பயல்  மார்பில் கிடந்து முட்டி மோதிக் கொண்டிருந்தான்புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான் பார்த்தும்  பயனில்லை . மூக்கால் சுரண்டிப்பார்த்தான்  எதுவும்   கிடைக்கவில்லை    

அடிவயிற்றில் காலை வைத்து  அழுத்தி மார்பை நோக்கி  உண்ணிப்பார்த்தான் ஒன்றும் 

ஆகவில்லை. வயல் காட்டிலிருந்து  எடுத்து  வந்த குழைவான ஈரக்களிமண்ணை  அப்படியே

 கைகளால்  அள்ளிக்கொண்டு  வந்து நைட்டிக்குள் கொட்டியது போல பயல் 

மார்போடு குளு குளுவென்று  நழுவிக்கொண்டிருந்தான்.

வள்ளி. என்ன தான் செய்றான்னு பார்ப்போம் என்று கொஞ்ச நேரம் விளையாட

விட்டுப்பார்த்தாள் . கமல  வள்ளி.  

பொக்கை வாய்  .பயல்  வாய்க்கு  எதுவும் கிடைக்காமல்  ஜொள்ளை வழிய

 விட்டபடியே இருந்தான். அவன் எதிர்பார்க்காத நேரத்தில் 

 சட்டென்று அவன் முகத்தைப்பார்த்தாள் பயல்  கொட்டான் கொட்டானென்று  அவள்

முகத்தைப்பார்தபடியே இருந்தான். அச்சு அசல் தமிழ் அழகனைப்பார்ப்பது போலவே இருந்ததது.

இதே திருட்டு முழிக்காகத்தான்டா உங்கப்பன் கிட்ட இந்த கமலவள்ளி ஏமாந்து போனா 

என்று கொஞ்சம் சத்தமாகவே  சொன்னாள். பயல் என்ன நினைத்தானோ எல்லாம்   

புரிந்தது போலபொக்கை வாயைக்காட்டி சிரித்தபடி ஊ ஊ என்று  கைகால்களை  அசைத்தான் . 

நேற்று குழந்தையைப்பார்க்க வந்த பார்வதி பாட்டி

‘’அப்பன அப்படியே உரிச்சி வச்சிருக்கான் பாரு ‘ ’ என்று 

சொல்லி விடடுப்போனதிலிருந்து  நேற்றே அவனிடம் அதை  பத்து முறைக்கு மேல்

சொல்லி மாய்ந்திருப்பாள். ஆனால் அவனோ கொஞ்சமும் முகத்தில் சலனம் காட்டவில்லை. 

யாராவது உன் பிள்ளை  உன்னைப்போலவே   இருக்கிறதென்று சொன்னால்

கொஞ்சமாவது  பெருமிதம் பொங்க  வேண்டாமா தகப்பன் முகத்தில் ? 

இப்படியா புடிச்சு வச்ச புள்ளையாரு மாதிரி உக்காந்திருப்பாங்க ? 

சோற்றைப்பிசைந்து கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ திடீரென்று  நாளையில                    இருந்து ஸ்கூலுக்கு  போயிரலாம்ல ? என்று அவளைக் கேட்டான்

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

பார்வையை மோட்டு வளைக்கு மாற்றியபடியே அவனே தொடர்ந்தான்

‘’இல்ல வர்ற  வழில உங்க ஸ்கூல் பிரின்சிபாலை பார்த்தேன்

அவர் தான் நாளையிலயிருந்து கமலி டீச்சரை

 ஸ்கூலுக்கு அனுப்புறீங்களான்னு கேட்டாரு  என்றான்.

தீடீரென்று திகிலடித்தத கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள்              அவனை ஒரு நிமிடம் சலனமற்றுப் பார்த்ததவாறேயிருந்தாள்

அவள் ஒரு வேளை தன்னை நம்பவில்லையோ என்று அவன் எண்ணியபடி

ஏன்னா இன்னும் நாலு மாதத்துல பப்ளிக் எக்சாம் வருதுல்ல? அதான் கேட்டிருப்பாருன்னு

நெனைக்குறேன் என்றான்.

 ‘’அதற்கு அவள் இந்தப்பய பொறந்து இன்னும் முழுசா ஆறுமாசம் கூட ஆகல தெரியுமா..

அதுக்குள்ளயுமா புள்ளயை விட்டுட்டு வேலைக்குப் போகச்சொல்றீங்க  ? என்று அவனை

திருப்பி கேட்டாள்..

‘’புள்ளைய பார்த்துக்கிறதுக்குத்தான் அம்மாவும் அப்பாவும் இருக்கிறாங்கள்ல ‘’என்றான்

அவசரமாக  அவசரமாக.

அவளுக்கு வந்த கோபத்தில் ஆத்திரம் தாங்காமல் நைட்டியின் ஜிப்பை திறந்து ஒரு மார்பை            மட்டும் வெளியில் எடுத்துக்காட்டினாள்.   அதற்குள் முழுமையாக அமிர்தம் நிரம்பியிருந்ததால்

வெள்ளரிப்பழம் போல  பொல பொலவென்று பொன்னிறத்தில் மெருகேறியிருந்தது.

இந்தப் பாலை புள்ளைக்கு கொடுக்கலைன்னா மார்புல  நெரி கட்டிக்கிரும் தெரியுமா?

வலி தாங்க முடியாது .உசுரே போயிரும் .என்றாள்’’ மயான அமைதி கண்டது வீடு.

‘’பள்ளிக்கூடத்துக்கு  போனா யூரினல்ல தான் போய்  தான் பாலை பீச்சிவிடணும்’’

என்றாள். கல்லுளி மங்கன் அசையாமல் நின்றாள். மனதுக்குள் ‘’டேய் அது உம்புள்ளைடா ‘’

என்று அரற்றினாள்.

 இங்க புள்ள பாலு இல்லாம வீறு வீறுன்னு அழுவான் பரவாயில்லையா ? 

என்று மறுபடி கேட்டாள் .பதில் கிடைக்காத  துக்கத்தில்   மூச்சிரைத்ததது..

உடனடியாக பதிலற்றவனாக மேலே ஓடுகிற பேனையும்  மேற்கூரையின்முகட்டையும் மாறி 

மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான்.. 

‘’ நாம என்ன கவர்மென்ட் வேலையா பார்க்குறோம் ஒரு வருசச் சம்பளத்தோட லீவு 

 

கேட்குறதுக்கு .? என்றான் சட்டென்று

 அவன் சொன்னது உண்மையாக இருந்தாலும் அதற்குள் ஒளிந்திருக்கும் 

 குத்தலைத்தான் அவளால் சகிக்க முடியவில்லை .

‘’அப்டின்னா  அப்பவே கவர்மெண்ட் வேல பாக்குறவளப் பார்த்து கல்யாணம் 

பண்ணியிருக்கணும் ‘’ என்றாள்.

‘’பொண்ணு புத்திசாலி எப்படியும் டிஆர்பி எக்சாம் எழுதி கவர்மெண்ட் வேலைக்கு 

போயிரும்னு தான் தரகர் சொன்னாரு.என்றான் சற்று அழுத்தமாக

‘’இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல கவர்மெண்ட் வேலை  பார்க்கிறவளாவே பாருங்க

நானும் எம் புள்ளையும் போயிர்றோம் ‘’என்றாள்.

‘’போயிர்றோம்’’ என்ற வார்த்தையை சொன்ன போது தன்னை அறியாமலே பயலை

இறுக்கமாக மார்போடு அணைத்திருந்தாள் .கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிந்தது.

அதற்குள் பயல் மஞ்சள் வண்ணத்தில் தீர்த்தத்தை மடி மீது பிரயோகித்து விட்டான்.

இத உங்கப்பன் மேல நீ   அடிச்சிருந்தாலும் ஏதும் புத்தி இருந்திருக்கும் என்று

நினைத்தபடியே வாடா தங்கம் போய் வேற ஹக்கிஸ் மாத்திட்டு வந்திரலாம் என்று

துணிகள் மடித்து வைக்கப்பட்டிருந்த டேபிளுக்கு பயலை கொண்டு சென்றாள்.

பயலின் ஹக்ஹிஸ் இருந்த இடத்தில் இவளின் பள்ளி ஐடி கார்டு பல்லைக்காட்டிக்கொண்டு

.தயாராக இருந்தது.  பள்ளிக்கு கிளம்ப சொல்லி உத்தரவாகிவிட்டது தெளிவாக தெரிந்தது. .

கார்டு இளம் பச்சை நிறத்தில்அழகாக லேமினேட் செய்யப்பட்டு படு கவர்ச்சியாக இருந்தது.

இடது  ஓரத்தில் மஞ்சள் நிற பள்ளி முத்திரை

.கமலவள்ளி எம்எஸ்ஸி எம் எட் .

பட்டதாரி கணித ஆசிரியை

கே ஜி பி கேர்ள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

 பாஸ்போர்ட் புகைப்படத்தில் வெள்ளை நிற  ஓவர் கோட்டுடன் அவள் சிரித்ததவாறிருந்தாள்.

கீழே  பச்சை வண்ணத்தில் முதல்வரின் கிறுக்கல் கையெழுத்து

.அதைப் பார்த்ததும் குப்பென்று வியர்த்தது அவளுக்கு. 

இதை யார் இங்கே எடுத்து வைத்ததது?,

இதுவும் இவன் வேலையாகத்தான் இருக்கவேண்டும்.

இவனே நாளை காலை பள்ளியில் என்னை இறக்கி விட்டு விட்டு 

பைனான்ஸ் கடைக்கு போகிற ஐடியாவில்  இருப்பானென்று தெரிகிறது..

 தனக்குத் தெரியமலே தன்னை குழந்தையிடமிருந்து பிரிப்பதற்கு ஒரு சதி நடப்பது 

தெரிந்தததும் எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ கமலிக்கு அந்த ஐடி கார்டை எடுத்து 

த்தூ என்று துப்பி வாசலுக்கு வெளியே விட்டெறிந்தான்

அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த அவன் எதுவுமே சொல்லாமல்

மௌனமாக வெளியேறி விட்டான்.

பயல் ங்ங்கா என்று  கையையும் காலையும் உதைத்துக்கொண்டிருந்தான்

தலையை நிமிர்த்தி  மேல் துண்டால்  எச்சிலை 

துடைத்து விட்டு  என்னடா  வேணும் ஒனக்கு என்றாள்

ங்கா ங்கா என்று கைகளை தட்டான் சிறகு போல் கைகளை விரித்தான்.

பிறகு முன்பு போலவே கால்களை அடி வயிற்றில் மிதித்து உன்னி  உன்னி  மார்பை நோக்கி 

வந்தான்..

பாச்சி வேணுமா தங்கம்  ? என்றாள்

 தலைநிமிர்ந்து ங் ங் என்று எச்சில் வடித்தான் . எச்சில்  ஒரு கோடு போல 

அவன் கழுத்து வழியே இறங்கி  வந்து குட்டி சட்டைக்கு உள்ளேயும்  வெளியேயும் அருவியாய்

கொட்டி கடைசியில் அவளின் நைட்டியையும்  நனைத்துக் கொண்டிருந்தது.

 பயல் ஈரத்தின் பிசு பிசுப்புக்கு  ஒரு இடத்தில் இல்லாமல் குரவை மீன்  போல சுற்றி  சுற்றி 

நெளிந்து கொண்டிருந்தான்.

 இனி பயல் அழுதாலும் அழுதுவிடுவான் என்று தோன்றியது.

நைட்டிக்கு மேல் பழைய துப்பட்டாவை எடுத்துப்போர்த்திக்கொண்டு பயலை மார்புக்குள் 

புதைத்தாள் அவன் வாய்க்குள் மார்புக் காம்பு தட்டுப்பட்டதும்  அவன்

வாயை எடுக்கவேயில்லை. கடவாய் வழி அமிர்தம் பொங்சி வழிந்து பெருகி கொண்டிருந்தது.

தற்போது மனசிலிருந்த பாரம் குறைவது போல இருந்தது. பயல் பொக்கை வாயால் உறிஞ்சிக்

குடிக்க குடிக்க மார்பு முழுவதும் ஒரு பரவசம் தொற்றிக்கொண்டது.

பயல் ஒரு முறை துப்பட்டாவை விரல்களால் விலக்கி விட்டு முகத்தை வெளியே நீட்டி 

Tamil mother with her son - Painting by S. Elayaraja  (www.elayarajaartgallery.com) | Looks

பால் வழியும் வாயோடு அவளைப் பார்த்து சிரித்தான்.அப்படியே சிலிர்த்தது.குனிந்து

அவன்  நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்.

மெதுவாக கன்னத்தை கிள்ளி மீண்டும் மார்புக்குள் அணைத்து 

மீண்டும் துணியால் போர்த்தினாள்

இவளை பரிசம் போடுகின்ற அன்றே  இவர்களின்  பிடிவாதம் இவளுக்கு தெரிந்துவிட்டது.

 .ஊர் முழுவதும் கூடியிருக்க  நன்றாக ஜமுக்காளம் விரித்த நடுத் தெருவிலேயே

 வைத்து  ஊர் நாட்டாமை  நக்கலாகவே கேட்டு விட்டார்

‘’ஏய்யா டவுன்லயிருந்து வர்றேன்னு சொல்றீங்க 

 ஒரு முழம் பூவும் ஒரு சீப்பு பழமுமா  கிடைக்கலை ?

‘’பொன்ன வைக்கிற இடத்துல பூவை வைக்கிறோம்  என்றார். இவனுடைய அப்பா.

மீனா சித்தி அப்பொழுதே  இவளது தோளில் இடித்து 

 ‘’ என்னடி உங்கப்பனும் ஆத்தாவும் தேடிப்பிடிச்சு 

ஒரு கஞ்சப்பபயல் குடும்பத்தை உனக்குன்னு பிடிச்சிட்டு வந்திருக்கானுக 

ஒன்னும் சரிப்படாது போல இருக்கே என்றாள். 

கடைசியில் அவள் சொன்னது தான் அப்படியே பலித்தது.விட்டது. 

எச்சில் கையால் காக்கா விரட்டுவதற்கு கூட இவன் வீட்டில் பயந்தார்கள்

பணம் பணம் என்று  குடும்பமே பரபரத்தது பணத்தின் பின்னால் ஓடியது.

பைனான்ஸ் சீட்டு பிடிப்பதும் ஏல சீட்டு எடுப்பதும்  வட்டி வசூல் பண்ணுவதும் 

சில  நேரம்  இதுவீடா இல்லை  பைனான்ஸ் கம்பெனியா என்று கமலிக்கு சந்தேகமே 

வந்தது .. .

பாத்ரூமிலிருந்து வந்தவுடன் குண்டு பல்பை அணைக்க மறந்துவிட்டாலும்

அவனுடைய அம்மாம் அப்பாவும் யாரையோ திட்டுவது போல கண்டபடி

திட்டினார்கள்.  இவள் கூனிக் குறுகி கூசி நின்றாலும்  புருசன் எதுவுமே நடக்காதது

போல் கடந்து போய் விடுவான் . இரவு முழுவதும் தலையணையில் முகம் புதைத்து

அழுதாலும் ஒரு ஆறுதலான வார்த்தை அவனிடமிருந்து வராது.

அவளின் பிறந்த வீட்டு வறுமை வேறு அவர்களின் வாய்க்கு அவலாக இருந்தது.

தெரியாமல் எப்போததாவது அவன் அவளுக்காக  பரிந்து பேசிவிட்டால் 

 

‘’ மகா ராணியை தங்கத்தாம்பாளத்துல வச்சு தாங்குடா ..’’ என்று கிண்டல் பண்ணுவார்கள்

அவனுடைய அம்மாவும் அப்பாவும் ..

அவ்வளவு தான்  சர்வமும் அடக்கி வாய் பொத்திக்கொள்வான்.

கமலி ஒரு மெட்ரிக் பள்ளியில்  இருபதாயிரம் சம்பளம் வாங்கும் மேத்ஸ் டீச்சராக 

இருந்தாள் என்பது மட்டும் தான் இந்தத் திருமணம் நடந்துமுடிந்ததற்கான காரணம் என 

விரைவிலேயே அவள்  கண்டு கொண்டாள் .தன் அம்மாவிடம் இதை அவள் ஒரு முறை

சொல்லி அழுதபோது அவள் வாய் கொள்ளா பெருமையோடு அதுக்காகத்தானடி அவுங்க

நம்ம வீட்டுல சம்பந்தம் பண்ணியிருக்காங்க என்றாள். அதற்குப் பிறகு 

அவள் யாரிடமும் இதைப்பற்றி பேசுவதேயில்லை..

பயல் பிறந்ததிலிருந்து அத்தைக்காரி  இப்போது புதிதாக ஒரு பழக்கத்தை

 ஆரம்பித்திருக்கிறாள்

இவள் பயலைக்கொஞ்சி சந்தோசமாக இருப்பதை பார்த்துவிட்டாள் எப்படித்ததான் இருக்குமோ

 அவளுக்கு  , அருகில் வந்து நைச்சியமாக பேசி அவனைத் தூக்கி கொண்டு போய்விடுவாள். 

 அப்படியே  அவளை  பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்து விட்டு 

பயலை தூக்கி கொண்டு  என்று  தன் வீட்டுக்கு நடையைக்கட்டிவிடலாம் என்று தான்

தோணும் ஆனால் அப்படி எல்லாம்  முடிகிறதா ?

ஊமைக்கண்ணீர்  மட்டும் தான் வடிக்க முடிகிறது.

சரி அப்படியே வீட்டுக்குப்  போனால் தான் என்ன ஆகப்போகிறது ?

வாசலை அடைத்துக்கொண்டு  அம்மாவும்  மாட்டுக் கொட்டகையில் கல்யாணம் ஆகாத 

தங்கச்சிகளும்  நின்று கொண்டு கண்ணை கசக்கிக் கொண்டிருப்பார்கள்

அய்யா  நேராக  வயலிலிருந்து வந்ததும் மண் வெட்டியை தோளிலிருந்து

கீழே இறக்கி வைத்து விட்டு திண்ணைக்காலில்  சாய்ந்த படி எதுவுமே பேசாமல் 

பீடியை மட்டும் இழுத்து புகையை வெளியில் விட்டபடியே இருப்பார்.

 கடைசியில்  சொக்கி ஆடு மட்டும்  தான் இவளை அடையாளம் கண்டு  

 வாலை ஆட்டிக் கொண்டு காலை வளைய வளைய  வந்து  நலம் விசாரிக்கும் .

 வேறு எதுவும் உருப்படியாக நடக்கப்போவதில்லை.

பயல் இப்பொழுது ஒரு பக்கம் குடித்து விட்டு அடுத்த மார்புக்கு தாவியிருந்தான்

 

வழக்கம் போலவே இந்தப்பக்கமும்  ஒரு முறை தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்தான்.

பதிலுக்கு இவளும் சிரித்த கண்ணடித்தாள். ஒரு நிமிடம் சுத்தமாக கவலையே இல்லாமல் 

போனது.

அத்தைக்காரி அதற்குள் மோப்பம் பிடித்து பயலை எடுத்துச்செல்வதற்கு

வாசல் பக்கம் நான்கைந்து முறை வந்து நின்று விட்டாள்..

அவளைப் பார்த்ததுதம்  வேகமாக புள்ளையை  கையில் எடுத்தவள்

பயலை இறுக்கி அணைத்தபடி உச்சி முகர்ந்து முகமெல்லாம் 

பச் பச் என்று முத்தம் பதித்தாள். மறுபடியும் அவனை மார்புக்கு கொடுத்து

நல்லா குடிடா தங்கம் எல்லாத்தையும் இப்பவே குடிச்சி தீத்திரு என்றாள்

அத்தைக்காரி வாசலில் நின்று கொண்டு வைத்த கண் வாங்காமல் இவர்களைப்

பார்த்துக் கொண்டிருந்தாள்.

பயல் கொர் கொர் ங்ங்கா என்று கை கால்களை விசிறியடித்தான்.

அவன் காதோரம் வாயை கொண்டு போய் 

நாளைக்கு அம்மா தான்  ஸ்கூலுக்கு போயிருவனே

இதே நேரம் பசிச்சா  பாச்சிக்கு என்ன பண்ணுவ? என்று கேட்டுவிட்டு 

கைகளை அகல  விரித்தாள்.

பயல் பால் வழியும் பொக்கை வாயோடு சிரித்துக்கொண்டிருந்தான்.

 

தங்கேஸ்

 

2 thoughts on “சிறுகதை: பயல் – தங்கேஸ்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *