வார்த்தைகளைச் சுழற்றி
வானத்தில் வீசினேன்… அதில்
வண்ணம் பூத்துக்குலுங்கும்
வார்த்தைகள் சில
பூமிக்குத் திரும்பின!
அதில் கனலாய்ச்
சிவந்த வார்த்தை ஒன்று
சமத்துவம் கேட்டது
ஞானம் கருமையாய்த் திரண்ட
வார்த்தை ஒன்று
பகுத்தறியச் சொன்னது
நீலத் தெளிந்த
வார்த்தை ஒன்று
சமூக நீதி கேட்டது
சரம் சரமாய் பொழியும்
வார்த்தைகளின்
இசைக்கும் ஓசைக்கும் தலையாட்டிக்கொண்டே
இருந்தேன்
வசமிழந்த வார்த்தைகள்
தலையாட்டுதல்
பொம்மைகளின் வேலை
வினையாற்றுதலே
உயிர்களின் கடன் என்றது.
வசமிழந்த நான்
வார்த்தைகளைச் சுழற்றி
வானத்தில் வீசியெறிந்தேன்
அதில் மின்னும் சில
எரிநட்சத்திரங்கள்
என்னவையாய் இருக்கக்கூடும்!
– சூர்யா, சென்னை.