ஜன சங்கம், பாரதிய லோக் தளம், சோசியலிஸ்ட் கட்சி, மொரார்ஜி தேசாயின் பழைய காங்கிரஸ் ஒன்றிணைந்து 23.1.1977ல் ஜனதா கட்சியினைத் துவக்கி 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இத்துடன் பாபு ஜகஜீவன் ராமின் ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் இயக்கமும் ஒன்று சேர்ந்தது. 22.03.1977ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் ஜனதா கட்சி 298 இடங்களைப் பெற்று மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். இது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகச் சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதா கட்சியானது வடஇந்திய மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும் வெற்றியினைப் பெற்றிருந்தது ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொரார்ஜி அமைச்சரவையில் பாபு ஜகஜீவன் ராம், அடல் பிஹாரி வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ், எச்.எம்.பட்டேல், சரண் சிங், மது தன்டவதே போன்ற முக்கியத் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். இதன்பின் பல மாநிலங்களில் ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தது. மேற்கு வங்காளத்தில் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி ஆட்சியானது நிலச் சீர்திருத்தத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. இதன்படி உழவர்களுக்கு நிலம் சொந்தம், நிலக் குத்தகையை 50 விழகாட்டிலிருந்து 25 விழுக்காடாகக் குறைத்தல் உட்பட பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு ஒரு மில்லினுக்கு மேற்பட்ட ஏழை, நிலமற்ற விவசாயிகள் இம்மாநிலத்தில் பயனடைந்தனர்.

மார்சு 1977லிருந்து ஜூலை 1979முடிய 20 மாதங்கள் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தது. வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது, உண்மையான சமூக நீதியினை செயல்படுத்துவது, செயல்படாமல் அல்லது முடங்கியிருந்த நிர்வாகத்தைச் செயல்பட வைப்பது என்ற அடிப்படையில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. பின்னால் சில நாட்கள் சரண் சிங் பிரதம மந்திரியாகப் பதவியிலிருந்தார். பல்வேறு சித்தங்களின் கூட்டு ஆட்சியாக (ஜனதா, ஜன சங்கம், சோசலிஸ்ட் கட்சி, இளம் துருக்கியர்கள், காங்கிரஸின் ஜனநாயக போராளிகள்) இது அமைந்தது. மொரார்ஜி தேசாய் காந்திய நெறியில் பயணித்தவராக இருந்தாலும் முதலாளித்துவச் சார்புடையவர், சரண் சிங் விவசாயிகள் சார்புடையவர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான மனப்பான்மை உடையவர், ராஜ் நாராயண் கிராமப்புறத் தொழில் சார்ந்த நிலைப்பாடு உடையவர், ஜன சங்கத்தினர் உயர் ஜாதி ஆதரவாளர்கள் இவ்வாறு கலவையான சித்தாந்தத்தைக் கொண்டுள்ளவர் ஒன்று சேர்ந்து ஆட்சியினை நடத்தினர். மேலும் ஜனதா கட்சி வடஇந்தியாவில் அதிக செல்வாக்குடனும், தென்னிந்தியாவில் செல்வாக்கற்ற நிலையிலும் இருந்தது. பெரும் நிலக்கிழார்கள், நகர்ப்புற உயர் ஜாதியினர், இடைப்பட்ட ஜாதியினரின் ஆதரவு என ஜனதா கட்சிக்குக் காணப்பட்டது. இதனால் கிராமப்புறங்களில் சமூகப் பதற்றம், ஏழை, பட்டியல் இன மக்கள் மீதான அடக்குமுறை இருந்தது. கிராமப்புறங்களில் ஏழைகள், நிலமற்ற விவசாயிகள், பட்டியல் இனத்தவர்கள் தங்களின் உரிமைக்காகப் போராடினர். நெருக்கடிக் காலங்களில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்த லேவாதேவியர்களால் கொடுத்த கடனைத் திரும்பப் பெற இயலவில்லை எனவே ஜனதா ஆட்சிக் காலத்தில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் விவசாயிகளிடையேவும், ஏழை மக்களிடமும் பதற்றம் நிலவியது. இது ஜாதி மோதலை உருவாக்கியது. பல வடமாநிலங்களில் கலவரம் ஏற்பட்டு பட்டியலினத்தவர்கள் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்ட செல்வங்களை ஒழிப்பதற்காக ஜனதா அரசு ரூ.1000, ரூ.5000, ரூ.10000 செலாவணியினை செல்லத்தக்கதல்ல என்று அறிவித்தது. நெருக்கடிக் காலத்தில் போராட்டம் சட்டப்பூர்வமானது இல்லை என்ற நிலையினை திரும்பப் பெறப்பட்டது. அந்நிய முதலீடு உச்ச அளவாக 40 விழுக்காட்டுக்கு மிகக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதிக்கும் கோகோ கோலா நிறுவனம் இந்தியாவில் இயங்க தடை விதிக்கப்பட்டது. இதுபோல் ஐபிஎம் நிறுவனமும் தடைசெய்யப்பட்டது (Mint 2019). இரயில்வே துறை அமைச்சராக இருந்த மது தன்டவதே ஏழை மக்கள் பயணிக்கவும், துறையினை நவீனப்படுத்தவும் பல்வேறு சீர்திருத்தங்களை அத்துறையில் கொண்டுவந்தார்.

ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது காந்தியவாதிகள் மகிழ்ச்சியடைந்தனர். வேளாண்மையிலும், தொழில் துறையிலும் காந்திய சித்தாந்தம் பின்பற்றப்பட்டது. கிராமப்புறம் சுயச்சார்பினை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. துரிதமான வேளாண் உற்பத்தியினை அடையச் செய்தல் என்பது உணவு பற்றாக்குறையினை தீர்ப்பதற்கானதாக மட்டுமல்ல தொழில் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கும் சக்தியையும் உண்டாக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டது (Georger Cristoffel Lieten 1980). அடிப்படையில் பல்வேறு சித்தாந்தங்களில் கூட்டாக இருந்தாலும் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஜனதா அரசின் முதன்மையான சித்தாந்தமாக முறைசாரா சிறு மற்றும் பாரம்பரிய தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எனவே ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1978-1983) வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், சிறு மற்றும் பாரம்பரியத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சுயச்சார்பினை அடையவும், உள்நாட்டுத் தொழில்களை உருவாக்கவும் உத்திகள் வகுக்கப்பட்டது.

ஜனதா அரசு பொறுப்பேற்றபோது வேலையின்மையும் வறுமையும் முக்கிய அறைகூவல்களாக இருந்தது. இந்த நிலை பொதுவாகக் கிராமப்புறங்களைச் சார்ந்ததாக இருந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் முயற்சியால் திட்டக்குழுவில் தொழில்துறையினை சார்ந்த வல்லுநர்கள் உறுப்பினர்களா இருந்த நிலையினை மாற்றி வேளாண் துறையினைச் சார்ந்த வல்லுநர்களை உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். இதனால் கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டமிடுதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நவம்பர் 1977ல் கங்கை நதி நீரைப் பகிர்வு செய்வதற்கு இந்திய-பங்ளாதேஷ்க்குமிடையே வற்று காலங்களில் (Lean season) 20500 கன அடி தண்ணீரும் மற்ற காலங்களில் 34500 கன அடி தண்ணீர் பெற ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மையினை மேம்படுத்த உதவியது (Ramachandra Guha 2017).

வேளாண் இடுபொருட்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன, குறைந்தபட்ச ஆதார விலை வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கப்பட்டது. இவ்விரண்டையும் பெரிய விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெற்றனர். இதனால் மானியம் 1977-78ல் ரூ.4500 மில்லியனாக இருந்தது 1979-80ல் ரூ.5700 மில்லியனாக உயர்ந்தது. உணவுப் பொருட்களின் கையிருப்பு அதிகரித்திருந்தது. இதனால் 1971ல் கிராமப்புற வறுமை 49 விழுக்காடாகவும் நகர்ப்புற வறுமை 56 விழுக்காடாகவும் இருந்தது குறையத் தொடங்கியது. எனவே உபரியாக இருந்த உணவு உற்பத்தியினை ஏற்றுமதி செய்ய ஜனதா அரசு வல்லுநர்களைக் கொண்ட பணிக் குழுவினை அமைத்தது. இக்குழு பாரம்பரிய வணிகப் பயிர்கள் மற்றும் உணவுப் பயிர்களை ஏற்றுமதி செய்யப் பற்றாக்குறை நிலவும் நிலையினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று ஜனதா கட்சி ஆட்சியில் நிதி அமைச்சராகவும் இருந்த சரண் சிங் குறிப்பிட்டார். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நகர்ப்புறங்களில் வாழும் மேல்தட்டு வர்க்கம் நீண்ட காலமாகவே கிராமப்புற வெகுஜனங்களைச் சுரண்டி வாழ்ந்துவந்தனர் என்றும் அவர்கள் பொருளாதார வளர்ச்சியினைத் தங்கள் பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டுள்ளனர் என்று சரண் சிங் குறிப்பிட்டார். இத்துடன் தொழில் துறையும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் கூட்டாகக் கிராம மக்களைச் சுரண்டுகின்றனர் என்றார். இதனால் காலம் காலமாக நிலமற்ற விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் தொடர்ந்து தங்களின் பொருளாதார நிலையினை இழந்து வந்தனர் என்றார். எனவே ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் கிராமப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1978-79ன் வரவு-செலவு திட்டத்தில் வேளாண்மைக்கு ரூ.10270 மில்லியன் ஒதுக்கப்பட்டது இது காங்கிரஸ் ஆட்சியில் 1975-76ல் ரூ.7270 மில்லியனா இருந்தது. ஜனதா ஆட்சிக்கு முந்தைய 20 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்மை வளர்ச்சியானது 20 விழுக்காடாக இருந்தது 1978-79ல் 1 – 2 விழுக்காடு அளவிற்கே வளர்ச்சி காணப்பட்டது. இது நெருக்கடிக் கால கட்டத்திலிருந்ததைவிட (8 விழுக்காடு) குறைவாகவே இருந்தது ஆனால் தொழில் துறை வளர்ச்சியானது 7 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது (துயல னுரடியளாi 2014). பல்வேறு முயற்சிகள் ஜனதா அரசினால் முன்னெடுக்கப்பட்டாலும் கிராமப்புற ஏழைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தனர் எனவே அமைப்பு ரீதியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

1978-79ல் சுவிஸ் நாட்டுப் பொருளியல் அறிஞரான கில்பர்ட் எட்டியன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியக் கிராமங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டார். இவ்வாய்வானது, வேளாண்மைக்கான நீர்ப்பாசன வசதியினை மேம்படுத்தியதால் வேளாண் உற்பத்தித் திறன் அதிகரித்ததாகவும், இனால் கிராமப்புற வருமானம், வாழ்க்கைத் தரம் உயர்ந்தது என்று குறிப்பிடுகிறார். பசுமைப் புரட்சியின் விளைவினால் ரசாயன உரப் பயன்பாடானது நான்கு மடங்கு அதிகரித்தது. வெண்மைப் புரட்சியின் விளைவால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதனால் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் பயன் அடைந்தனர். வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளில் அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாந்திருந்ததினால் அவர்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடைந்தது. இதனால் அரசியல் ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கினர். 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 36 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களாக இருந்ததால் கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக திட்டங்களைக் கொண்டுவர அழுத்தம் கொடுத்தனர். இதனால் நகர-கிராமப்புற போராட்டங்கள் அதிகரித்தது, விவசாய-தொழில் துறை போட்டிகள் உருவானது. ஜனதா கட்சி கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால் பிற்பட்ட மக்களின் குரலாக இது பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. எனவே இதனைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை பெற பி.பி.மண்டல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது (Ramachandra Guha 2017).

காங்கிரஸ் கட்சி போன்றே ஜனதா கட்சியின் சித்தாந்தமும் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்குத் தீர்வாக நிலச் சீர்திருத்தம் அவசியமானது என்று கருதப்பட்டது. எனவே ஜனதா அரசு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் நிலச் சீர்திருத்தத்தைத் துரிதப்படுத்துதல் மற்றும் நிலப் பகிர்வினை செயல்படுத்துதலை முன்னிறுத்தியது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் கண்ட தோல்வியை ஜனதா அரசும் எதிர்கொண்டது. நிலச் சீர்திருத்தம், நிலப் பகிர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் விவசாயச் சங்கங்களின் தொடர் போராட்டமும் அரசியல் கட்சிகளின் அழுத்தமும் ஆகும்.

அட்ல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி தலைவர்களாக் கொண்ட பாரதீய ஜன சங்கமானது, இந்து-முஸ்லீம்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஜனதா கட்சியிலிருந்து வெளியேறியது. இதனால் மொரார்ஜி தேசாய் அரசானது கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து சரண் சிங் 28.07.1979ல் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறது என்ற அடிப்படையில் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். ஆனால் பாராளும்மன்றத்தில் காங்கிரஸ் ஆதரவாக இல்லாத நிலையில் சரண் சிங் 20.8.1979ல் பதவியினை ராஜினாமா செய்தார். சரண் சிங் 23 நாட்கள் மட்டுமே பிரதம மந்திரியாக இருந்தார். ஆனால் 14.01.1980வரை காபந்து பிரதம மந்திரியாகப் பதவி வகித்தார். சரண் சிங் இந்திய அரசியலில் விவசாயிகளின் முகமாகவே பார்க்கப்பட்ட முக்கிய தலைவர் ஆவார். சரண் சிங் விவசாயிகளின் நலனையும், வாழ்வினையும் மேம்படுத்துவது மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர். உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக பதவி வகித்தபோது நிலச் சீர்திருத்தத்திற்கான முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். ஜமீன்தார் ஒழிப்பிற்கான சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் இதனால் இவரை இடைத் தரகர்களின் ஒழிப்பிற்கான வடிவமைப்பாளராகக் காண முடிகிறது. விவசாயிகள் முறைசாரக் கடனாக வட்டிக்காரர்களிடம் பணம் பெற்றுப் படும் துயரத்தினை ஒழிக்கச் சட்டம் கொண்டுவந்தார், நிலப் பயன்பட்டு சட்டம், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம், குத்தகைச் சட்டம், போன்ற சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். 1959ல் நேருவினால் கொண்டுவரப்பட்ட கூட்டுறவு விவசாய முறையினை கடுமையாக எதிர்த்தார்

(https://theprint.in/theprint-profile/chaudhary-charan-singh-prime-minister).

அட்டவணை: ஜனதா அரசில் வேளாண்மையின் போக்கு (1980-81 விலையின்படி)

ஆண்டுவேளாண் உற்பத்தி (ரூ.கோடியில்)GDPயில் வேளாண் உற்பத்தியின் பங்கு
19773732335.1
19784199436.8
19796332728.1
19803710832.5

Source: Kalirajan et al 2001.

ஜனதா அரசிலிருந்த சரண் சிங் வேளாண்மையை ஊக்குவித்தாலும் அடிப்படையில் தொழிற்சாலைகளுக்குச் சாதகமான போக்கே இவ்வாட்சியில் காணப்பட்டது. வேளாண் இடுபொருட்களான ரசாயன உரம், உயர் விளைச்சல் தரும் விதைகள், வேளாண் இயந்திரங்கள், வங்கிக் கடன் போன்றவை வேளாண் சார்ந்ததாக இருந்தாலும் தொழில் வளர்ச்சிக்குப் பெருமளவிற்கு உதவியது. விவசாயிகளில் குறைந்த அளவிற்கே கடன் பெறும் நம்பிக்கை நிலையிலிருந்தனர். இவர்கள் வாணிப பயிர்களான ரப்பர், பழவகைகள், கரும்பு போன்றவை பயிர் செய்தனர். குறைந்த அளவிற்கு உணவு உற்பத்தியில் ஈடுபட்டனர். எனவே உணவு கையிருப்பானது குறைந்தது. அதேசமயம் உயர் ரக உணவு தானிய உற்பத்தியில் ஈடுபட்டு அதனை உள்நாட்டு, பன்னாட்டுச் சந்தைகளில் விற்று லாபம் பெற்றனர். இவர்கள் பெரும்பாலும் பெரிய விவசாயிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய விவசாயிகள் பாரம்பரிய பயிர் சாகுபடி முறையினை பின்பற்றியதால் பசுமைப் புரட்சிக்கு வெகு தொலைவிலிருந்தனர். ஆனால் பன்னாட்டு வேளாண் வாணிபம் என்ற சரண் சிங்கின் திட்டமானது இந்திய விவசாயிகளை புதிய தளத்திற்கு அழைத்துச் சென்றது (Georges Kristoffel Lieten 1980). ஜனதா அரசினை அன்றைய காங்கிரஸ் ஆட்சியினை ஒப்பிடும்போது வேளாண்மையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை ஆனால் கிராமப்புற மேம்பாட்டில் நேர்மறை மாற்றம் கண்டது என்பது மறுப்பதற்கில்லை.

– பேரா.பு.அன்பழகன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *