அப்பாவைப் போலவே
நிலத்தில் உழைத்திடவே
தாவணியின் மீது
சட்டை அணிந்து
தாயைப் போலவே
சோறு பொங்கி ஆக்கிடவே
கரண்டியைக்
கையில் எடுத்து
அண்ணனைப் போலவே
பொறுப்பாய் இருக்கவே
வரவு செலவுகளைத்
துல்லியமாய்க் கணக்கிட்டு
வாசல் ரம்மியமாய்
இருக்கவே
சாணம் தெளித்து
அழகிய கோலமிட்டு
கம்பங்களியும்
உளுத்தங்களியும்
நிதம் தின்று
உடலினை உறுதி செய்து
மாட்டிடம் பால் கறந்து
ஆட்டினை கட்டி வைத்து
கோழிக்குத் தீனியிட்டு
திண்ணை பெருக்கி வைத்து
முழுநிலவைப் போலவே
வட்டமாய்ப் பொட்டிட்டு
காற்கூந்தல் பின்னி சடையிட்டு
வளையல் சலங்கை ஒலிக்க
பொழுது சாய்ந்த பின்
நிலவொளியில் ஆட்சியர் ஆவதற்கு
படிக்கவும் செய்வாள்
எங்கள் நிலத்தின் பூமகள்
– ஜெயஸ்ரீ
நிலவொளியில் படிக்கும் பூமகளின் பயணம் ஆட்சியாளராக.. சிறப்பு தோழர் மனமார்ந்த வாழ்த்துகள்.
நியாயமான ஆசை கவிதை ஊடே எட்டிப்பார்க்கிறது எதார்த்தமாகட்டும்.