நூல் அறிமுகம்: மார்கெரித் யூர்ஸ்னாரின் கீழை நாட்டுக் கதைகள்: (பொறுப்புக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டம். விதியின் வசமே முடியும் அவலம்!) – சந்தானமூர்த்தி

நூல் அறிமுகம்: மார்கெரித் யூர்ஸ்னாரின் கீழை நாட்டுக் கதைகள்: (பொறுப்புக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டம். விதியின் வசமே முடியும் அவலம்!) – சந்தானமூர்த்தி




ஒரு படைப்பு என்ன செய்ய முடியும். பிரபஞ்சத்தின் அடியாழத்தில் மூழ்கிக் கிடக்கும் சிறு துளி ஆன்மாவை வெளிக்கொண்டு வரமுடியும். உருண்டை வடிவமோ, சதுரமோ, செவ்வகமோ, எதுவோ ஒன்று, அதனை அப்படியே நாம் படுத்துறங்கும் திண்ணையில் வைத்து உருட்டி விளையாடவும் மேன்மை பொருந்தியதொரு படைப்பால் சாத்தியமே. கனமான பொழுதுகளை இலகுவாக்கவும், துயரங்களில் சஞ்சரிக்கும் ஆகச்சிறந்த தருணங்களை மீட்டுருவாக்கம் செய்யவுமான வல்லமை, ஆகச்சிறந்த படைப்புகளுக்கு உண்டு. அதற்கு இணையான தகுதி அதை உருவாக்கிய படைப்பாளிக்கும் உண்டு.

வெறும் அழகியலை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட படைப்புகள், அழகியல் குறித்த பார்வைகளும், வியாக்கியானங்களும் மாறுகிறபோது, ஒன்று அது தன் இயல்பை மாற்றிக்கொள்ளலாம், இல்லை, நீர்த்துப்போகலாம். இவை இரண்டுக்குமே நிறையச் சாத்தியங்கள் உண்டு., முன்வைக்கும் அழகியலைப் பொறுத்து அவை அமைந்துவிடுவதற்கும் அநேக சாத்தியங்களும் இருக்கின்றன.

ஆனால் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அதற்கு ஆதாரமாக விளங்குகின்ற கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைச் சுமந்து நீள்கிறதொரு படைப்பானது, அம்மக்களின் வாழ்வியல் தேவைகளோடும், அவர்தம் நடைமுறை அழகியலோடும், ஒருசேர பிணைந்திருப்பதால், அதனுடைய ஆயுள் என்பது வேர் சார்ந்ததும், அது பற்றி மேலழெ தவிக்கும் மண்ணோடும் தொப்புள்கொடி உறவு கொண்டது.

கீழை நாட்டுக்கதைகளுக்கும், அதன் உயிருக்கும் உடமைவாதியாகிய மார்கெரித் யூர்ஸ்னாரின் படைப்புகளின் மைய ஓட்டம் விளிம்புநிலை மக்களையும், அவர்கள் தெரிந்தோ, அறியாமலோ ஏற்றுக்கொண்ட ஒரு வாழ்வியல், அது முன்வைக்கும் மகிழ்வு, அதனூடாக வந்திறங்கும் துயரம், இரண்டின் நீட்சியாக கேள்விகளற்று பயணிக்கும், அம்மக்களின் ஆழமான நம்பிக்கை, இவற்றை எள்ளி நகையாடாமல், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அதிகார மையத்தின் பிடிப்பையும் போகிற போக்கில் தொன்மங்களினூடாக அடித்தளமிட்டுப் பேசி செல்வதோடு ஆகப்பெரிய விவாதத்தையும் அறுதியிடுகிறது.

மார்கெரித் கதைகளினூடாக பிரவேசிக்கும் கதாபாத்திரங்கள், தான் நேசித்த அதி உன்னதமான ஒன்றுக்காக, தங்களை, முழுமையாக விடுதலை செய்துகொள்ளும் மனோபக்குவம் வாய்ந்தவர்களாகவே அநேகமான கதைகளினூடாக வாழ்கிறார்கள். அல்லது வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பரந்து விரிந்த சமூகப்பரப்பில், அது வரையறுத்து ஒழுங்கமைத்த எந்தவொரு முகாந்திரத்தின் எல்லைகளுக்குள்ளும், பிரவேசிக்க மறுக்கும் சுதந்திரமான மனிதர்கள், மார்கெரித்தின் கதை மாந்தர்களாகச் சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்தவொரு திட்டவட்டமான வாழ்க்கையும், உறுதி செய்யப்பட்ட கொள்கைகளும், சார்பு நிலைகளும் இவரது கதாபாத்திரங்களை எதுவும் செய்யமுடிவதில்லை.

அதி உன்னத புத்திசாலிகளும், வெறும் கிராமத்து யதார்த்தமான மனிதர்களும், அவர்களது உணர்வுகளும் எல்லாமுமே ஒரு வாழ்வியலை முன்வைத்தும், அதனை எதிர்கொள்ளும், அல்லது விட்டு விடுதலையாகி ஓடும் இரண்டு விதமான மனநிலை வாய்க்கப்பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். இவருடைய கதாபாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவரவரளவில் எல்லையற்ற சுதந்திரம் இருந்து கொண்டே இருக்கிறது.

அதே சமயம் செய்து முடிக்கவேண்டிய பொறுப்புகளும் ஏராளமாய் நிறைந்து கிடக்கிறது. சுதந்திரத்திற்கும், பொறுப்புக்குமான இடைவெளியைச் சிறிதாக்கிக்கொள்ள இவர்களின் மன்றாடுதல் நீடிக்கிறது. அதே நேரத்தில் கீழைநாட்டுக்குறிய விதிகளின் கைப்பிடிக்குள் சிக்கி, இம்மனிதர்களின் சுதந்திரமும், பொறுப்பும் சிக்கித் தவிக்கத்தான் செய்கிறது. ஆக இருத்தலும், இருத்தல் சார்ந்த வியாபித்தலும் எல்லாக் கதைகளிலுமே வாழ்வியலாகவே நீடிக்கிறது. பொறுப்பு , சுதந்திரம், விதி மூன்றில் எதனை தேர்வு செய்வது என்ற குழப்பமும், அச்சமும், இறுதியில் விதி வசமே தங்களை ஒப்புவித்து , அதன் போக்கிலே நகர்ந்துகொள்கின்றது.

நாம் ஒவ்வொரு கதையாக வாசித்தகளுகிறபோது. இத்தொகுப்பின் முதல் கதையான உயிர் தப்பிய வாங்ஃபோ நம்மைக் கடைசிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வாங்ஃபோவின் ஓவியத்தின் மீதும், அந்த ஓவியங்களை நேர்த்தியாய் பிரசவிக்கும் தூரிகையின் மீதும், மேலதிகமாக வாங்ஃபோவின் எளிமையின் மீதும், தீராத காதலும், அபரிமிதமான வேட்கையும் கொண்டு வாழ்தலை அதன் பொருட்டு ஒப்படைத்த அவரது சிஷ்யன் லிங் நம்மை ஆட்கொண்டு விடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்,

இருந்தபோதிலும் லிங்கின் பின்னணி, அவன் வாழும் எதற்கும் பஞ்சமில்லாத சூழல், ஒரு செல்வ சாம்ராஜ்யத்தின் ஒரே வாரிசு, எல்லாவற்றையும் விட்டொழிந்தவனாய், சொற்களிலில்லை, செயலில் நிறைவேற்றிய விதம். லிங்கை, நாம் கெளதமப்புத்தரின் ஞானத்தோடு தொடர்புப்படுத்தி விவாதிக்கத் தோன்றுகிறது.

புத்தரின் ஞானத்திற்குக் குறைவில்லாத ,அதே அளவுக்குச் சமமான, இல்லை, இல்லை இன்னும் அதிகப்படியான ஞானத்தைப் பகிர்ந்தளித்து இருக்கிறான் என்றே சொல்லத்தோன்றுகிறது.

வாங்ஃபோவின் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய முடிச்சுகளைச் சுமந்து செல்வதில் லிங்கிற்கு எப்பொழுதுமே ஒரு அலாதி பிரியம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த குருவும், சிஷ்யனும் ஹான் பேரரசின்(கி.மு 206 லிருந்து, கி.பி.220 வரை சீனாவில் ஆதிக்கம் செலுத்திய அரசம் பரம்பரை) தெருக்களைக்கடந்து எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள்.

தூரிகைகள், கொஞ்சம் சைனா மை, அரக்கும் அடங்கிய ஒரு டப்பா, சுருட்டிவைக்கப்பட்ட பட்டுத்துணி, அரிசி மாவினால் செய்யப்பட்ட காகித உருளைகள், ஆகியவற்றைத்தவிர உலகில் வேறு எந்தப் பொருளுமே உடைமையாக்கிக்கொள்ளத் தகுதியானது அல்ல என்று வாங்ஃபோவிற்கு தீர்மானமான எண்ணம். அவரது சிஷ்யன் லிங்கிற்கு, தனது குருவிற்கு உண்மையான, விசுவாசமான சீடனாக இருப்பதை தான் தனது ஆகச்சிறந்த பொறுப்பாக, ஏற்றுக்கொண்டு வாங்ஃபோவின் சொத்துக்களை, நேசத்திற்குரிய காதலியை சுமந்துசெல்வதுப்போல சென்றுகொண்டிருக்கிறான்.

வாங்ஃபோவும், லிங்கும், தங்களுக்கான சுதந்திரத்தைத் தேர்வு செய்துவிட்டார்கள். ஆனால் ஒரு சிறு வித்தியாசம், வாஃங்போவின் சுதந்திரம் இயற்கையுடனும், அதன் தன்னிச்சையான போக்குடனும் கட்டமைக்கப்பட்டு முன்னகர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் லிங்கின் சுதந்திரம் வாங்ஃபோவை மையங்கொண்ட நகர்கிறது. இரண்டாவதாக லிங் தனது பொறுப்பு என்று வாங்ஃபோவிற்கு சேவை செய்வதைத் தெரிவு செய்தும் நகருகிறான், அதன் படியே செயல்புரிந்தும் போகிறான். அவனது ஆழ்மனதிற்கு மட்டும் இதுதான் விதி என்ற உணர்வும் சீராக நீந்திக்கொண்டிருக்கின்றன.

தன் குருவிற்காகத் தனது சொத்துக்களை எல்லாம் இழக்க துணியும் லிங், இனி ஒன்றுமே இழப்பதற்கு இல்லை என்றான பிறகுதான் இப்படி போய்க்கொண்டிருக்கிறான். எல்லாப்பொலிவுகளும் அற்றுப்போன அந்தப் பிராந்தியத்தில் கற்றுக்கொள்ள ஏதுமில்லை என்ற பொழுதுதான் அவர்கள் ஹான் பேரரசிற்கு போனார்கள்.

வாங்ஃபோ தன் வண்ணக் கலவைகளால் அள்ளித்தெழித்த ஓவியங்கள் பேரரசின் இளவரசனை எப்பொழுதும் அச்சுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் வாங்ஃபோவோ, எந்தவொரு அரசவைக்கோ, அந்தப்புரத்திற்கோ போனது இல்லை.,

பேரரசர்களின் அவைக்கு அவர் சென்றதே இல்லை. குடியானவர்களின் குடிசைகள், நாட்டியக்காரிகள் இருக்கும், புறநகர் பகுதிகள் அல்லது கூலியாட்கள் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கும் இடங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் வாங்ஃபோவின் கால்களும், பசியோடிருக்கும் மனமும் சர்வகாலமும் பயணித்துக்கொண்டே இருக்கிறது. அவரது தூரிகை, வண்ணம் குழைந்து தீட்டியது என்னவோ, இந்த விளிம்பு நிலை பிரதிகளின் வாழ்வியலையும், அதன் அழகியலையும் தான்.

ஹான் பேரரசின் இளவரசன் உள்ளிட்ட, சகலருக்கும் இருந்தது பத்தாயிரம் வாழ்க்கை, ஆனால் வாங்ஃபோவிற்கு இருந்ததோ ஒரே ஒரு வாழ்க்கை, அதுவும் முடியும் தருவாயில். இதனை நினைத்து அவர்கள் இருவருமே ஒருபோதும் வருந்துவதேயில்லை.

மரணத்தின் பால், என்ற மற்றுமொரு கதை, ஆசியநாடுகளின் மிக ஆழமான கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், அதற்குள்ளாக நிகழ்கிற சம்பவங்களுமாகப் பயணிக்கிறது. மனிதர்கள் உயிரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியும், தங்களுக்குறிய தேவைகள் அதிகரிக்கிற போதும், சுயம் சார்ந்தும், சுயநலம் சார்ந்தும் எடுக்கும் முடிவுகள், மனிதர்களை தனிதனித்தீவுகளாக மாற்றத்தொடங்குகிறது. அதே சமயம், குரூரங்களையும், வஞ்சகத்தையும், சுமக்கும் பிரதிகளாகவும் பிரகாசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒரு ஊரில் மூன்று சகோதரர்கள் என்று தொடங்கும், இந்தக் கதை, நம்மூர் வாய்மொழிக்கதைகள் மாதிரியே நீண்டு, இறுதியில் ஒரு அப்பாவி, புத்திசாலிப்பெண்ணின் மரணத்தில் முற்றுப்பெறுகிறது. ஆனால் பால் குடி மாறாத, பசி பொறுக்காத அவளது குழந்தைக்காக, மட்டும் அவளது உயிரற்ற உடலில், இருந்து பால் சுரந்துகொண்டே இருக்கிறது. இது அல்பேனிய நாட்டு வழக்காறு கதையினை மையமாகவைத்து மார்கெரித்தால் அதன் ஈரம் கசியாமல் சொல்லமுடிகிறது.

துருக்கியைக் கொள்ளைக்காரர்களை வரவிடாமல் கண்காணிப்பதற்காக ஒரு கோபுரத்தை அந்த மூன்று சகோதரர்களும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்கள் கிடைப்பது அரிதாக இருந்ததாலோ, கூலி அதிகமாக இருந்ததாலோ, அல்லது சிறந்த குடியானவர்களுக்கே உரித்தான வகையில் தங்கள் கைகளை மட்டுமே நம்பியிருந்ததாலோ, கட்டட வேலையைத் தாங்களே பார்த்துக்கொண்டார்கள். அவர்களுடைய மனைவிகள் ஒவ்வொருவரும் தத்தம் முறைப்படி அவர்களுக்குச் சாப்பாடு எடுத்து வந்தார்கள்.

இப்படி பொக்கை வாய் கிழவி ஒருத்தி, நம்வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு, மழலை மாறாத தனது பேரப்பிள்ளைகளுக்குக் கதைசொல்வது போல எந்த சிரமமும் இல்லாமல், ஒரு கதை சொல்லியாக மார்க்கெரித் சொல்லிக்கொண்டே போகும் போது, ம்..ம்..ம் என்று சொல்லத்தோன்றுகிறது. அதே வேளை இறுதியை நெருங்கும் போது நம்மை ஒரு அமானுஷ்யம் சூழ்ந்துக்கொள்ளத்தொடங்குகிறது.

சகோதரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துமுடித்துவிட்டுக் கோபுரத்தின் கூரையின் மேல் மூலிகைக் கொத்து ஒன்றை வைக்கப் போகும் போகும் ஒவ்வொரு சமயத்திலும் இரவில் வீசும் காற்றும், மலையில் வசிக்கும் சூனியக்காரிகளும், அதைக் கலைத்து விட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கோபுரம் இடிந்து விழுவதற்கு அநேக காரணங்கள் உண்டு. தொழிலாளர்களின் திறமையின்மை, பூமியின் விருப்பமின்மை, கற்களைப் பிணைக்க போதுமான அளவு காரைக்கலவை இல்லாதது என்று பல காரணங்களைச் சொல்லமுடியும் அல்லது கட்ட ஒதுக்கிய நிதியில், முக்கால் வாசியைப் பொறுப்பு வகிப்பவர்கள், தங்களது வங்கிக்கணக்கில் ஒதுக்கிவிடுவது இப்படி ஏராளமான விஞ்ஞானப்பூர்வமான காரணிகள் பலவும் உண்டு.

ஆனால் அதிகார வர்க்கம் மக்களுக்கு ஒரு போதும் விஞ்ஞானத்தைச் சொல்ல முயலுவதில்லை, காரணம் விஞ்ஞான ரீதியாக மனிதன் யோசிக்கத்தொடங்கிவிட்டால், அதிகாரத்தின் மையம் அந்தக் கோபுரங்களைப் போல சரிந்து விழ ஆரம்பித்துவிடும் என்பதுதான். இந்த ஆண்டு விக்ரதி வருடம், இந்த வருடத்திற்குச் செவ்வாய் என்ற கிரகம்தான் அதிபதி, செவ்வாய்க்கு ஆயுதம் நெருப்பு, அதனால்தான் காளஹஸ்தி கோபுரம் வீழ்வதற்கு முன்னால், இடி விழுந்து எச்சரிக்கை மணியடித்தது. இது நம்மூர் நம்பிக்கைகள்.

ஆனால் செர்பிய, அல்பேனிய, பல்கேரியக் குடியானவர்கள் இந்த அசம்பாவிதத்திற்கு ஒரு காரணத்தைத்தான் கண்டார்கள். கட்டடம் இடிந்து விழாமல் அதன் அடிப்பகுதியில் ஒரு ஆணையோ, பெண்ணையோ நிற்கவைத்து அவர்களைச்சுற்றி சுவர் எழுப்பிவிட்டால் அவர்களுடைய எலும்புக்கூடு கற்களின் பளுவான சதையை இறுதி நாள் வரை தாங்கிக்கொள்ளும் என்று நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையின் விளைவுதான் மரணத்தின் விளிம்பில் கற்களுக்கு நடுவில் நின்றுகொண்டு இருக்கும் அந்த அப்பாவி, புத்திசாலிப்பெண். ஆனால் அவள் கேட்டுக்கொண்டதற்கு, வஞ்சகம் பொருந்திய அந்த இரண்டு ஆண்களும், அதாவது அவளுடைய கொழுந்தன் மார் இருவரும், அவளது மார்பகத்தை மட்டும் சில காலங்களுக்குக் கற்களை வைத்து மூடாமல் விட்டுவைத்திருந்தனர். அந்த தாயின் எல்லா உறுப்புகளும், மரணித்துப்போய்க்கொண்டே இருந்தாலும், அவளது குழந்தைக்காக அந்த மூடப்படாத மார்பகத்திலிருந்து சுரந்துகொண்டேயிருந்தது பால். குழந்தை பால் குடி மாறியதும். கற்களால் மூடிக்கொண்டது அவளுடைய மார்பகங்களும்.

மரணத்தின் பால் கதை விதியின் பொருட்டு எதையும் இழக்கும் மனம் வாய்க்கப்பெற்ற மனிதர்களையும், இது விதி என்று தெரிந்தபிறகு, அந்த விதிக்கு மற்றவர்களைப் பலி கொடுத்து,தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் மனிதர்களையும் அவரவர் சார்ந்து பேசுகிறது.

மூன்று சகோதரர்களும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதியின் பொருட்டே செயலாற்றத்தொடங்குகிறார்கள். மூத்தவன் தன் மனைவியை ரகசியமாக வெறுக்கிறான். அவளை எப்படியாவது இந்தத்திட்டத்தின் மூலம் கழித்துக்கட்டிவிட்டு, செம்பட்டை நிறக்கூந்தலுடன் இருக்கின்ற ஒரு அழகான கிரேக்கப் பெண்ணை அடைந்துகொள்ள இந்த வாய்ப்பை சாதகமாக்கிக்கொள்ளத் திட்டமிடுகிறான். இரண்டாமவனும் தன்னுடைய மனைவியை எச்சரிப்பதாகச் சொல்லிக்கொண்டே வீட்டுக்கு வருகிறான். கடைசி சகோதரன் மட்டும் அல்பேனிய, பல்கேரிய மூதாதையர்களின் நம்பிக்கையை, நிறைவேற்றும் நோக்கத்தோடு பெருத்த சோகத்துடன் வீட்டுக்குத் திரும்புகிறான்..

இப்படியாக மார்கெரித்தின் மரணத்தின் பால் கதை முடிகிறபோது நம்மை சூழ்ந்துகொண்ட அமானுஷ்யங்கள் விலகி. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. பூமிப்பந்தின் எல்லா பாகங்களிலுமே பெண் என்பவள் பொறுப்புகளுக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டங்களில் மட்டும் சிக்கித்தவிக்கவில்லை. ஆணாதிக்க கரங்களுக்குள்ளும், அதுவே விதி என்றும் மரணித்துப்போன கோடாணு கோடி பெண்கள்.இன்றும் உலக விளிம்புநிலை சமூகத்தின் பெண் தெய்வங்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.

இவ்வாறு அநேக கதைகளும் கீழை நாட்டுத் தொன்மங்களுடனும், அதன் எச்சங்களுடனுமே பயணிப்பது வியக்கவைக்கிறது. மார்க்காவின் மோசமான நடவடிக்கைகளாகத் துருக்கியர்கள் பார்ப்பது, வழிவழியாக சொல்லப்பட்டு வந்த செர்ப்பியன் மோசமானவன் என்ற பார்வைதான். ஆனால் துருக்கிய மனிதர்களுக்கும் சுதந்திரமானவர்களும், ஈரம் நிரம்பியவர்களும் இருக்கிறார்கள் என்பது கதையை மட்டுமில்லை. பூமியைக்கூட சமநிலையில் வைத்துப்போகிறது.

ஸ்கூட்டாரி நகரத்தின் பாஷாவின் விதவை, மார்க்கோவைப் பற்றி இரவுகளில் கனாக்காண்பதிலும், பகலில் அவனுக்காகக் காத்திருப்பதிலும் பொழுதைக் கழித்தபடி இருக்கிறாள். கடலின் மென்மையான முத்தங்களால் உறைந்துபோயிருந்த மார்க்கோவின் உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிடுகிறாள். வேலைக்காரிகளின் பார்வையில் படாமல் தன் படுக்கையில் அவனுக்குக் கதகதப்பூட்டுகிறாள். இப்படி மார்க்கெரித் மார்க்கோவின் புன்சிரிப்பு என்ற கதையினூடாக துருக்கிய, செர்பிய நாட்டார் மரபுகளைப் பிணைத்துக் கொண்டு செல்கிறார்.

துருக்கியில் சிறைபிடிக்கப்பட்ட மார்க்கோவை, எப்படியும் பார்ஷாவின் விதவை காப்பாற்றிவிடுவாள். என்று நினைக்கத்தொடங்கிய சிறு வினாடிகளுக்குள் மார்க்கோவின் எதிராக பாஷாவின் விதவை மாறிவிடுவதும் எல்லோருக்குமான சமூக எதார்த்தம்.செத்தப்பிணமாய் கிடக்கும் ஒரு செர்பியனின் முகத்தில் லேசாக, மெலிதாக ஒரு புன்சிரிப்பு பிரவேசித்தால் சும்மாய் இருப்பார்களா? துருக்கியர்கள்,

எவர்கள் கண்களுக்கும் தெரியாத அந்த மார்க்கோவின் புன்சிரிப்பு ஹாய்ஷெவின் கண்களுக்கு மட்டும் படுகிறது. எங்கே காட்டிக்கொடுத்துவிடப்போகிறாளோ? என நம் ஆவல் மேலிட தூண்டுவது, உலகம் முழுக்க வாழ்ந்துச்சென்ற தாத்தாக்களும், பாட்டிகளும் நமக்காக நம்முடைய திண்ணைகளில் பரப்பிவைத்துவிட்டுப் போயிருக்கும் கதைகளுக்குரிய வலிமை.

மார்க்கோவின் புன்சிரிப்பை பார்த்துவிட்ட ஹாய்ஷெவினுக்கு அவன் மிகுந்த அழகாய் இருப்பதாகப்படுகிறது. அந்த புன்சிரிப்பை மறைக்கும் விதமாக அந்த துருக்கிய சுல்தான்களின் வம்சாவளிப் பெண்ணான ஹாய்செவின், தன்னுடைய கைக்குட்டையைக் கீழே தவறவிடுகிறாள். அதன் பிறகு பெருமிதத் தொனியில் சொல்கிறாள் இப்படியாக… இறந்து விட்ட ஒரு கிறித்தவனின் முன்னால் நடனமாடுவது சரியல்ல, அதனால்தான் அவனுடைய வாய் தெரியாமல் இருக்க அதை மூடிவிட்டேன் என்றும், அதைப் பார்த்தாலே பயமாயிருக்கிறது என்றும். இப்படியாக இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுக்குள்ளும், சுதந்திரத்துக்கும், விதிக்கும் இடையிலான போராட்டத்தில் சிக்கி தவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

– சந்தானமூர்த்தி
சிதம்பரம்

நூல் அறிமுகம் : கரன் கார்க்கியின் சட்டைக்காரி நாவல் – முராநி

நூல் அறிமுகம் : கரன் கார்க்கியின் சட்டைக்காரி நாவல் – முராநி




நூல் : சட்டைக்காரி நாவல்
ஆசிரியர் : கரன் கார்க்கி
பதிப்பகம் : நீலம் பதிப்பகம்
விலை : 375

எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. மனிதர்களையெல்லாம் தன்பால் ஈர்க்கும் காந்த சக்தி கொண்ட எழில்மிகு நகரம். எல்லோரையும் வாழவைக்கும் புகழிடம். இந்த நகரின் பண்பாடு, கலாச்சாரம், மக்களின் வாழ்வியல் வழித்தடங்கள் இவைகளை சில பல கதாபாத்திரங்களைக் கொண்டு கருத்துப்புணைவுக்குள் கர்ப்பம் தரிக்கின்றார் கரன் கார்க்கி. மெட்ராஸின் வரலாற்று வழித்தடம் நீண்ட நெடிய அம்சங்களைக் கொண்டதாக விளங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனிகளின் வியாபார தலமாக மாறிய மெட்ராஸ் தனக்கான அபரிமிதமான வளர்ச்சியை தொடர்கிறது. பிழைப்பைத் தேடி வந்தவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரமாக விளங்கிய இந்த மண் இங்கு வந்தவரை எல்லாம் வளம்மிக்கவராகவே மாற்றியது. ஆனால், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களின் கதி என்னவானது. சொந்த மண்ணிலேயே அகதிகளைப் போல் வாழும் நிலைதானே ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு வெப்பச்சலனம் நிறைந்த நகரமாய் உருமாறி இருக்கிறது. பல்வேறு பகுதியிலிருந்து ஆட்சி செய்ய வந்தவர்கள், மொழிபெயர்ப்பாளராக வந்தவர்கள் மூலம் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம், போர்த்துக்கீஸ் போன்ற மொழிகளின் கலவையாய் ஒரு புது மொழி உச்சரிப்பையே உருவாக்கி, அதை எல்லோரும் வியந்து கேட்கும், நகைச்சுவை மிக்க மொழியாக மெட்ராஸ் பாஷை விளங்குகின்றது. இந்த பாஷையில், பண்பில் தான் ”சட்டைக்காரி” தனக்கே உரித்தான தனித்த தன்மைகளோடு நம் சிந்தனைக்கு உரம் சேர்க்கிறது. காதல், காமம், நட்பு, பாசம் இவை மனித வாழ்வியலின் அடிப்படை உணர்வுகள், இந்த அடிப்படை உணர்வுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு வடிக்கப்பட்ட காவியமாகவே சட்டைக்காரி விளங்குகிறது

என்னவாக இருக்கிறது.
மனிதன் எங்கோ தோன்றினான் எங்கேயோ, எப்படியோ கலந்தான். மனிதக் கலப்பு அழகான முகங்களையும், அறிவுசார் மனிதர்களையும் பிரசவித்துள்ளது. வரலாற்றுச் சம்பவங்களோடுதான் மனிதனின் வாழ்க்கையும் பயணப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் கரன் கார்க்கியின் சட்டைக்காரி நமக்கு சொல்லும் பாடம் இவைகள் தான்.

உடலும் உள்ளமும் பொறியியல் நிகழ்வுகள் போல் திரும்பத் திரும்ப அவனை காட்சிப்படுத்தி கொண்டிருந்தது. காதல் உணர்வை அறிவியல்பூர்வமாக சொல்லும் வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தாழ மண்டியிட முடியாதபடி அவளுக்கு அடிவயிற்றில் வலி வழக்கத்தை மீறியதால் லேசாக முனங்கினாள். அவளது தொடையிடுக்கில் உதிரம் பிசுபிசுப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு பெண் நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேனோ, ஒவ்வொரு மாதமும் இந்த துயரம் தாங்கமுடியவில்லை. வெறுப்பும், நச்சரிப்பும் நிறைந்த மாதவிடாய்க் கால பெண்ணின் உடல் மொழியை, உணர்வுகளை ஒரு ஆணாக இருந்து சிறப்பாக நேர்த்தியாக சொல்லுகின்றார். நாவலில் வரும் பெண் கதை மாந்தர்களை எப்படி மாண்புடன் சித்தரித்துள்ளார் என்பதர்க்கு உதாரணம்.

உள்ளமும் உடலும் விழித்துக் கொள்ளும் தருணங்களில் பிரார்த்தனையால் அடக்கி அதை அமைதிப்படுத்த முடிகிறது. உணர்வுகளுக்கு நிரந்தர உறக்கத்தை தர முடியாதே. இப்போது அது விழித்துக்கொண்டது இன்று ஏனோ அவளது உள்ளத்துடன் சேர்ந்து உடலும் மலர்ந்து மணம் வீசுகின்றது. அவளில் வீசிய அந்த மணத்தை அவளே விரும்பினால். இந்த வரிகள் இயல்பான பெண்ணைப் பற்றிய வரிகள் அல்ல மாறாக கணவனை இழந்து 13 ஆண்டு தவ வாழ்கையின் கோரப்பிடியில் இருந்து மீளத் துடித்த இளம் விதவையின் உள்ள குமுறல்கள், உணர்ச்சிகளின் ஏக்கக்குரல். வாழ்வதற்கான அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நம்பிக்கை நிறைந்த அலங்காரக் கண்ணாடித் தொட்டிக்குள் அடைபட்டுள்ள அழகிய தங்கமீனின் விடுதலைக்கான ஏக்கங்கள்.

இந்த தங்க மீன் தான் நீந்திக் கொண்டிருந்த கண்ணாடி தொட்டியில் இருந்து இயேசுவின் அரவணைப்பிற்குள் அழகான காதல் இணையராய் சமுதாய சீர்திருத்த முன்மாதிரியாய் கதைக்களம் நெடுகிலும் வலம் வருகிறாள்.
அன்பு, பாசம், ஆசை, நட்பு, பகை, இன்பம், துன்பம், உறவு, பிரிவு, இறக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி போன்ற வார்த்தை தலங்களில் இருந்து எழும் கரன் கார்க்கியின் சிந்தனை மேகங்கள் வானம் முழுவதும் பரவி மேகமாய் உருமாறி, மின்னலாய் மின்னி, இடி முழங்கி மழையாய் நிலம் நனைத்து ஆறாய் ஓடி நதியாய் சேர்ந்து கடலாய் பரந்து விரிந்து நம் இதயத்தில் பல்வேறு சிந்தனைக் கீற்றுக்களை எழுப்புகின்றது. இருள் முகம் கிழித்து வெளிச்சம் பிரகாசிக்கிறது.

மன்னர்களுக்கும் மந்திரிகளுக்கு முதலாளிகளுக்கும் உயர் குடியினர்க்கு மட்டும்தான் காவியம் எழுத முடியுமா? சாதாரண விளிம்புநிலை மக்களின் தினசரி வாழ்க்கையை, அவர்கள் சந்திக்கும் இன்ப, துன்பங்களையும் சாதனைகளையும்காவியமாக படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தேவையை உணர்ந்து உருக்கமான உணர்வுகள் தெறிக்கும் புது புது வார்த்தை கோர்வைகளால் நம்மை கட்டிப் போடுகிறார். இவர் படைத்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் நிஜவாழ்க்கையில் பார்த்துப் பழகிய உறவுகளை போல் எண்ணத் தோன்றுகிறது. இயல்பான வசண நடை வரிகள் நம்மையே கதாபாத்திரத்திற்குள் மூழ்கடிக்கிறது.

சிலவேளைகளில் துயரங்களுக்கு மத்தியிலும் தப்பிப் பிழைக்கும் இதமான வாழ்வை காதலின் வழியே ஆணுக்கும் பெண்ணுக்கும் காலம் அடையாளம் காட்டவே செய்கிறது. என்ற கரன் கார்க்கியின் வாழ்வியல் தத்துவமே குர்ஷித்-கனி, ஐஸக் மற்றும் அவரின் இரண்டு மனைவிகள் இயேசு-லிண்டா, மூசாஸ்-ஸ்லெட்டா ஆகியோரின் காதல், குடும்ப வாழ்வியலை நாவல் முழுவதும் மென்மையான மயில் இறகால் நம் இதயத்தை வருடுகிறது. காதலை மாட்சிமை பொருத்தமாய் பயணிக்க செய்கிறார்.
வாழ்க்கை விளையாட்டைப் போலவே போட்டியும் பொறாமையும் வெற்றியும், தோல்வியுமாய் மாறி மாறி வருகிறது. கால்பந்தாட்ட விளையாட்டு வர்ணனைகள், விளையாட்டு வீரர்களுக்ககே உரித்தான போட்டி மனப்பான்மை, தன்நம்பிக்கை, தற்புகழ்ச்சி விளையாட்டு இவை அனைத்தையும் சாதுரியமாக கையாண்டுள்ளார் இந்த கால்பந்தாட்டத்தை போல் சுழன்று சுழன்று கோல் அடிக்க முயற்சிக்கிறார்கள். கருணா, ஜெயா, நிக்கோலஸ், மைக்கேல், பஷீர், மூசா என கதை மாந்தர்கள் அனைவரும் கதைக்களம் முழுவதும் தங்களின் தடத்தினை பதித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நமது பழைய வாழ்கையை நினைத்துப் பார்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாக நாவல் அமைந்துள்ளது. காட்சிகளை தத்ரூபமாக காட்டுவதில் உவமை நயத்துடன் சட்டைக்காரி தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறது. ததும்பிக் கொண்டிருந்த கடைசி குவளையை முகம் சுளிக்காமல் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போல் குடித்து காலியான குவளையின் கடைசிச் சொட்டையும் நுனிநாக்கில் சொட்டினான்.

உள்ளங்கையில் சுற்றும் பம்பரத்தை பார்ப்பதுபோல இயேசு தன் உள்ளங்கையை பார்த்துக் கொண்டிருந்தான்
முசாவின் கைகளில் உறுதியையும் ஸ்டெல்லாவின் கரங்களில் கடலின் குளிர்ச்சியையும் உணர்ந்த அலை பொங்கி ததும்புகிறது. மிக மிக அழகான நேர்த்தியான உவமை உவமேயம் கொண்ட அற்புதமான வரிகளை நாவல் நெடுகிலும் வறுமையின்றி வாரி வழங்கியுள்ளார்.
காலம் சின்ன சின்ன இடைவெளிகளில் மனிதர்களுக்கு எவ்வளவு பெரிய மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது.

நாவலை முழுமையாகப் படிக்கும் போது இந்த வரியை சாதாரணமாக நம்மால் கடந்து போக முடியாது கடைசி பத்து பக்கங்கள் முழுவதும் வாழ்வின் நினைவலைகள் நம் நிஜ உறவுகளை நினைவு படுத்துவதோடு கதைமாந்தர்களோடு வாழ்ந்த உணர்வையும் தந்து விடுகிறது
நீண்ட கதை களத்தில் பல கதாபத்திரத்தில் வரும் மாந்தர்களின் பிறப்பையும் இறப்பையும் மிகச் சுருக்கமாக கூறி கணநேரத்தில் நம் மனதை கனணமாக்கி சற்றுநேரத்தில் இலகுவாக்கும் மாயவித்தை கரன் கார்க்கியின் எழுத்தில் தென்படுகிறது. சுதந்திர இந்தியா கால, முன்னிட்டும், பின்னிட்டும் வரும் கதைக்காலம் அரசியல் பேசாது இருக்குமா? ஐசக் மிக நேர்த்தியான கௌரவமான கதாபாத்திரம் அனைத்துக் கதாபாத்திரங்களையும் மனித நேயத்துடன், மரியாதையுடன் கையாளுகின்றார். எப்படியாவது தன் இரண்டு மனைவிகள் மகளோடு வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்ற ஆசையின் நிமிர்த்தம் கடந்தகால, நிகழ் கால அரசியல் புரிதல் உள்ளவராக காட்டுவதோடு கதாபாத்திரம் வழியே மவுண்ட்பேட்டன் பிரபுவின் வருகை, செயல்பாடுகள், மதப் பழமைவாதிகளால் காந்தி கொள்ளப்படுவது, சாதி தொற்று, சனாதான வளர்ச்சி ஆங்கில இந்தியர்களின் எதிர்கால வாழ்க்கை போன்றவற்றை பேசுகின்றார்.

தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் கழகங்களின் அரசியல் நிகழ்வுகள், பெரியார் பற்றிய செய்திகள், ராஜீவ் காந்தியின் கொலை போன்றவை கதைக்கள நகர்வுக்கும் காலத்தையும் கதாபாத்திரத்தின் முதிர்வு நிகழ்வையும் உணர்ந்து கொள்ள சரியாக பயன்படுத்தியுள்ளார்.
கரன் கார்க்கியின் அரசியல் ஞானத்திற்கு இந்த நாவலில் வரும் ஒரு வரியே சாட்சி இதோ அந்த வரி . . . ,
பெரும்பான்மையை வெறியூட்டி குளிர்காய நினைப்பவர்களால் சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து, சமகாலத்திய அரசியல் குளறுபடிகளும், கூறிய இட ஒதுக்கீடு பிரச்சினைகளும் நினைவுக்கு வருகிறது. கதைமாந்தர்களின் பெரும்பான்மையானோர் சிறுபான்மையினர், விளிம்பு நிலை சார்ந்தவர்களாகவே காட்டப்பட்டுள்ளனர்.
இந்த நாவல் காலம் காலமாக தெரிந்தும், தெரியாமலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடந்துவரும் இனக்கலப்பு பற்றி தெளிவாகப் பேசுகின்றது வெள்ளையர்கள் உலகெங்கும் போகிறார்கள் தங்களின் விதைகளின் வழியே மொழியையும் நிறத்தையும் தங்கள் சாதுரியத்தையும் பழக்கவழக்கங்களையும் முளைக்க வைக்கின்றனா். இந்த செய்தி நமக்கு எதை உணர்த்துகிறது.
சாதி, மதம், இனம், மொழி என உயர்த்தியும், தாழ்த்தியும் பேசும் மனிதனே உன்உடல் எந்த கலப்பினம் சார்ந்தது என்பதை உன்னால் அறுதியிட்டு சொல்லமுடியுமா? அறிவியல் துணை கொண்டு அறுதியிட்டால் நீ உண்மையாக நினைத்துக் கொண்டிருக்கும் உன் சாதியும், மதமும், மொழியும், இனமும் உன்னுடையது இல்லை என்பது தெரிந்து விடும். பொய்யான சாதியை மதத்தை, மொழியை, இனத்தை உரிமை கொண்டாட செய்யும் அரசியல் பொய் முகங்கள் கிழிந்து போகும். அதைத்தான் கரன் கார்க்கி எதிர் பார்க்கிறாறோ என எண்ணத் தோன்றுகிறது.

கதைமாந்தர்களின் வழியே இயல்பாக, யதார்த்தமாக சொல்லியிருக்கும் வார்த்தைகள் ஏழைகள் எப்போதும் எதையும் மறைத்து வைத்துக் கொள்வது வழக்கம் இல்லை அவர்களின் வாழ்க்கை எப்பொழுதும் உண்மையானதாக, வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒரே நேரத்தில் சமமாக கடக்கும் வாழ்வியல் தத்துவம் அறிந்தவர்கள் . இவர்களுக்கு இடையே நடக்கும் உறவு சண்டையும் நட்பு சண்டையும் நிரந்தரமானதல்ல. மெட்ராஸ் பாஷையில் வெளுத்து வாங்கும் கொச்சை வார்த்தைகள் நிறையவே இருக்கிறது என்றாலும் கொச்சையாக தென்படவில்லை. ஆக்ரோஷமான வசணங்கள், அளவுக்கு அதிகமான சாராய வாசனை மாமிச உணவு வகைகள் எதார்த்தமான நடைமுறை வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லியிருப்பது கரன் கார்க்கியின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு.
தற்போது வானுயர்ந்த கட்டிடங்களை தாங்கி நிற்கும் மெட்ராஸின் அந்தக்கால இயற்கை வளத்தை சொல்லி தற்போதைய நிலையை நினைத்து ஆதங்கப்படும் காட்சிப்படுத்துதல் மூலமாக பழைய நுகர்வு கலாச்சாரம் அக்கால பண்டிகை திருவிழா கொண்டாட்டம் அரசியல் நிகழ்வுகள் என அனைத்தையும் கண்முன் கொண்டு வருகிறார். கரன் கார்க்கி அவர்கள் இந்த சமூகத்தின் அறியாமை, மூட பழக்க வழக்கம் சாதி மத நம்பிக்கைகள் பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சனாதானங்களை வேரறுப்பதற்கான சிந்தனை விதைகளை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பேசுகின்றார். இவை எதுவும் திட்டமிட்டதாக இல்லை. இயல்பாகவே விரிவடைகிறது. வாகன நெரிசல், எரிபொருள் மூச்சுக் காற்றில் உயிர் சுவாசிக்க திணறிக் கொண்டு, வானுயர்ந்த கட்டிடங்கள், வசதியான வாழ்க்கை முறைகளினால் ஊதிப் பெருத்துப் போன ஊளச்சதை நிறைந்த இன்றைய சென்னையின் பழைய சதுப்பு நிலங்கள், காடுகள், மலைக்குன்றுகள், கடற்கரைகள், தீவுகள், நதிகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் அபகரித்து, உருக்குலைந்து அழிக்கப்பட்டு காணாமல் ஆக்கியதற்கான பிறவிப் பலனை ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், சுனாமியால் அனுபவிக்கிறார்கள். இதில் ஐசக், மூசா, கர்ணா, ஜெயா போன்ற இந்த நாவலின் கதைமாந்தர்களின் வாரிசுகளும் இருக்கிறார்கள். அவர்களின் ஏக்கம், கோபம், பயம், விரக்தி மறு உருவாக்கம் செய்யவேண்டும் என்பதற்கான ஆர்வம், வேகம், நம்பிக்கை, உறுதி இவைதான் சட்டைக்காரி நாவல் மூலம் கரன் கார்க்கி எழுப்பும் விளிம்புநிலை மக்களின் ஒட்டுமொத்த கூக்குரல்.

சட்டைக்காரி – விளிம்பு நிலை மக்களின் சரித்திரம்