Thirai enum Thinai Book by Eerodu Kathir Bookreview By VijiRavi நூல் அறிமுகம்: ஈரோடு கதிரின் திரை எனும் திணை - விஜிரவி

நூல் அறிமுகம்: ஈரோடு கதிரின் திரை எனும் திணை – விஜிரவி




ஈரோடு கதிர் அவர்கள் எழுத்தாளர், பேச்சாளர், மனிதவள மேம்பாட்டாளர், பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஒரு படைப்பாளர். இதுவரை மொத்தம் ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது மூன்றாவது புத்தகமான ‘உறவெனும் திரைக்கதை’ பல்வேறு மொழித் திரைப்படங்களைப் பற்றி இருபத்தைந்து கட்டுரைகளில் பேசுகிறது.

‘திரை எனும் திணை’ நூல் அவரின் ஐந்தாவது புத்தகம். மொத்தம் 20 கட்டுரைகளை கொண்டது. தமிழ் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களை அலசி ஆராய்ந்து, உற்றுநோக்கி, ஆழ்ந்து ரசித்து, அழகிய நடையில் அதன் சாராம்சத்தை தந்திருக்கிறார். அதனோடு கூட பொருத்தமான வாழ்வியல் சம்பவங்களை இணைத்திருப்பது பெரும் சிறப்பு. இந்தப் புத்தகம் உளவியல் சிக்கல்களை பற்றி பேசுகிறது. பிரச்சனைகளை அலசுகிறது. தீர்வுகளையும் சேர்த்தே முன்வைக்கிறது

திரைப்படங்கள் பார்ப்பது கதிருக்கு மிகப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. தன் தேடலுக்கான புதையலாய், உடன் பயணிக்கும் ஜீவனாய், ஆசுவாசமாய் ஒதுங்கும் கதகதப்பான தாய்மடியாய் நினைப்பது திரைப்படங்களைத் தான். திரைச்சாளரத்தின் வழியே யார் ஒருவரும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் செல்லலாம் என்கிறார். பூவின் மடி, முள்ளின் நுனி, நம்பிக்கையின் வேர், அன்பின் ஈரம், துரோகத்தின் வலியை உணரலாம் என்கிறார். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாசகரும் இந்த அனுபவங்களை உணர வைப்பது இதன் சிறப்பு.

மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். கோபம் என்ற உணர்ச்சி ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறது? அது தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் சேர்த்து எப்படி துன்பப்படுத்துகிறது என விளக்குகிறார் ஒரு கட்டுரையில்.

கோபத்தின் பிறப்பிடம் எங்கே…..?

‘‘காலம் காலமாய் சேகரம் ஆனது சிதறித் தெரிக்கிறதா…? இல்லை நொடிப்பொழுதில் முளைத்துக் கிளைத்து வெடித்துப் பிளந்து வந்து வீழ்த்தி மாய்க்கிறதா..?’’ என்று ஒரு கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர்.

கோபமான ஒரு சொல், உணர்வு, செயல், தொடுகை, பார்வை போதும் ஒரு மனிதனை மிருகமாக்க…. கோபம் என்ற உணர்ச்சி வடிந்த பின் எதை சேகரிக்கப் போகிறீர்கள் அந்த போர்க்களத்தில்…..? இறந்துபோய் கிடக்கின்ற உடல்களையா…? உறைந்து கிடக்கும் ரத்தக் குளத்தையா? இல்லை துடிக்கும் உயிர்களையா…?’ என்ற அவரின் கேள்வி அதிர்ச்சியளிக்கிறது.

கோபத்தை அவர் தீராப்பசி கொண்ட ஒரு மிருகமாக உருவகம் செய்கிறார். பசி கொண்ட ஒரு மிருகம் அதன் இரை கண்ணில் பட்டால், அடித்துத் தின்றுவிட்டு, பசி அடங்கிய பின் படுத்து ஓய்வெடுக்கும். ஆனால் கோபம் என்ற உணர்ச்சி கொண்ட மிருகத்தின் பசி என்றும் அடங்கப் போவதில்லை என்று சொல்கிறார்.

சமூக வலைதளங்களில் பொறுப்பில்லாமல் பகிரப்படும் காணொளிகளை கண்டிக்கிறார். அது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பத்தை சேர்க்கும் என்ற அடிப்படை அறிவும், யோசனையும் இல்லாமல் பகிரும் நெட்டிசன்களுக்கு ஒரு குட்டு வைக்கிறார். அதிலும் எதிர்மறையான கருத்துக்களைப் பகிரும் காணொளிகள் ‘ ஏழு தலைமுறைக்கான எதிர்மறை’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

இந்தப் புத்தகத்தில் பெண்களின் நுண்ணிய மன உணர்வுகளை, வேதனைகளை, காலம் காலமாய் அவர்கள் அனுபவித்து வரும் அடக்குமுறையையும் மிக சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள் மட்டுமே எழுதத் துணிந்த மாதவிலக்கு பிரச்சனை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை ஆண்கள் ஒரு பெண் உபயோகப்படுத்தும் நாப்கினை கையால் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள்? ஏன் எப்போதும் பெண்களின் மாதவிலக்கும், அது குறித்த விஷயங்களும் ஆண்களுக்கு அன்னியமாகவும் இரகசியமாகவும் வைக்கப்படுகிறது என்று கேட்கிறார். ஒரு பெண் தனக்கு இன்று மாதவிலக்கு. அதனால் இன்று லீவு தேவை என தன் ஆசிரியரிடமோ, மேல் அதிகாரியிடமோ சொல்லத் தயங்குவது ஏன்..?

பெண் குறித்த தவறான கோட்பாடுகளையும் கொள்கைகளையும் வைத்திருக்கும் சமூகத்தை சாடுகிறார் ஒரு பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுக்கும் அதிகாரத்தை சமூகத்திற்கு யார் கொடுத்தது?

தன் துணையை இழந்த ஆணோ அல்லது பெண்ணோ தன் முதுமைக் காலத்தில் தன்னுடன் இருக்க துணை தேடும் போது அதனை இந்த சமூகமும், உறவுகளும், நட்புகளும் எதிர்ப்பது ஏன்…? பரஸ்பர புரிதலுடன் கூடிய துணை எவ்வளவு அவசியம் என்பதை அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்.

வாழ்க்கைப் பற்றிய இவரின் கண்ணோட்டம் மிக அழகானது. முழுக்க முழுக்க நேர்மறைகளையோ அல்லது முழுவதும் எதிர்மறைகளையோ கொண்டதல்ல வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்ன தருகிறதோ அதை அப்படியே எதிர்கொள்ளுவது தான் அழகு. வாழ்ந்து பார்த்து விடவேண்டும் இந்த வாழ்க்கையை என்ற சொற்கள் மிகப் பெரும் உத்வேகம் தருகிறது.

‘‘ வாழ்வை ரசிப்பவர்களை, கொண்டாடுபவர்களை அந்த வாழ்க்கைக்குள் அவர்கள் கண்டடையும் ஏதோவொன்று பிரயமுடன் ஒட்டியணைத்து, அவர்கள் விரும்பும் வண்ணம் இயக்கி நகர்த்துகிறது’’
‘வாழ்வு என்பது மரணத்திற்கு எதிரான நிலை’ என்ற கட்டுரையின் இறுதி வரிகளாக மேற்கண்ட வரிகள் அமைந்து பெறும் நம்பிக்கையை வழங்குகின்றன.

கட்டுரைத் தலைப்புகள் கவித்துவமாகவும் பொருத்தமாகவும் அமைந்திருப்பது சிறப்பு. சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய இந்த புத்தகம் ஒரு கருத்து பெட்டகம் என்பதில் ஐயமே இல்லை. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அருமையான நூல் இது.

நூல் : திரை எனும் திணை
ஆசிரியர் : ஈரோடு கதிர்
பதிப்பகம் : வாசல் படைப்பகம்
விலை: 150
விஜி ரவி.

Nigazh Ulagam Book By Prabanjan Bookreview By Vijiravi நூல் விமர்சனம்: பிரபஞ்சனின் நிகழ் உலகம் - விஜி ரவி

நூல் விமர்சனம்: பிரபஞ்சனின் நிகழ் உலகம் – விஜி ரவி




மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை, மனிதநேயத்தின் மகத்துவத்தை தன் கதாபாத்திரங்களின் மூலம் அழகாக படம் பிடித்து காட்டுபவர் பிரபஞ்சன். நிகழ்உலகம் தொகுப்பில் “மனுஷி” சிறுகதையில் ஒரு பசுமாட்டின் உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘பசு அழகாகவே இருந்தது. பெரிதும் வெள்ளை. திட்டுத்திட்டாக ஆரஞ்ச் வர்ணம். பெரிய நாவல் பழம் போன்ற கண்கள். கண்களைச் சுற்றி கருமை… மையிட்டது போல.’ புது இடம் புதிய சூழ்நிலையில் மனம் ஒன்றாமல் இரவு முழுவதும் கால் மாற்றி கால் மாற்றி ‘அம்மா’ என கத்திக் கொண்டே இருந்தது. தொழுவத்தில் தன் தாயோடும், சகோதரக் கன்றுகளோடும் ஒன்றாக வளர்ந்ததை வேறொரு வீட்டில் திடீரென கட்டிப் போட்டதை அந்த கன்றால் தாங்க முடியவில்லை. மிருகமானாலும் அதற்கும் உணர்வுகள் உண்டு என்பதை அழகாக விளக்கியுள்ளார்.

அறுபத்தி ஏழு வயதான அந்த வீட்டின் மூத்த பெண்மணி தான் பசுவை கவனித்துக்கொள்வார். தண்ணீர் காட்டுவது தீனி போடுவது, வாரம் ஒருமுறை குளிப்பாட்டுவது, மஞ்சள் குங்குமம் இட்டு அழகு பார்ப்பது என. …. ஒருமுறை அவர் வெளியூர் சென்றிருந்த இரண்டு நாட்களும் சரியாக சாப்பிடாமல் கோபத்துடன் பிள்ளைகளை முட்ட வந்தது. ஊர் திரும்பிய மனுஷி அதை அணைத்துத் தடவிக் கொடுத்த பின்புதான் அதன் ஆவேசம் அடங்கிற்று. அந்த அம்மாளின் கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடியது. அவர்கள் இருவரின் பாசப்பிணைப்பைப் பார்த்து குடும்பமே அதிசயித்தது. ஆனால், அந்தப் பாசக்கார அம்மாவே பசுவை விட்டு விலக ஆரம்பித்தாள் அது காளை கன்று ஈன்றதும். அவளின் பாராமுகம் பசுவை வதைத்தது. அவளின் போக்கு வீட்டில் உள்ளவர்களை வெறுப்படையச் செய்தது. இப்படி ஒரு ராட்சஸத்தனமா என்று நினைக்க வைத்தது. கடைசியில் மாட்டை விற்றதும் அந்த அம்மாள் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். ‘என்ன இருந்தாலும் அவளும் மனுஷி தானே…?’ என கதை முடியும்.

அதே போல ‘சினேகம்’ சிறுகதையில் கிளி ஜோசியக்கார பெரியசாமி நாயக்கருக்கும், சீட்டு எடுத்துத்தரும் கிளிக்குமிடையேயான பாசமும் அலாதியானது தான்.
‘’உந்திச்சுழி நேராகத் தொடங்கி வயிறு முழுக்க பரவி துணி பிழிவது போல குடலை முறுக்கி ஒரு உதறு உதறி நின்றது வலி. இது பசி. முந்தின நாள் மதியம் சாப்பிட்ட இரண்டு மசால் வடை, ஒரு டீயோடு சரி. அடுத்த நாள் காலை வரை பட்டினி. கடைசியில் அவருக்கு ஒரு வாடிக்கையாளர் கிடைத்து, எட்டணா பணமும் கிடைக்கிறது. அந்தப் பணத்தில் வடையும், டீயும் சாப்பிட்டு தன் பசியைப் போக்கிக் கொள்ள எண்ணுகிறார். ஆனால் பட்டினி கிடக்கும் கிளியின் நிலை மனதை வாட்ட… ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு கிளிக்கு வாழைப்பழம் வாங்கித் தந்து விட்டு தன் பசியைப் பொறுத்துக் கொள்கிறார்.

‘’அப்பாவின் வேஷ்டி’’ சிறுகதையில் ஒரு பட்டு வேட்டி தான் கதையின் மையமாக திகழ்கிறது. ஆசிரியரின் அழகான, விஸ்தீரமான வர்ணனையில் வேட்டியின் வழவழப்பை, தகதகப்பை, அன்னப்பட்சிகள் நிறைந்த வேட்டிக்கரையை, பச்சை கற்பூர வாசனையை, வாசகனால் தொட்டு, ரசித்து, மகிழ்ந்து, நுகர முடிகிறது. ஒரு பிஞ்சுக் குழந்தையை குளிக்க வைப்பது போல அப்பா வேஷ்டியை மென்மையாக துவைத்து அலசி காய வைக்கும் நேர்த்தி, அதை நீவி மடிக்கும் லாவண்யம், அதை உடுத்தியதும் அதிகரிக்கும் அப்பாவின் கம்பீரம் என்று கதை முழுக்க வேஷ்டியின் விவரிப்பு தான்.

அப்பா உலகைவிட்டு மறைந்த பின்பும் பெட்டிக்குள் பத்திரமாயிருக்கிறது வேஷ்டி. ஒரு பிள்ளையார் சதுர்த்தி நாளில் பெரியவனாகி அப்பாவின் வேஷ்டியைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற சிறு வயது முதல் தீராத ஆசை கொண்டிருந்த பிள்ளையின் கனவு நிறைவேறும் தருணம் வருகிறது. மகன் ஆசை ஆசையாய், மிகுந்த எதிர்பார்ப்புடன் அப்பாவின் வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்கிறான். பல வருடங்களாக மடித்து வைத்திருந்த வேஷ்டியின் பின் மடிப்புகள் நீள நீளமாக கிழிந்து விடுகிறது. ‘’அப்பா காலத்து வேஷ்டிடா அது… உனக்கு எங்கே உழைக்கும்? போய் உன் வேஷ்டியைக் கட்டிக்கிட்டு வா’’ என்கிறாள் அம்மா. அந்த வேஷ்டிஅப்பாவிற்குத் தான் பொருத்தம். தனக்கில்லை என அவன் டெரிகாட்டன் வேட்டியைக் கட்டிக்கொண்டு பூஜையில் அமரும் போது மனசுக்குள் எங்கோ வருத்தமாக இருக்கிறது அவனுக்கு. படிக்க நமக்கும் தான்.

‘’ நிகழ் உலகம்’ ‘யாரும் படிக்காத கடிதம்’, ‘வீடு’ ‘கருப்பட்டி’ மற்றும் ‘ மனசு’ சிறுகதைகளும் வாசித்து முடித்த பின் பெரும் தாக்கத்தை மனசுக்குள் ஏற்படுத்த தவறவில்லை.

விஜி ரவி, ஈரோடு.

நூல் : நிகழ் உலகம்
ஆசிரியர் ; பிரபஞ்சன்
பதிப்பகம்; கவிதா பப்ளிகேஷன்
விலை; 70

Kottumelam Book By T. Janakiraman Bookreview by Vijiravi நூல் விமர்சனம்: தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் - விஜி ரவி

நூல் விமர்சனம்: தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – விஜி ரவி




கொட்டுமேளம் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் இருக்கின்றன. வர்ணனைகள் அதிகமின்றி கதாபாத்திரங்களின் சுவையான உரையாடல் வழியே ஒரு தனி உலகையே நம் கண்முன் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

இத்தொகுப்பின் முதல் சிறுகதை ‘கொட்டுமேளம்’. பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கூட படித்த பள்ளித்தோழன் என்ற ஒரே காரணத்திற்காக பலதடவை டாக்டரிடம் வைத்தியம் பார்த்தும் டாக்டர் பீஸ் முந்நூறு ரூபாயை டாக்டருக்கு கொடுக்காமல் ஏமாற்றும் மாரியப்பன் பஞ்சாயத்துத் தேர்தலில் ஜெயித்து சேர்மன் ஆனதைக் கொண்டாடும் விதமாக கொட்டுமேளம், தவில், நாயனம் என பணத்தைக் கண்டபடி வாரியிறைத்து, அமர்க்களமாக ஊருக்குள் தொண்டர்கள் புடை சூழ ஊர்வலம் வருகிறான். அவன் கண்களில் படும்படி தனியார் ஆஸ்பத்திரி முன்பு தர்ம வைத்தியசாலை என்ற பலகையை தொங்க விடுகிறார் அந்த மருத்துவர். பிழைக்கத் தெரியாதவர் போல என்ற எண்ணம் மேலெழுந்தவாரியாக மனதில் எழுந்தாலும் மாரியப்பனின் சின்ன புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இந்த கதையில்.

‘’பசி ஆறிற்று’’ என்ற கதையின் தலைப்பே சுவாரசியமும், ஆழமான அர்த்தமும் கொண்டது. ‘’ இந்த டாமரச் செவிட்டுக்கு வாழ்க்கைப்பட்டாகி விட்டது. குருக்கள் பெண் குருக்களுக்கு தான் வாழ்க்கைப் பட வேண்டும் என்றாலும் அப்பாவுக்கு இந்தப் பூ மண்டலத்தில் வேறு ஒரு வரன் கூடவா அகப்படவில்லை…? செவிடாய் போவதை விட மட்டம் ஒன்றுமே இல்லை..’’ என்ற அகிலாண்டத்தின் ஆதங்கமும், மிலிட்டரி உத்தியோகத்தில் இருக்கும் அடுத்த வீட்டு ராஜத்தின் அழகில் மனம் லயித்து அலை பாய்வதும், அவன் ஊருக்கு கிளம்பியதும் வேதனை தாளாமல் அழுவதுமாக மனதை குழப்பிக் கொள்கிறாள் அவள். ‘’ரொம்ப நாழி பண்ணிட்டேனா…? பசி துடிக்கிறதாக்கும் அம்பாளுக்கு?’’ வெயிலில் நடந்து வந்து, தேகம் வேர்த்து விறுவிறுத்தாலும், கனிவுடன் பரிவுடன் ஜென்மத்திலேயே கோபத்தை அறியாத கண்ணும், உதடும் வழக்கம்போல புன்சிரிப்பில் மலர கணவன் கேட்டதும் மயங்குகிறாள். அவள் மனதும் மாறிப்போகிறது. ‘’இதைவிட என்ன வேணும்?’’ என கற்பனையை உதறி நிதர்சனத்தை ஆராதிக்கத் தொடங்குகிறாள். ‘எல்லாப் பசியும் தீர்ந்து விட்டது’ என்ற கடைசி வரியே அவள் மனமாற்றத்திற்கு சான்று.

‘’தவம்’’ சிறுகதையில் அழகி சொர்ணாம்பாளின் சௌந்தர்யத்தில் மயங்கி பல பெரும் செல்வந்தர்கள் அவள் காலடியில் பணத்தைக் கொட்ட…. அதைப் பார்க்கும் வேலைக்காரன் கோவிந்தவன்னிக்கும் பெரும் செல்வம் சம்பாதித்து அவளிடம் தந்து அவள் அன்பைப் பெற எண்ணுகிறான். சிங்கப்பூருக்கு சென்று பத்து வருடங்கள் படாதபாடுபட்டு, குண்டு, பீரங்கி, குத்து வெட்டுக்கு நடுவில், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, கட்டின மனைவியைக் கூட நினையாமல் ஒருகணமும் சொர்ணாம்பாளை மறக்காது காலம் தள்ளும் கோவிந்த வன்னி…. ஊர் திரும்பி ஆசையாசையாய் அவளைப் பார்க்க வருகிறான் கட்டுப் பணத்துடன்.

‘’ கொன்றைப்பூ நிறம் அப்படியே அற்றுப்போய் உடல் பச்சை பாய்ந்து கருத்திருந்தது. கூனல் வெகுநாள் கூனல் போல…. தோள்பட்டையிலும் கன்னத்திலும் எலும்பு முட்டிற்று.
தலை முக்கால் நரைத்து விட்டது. வகிட்டுக் கோட்டில் வழுக்கைத் தொடங்கி அகன்று இருந்தது. அவள்தான் சொர்ணாம்பாள் என தெரிந்துகொள்ள இரண்டு நிமிஷம் ஆயிற்று அவனுக்கு. அழகில்லாதது கோரமாகலாம். அழகு கோரமானால்…..? பயங்கரமாக இருந்தது அவள் தோற்றம்.’’

“தவங்கிடக்கிறதுக்கு முறை உண்டு. கண்டதுக்கெல்லாம் தவங்கிடந்தா மனசுதான் ஒடியும். தண்டனைதான் கிடைக்கும்’’ என்ற அவளின் பதில்தான் அவனின் பத்து வருட தவத்திற்கான வரமாய் இல்லாமல் சாபமாய், இடியாய் அவன்மேல் இறங்குகிறது.

ஒன்றாம் வகுப்பு வாத்தியாரின் மகளாக பிறந்து உடன்பிறந்தோர் எட்டுப் பேரின் கூட்டத்தில் ஒரு வேளை சாப்பாடு கூட வயிறு நிறைய உண்ண முடியாமல், ஜட்ஜ் வீட்டில் பெரிய மனுஷி போல் பத்துப் பாத்திரம் தேய்த்து, காபி, டீ போட்டு, இட்லி தோசைக்கு அரைத்து, குழம்பு, ரசம் வைத்து, கோலம் போட்டு, அடுப்பு மொளுகி, வேஷ்டி புடவை துவைத்து, கைக்குழந்தையை கவனமாகப் பார்த்துக் கொண்டு…… என நீளும் வேலைகளை அனாயசமாக செய்யும் ஏழு வயதுக் காமாட்சி…. இரண்டு வேளை சாப்பாட்டுக்கு சம்பளம் இல்லாமல் உழைக்கும் காமாட்சி கண்கலங்க வைக்கிறாள். ஒன்பது வயதில் பெற்றோரை விட்டு ஊரை விட்டு கண்காணாத தொலைவுக்கு கல்கத்தாவுக்கு வேலைக்குப் போகும் காமாட்சி…..

ஒரு ஆரஞ்சுப் பழத்துக்கு பெங்களூரிலிருந்து கேட்டு நச்சரித்து திருச்சிராப்பள்ளியில் அது கிடைக்கப் பெற்றதும் அதைத் தின்னாமல், ‘ஊருக்கு போய் அம்மா கிட்ட கொடுத்து அவள் உரித்து தந்து சாப்பிடுறேன்’ என்று அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் ஆறு வயது பையன். ரயிலில் சந்தித்த திடீர் சினேகிதி காமாட்சிக்கு அவனின் பிரியமான ஆரஞ்சுப்பழத்தைப் பரிசாக தந்து விட்டு அவனுடைய ஸ்டேஷனில் தந்தையுடன் இறங்கும்போது அந்த சின்ன குழந்தையின் அன்பில் மனம் கரைந்து சிலிர்த்து தான் போகிறது ‘’சிலிர்ப்பு’’ சிறுகதையில்.

நூல் : கொட்டுமேளம்
ஆசிரியர் ; தி. ஜானகிராமன்
பதிப்பகம்; காலச்சுவடு
விலை; 214

Poovarasi Book by Yasotha Pazhanisami Bookreview by VijiRavi. நூல் அறிமுகம்: யசோதா பழனிசாமியின் பூவரசி - விஜிரவி

நூல் அறிமுகம்: யசோதா பழனிசாமியின் பூவரசி – விஜிரவி




சிறுகதை வாசிப்பது ஒரு சுகமான அனுபவம். அதுவும் ஒரு சிறுகதைத் தொகுப்பே கையில் கிடைத்தால், பலவித வண்ணங்களில் கண்களுக்கு விருந்தளித்து , விதவித நறுமணத்துடன் மனதையும் கொள்ளை கொள்ளும் பூந்தோட்டத்தில் புகுந்த ஒரு உணர்வுதான் ஏற்பட்டது ‘’பூவரசி’’ என்ற சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது.

கோழிக்கறி சாப்பிடாமலேயே இறந்துபோகும் அத்தையை நினைக்கும் போது ரகுவிற்கு மட்டுமல்ல…. நமது மனமும் கலங்கித்தான் போகிறது. ‘கலைந்து போகும் கனவுகளில்’ தன் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த சாராயக்கடை மேல் விவேக்குடன் சேர்ந்து நமக்கும் கோபம் வருகிறது. ‘’அவரு ஒண்ணும் செய்ய வேண்டாம். பொண்ணுக்கு அப்பாவா வரவேற்பில வந்து நின்னா போதும்’’ என்று பூவரசியின் வார்த்தைகளில் முகம் தெரியாத பல்லாயிரக்கணக்கான உழைக்கும் பெண்களின் பிம்பங்களை தரிசிக்க முடிகிறது.

தினக்கூலியில் பிழைக்கும் ஏழை வர்க்கத்திற்கு சொந்த வீடு வெறும் காகித வீடாகவே போகும் அவலம் தான் என்ன…? காய்கறி சந்தையில் கனவுகளுடன் அல்லாடும் சகோதரிகள், அறுந்துபோகும் இழைகளுடன் தினமும் மல்லுக்கட்டும் நெசவுத் தோழர்கள், மருத்துவமனைகளில் கழிவறை சுத்தம் செய்யும் புண்ணிய ஆத்மாக்கள்… என எளிய மக்களின் வாழ்வியலை கையில் எடுத்து, உணர்வுபூர்வமாக கதை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இனிக்கும் கொங்குத் தமிழில் விளையாடி இருக்கிறார் ஆசிரியர்.

தேர்ந்த எழுத்துநடை, கவித்துவமான தலைப்புகள், உணர்வுகளுக்கு உயிர் ஊட்டும் விதமாக அமைந்த கதாபாத்திரங்கள் என அமைந்திருப்பது சிறப்பு. ஒவ்வொரு கதையை படித்து முடித்த பின்பும் அதைப்பற்றி பத்து நிமிடம் யோசிக்க வைக்கிறது.இது ஆசிரியரின் முதல் நூல் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. சகமனிதனின் பரிதவிப்பை, அவனது ஆசையை, ஆசாபாசங்களை, தாய்மை உணர்வுடன் வடித்தெடுத்து, மனிதநேயத்தை நூலாகக் கொண்டு பதினாறு முத்துக்களைக் கோர்த்த அழகிய மாலை தான் பூவரசி என்ற சிறுகதைத்தொகுப்பு. அங்கங்கே காணும் சில சந்திப் பிழைகளைத் தவிர இதில் குறை ஏதும் காணமுடியாது.

புத்தக தலைப்பு – பூவரசி
ஆசிரியர் – யசோதா பழனிசாமி.
வெளியீடு – வாசல் படைப்பகம்.
விலை – 170.