அன்பரசு என்னும் இயற்பெயர் கொண்ட புதியவன் எழுதியிருக்கும் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல்.

இச்சிறுகதைத் தொகுப்பில் 12 சிறுகதைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு தளத்தை மையமாகக் கொண்டு உணர்வுகளின் வெளிப்பாடாகப் படிக்கின்ற வாசகனின் மனதை அந்தத் தளத்திலேயே கொண்டு போய் விடும் ஆற்றல் உடையதாக இருக்கின்றன.

ஒரு இலக்கியம் அது காட்டும் உலகம் என்பது அலாதியானது. தனித்துவமும் ஆனது. ஒவ்வொரு படைப்பாளரின் அனுபவக் கருத்துக்களுடன் அவன் கண்டு இருக்கிற உலகமும் காண விளைகிற உலகம், வாசகனிடத்தில் அனுப்பப் படுகிறது. அதை அவன் அனுபவித்த அனுபவக் கருத்துக்களுடன் தான் கண்டு கொண்டிருக்கிற உலகத்தையும், காண இருக்கின்ற உலகத்தையும் படைப்பாளியிடத்தில் எதிர் நோக்கியும், அவன் காட்டுகிற உலகத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடனும், சிறுகதைத் தொகுப்பை அணுகுகிற பொழுது இவை இரண்டும் ஒருமித்த பாதையில் செல்லுகிற பொழுது, இந்த வெற்றிப் பயணம் உலக இலக்கியத்தின் மிகப்பெரும் வெற்றிப் புள்ளியாகிறது அல்லது இலக்கியம் ஜெயித்து விட்டதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

உள்ளம் எழுப்பும் சப்தங்களைக் கண்டுணர்ந்தவன் அதன் அதிர்வுகளைக் கொஞ்சம் கூடக் குறைக்காமல் தன் எழுத்தின் வழி கடத்துவதற்கு முயற்சி செய்கிறான். அதே போல வாசகனுக்கு இந்த அதிர்வுகள் முன்பின் தெரிந்தவையாகவும் இருக்கலாம். அதன் வலிகளை உணர்ந்தவனாகவும் இருக்கலாம். இது தெரியாமல் புதிதாக அறிந்தவனாகவும் இருக்கலாம். இந்த இடத்தில் வலியின் அல்லது மிகுந்த சந்தோஷத்தின் உணர்வுப் பரிமாற்றம் அந்தச் சிறுகதையின் வெளிப்பாடாகும்பொழுது படைப்பு உச்சத்தைப் பெறுகிறது.

ஏம்மா” என்னும் இச்சிறுகதைத் தொகுப்பு மேற்காணும் வெளிப்பாட்டு உத்தியில் மதுரைக்கு அருகாமையில் இருக்கும் சிற்றூர்களில் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஏழை, எளிய, படிப்பறிவாற்ற வாழ்க்கையை, அடிமையாய் வாழும் மனநிலையை இக்கதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன

முதல் கதையாக அமைந்திருக்கிற ஏம்மா எனும் சிறுகதை, இச்சமூகத்தில் காணப்படும் பழமைக்கும், புதுமைக்குமான போட்டியை அல்லது வாழ்வாதார மாற்றங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. ஏழ்மையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பும் ஏழ்மைவாதியின் வாழ்வாதாரச் சிக்கலை எடுத்து விளக்குகிறது. உளவியல் சார்பான பயம், இயலாமை, மேல்தட்டு வர்க்கங்களின் உதாசீனம், இவை அனைத்தும் இக்கதையின் ஊடாகப் பயணிக்கின்றன.

தாய், தந்தை, மகள் இந்த மூவருக்குள் நடைபெறும் உணர்வுப் போராட்டங்கள்  இக்கதையின் சாராம்சமாக அமைந்திருக்கிறது. படித்த பெண்கள் கிராமப்புற வாழ்வை ஒதுக்கி தள்ளி நாகரீகம் எனும் போர்வையில் வேறு திசை சென்று விடுவர் என்கின்ற கிராமத்திய எண்ணப்போக்குகள், படிக்க வேண்டும் என்று எண்ணுகிற ஒரு பெண் குழந்தையின் வாழ்வை சிதைக்கிறது என்பதை இதைவிட ஆழமாகச் சொல்லிவிட முடியாது என்கிற அளவில் இக்கதை எடுத்து கூறி இருக்கிறது

”ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு” எனும் சொலவடை, ”ஊரார் வாய் எப்பொழுதும் புளிக்கும்” எனும் சொலவடை இக்கதையின் மூலம் உண்மையென்று உணர்த்தப்படுகிறன.

கதாசிரியர் நேரடியாகக் கிராமத்தின் முன் போய்நின்று, கிராமத்திலுள்ளோர் ஏழ்மையினால் கல்லுடைக்கும்  நிலையை வர்ணிக்கின்றார். பிறகு தொழிலாளியின் வீட்டை வர்ணிக்க ஆரம்பித்துக் கதை கூறுகிறார். காட்சிகள் அப்படியே கண் முன் விரிகிறது. அந்த அளவிற்கு எதார்த்தமாக இக்கதையை வசனங்களுக்கு நடுவே கூறிச் செல்கின்றார்.

கல்லூரிக்குப் படிப்பதற்குச் சென்று வரும் தன் மகள் மேல் சந்தேகப்படும் தாய், அதன் மூலமாகத் தந்தை  கோபப்பட்டு மகளைக் கொலை செய்யும் கொடூர எண்ணம், உணர்ச்சி வசப்பட்டுச் செய்த அந்தச் செயல், இவற்றை நேரே பார்ப்பதைப் போல விளக்கிக் கடைசியாகத் தாயும் தந்தையும் அந்தச் செயலுக்காக வருந்தி ஏங்கும் நிலையை அங்குலம் அங்குலமாக, அந்த வலியை உணர வைத்திருக்கிறார்.

ஊராரின் பேச்சு அல்லது பயம் தன் குழந்தையைக் கொல்லும் அளவிற்குச் சென்று இருக்கிறது என்னும் பொழுது தாய் தந்தை அடைந்த வேதனையைக் கதை படித்து முடிக்கும் பொழுது நம்மால் உணர முடிகிறது.

இதேபோல் ஏம்மா-2 எனும் இரண்டாவது கதை, ஒரு தாயின் தியாக உணர்வை மிக ஆழமாக எடுத்துக் கூறுகிறது. இக்கதையில் சமூகத்தின் கொடூரங்கள், கல்வி பெறவேண்டிய சூழ்நிலை, பாசம், குழந்தை வளர்ப்பு எனப் பல தளங்களில் சிறுகதை நம்மை வழி நடத்திச் செல்கிறது.

தன் மகன் படிப்பிற்காகத் தன் வீட்டையே பண்ணையாரிடம் ஏமார்ந்து கொடுக்கும் தாயின் துன்ப வலி, தன் உடலின் ரத்தத்தைக் கூடப் பணமாக்கி தன் மகனுக்காகப் படிக்க வைக்கும் தாயின் இளகிய உள்ளம், வாழ்க்கை வறுமைச் சூழ்நிலை, வயது முதிர்ந்த பெண் என்றும் பாராமல் அவளுடைய சிறுநீரகப் பையைக் களவாடிச் செல்லும் மருத்துவக் குழுக்கள், மகனின் தொடர் கவனிப்பை மறந்த தாய், மூன்றாண்டுகள் கழித்துத் தன் தாயைப் பார்க்க வேண்டிய கல்லூரிச் சூழல் எனப் பல வகைகளில் சமூகத்தில் இன்று நிலவுகின்ற சமூகச் சிக்கல்களை எல்லாம் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்து இருக்கிறார் படைப்பாளர்.

ஆனால் கதையின் இறுதியில் தன் தாயைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் அவள் உடல்நிலை மாறி அவளைப் பிச்சைக்காரி என்று நினைக்கும் மகனின் செயல்பாடுகளைச் சிறிது மாற்றி இருக்கலாம். பெற்ற தாயை அறிய முடியாத எந்தக் குழந்தையும் இவ்வுலகில் இல்லை. ஆனாலும் கூட இந்தக் காலகட்டத்தில் இப்படி நிகழும் என்று கதாசிரியர் கூறிச் செல்லுகிறார்.

மனதின் ஓரத்தில் கதைகள் மிகப் பெரும் வலியை ஏற்படுத்தி இருக்கின்றன. இக்கதைகளைப் படித்து விட்டுக் கண் கலங்கி, இப்படியும் மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று எண்ணி நாம் கதையோடு பயணிக்க வேண்டி உள்ளது. அந்த அளவிற்குச் சோகத்தின் நிழல் இக்கதைகளில் பரந்து கிடக்கிறது.

கதாசிரியர் புதியவன் சிறந்த சிறுகதை ஆசிரியராக வெளிவந்திருக்கிறார். இவரின் கதை கூறும் முறை சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிற பொழுது கடைசி எல்லையாகச் சிறுகதையின் உச்சத்தை அவர் மிக எளிதாகத் தொட்டு விடுவார். அத்தகைய வேட்கை அவரிடம் காணப்படுகிறது.

பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)

நூல்: ஏம்மா
நூலாசிரியர்: புதியவன்
விலை: 100

பக்கம்:  150
பதிப்பு: மே-2022
வெளீயீடு: அறிவை அறிவோம் பதிப்பகம்
முகவரி:   தெற்குத் தெரு ,
குலசேகரன்பேட்டை
தா. வாடிப்பட்டி,
மதுரை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



3 thoughts on “நூல் அறிமுகம்: ’ஏம்மா’ சிறுகதை – பாரதிசந்திரன்”
  1. அருமையான மதிப்புரை…. வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது

  2. அருமை. நானும் இந்த புத்தகத்தை படித்துள்ளேன். அருமையான சிறுகதைகள். 🎉🙏

    1. அழ்ந்த பார்வை. விரிவான மதிப்புரை. முழுமையாக வாசித்து, உள்வாங்கி எழுதப்பட்ட பதிவு. சிறப்பு. வாழ்த்துக்கள்
      .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *