட்களின் முன்பு கதறி கையெடுத்துக் கும்பிட்ட கைகளும், வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் அலறல்களும் நிறைந்த பயங்கரமான நாட்கள் அவை.

2002 பிப்ரவரி 28ம் தேதியும் அப்படியொரு நாள்தான். குல்பர்க் சொஸைசிட்டியில் இந்து மத வெறிக் கும்பலால் முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜாஃப்ரியும் 37 பேரும் வெறிகொண்ட இந்துத்துவ கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இறப்பதற்கு முன்பு காவல்துறைக்கும் முதலமைச்சர் மோடிக்கும் மாறி மாறி தங்களைக் காப்பாற்றுவதற்கு ஜாஃப்ரி கதறி போன் செய்திருக்கிறார். எந்த பதிலும் இல்லை. பாதுகாப்பும் கிடைக்கவில்லை. ஜாஃப்ரியின் துணைவியார் ஜாகியா தொடுத்த வழக்கில் மோடியும் முக்கிய குற்றவாளியாய் கருதப்பட்டு இருந்தார். 

வழக்கின் உண்மைகளை அறிய சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு (Special Investigation Team – SIT ) அமைக்கப்பட்டது. குஜராத் முதலமைச்சராக அதிகாரத்தில் மோடி இருந்த காலங்களில்தான் சிறப்பு புலனாய்வுக் குழுவும் செயல்பட்டது. அதில் இருந்த முரண்பாடுகள், குளறுபடிகள், மேலோட்டமான விசாரணை, காலதாமதம் எல்லாம் பெருங்கதை. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்திய வர்மா கமிஷனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைகளுக்கு பொறுப்பானவராக சுட்டிக்காட்டப்பட்ட போலீஸ் அதிகாரியும், அதனால் தமிழ்நாடு அரசின் துறை ரீதியான நடவடிக்கைகளால் வெகு காலம் பதவி உயர்வு பெற முடியாமல் போனவரும், வாஜ்பாய் அரசினால் புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டு சி.பி.ஐ டைரக்டராக ஆனவருமான ஆர்.கே.ராகவன்தான் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது ஒரு கிளைக்கதை.

கோத்ரா சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் கழித்து சிறப்பு புலனாய்வுக்குழு 2010ம் ஆண்டு மோடியிடம் மொத்தம் 71 கேள்விகள் கேட்டனர். மோடியின் பதில்களில் அவர் எத்தகைய மனிதர் என்பது புலப்பட்டது.

SIT: கோத்ரா சம்பவத்தை முன்கூட்டியே திட்டமிட்டது என்றும், பாகிஸ்தான் சதி அதில் இருப்பதாகவும் அறிவித்தீர்களா? அப்படியென்றால் அதற்கு ஆதாரமுண்டா?

மோடி : நான் அப்படி எந்த வார்த்தைகளையும் சட்டசபையில் சொல்லவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னிடம் அதுகுறித்து சில கேள்விகள் கேட்டபோது, விசாரணை முடிவு தெரியாமல் எந்த முடிவுக்கும் வர முடியாது என தெரிவித்திருந்தேன் 

SIT-ன் கேள்விக்கு பதிலாய்ச் சொன்ன மோடியின் வார்த்தைகளுக்கும், இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பொதுக்கூட்டத்தில் வெளிப்பட்ட மோடியின் வார்த்தைகளுக்கும் இடையே ஒளிந்திருந்தது பொய். 

தொடர்ந்த கேள்விகளிலும் மோடியின் மழுப்பலான பதில்களிலும் பல பொய்கள் நிறைந்திருந்தன.

சிறப்பு புலனாய்வுக் குழு: 27.02.2002 அன்று கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் கோச் எரிக்கப்பட்டது எப்போது உங்களுக்குத் தெரியும்?

மோடி: 27.2.2002 அன்று காலை ஒன்பது மணி வாக்கில் அடிஷனல் சீப் செக்ரட்டரி  திரு. அசோக் நாராயணன் தகவல் தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வுக் குழு: உடனடியாக உங்கள் எதிர்வினை என்னவாக  இருந்தது? அந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?

மோடி: உள்ளாட்சித் துறை அமைச்சர் கோர்தான் ஜோடாஃபியா, அடிஷனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினேன். சட்டசபையில் பிரச்சினையாக எழும் என்பதால் அந்த சம்பவம் குறித்த உண்மைகளை கேட்டறிந்தேன். அந்த ரெயிலின் மற்ற பிரயாணிகளுக்கு மேலும் தாமதம் ஏற்பட்டால் பதற்றம் அதிகரிக்கும் என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்தேன். கோத்ரா ஒரு பதற்றம் மிக்க பகுதி என்பதால், அங்கு ஊரடங்கு உட்பட நடவடிக்கைகள் எடுக்கவும், தேவைப்பட்டால் அந்த பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும் சொன்னேன். 

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பந்தமாக மோடி தகவல் அறிந்தது காலை 9 மணி. மேற்கண்ட துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து பேசியது காலை 10.30 மணி அளவில். அதற்கு முன்பே குஜராத் முதலமைச்சர் மோடியின் தனி உதவியாளருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேலுக்கும் இடையே  9.39க்கும் 9.41க்கும் இடையே இரண்டு தடவை தொலைபேசி அழைப்புகள் பதிவாகி இருந்தன. அந்த உண்மையை வெளிக்கொண்டு வருவதில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தொடர்ந்த கேள்விகளில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

சிறப்பு புலனாய்வுக் குழு: விஸ்வஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேல் உங்களுக்குத் தெரியுமா?  அவர் உங்களை கோத்ராவில் சந்தித்து, இறந்து போனவர்களை அகமதாபாத்திற்கு கொண்டு செல்லும் போது தானும் உடன் செல்வதற்கு அனுமதி கேட்டாரா?

மோடி: விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப்பை எனக்குத் தெரியும். அவரை கோத்ராவில் சந்தித்தது ஞாபகமில்லை. இறந்தவர்களின் உடலை அகமதாபாத்திற்கு கொண்டு செல்வது குறித்த வழிமுறைகளை தீர்மானித்தது மாவட்ட நிர்வாகம். எனக்கு அது குறித்த விபரங்கள் தெரியவில்லை.

”ஞாபகமில்லை” என மோடி  உண்மைகளை சாதாரணமாக கடந்தார்.

அடுத்தது  தொடர் கலவரங்களுக்கு வித்திட்ட இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள். கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பில் இறந்த கரசேவகர்களுக்கு அகமதாபாத்தில்  நடந்த இறுதிச் சடங்கில் பெரும் கூட்டம் கலந்து கொண்ட காட்சியை ரெய்ட்டர் செய்தி நிறுவனமும், சில இந்துத்துவா அமைப்புகளின் இணைய தளங்களிலும்  பகிரங்கமாக வெளியிட்டு இருந்தன. 

காவல்துறை கண்ட்ரோல் ரூமில் (Police Control Room  – PCR) பதிவான தகவல்களில் பிப்ரவரி 28 காலை 11.58 மணிக்கு ஜந்தநகரிலிருந்து ஹட்கேஷ்வர் மயானத்திற்கு  10 உடல்கள் எடுக்கப்பட்டு ஐயாயிரத்திலிருந்து ஆறாயிரம் பேரோடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்பது பதிவாகி இருந்து. 

Concerned Citizen Tribunal அறிக்கையின் 132ம் பக்கத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டு இருந்தது: ”கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டியில் இறந்த பயணிகளின் உடல்கள் சாலை வழியாக அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனைக்கு குதிரை வண்டியில் கொண்டு செல்லப்பட்டன. குதிரை வண்டிகளில் ராம சேவகர்கள் நிறைந்து இருந்தனர். இந்த செய்தியை ஒளிபரப்ப அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் பயன்படுத்தப்பட்டது மற்றும் உள்ளூர் ஆகாஷ்வாணி வானொலி நிலையம் அகமதாபாத்தில் குதிரை வண்டிகள் புறப்படும் நேரத்தை அறிவித்தது. இறந்த உடல்கள் சிவில் மருத்துவமனையை அடைந்தபோது, நாங்கள் பழிக்குப் பழி வாங்குவோம்” போன்ற வெறித்தனமான கோஷங்களை ராம சேவகர்கள் எழுப்பினர். அதிக மக்கள் அங்கு கூடியிருந்தனர்.”

இவ்வாறு வெறியூட்டப்பட்ட, கலவரம் தூண்டப்பட்ட நிகழ்வுகள் சம்பந்தமாகவும் மோடியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

சிறப்பு புலனாய்வுக் குழு: கோத்ரா சம்பவத்தில் இறந்த ராமசேவகர்கள் மற்றும் வேறு சிலரும் அகமதாபாத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனரா?

மோடி: கோத்ராவில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பதற்றம் அதிகரிக்க விடக்கூடாது என்பதில் அரசு கவனமாய் இருந்தது.  எனக்கு கிடைத்த தகவலின்படி காவல்துறையினர் இதில் முனைப்புடன் செயல்பட்டனர். இறந்தவர்களின் உடலை வாகனங்களில் எடுத்துச் செல்ல உறவினர்கள் சிலருக்கு வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  ஒத்துழைத்தார்கள். எந்த அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாக நடந்தது. அடையாளம் காண முடியாத உடல்களும், சட்ட ரீதியான விதிகளின்படி  அரசு ஆஸ்பத்திரியிலிருந்து 200  மீட்டர் தொலைவில் தகனம் செய்யப்பட்டன. எனவே இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. 

கிடைத்த ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு கேள்விகளை எழுப்பி இருக்க முடியும். உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் SIT கவனம் செலுத்தவில்லை என்னும் விமர்சனங்கள் மட்டுமே மிச்சமாகிப் போயின. இது போல கலவரங்கள் குறித்து வெளிவர வேண்டிய பல உண்மைகள் காணாமல் போயின. 

2013ல் வெளியான சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் மோடி அப்பழுக்கற்றவராய் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து நாட்டின் பிரதம வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டார். வெற்றி பெற்றார். இந்திய அரசியலில் பாசிசப் போக்கு அதிகாரத்தை நோக்கி பாய முடிந்த சம்பவமாக ’கோத்ராவில் சபர்மதி ரயில் எரிக்கப்பட்ட’ தருணம் அமைந்து விட்டது.

இவ்வளவுக்கும் மூல காரணமாக இருக்கும் – சபர்மதி ரயிலை கோத்ராவில் எரித்தது யார்? எப்படி எரித்தார்கள்? அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனரா? என்ன குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன? அவை நிருபீக்கப்பட்தா? தண்டனை வழங்கப்பட்டனரா?

அதுகுறித்த செய்திகள் முக்கியத்துவம் அளிக்கப்படாமலும் கவனம் பெறாமலுமே இருக்கின்றன. 

ரெயில் பெட்டி எரிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 31 பேரில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையிட்டில் அந்த 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூட  ரஃபீக் ஹூசைன் பதுக் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

மிகப் பெரும் வன்முறைகளுக்கு வித்திட்ட  அந்த சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் 6வது பெட்டியை யாரெல்லாம் எரித்தார்கள். எப்படி எரித்தார்கள் என்பது முழுமையாக தெரியவில்லை. ரெயிலின் உள்ளிருந்துதான் தீப்பிடித்திருக்க வேண்டும், வெளியிலிருந்து தீப்படிக்க சாத்தியமில்லை என்ற ஆய்வு உண்மைகளும் இருக்கின்றன. ஜஸ்டிஸ் பானர்ஜி  கமிட்டி அறிக்கையில், “கோத்ரா சம்பவம் சதி அல்ல, விபத்து“ என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவம் இன்று வரை மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது.

மோடியால் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்ட ’சதி’ இன்னமும் நிரூபிக்கப்படமாலேயே இருக்கிறது.

அவர் குஜராத்தின் 14 வது முதலமைச்சராக  12 ஆண்டுகள் இருந்துவிட்டு, இந்தியாவின் 14வது பிரதம மந்திரியாக ஏழு வருடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்

The story of the lying man (பொய் மனிதனின் கதை 3) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்



“உண்மை மௌனத்தால் நிரப்பப்படுமானால், அந்த அமைதியும் பொய்யே!”
– யெவ்டுஷெங்கோ

”வதோராவில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவில் அவர் என்னை தனது மனைவியாக குறிப்பிட்டு இருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. அவர் என்னை நினைவில் வைத்திருக்கிறார்.” என்று பா.ஜ.கவின் பிரதம வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட நரேந்திர மோடியின் மனைவியாகிய யசோதாபென் பத்திரிகையாளர்களிடையே 2014ம் ஆண்டு மே 24ம் தேதி சந்தோஷப்பட்டார்.

வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயராக யசோதாபென் என்று குறிப்பிட்டதைத் தவிர, நரேந்திர மோடி என்னும் ஆண் மகன் தன் திருமணம் குறித்தோ, தன் மனைவி குறித்தோ வேறு ஒரு வார்த்தையும் வேறு எங்கும் எப்போதும் உதிர்த்ததில்லை. .

யசோதாபென் என்னும் பெயரை நரேந்திர மோடியின் பேனா எழுதிய அந்த ஒரே ஒரு கணத்திற்கு பின்னணியாக சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த அதிகார வேட்கை இருந்தது. இந்திய நாட்டின் அரசியல் இருந்தது. ராஜாவின் வெற்றிக்கு ஆட்டத்தின் துவக்கத்திலேயே பலி கொடுக்கப்பட்ட ஒரு பகடைக்காயின் கதை அது. பொய்யாய்ப் போன ஒரு பெண்ணின் கதை அது.

மோடிக்கு திருமணம் நடந்து 25 ஆண்டுகள் கழித்துத்தான் மோடி திருமணமானவர் என்னும் தகவலே வெளியில் வந்தது. அள்ள அள்ளக் குறையாத மர்மங்களின் மனிதர் அவர்.

பத்திரிகையாளர் வகீல் என்பவர் 1993ல் யசோதாபென்னை நேரில் சந்தித்து குஜராத்தின் அரசியல் பத்திரிகையான அபியானில் எழுதி இருந்தார். அப்போது குஜராத் அரசியலில் செல்வாக்கு பெற்ற கேசுபாய் பட்டேலுக்கு பக்கபலமாக மோடி இருந்தார். கட்சி மட்டத்தில் அறியப்பட்டவராய் இருந்தும், மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு வெளிச்சம் பெறாதவர். எனவே அந்த செய்தி, முக்கியமற்ற ஒரு மனிதரின் தனிப்பட்ட விஷயமாய் கரைந்து போயிருக்க வேண்டும். ஆனால் அப்போதே ஆர்.எஸ்,எஸ்ஸும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தனக்கு கண்டனங்கள் தெரிவித்ததாக வகீல் குறிப்பிடுகிறார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மோடியின் திருமணம் குறித்து ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தது என்கிறார் அவர்.

2000ம் ஆண்டில் குஜராத் புஜ்ஜில் ஏற்பட்ட பூகம்பத்தையொட்டி, நிவாரணப் பணிகளில் கேசுபாய் படேலின் அரசு மக்களின் நம்பிக்கை இழந்து, வெறுப்பை சம்பாதித்தது, 2001ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிந்துரையின் பேரில் அப்போது நாட்டின் பிரதம மந்திரியாய் இருந்த வாஜ்பாயால் குஜராத் அரசியலில் ஒரு புதிய முகமாக நரேந்திரமோடி களம் இறக்கப்பட்டார். அரசியல் எதிரிகளான கேசுபாய் பட்டேல் சங்கர்சிங் வகேலா இருவருக்கும் மோடி பொது எதிரியாகிறார்.

மோடிக்கு மாநில அளவில் கட்சியில் பெரிய ஆதரவு அப்போது இருக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே முதலமைச்சரான மோடி ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தலில் நின்று ஜெயிப்பதே பெரும் சிரமமாய் இருந்தது. இந்த நேரத்தில்தான், அயோத்திப் பிரச்சினையின் பின்னணியோடு கோத்ரா ரயில் சம்பவம் உருவானது. அதையொட்டி முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் குஜராத்தில் திட்டமிடப்பட்டு அரங்கேறின. நிகழ்த்தப்பட்ட வன்முறைகளால் தேசமே பதறியது. உலக நாடுகள் அதிர்ந்து கண்டனக்குரல்கள் எழுப்பின. வெறிபிடித்த இந்துத்துவா சக்திகள் அனைத்தும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்க, பா.ஜ.கவில் மோடியின் அரசியல் எதிரிகள் அனைவரின் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின. மோடியின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்த இடம் அதுதான். ஒன்றிலிருந்து ஒன்றாய் ஏற்படும் விளைவுகளிலிருந்து வரலாற்றில் தனிநபர் பாத்திரங்களை அறிய முடிகிறது.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகு 2003லிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில்தான் மோடியின் மனைவி வசிப்பதாக, முணுமுணுத்தாலும், மூர்க்கத்தனமான அதிகாரத்தின் மீதான பயம் உரக்க பேச விடாமல் செய்திருக்க வேண்டும். 2002 மற்றும் 2007 சட்டசபை தேர்தல்களிலும் அவர் வேட்பு மனுவில், திருமணம் பற்றிய விபரங்களை குறிப்பிடாமல் இருந்தார்.

வகீலுக்குப் பிறகு பதினாறு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் வந்தார். உண்மையைப் போட்டு சத்தமாய் உடைத்தார்.

”மிகச் சாதாரணமான புடவை, பொருத்தமற்ற ரவிக்கை அணிந்து இருந்தார். லேசாக குனிந்த முகம் சுருக்கம் கொண்டிருந்தது. வாழ்வின் கஷ்டமான நேரங்களைப் பார்த்திருந்தன கைகள். முடியை இறுக்கமாக பின்னுக்கு இழுத்து கட்டியிருந்ததால் ஒரு கடுமையான தோற்றம் ஏற்பட்டிருந்தது.. செருப்பு அணிந்த கால்களில் வெடிப்புகள் நிறைந்து அழுக்காயிருந்தது. குஜராத்தில் ரஜோசனா கிராமத்தின் ஒரு பெண்ணாக அவர் இருந்தார்.”

இப்படித்தான் விவரிக்கிறார் பத்திரிகையாளர் ஹைமா தேஷ்பாண்டே. 2009ம் ஆண்டு மே மாதத்தில் ரஜோசனா கிராமத்துப் பள்ளிக்குச் சென்று அங்கு ஒன்றாம் வகுப்பு டீச்சராய் இருந்த யசோதாபென்னை, அவரது 57வது வயதில் நேரில் சந்தித்திருக்கிறார் ஹைமா. அப்போது குஜராத்தின் முதலமைச்சராய் இருந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடிக்கும் யசோதாபென்னுக்கும் இந்து மதச் சடங்கின்படி திருமணம் நடந்து நாற்பத்தோரு வருடங்கள் ஆகி இருந்தது.

ஹைமா தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் ஒரு குழந்தையைப் போல உற்சாகமாகியிருக்கிறார் யசோதாபென். முகமெல்லாம் அப்படி சிரித்திருக்கிறது. தன்னைப் பற்றிச் சொல்லவும் விரும்பி இருக்கிறார். பள்ளியின் தலைமையாசிரியர் பிரவீன்குமார் வியாஸ் குறுக்கிட்டு, அவர் பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டு இருப்பதை நினைவுபடுத்தி இருக்கிறார். ”பள்ளி முடிந்ததும் பேசலாம். இப்போது வகுப்பறைக்குச் செல்லுங்கள்’ என உத்தரவிட்டிருக்கிறார்.

“இடைவெளி நேரத்தில் பேசுகிறேனே… கொஞ்ச நேரம்தான்” என்று சொல்லிப் பார்த்திருக்கிறார் யசோதாபென். தலைமையாசிரியர் அசையவில்லை. வேறு வழியின்றி பணிவுடன் அந்த இடத்தை விட்டு சென்றவர் சட்டென திரும்பி வந்து, “நான் என் கணவருக்கு எதிராக எதையும் சொல்ல மாட்டேன். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த வேலைதான் என் வாழ்க்கை. பயமாய் இருக்கிறது “ என்று சொல்லி அகன்றிருக்கிறார்.

உடனடியாக தலைமையாசிரியர் யாரிடமோ செல்போனில் பேசி இருக்கிறார். அடுத்து யசோதா பென்னின் வகுப்பறைக்குச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் யசோதாபென் முற்றிலும் வேறொருவராக தென்பட்டிருக்கிறார். முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லாமல் போயிருக்கிறது. பதட்டமாக காணப்பட்டிருக்கிறார். திரும்ப ஹைமா சென்று அவரை சந்திக்க முயற்சித்தபோது பேசுவதை புறக்கணித்து, என்னை தனியாக இருக்க விடுங்கள் என சத்தம் போட்டிருக்கிறார்.

தொடர்ந்து சில ஆண்கள் அங்கு வாகனங்களில் வந்திருக்கிறார்கள். தலைமையாசிரியரின் அறைக்குள் நேரடியாக சென்றிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் வெளியேறி இருக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் வெளியே காத்திருந்த ஆட்டோவில் ஓடிச்சென்று ஏறி முகத்தை கைகளால் பொத்தியவாறு 20 கி.மீ தள்ளி இருக்கும் தன் சகோதரர் வீட்டிற்கு அன்றைக்கு போயிருக்கிறார் யசோதாபென். சில நிமிடங்களில் அரசு பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு இளைஞன் வந்து உடனடியாக இங்கிருந்து சென்று விடுங்கள் என ஹைமா தேஷ்பாண்டேவிடம் சொல்லி இருக்கிறான். அவரும், அவரது குழுவினரும் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாகி இருக்கிறது.

அந்த கிராமத்து மக்களிடம் ஹைமா விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதே ஊரில் நூறு சதுர அடிக்கும் குறைவான, தகர கொட்டாய் வேய்ந்த ஒரு சிறு வீட்டில்தான் யசோதா பென் வாழ்ந்து வந்திருக்கிறார். கழிப்பிடம் கூட கிடையாது. ஒத்தாசைக்குக் கூட யாரும் கிடையாது. அவரால் வேறொரு இடத்தில் இதை விட சௌகரியமாகக் கூட வாழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. ஆனால் ஏன் அந்த சிறிய ஊரில் அவதிப்பட வேண்டும் என்பது பிடிபடவில்லை. மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்தான் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மனைவி என அங்கு பெரும்பாலோருக்குத் தெரிந்திருந்தது.

ஹைமா தேஷ்பாண்டே மூலம் பத்திரிகைகளில் இந்த தகவல்கள் வந்த பின்னரும் கூட 2012ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி வேட்பு மனுவில் அவரது திருமணம் பற்றி குறிப்பிடவில்லை. “நான் தனி ஆள். எனக்கு குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்? என் உடல் உயிர் எல்லாமே மக்களுக்கு சேவகம் செய்யத்தான்!” என தொடர்ந்து கூட்டங்களில் இரண்டு கைகளையும் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார்.

People Representation Act ஐ மீறியதற்காக மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 2013ம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.. இதில் தேர்தல் கமிஷனே முடிவெடுக்க வேண்டும் எனச் சொன்னது நீதிமன்றம். தேர்தல் கமிஷனும் பழைய கதைகளை எல்லாம் ஆராய விரும்பாமல், “இனி தேர்தலில் நிற்பவர்கள் வேட்பு மனுவில் எதையும் நிரப்பாமல் விடக் கூடாது, கேட்கப்பட்ட அனைத்து விபரங்களும் தர வேண்டும்” என்று பொதுவான ஒரு விதியை எல்லோருக்குமாக அறிவித்து தன் நியாயத்தை முடித்துக் கொண்டது..

இந்த நேரத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.. பாஜகவின் பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.

நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் சத்திய சோதனை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் 1968ம் ஆண்டு நடந்த திருமணத்தை 46 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி 2014ம் ஆண்டில் உலகத்தின் முன்னே ஒப்புக் கொண்டார்.

பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து விவாதங்களும், மோடியின் மீது கண்டனங்களும் எழுந்தன. “BJP ‘bachelor’ Modi admits marriage” என பிபிசி மானபங்கம் படுத்தியது.

பதில் சொல்ல வேண்டிய மோடியோ கூட்டத்தினிடையே மேடையேறி அங்கும் இங்கும் நகர்ந்து டஸ்டரை வைத்து எதையோ அழிப்பது போல கைகளை அசைத்துக் கொண்டு இருந்தார்.

மோடியின் ஒவ்வொரு பொய்யையும் சமாளிப்பதும், மடை மாற்றுவதும் பாஜக என்னும் ’தூய்மையான’ கட்சி’யின் முக்கிய அலுவல் பணியாகிப் போனது.

“மோடி திருமண விபரத்தை சொல்லவில்லை. அவ்வளவுதானே. திருமணம் ஆகவில்லை எனச் சொல்லி இருக்கிறாரா? இது எப்படி பொய்யாகும், குற்றமாகும்”

“மோடியின் திருமணமா இங்கு முக்கியம்?. நாட்டின் முன் ஊழல் முதற்கொண்டு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப் பற்றி பேச வக்கில்லை.”

“மோடியின் மனைவியே இதுகுறித்து கவலைப்படாதபோது, சம்பந்தமில்லாதவர்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்”

இதில் நிர்மலா சீதாராமன் பேசியதுதான் உச்சம். “மோடி அவர்களின் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம். அதற்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டுமா?”

மோடியின் திருமணம் நடந்தது 1968ம் ஆண்டு. அவரது பிறந்த ஆண்டு 1950 என்று வைத்துக் கொண்டாலும் அவரது 18வது வயதில் திருமணம் நடந்திருக்கிறது. யசோதாபென்னுக்கு 16 வயது. 1929ம் ஆண்டு சட்டப்படி பெண்ணுக்கு திருமண வயது 14 எனவும், ஆணுக்கு 18 எனவும் இருந்தது. எனவே அதனை குழந்தைத் திருமணம் என்று வகைப்படுத்த முடியாது.

திருமணம் நடந்து மூன்றாண்டுகள் மோடி குடும்பத்தாருடன் இருந்தாலும், மோடியுடன் கூட வாழ்ந்தது மூன்று மாதங்கள் போலத்தான் என்றும் அதன் பிறகு அவர் வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், அவரிடமிருந்து எந்த தகவல்களும் இல்லை என்றான பிறகு அவரது குடும்பத்திலிருந்து விலகி வந்து தனது சகோதரர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாக யசோதாபென் கூறுகிறார். மீண்டும் படிக்கத் துவங்கியதாகவும், ஆசிரியர் பணிக்குச் சேர்ந்ததாகவும் தனிமை நிறைந்த தன் வாழ்வின் போக்கை தொடர்கிறார்.

மோடியின் சகோதரர் சோமபாய் மோடிவின் கூற்று வேறாக இருக்கிறது. மோடிக்கு அவ்வளவு சிறுவயதில் திருமணம் செய்வது பிடிக்கவில்லை என்றும், குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணம் செய்ததாகவும், எனவே திருமணம் ஆனவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், பின்னர் குடும்பத்தாருடன் வந்து மோடி தங்கவே இல்லை என்றும் அவர் சொல்கிறார்.

திருமணம் பிடிக்கவில்லை என்றால், திருமணத்துக்கு முன்பே மோடி வீட்டை விட்டு சென்றிருக்கலாமே என்னும் கேள்வி எழுத்தான் செய்கிறது. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்னும் ஆராய்ச்சிகளுக்கும், விவாதங்களுக்கும், ஊகங்களுக்கும் சென்றாலும் யசோதாபென்னுக்கு யாரும் நியாயம் வழங்கிட முடியாது.

அதிகார பீடத்தின் உச்சியில் இருக்கும் சக்தி வாய்ந்த மனிதரின் மனைவியாகிய அந்த மிகச் சாதாரண பெண்மணி தனது சிந்தனைகள் எல்லாவற்றையும் அப்படியே இனி எப்போதும் வெளிப்படுத்திட முடியாது.

ஆனால் இந்தியா டுடே பத்திரிகைக்கு 2014ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி யசோதாபென் அளித்த பேட்டியில் சில உண்மைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டு இருக்கின்றன.

இந்தியா டுடே: ”இத்தனை நாளும் மனைவி என்ற ஸ்தானத்தை கொடுக்காமல் தாங்கள் அலட்சியப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்களா?”

யசோதாபென்: ”இல்லை. நான் மோசமாக உணரவில்லை. விதியாலும் கெட்ட நேரத்தாலும்தான் அவ்வாறு செய்கிறார் என்பது எனக்குத் தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் அவ்வாறு பேசுகிறார், பொய்யும் சொல்கிறார். என் நிலைமை ஒன்றும் மோசமாகவில்லை. ஒருவகையில் அதிர்ஷ்டம் என்னை மேம்படுத்தியே இருக்கிறது.”

இந்தியா டுடே: ”ஏன் நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை?”

யசோதாபென்: ”இந்த அனுபவத்திற்குப் பிறகு எனக்கு திருமணம் செய்து கொள்ளத் தோன்றவில்லை. என் மனம் அதில் இல்லை.”

சில வார்த்தைகளில் ஒரு வாழ்க்கையையே தரிசிக்கும்படி ஆகிவிடும். அப்படி ஒரு உரையாடல் இது.

யசோதாபென் உண்மையாகவும், மோடி பொய்யாகவும் காலத்தின் முன் நிற்கிறார்கள்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்