காலம் காலமாய் கனவுகளிலேயே மிதந்தும் இன்னும் என் பெற்றோரை அவர்களுடைய பெற்றோரும்,
என்னை என் பெற்றோரும்,
நான் என்னுடைய குழந்தைகளையும்
கரைசேர்க்க முடியாமல் போனதற்கு
எது காரணம்?
விதியா? இறைவனா?
இறைக் கொள்கைகளை கேட்டும், பார்த்துமே வளர்ந்துவிட்ட நாம் சமாதானங்களுடனே வாழவும் இறைக்கொள்கைகளால் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
இந்த நூல் சமுதாயம் தேய்ந்த நிலையிலேயே இருப்பதற்கும், வறுமைக் கோட்டை தாண்டாமல் இருப்பதற்கும் ,
மானுடரின் கண்கள் எல்லாம் கனவின் தீவுகளாக மட்டுமே மாறுவதற்கும் கல்வி ஓர் அரசியல் ஆனதே காரணம் என்று ஆதாரங்களுடன் விளக்குகிறது.
தமிழகத்தின் இந்த வேதனைகள் எல்லாம் எதனால் எதனால் என ஒவ்வொரு காரணத்தையும் அந்தந்த இடத்திலேயே வெளிச்சம் பாய்ச்சி விழிப்பூட்டுகிறது.
1990 காலகட்டத்தில் அரசியலாகிப்போன கல்வி கலைத்திட்டத்தில் படித்து வளர்ந்ததால்,
சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம் என்ன என்பதை அறிய இயலாமலும்,கேள்வி கேட்கத் தெரியாமலும்,இயல்பான மனித உணர்வால் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் கண்டு இரக்கப்பட்டுக் கொண்டும் மனித உணர்வை வெளிப்படுத்தினேன்.
என் நிலையை உயர்த்திக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவால் கிடைத்தப் பணியை ,கலைத்திட்டம் சொன்ன பாடத்திட்டத்தை முடித்தல், தேர்வுக்கு மாணவரை தயாரித்தல் என்பதாகவே ஐந்துவருடமாக ஆசிரியப் பணியைத் தொடர்ந்தேன்.
ஆனால் சமுதாய மாற்றத்தில் என் பங்கு என்ன?
என் பிள்ளைகளின் வாழ்க்கை முழுமைப்பெறும் சூழல்கள் இல்லையே காரணம் என்ன? என்ற தேடலின் போதே, பேராசிரியர் ச. மாடசாமி அவர்களின் புத்தகங்கள் குழந்தைகளின் மீது அக்கறையையும் அன்பையும் கொள்ள வேண்டிய வழிமுறைகளை விளக்கியது.
அந்த அக்கறையும் அன்புமே, அரசுப் பள்ளிக் குழந்தைகளின் நிலை மாறாமல் இருப்பதற்கான காரணத்தை தேடக் கற்றுத்தந்தது.
நம் எண்ணம் வழியே நம் செயல் இருக்கும் !!!
உண்மைதானே!!!
சமுதாயம் ஏன் இப்படி இருக்கிறது?
மாற்றம் ஏற்பட என்ன வேண்டும்?
எதனால் இப்படி இருட்டில் இருக்கிறது?
கல்வி எப்படி உலகாயுதத்தின் ஒரு கருவியாக மாறி, நம்மை நம் வாழ்வை பறித்துக்கொண்டிருக்கிறது என்பதை வசந்தி தேவி அவர்களின் கல்வி: ஓர் அரசியல் என்ற நூல் தெளிவாக்குகிறது
யார் வசந்தி தேவி?
தமிழகத்தின் மூத்த கல்வியாளர். 1938 ல் பிறந்தவர். வரலாற்றுப் பேராசிரியராக பணிபுரிந்து, பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்து ஓய்வுக்குப் பிறகு மனித உரிமைக் கல்வி அமைப்பில் பொறுப்பிலிருந்தவர். கல்விக்காகவே உழைத்து ,, கல்விக்காகவே சிந்தித்து,எளியவர்க்கும் கல்வியை உரியதாக்கும் மும்மற்சியில் கல்விக்காகவே தன் வாழ்நாளை ஒப்படைத்தவர். தற்போது 80 வயதான வசந்திதேவி அவர்கள், தமிழகத்தின் அவலங்களை எல்லாம் காணச்சகியாமல், அவலங்களுக்கு காரணம் பொதுக்கல்வி பறிப்புதான் என்பதை அனைவரும் அறியவும், அந்தப் பொதுக்கல்வியை மீட்டு மீண்டும் சமுதாயத்தின் கையில் ஒப்படைக்கவும் தற்போது அரசுப் பள்ளிகளைக் காக்க பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கி தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அறிமுகம் குறைவே.
கல்வி : ஓர் அரசியல் இந்நூல் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கல்வியில் நிகழ்ந்துள்ள அரசியல் பற்றிக் கூறுகிறது.
எப்படியான கல்வி வேண்டும்?
கல்விக்கு இருவகையான உயிர்ப் பிணைப்புகள் தேவை. ஒன்று. பரந்து விரிந்த உலக அறிவுடனானது. இன்று அசுர வேகத்தில் வளர்ந்துவரும் அறிவுலகின் அனைத்துப் பலன்களும் நம் மாணவர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். மற்றொன்று நம் மண்ணுடன், மக்களுடனான பிணைப்பு.
உலக அறிவுக் களஞ்சியங்களைக் கிரகித்துக்கொண்ட மாணவர்கள் மூலம் அவ்வறிவின் பலன்கள் நம் சமுதாயத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் சென்று பரவ வேண்டும். ஆனால் நம் நோக்கமெல்லாம் முதல் பிணைப்பை உலக அறிவுடனான பிணைப்பை உண்டாக்குவதில் மட்டுமே நிலைகொண்டிருக்கிறது. நமது மண்ணுடனான பிணைப்பைஉருவாக்குவதற்கான அறிகுறியே இல்லை.
சமுதாயம் உயர்வு தாழ்வு நிலையிலேயே ஏன் உள்ளது என்பதற்கான காரணம்புரிகிறதா? கல்வியில் தான்உள்ளது!!!
கல்வி ஓர் அரசியல் நூலின் கருத்துகள் அனைவராலும் அவசியம் அறிந்துகொள்ளப்பட வேண்டியவை.
புத்தகம் இல்லாதவர்களுக்காகவும்,
வசந்தி தேவி அவர்களின் எழுத்தின் பிரமிப்பை உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் புத்தகத்தின் கருத்துகளை எனக்குப் புரிந்த அளவில் எழுத விரும்புகிறேன்.
மீண்டும் கல்வி ஓர் அரசியல் கருத்துடன் சந்திப்போம்.
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை : 220ரூ
ஆசரியர்: வசந்திதேவி.வே
– உதயலஷ்மி
[button link= “https://thamizhbooks.com/mattru-kalvi-kolkaikkana-makkal-sasanam-10921.html”] புத்தகத்தை இங்கு வாங்கலாம் [/button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *