Vanavasigal Book by P. Sasikumar Bookreview By V. Shankar நூல் அறிமுகம்: பெ. சசிக்குமாரின் வானவாசிகள் - வே. சங்கர்

நூலின் பெயர் : வானவாசிகள்
நூலின் : முனைவர் பெ.சசிக்குமார்
பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
பக்கங்கள் : 128
விலை : 120
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

பரந்துபட்ட வாசிப்பில், ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது விசயம் மூளைக்கும் உட்கார்ந்துகொண்டு அச்செய்தியோடு தொடர்புடைய மற்ற செய்திகளையும், உள்மனம் நினைவுகூர்ந்து கிளறிக்கொண்டே இருக்கும். 

அப்படித்தான் முனைவர் பெ.சசிக்குமார் அவர்களின் “வானவாசிகள்” (பறக்கும் நுட்பம் குறித்த அறிவியல் பார்வை) என்னும் நூல் விளக்கிச் சொல்லும் செய்திகள்.

உண்மையில், வானவாசிகளான பறவைகள், கூட்டமாகப் பறந்தாலும் அழகு, தனியாகப் பறந்தாலும் அழகு. இந்நூலை வாசித்த பிறகு, காலை மற்றும் மாலை நேர நடைபயிற்சியின் போது பறவைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

புதரில் இருந்து விர்ரென்று குறுக்கே பாய்ந்தோடும் பறவைகள், ஆங்கில ‘வீ’ வடிவத்தில் பறந்து செல்லும் பறவைகள், மரத்தின் உச்சிக்கொம்பில் அமர்ந்துகொண்டு பாட்டுப்பாடும் பறவைகள், தோரணம் கட்டியதுபோல் கரண்ட் கம்பிகளில் வரிசைகட்டி அமர்ந்துகொண்டு அழகுகாட்டும் பறவைகள், மெல்லிய பூவின் காம்பில் அமர்ந்துகொண்டு தேனெடுக்கும் பறவைகள், பலம்கொண்ட கழுகைத் துரத்தியடிக்கும் குட்டிப்பறவைகள், கீச்சிட்டுக்கொண்டே இருக்கும் குஞ்சுகளுக்கு உணவூட்டும் பறவைகள், விசிலடித்தால் எதிர்பாட்டுக் குரல் கொடுக்கும் பறவைகள் என்று நாள்தோறும்  ஏதேனும் ஒரு பறவை அல்லது பறவைக் கூட்டத்தை தொடர்ந்து கவனிக்கவும் அவற்றை நேசிக்கவும் முடிந்தது. 

இத்தனை நாட்கள் பார்த்த அதே பறவைகள்தான் என்றபோதும், படிப்படியாக பறவைகள் பறக்கும் விதத்தை உற்று நோக்க வைத்தது இந்தநூல்தான். 

வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு மனநிலையில், பறவைகளைப் பற்றிக் கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றியது தற்செயலா அல்லது திட்டமிட்டா என்று வேறுபடுத்திபச் சொல்லத் தெரியவில்லை.  ஏனெனில், சில பறவைகளின் சிறகடிப்பும், சிருங்காரமும் சிலிர்ப்பூட்டுபவை. 

இறகும் இறக்கைகளும் என்று தலைப்பிடப்பட்ட உரையாடலை வாசித்தபிறகு, நடந்துசெல்லும் சாலையின் ஓரத்தில் ஏதாவது ஒரு இறகு தட்டுப்பட்டால்போதும், பள்ளிக்கூடச் சிறுவனைப்போல், உடனே அதைப் பொறுக்கி எடுத்து அது எந்தப் பறவையின் இறகாக இருக்கும் என்ற ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது என்னளவில் பெருங்கதை. 

இந்நூல், இரண்டாம் வகுப்பு படிக்கும் கௌதம் தனது அண்ணன் கோகுல் மற்றும் அத்தை மகள்களான சிருஷ்டிகா மற்றும் கௌசிகா ஆகியோருடன் ஈரோடு அருகில் உள்ள வெள்ளோடு சரணாலயத்திற்கு செல்கிறான்.  அவனது சந்தேகங்களுக்கும் மற்ற மூன்று குழந்தைகளுக்குமான உரையாடல் மற்றும் அவர்களது சந்தேகங்களுக்கு அவர்களது மாமா தரும் பதில்கள் என்ற அளவில் இந்நூல் நம்மையும் அவர்களோடு நடைபோட வைக்கிறது.

சற்றேரக்குறைய 15 தலைப்புகளின்கீழ் உரையாடல் வடிவிலும், அதே சமயம் கதைசொல்லும் வடிவிலும் இந்நூலை வடிவமைத்திருப்பது சிறப்பிலும் சிறப்பு. பரவசமூட்டும் பறவைகளின் வாழ்வியலை குழந்தைகளுக்கேற்ற நடையில் எழுதப்பட்டிருப்பதால். பறவை ஆர்வலர்களுக்கு இந்நூல் மிகவும் பிடிக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியும்.

பறவைகள் பலவிதம் என்று அனைவருக்கும் தெரியும். அவைகள் பறக்கும் விதமும் பலவிதம் என்பதை படம்போட்டு விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாதாரண பாமரனுக்கு எழும் “என்னால் பறக்கமுடியுமா?” என்ற கேள்விக்கு விடை எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு பறவை அதிகபட்ச வேகத்தில் செல்லும்போதும், முன்னோக்கிச் செல்லும்போதும், பின்னோக்கிச் செல்லும்போதும், பறந்துகொண்டே ஒரே இடத்தில் நிற்கும்போதும்  தனது சிறகை எவ்வாறு உபயோகித்துப் பறக்கிறது என்ற தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எப்போதெல்லாம் வெளிநாட்டுப் பறவைகள் வரத்து அதிகமாக இருக்க்கும்?, பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பறவைகளின் பங்கு என்ன?  பறவைகள் வலசை செல்லும் பயணத்திற்க்கு எவ்வாறு தயாராகின்றன? என்று ஏராளமான கேள்விகளுக்கு மிக எளிமையாக  ஒரு கதை சொல்லும் பாணியில் பதில்கள் எழுதப்பட்டிருக்கிறது.

தொலைதூரப் பயணத்தை மேற்கொள்ளும் பறவைகள் ஏன் கூட்டமாகவே செல்கின்றன? என்ற கேள்வி மற்றவர்களுக்கு எழுவதைப்போல் எனக்கும் எழுந்ததுண்டு.  இந்நூலைப் படித்தபிறகுதான் அதற்கான விடையை அறிந்துகொண்டேன்.

அதைவிட ஹைலைட்டான விசயம், வல்லூறு, நாரை, பிஞ்ச், மரங்கொத்தி, காகம் போன்ற பறவைகள் பறக்கும் விதத்தைப் பற்றி வாசித்தபிறகுதான், அட! ஆமாம்! இத்தனை நாட்களாக இதனைக் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று வெட்கம்கொள்ள வைத்தது. 

இன்னும் சொல்லப்போனால், பறவைகளிலேயே மிகப்பெரிய இறக்கைகொண்ட பறவை மயில் என்றுதான் இத்தனை காலமாக எண்ணிக்கொண்டிருந்தேன்.  ஆனால் ஆல்பட்ரோஸ் என்னும் பறவைதான் இப்புவியில் இருக்கும் பறவைகளிலேயே மிகப்பெரிய இறக்கை கொண்ட பறவை என்ற தகவல் எனக்கு முற்றிலும் புதிது.

படித்தவர்களுக்கு அவ்வப்போது எழும் சந்தேங்களைத் தீர்ப்பதற்காகவும், இக்கால பள்ளி மாணவர்கள் எளிதாக அறிந்துகொள்வதற்காகவும் எழுதப்பட்டுள்ள இந்நூல் இயற்கை எவ்வாறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பேருதவியாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இந்நூல் முழுவதும் விரவிக்கிடக்கும் பறவை பற்றிய தகவல்கள் ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்நூலை ஒருமுறைக்கு இருமுறை வாசித்தபிறகு, பறவையின் காதலன் ஆகியிருக்கிறேன்.  வரப்போகும் கோடைகாலத்தில் பறவைகளுக்குத் தண்ணீரும் உணவும் தரத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் குழந்தைகளே. நீங்களும் என் கருத்துக்குச் செவிசாய்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.  

வாசியுங்கள் இந்நூலை.  ”வானவாசி”களோடு வசியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *