Thaimaikkul Poem By Priya Jayakanth. பிரியா ஜெயகாந்தின் தாய்மைக்குள் கவிதை




முதல் முறை நீ..
தரித்த தருணம் என் கருவறைக்குள்
சுவாசித்த காற்று என் மூச்சுக்குள்
அழுத அழுகை என் வலிக்குள்
பார்த்த பிம்பம் என் இமைக்குள்

சிரித்த சிரிப்பு என் புன்னகைக்குள்
தீண்டிய ஸ்பரிசம் என் உணர்வுக்குள்
உண்ட உணவு என் சுவைக்குள்
கண்ட கனவு என் உறக்கத்திற்குள்

ஊடுத்திய ஆடை என் அலமாரிக்குள்
படுத்த படுக்கை என் மடிக்குள்
உதிர்த்த வார்த்தை என் மொழிக்குள்
கேட்ட கேள்வி என் சிந்தனைக்குள்

நடந்த நடை என் தடத்துக்குள்
எழுதிய எழுத்து என் வாசிப்புக்குள்
கொண்ட கோபம் என் சினத்திற்குள்
பயந்த நிமிடம் என் அச்சத்திற்குள்

செய்த குறும்பு என் ரசனைக்குள்
விழுந்த காயம் என் ரணத்திற்குள்
கற்ற பாடம் என் அறிவுக்குள்
மகிழ்ந்த பண்டிகை என் கொண்டாட்டத்திற்குள்

வரைந்த ஓவியம் என் பார்வைக்குள்
சேமித்த பணம் என் வரவுக்குள்
வாங்கிய விருது என் வெற்றிக்குள்
கொடுத்த பரிசு என் விருதுக்குள்

ரசித்த இசை என் செவிக்குள்
பாடிய பாடல் என் மெட்டுக்குள்
அணிந்த சலங்கை என் ஓசைக்குள்
ஆடிய நடனம் என் பாவத்திற்குள்

கேட்ட பொருள் என் பரிசுக்குள்
சமைத்த உணவு என் ருசிக்குள்
அளித்த அறிவுரை என் கற்பிதத்திற்குள்
அணைத்த அரவணைப்பு என் தாய்மைக்குள் !!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *