இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, பாஜக ஆட்சியில் வங்கிகள், தான் அளித்த கடன்களில் பாதி அளவிற்குத் தள்ளுபடி செய்துள்ளன – புல்கித் ஷர்மா
இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் வங்கிகள், தாங்கள் அளித்திட்ட கடன் தொகைகளில் வராக் கடன்களில் (bad loans) சுமார் 660 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருப்பதாக நியூஷ்கிளிக் இதழ் மேற்கொண்ட ஆய்வு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. வங்கிகளின் நிதிப் புத்தகங்கள் பதிவு செய்துள்ளபடி, மொத்தம் அளிக்கப்பட்ட கடன்களில், செயல்படா சொத்துக்கள் (non-performing assets) என்ற பெயரில் அல்லது வராக் கடன்கள் (bad loans) என்ற பெயரில் பாதி அளவுக்கான தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2018-19ஆவது நிதியாண்டில் மட்டும் வங்கிகளின் நிதிப் புத்தகங்களிலிருந்து 237 ஆயிரம் கோடி ரூபாய்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
கீழேயுள்ள வரைபடம், தள்ளுபடி செய்யப்பட்ட தொகைகள் எப்படி செங்குத்தாக உயர்ந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. வங்கிகளால் அவற்றைத் திரும்ப பெறுவதில் தோல்வி அடைந்திருப்பதால், அவற்றை அவை தொழில்நுட்பரீதியான தள்ளுபடி என்று கூறி, தங்களுடைய புத்தகத்தை சுத்தமாக்கிக் கொள்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த 2014க்குப் பின்னர்தான், இவ்வாறு செயல்படா சொத்துக்கள் அல்லது வராக்கடன்களில் செங்குத்தான உயர்வு காணப்பட்டிருக்கிறது.
2013-14ஆம் ஆண்டில் செயல்படா சொத்துக்களின் தொகை 205 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. அது 2018-19ஆம் ஆண்டில் 1,173 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இவ்வாறு செங்குத்தான உயர்வு என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏனெனில் 2014இல் பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், தாங்கள் வங்கித்துறையில் “செயல்படா சொத்துக்களை (வராக்கடன்களை)க் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்,” என்று உறுதி அளித்திருந்தது.
வங்கி மோசடி வழக்குகளும் அதிகரிப்பு
இக்கால கட்டத்தில் வங்கி மோசடி வழக்குகளும் செங்குத்தாக உயர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த வழக்குகள், 2012-13இல் 4,306 வழக்குகளாக இருந்தது, 2018-19இல் 6,801ஆக உயர்ந்திருக்கிறது.
வங்கி மோசடி வழக்குகளில் மூழ்கியுள்ள பணம்
வங்கி மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இந்த மோசடிகளின் விளைவாக மூழ்கியுள்ள பணமும் (money sunk) அதிகமாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் 2018-19இன் ஆண்டறிக்கையின்படி, 2013 மார்ச்சில் வங்கி மோசடிகளால் மூழ்கியுள்ள தொகை 10.2 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, 2018 மார்ச்சில் 71.5 ஆயிரம் கோடி ரூபாயாக அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உயர்ந்திருக்கிறது.
தள்ளுபடி செய்யப்பட்ட வராக் கடன் தொகைகள்
இவ்வாறு வங்கிகளில் வராக் கடன்கள் உயர்ந்துகொண்டிருப்பதும், வங்கி மோசடி வழக்குகளும் வளர்ந்துகொண்டிருப்பதும் ஏற்கனவே அவற்றில் பணம் சேமித்துள்ள டெபாசிட்தாரர்களால் உணரப்பட்டுவிட்டது. இதற்கு சமீபத்திய எடுத்தக்காட்டு, யெஸ் பேங்க் நிலைகுலைந்ததாகும். இவ்வாறு தனியார் வங்கி ஒன்று தத்தளித்துத் தடுமாறியதை அடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி அதனை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக பாரத ஸ்டேட் வங்கியையும் மற்றும் சில தனியார் வங்கிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது.
இவ்வாறு இந்தியன் வங்கிகளில் செயல்படா சொத்துக்கள் மற்றும் வராக்கடன்கள், வங்கி மோசடி வழக்குகள் தாறுமாறாக அதிகரித்துக்கொண்டிருப்பதானது, இந்திய வங்கி அமைப்பின் எதிர்காலம் குறித்து ஒரு வருந்தத்தக்க சித்திரத்தைத் தீட்டியிருப்பதாக, தொழில்துறை வல்லுநர்கள், வங்கி ஊழியர் சங்கங்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன.
நன்றி – News Cliks இணையதளம்
(15/2/2020)
(தமிழில்: ச. வீரமணி)