Vasanthadheepan Kavithaigal 16 வசந்ததீபன் கவிதைகள் 16

வசந்ததீபன் கவிதைகள்

சாத்தியங்களைப் பின் தொடர்ந்து…
******************************************
விற்பது லாபத் தேட்டம்
வாங்குவது தேவைகளின் வெற்றிடம்
பொருள்வயின் பிழைப்பது
பெரும் பிழை
மரணத்திற்குப் பிறகு
மனிதனை நினைத்துத்தான் பார்க்கமுடியும்
ஆயிரங்கால் மண்டபத்தில்
இறந்த என் நண்பனைப் போல
ஆங்கிலேயர் ஒருவர்
நானாகி இருக்கமாட்டேன்
நானை மறக்கமாட்டேன்
நானாக வாழமாட்டேன்
வளைந்து வளைந்து போகிறது மலைப்பாதை
நெளிந்து நெளிந்து
விரைகிறது பேருந்து
ஒடிந்து ஒடிந்து பயணிக்கிறேன் நான்
படித்துக் களித்து உறங்குவதற்கல்ல
வெடித்து கிளர்ந்து உக்கிரமாவதற்கே
கலை கவிதை எழுத்து எல்லாம்
மீதி சில்லறை வாங்கும் நான் அற்பம்
கொடுக்கத் தயங்கும் நீ மேன்மை
சல்லிக்காசானாலும் என்னுடமை ஏய்க்க அனுமதியேன்
பறக்கும் மனது
தவக்கும் உடல்
ஊரோ ரெம்ப தூரம்
எனக்கும் உனக்குமான இடைவெளி குறுகியது
யாராலும எதாலும் அதனை நிரப்பமுடியாது
நானும் நீயும் வேண்டுமானால் வார்த்தைகளால் இல்லாது செய்யலாம்.

மூடுதிரை
*************
எழுதும் மெளனத்துள்
பிரளய சப்தம்
திணறுகிறது
விடுபட
புல்லாங்குழல் ஏந்தியவன்
மனதில் பூந்தோட்டம்
மூங்கில் காட்டின்
மரண ஓலம் காற்றில்
மெளனமாய் இருக்கிறீர்களே !
பிணங்களா நீங்கள் ?
உயிர் உள்ளதென்று
சப்தமிடுங்கள் உரத்து
உழுதவனுக்கு மிச்சமாய்
பட்டினியும் பசியும்
உழைத்தவனுக்கு மீதியாய்
நோயும் நொம்பலமும்
சூடும் சுரணையும் ஆறிப்போச்சு
கொதிப்பும் ஆவேசமும் தணிஞ்சு போச்சு
சீக்கிரம் போயி முன்னால க்யூல நிக்கணும்
இசையும் கவிதையும் பணத்தை விளைவிக்கின்றன
கதையும் நாடகமும் காசுகளைத் தருவிக்கின்றன
நெல்லோ? புல்லோ?
மாடுகள் மேய்கின்றன
மது நெடியில் கவியரசர்கள் பிறந்தனர்
கஞ்சாப்புகையில் மகாகவிகள் உதயமாயினர்
வேர்வை வாசத்தில் மனிதக்கலைஞர்கள் உதித்தெழுந்தனர்.

Vasanthadheepan Poems 16 வசந்ததீபனின் கவிதைகள் 16

வசந்ததீபனின் கவிதைகள்




பித்தாய் பெருகுதடி உன் நினைவு
***************************************
நீ தான் என் கவிதையூற்று
நீ தான் என் கற்பனைகளின் பெருங்கடல்
நீ தான் என் கனவுகளின் அமுதசுரபி
காதலின் வலி
கசப்பாகவும் இருக்கும்
இனிப்பாகவும் மாறும்
என் இதயத்தை எடுத்துக் கொண்டாய்
என் உயிரைப் பறித்துக் கொண்டாய்
உன் முத்தத்தையாவது எனக்குக் கொடு
நெஞ்சுக்குள் நீ
நுழைந்ததை அறியேன்
நான் திக்கு முக்காடித் தவிக்கிறேன்.

முள்ளாய் பார்க்காதே
பூவான என் மனம் காயமாகும்
ஒட்டடைகளை நீக்கி விடு
வர்ணம் தீட்டி அழகுபடுத்து
உன் உள்ளத்துள் வசிக்க
நான் வருகிறேன்
என் இதயத்தைக் கொண்டு வா
உன் இதயத்தை தருகிறேன்
திருடியவைகளை
திரும்பப் பெற்றுக் கொள்வோம்
கண்ணீர் மழையில் நனைகிறேன்
காதல் தெருவில் அலைகிறேன்
காலமெல்லாம் தடுமாறி
கசந்த வேதனையில் விழுகிறேன்
தனித்த ஊஞ்சல் நான்
ஆட்டும் உள்ளத்திற்காக ஏங்குகிறேன்
ஆட்டுவித்தால் ஆடாதோ கண்ணே
வாடைக்காற்றிற்கு சற்று விடைகொடுப்பாயா ?

சடசடத்துப் பெய்கிறது ஆற்றாமை
****************************************
மீனாயிருந்தால்  கடல்
பறவை  என்றால்  காட்டுப்பறவை
புலியின்  வாழ்விடம்  பரந்த  வனம்
கடல்  என்னாச்சு
நாடு  கடலாச்சு
எல்லாம்  கிழிபட்ட  நாட்காட்டியாச்சு
சாம்பல்  பறக்கிறது
கங்கு  ஒளிர்கிறது
வெடிப்பு  நெருங்குகிறது.
நெருக்கடிகள்  அதிகரிக்கின்றன
பதற்றம்  சூடு  பிடிக்கிறது
தப்பிப் பிழைக்க  முகாந்திரமில்லை
புருவங்கள்  சுருங்குகின்றன
இமை ரப்பைகள்  அடித்துக்  கொள்கின்றன
வியப்பாய்  அவளின்  வருகை
நாக்கைக் கடித்துக்  கொள்கிறேன்
உதடுகள்  துடிக்கின்றன
பிரிவின்  துயரம்   என்னுள்  பரவுகிறது
கூண்டிற்கு  கதவுகள்   உண்டு
கூட்டிற்கு  திறந்த  வாசல்
விடுதலைக்குள்  வீடுபேறு
குழந்தை  வீறிட்டழுதது
பொம்மை  சோறு  சாப்பிடவில்லை
அன்புக்கு  உண்டோ  அடைக்கும்  தாழ்
விட்டு விடுதலையானால்
வாழ்வே வர்ணமயம்
இதில் பறவைகள் மட்டுமென
யாவுமே ஆகும் வானவில்லாக
பழுப்பேறிய  புத்தகத்துள்
எழுதப்பட்ட  வரிகள்
காதலின்  கானல்வரி  ஓவியம்
வாசிக்கப்பட்டதை  அறியவில்லை  எழுதியவன்.

Vasanthadheepan Kavithigal 13 வசந்ததீபனின் கவிதைகள் 13

வசந்ததீபனின் கவிதைகள்




(1) உச்சிப் பகல்
*************************************
அழித்துக் கொண்டிருக்கிறேன்
அழிய மாட்டேன் என்கின்றன
நினைவுகள்
பறவையின் சிறகாய் இருந்திருக்கலாம்
மரத்தின் வேராய் இருந்திருக்கலாம்
பூவாய் இருந்து கழியுது காலம்
சொல்லில் முகிழ்க்கும் வண்ணப்பூ
உன் இதயத்தில் சூட்டிட விழைகிறேன்
என்னுள் நீ வந்தால்
என் வேலை சுலபம்
மெளனம் உக்கிரமானது
சப்தம் விழலுக்கு இறைத்த நீர்
ரெளத்திரம்
வெறுமையில் உருவாகும் ஆயுதம்
எதுவும் கூற முடியாதிருக்கிறது
ரணகளத்தில் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன
சமாதியிலடங்க முயற்சிக்கும் முனிவனாய் துயரம்
மெழுகுவர்த்திச்சுடர்
மான் குட்டியாய் நடுங்குகிறது
காற்றின் வீச்சு
புலியாய்த் தாவுகிறது
ஜீவ மரணப் போராட்டம்
கரையேற முயல்கிறேன்
கவ்வி இழுக்கின்றன புத்தகங்கள்
நிராதரவாய் முங்கி முங்கி
மூழ்கிப் போகிறேன்
உங்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன
எங்களிடம் கண்ணீர் இருக்கிறது
வெடிகுண்டுகளாய்
உம்மைச் சிதறடிக்கும்.

(2) பறத்தலின் அரசியல்
*****************************
குடும்பத்தை துறந்தான்
கனவுகளைத் தூக்கிக் கொண்டான்
காடு நகரமென அலைந்தான் புத்தன்
துயரத்தைச் சொல்லும் வாய்கள் பூட்டப்படுகின்றன
வலியை வெளிப்படுத்தும் கண்கள் அடைக்கப்படுகின்றன
தகிக்கும் பெருமூச்சு விசுவரூபிக்கிறது
தோற்பதற்கு எதுவுமில்லை
ஜெயிப்பதற்கு எதுவுமில்லை
எளிய சாமான்யனுக்கு எதுவுமில்லை
என் பாத்திரம் நிரம்பவில்லை
உன் பாத்திரம் நிரம்பியதா ?
புத்தனின் பிச்சைப் பாத்திரத்தைக் காணவில்லை
கண்ணீரும் குருதியும்
வெள்ளமாகப் பாய்கிறது
பசி ஓலங்கள்
பேரிரைச்சலாய் ஒலிக்கின்றன

நிம்மதியாய் என்னால்
தேசீயகீதம் பாட முடியவில்லை.
உதட்டில் பூக்கள்
நெஞ்சில் குறுவாள்
துரோகம்
நதியின் இரப்பையை
கூழாங்கற்களின் ஓலம்
நொடிதோறும் அறுத்தபடி…
நடு இரவில் விசில் சத்தம்
விழித்தபடி கேட்கிறேன்
இருள் தன்னந்தனியாக
போய்க் கொண்டிருக்கிறது.

(3) மாயையின் வானவில்
******************************
பரிசளிக்கப்பட்ட நாட்கள்
கை நழுவி.. விழுந்து
உடைந்து போகின்றன
பதை பதைப்புடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கடந்த காலம் கசப்பானது
நிகழ்காலம் முள்ளானது
எதிர்காலம் இருட்டானது
காரிருள் குகை
கால் போன போக்கில் நடை
பிழைக்க எத்தனை வதை
அடிபட்டவள் நிமிர்ந்தாள்
அடித்தவன் தலை குனிந்தான்
புழு பாம்பானது
தீராப் பசி
ஆறாப் பசி
தீயாய் எரியும்.
போதையூட்டுகிறது பெயர்
புகையாய் வெளியேறுகிறது உயிர்
பாலை மண்ணில் பாயுது கானல்நீர்
மனசுகளெங்கும் பூத்திருக்கின்றன
நிதம் பறிக்காமல்
உதிர்ந்தபடி இருக்கின்றன
கனவுகள் தான்
பூக்கட்டிக் கொண்டிருக்கின்றன
நேசத்தைத் தேடி
வனாந்தரங்களில் திரியும் பறவை
தொலை வானத்தில் ஒற்றை நட்சத்திரம்
வானம் பறந்து கொண்டிருக்கிறது
பூமி ஓடிக் கொண்டிருக்கிறது
நான் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

Vasanthadheepan Poems 12 வசந்ததீபன் கவிதைகள் 12

வசந்ததீபன் கவிதைகள்




1
வண்ணத்துப்பூச்சிகள் வருகை
புறாவுக்கு
புலியின் நகங்கள் முளைத்ததோ?
பூக்களும்
ரத்தம் சிந்துதே.
அரிவாள்களும், தீவட்டிகளும்
ஆங்காரத்தோடும், ஆவேசத்தோடும்
தேசமெங்கும்
ஆர்ப்பரித்து அலைகின்றன.
மனிதக் குருதி ருசிக்க
நாக்கைச் சுழற்றியபடி
காலம்
கொக்கின் கவனத்தோடு
காத்திருக்கிறது.
அச்சுறுத்தும் வேதனையை
அறுத்துப் போடு..
துக்கம் விழுங்கித் தவிக்கும்
நரக வாழ்க்கை
வெடித்து நொறுங்கட்டும்…
பூ பூக்காத இருதயங்கள்
பொசுங்கிப் புகட்டும்…
காட்டு விலங்குகளின்
கண்களைப் போன்று
எரியும் ஆன்மாக்கள் யாவும்
பனி மழையில் நனையட்டும்.
வெட்டுக்கள் நிறைந்த முகங்கள் எல்லாம்
நிழல்களின் ஊஞ்சலில்
ஓய்வெடுத்து
ஆறுதலடையட்டும்.
அழகான
அமைதியான
ஆனந்த.
உலகை நிர்மாணிக்க…
வர்ணங்களற்ற
வண்ணத்துப்பூச்சிகள்
பறந்து வரும்..
மனசுகள் பூக்கும் நாள்
மிகு அருகில்.

2
பறவைகளின் சாலை
வானவில்லின் வண்ணங்கள் ஒருமித்திருந்தாலும்
அதனதன் நிலையில் வேறுபட்டிருக்கின்றன
பிரபஞ்சத்தின் பிணைப்பில்
வாழ்க்கை சிக்குண்டு திணறுகிறது
என்கிறது மெய் ஞானம்
கணக்கற்ற உலகங்கள் சுழல்கின்றன என்கிறது
நுட்ப அறிவின் அனுமானம்
அவற்றின் ரகசியங்கள்
இதுவரை எவர்க்கும் புலப்படாமல்
புகைந்து போய்க் கொண்டிருக்கின்றன
ஜனனம்_ மரணம் என்னும் கரைகளுக்கு ஊடாக
பெருக்கெடுத்தோடும் நதியின் துளிகளாய்
கணம் தோறும்
உயிர் உள்ளவைகளும் , உயிரற்றவைகளும் பயணித்தபடியே இருக்கின்றன
இறுதியின் முகவரி எங்குள்ளது ?
தோற்றத்தின் துவக்கப்புள்ளி
எப்பொழுது முகிழ்க்கிறது ?
காலத்தின் அணுக்களை வரையறுத்தது யார் ?
கடவுளின் சாத்தானின் படிமங்களின் உள்ளீடு என்ன ?
எத்தனையோ கேள்விகள்
காற்றின் கூறுகளில் பருண்மையாய்த் திரண்டு உலவினாலும்

மனிதனைத் தவிர்த்து வேறு எதனையும்
அணுக்கமாய் அணுகிட முடியாது என்பது பேருண்மை
வாழ்வின் அசைவுகள்
வெயிலின் தோற்றப்பிழையல்ல
நிழலின் உதிர்வில் உதித்தெழுபவை
தடயங்களையோ.. சுவடுகளையோ
நிரந்தரமாக நினைவுகளில்
வரலாறாய் விட்டுச் செல்பவை
அப்போது ஏற்படும் வெற்றிடம்
கனவின் அதிர்வுகளை
காலவெளிகளில் உற்பவித்துக் கொண்டேயிருக்கும்.