ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சிறையில் ஒளிரும் நட்சத்திரம் { ஒரு சிறை காவலரின் அனுபவ பதிவுகள்}  -கவிதா பிருத்வி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சிறையில் ஒளிரும் நட்சத்திரம் { ஒரு சிறை காவலரின் அனுபவ பதிவுகள்} -கவிதா பிருத்வி

      ஆசிரியரின் என் உரையில் சிறைத்துறையில் வேலை செய்யும் காவலர் நலனுக்காக 8 மணி நேர வேலைக்குக் குரல் கொடுத்து இருமுறை பணி நீக்கம் செய்யப்பட்டதையும் பணியிட மாறுதல் ஊதிய வெட்டு போன்ற சிரமத்திற்கு ஆளானதையும் குறிப்பிடுகிறார். ஆசிரியரின் சிறைத்துறை வேலையிலிருந்த ஆர்வத்தையும் நேர்மையையும்…
நூல் அறிமுகம்: மதுரை நம்பியின் ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ – செ.தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: மதுரை நம்பியின் ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ – செ.தமிழ்ராஜ்




ஒரு நண்பரிடம் இரவல் வாங்கி இப்புத்தகத்தை வாசித்து முடித்தேன். வாசிக்க வைத்திருந்த நூல்களின் அணிவரிசையில் எல்லாப் புத்தகங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வாசிப்பில் மிகுந்த சுவாரஸ்யத்தை தந்ததோடு கம்பிகளுக்கு பின்னால் நிற்கும் கைதிகளின் வாழ்வியல் துயரங்களும் குற்ற நிகழ்சம்பவங்களும் மனதில் பெரும்பாரத்தை ஏற்படுத்திவிட்டது. காக்கிசட்டைக்குள் ஒரு கம்யூனிஸ்ட் என்பதே ஒரு ஆச்சர்யமாக இருந்தது. அந்த பொது உடமை சிந்தனைதான் மற்ற காவலருக்கும் அவருக்கும் உள்ள மனிதநேய சிந்தனைகளை படம்பிடித்துகாட்டி இருக்கின்றது.

சிறைக்கொட்டடிக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்பது வெளியுலகம் அறியாதது. அதனை அறிந்தவர்கள் அங்கே செல்ல அச்சப்பட்டு குற்றம் செய்ய துணியமாட்டார்கள். கணநேர கோபத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தவறிழைத்துவிட்டு காலமெல்லாம் கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் கைதிகளின் துன்ப துயரங்களை வாசர்களின் பார்வைக்கு வைக்கின்றார். இவையாவும் புனைவுகள் அல்ல என்பதால் கூடுதல் வலியேற்படுத்துகின்றது.

இவரின் முதல் புத்தகமே ஒரு தேர்ந்த எழுத்தாளனின் லாவகத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. சிறைப்பறவைகளின் வலிகளை சொல்லும் அதே நேரத்தில் ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவைகளையும் தூவிச்செல்கிறார். தண்டனை கைதிகளின் காயங்களை சொல்லும் அதே நேரத்தில் சிறைக்காவலர்களின் சிரமங்களையும் பதிவு செய்கிறார். நாணயத்தின் இரண்டுபக்கமும் பதிவாகி இருப்பதால் இப்புத்தகம் மதிப்பு பெறுகிறது. வாசகர்கள் வாசிக்க செல்லத்தக்கது இனி நூலிற்குள் நுழைவோம்.

பறவைகளிடம் நட்பு கொள்ளும் நாகு கோனார் எப்படி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கூண்டிற்குள் தன்னை அடைத்துக்கொள்கிறார் விசித்திரமாக இருக்கின்றது. மனிதர்களின் உளவியலை புரிந்துகொள்ள முடியவில்லை. அடிக்கடி திருட்டு வழக்கில் வந்து போகும் ஐயப்பன் பாடகராகவும் சிகை அலங்காரக் கலைஞராகவும் தனித்திறமை காட்டுகிறார். கைதிகள் மட்டுமல்ல காவலர்களும் முடிவெட்டிக்கொள்வது அவரின் கைத்திறமைக்கு கூடுதல் சான்று. வேலைக்கு போன சிறை கண்காணிப்பாளரின் வீட்டிலேயே சைக்கிளை திருடுவதும் அதை விற்க முடியாமல் கிணற்றில் போட்டுவிட்டு தப்பிப்பதும் பின் வேறொரு வழக்கில் தண்டனை பெற்று வருவதும் அவரது தொடர்நிகழ்வுகளாக இருக்கின்றது. திருடப்பட்ட சைக்கிள் குறித்தான முன்பின் கதைகள் சுவாரசியமானவை. 100 ரூபாய் கடனை வசூலிக்க போனகந்தசாமி கொலை வழக்கில் உள்ளே வருவதும் மன்னிப்பு மறுக்கப்பட்ட நீண்டகால சிறைவாசியாக மனநோயாளியாக இருப்பதும், மருத்துவமனைக்கு வைத்தியம் பார்க்க நீண்ட வருடம் கழித்து வெளியே வருவதும், மதுரையின் புதிய மாற்றங்களை குழந்தையின் குதூகலத்தோடு வேடிக்கை பார்ப்பதும், கோரிப்பாளைத்தில் தேநீர் அருந்திகொண்டே புதிய உலகை கண்டு பரவசமாவதும், விடுதலை உத்தரவு வருகையில் உலகைவிட்டே விடுதலையாகி இருப்பதும் சோகப் பெருங்கதை.

சிறைக்கைதிகளின் பாலுணர்வு வேட்கையை தணித்துக்கொள்ள விருப்பமுள்ளோர் ஓரினச்சேர்க்கை ஏற்படுத்திக்கொள்வார்கள் என்பது ஓரளவு அறிந்ததுதான் பூமணி எனும் திருநங்கை கைதியின் வாயிலாக அவர்களின் பிரச்சனையை நாகரீகத்தோடும் ஆபாசமற்ற நகைச்சுவையோடும் காட்சிபடுத்தி இருக்கின்றார். பீடி, சிகரெட், கஞ்சா, அசைவ உணவு, பாலுணர்வு சிக்கல்கள் என எத்தனை பிரச்சனைகளை கைதிகள் சந்திக்க நேரிடுகிறது என்பதை தெளிவாக சொல்லி இருக்கின்றார். குற்ற மனப்பான்மை உள்ள மனிதர்கள் இந்த புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால் அவர்கள் சிந்தனையில் நிச்சயம் மாறுதல் ஏற்படும்.

குருவியும் குருசாமியும் அனுபவத்தை படிப்பவர்கள் நிச்சயம் கண்கலங்கிப் போவார்கள். இந்த சமூக அமைப்பு மனிதர்களை என்ன மாதிரியெல்லாம் வார்த்தெடுத்து வந்திருக்கின்றது. பாசம் காட்டி வளர்த்த அண்ணன் அண்ணியின் தலையை துண்டித்துவிடுமளவு மனைவியால் வெறியூட்டப்பட்ட மனிதன் தூக்குதண்டனை கைதியாய் சிறைக்கு வருவதும், தான் தூக்கி வளர்த்த அண்ணன் மகனும் தன் மச்சினனை கொலை செய்துவிட்டு சிறைக்கு வருவதும், தூக்கிலிடுவதற்கு முன் அண்ணன் மகனிடம் மன்னிப்பு கேட்பதும், அவன் மன்னித்ததும் நிம்மதியாய் தூக்குமேடைக்கு போவதும், இறந்தபின் அண்ணன் மகன் மொட்டையடித்துக்கொள்வதும் கண்கலங்க வைக்கும் சோகசித்திரங்கள்.

நம்மால் நம்பவே முடியாத ஒருவர் கொலைக்கைதியாய் உள்ளே வருவதை ஜீரணிக்கவே முடியவில்லை.எழுத்தாளர் சௌபா தனது மகன் பொறுக்கித்தனமாய் திரிவதைதாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் கொலை செய்துவிடுகிறார். மனைவி மூலம் கொலைக் குற்றம் வெளியாகி சிறைக்கு வருகிறார். உடல்நலம் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மனைவியை சந்திக்க மறுத்து கோமா நிலைக்கு செல்கிறார் உயிர்துறக்கின்றார். மனதின் பாரம் அழுத்தியதாலேயே அவர் விரைவாக இவ்வுலகைவிட்டு விடைபெற்றுக்கொள்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. சீவலப்பேரி பாண்டியின் கதையை உலகிற்கு சொன்னவர் வாழ்வும் குற்றப் பின்னனியோடு முடிந்துபோன அவலத்தை என்ன சொல்ல,

இந்த உலகம் என்ன சொல்ல வருகிறது என்பதை நம்மால் மொழிபெயர்க்கவே முடிவதில்லை.

ஆட்டோ சங்கரின் கதை உலகம் அறிந்தது. அந்த குற்றவாளியின் குரலுக்குள்ளும் ஒரு குயில் கூவிக்கொண்டிருந்ததை அறியும்போது வியப்பேற்படுத்துகிறது. இனி அந்த 3 பாடலை எங்கு கேட்டாலும் நமக்கும் ஆட்டோ சங்கரின் நினைவிற்கு வரும் அளவு எழுத்தாக்கி இருக்கிறார் தோழர் மதுரை நம்பி.

பொதுவாக சிறைக்கைதிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். கொலை, கொள்ளை, அடிதடி, திருட்டு என குற்ற செயல்களை வாடிக்கையாக வைத்துக்கொண்டு அடிக்கடி வந்து போவோர்க்கு இந்த சிறைத்தண்டனைகள் தரும் துயரம் என்பது ஒன்றுமேயில்லை. ஊதித்தள்ளிவிடுவார்கள். சந்தர்ப்பவசத்தால் திடீரென கோபப்பட்டு கொலை வழக்குகளில் சிக்கி கொண்டு சிறைக்கு வருபவர்கள் நிலைதான் சொல்லிமாளாதது. இளமையையும் வாழ்க்கையையும் இழந்து காலமெலாம் கண்ணீர் சிந்தகூடியவர்கள். எந்தச் செயலையும் செய்யும் முன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டாலே பெரும்பாலான பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம்.

குற்றேவல் செய்கின்ற அரசியல்வாதிகளும் தேசத்தையே கொள்ளையடிக்கும் அம்பானி அதானி போன்ற பெருமுதலாளிகளும் அரசு அதிகார வர்க்கங்களும் செய்கின்ற குற்றங்கள் கணக்கிற்கு வருவதே இல்லை. நீதிதேவதை தனது துலாக்கோலை ஒழுங்காக நிறுத்தால் தேசமே சிறையாக மாறிப்போகும் அளவிற்கு குற்றவாளிகள் சிறைக்கு வெளியே கண்ணியமிக்க கனவான்களாக நடமாடித்திரிகிறார்கள்.

அப்பாவிகளை போலி குற்றவாளிகளாக உள்ளே அனுப்பும் காக்கிச் சட்டைகள் சட்டத்தை சட்டை செய்வதே இல்லை என்பது இன்றும் தெருவோர யாசகர்களை, விளிம்புநிலை மக்களை, ஆதரவற்ற பெண்களை, திருநங்கைகளை, நடத்தும் விதத்தில் இருந்தே அறியலாம். சிறைத்துறை அதிகாரி திரு.மதுரை நம்பி அவர்கள் சூரியன் உதிக்காத காரிருள் நிரம்பிவழியும் சிறைக்கொட்டடிகளில் இருந்து ஒளிர்ந்த நட்சத்திரங்களை கண்டெடுத்து நம் முன் உலவவிட்டிருக்கின்றார். அவர்கள் பேசும் வாழ்வியல் ஒளியிலிருந்து தெறிக்கும் வெளிச்சத்தில் குற்ற சிந்தனை உடைய எதிர்கால சந்ததிகள் வாழ்வில் ஒளி பரவட்டும். அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய அற்புத வாழ்க்கை அனுபவங்கள் இந்த சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் நூலில் உள்ளது. தோழரும் எழுத்தாளருமான மதுரை நம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

செ.தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை-625020
9965802089

நூல் : சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
(ஒரு சிறைக்காவலரின் அனுபவப் பதிவுகள்)
ஆசிரியர் : மதுரை நம்பி

விலை : ரூ.₹ 330
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

நூல் அறிமுகம்: மதுரை நம்பியின் “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” – அ.பாக்கியம்

நூல் அறிமுகம்: மதுரை நம்பியின் “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” – அ.பாக்கியம்



சிறையிலிருந்து விரியும் உலகம்…

ஒரு சிறை கைதியின் எழுத்தல்ல இது. ஒரு சிறை காவலரின் 40 ஆண்டு கால பணியின் அனுபவம். 31 தலைப்புகளில் 312 பக்கங்களில் இந்த புத்தகத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

நிகழ்வுகளைப் பதியக்கூடிய பதிவாளனை கடந்து, காரண காரியங்களுடன் விளக்கும் வரலாற்றாலனைக் கடந்து, நிகழ்வுகளின் மாந்தர்களை உணர்வுப்பூர்வமாகப் பேச வைத்து ஒரு கலைஞனாக வெளிப்படுகிறார் மதுரை நம்பி.

இது சிறுகதையா, வரலாற்று நாவலா, புலனாய்வு புதினமா, சுயசரிதையா, என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு படைப்புகள் காத்திரமாக உள்ளது.

சிறைகளைப் பற்றி ஜூலியஸ் பூசிக், ஜார்ஜ் டிமிட்ரோ, காஸ்ட்ரோ, பகத்சிங், சிவவர்மா, ஏ. கே.கோபாலன். வி.பி. சிந்தன், தியாகு போன்றவர்கள் எழுதிய புத்தகங்கள் படித்திருந்தாலும் இது மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. சிறையிலிருந்து சமூகத்தை காட்சிப்படுத்தியுள்ளார்.

புத்தகத்தை எடுத்தவுடன் இடைவிடாமல் நான் படித்து முடித்தவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவ்வாறு இந்த புத்தகமும் ஒரே நாளில் படித்து முடித்த புத்தகமாக மாறிவிட்டது. காரணம் புத்தகத்தின் உள்ளடக்கமும் எழுத்து நடையுமாகும்.

கொடூரமான முறையில் கொலை செய்தவர்கள், உறவினர்களை கொலை செய்தவர்கள் , பிரபலமான ரவுடிகள், ஆட்டோ சங்கர் முதல் மணல்மேடு சங்கர் வரை, சீவலப்பேரி பாண்டி பற்றியும், சீவலப்பேரி பாண்டிய வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்திய சௌபாவின் சிறை வாழ்க்கை பற்றியும், அரசியல் கைதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சிவராசனின் கூட்டாளிகள் , இஸ்லாமிய சிறைவாசிகள், திருநங்கைகள், ஆசிரியர்களின் சிறை நிரப்பும் போராட்டங்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போராட்டத்தில் கைதான ஆயிரக்கணக்கான சிறைவாசிகள், திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என 31 தலைப்புகளில் பல வகைப்பட்ட சிறை கைதிகளையும் பேச வைத்துள்ளார்.

சிறைகளின் அவலங்கள், கைதிகள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள், சிறைச்சாலையின் வாழத் தகுதியற்ற சிறைக்கூடங்கள், சிறைச்சாலையின் சட்ட திட்டங்கள், கைதிகளை பராமரிக்கும் முறைகள், சிறை காவலர்களின் அத்துமீறர்களும், அவர்களின் அவல நிலைமைகளும், செல்வாக்கு படைத்த கைதிகளால் சிறை காவலர்கள் சந்தித்த அவமானங்களையும், என பல்வேறு கோணங்களையும், சொல்ல வந்த விஷயங்களிலிருந்து வழித்தடம் மாறாமல், மையக் கருப்பொருளை ஒட்டியே இலக்கிய ஆற்றலுடன் எடுத்துச் சொல்லி இருப்பது சிறப்பு.

சிறையில் கம்யூனிஸ்டுகளின் வருகையும், இருப்பும், அவர்களின் சித்தாந்த பயிற்சியும், இதர கைதிகளின் உரிமைக்காக அவர்கள் குரல் எழுப்புவதும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும், புத்தகத்தின் ஊடாக வலுவான முறையில் பதிவு செய்திருக்கிறார்.

சிறையிலிருந்த அரசியல் தலைவர் சிறைத்துறை மந்திரியாக மாறி சிறைக்கு வந்ததும், சிறைச்சாலையின் நிலைமைகளை பரிசீலனை செய்த மாவட்ட கலெக்டர் அதே சிறைச்சாலைக்கு அடுத்த சில மாதங்களில் கைதியாக வந்த விஷயங்களும் சுவைபட பதியப்பட்டுள்ளது.

விடுதலையானவர்களுக்கு அடுத்து என்ன நடந்தது? என்கவுண்டர் கொலை செய்யப்பட்டது நியாயமா? தூக்கு மேடைக்கு சென்றவர்கள் பற்றிய சரியா தவறா?

கொலை செய்தவர்கள் குற்றத்தை உணர்ந்து கண்ணீர் விடும் காட்சிகள் போன்ற மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதா? என எண்ணற்ற கேள்விகளை வாசகன் மனதிலே இறக்கி வைத்து செல்கிறது புத்தகம்.

ஆட்டோ சங்கரின் கடைசி அத்தியாயம் இரக்கம் ஏற்படுவது போன்ற ஒரு மன உணர்வை வாசகன் மத்தியில் ஏற்படுத்தினாலும் ஆசிரியர் தனது கருத்தை வலிந்து திணிக்காமல் அப்படியே முடித்திருப்பது படைப்பின் தர்மத்தை வெளிப்படுத்துகிறது.

மணல்மேடு சங்கரிடம், சீனிவாச ராவ் புத்தகத்தையும் பி எஸ் தனுஷ்கோடி புத்தகத்தையும் சேகுவாரா புத்தகத்தையும் கொடுத்து படிக்க வைத்து என்கவுண்டர் செய்யப்படுவதற்கு முன்னால் இந்த புத்தகத்தை எல்லாம் நான் முன்பே படுத்திருந்தாள் இப்படி ஆயிருக்க மாட்டேன் என்று அவன் தெரிவித்து இருப்பதை பதிவு செய்தது மட்டுமல்ல, ஒரு சிறை காவலர் சிறை கைதிகளை பாதுகாப்பது மட்டுமல்ல அது ஒரு சீர்திருத்தம் செய்யக்கூடிய இடமாகவும் மாற்றப்பட வேண்டும் என்பதற்கு மதுரை நம்பி உதாரணமாக இருக்கிறார்.

பெரியாரிய கடவுள் மறுப்பாளர்களுடன் நாத்திகவாதிகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும், அதாவது இயக்கவியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை மிக எளிய முறையில் எடுத்துச் சொல்லி புரிய வைத்திருப்பது அரைத்த மாவையே அரைக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு அனுபவமாக இருக்கும்.

சிறுபான்மை மதப் பிரிவை சேர்ந்த கைதிகள் சிறையில் நடந்து கொள்ளும் முறைகள் மற்ற கைதிகளை எப்படி அவர்களுக்கு எதிராக திருப்புகிறது என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி சிறுபான்மை பிரிவை சேர்ந்த நீங்கள் எப்படி மதசார்பற்ற ஜனநாயக சக்தியுடன் இணைந்து நிற்க வேண்டும், உங்களுடைய எதிரி யார் என்பதை அடையாளப்படுத்தி அவர்களை சிந்திக்க வைத்த நிகழ்வுகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னால் சிறைச்சாலைகளின் வேலை பறிபோகும் அபாயம், இடம் மாற்றம், இன்னும் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் செய்து முடித்துள்ளார். அல்ல அரசியல் சித்தாந்தத்தில் தெளிவும் பிடிக்கும் இல்லாமல் இந்த பணிகளை செய்ய முடியாது. உரை நிகழ்த்துவது தான் ஒரே வழி என்பதை கடந்து கேள்வி பதிலாக கலந்துரையாடல் மூலமாக இந்த புத்தகத்தின் ஆசிரியர் நடத்திய விவாதங்கள் பலனை அளித்துள்ளது என்பதற்கு இந்த புத்தகத்தில் நிறைய சாட்சிகள் இருக்கிறது.

மதுரை நம்பி இந்தப் பணிகளால் இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதும் பல இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதும் அடுத்த அடுத்த பழி வாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொண்டு இதனை செய்து முடித்துள்ளார்.

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் போராட்டத்தில் சிறை நிரம்பி வழிந்ததையும், அதனால் சிறைக்குள் ஏற்பட்ட நன்மை தீமைகளையும் இந்த போராட்டங்களுக்கு பின்னால் கம்யூனிஸ்ட் இருக்கிறார்கள் என்பதையும், தெளிவுபட பதிவு செய்துள்ளார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டங்களில் 1991 ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் முக்கியமானது. தமிழகம் முழுவதும் சிறையில் இருந்தவர்களை பற்றி நான் எழுதிய ஞாபகங்கள் தீ மூட்டும் என்ற புத்தகத்தில் மதுரை சிறை பற்றியும் எழுதி இருந்தேன். தமிழக முழுவதும் இருக்கக்கூடிய சிறைகளைப் பற்றி நான் எழுதியதில், நான் மதுரையைப் பற்றி சுருக்கமாக தான் எழுதியிருப்பேன். ஆனால் மதுரை நம்பி இந்த புத்தகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர்கள் மதுரை சிறைச்சாலைக்குள் வந்து நடந்து கொண்ட முறைகளும், அநியாயம் கண்டு சிறைக்குள்ளேயே கொதித்து எழுந்த நிகழ்வுகளையும், விரிவாகவே பதிவு செய்திருப்பது புத்தகத்திற்கும் எனக்குமான தொடர்பை அதிகப்படுத்தியது.

ஒரு புத்தகம் வாசகனின் சிந்தனையை, உளக்கிளர்ச்சியை ஏற்படுத்துவதை பொருத்த தான் அந்த புத்தகத்தின் வெற்றி உள்ளது. எத்தனை பேர் வாசித்தார்கள் என்பது அடுத்த விஷயம்.

பொதுவாக நான் படிக்கின்ற புத்தகத்தின் ஆசிரியர்களிடம் பேசும் வழக்கம் எனக்கு இல்லை. இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் தருவாயில் இந்த ஆசிரியரிடம் பேச வேண்டும் என்ற உணர்வை என்னுள் ஏற்படுத்தியதனால் அலைபேசி கண்டுபிடித்து அவருடன் எனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டேன்.

நான் பெயரை சொன்னவுடன் அவர் என்னை தெரியுமென்றும், மதுரையில் 95 ஆம் ஆண்டு நடைபெற்ற மருத்துவமனை போராட்டத்தில் உங்களை சந்தித்திருக்கிறேன் என்று சொன்ன பொழுது மகிழ்வாக இருந்தது.

அகத்தியலிங்கம் இந்த புத்தகத்தைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பு மதிப்புரை எழுதி இருக்கிறார் என்பதையும் கனகராஜ் அவர்களும் நீங்களும் என்னிடம் பேசி இருக்கிறீர்கள் என்பதை மன நிறைவாக குறிப்பிட்டார்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. பத்திரிக்கையாளர் பெருமாள் அவர்கள் என்னிடம் இந்த புத்தகத்தை கொடுத்து கண்டிப்பாக இதை நீங்கள் படிக்க வேண்டும். நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இன்னும் படிக்கவில்லை. நீங்கள் படித்துவிட்டு கொடுங்கள் என்று கொடுத்துச் சென்றார் நான் படிக்க ஆரம்பித்தவுடன் முடித்துவிட்டு தான் கீழே வைத்தேன்.

நான் பெற்ற இன்பத்தை, அனுபவத்தை நீங்களும் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

– அ.பாக்கியம்

நூல் : சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்.
ஆசிரியர் : மதுரை நம்பி
விலை : ரூ.₹ 330/-
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

விற்பனை : 24332924
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/

[email protected]