அர்த்தமுள்ள வாதங்கள் – நூல் அறிமுகம்
மனச்சிதைவு நோயின் உலக வித்தகர் தாரா ரங்கசாமி (Thara Rangaswamy)
நூலறிமுகம் : “வயிற்றுக்குள் குழந்தை எப்படி சென்றது?” – ஹேம பிரபா
நூல் அறிமுகம்: வறீதையா கான்ஸ்தந்தின் ’கையறு நதி’ – அ.ம.அங்கவை யாழிசை
மனதை ஆற்றுப்படுத்தும்
கையறு நதி.
வறீதையா அய்யா எழுதிய ‘கையறுநதி’ எனும் இப்புத்தகத்தைக் கடந்த வாரம் என் தந்தையிடம் இருந்து படிப்பதற்காகப் பெற்றேன். இப்புத்தகம் எதைப் பற்றியது என்பதை, தந்தையிடம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தேன்.
இப்புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய போது, மனப்பிறழ்வுக்கு உள்ளான தனது மகளைக் கவனித்துக் கொள்ளும் ஒரு தந்தையின் வாழ்க்கைக் கதை என்ற சித்திரத்தையே வைத்திருந்தேன். ஆனால், படிக்கப் படிக்க என்னுடைய அந்தச் சித்திரம் பிறழ்வுக்குள்ளானது. அப்புத்தகம் மேற்கூறியவர்களைப் பற்றிய புத்தகமாக அல்லாமல், இந்தச் சமூகத்திற்கு அடிப்படைத் தேவையாக உள்ள படைப்பாகவே தோன்றியது. இச்சமூகம், மனப்பிறழ்வுக்கு உள்ளானவர்களைப் பார்க்கும் பலதரப்பட்ட பார்வைகளை இந்நூல் உணர்த்தியபோது மனம் கனத்துப்போனது.
மனப்பிறழ்வு என்றால் என்ன என்பதை இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும் வரை விளங்கிக் கொள்ளாமல்தான் இருந்தேன். நான் படித்த பள்ளியில் என்னோடு சகமாணவி இருந்தாள். அவளும் மனரீதியாகவோ அல்லது மூளை வளர்ச்சியிலோ பாதிப்பு உள்ள ஒருவள்தான். இரண்டு ஆண்டுகள் என் வகுப்பில் படித்தாள். அப்பொழுதெல்லாம் அவளுடைய அனைத்துப் பள்ளி வேலையிலும் உதவி செய்து வந்தேன். அவளைப் பற்றிய பரிதாபம், கவலை எல்லாம் இருந்தது.
நான் நினைப்பேன், இந்த வயதில் கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் குழந்தையைப்போல் இருப்பது வரமல்லவா? நான் அதற்குக் கொடுத்துவைக்க வில்லையே எனப் பொறாமைப்படுவதுண்டு. ஆனால், அவள் மற்றவரிடம் உள்ளதை நினைத்து எத்தனை நாள் பொறாமைப்பட்டிருப்பாள்; கவலைப்பட்டிருப்பாளோ நான் அறியவில்லை. கண்களுக்கு அகப்படாதவாறு இந்தச் சமூகம் அவர்களைப் புறக்கணிக்கிறதா? மறைக்கப்படுகிறார்களா? இல்லை மறைந்து கொள்ள விருபம்புகிறார்களா?
இவ்வுலகில் உள்ள பெருவாரியானவற்றைப் பற்றிய படிப்பினை எனக்குண்டு என்று நினைத்துக்கொண்டிருந்தவள் நான். ஆனால் நான் வாழும் அதே சமூகத்தில் என்னோடு வாழும் ஒரு பகுதியினரைப் பற்றி அறியாமலிருந்தது வெட்கித் தலைகுனிய வைத்தது.
இப்புத்தகம், என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய சில புத்தகங்களுள் ஒன்று. இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கையில் நான் ஒரு உளவியல் ஆற்றுப்படுத்துதல் அமர்வில் இருந்து வெளியில் வந்தது போல இருந்தது. ஏனோ தெரியவில்லை அந்த அமர்வு எனக்கு மிக அவசியமாகவும் இருந்தது.
இப்புத்தகம் பேசும் மொழியின் நடை மிக அருமையாகவும் பொருத்தமாகவும் இருந்தது. வறீதையா அய்யா அவர்களின் பேச்சு, அவர் என்னுடன் தொலைபேசியில் பேசும்போதும் அருமையாக இருந்தது.
வாழ்க்கை என்னும் தண்டவாளம் எவ்வளவு மோசமாகப் பிறழ்வுண்டாலும், அதன் மீது பயணித்தாக வேண்டும். எங்கு அழைத்துச் செல்கிறதோ, எதைக் காண்பிக்கிறதோ, அதை எப்படி நாம் காண்கிறோமோ, எப்படிப் புரிந்துகொள்கிறோமோ, பார்த்துக் களித்துச் செல்லவேண்டியது தான். எப்படியானாலும் பயணித்தே ஆக வேண்டும்.
உளவியல் சம்பந்தமான புரிதல், அதில் மாற்றம் உள்ளவர்கன் இன்னல், அவர்களைப் பராமரிப்பவரின் உளவியல், அவர்களைப் பற்றி இச்சமூகத்தின் புரிதல் எனப் பல வாயிலாக இப்புத்தகம் பேசியிருக்கிறது.
நல்ல நல்ல அனுபவங்களை இந்நூலில் கற்றுக்கொண்டேன். வறீதையா அய்யா அவர்களுக்கு நன்றி.
– அ.ம.அங்கவை யாழிசை
நூல் : கையறுநதி
ஆசிரியர் : வறீதையா கான்ஸ்தந்தின்
வெளியீடு : கடல்வெளி பதிப்பகம்
பதிப்பு : முதல் பதிப்பு 2022
விலை : ரூ 220/-
தொடர்புக்கு: 24332924
நூல் அறிமுகம்: எஸ். ராமகிருஷ்ணனின் “அவளது வீடு” – அன்புக்குமரன்
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகங்களில் இது நான் வாசிக்கும் மூன்றாவது புத்தகம். அவரின் சிறுகதை தொகுப்பில் “அவளது வீடு” நான் வாசிக்கும் முதல் புத்தகம்.
எனது இனிய டால்ஸ்டாய், பதேர் பாஞ்சாலி என்ற 2 கட்டுரைகள் கிட்டத்தட்ட ஒரு கதை கேட்பது போலத்தான் மிக சுவாரசியமாக இருக்கும். இப்படி பட்ட ஒரு படைப்பாளியின் புனைக்கதைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த படைப்புதான் “அவளது வீடு” என்ற சிறு கதை தொகுப்பு.
நாவல் வாசிப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு தவம் போன்றது, அதை தொடர்ந்து வாசிக்காவிட்டால், அந்த கதையுலகில் நாம் சஞ்சரிப்பது கடினம் என்று நான் உணர்ந்ததாலோ என்னவோ, சிறு கதை புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன.
எழுத்தாளர் கே.வி ஷைலஜா அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆற்றிய உரையில் “அவளது வீடு” என்ற ஒரு கதையை அவையோருக்கு சொன்ன காணொளியை யூடூபில் நான் ஒரு முறை எனது மகிழுந்தை ஒட்டியப்படியே கேட்டிருக்கிறேன். பின்பு புத்தகங்களே துணை! என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களே இந்த கதையை விவரித்தார்.பெண்களின் அடிப்படைத் தேவைகள் இது தான், அவர்களுக்கு இது போதும் என்ற கருத்துப்படிவம் நிறைந்த நடுத்தர ஆண்வர்கத்தினரின் மூர்க்கத்தனமான உளவியல் வன்முறையைச் சொல்லாமல் சொல்லும் கதை இது.
இந்த கதையை கேட்டபோது ஒரு பேருந்து பயணத்தில் இரு தோழிகளின் உரையாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. அதில் ஒரு தோழி சொல்கிறாள் “நான் வெகுநாட்களாக ஒரு இருசக்கர வாகனம் வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன், ஆனால் வீட்டிலோ அந்த செலவுக்கு நகை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் “. அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் மற்றோரு தோழி “ஆண்களுக்கு என்று வரும் பொழுது, அவர்களுக்கு வண்டி, வீடு என்று அவர்களுக்கென வாங்கிக்கொள்கிறார்கள், நமக்கு என்று வரும் பொழுது நகை, புடவை கல்யாணம் என்பதோடு முடிந்து விடுகிறது. ஒரு ஆண்மகனாக எனக்கு வாய்த்திருக்கும் சுதந்திரத்தை நினைத்து பெருமை கொள்வதா அல்லது அவர்களின் நிலையை நினைத்து அனுதாபப்படுவதா? தெரியவில்லை. இவை இரண்டுமே அந்த பேருந்து பயணம் முடிவடையும் வரைதான்.
அவளளது வீடு கதையை கேட்டவுடனேயே இந்த சிறுகதையை எழுத்து வடிவத்தில் வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. இதற்கு ஏற்றாற்போல் டிசம்பர் 2020 தேசாந்திரி பதிப்பகத்தில் “அவளது வீடு” என்று தலைப்பிலேயே ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு அசத்திவிட்டார்கள். சென்னை புத்தக கணக்காட்சிற்கு முன்னதாக சிறிய அளவில் 40 பதிப்பகங்கள் கலந்து கொண்ட ஒரு புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் என் கண்களில் பட்டதும் அளவில்லா மகிழ்ச்சியுடன் அதை என் வசப்படுத்திக்கொண்டேன்.
இந்த கதைகளை தேர்ந்தெடுத்தது வாசகர்கள்தான்.
20 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பில் ஒரு கதை கூட எனக்கு சலிப்பு தரவில்லை. பரவலாக இந்த சமூகத்தில் இணக்கமான ஒரு வாழ்க்கையை வாழும் மனிதர்களின் நடுவில் சிலர் சில விசித்திர பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்து மறைக்கின்றனர். இந்த சிறுகதைத் தொகுப்பில் பெருவாரியான கதைகள் இவர்களின் வாழ்க்கையை சற்று எட்டி பார்த்து நமக்கு பரவலாக கிடைக்கும் பொது ஞானம் அல்லாது வழக்கத்திற்கு மாறான ஞானத்தை தருவதாக உணர்கிறேன்.
வாடகை வீட்டிற்கான விளம்பரங்களைப் பார்த்து அந்த வீடுகளை தேடி போகும் ஒரு பெண்மணி, பெய்யும் மழையின் அளவுகளை ஒரு குறிப்பேட்டில் குறிப்பெடுக்கும் ஒரு தந்தை, ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்ற இலக்கிய கூட்டத்தில் ஒற்றை பெண்மணியாய் போய் தன் மனம் கவர்ந்த எழுத்தாளரை தரிசிக்கும் ஒரு இல்லத்தரசி, சேவலுக்காக தன் குடும்பத்தைத் துச்சமாக மதிக்கும் ஒரு கிராமத்து கிழவர், ஒரு ஆயுதத்தை பரிசுப் பொருளாக தன்வசம் எப்போதும் வைத்திருக்கும் ஒரு மனைவி, டயரிகள் எழுதும் பழக்கமுடையவர் அதை கடைசியாகப் புரட்டிப்பார்க்கும் ஒரு முதியவர், செகாவை காணவரும் வினோதமான விருந்தாளி, பாம்பை தன் கட்டுப்பாட்டில் வைப்பதை ஒரு போதையாகக் கொண்ட ஒரு பாம்பாட்டி, பின்னோக்கி செல்லும் ஒரு மனிதர்,வீட்டில் எப்பொழுதும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு அப்பா என்று பட்டியல் சற்று நீளம் தான்.
20 கதைகளில் பெரும்பாலான கதைகள் என்னை கவர்ந்தன. வெறும் இருட்டு மற்றும் பனாரஸ் என்னை வெகுவாக கவரவில்லை. ஒரு வேளை இதற்கு சற்றும் ஒவ்வாத கருக்களைக் கொண்ட மற்ற கதைகளோடு சேர்த்து இதை வாசித்ததன் காரணமாக இருக்கலாம்.
இதில் என் மனதுக்கு நெருக்கமான கதைகள் “அவளது வீடு”, “ஆண் மழை”, “எம்பாவாய்”, “தனலக்ஷ்மியின் துப்பாக்கி” , “பதினாறு டயரிகள்”, “இன்னும் சில கிளிகள் “, “நீரிலும் நடக்கலாம்”, “அப்பா புகைக்கிறார்”, “சௌ ந்தரவள்ளியின் மீசை”.
மிகச் சிறிய கதையான வானோர் என்ற கதை , எஸ்.ராமகிருஷ்ணனின் பிரசுரிக்கப்படாத உப்பு என்ற சிறுகதையை நினைவுப் படுத்தியது.
சௌந்தரவள்ளியின் மீசை உளவியல் ரீதியாக ஒரு மாணவியின் பாதிப்பை சித்தரித்தாலும் அதற்கு மாறாக எனக்கு இரு இனிய தருணங்களை நினைவூட்டியது.
1. போப்பின்ஸ் என்ற ஒரு மலையாள திரைப்படத்தில் கண்ணாடியை முதல்முதலாக பார்க்கும் ஒரு தம்பதியினரின் எதிர்வினை
2. என் கல்லூரி பருவத்தில் கேரளாவில் உள்ள தன் சொந்த ஊருக்கு சென்று திரும்பிய சக மாணவியின் கையை பார்த்து ஆர்வத்தினால் மலையாளத்தில் ஒரு கேள்வியை கேட்டு அவளை நாணச் செய்தது. அந்த கேள்வியின் தமிழாக்கம் “உன் கைகளில் உள்ள முடியை காணவில்லை”. அதற்கு அவள் வெட்கம் கலந்த சிரிப்புடன் அளித்த பதில் “பிரேமிடம் நல்ல கவனிக்கும் திறன் உள்ளது ”
இந்த சிறுகதை வாசிப்பில் மற்றொன்று புலன் படுகிறது. யாருக்கும் தீங்கில்லாமல் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் தோற்றத்தினாலோ, மனரீதியாகவோ, பழக்கத்தினாலோ மாறுமட்டு இருப்பவர்களை நாம் ஏற்று கொண்டதே இல்லை. மாறாக பரவலாக உலவும் இணக்கமானவர்களின் செயற்பாடுகளாக “புகைப்பிடித்தல், மனைவியை அடித்தல், பெண்களை பின் தொடர்தல், ஏதோ ஒரு மயக்கத்தில் தன்னை அடிமையாக்கி குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்” என ஈரமில்லாமல் வாழ்கின்ற ஆண்வர்கத்தினரை பெரும்பாலான பெண்கள் சகித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆக்க பூர்வமாக ஒரு இலக்கியத்தை ரசிப்பது, திருமணப் பரிசாக ஒரு பொருளை தன் வசம் பாதுகாத்து வைப்பது, வசிப்பதற்கு விசாலமான வீடு வேண்டி இருக்கும் பெண்மணி என நியாயமாக யாருக்கும் தீங்கில்லாத பழக்கங்களைக் கொண்டிருக்கும் பெண்மணிகளை எதிரியாக கருதும் சமூகம் வருத்தத்திற்குரியது.
கல்வி போராளிகளுக்கு நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் நாம். இல்லையேல் பண்பாட்டு தொடர்ச்சி என்ற பேரில் ஆண்களின் அட்டூழியங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அன்புடன்,
அன்புக்குமரன் எத்தியரசன்
நூல் : அவளது வீடு
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
விலை : ரூ.₹270
வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
நூல் அறிமுகம்: தாழை. இரா.உதயநேசனின் ’செவத்த இலை’ – பாரதிசந்திரன்
தாழை இரா உதயநேசன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு இந்நூல். இந்நூலில் 30 சிறுகதைகள் காணப்படுகின்றன. சிறுகதைக்கே உரித்தான அடித்தளக் கட்டமைப்பைப் பெற்று, மன உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் மற்றும் சிந்தனைகளுக்கு வழிவகுக்கும் சிறுகதைகள் இத்தொகுப்பில் காணப்படுகின்றன.
குறிப்பாகச் சிறுகதைகள், அந்த அந்தக் காலகட்டத்தின் சமூக நடப்புகளை வெளிப்படுத்துகின்றனவாக அமைய வேண்டும். தனிமனித உள்ளத்தின் உணர்வுச் சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும்.
சிறுகதைகளைப் படிப்பவர்கள், ஆசிரியர் கூற வந்திருக்கும் செய்தியை, கருத்தை, அறிவுரையை, நடப்பை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே சிறுகதை வெற்றி பெற்று விட்டதாகப் பொருளாகும். அந்த நிலையில் 30 சிறுகதைகளில் ஆசிரியர் என்ன கூற நினைத்தாரோ அந்தக் கருத்தும், நடத்தைகளும், அறிவுரைகளும் மிகத் தெளிவாக வாசகனுக்குப் போய்ச் சென்றடைந்து இருக்கிறது.
எந்தவிதமான மிகைச் சொல்லாடல்களும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் எங்கும் காணப்படவில்லை. வசன உரைநடைகள், ஆசிரியரின் உள்ளீடுகள், காட்சிப் பின்புல விளக்கம், இவைகள் அனைத்தும் வெற்றுச் சதைகளைச் செதுக்கி மிகச் சரியான உடல் அமைப்பில் ஒரு உருவத்தைச் சமைத்துத் தந்திருக்கிறது.
சிறுகதை படித்து முடித்தவுடன் அந்தச் சிறுகதை படித்தவரின் மனதில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். இத்தொகுப்பிலுள்ள 30 கதைகளும் படித்து முடித்தவுடன் 30 விதமான எண்ணக் கிணறல்களை ஏற்படுத்துகின்றன.
அந்தக் கிளர்ச்சிகள் வாசகனை ஆசிரியரின் எல்லைக்கு அருகில் கொண்டு சென்று, ஆசிரியரையே தரிசிக்க வைக்கின்றன. உண்மையில் எல்லாச் சிறுகதைகளும் உணர்வு மேலிடல்களின் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்றன.
உளவியல் பூர்வமான பல உள்ள வெளிப்பாடுகள், மனதின் அகோர எண்ணங்கள், பாச உணர்வுகள், குற்ற உணர்வுகள், தெளிவற்ற நிலை, பாசாங்கு, போலித்துவம் போன்ற பல உளவியல் தாக்கங்களை, இந்தச் சிறுகதைகள் விளக்கி நிற்கின்றன. ஒட்டுமொத்தமாய் உளவியல் சார்ந்து இருக்கின்ற மிக ஆழமான சிறுகதை தொகுப்பு இதுவாக இருக்கலாம்.
உளவியல் பூர்வமான படைப்புகளைக் குறித்து டாக்டர் தி.சு. நடராஜன் அவர்கள் கூறுகிற பொழுது,”சமூக ஒழுக்கம் முதலியவற்றின் காரணமாக மன உணர்வுகள் சுதந்திரமாக வெளிப்படாமல் அழுத்தப்படுகின்றன. இவ் உணர்வுகளும் அடி மனதில் ஆழமாய் மையம் கொண்டிருக்கும் பாலியல் உணர்வுகளும் நனவிலி மனத்தின் ஊடாக, அவனே அறியாத நிலையில், அவனுடைய சொல்லிலும், செயலிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. கலைஞனிடம் இத்தகைய உணர்வுகள் அவனுடைய அறிவார்ந்த விருப்பங்களையும், உணர்வுகளையும் மீறி அவனுடைய கலை படைப்பில் வெளிப்பட்டு விடுகின்றன.” என்று கூறுவார்.
இந்தக் கோட்பாடு முழுமையும் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஊடாக ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிகச் சரியாகப் பொருந்தி வரும்.
மனிதன் ஒரு சமூக விலங்கு என்பர். அவனிடம் சமயத்திற்குத் தகுந்த பல்வேறு உணர்வுகள் வெளிப்படும். அந்த உணர்வுகளை, அந்தக் கணம் எப்படி உணர்ந்ததோ அதே உணர்வோடு அந்தக் காட்சியை வெளிப்படுத்தச் சிறுகதைகள் முனைந்திருக்கின்றன. அந்த முனைப்பை தாழை.இரா.உதயநேசன் அவர்கள் செய்திருக்கின்றார்.
உதாரணத்திற்குச் ’செவத்த இலை’ என்று ஒரு கதை. இதில், ’பச்சம்மா’ எனும் கதாபாத்திரம். எதார்த்தமான வாழ்வியல் சூழலில், எளிமையான, ஏழ்மையான வாழ்க்கை வாழும் ஒரு கிராமத்துப் பெண்மணி. அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் வாழ்வாதாரச் சிக்கல்கள், அரசு அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்கள், இதை மீறிய பாலியல் உணர்வுகள் போன்ற அனைத்துக் காரணிகளையும் மையம் கொண்டு இச்சிறுகதைகள் நடை போடுகின்றன.
சிறிய கதை தான் இது. ஆனால், சமூகப் பிரச்சனைகள் முழுவதும் பேசப்படுகின்றன. ஒரே ஒரு வார்த்தை ஒரு பிரளயத்தின் வார்த்தையாகவும் இருக்கலாம். ஆயிரம் வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாகவும் இருக்கலாம்.
இச்சிறுகதையினுடைய காலம் குறுகியது ஆனால், அடிமை வரலாறு நீண்டகாலமுடையது. ஒவ்வொரு வார்த்தைகளும் சமூகப் பிரச்சனைகளை வெகுண்டு பேசுகின்றன. பச்சம்மா, ஆடு மேய்க்கும் குடும்பத்தைச் சார்ந்தவள். இவள் கணவன் ஆடு மேய்த்துத் திரும்பாமல் இருக்கிற பொழுது, அந்த ஊர் காரர் அவருக்கு நேர்ந்த கொடுமையைப் பச்சம்மாவிடம் கூறுகிறார்.
ஒரு கிராமத்துப் பெண்மணி எதற்கும் துணிந்தவளாக அரசு அதிகாரியின் அலுவலகம் தேடிச் செல்லுகிறாள். அங்கு அவளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. லஞ்சம் கேட்கப்படுகிறது. இவளின் அழகிய மேனி கேட்கப்படுகிறது. வெகுண்டு எழுந்த அந்தக் கிராமத்து பெண்மணி, தன் ஆடுகளுக்கு இலை பறித்துப் போடும் துரட்டியால் அந்த அரசு அதிகாரியின் கழுத்தை அறுத்து கீழே போட்டு விடுகிறார்.
அதிகாரியிடமிருந்து வழிந்த ரத்தம் காய்ந்து சறுகாய் கிடந்த இலைகளைச் சிவப்பாக மாற்றுகிறது. இதுவே கதையின் தலைப்பாகவும் மாறுகிறது. இந்த இடம் உச்சகட்டமான சிறுகதையின் மையப் புள்ளியாகயிருக்கிறது.
இந்த இடத்தில் அரசு அதிகாரியின் அநீதி தண்டிக்கப்படுவது ஒரு பெண்ணால். தன்னை இழந்து விடாமல் காப்பாற்றிக்கொள்வது, தன் கணவனுக்கு நேர்ந்த அநீதியைத் தட்டிக் கேட்பது, போன்ற பல புரட்சிகரமான வெளிப்பாடுகள் இக்கதை மூலம் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏலகிரி மலையின் அடிவாரம் நம் கண் முன் விரிகின்றது. கிராமத்திய வாழ்வியலும், கிராமத்துப் பேச்சு நடையும், பச்சம்மாவின் ஏக்கமும், ஆடுகளின் தவிப்பும், இந்தக் கதையின் வழியாகப் படிப்பவர் மனதை வாட்டி வதைக்கின்றன.
குடியினால் வேதனைப்படும் ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூகச் சூழல், வாழ்வியலைப் பெண் கடத்திச் செல்லும் பாங்கும், திருமணமாகிக் குழந்தை இல்லாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மன வேதனையும், அதற்கான தீர்வுகளும், மண்பாண்டங்களை விற்று வரும் ஒரு பெண்ணின் இயலாமை, அந்த மண்பாண்டங்கள் அனைத்தும் விபத்தில் இழந்து விட அவள் தவிக்கும் தவிப்பு, விவசாயிகளின் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சனைகள் அரசு அதிகாரங்களும் நாட்டாமை போன்ற அதிகார வர்க்கங்களும் ஏழைகளையும் சமூக அந்தஸ்தில் குறைந்தவர்களையும் படுத்தும் பாடு. அதன் உக்கிரமான மன ஓட்டங்கள் இவை அனைத்தையும் அதன் மையப் புள்ளியைப் பிடித்துப் பார்த்தும் இக்கதைகளின் ஊடாக வெளிப்படுத்தி உள்ளார் ஆசிரியர். இதற்கான கதைக் கருவை அவர் எங்கெல்லாம் தேடினார், இதற்காக அவருடைய தேடல் மிகப்பெரியதாக இருக்கின்றது,
சமூகத்தில் பணக்காரர்களின் மகிழ்ச்சிகளையும், சந்தோசங்களையும் இலக்கியங்கள் பேசுவதை விடுத்து, பாமர மக்களின் இன்னல்களை என்று இலக்கியம் பேசுகிறதோ அன்று அந்தச் சமூகம் மேல்நிலை அடையும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அதன்படி இவ்விலக்கியம் தாழை இரா. உதயநேசன் அவர்களின் இந்தச் சிறுகதை இலக்கியம் முற்றிலுமாக மனம் சார்ந்த மன ஓட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூகம் முன்னேற்றமடையும்.
சிறந்த சமூகச் சிந்தனையுள்ள சிறுகதைகள்.
– பாரதிசந்திரன்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
திருநின்றவூர்
9283275782
[email protected]
நூலின் பெயர்: செவத்த இலை.
நூல் ஆசிரியர்: தாழி இரா.உதயநேசன்
பக்கம்: 112
விலை:100
பதிப்பகம் : நூலேணி பதிப்பகம், சென்னை.