அல்-ரிஃபா
கர்நாடகாவில் உள்ள பண்டார்கர் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து கொண்டு நுழைய முடியாது என்று கூறப்பட்ட போது தான் உணர்ந்ததை பத்தொன்பது வயது மாணவி அல்-ரிஃபா விவரித்திருக்கிறார்.
கர்நாடகா குண்டபுராவில் உள்ள பண்டார்கர்ஸ் கல்லூரி மாணவிகள்
கடந்த வியாழன் அன்று (2022 பிப்ரவரி 03) குண்டபுராவில் உள்ள எங்களுடைய பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நானும் எனது நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டோம். கல்லூரிப் பணியாளர் ஒருவர் நாங்கள் அணிந்துள்ள ஹிஜாப்களை கழற்ற வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் கல்லூரிக்குள் நாங்கள் அனுமதிக்கப்படுவோம் என்று அவர் எங்களிடம் கூறினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்காமல் நாங்கள் கல்லூரிக்குள்ளே நுழைந்தோம்.
அதையடுத்து எங்கள் கல்லூரி கண்காணிப்பாளர் எங்களைத் தடுத்து நிறுத்தினார். அவரும் எங்களுடைய ஹிஜாபைக் கழற்றுமாறு உத்தரவிட்டார். ஆனாலும் எங்கள் வகுப்பறை நோக்கி நாங்கள் நடந்தோம். வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே நாங்கள் விரும்பியது. துப்பட்டாவிற்குப் பொருத்தமான ஸ்கார்ஃப் தலையில் அணிந்து வரலாம் என்று எங்களுடைய கல்லூரி நாட்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், நாங்கள் வகுப்பிற்கு வந்த போது எங்களில் ஒரு சிலரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சில மாணவர்களுக்கு முந்தைய நாள் இரவிலேயே ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்த தகவல் எங்களுக்குத் தெரிவிக்கப்படாததால், வகுப்பிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்கப்பட்டோம்.
போடப்பட்ட தடை
ஒரு மணி நேரம் கடந்தது. கல்லூரிக்குள் இப்போது மதம் சார்ந்த எந்த வகை ஆடைகளும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கல்லூரி முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்குப் பிறகு, ஹிஜாப் அணிந்திருந்த எனது தோழியும், நானும் துறைத் தலைவரைச் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். எங்கள் ஹிஜாப்களைக் கழற்றுமாறு துறைத்தலைவர் சொன்னார். அந்தச் சூழ்நிலையில் தானும் ஆதரவற்ற நிலையிலேயே இருப்பதாகவும், இந்தப் பிரச்சனையில் தங்கள் தரப்பிலிருந்து எதுவும் செய்ய முடியாது என்றும் துறைத் தலைவர் எங்களிடம் கூறினார். நாங்கள் விரும்பினால் இது குறித்து முதல்வரிடம் நாங்கள் பேசலாம் என்றார்.
அதனால் நாங்கள் கல்லூரி முதல்வரிடம் சென்றோம். கல்லூரிக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தனக்கு கடிதம் வந்துள்ளதாக கூறிய கல்லூரி முதல்வர் கல்லூரி வளாகத்திற்குள் அனைத்து மத ஆடைகளையும் தடை செய்ய தாங்கள் விரும்புவதாக எங்களிடம் கூறினார். அந்தக் கடிதத்தை எங்களிடம் காட்டுங்கள் என்று கேட்டபோது, அவர் அது அரசு உத்தரவு என்று கூறினார். ஆனாலும் அவர் அந்த உத்தரவை எங்களிடம் காட்டவே இல்லை.
அது அரசு உத்தரவு என்றால், மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளின் நிலை என்ன? ஒருசில கல்லூரிகளில் மட்டுமே மதம் சார்ந்த ஆடைகளுக்கு இதுபோன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் அவரிடம் இதைப் பற்றி வெளிப்படையாகவே கேட்டேன். பதிலுக்குத் திரும்பப் பேசுகின்ற பழக்கம் எங்களிடம் இருக்கிறது என்று கூறிய அவர் எங்களை அங்கிருந்து தொலைந்து போகுமாறு சொன்னார். அதற்குப் பின்னர் நாங்கள் அவரது அலுவலகத்திலிருந்து வெளியேறினோம்.
அதைத் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தொடர்பாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. உடனே காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய விரும்புகின்ற மாணவிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார். மீண்டும் அப்போதும் முதல்வர் தான் உயர் அதிகாரிகளின் அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் எங்களிடம் கூறினார். வீட்டிற்குச் சென்று, என்ன செய்வது என்பதைப் பற்றி பெற்றோர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள பெரியவர்களிடம் பேசுமாறு எங்களுக்குப் பரிந்துரைத்த அவர் வளாகத்தில் போராட்டம் எதையும் நாங்கள் நடத்தக் கூடாது என்றார். காவல்துறையின் பாதுகாப்புடன் பஸ் நிறுத்தத்திற்கு எங்களை அனுப்பி வைத்தனர். அங்கிருந்து நாங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம்.
மறுநாள் கல்லூரிக்கு வந்த போது கல்லூரி வாசல் மூடி வைக்கப்பட்டிருந்தது. வெளியிலிருந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனாலும் எங்களை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. மாணவர்கள் சிலரும் எங்களுடன் சேர்ந்து எங்களுக்கு ஆதரவாக நின்றனர். அரை மணி நேரம் கழித்து, இரண்டு மாணவிகள், நான்கு மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி முதல்வரிடம் பேசுவதற்காக உள்ளே சென்றனர். அந்த மாணவர்களிடம் பேசிய முதல்வர் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்த பிறகும் அந்தப் பெற்றோர்களைச் சந்திக்கவே இல்லை.
அவ்வளவு நேரமும் நாங்கள் வெளியே கல்லூரி வாசலிலேயே காத்திருந்தோம். முதல்வர் வெளியே வந்து மீண்டும் ‘தான் உதவியற்றவர், அதிகாரிகளிடம் நீங்கள் செல்லலாம்’ என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் வியாழக்கிழமையிலிருந்து ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சில மாணவர்களும் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வரத் தொடங்கியிருந்தனர். காவித்துண்டுடன் வந்த அவர்களும் கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் ஹிஜாப் அணிவதைத் தடுப்பதற்கு அவர்களிடமிருந்த தீர்வு அதுதான். ஆனால் அது சரியல்ல. பல ஆண்டுகளாக ஹிஜாப் நாங்கள் அணிந்து கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஹிஜாப் அணிந்த எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் திடீரென கல்லூரி வளாகத்திற்கு இப்போது காவித்துண்டை அணிந்து வந்திருந்தனர்.
வியாழனன்று காவல்துறையினர் வந்து, கல்லூரிக்குள் நுழைய வேண்டுமானால், காவித்துண்டுகளைக் கழற்ற வேண்டுமென்று சொன்ன போது அவர்கள் அதை உடனடியாகச் செய்தார்கள். ஆனால் ஹிஜாபைக் கழற்றுவது எங்களைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதானது அல்ல. தாங்கள் விரும்புவதை அந்த மாணவர்கள் அணிந்து கொள்வதில் எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களுடைய ஹிஜாபைக் கழற்றச் சொல்லாதீர்கள். அது இல்லாமல் எங்களை நாங்கள் முழுமையாக உணர்வதில்லை.
எனக்கு பத்தொன்பது வயது ஆகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் இதை அணிந்து வருபவளாகவே இருந்திருக்கிறேன். நான் இந்தக் கல்லூரியில் ஆறு மாதங்களாகப் படித்து வருகிறேன். ஹிஜாப் அணிவது இதுவரையிலும் இங்கே ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. நாட்டில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைப் பற்றி நான் சமூக ஊடகங்களில் வாசித்திருக்கிறேன் என்றாலும் இப்போதுதான் என் வாழ்நாளில் அதை முதன்முறையாக நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு முஸ்லீம் என்று, வித்தியாசமான உடை அணிபவள் என்று அன்று உணர வைக்கப்பட்டேன். இதற்கு முன்பாக நான் இதுபோன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்த்ததே இல்லை.
வீட்டில் இருந்து எனக்கு கிடைத்த ஆதரவு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு மத்தியிலும் அவர்கள் என்னைத் தொடர்ந்து கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் என்பதே அவர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவாகும். வெள்ளிக்கிழமையன்று எனது தந்தை என்னுடன் கல்லூரிக்கு வந்திருந்தார்.
கல்லூரிப் படிப்பு, ஹிஜாப் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கல்லூரி எங்களைக் கட்டாயப்படுத்துகிறது. சமீபத்தில் இதேபோன்ற சம்பவம் உடுப்பி புகுமுக கல்லூரியில் நடந்திருந்தாலும், அதுபோன்று எங்கள் கல்லூரியில் நடக்கும் என்பதை நான் உண்மையில் எதிர்பார்த்திருக்கவே இல்லை.
காவல்துறையுடன் மாணவர்கள் காவித்துண்டு அணிந்திருப்பது மிகவும் பயங்கரமாக இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் இஸ்லாமியப் பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றார்கள். அவர்களால் கல்லூரிக்குத் தனியாகச் செல்ல முடியாது. பாதுகாப்பிற்கு ஒருவர் இருக்க வேண்டும். ஆசிரியர்களோ கல்லூரி நிர்வாகமோ எங்களுக்கு ஆதரவாக இல்லை. அவர்கள் எங்களுடன் நின்றால், நாங்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருப்போம். ஆனால் இந்தப் பிரச்சனையில் தாங்களும் ஆதரவற்றவர்களாக இருப்பதாகவே அவர்களும் நினைக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனையால் எங்கள் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களால் சரியாகச் சாப்பிட முடிவதில்லை. நான் மிகவும் மோசமாய் உணர்கிறேன். என்னுடைய உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியாது. இந்தச் சிறுவயதிலேயே இதுபோன்ற கேவலமான சூழ்நிலையை நான் எதிர்கொள்ள வேண்டியதாகி இருக்கிறது.
இருப்பினும், இவையனைத்தும் எனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தவே செய்திருக்கிறது. நிச்சயம் நான் ஹிஜாபைக் கழற்ற மாட்டேன். ஒன்றும் ஆகவில்லை என்றால் இங்கே படிப்பதை நிறுத்தக்கூட நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் நான் இங்கிருந்து அப்படியே விட்டு விட்டுச் செல்ல மாட்டேன். நிச்சயம் நான் மல்லாடுவேன், போராடுவேன்.
உமங் போதரிடம் கர்நாடகா குண்டபுராவில் உள்ள பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டுத் துறை மாணவி அல்-ரிஃபா கூறியது.
https://scroll.in/article/1016683/i-was-made-to-realise-i-am-a-muslim-a-student-shares-her-account-of-the-udupi-college-hijab-ban நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ் தமிழில்: தா.சந்திரகுரு
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரசிகர்களால் இழிவுபடுத்தப்பட்டேன் என்று கூறிய டேனியல் மெட்வெடேவ், எதிர்காலத்தில் தனக்காகவும், தனது நண்பர்கள், குடும்பத்தினர், நாட்டிற்காக மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்தார். ‘எனக்கு ஆதரவாக இருக்கின்ற கூட்டத்தின் முன்பாக ரஷ்யாவில் விளையாடுவதற்காக பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் விளையாடுவதைக்கூட நான் கைவிடுவேன்’ என்றும் அப்போது அவர் கூறினார்.
மெட்வெடேவ்-ரஃபேல் நடால் இடையிலே நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மெட்வெடேவ் 2-0 என்று இரண்டு செட்கள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். ஆனால் நடாலுக்கு ஆதரவாக இருந்த ராட் லாவர் அரினா கூட்டத்தின் முன்பு இறுதியில் அவர் தோல்வியையே சந்தித்தார். 2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி முழுவதுமே பல சந்தர்ப்பங்களில் மெட்வெடேவ் கூட்டத்துடன் மோதியிருந்தார். விளையாட்டரங்கில் கூடியிருந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இறுதிப் போட்டி முழுவதும் மெட்வெடேவின் தவறுகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர், பல கட்டங்களில் தன்னை அவர்கள் உற்சாகமிழக்க வைத்தனர் என்று அவர் குறை கூறினார்.
உலக அளவில் இரண்டாவது தரவரிசையில் உள்ள மெட்வெடேவ் வெற்றிக் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் போது கூட்டத்தை மறைமுகமாகத் தாக்கினார். அதற்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பை டென்னிஸ் நட்சத்திரம் என்ற தன்னுடைய பயணத்தைப் பற்றிய நீண்ட கதையுடன் மெட்வெடேவ் தொடங்கினார். தனக்கு எதிராக இருந்த ஆஸ்திரேலிய ஓபன் கூட்டத்திடமிருந்து கிடைத்த அனுபவத்திற்குப் பிறகு சிறுவயதிலிருந்தே தன்னிடமிருந்து வருகின்ற டென்னிஸ் கனவின் ஒரு பகுதி மரணித்து விட்டதாக இருபத்தைந்து வயதாகும் மெட்வெடேவ் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் நடந்த உரையாடல் நெறியாளர்: இன்றிரவு நேரம் குறைவாகவே இருக்கிறது… மிகவும் தாமதமாகி விட்டது. துரதிர்ஷ்டம் டேனியல். இந்த தோல்வியைப் பகுப்பாய்வு செய்து பார்ப்பது கடினம் என்றே நினைக்கிறேன். போட்டியின் போது எல்லாவற்றையுமே நீங்கள் வித்தியாசமாகச் செய்து பார்த்தீர்களா? அதுகுறித்து உங்கள் பயிற்சியாளருடன் விவாதித்தீர்களா?
டேனியல் மெட்வெடேவ்: உண்மையில் வித்தியாசமாக கொஞ்சம் செய்து பார்த்தேன். புது வகை செய்தியாளர் சந்திப்பாக இது இருக்கும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் முக்கியமானவற்றை மட்டுமே கொண்டு இதை நான் தொடங்கப் போகிறேன். அது சுருக்கமாக இருக்குமா அல்லது மிகவும் நீண்டிருக்குமா என்று எனக்குத் தெரியாது. சுருக்கமாகச் சொல்ல முயற்சி செய்கிறேன். டென்னிஸில் பெரிய விஷயங்களைப் பற்றி கனவு கண்ட சிறு குழந்தையின் கதையை…
ஆறு வயதில் டென்னிஸ் ராக்கெட்டைக் கையில் எடுத்தேன். நேரம் வேகமாகச் சென்றது. பன்னிரண்டு வயதாக இருந்தபோது பயிற்சிகளை மேற்கொண்டேன். சில ரஷ்ய போட்டிகளில் விளையாடினேன். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை, பெரிய நட்சத்திரங்கள் விளையாடியதை, ரசிகர்கள் அந்த நட்சத்திரங்களுக்கு ஆதரவளித்ததை டிவியில் பார்த்த நான் அங்கே நானும் இருக்க வேண்டும் என்று கனவு காணத் துவங்கினேன்.
பின்னர் சில ஐரோப்பிய டென்னிஸ் போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன். யூத் ஒலிம்பிக் விளையாட்டுகளை விளையாடியது என்னுடைய நினைவில் உள்ளது. அது யூத் ஒலிம்பிக் விழா அல்லது வேறு ஏதோ பெயரில் இருந்தது என்று நினைக்கிறேன். அங்கே இறுதிப் போட்டிக்கு வந்தேன். அது அருமையாக இருந்தது. எங்களுக்கு நடு கோர்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. அது துருக்கியில் நடந்தது. அங்கே ஓராயிரம் பேர் இருந்திருக்கலாம். இரண்டாயிரம் பேர் என்றும் கூறலாம். அங்கே இருப்பது மிகவும் அருமையாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. அது தான் அடைய வேண்டும் என்று ஒருவர் கனவு காணும் தருணம்… ஆம், மிகப் பெரிய உயரத்தை அடைவது…
ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடுவதுதான் ஒவ்வொரு ஜூனியருக்கும் பெருமை. அங்கேதான் தங்களிடம் சாதகமாக உள்ளவற்றைப் பார்க்க முடியும். யுஎஸ் ஓபனில் கலந்து கொள்பவர்களுடன் உணவகத்தில் சாப்பிடலாம். அது போன்ற சிறிய விஷயங்கள் கிடைக்கும். யார் என்று உங்களைத் தெரிந்திருக்காவிட்டாலும் கூட, உங்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஆட்கள் வருவார்கள். ஜூனியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இருப்பார்கள். உண்மையில் அது அருமையான தருணம்… எவரும் விரும்பும் தருணம் அது… உலகின் மிகச் சிறந்த நபர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைத் தருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன்.
யுஎஸ் ஓபனுக்குச் சென்றிருந்த போது, ஜான் இஸ்னர் என்னைக் கடந்து செல்வதைப் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. ஓ… அவர் மிகவும் ஆஜானுபாகான ஆளாக இருந்தார்… டிவியில் பார்ப்பதைக் காட்டிலும் பெரிய ஆளாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அது உண்மையிலேயே இனிமையான தருணம்.
மிகப் பெரிய போட்டிகளில் விளையாடத் தொடங்கும் போது எதிர்காலத்தில் விளையாடப் போகிறவர்கள், உங்களுக்குச் சவாலாக இருப்பவர்கள் என்று ஏராளமானோர் உங்கள் வழியில் வர முயற்சி செய்வார்கள். எனது வாழ்க்கையில் அதுபோன்ற பெரிய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து கனவு காண வேண்டுமா, வேண்டாமா என்று இந்தக் குழந்தை சந்தேகப்பட்ட சில தருணங்களும் உள்ளன.
எனக்கு ஒன்று நன்றாக நினைவிலிருக்கிறது. ரோலண்ட் கரோஸில் இரண்டு முறை மிகவும் கடினமான போட்டிகளில் தோற்றுப் போனேன். நான் பிரெஞ்சு பேசுவேன். அந்த தோல்வி என்னுடைய வயதில் மோசமானதல்ல என்று முதல் ஐவரில் நான் இருக்கின்ற இந்த தருணத்தில் உணர்கிறேன். நம்மிடம் மிகப் பெரிய தலைமுறை உள்ளது. ஏராளமான திறமையுடன் உள்ள டாப்-10 வீரர்களை உங்களால் இப்போது காண முடியும்.
இப்போது முதல் நூறு பேரில் ஒருவராக இருக்கின்ற பெஞ்சமின் போன்சியிடம் நான் தோற்றது எனக்கு நினைவிலிருக்கிறது. என்னைத் தவறாக நினைக்கவில்லை என்றால், அந்த அறையில் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். உண்மையில் நான் அதுபோன்று எப்படி இருந்தேன்? அது ஒரு கிராண்ட்ஸ்லாம். அப்போது நான் முதல் ஐம்பது இடங்களுக்கு அருகில் இருந்தேன் என்று நினைக்கிறேன். உண்மையில் அது ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்யப் பத்திரிகையாளருடன் – நாங்கள் ஐந்து நிமிடங்கள் பேசினோம். பத்திரிகையாளர்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும்.
பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டிடம் ஏற்பட்ட கடினமான தோல்வி நன்றாக நினைவிலிருக்கிறது. நான் 2-0 என முன்னிலை பெற்றிருந்தேன். அது உண்மையிலேயே அற்புதமான போட்டி. அவர் அற்புதமாக விளையாடினார். அதுபோன்ற போட்டிகள் எனக்குப் பிடிக்கும். அதனாலேயே டென்னிஸ் எனக்குப் பிடிக்கும்.
முதல் பத்து இடங்களுக்குள் வருகின்ற இடத்தில் நான் இருந்தேன். என்னுடைய அந்த வயதில் நான் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது அநேகமாக ஸ்வெரெவ்வாக இருக்கலாம். ஒருவேளை முதல் இருவராக இருக்கலாம் – நிச்சயமாக டொமினிக். ஆனால் அவர் கொஞ்சம் வயதானவர்.
அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்தேன். நான் கொஞ்சம் – ஆமாம், ரசிகர்கள் மற்றும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விரக்தியடைந்திருந்தேன். அந்தச் சந்திப்பைச் சுருக்கமாக வைத்துக் கொள்ள விரும்பியதால் அது வேடிக்கையாக இருந்தது. இரண்டு வார்த்தைகளில் அல்லது அதுபோன்று ஏதாவது பதில் சொல்லவே விரும்பினேன். பத்திரிகையாளர் ஒருவர் அங்கே இருந்தார். அவர் இத்தாலியன் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் ஏதோ கேட்டார். இரண்டு வார்த்தைகளில் நான் அவருக்குப் பதிலளித்தேன். அதற்குப் பிறகு கேள்விகள் எதுவும் எழவில்லை. சில ரஷ்யர்கள் அங்கே இருந்தார்கள். அவர்கள் என்னிடம் சில விஷயங்களை கேட்டார்கள். பெரும் கனவுகளைத் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கொண்டதாகவே அப்போது அந்தக் குழந்தை இருந்தது.
அது ஏன் என்பதை நான் விளக்கப் போவதில்லை. ஆனால் இன்று போட்டியின் போது நான் டென்னிஸ் விளையாடப் போகிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன். அது வேடிக்கையாக இருந்தது. பத்திரிகையாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். உங்களுடன் பேசுவதை நான் மிகவும் விரும்புகிறேன். நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது அது முக்கியமானதல்ல. அந்தக் குழந்தை கனவு காண்பதை நிறுத்திய சில தருணங்களைப் பற்றியே நான் இப்போது பேசுகிறேன். இன்றும் அதுபோன்றதொரு தருணமாகி இருக்கிறது. அது ஏன் என்று நான் இங்கே சொல்லப் போவதில்லை.
இனிமேல் எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், என் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்காகவும் – நிச்சயமாக அனைத்து ரஷ்யர்களுக்காகவும் நான் விளையாடப் போகிறேன். என்னை அவர்கள் நிறைய ஆதரிப்பதாக நான் உணர்கின்றேன்.
அதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ரோலண்ட் கரோஸ் அல்லது விம்பிள்டனுக்கு முன்பாக – விம்பிள்டன் அல்லது ரோலண்ட் கரோஸ் அல்லது வேறு எங்கு செல்வதைத் தவறவிட்டாலும் மாஸ்கோவில் ஹார்ட் கோர்ட்டுகளில் போட்டிகள் நடந்தால் நிச்சயம் நான் அங்கே சென்று விளையாடுவேன். கனவு காண்பதை அந்தக் குழந்தை இப்போது நிறுத்திக் கொண்டது. இனிமேல் அது தனக்காக விளையாடப் போகிறது. அவ்வளவுதான். இதுதான் என்னுடைய கதை. கேட்டதற்கு மிகவும் நன்றி நண்பர்களே.
இப்போது நாம் டென்னிஸ் அல்லது வேறு எதையும் குறித்த கேள்விகளுக்குச் செல்லலாம்.
அறையில் கேள்விகள் ஏதேனும் எழுந்தனவா?
அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை (சிரிக்கிறார்).
டேனியல், உங்களுடைய சாதனைக்கு வாழ்த்துகள்.
மிக்க நன்றி கிரேக்.
இப்போது உங்கள் உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றன? வெளிப்படையாக நீங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளீர்கள். ஓரிரு நாட்களுக்குப் பிறகும் இப்போது நடந்திருப்பதையே நீங்கள் தொடரப் போகிறீர்களா?
டென்னிஸ் பற்றி பேசினால் அந்த அளவிற்கு நான் ஏமாற்றமடையவில்லை. இது மிகப் பெரிய போட்டி. வெற்றி பெற வேண்டுமென்றால் நிச்சயமாக சில சிறிய பாயிண்டுகளில், சிறிய விவரங்களில் நான் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் டென்னிஸ். அதுதான் வாழ்க்கை.
இது மிகப் பெரிய போட்டியாக இருந்தது. ரஃபா நம்ப முடியாத வகையிலே விளையாடினார். அவர் தனது நிலையை உயர்த்திக் கொண்டார். இரண்டு செட்களில் 2-0 என்று முன்னணியில் இருந்த போது ‘கமான் அவருடன் போராடு, இன்னும் அதிகமாகப் போராடு’ என்ற உணர்வுடனே நான் இருந்தேன்.
ஐந்தாவது செட்டில் அவரைக் கடுமையாக முயற்சி செய்ய வைத்ததாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் நம்ப முடியாத வகையில் விளையாடினார். மிகவும் வலுவுடன் இருந்தார். நான்கு மணி நேரம் அவர் விளையாடிய விதம் குறித்து அப்போது உண்மையில் நான் ஆச்சரியப்பட்டேன். ஆனாலும் ரஃபா எப்படி விளையாடுவார் என்பது நமக்குத் தெரியும். ஆறு மாதங்களாக அவர் விளையாடவே இல்லை. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம், தான் அதிகம் பயிற்சி செய்யவில்லை என்று சொன்னார். அது நம்ப முடியாதவாறே இருந்தது.
டென்னிஸ் பற்றி பேசுகின்ற போது, என்னிடம் அதிகம் வருத்தமில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகத் தொடர முயற்சி செய்வேன். ஆமாம், இன்னும் கடினமாக நான் உழைக்கப் போகிறேன். ஒரு நாள் இந்த சிறந்த போட்டிகள் சிலவற்றில் சாம்பியனாக இருக்க முயற்சிப்பேன்.
உண்மையில் இன்று இந்த தோல்வி, என்னுடைய டென்னிஸ் அல்லது அது போன்ற எது குறித்தும் நான் ஏமாற்றமடைந்தவனாக இல்லை.
இதுதான் அந்தக் கூட்டத்திடமிருந்து உங்களுக்கு கிடைத்ததா?
அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை, மன்னிக்கவும் (சிரிக்கிறார்).
நீங்கள் கோர்ட்டிற்கு வருகிறீர்கள் – மக்கள் கூச்சலிடுவதைக் கேட்கிறீர்கள்.
நான் மிகச் சிறிய எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். ஐந்தாவது செட்டில் கூட ரஃபா சர்வீஸ் செய்வதற்கு முன்பாக யாரோ ஒருவர் கமான் டேனியல் என்று கத்தியதைக் கேட்ட நான் ஆச்சரியப்பட்டேன். ஆயிரம் பேர் ட்ஸ்ஸ்ஸ், ட்ஸ்ஸ்ஸ், ட்ஸ்ஸ்ஸ் என்று ஒலியெழுப்பினார்கள். எனது செர்விற்கு முன்பாக அதுபோன்ற சப்தத்தை அவர்கள் எழுப்பினார்கள். நான் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உண்மையில் அது ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. அது அவமரியாதை செய்வதாக, ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் விளையாட விரும்புவேனா என்று எனக்குத் தெரியவில்லை.
(மைக்ரோஃபோன் வேலை செய்யவில்லை)
ஆம்… அது என்னைச் சுற்றியுள்ளவர்கள், அவர்கள் என்னிடம் என்ன சொல்லப் போகிறார்கள், இந்த பயணத்தில் எப்படி ஒன்றாகச் செல்லப் போகிறோம் என்பதைப் பொறுத்தது.
கனவு கண்ட அந்தக் குழந்தை இன்றைக்குப் பிறகு எனக்குள் இல்லை என்பதை மீண்டும் சொல்கிறேன். இவ்வாறாக இருக்கின்ற போது டென்னிஸைத் தொடர்வது மிகவும் கடினமாகவே இருக்கும்.
மூன்றாவது செட்டில் டிரிபிள் பிரேக் பாயிண்ட்டைப் பெற்றிருந்த போதும், ஒப்பீட்டளவில் இந்தப் போட்டியில் மிகவும் எளிதாக வெற்றியை நீங்கள் நெருங்கி விட்டதாகத் தோன்றிய போது உங்கள் ஆட்டத்தில் அல்லது உங்கள் எண்ணத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டது?
ஆம், டிரிபிள் பிரேக் பாயிண்ட் பெற்றது அருமையான தருணமாகவே இருந்தது. உண்மையில் அவையனைத்தும் எனக்கு விவரமாக நினைவில் இல்லை. நான் செய்த அந்த மூன்று ரிட்டர்ன்களும் எனக்கு நினைவிலிருக்கின்றன. அவை கொஞ்சம் நெருக்கமாகவே இருந்தன. ஆனால் மீண்டும் சொல்வேன் – அதுதான் டென்னிஸ்… நான் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படியென்றால் ஒருவேளை போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கலாம்.
உத்தியாக எதையும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் சரியாக விளையாடுவதாகவே உணர்ந்தேன். ஆனால் ரஃபா முன்னேறினார். உடல்ரீதியாக கொஞ்சம் மேலும், கீழுமாக இருந்தேன் என்றாலும் இன்று அவர் உடல்ரீதியாக என்னை விட வலிமையுடன் இருந்தார். மூன்றாவது செட் ஆரம்பத்திலிருந்தே அவரது சில ஷாட்கள் மற்றும் பாயிண்டுகள் நான் கொஞ்சம் பின்வாங்கிக் கொள்ளும் வகையிலேயே இருந்தன அதை. அப்படித்தான் சொல்ல வேண்டும். ரஃபா அந்த தருணங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
ஆனாலும்… ஆம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
உங்களின் இந்த போட்டிக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.
இன்றிரவு நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? நீங்கள் சொன்ன கதை இன்றிரவுக்கு முன்பாகவே நீங்கள் உணர்ந்திருந்ததா அல்லது இன்றிரவைப் பற்றியதாக மட்டுமே அது உள்ளதா?
நான் சொன்னதைப் போல, என் கேரியரில் சில தருணங்களுக்கேற்றவாறு என்னை மாற்றியமைக்க முடிந்திருக்கிறது. என்னுடைய கதையில் அந்தக் குழந்தையைப் பற்றி சொல்ல மறந்து விட்டேன்.
டாப் 20, டாப் 30 என்று கொஞ்சம் கொஞ்சமாக நான் உயர ஆரம்பித்த போதுரோஜர், நோவக், ரஃபா ஆகியோருக்கு எதிராக விளையாட ஆரம்பித்தேன். எங்களுக்கிடையே சில கடினமான போட்டிகள் நடந்தன. நான் இன்னும் அவர்களை வெல்லவில்லை. அப்போதும் ஏராளமான பேச்சுகள் இருந்தன. இப்போது இருப்பதைப் போல அவ்வளவாக அப்போது இருந்ததாக நான் நினைக்கவில்லை என்றாலும் நிறைய பேச்சுகள் இருக்கவே செய்தன. ஆனால் இளைய தலைமுறை சிறப்பாகச் செய்ய வேண்டும், இளைஞர்கள் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், சிறப்பாக இருக்க வேண்டும், வலிமையுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதைப் போன்றதாகவே அந்தப் பேச்சுகள் இருந்தது நினைவில் உள்ளது. அது எனக்கு உந்துதலை அளித்த மாதிரி உணர்ந்தேன். ஆமாம், அவர்களுக்கு கடினமான நேரத்தைக் கொடுக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் என்னிடமிருந்தது.
ஆனால் மக்கள் பொய் சொல்கிறார்கள் என்றே நினைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் பெரிய போட்டிகளில் ஒவ்வொரு முறை நான் கோர்ட்டில் அடியெடுத்து வைக்கும் போது, நான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றவர்களை அதிகமாக என்னால் பார்க்க முடியவில்லை.
இது இன்றிரவால் மட்டும் நடந்ததல்ல; படிப்படியாக உருவானது என்று சொல்லலாமா?
ஆம். இது படிப்படியாக வந்ததுதான். ஆனால் இன்றிரவு (தெளிவாக இல்லை), அல்லது அதை எப்படிச் சொல்வது… மலையின் உச்சியை அடைந்ததைப் போன்றுள்ளது.
இது உங்களுடைய தேசம் குறித்ததா அல்லது நீங்கள் இளையவர், அவ்வளவாக நன்கு அறியப்படாதவர் என்பதாலா?
நான் எந்த தேசம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது என்றே நினைக்கிறேன். ரஷ்ய டென்னிஸ் சிறிது காலம் வீழ்ந்திருந்தது. நான் ஏராளமாக முயற்சி செய்து வருவதாகவே நினைக்கிறேன். ரஷ்யாவில் இப்போது டென்னிஸ் பற்றி நிறைய பேச்சுகள் இருப்பதை உணர்கிறேன். என்னுடன் ஆண்ட்ரி, கரேன், அஸ்லான் போன்றவர்களும் நன்றாக விளையாடி வருகிறார்கள். அருமை. எங்களுக்காக இன்னும் பலரை விளையாட வைக்க முயற்சி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
மற்ற நாட்டில் யாருடனாவது விளையாடும் போது, அவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். ரஷ்யன் அல்லது அதுபோன்ற ஏதாவது ஒன்றிற்காக அல்ல என்றே என்னால் நிச்சயமாகப் பார்க்க முடிகிறது.
அன்று நோவக் என்ன செய்வார் என்று நீங்களே கேட்டுக் கொண்டீர்கள். இன்று இரண்டு செட் பின்னால் இருந்த ரஃபா திரும்பி வந்ததைப் பார்க்கும் போது, அந்த நிமிடத்திலிருந்து அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்புவீர்களா?
ரஃபா இடதுகை ஆட்டக்காரர். அடுத்த முறை நான் 2-0 என்று இரண்டு செட் பின் தங்கியிருக்கும் போது ‘உனக்கு எதிராக ரஃபா விளையாடியதைப் போல் விளையாடு’ என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.
இன்று அவர் விளையாடிய விதம், அதை நான் அவர் போராடினார் என்று சொல்ல விரும்பவில்லை. ரஃபா எப்போதும் போராடுவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். திடீரென்று ரஃபா இன்று ஒரு ஸ்லாமின் இறுதிப் போட்டியில் போராடினார் என்று அதைச் சொன்னால் யாரும் ஆச்சரியப்படப் போவதில்லை.
அனைத்து செட்களிலும், கடினமான தருணங்களில் கூட அவர் விளையாடிய விதம் அவரைப் பொறுத்தவரை வரலாற்றை உருவாக்குவதற்கான முயற்சியாகவே இருந்தது. அதைப் பற்றி சிந்திக்காமலே இருக்க அவர் முயற்சி செய்திருக்கிறார் என்றாலும் அது அவரது தலையில் எங்கோ இருந்து கொண்டே இருந்திருக்க வேண்டும்.
நான் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவனாக இருக்கின்றேன். ஆமாம், முடிந்தவரை முயற்சி செய்து விளையாடிய போது என்னை அவர் வென்றதில் அவர் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டிருக்கிறேன். நான் உண்மையில் மிகவும் நன்றாகவே முயற்சி செய்தேன்.
மோகன்தாஸ் காந்தி (1869-1948) அகிம்சையின் இருபதாம் நூற்றாண்டிற்கான வலுவான அடையாளமாக மாறியிருக்கிறார். பின்னோக்கிப் பார்த்து இப்போது பலராலும் அந்த இந்திய தேசியத் தலைவர் நிச்சயம் அமைதிக்கான நோபல் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. நோபல் விருதிற்காகப் பலமுறை காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த விருது அவருக்கு ஒருபோதும் வழங்கப்படவேயில்லை. நோபல் விருது காந்திக்கு ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வியுடன் – நார்வே நோபல் விருதுக் குழுவின் பார்வை குறுகிய கண்ணோட்டத்துடன் அமைந்திருந்ததா, விருதுக் குழு உறுப்பினர்கள் ஐரோப்பியர்கள் அல்லாதவர்களிடையே நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தைப் பாராட்ட முடியாதவர்களாக இருந்தார்களா, காந்திக்கு விருதை வழங்குவதால் பிரிட்டனுக்கும், தங்களுடைய நாட்டிற்கும் இடையே இருக்கின்ற உறவுக்குத் தீங்கு விளையும் என்று அவர்கள் பயந்தார்களா என்பது போன்ற கேள்விகளும் அடிக்கடி எழுப்பட்டு வருகின்றன.
1937, 1938, 1939, 1947ஆம் ஆண்டுகளிலும், இறுதியாக 1948 ஜனவரியில் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவும் காந்தியின் பெயர் நோபல் விருதிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தலாய்லாமாவுக்கு 1989ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்ட போது, காந்தி ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டது குறித்து நோபல் விருதுக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய வருத்தத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர். அப்போதைய விருதுக்குழுவின் தலைவர் ‘ஒருவகையில் தலாய்லாமாவிற்கான இந்த விருது மகாத்மா காந்தியின் நினைவாகவே வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுக் கூறியிருந்தார். ஆயினும் காந்திக்கு ஏன் அந்த விருது வழங்கப்படவில்லை என்பது குறித்து இருந்து வருகின்ற ஊகங்களைப் பற்றி தங்களுடைய கருத்துகளை ஒருபோதும் நோபல் குழுவினர் தெரிவித்ததே இல்லை. காந்திக்கு விருது வழங்கப்படாமை குறித்த அந்த சர்ச்சையின் மீது சிறிதளவிலாவது வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய ஆதாரங்கள் எதுவும் சமீபகாலம் வரையிலும் கிடைக்கவில்லை.
மகாத்மா காந்தி – யார் அவர்? மிகச் சிறந்த ஆத்மா என்பதாக மகாத்மா என்றழைக்கப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இன்றைய மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் இருந்த சிறிய ஆட்சிப்பகுதி ஒன்றின் தலைநகராக இருந்த போர்பந்தரில் பிறந்தவர். அவரது தந்தை அங்கே முதலமைச்சராக இருந்தார். அவரது தாயார் ஆழ்ந்த ஹிந்து மதப்பற்றாளர். அவரும், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அகிம்சை, மதக் குழுக்களிடையே சகிப்புத்தன்மை ஆகியவற்றை மிக முக்கியமானதாகக் கருதுகின்ற ஹிந்து மதப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இந்தியச் சமூகத்தில் மோகன்தாஸ் காந்திக்கு கிடைத்த இடத்தை அவரால் எவ்வாறு அடைய முடிந்தது என்பதற்கான மிகமுக்கியமான விளக்கமாக அவரது குடும்பப் பின்னணியே இருக்கிறது. மோகன்தாஸ் 1880களின் பிற்பகுதியில் லண்டனுக்குச் சென்று அங்கே சட்டம் பயின்றார். படிப்பை முடித்த பின்னர் இந்தியாவிற்குத் திரும்பிய அவர் அங்கே வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் 1893இல் தென்னாப்பிரிக்காவில் உள்ள நடாலுக்குச் சென்று அங்கே இருந்த இந்திய வர்த்தக நிறுவனத்தில் அவர் பணியில் சேர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்திய சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துகின்ற வகையிலே காந்தி அங்கே பணியாற்றி வந்தார். இனவெறிச் சட்டத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் அவர் மேற்கொண்ட அந்தப் பணியே தன்னிடம் வலுவான மத உறுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளவும், சுய தியாகத்திற்கான உறுதியை ஏற்படுத்திக் கொள்ளவும் அவருக்கு வழிவகுத்துக் கொடுத்தது. அடிப்படை மனித உரிமைகளுக்காக அங்கே நடைபெற்ற போராட்டத்தில் அகிம்சை முறையை பெரும் வெற்றியுடன் காந்தி அறிமுகப்படுத்தினார்.
அவர் கடைப்பிடித்த சத்தியாக்கிரகம் என்ற ‘உண்மையான ஆற்றல்’ என்ற வழிமுறை கருத்தியல் நுட்பம் வாய்ந்ததாக இருந்தது. சட்டத்தின் ஆட்சியை நிராகரிக்காமல், நியாயமற்ற அல்லது அடக்கி வைக்கக்கூடிய சட்டங்களை இந்தியர்கள் மீற வேண்டும் என்பதைக் கொள்கையாக ஏற்றுக் கொள்வதோடு, அனைவரும் சட்டத்தை மீறியதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அமைதியாக, இன்னும் உறுதியுடன், கேள்விக்குரிய அந்த சட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மையை நிராகரிக்க வேண்டும் என்பதாக அந்தக் கருத்தியல் இருந்தது. அவ்வாறான நடவடிக்கை அவரது எதிரிகளை – முதலில் தென்னாப்பிரிக்க அதிகாரிகள், பின்னர் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்கள் – தங்களுடைய சட்டங்களில் இருந்த சட்டவிரோதத்தை உணர வைத்தது.
காந்தி மீண்டும் 1915ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து சேர்ந்த போது, தென்னாப்பிரிக்காவில் அவர் செய்திருந்த சாதனைகள் குறித்த செய்திகள் அவரது சொந்த நாட்டில் ஏற்கனவே பரவியிருந்தன. சில ஆண்டுகளிலேயே – முதலாம் உலகப் போரின் போது – அவர் இந்திய தேசிய காங்கிரசில் முன்னணி நபரானார். போரின் இடைக்காலப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான அகிம்சைப் பிரச்சாரங்களை அவர் தொடங்கினார்.
அந்த நேரத்தில் இந்திய ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஒன்றிணைப்பதற்கான வலுவான முயற்சிகளை மேற்கொண்ட காந்தி ஹிந்து சமுதாயத்தில் இருந்த ‘தீண்டத்தகாதவர்களின்’ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடினார். அவரது சக இந்திய தேசியவாதிகள் பலரும் திட்டமிட்ட சில காரணங்களுக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக அகிம்சை முறைகளைப் பயன்படுத்த விரும்பினாலும், காந்தியிடமிருந்த அகிம்சையானது கொள்கை ரீதியானதாகவே இருந்தது. இந்திய தேசியவாதம் அல்லது மதம் குறித்த அணுகுமுறைக்கு அப்பாலும் மக்கள் அவர் மீது மதிப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு அகிம்சை மீது அவர் கொண்டிருந்த உறுதியே காரணமாயிற்று. சிறைத்தண்டனையை அவருக்கு விதித்த பிரிட்டிஷ் நீதிபதிகள் கூட காந்தி ஒரு விதிவிலக்கான ஆளுமை என்பதாகவே அங்கீகரித்திருந்தனர்.
அமைதிக்கான நோபல் விருதிற்கான முதல் பரிந்துரை 1930களின் முற்பகுதியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவப்பட்டிருந்த, காந்திக்கு ஆதரவாக இருந்த ‘இந்திய நண்பர்கள்’ சங்கங்களின் வலையமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் காந்தியை அதிகம் பாராட்டியவர்களில் முக்கியமானவர்களாக இருந்தனர். அந்த இந்திய நண்பர்கள் வெவ்வேறு சிந்தனைகளின் பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்களில் மதம் சார்ந்திருந்தவர்கள் காந்தியிடம் இருந்த பக்தியைப் பாராட்டினர். ராணுவ எதிர்ப்பாளர்கள், அரசியல் தீவிர உணர்வாளர்கள் அவரது அகிம்சை தத்துவத்தின் மீது அனுதாபம் கொண்டு அவரை ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளராக ஆதரித்தனர்.
1937ஆம் ஆண்டில் நார்வே ஸ்டோர்டிங் (பாராளுமன்றம்) உறுப்பினரான ஓலே கோல்ப்ஜார்ன்சன் (தொழிலாளர் கட்சி) அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதிற்காக காந்தியின் பெயரைப் பரிந்துரைத்தார். நார்வே நோபல் குழு தயாரித்த சுருக்கப்பட்டியலில் இருந்த பதின்மூன்று பேரில் ஒருவராக காந்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றிருந்தார். ஆனால் காந்தியின் நியமனத்திற்கு செயலூக்கம் தருகின்ற வகையில் கோல்ப்ஜார்ன்சன் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கவில்லை. ‘இந்திய நண்பர்கள்’ அமைப்பின் நார்வே கிளையில் இருந்த முன்னணி பெண்களால் எழுதப்பட்ட கடிதத்திலிருந்த சொற்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்ற வகையிலே நேர்மறையாகவே இருந்தன.
குழுவின் ஆலோசகராக இருந்த பேராசிரியர் ஜேக்கப் வோர்ம்-முல்லர் அப்போது காந்தி குறித்து விமர்சனப்பூர்வமான அறிக்கை ஒன்றை எழுதினார். ஒருபுறம் ‘சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு மிகச் சிறந்த உன்னதமான துறவி – இந்திய மக்களால் தகுதியுடையவராக, மரியாதைக்குரியவராக நேசிக்கப்படுகின்ற முக்கியமான மனிதர்’ என்று ஒரு மனிதராக காந்தியைப் பற்றிய பொதுவான அபிமானத்தை அவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தார். ஆனால் மறுபுறத்தில் அரசியல் தலைவராக காந்தியைப் பற்றிய அந்த நார்வே பேராசிரியரின் விளக்கம் சற்று மட்டுப்படுத்துகின்ற வகையிலேயே இருந்தது. ‘அவரைப் பின்பற்றுபவர்களால் திருப்திகரமாக அவற்றை விளக்க முடியாத அளவிற்கு கூர்மையான திருப்பங்கள் அவருடைய கொள்கைகளில் உள்ளன(…) சுதந்திரப் போராளி, சர்வாதிகாரி, லட்சியவாதி, தேசியவாதியாக அவர் இருக்கின்றார். பொதுவாக புனிதராக இருக்கின்ற அவர் யாரும் எதிர்பாராத வகையிலே மிகச் சாதாரண அரசியல்வாதியாகவும் இருக்கின்றார்’ என்று அவர் எழுதியிருந்தார்.
சர்வதேச அமைதிக்கான இயக்கத்தில் இருந்த பலரும் காந்தி மீது விமர்சனம் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்களைப் பின்பற்றி ‘காந்தி ஒரு சமாதானவாதி அல்ல, பிரிட்டிஷார் மீதான தனது வன்முறையற்ற பிரச்சாரங்கள் வன்முறையாக, பயங்கரவாதமாக மாறி விடும் என்பதை காந்தி அறிந்திருக்க வேண்டும்’ என்று நோபல் குழுவின் ஆலோசகராக இருந்தவரும் குறிப்பிட்டிருந்தார். 1920-1921இல் முதலாவது ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்தின் போது அதுதான் உண்மையில் நடந்தது. ஐக்கிய மாகாணத்தில் இருந்த சௌரி சவுராவில் கூடியிருந்த கும்பல் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கியது. காவல்துறையினர் பலரைக் கொன்ற பின்னர் அந்தக் கும்பல் காவல் நிலையத்தையும் தீ வைத்துக் கொளுத்தியது.
அவர் ஓர் இந்திய தேசியவாதி என்பதே இந்தியர்கள் அல்லாதவர்களிடமிருந்து அடிக்கடி வருகின்ற காந்தி குறித்த விமர்சனமாகும். பேராசிரியர் வோர்ம்-முல்லர் தன்னுடைய அறிக்கையில் ‘தென்னாப்பிரிக்காவில் நன்கு அறியப்பட்டிருந்த அவருடைய போராட்டம் இந்தியர்கள் சார்பானதாக மட்டுமே இருந்தது; அது இந்தியர்களைக் காட்டிலும் மோசமான நிலைமையில் இருந்த கறுப்பர்கள் சார்ந்ததாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றே கூற முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் காந்தியின் கொள்கைகள் உலகளாவியவையா அல்லது இந்தியத் தன்மை கொண்டவையா என்பது குறித்த சந்தேகங்களையும் அவர் எழுப்பியிருந்தார்.
செல்வுட் பிரபு சிசில்
செல்வுட் பிரபு சிசில் 1937ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது பெற்றிருந்தார். அந்த ஆண்டு காந்திக்கு அமைதி விருது வழங்குவதை நார்வே நோபல் குழு தீவிரமாகப் பரிசீலித்ததா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அது சாத்தியமற்றதாகவே இருந்தது. அமைதிக்கான விருதிற்காக 1938, 1939ஆம் ஆண்டுகளில் மீண்டும் காந்தியின் பெயரை ஓலே கோல்ப்ஜார்ன்சன் பரிந்துரைத்தார். ஆனால் குழுவின் சுருக்கப்பட்டியலில் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. மீண்டும் அந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கு மேலும் பத்து ஆண்டுகள் கடந்து செல்ல வேண்டியதாயிற்று.
1947: வெற்றியும் தோல்வியும் 1947ஆம் ஆண்டில் காந்திக்கு விருது வழங்குவது குறித்த பரிந்துரைகள் இந்தியாவிலிருந்து நார்வே வெளியுறவு அலுவலகத்தின் வழியாக தந்தி மூலமாக வந்து சேர்ந்தன. பம்பாய் பிரதமராக இருந்த பி.ஜி.கெர், ஐக்கிய மாகாணங்களின் பிரதமராக இருந்த கோவிந்த் வல்லப் பந்த், இந்திய சட்டமன்றத்தின் தலைவராக இருந்த மாவ்லங்கர் ஆகியோர் காந்தியின் பெயரைப் பரிந்துரை செய்திருந்தனர்.
‘இந்த ஆண்டுக்கான நோபல் விருதிற்கு மகாத்மா காந்தியின் பெயரைப் பரிந்துரை செய்கிறேன். மகாத்மா காந்தி இந்திய தேசத்தைக் கட்டியெழுப்பியவர். தார்மீக ஒழுங்கு நிறைந்த மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். இன்றளவில் உலகின் அமைதிக்கான மிகச் சிறந்த வெற்றிவீரராக இருப்பவர்’ என்று தந்தி பாணியில் கோவிந்த் வல்லப் பந்த் எழுதியிருந்ததைப் போலவே அவரது பெயரை முன்வைத்து ஆதரித்தவர்களின் கருத்துகள் இருந்தன. ஆறு பெயர்களுடன் இருந்த நோபல் குழுவின் சுருக்கப்பட்டியலில் மோகன்தாஸ் காந்தியும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.
இந்திய அரசியல் வரலாற்றில் 1937க்குப் பின்னர் காந்தியின் பங்கை முக்கியத்துவப்படுத்தி நோபல் குழுவின் ஆலோசகரும், வரலாற்றாசிரியருமான ஜென்ஸ் அருப் சீப் புதிய அறிக்கையொன்றை எழுதினார். ‘காந்தி மற்றும் அவரது இயக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியையும், மிக மோசமான தோல்வியையும் ஒரே நேரத்தில் பெற்றுத் தந்த இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியப் பிரிவினையை நோக்கியதாகவே 1937 முதல் 1947 வரையிலான பத்து ஆண்டுகள் இருந்தன’ என்று சீப் எழுதினார். சுதந்திரத்திற்கு முந்தைய கடைசி பத்தாண்டுகளில் இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையிலான போராட்டம்; இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்கேற்பு, இறுதியாக ஹிந்து, முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான மோதல் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கையாள வேண்டியிருந்த மூன்று வெவ்வேறான ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மோதல்களின் போது காந்தி எவ்வாறு செயல்பட்டார் என்பதை அந்த அறிக்கை விவரித்தது. அந்த அனைத்து விஷயங்களிலும் காந்தி தனது அகிம்சைக் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றி வந்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வோர்ம்-முல்லர் எழுதிய அறிக்கையைப் போன்று காந்தியைப் பற்றி சீப் எழுதிய அறிக்கை விமர்சிக்கவில்லை. அது மிகவும் சாதகமாகவே இருந்தது என்றாலும் வெளிப்படையாக ஆதரவும் அளிக்கவில்லை. இந்தியா, புதிய முஸ்லீம் நாடான பாகிஸ்தானைப் பிரித்ததைப் பற்றியும் சீப் ‘1947 ஆகஸ்ட் 15 அன்று டைம்ஸ் பத்திரிகையில் வெளியானவாறு இந்தியப் பிரிவினை என்ற பிரம்மாண்டமான அறுவைச்சிகிச்சை மிகப் பெரிய அளவிலே ரத்தக்களரிக்கு வழிவகுக்கவில்லை என்பதற்கு காந்தியின் போதனைகள், அவரைப் பின்பற்றியவர்களின் முயற்சிகள், அவரது இருப்பு போன்றவற்றிற்கு கணிசமான பங்கு உண்டு என்றே பொதுவாக கருதப்படுகிறது’ என்று சுருக்கமாக எழுதி முடித்திருந்தது இன்றைய நிலையில் பார்க்கும் போது முதிர்ச்சியற்றதாகவே தோன்றுகிறது.
அவரது அறிக்கையைப் படித்த பின்னர் நார்வே நோபல் குழுவின் உறுப்பினர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம் குறித்து புதிய தகவல்களைப் பெற்றதாக உணர்ந்திருக்க வேண்டும். இருப்பினும் அமைதிக்கான நோபல் விருது அதுபோன்ற போராட்டங்களுக்காக ஒருபோதும் வழங்கப்பட்டதே இல்லை. அகிம்சையின் அடையாளமாக காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் 1947ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் அமைதியற்று இருந்த நிலையில், மிக முக்கியமான இந்தியத் தலைவருக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டால் அதன் மூலம் என்னவிதமான அரசியல் விளைவுகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்பது போன்ற விஷயங்களையும் குழு உறுப்பினர்கள் பரிசீலிக்க வேண்டியிருந்தது.
நோபல் குழு உறுப்பினர்கள் 1947 அக்டோபர் 30 அன்று தங்கள் முடிவை எடுத்த போது, குழுவிலிருந்த இரண்டு செயற்குழு உறுப்பினர்களான கிறிஸ்தவ பழமைவாதியான ஹெர்மன் ஸ்மிட் இங்க்பிரெட்சன், தாராளவாத கிறிஸ்தவரான ஆஃப்டெடல் ஆகியோர் காந்திக்கு ஆதரவாகப் பேசினர் என்பதை குழுவின் தலைவராக இருந்த குன்னர் ஜானின் நாட்குறிப்பில் இருந்து இப்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கு ஓராண்டிற்கு முன்னதாக அவர்கள் இருவரும் ஒய்.எம்.சி.ஏ தலைவராக இருந்த ஜான் மோட்டை தீவிரமாக ஆதரித்தனர். பொதுவாக அவர்கள் சமூக மற்றும் கருத்தியல் மோதல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ள உலகில் தார்மீகம், மத அடையாளங்களுடன் பணியாற்றக் கூடியவர்களை விரும்பியதாகவே தெரிகிறது. இருப்பினும் அவர்களால் 1947ஆம் ஆண்டு மற்ற மூன்று உறுப்பினர்களைச் சமாதானப்படுத்த முடியவில்லை. தொழிலாளர் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி மார்ட்டின் டிரான்மல் இந்திய-பாகிஸ்தான் மோதல்களுக்கு மத்தியில் காந்திக்கு விருது வழங்கப்படுவது குறித்து மிகுந்த தயக்கம் காட்டினார். டிரான்மலுடன் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிர்கர் பிராட்லாண்ட் உடன்பட்டிருந்தார். போரில் ஈடுபாடு கொள்வதற்கு மிகவும் ஆதரவானவராக காந்தி இருந்தார் என்றே அவர்கள் கருதினார்கள்.
ஒரு மாதத்திற்கு முன்பாக நடைபெற்றதொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி வெளியிட்டிருந்த அறிக்கை அவர் போரை தொடர்ந்து நிராகரிப்பதை கைவிட்டு விட்டதைக் குறிப்பதாக இருந்ததாக டிரான்மல், ஜான் இருவரும் உணர்ந்தனர். ‘பாகிஸ்தானுடனான ‘போரில்’ திரு.காந்தி’ என்ற தலைப்பில் 1947 செப்டம்பர் 27 அன்று வெளியான ராய்ட்டர்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் தந்தியில் ‘இன்றிரவு காந்தி தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: தான் எப்போதுமே எல்லா யுத்தங்களையும் எதிர்த்து வந்திருந்தாலும், பாகிஸ்தானிடமிருந்து நீதியைப் பெறுவதற்கு வேறு வழியில்லை என்றால், பாகிஸ்தான் தொடர்ந்து தனது நிரூபிக்கப்பட்ட பிழைகளைக் கண்டு கொண்டு, அவற்றை அகற்றிக் கொள்ள மறுப்பதைத் தொடருமானால், இந்திய ஒன்றிய அரசு அதற்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டும். போரை யாரும் விரும்பவில்லை என்றாலும் நீதியைத் தாங்கிக் கொள்ளுமாறு ஒருபோதும் யாரையும் அறிவுறுத்த முடியாது. நியாயமான காரணத்திற்காக அனைத்து ஹிந்துக்களும் நிர்மூலமாக்கப்பட்டால் தான் கவலைப்படப் போவதில்லை. போர் என்று வந்தால், பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் பாராமுகமாக ஐந்தாவது தூணாக இருக்க முடியாது. பாகிஸ்தானுடன் விசுவாசமாக இருக்க முடியாவிட்டால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அதேபோன்று பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கின்ற முஸ்லீம்கள் இந்திய ஒன்றியத்தில் இருக்கக்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக ‘அந்த அறிக்கை சரியானதுதான் என்றாலும் முழுமையானது அல்ல’ என்று காந்தி கூறியிருந்தார். அந்தக் கூட்டத்தில் தனது எண்ணத்தை தான் மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறிய காந்தி ‘அவர்கள் விரும்புகின்ற ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் அவை போன்ற எதையும் புதிய அரசாங்கம் கொண்டிருப்பதை தான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதலாவது வந்த அந்த அறிக்கை முழுமையானது இல்லை என்பதை ஜான், டிரான்மல் இருவருமே அறிந்திருந்தனர் என்றாலும் அவர்கள் சந்தேகத்துடனே இருந்தனர். தன்னையே மேற்கோள் காட்டிக் கொண்ட ஜான் ‘பரிந்துரைக்கப்பட்டவர்களிலே அவர் (காந்தி) மிகப் பெரிய ஆளுமை என்பது உண்மைதான் என்றாலும், – அவரைப் பற்றி ஏராளமான நல்ல விஷயங்களைச் சொல்ல முடியும் – அவர் அமைதிக்கான தூதர் மட்டுமே அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; முக்கியமாக அவர் ஒரு தேசபக்தர்(…) மேலும் காந்தி அப்பாவி இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அவர் ஒரு சிறந்த நீதிபதி, வழக்கறிஞர்’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என்றே ஒரு மாதத்திற்கு முன்னதான காந்தியின் அறிக்கையை விருதுக் குழுத்தலைவர் சந்தேகித்ததாகத் தெரிகிறது. 1947ஆம் ஆண்டு இருந்த ஐந்து உறுப்பினர்களில் மூன்று பேர் காந்திக்கு விருது வழங்குவதை எதிர்த்ததால், அந்த விருதை குவாக்கர்ஸ் குழுவிற்கு வழங்க அந்தக் குழு ஒருமனதாக முடிவு செய்தது.
1948: மரணத்திற்குப் பிந்தைய விருது வழங்க கருதப்பட்டது
அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதைப் பரிந்துரைப்பதற்கான இறுதி நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு குழுவிற்கு ஆறு கடிதங்கள் கிடைத்திருந்தன. பரிந்துரைத்தவர்களில் குவாக்கர்ஸ் மற்றும் அதற்கு முன்னால் விருது பெற்றிருந்த எமிலி கிரீன் பால்ச் ஆகியோரும் அடங்குவர். குழுவின் சுருக்கப்பட்டியலுக்குள் மூன்றாவது முறையாக காந்தி இடம் பெற்றார் – இந்த முறை அந்தப் பட்டியலில் மூன்று பெயர்கள் மட்டுமே இருந்தன. காந்தியின் வாழ்க்கையின் கடைசி ஐந்து மாதங்களில் அவரது நடவடிக்கைகள் குறித்து குழுவின் அறிக்கையை குழுவின் ஆலோசகரான சீப் எழுதினார். தனது வாழ்க்கை முறையின் மூலமாக நெறிமுறை மற்றும் அரசியல் அணுகுமுறையில் தன்னுடைய ஆழ்ந்த அடையாளத்தை காந்தி ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ‘இந்த விஷயத்தில் காந்தியை மதங்களின் நிறுவனர்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும்’ என்று குறிப்பிட்டு இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் அது ஒரு தரமுறையாக ஏராளமான மக்களிடம் நிலவுகிறது என்று முடித்திருந்தார்.
மரணத்திற்குப் பின் யாருக்கும் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டதில்லை என்றாலும், சில சூழ்நிலைகளில் நோபல் விருதுகள் மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படலாம் என்றே அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த நோபல் அறக்கட்டளையின் விதிகள் இருந்தன. அதனால் காந்திக்கு விருது வழங்க முடியும் என்பதற்கான சாத்தியம் இருக்கவே செய்தது. இருப்பினும் காந்தி ஓர் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல, எந்தவொரு சொத்தையும் அவர் விட்டுவிட்டுச் செல்லவில்லை, தன்னுடைய இறுதி விருப்பத்தையும் அவர் எழுதி வைக்கவில்லை என்பதால் விருதிற்கான பணத்தை யாரிடம் தருவது என்று கேள்வியெழுந்தது.
நார்வே நோபல் நிறுவனத்தின் இயக்குனரான ஆகஸ்ட் ஷூ, மரணத்திற்குப் பின் விருதை குழு வழங்கினால் ஏற்படுகின்ற நடைமுறை விளைவுகளைப் பரிசீலிக்குமாறு குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஓலே டோர்லீஃப் ரீட்டிடம் கேட்டுக் கொண்டார். பொதுப் பயன்பாட்டிற்குப் பணத்தைப் பயன்படுத்தும் வகையிலான சாத்தியமான பல தீர்வுகளை ரீட் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து அவர் சுவீடனில் உள்ள விருது வழங்கும் நிறுவனங்களின் கருத்தையும் கேட்டறிந்தார். அந்த நிறுவனங்களின் பதில்கள் எதிர்மறையாகவே இருந்தன. அந்த நிறுவனங்கள் விருது வழங்குவதென குழுவின் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், விருது பெற்றவர் இறந்தாலொழிய மரணத்திற்குப் பிந்தைய விருதுகளைத் தரக்கூடாது என்றே கருதின.
‘விருதைப் பெறுவதற்கு உயிருடன் வாழ்ந்து வருகின்ற பொருத்தமானவர் யாரும் இல்லை’ என்ற அடிப்படையில் அந்த ஆண்டு யாருக்கும் விருதை வழங்குவதில்லை என்று 1948 நவம்பர் 18 அன்று நார்வே நோபல் குழு முடிவு செய்தது. ‘மரணத்திற்குப் பிந்தைய விருது என்பது விருதை நிறுவியவரின் இறுதி விருப்பத்தின் நோக்கங்களுக்கு முரணானது என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை’ என்று குழுவின் தலைவரான குன்னர் ஜான் தனது நாட்குறிப்பில் எழுதினார். முடிவில் தலைவரின் கூற்றை அவரது மூன்று சகாக்களும் ஏற்றுக் கொண்டனர். ஆப்டெடல் மட்டுமே மரணத்திற்குப் பிந்தைய விருது காந்திக்கு தரப்படுவதற்கு ஆதரவாக இருந்தார்.
‘உயிருடன் வாழ்ந்து வருகின்ற பொருத்தமானவர் யாருமில்லை’ என்று அறிவித்தது குறித்து, காந்தியைத் தவிர்த்து அமைதிக்காகப் பணிபுரிந்த, இறந்து போன வேறொருவரை அதாவது 1948 செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டிருந்த பாலஸ்தீனத்திற்கான ஸ்வீடனின் ஐ.நா.தூதரான கவுண்ட் பெர்னாடோட்டை அந்தக் குழு மனதில் கொண்டிருந்ததாக பின்னர் ஊகங்கள் எழுந்தன. 1948இல் விருதிற்காக பெர்னாடோட் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் அந்த ஊகங்களை நிராகரித்து விடலாம்.
ஆக, இன்னும் ஓராண்டு காந்தி உயிருடன் இருந்திருந்தால் அமைதிக்கான நோபல் விருதைப் பெறுவதற்காக அவர் ஒஸ்லோவுக்கு அழைக்கப்பட்டிருப்பார் என்று கருதுவதற்கான நியாயம் இருக்கவே செய்கிறது.
அமைதிக்கான நோபல் விருது காந்திக்கு ஏன் வழங்கப்படவே இல்லை? அமைதிக்கான நோபல் விருது கிட்டத்தட்ட ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களுக்கு மட்டுமே 1960ஆம் ஆண்டு வரையிலும் வழங்கப்பட்டிருந்தது. பின்னோக்கிப் பார்த்தால், நார்வே நோபல் குழுவின் பார்வை மிகவும் குறுகியதாக இருப்பதாகத் தோன்றலாம். காந்தி ஏற்கனவே அந்த விருதைப் பெற்றவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். அவர் உண்மையான அரசியல்வாதியோ அல்லது சர்வதேச சட்டத்தை ஆதரிப்பவரோ அல்ல. முக்கியமாக அவர் மனிதாபிமான நிவாரணப் பணியாளரோ அல்லது சர்வதேச அமைதி மாநாடுகளின் அமைப்பாளரோ அல்ல என்பதால் ஒருவேளை விருது கிடைத்திருந்தால், நிச்சயம் அந்த விருதைப் பெற்ற புதிய இனத்தைச் சார்ந்தவராகவே அவர் இருந்திருப்பார்.
காந்திக்கு வழங்கப்படுகின்ற விருது குறித்து பிரிட்டிஷ் எதிர்விளைவை ஏற்படுவதற்கான சாத்தியத்தை நார்வே நோபல் குழு கருத்தில் கொண்டதாக எந்த குறிப்பும் காப்பகங்களில் இல்லை. ஆகவே பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தூண்டி விட விரும்பாததாலேயே அந்தக் குழுவின் உறுப்பினர்கள் காந்தியைத் தவிர்த்தனர் என்பதாக ஏற்பட்டிருந்த கருதுகோள் நிராகரிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் 1947ஆம் ஆண்டில் இடையில் ஏற்பட்ட மோதலும், காந்தியின் பிரார்த்தனைக் கூட்ட அறிக்கையும் காந்தி தன்னிடமிருந்த நிலையான சமாதானக் கொள்கையை கைவிட்டுவிடப் போகிறாரா என்று பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதே குழுவின் பெரும்பான்மை மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்படாததற்கு முதன்மைக் காரணங்களாக இருந்திருப்பதாகத் தெரிகிறது. இன்றைய நிலைமையைப் போல் அமைதிக்கான விருதை பிராந்திய மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான தூண்டுதலாகப் பயன்படுத்த நார்வே நோபல் குழு முயன்று பார்க்கும் பாரம்பரியம் அன்றைக்கு இருந்திருக்கவில்லை.
தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில், இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் எழுந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர காந்தி கடுமையாக உழைத்தார். குன்னர் ஜானின் நாட்குறிப்பில் நவம்பர் 18 அன்று எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள பதிவைத் தவிர, 1948ஆம் ஆண்டில் காந்தியின் பெயரைப் பரிசீலித்த நார்வே நோபல் குழுவின் விவாதங்களைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் மரணத்திற்குப் பிந்தைய விருதை காந்திக்கு வழங்குவது குறித்து அவர்கள் தீவிரமாக கருத்தில் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. முறையான காரணங்களின் அடிப்படையில் அந்த விருதை வழங்காமல் 1948க்கான விருது தொகையை செலவழிக்க வேண்டாம் என்றும், அந்த விருதை ஓராண்டு காலம் கழித்து வழங்கிட முன்பதிவு செய்து வைப்பது என்றும் அந்தக் குழு முடிவு செய்தது. விருது பெற்றவர்களின் பட்டியலில் மகாத்மா காந்திக்கு இடம் இருக்க வேண்டும் என்று பலரும் கருதினாலும், மௌனத்துடன் மரியாதையாக அந்த முடிவு எடுக்கப்படாமலே கைவிடப்பட்டது.
https://www.nobelprize.org/prizes/themes/mahatma-gandhi-the-missing-laureate/ நன்றி: நோபல் விருது இணையதளம் தமிழில் தா.சந்திரகுரு
கடந்த வாரம் மகாராஷ்டிராவில் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள தலோட் என்ற சிறிய நகரத்திலுள்ள உள்ளூர்க் கடையில் திடீரென்று மக்களால் தங்களுக்குத் தேவையான கோல்கேட் பற்பசையை வாங்க முடியாமல் போனது. கோல்கேட் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பது, அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை தலோட்டில் உள்ள மளிகைக் கடைக்கு வழங்குவதில்லை என்று நந்துர்பார் மாவட்ட விநியோகஸ்தர் முடிவு செய்ததாலேயே அந்த நிலைமை உருவானது. நிறுவனங்களிடமிருந்து நிறுவனங்களுக்கு (B2B) விற்பனை செய்கின்ற ரிலையன்ஸின் ஜியோ மார்ட் மற்றும் உடான் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முற்றிலும் மாறாக கோல்கேட் நிறுவனம் தனது பாரம்பரியமான விநியோகஸ்தர்களை நியாயமற்ற முறையில் நடத்துகின்றது என்று கூறி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து நுகர்வோர் பொருட்களின் விநியோகஸ்தர்களும் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
இந்தியாவில் கோல்கேட் போன்ற நுகர்வோர் நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்குகின்ற ஏறக்குறைய ஐந்து லட்சம் விநியோகஸ்தர்கள் அவற்றை லட்சக்கணக்கான வர்த்தகர்கள் மற்றும் பிற இடைத்தரகர்களின் வலையமைப்பு மூலமாக நாடு முழுவதும் உள்ள ஏழு லட்சம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் அமைந்துள்ள ஒரு கோடியே முப்பது லட்சம் உள்ளூர் சிறு கடைகளுக்கு வழங்கி வருகின்றனர். அந்த உள்ளூர்க் கடைகளுடன் பல்லாண்டுகளாக உறவுகளை வளர்த்து வந்திருக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களில் பெரும்பாலானோர் சிறு குடும்ப வணிக நிறுவனங்களையே நடத்தி வருகின்றனர்.
தலோட்டில் உள்ள அந்த மளிகைக்கடை நுகர்வோருக்கு நூறு கிராம் கோல்கேட் பற்பசையை அதிகபட்ச சில்லறை விலையான (எம்ஆர்பி) ஐம்பத்தி ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறது. பற்பசை உற்பத்தியாளரான கோல்கேட் நிறுவனம் தன்னுடைய விநியோகஸ்தருக்கு நாற்பது ரூபாய்க்கு பற்பசையை விற்கிறது. நந்துர்பார் விநியோகஸ்தர் அதனை தலோட்டில் உள்ள அந்த மளிகைக்கடைக்கு நாற்பத்தைந்து ரூபாய்க்கு கொடுத்து வருகிறார். நுகர்பொருள் தொடர்பான தயாரிப்புகளின் விநியோகச் சங்கிலி பொதுவாக இந்தியாவில் இவ்வாறாகவே இருந்து வருகிறது.
இடைத்தரகர்களைத் தவிர்த்து விட்டு தலோட்டில் உள்ள மளிகைக் கடையுடன் மொபைல் போன் செயலி மூலமாக தங்களை நேரடியாக இணைத்துக் கொள்கின்ற தொழில்நுட்பங்களை புதுயுகத்து B2B தொழில்நுட்பநிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. விநியோகஸ்தரின் நாற்பத்தைந்து ரூபாய் என்ற விற்பனை விலையைக் காட்டிலும் குறைவாக முப்பத்தைந்து ரூபாய்க்கு உள்ளூர்க் கடைகளுக்கு பற்பசையை அவை நேரடியாக வழங்கத் தொடங்கியுள்ளன. தலோட் மக்கள் உள்ளூர்க்கடைகளில் இதுபோன்ற குறைந்த விலையில் பொருளை வாங்கிப் பயனடைவார்கள் என்றே இதனை மேம்போக்காகப் பார்க்கும் போது தோன்றும்.
இத்தகைய மிகவும் குறைவான விலைகளுடன் போட்டியிட முடியாததால் தங்களுடைய வணிகத்தை இழந்து விடும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் விநியோகஸ்தர்கள் அவை நியாயமற்ற நடைமுறைகளாக இருப்பதாகக் கூறுகின்றனர். கோல்கேட் போன்ற உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை B2B தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்குவதை நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்கின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள கோல்கேட் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததால், விநியோகஸ்தர்கள் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்தனர்.
மிகவும் அரிதான ‘ஆக்கப்பூர்வமான அழிவு’ ஏற்கனவே உள்ள செயல்முறையைக் குலைப்பதன் மூலம் நடைமுறையில் இருந்து வருபவற்றை பயனற்றவையாக்குகின்ற புது கண்டுபிடிப்புகள் ‘ஆக்கப்பூர்வமான அழிவு’ என அறியப்படுகின்றன. அந்தக் கண்டுபிடிப்புகள் ஆரோக்கியமான செயல்முறையாக இருப்பதாக ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் ஜோசப் ஷம்பீட்டர் கூறுகிறார். ஆனால் அந்த ஆக்கப்பூர்வமான அழிவு என்பது புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் ஏற்படுவதாக இல்லாமல், வெறுமனே விலை நிர்ணய அதிகாரம் மூலமாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்றால், உண்மையிலேயே அது ஆரோக்கியமானதுதானா என்ற கேள்வி எழுகின்றது.
இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளூர்க் கடைகளிடம் தாங்கள் விற்கின்ற ஒவ்வொரு கோல்கேட் பற்பசையிலும் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. பாரம்பரியமாக இருந்து வருகின்ற விநியோகஸ்தர்களிடமிருந்து விலகி உள்ளூர்க் கடைகள் தங்களை நோக்கி நேரடியாக வருகின்ற வகையில் வேண்டுமென்றே அடக்க விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு தங்களுடைய தயாரிப்புகளை அவை விற்கத் துவங்கியுள்ளன. மேலும் உள்ளூர்க் கடைகளுக்கு மிகவும் விரிவான கடன்களையும், நடப்பு மூலதனத்தையும் அவை வழங்கி வருகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்கான வாடிக்கையாளர்களை வென்றெடுப்பதற்காக மொபைல் ஃபோன் செயலி என்ற புதுமையை மட்டுமல்லாது, மிக அதிக அளவிலான விலை தள்ளுபடி, மலிவான நிதியுதவி போன்றவற்றையும் நம்பியே இருக்கின்றன.
உடான் நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் மொத்தத்தில் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது. ஜியோமார்ட் நிறுவனம் இன்னும் கூடுதலான இழப்பை அறிவித்திருக்கிறது. ஏற்படுகின்ற பேரிழப்பை அதிக அளவில் பணம் கிடைப்பதால் இத்தகைய இந்திய நிறுவனங்களால் சமாளித்துக் கொள்ள முடிகிறது. இந்த நிறுவனங்களுக்கு பெரும்பாலும் அமெரிக்க ஓய்வூதிய நிதி மற்றும் பல்கலைக்கழக அறக்கட்டளைகளால் நிதியளிக்கப்படுகின்ற வெளிநாட்டு துணிகர மூலதன நிறுவனங்களின் நிதிகள் வந்து குவிகின்றன. வெளிப்படையாகச் சொல்வதென்றால் நந்துர்பார் விநியோகஸ்தரை கோல்கேட் நிறுவனம் வெளியேற்றி விடும் போது தலோட் கிராமவாசிக்கு அமெரிக்க மூத்த குடிமகன் ஒருவரே தள்ளுபடி விலையில் கோல்கேட் பற்பசையை வழங்குபவராக இருப்பார். அவர்கள் அதற்காக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்ற உலகளாவிய மூலதனப் பாய்ச்சல்களுக்கே நன்றி சொல்ல வேண்டியிருக்கும். அத்தகைய மூலதனப் பாய்ச்சல்களே புதுமையை வளர்த்தெடுத்து, நுகர்வோருக்கு மகத்தான பலன்களை அளிக்கின்றன என்பதே புதிய செவ்வியல் பொருளாதாரக் கோட்பாடாக இருந்து வருகிறது.
மறுபக்கத்தில் இந்தியாவின் லட்சக்கணக்கான விநியோகஸ்தர்கள் மற்றும் இடைத்தரகர்களால் அதுபோன்ற நிதியைப் பெற முடிவதில்லை. பொதுவாக அவர்கள் சிறிய அளவிலான வங்கிக் கடன்களுக்கு ஈடாக தங்கள் தனிப்பட்ட சொத்துக்களை அடமானமாக வைத்து கட்டமைக்கப்பட்ட சிறு வணிகங்களையே பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்த சிறு நிறுவனங்கள் புது யுகத்து ஸ்டார்ட்அப்கள் மற்றும் நன்கு நிறுவப்பட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் சுதந்திரமாக முடிவில்லாது பாய்கின்ற வெளிநாட்டுப் பணத்தின் பாய்ச்சலில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு பெறுகின்ற பணத்தை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக மட்டுமல்லாமல், தங்களுடைய போட்டியாளர்களைக் குறைப்பது மற்றும் அவர்களுடைய சந்தைப் பங்கைத் திருடிக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்வது வெளிப்படையானது. அவர்களால் ஏற்கனவே சந்தையில் இருப்பவர்களை அழித்து தங்களுக்கென்று அதிக சந்தைப் பங்கைப் பெற்றுக் கொள்ளும் வரை தங்களுக்கு ஏற்படுகின்ற பேரிழப்புகளை பல ஆண்டுகளுக்குத் தக்க வைத்துக் கொள்ளவும் முடிகிறது. அந்த இழப்புகளுக்குப் பிறகு தங்களுக்கான லாபத்தை ஈட்டிக் கொள்வதற்காக அவர்கள் விலைகளை உயர்த்திக் கொள்ளக்கூடும். அது தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனத்திடம் இந்தியா பெற்ற அனுபவத்தை ஒத்திருக்கும்.
அடிமாட்டு விலை நிர்ணயம் என்று அழைக்கப்படுகின்ற இந்த கொள்ளை நடைமுறை இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் சட்டவிரோதமான செயலாகவே இருக்கிறது. ஆனாலும் ஸ்டார்ட்அப்கள் என்ற இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பின்னணியில் விலை நிர்ணய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்ற இருண்ட பக்கமும் இருந்தே வருகிறது. இதுதான் உண்மையான ‘ஆக்கப்பூர்வமான அழிவு’ என்பதாக இருக்கும் என்றால், ஒவ்வொரு விற்பனையிலும் இழப்பைச் சந்தித்து, மலிவான நிதியை வழங்குவதைக் காட்டிலும் இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் தலோட்டிலுள்ள கடை உரிமையாளரை தங்கள் புதுமையான செயலி மற்றும் செயல்திறன் மூலமாக கவர்ந்திழுப்பவையாக மட்டுமே இருக்கும்.
மிகக் குறைந்த விலையால் நுகர்வோர்கள் பயன்பெறுகின்றார்கள் என்றாலும், இந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சமமான, எளிதான பணம் கிடைக்காத லட்சக்கணக்கான விநியோகஸ்தர்கள், வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் அதனால் பாதிக்கப்பட வேண்டுமா? நந்துர்பரில் உள்ள விநியோகஸ்தர், வர்த்தகர்கள் மற்றும் தலோட்டில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர் என்று அவர்கள் அனைவரும் ஒரே உள்ளூர்ச் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அவற்றில் சில குடும்பங்களைக் குழப்பத்திற்குள் தள்ளிவிடுவதால் அந்தச் சமூகத்திற்குள் நிச்சயமாக சமூகப் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.
உலகளாவிய பிரச்சனை இது இந்தியாவிற்கான பிரச்சனையாக மட்டுமல்லாது உலகளாவிய பிரச்சனையாகவே இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். கடைப்பிடிக்கின்ற வழிமுறைகளைப் பொருட்படுத்தாமல் குறைந்த விலை நிர்ணயம் என்பது தனித்த, தகுதியான நோக்கம் என்று வழக்கத்தில் இருந்து வருகின்ற பொருளாதாரக் கருத்து இப்போது கடுமையான சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் தயாரிப்புகளை ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் இலவசமாக வழங்கியும், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து நுகர்வோருக்குப் பெரும் பயனளித்து வருகின்றன என்றாலும் அவை மிகப்பெரிய சமூக மோதல்கள் மற்றும் வேற்றுமையை ஏற்படுத்தவே செய்கின்றன. இந்த விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தொழில்நுட்ப நிறுவனங்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷனின் புதிய தலைவரான லினா கான், இதுபோன்ற போட்டிக்கு எதிரான நடத்தையைச் சரிசெய்வதற்கான புதிய விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார்.
இந்தியா எதிர்கொள்ளவிருப்பது இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டு மூலதனப் பாய்ச்சலில் கூடுதல் சிக்கல் உள்ளது. அமெரிக்காவில் சுதந்திரமாக அச்சிடப்படுகின்ற பெரும் தொகை இந்தியாவின் பங்குச் சந்தை மற்றும் ஸ்டார்ட்அப் சந்தைகளுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. இந்திய வணிகங்களில் ஒரு சிறிய பகுதியினருக்கு மட்டுமே அந்த மூலதனத்தைப் பெறுவது சாத்தியமாகிறது. அதுபோன்றதொரு நிலைமையில் இந்த விநியோகஸ்தர்களைப் போல இருக்கின்ற லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் பெருமளவிலான வருமானம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவதாக இருக்கின்றது. சுதந்திரமான மூலதனப் பாய்ச்சலின் முன்னாள் வெற்றியாளர்கள்கூட அவற்றின் சமூக தாக்கங்கள் குறித்து இப்போது மிகவும் எச்சரிக்கையுடனே இருக்கின்றனர்.
இதுபோன்ற வாதம் இ-காமர்ஸ் அல்லது தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு எதிரான – முன்னேற்றத்திற்கு எதிரான – லுடைட் வாதமாக இல்லை என்பது தெளிவு. சட்டவிரோதமான, கொள்ளையடிக்கின்ற அடிமாட்டு விலை நிர்ணயம், எளிதாக வெளிநாட்டுப் பணத்தைப் பெறுவதற்கான முன்னுரிமை மூலம் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவது போன்றவையே இங்கே உண்மையான பிரச்சனைகளாகும்.
இந்தியாவில் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்களின் (சுமார் பத்து கோடி மக்கள்) வாழ்வாதாரம் நுகர்பொருட்கள் விநியோகச் சங்கிலியில் இடைத்தரகர்களையே சார்ந்துள்ளது என்று சில மதிப்பீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு திடீரென்று இந்தக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தனிமையில் விடப்படுமேயானால், அது நாட்டில் மிகப்பெரிய சமூகக் கொந்தளிப்பையே ஏற்படுத்தும். அமெரிக்கப் பணத்தால் தங்கள் சமூகத்தில் உள்ள சில குடும்பங்கள் துயரத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை உணருகின்ற தலோட்வாசிகள் சற்றே கூடுதலான விலையில் தங்கள் பற்பசையை வாங்கிக் கொள்ளக்கூட தயாராக இருக்கக் கூடும்.
https://www.thehindu.com/opinion/op-ed/predatory-pricing-is-prising-indian-livelihoods-apart/article38279438.ece நன்றி: தி ஹிந்து தமிழில்: தா.சந்திரகுரு
மரியம் தவாலே, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) பொதுச் செயலாளர்
‘சுல்லி டீல்ஸ்’ செயலிக்குப் பிறகு இப்போது மிகவும் இழிவான ‘புல்லி பாய்’ செயலி முஸ்லீம் பெண்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களுக்குள் நுழைந்துள்ளது. குற்றவாளிகள் மீது ஆறு மாதங்களுக்கு முன்பாக முதல் சம்பவத்தின் போதே கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருந்தால், இப்போது சமீபத்தில் நடந்தேறியுள்ள இந்த நிகழ்வு நடந்திருக்காது என்று பெண் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஐந்து பெண்கள் அமைப்புகள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிடுமாறு கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளன. அதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) பொதுச் செயலாளரான மரியம் தவாலே டெக்கான் ஹெரால்டின் ஷெமின் ஜாயிடம் உரையாடினார்.
பெண்களைப் பொறுத்தவரை மிகவும் கசப்பான செய்தியுடன் இந்தப் புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இப்போது ‘புல்லி பாய்’ என்ற செயலியை நாம் காண்கிறோம். இந்தச் செயலி ‘சுல்லி டீல்ஸ்’ பிரச்சனை ஓய்ந்த சில மாதங்களிலேயே வந்திருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
அநீதிக்கு எதிராக, தங்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரலை உயர்த்தி வருகின்ற துணிச்சலான சிறுபான்மைப் பெண்களை அச்சுறுத்துவதாக, கலவரப்படுத்துவதாகவே அது இருக்கின்றது. ஆட்சியில் இருக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியால் இந்த வகையான அரசியல் சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகின்ற தந்திரங்களாக அவை இருக்கின்றன. சிறுபான்மையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்துபவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை என்பதைக் காண முடிவது இதுபோன்ற குண்டர்களை மேலும் ஊக்குவிக்கிறது.
‘சுல்லி டீல்ஸ்’ வந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று நினைக்கிறீர்களா? அதுவே ‘புல்லி பாய்’ செயலிக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு உத்வேகத்தை அளித்ததா? முற்றிலும் சரி. முதல் தகவல் அறிக்கை பதிவானதும் இணையதளம் அல்லது செயலி முடக்கப்பட்டது என்பதே அமைச்சர் கூறிய முதல் விஷயமாக இருந்தது. அவர்கள் மீது தண்டனை அளிக்கின்ற வகையிலான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களைத் தொட்டு விடாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரைக் கொல்வதற்கான வெளிப்படையான அழைப்பை விடுத்த தர்ம சன்சத் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. மனுவாதிகளின் கருத்துப்படி அவர்கள் தேச விரோதிகள் கிடையாது. ஆனால் அதே சமயத்தில் அநீதிக்கும், கொடுமைகளுக்கும் எதிராக குரலை உயர்த்துபவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு எதிராகத்தான் நாம் இப்போது போராட வேண்டியுள்ளது.
அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? இந்திய மாதர் தேசிய சம்மேளனம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், பிரகதிஷீல் மகிளா சங்கதன், அகில இந்திய மகிளா சன்ஸ்கிருதிக் சங்கதன் (NFIW, AIDWA, AIPWA, PMS, AIMSS) ஆகிய ஐந்து பெண்கள் அமைப்புகள் தலையிடுமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக ஓராண்டிற்குள்ளாக இரண்டாவது முறையாக பெண்கள் வெறுப்பு குறித்து உருவாகியுள்ள வெட்கக்கேடான காட்சியை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
அநீதிக்கும் ஊழலுக்கும் எதிராக எழுதி வருகின்ற, போராடுகின்ற துணிச்சலான முஸ்லீம் பெண்களை அவமானப்படுத்தவும், பயமுறுத்தவுமே இதுபோன்று செய்யப்படுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உத்தரப் பிரதேசம், தில்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றச் செயல்கள் குறித்து அரசு நிர்வாகத்தின் பிரிவுகள், நீதித்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மை அவை வெறுமனே பார்வையாளர்களாக இருந்து வருகின்ற போக்கின் ஒரு பகுதியாகவே உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்து மதத் தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் தண்டனை எதுவுமின்றி இனப்படுகொலைத் தாக்குதல்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அட்டூழியம் நடைபெற்றுள்ளது என்பதையும் நாங்கள் அந்தக் கடிதத்தில் குடியரசுத் தலைவருக்கு நினைவுபடுத்திக் காட்டியுள்ளோம்.
சமீபத்திய நிகழ்வை சமூகத்தில் உள்ள மதச்சார்பற்ற பிரிவினரை மேலும் ஓரம் கட்டுகின்ற வலதுசாரிகளின் திட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆமாம். மதச்சார்பற்ற வெளியை மட்டுமல்லாது, முற்போக்கான, ஜனநாயக, மதச்சார்பற்ற விழுமியங்களை முன்னிறுத்தி நம் நாட்டில் குரல் எழுப்ப முயன்று கொண்டிருக்கும் அனைவரையும் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற திட்டமாகவே அது உள்ளது. நமது அரசியலமைப்பை தங்களுடைய ‘மனுவாதி’ முறைக்கு மாற்ற இந்த பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி விரும்புகிறது.
அவர்களைப் பொறுத்தவரை அதிகாரம் பெற்ற பெண்கள் ஒரு பிரச்சனையாகவே இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஆம். அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் அடிபணிந்து செல்ல வேண்டும், அடக்கமாக இருக்க வேண்டும், எதிராக குரல் உயர்த்தக் கூடாது.
பெண்களின் திருமண வயதை பதினெட்டு ஆண்டுகள் என்பதிலிருந்து இருபத்தியோரு ஆண்டுகளாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த நேரத்தில் இத்தகைய தாக்குதல்கள் வந்துள்ளன. அது ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை நோக்கிய முயற்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
அது ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை நோக்கி இருப்பதாக நான் கூற மாட்டேன். உண்மையில் அது ‘மனுவாதி’ கலாச்சார அமைப்பை நாட்டின் மீது திணிக்கும் பாதையை நோக்கியதாக இருக்கின்றது. ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் என்றிருக்க முடியாது என்றாலும் அது பாலினம் சார்ந்த சட்டமாக இருக்கலாம் என்று நாங்கள் கூறியுள்ளோம்.
பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?
அந்த திருத்தத்தில் பல சிக்கல்கள் உள்ளன. கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பதே அரசாங்கம் முன்வைக்கின்ற வாதங்களாக இருக்கின்றன. அந்த இரண்டு வாதங்களும் பொய்யாகவே இருக்கின்றன. சிறுமிகள், பெண்களுடைய வாழ்நாள் முழுவதற்கும் அவர்களுக்கான ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது, அதே நேரத்தில் அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவது – குறிப்பாக குடும்பம், சமூகம், கண்காணிப்பு அமைப்புகள் அல்லது அரசாங்கத்தால் வற்புறுத்தப்படாமலும், கட்டாயப்படுத்தாமலும் திருமணம், தாய்மை குறித்து முடிவெடுக்கும் உரிமைகளை வயதுவந்த பெண்களுக்கு வழங்குவதன் மூலம் தாய், குழந்தை ஆரோக்கியம் குறித்து இருந்து வருகின்ற பிரச்சனைகளைத் திறம்பட தீர்த்துக் கொள்ள முடியும் என்றே நாங்கள் நம்புகிறோம்.
மேலும் அந்த திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வயது வந்தவர்களுக்கிடையில் நடைபெறுவதாக இருக்கின்ற இருவரும் ஒருமித்து செய்து கொள்ளும் திருமணம் குற்றச்செயலாகி விடும் என்பதால், வயது வந்த பெண்களின் சுதந்திரம் மேலும் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாது திருமண வயதை உயர்த்தி, ஒருமித்த உறவை குற்றப்படுத்திய செயலுக்காக ஒரு பையனை சிறையில் அடைப்பதற்கு நாம் எப்படி சம்மதிப்பது?
2000ஆம் ஆண்டிலிருந்து பதின்ம வயது திருமணங்கள் 51 சதவிகிதம் குறைந்திருப்பதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டில் வெளியான அரசு அறிக்கை, திருமணம் செய்து கொள்கின்ற சராசரி வயது 22.1 ஆண்டுகள் என்று அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. சிறுமிகளோ அல்லது சிறுவர்களோ முன்கூட்டியே திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை என்பதே அதன் பொருள் ஆகும்.
அப்படியென்றால் அவ்வாறான திருமணங்கள் எங்கே நடந்து கொண்டிருக்கின்றன? அவ்வாறு திருமணம் செய்து கொள்பவர்கள் அடிப்படையில் வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கு வழி இல்லாது மிகவும் ஏழ்மையில் உழல்கின்ற மக்களாகவே இருக்கின்றார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நிதி சுதந்திரம் அடிப்படைத் தேவையாக உள்ளது. அதேசமயம் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் பெண்களிடையே அதிக அளவிலே வேலையின்மை நிலைமையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இந்த அரசால் அதற்கெல்லாம் தீர்வு காண முடியவில்லை. அந்தக் காரணிகள் எதையும் தீர்த்து வைக்காமல், இந்திய மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற இந்த முடிவை அரசு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
2019 டிசம்பர் 13 அன்று கவுகாத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
தனது அரசாங்கத்தின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்தார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஆவணங்கள் இல்லாமல் வந்த புலம்பெயர்ந்தோருக்கு – அவர்கள் முஸ்லீம்களாக இல்லாத வரை – இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்த சட்டத் திருத்தம் இருந்தது. அத்தகைய சட்டத்தை இயற்றித் தருவதற்கான வாக்குறுதி பாரதிய ஜனதா கட்சியின் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த சட்டத்திருத்தம் இந்திய முஸ்லீம்களைக் குறிவைக்கும் வகையில் ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் அடிக்கடி இணைக்கப்பட்டு பேசப்பட்டது.
2019 டிசம்பர் 11 2019 அன்று மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்
அவர்கள் விளக்கிடாத தர்க்கம் மிகவும் எளிமையாக இருந்தது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விடுபடுகின்ற முஸ்லீம் அல்லாதவர்கள் ‘அகதிகள்’ என்று தங்களைக் கூறிக் கொள்வதன் மூலம் குடியுரிமையைப் பெறுவதற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகிய இரண்டு முயற்சிகளின் கலவை அனுமதிக்கும். மறுபுறத்தில் பதிவேட்டில் உள்ள சிவப்பு நாடாத்தனம், முஸ்லீம்களைத் துன்புறுத்துவதற்கான கருவியை அரசுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 2019ஆம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பாஜகவிடமிருந்த உந்துதலைப் பொய்யாக்குகின்ற வகையிலே அந்தச் சட்டத்திருத்தம் இன்னும் செயல்படுத்தப்படாமலே இருக்கிறது. மக்களவையின் 2021ஆம் ஆண்டு குளிர்கால அமர்வில் ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தின் கீழ் வருபவர்கள், அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஒரு சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களாக அதற்கென்று உருவாக்கப்படுகின்ற விதிகள் அமையும். நாடாளுமன்ற வழிகாட்டுதல்களில் ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வெளியிடப்பட வேண்டும் என்றிருக்கிறது. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், மோடி அரசு அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகளை இதுவரையிலும் வெளியிடவில்லை. குடியுரிமைக்கு ஒருவரால் கூட விண்ணப்பிக்க முடியாத நிலைமையில், அந்த்ச் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உரியவர்களைச் சென்றடைய முடியாத வெற்றுக் காகிதமாகி விட்டது.
பாஜகவின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு பிரச்சனையில், அவர்களுக்கு இதுபோன்று திடீரென்று ஆர்வமின்மை தோன்றக் காரணம் என்ன?
தெருக்களில் குவிந்த போராட்டக்காரர்கள் தெருக்களில் நடந்த போராட்டங்களே புதிதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான முதல் எதிர்வினையாக இருந்தன. வங்கதேச ஹிந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வரக்கூடும் என்ற அச்சத்தில் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கின. தேசிய குடிமக்கள் பதிவேட்டை அடிக்கடி குடியுரிமை சட்டத் திருத்தத்துடன் அமித் ஷா இணைத்துப் பேசி வந்ததால், தங்களுடைய குடியுரிமை நிலைமை குறித்து இந்திய முஸ்லீம்களிடம் அச்சம் உருவாகியிருந்த நிலையில் பிற மாநிலங்களுக்கும் போராட்டங்கள் விரைவில் பரவின.
போராட்டத்தின் வீச்சு மிகப் பெரிய அளவில் இருந்தது. போராட்டக்காரர்கள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான ஆர்வலர்கள், அரசு தரப்பு என்று சில இடங்களில் அது வன்முறைக்கு வழிவகுத்தது. அசாமில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். வங்காளத்தில் போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீ வைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் இருபது பேர் கொல்லப்பட்டனர். மங்களூரில் நடத்தப்பட்ட காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த கொந்தளிப்பு தேசிய தலைநகரான தில்லியில் அதன் உச்சகட்டத்தை எட்டியது. பாஜக அரசியல்வாதியான கபில் மிஸ்ரா குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை தெருக்களிலிருந்து அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்ததைத் தொடர்ந்து மிகப் பெரிய அளவிலே வகுப்புவாதக் கலவரங்கள் மூண்டன.
குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன என்று பயந்த இந்தியர்களிடமிருந்து தரவு கணக்கீட்டாளர்கள் அச்சுறுத்தல்களையும், வன்முறையையும் எதிர்கொள்ளும் வகையிலான பல நிகழ்வுகளுக்கு வரப் போகின்ற தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம் வழியேற்படுத்திக் கொடுத்தது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றின் விளைவாக மக்களிடம் உருவாகியிருக்கும் நம்பிக்கையின்மை, மனக்கசப்பின் காரணமாக மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்பாளர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநில காவல்துறை மற்றும் மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரலுக்கு கடிதம் எழுதியதால் பிரச்சனை தீவிரமானது.
மாற்றிக் கொள்ளப்பட்ட திட்டங்கள் பரவலாக ஏற்பட்டிருந்த அமைதியின்மை பாஜகவால் கிட்டத்தட்ட உடனடியாக மீட்டமைக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 10 அன்று நாடாளுமன்றத்தில் விவாதித்த போது ‘எங்களுடைய தேர்தல் [2019] அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததால், தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டில் நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத்ய் தேவையில்லை’ என்று அமித் ஷா மிகக் கடுமையாகக் கூறினார். ஆயினும் அதிலிருந்து பன்னிரண்டு நாட்களுக்குள் ‘இது காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்டது. நாங்கள் அதை உருவாக்கிடவில்லை. அதை பாராளுமன்றத்திற்கு நாங்கள் கொண்டு வரவில்லை, அறிவிக்கவில்லை’ என்று தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைகழுவுகின்ற வகையிலே பேரணி ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
2019ஆம் ஆண்டில், குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் அமித் ஷா அடிக்கடி இணைத்து பேசி வந்திருந்த நிலையில், கடும்எதிர்ப்புகளுக்குப் பிறகு சற்றே பின்வாங்கிய பாஜக உண்மையில் அவை இரண்டும் இணைக்கப்படவில்லை என்ற வாதத்தை முன்வைக்கத் துவங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பாஜக கூட்டணி கட்சிகளே அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரும் அளவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான உணர்வு மிகவும் வலுவாக உள்ளது. திடீரென இப்பகுதியில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மோடி அரசைப் பொறுத்தவரை அது மிகவும் வலுவான பிரச்சனையாகவே உள்ளது. ‘எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் பிராந்தியத்தில் பிரச்சனையைத் தூண்டுவதற்கு சீனா சதித்திட்டம் தீட்டுகிறது’ என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகின்ற அதே நேரத்தில் மியான்மரும் அதுபோன்று ஈடுபடக்கூடும் என்று ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2019 டிசம்பர் 22 அன்று தில்லியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், தனது கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறினார்.
இந்தியா குறித்த பிம்பத்தின் மீது ஏற்பட்ட தாக்குதல் குடியுரிமை சட்டத் திருத்தம் உள்நாட்டு அளவில் மட்டுமே சிக்கலை ஏற்படுத்தியதாக இருக்கவில்லை. வெளியுறவு விவகாரங்களிலும், குறிப்பாக தன்னுடைய நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றாக உள்ள வங்கதேசம் தொடர்பான விவகாரங்களில் இந்தியாவிற்கு அது அதிக குழப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. குடியுரிமை தொடர்பாக ஏற்பட்டிருந்த அரசியல் வங்கதேசத்தின் மீது கடுமையான வாய்மொழித் தாக்குதல்களை பாஜக அரசியல்வாதிகள் உருவாக்கிட வழிவகுத்துக் கொடுத்தது. புலம்பெயர்ந்தோரைக் கொண்டு கிழக்கு அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நிரப்பி வருகிறது என்று பாஜகவினர் பலரும் குற்றம் சாட்டினர். 2018ஆம் ஆண்டில் வங்கதேசத்தவரை ‘கறையான்கள்’ என்று அழைக்கும் அளவிற்கு அமித் ஷா சென்றிருந்தார்.
அதுபோன்ற பேச்சுகள் வங்கதேசத்தில் கடுமையான எதிர்வினையைத் தூண்டியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. 2020ஆம் ஆண்டில் மோடி வங்கதேசத்திற்குச் சென்றிருந்த போது வெடித்த வன்முறையில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு 2015ஆம் ஆண்டு மோடி சென்றிருந்த போதுகூட இதுபோன்ற எதிர்வினைகள் எதுவும் காணப்படவில்லை என்பது வங்கதேசத்தில் சில பிரிவினர் இந்தியாவை எந்த அளவிற்கு இப்போது எதிர்மறையாகப் பார்க்கின்றனர் என்பதையே குறிக்கிறது.
பிரச்சனைகளை இன்னும் மோசமாக்குகின்ற வகையில் இந்தியாவின் உறுதியான கூட்டாளியாக இருந்து வரும் வங்கதேசப் பிரதமர் ஹசீனா, வங்கதேசத்தில் பரவலாக ஹிந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து 2021 அக்டோபரில் புதுதில்லியை எச்சரித்திருந்தார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஹசீனா ‘அங்கே [இந்தியாவில்] நம் நாட்டைப் பாதிக்கின்ற, நமது ஹிந்து சமூகத்தைப் புண்படுத்துகின்ற எதுவும் செய்யப்படாமல் அவர்கள் [புதுதில்லி] பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார். குடியுரிமை சட்டத் திருத்த இந்திய-வங்கதேச உறவுகளைச் சீர்குலைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என்று ஃபாரின் பாலிசி என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தின் வகுப்புவாத அம்சம் வங்கதேசத்தில் மட்டுமல்லாது இந்தியாவை தாராளவாத ஜனநாயக நாடாகக் கருதி வந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் வருடாந்திர ஜனநாயகக் குறியீட்டில், 2020ஆம் ஆண்டில் இந்தியா பத்து இடங்கள் சரிவைக் கண்டுள்ளது. சரிவிற்கான மற்ற காரணிகளுடன் குடியுரிமை சட்டத் திருத்தமும் ஒரு காரணியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் அமெரிக்க சிந்தனைக் குழுவான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்பு இந்தியாவின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் இருந்த பாரபட்சமான திருத்தங்களை மேற்கோள் காட்டி இந்தியாவிற்கான தகுதியை ‘சுதந்திரம்’ என்பதிலிருந்து ‘ஓரளவிற்கு சுதந்திரம்’ என்று தரமிறக்கியிருந்தது.
வங்கதேசத்தில் மோடியின் வருகையை கண்டித்து 2021 மார்ச் மாதம் போராட்டம் நடந்தது
பாஜகவிற்கு முற்றிலுமாக இழப்பு
ஒருபுறத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் அறிமுகம் எதிர்மறையான விளைவுகளை – உள்நாட்டு அமைதியின்மையிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தேர்வுகளைக் குறைப்பது வரை – ஏற்படுத்தியது. அது பாஜகவுக்கு மிகக் குறைவான நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்திக் கொடுத்தது.
ஹிந்துத்துவாவின் தெற்காசியப் பார்வை மீது கவனம் செலுத்துகிற வகையிலேயே குடியுரிமை சட்டத் திருத்தம் இருந்தது. பாஜகவின் முக்கிய கருத்தியல் அடித்தளத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்ததிர்வு கொண்டதாக இருந்த இஸ்ரேல் வடிவமைத்த ‘திரும்பி வருவதற்கான சட்டத்தின்’ மறுபதிப்பாக பிராந்தியத்தில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் இந்தியாவிற்குச் செல்வதற்கான உரிமையை ஏற்படுத்தித் தருவதாகவே சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தலில் அது நமத்துப் போனது. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மேற்கு வங்கம் – வங்கதேசத்துடன் அதிக தொடர்பு கொண்ட மாநிலம் – ஆர்வத்துடன் இருந்த நிலைமையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் அதையொரு பிரச்சினையாக்காமால் கைவிடுவது என்று பாஜக முடிவு செய்தது, அதற்குப் பதிலாக உள்ளூர் ஊழல் போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தவே அது விரும்பியது.
கூடுதலாக குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டாலும், அது பலனளிக்குமா என்பது குறித்தும் மிகப்பெரிய அளவிலே சந்தேகங்கள் இருந்து வருகின்றன. சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக நடந்த விவாதங்களின் போதே இந்திய உளவுத்துறை குடியுரிமை சட்டத் திருத்தத்தால் மிகக் குறைவான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் மட்டுமே – சுமார் முப்பதாயிரம் பேர் மட்டுமே – பயனடைவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் ஏற்கனவே இந்திய குடியுரிமையை சட்டவிரோதமான முறையில் பெற்றிருப்பார்கள் என்றும் கணித்திருந்தது.
உண்மையில் இந்திய உளவுத்துறையின் அந்தக் கணிப்பை ஏற்கனவே இருந்து வரும் நீண்ட கால விசாவின் செயல்பாட்டிலிருந்து நம்மால் காண முடியும். குடியுரிமை சட்டத் திருத்தத்தைப் போன்று 2015ஆம் ஆண்டில் மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட கால விசா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து குடியேறிய முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கிடைத்து வருகிறது என்றாலும் 2015ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் முஸ்லீம் அல்லாத 25,782 பேர் மட்டுமே இந்த நீண்ட கால விசாவைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் வசித்து வருகின்ற ஹிந்து, சீக்கிய பாகிஸ்தானியர்கள் இந்த வகையான விசாவைப் பெறுவதில் இருந்து வருகின்ற சிவப்பு நாடாத்தனத்தால் விரக்தியடைந்து தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்வதைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் 2020 நவம்பரில் செய்தி வெளியிட்டது.
ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகவே குடியுரிமை சட்டத் திருத்தம் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசாங்கம் பல கொள்கைகளை மிகவும் தீவிரமாக முன்வைத்து வந்துள்ள போதிலும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அக்கறை மிகக் குறைவாகவே அதனிடம் இருந்திருக்கிறது. அதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டாக, நிச்சயமாக வேளாண் சட்டங்களைக் கூறலாம். பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, 2021 நவம்பர் மாதத்தில் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் மோடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
பாஜகவின் அடிப்படை ஹிந்துத்துவா சித்தாந்தத்திற்கு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கும் போது குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது என்பது அவர்களைப் பொறுத்தவரை மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். இரண்டு பாறைகளுக்கு நடுவே வெளிவர இயலாமல் சிக்கியுள்ள மோடி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்திருக்கிறார்.
https://scroll.in/article/1012561/protests-bangladesh-and-north-east-why-modi-hasnt-implemented-caa-two-years-after-it-was-passed நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ் தமிழில்: தா.சந்திரகுரு
புத்தக விமர்சனம் மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதமும், இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சியும்
கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் எழுதியுள்ள இந்தப் ‘பெரிய புத்தகம்’ மின்பதிப்பில் மொத்தம் 639 பக்கங்களைக் கொண்டுள்ளது. மிகக் கடினமான ஆய்வு, நுணுக்கமான ஆவணங்களுக்கு சாட்சிகளாக புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் இருக்கின்றன. இந்தப் புத்தகம் பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற காலத்திலிருந்து இந்திய அரசியல் நடைமுறையில் இருந்து வந்திருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளடக்கி இருக்கிறது. மாநிலத்தில் கடைப்பிடித்த அரசியல் மற்றும் தேர்தல் உத்திகளைத் தேசிய அளவில் முயன்று பார்க்கவும், சர்ச்சைக்குரிய ‘குஜராத் மாடல் வளர்ச்சியை’ தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்குமான தளத்தை உருவாக்கவும் 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் மோடிக்கு வழியேற்படுத்திக் கொடுத்தன.
மூன்று பாகங்களாக உள்ள இந்தப் புத்தகத்தின் முதலாம் பாகத்தில் ஆட்சியை வென்றெடுக்க மோடி கையாண்ட உத்திகளை ஜாஃப்ரெலோட் அலசியிருக்கிறார். மோடியின் ஆவேசமான சொல்லாட்சி, ஆத்திரமூட்டும் சொற்களஞ்சியம், தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தகவல்தொடர்பு பாணி, எவ்வித தடையுமின்றி போட்டியாளர்களை – குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை – பரம்பரை, மேல்தட்டினர், ஊழல் நிறைந்தவர்கள், செயல்திறனற்றவர்கள் என்று விமர்சித்தது போன்றவை 2014, 2019 பொதுத்தேர்தல்களில் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தன. அரசியல் விளையாட்டின் புதிய ஜனரஞ்சகவாதி என்று கருத்துரையாளர்கள் அவரைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினர்.
இந்திராகாந்தி மட்டுமே ஜனரஞ்சகவாதி என்று அழைக்கப்படக்கூடிய ஒரே இந்தியப் பிரதமராக இருந்தார். காங்கிரஸ் கட்சியிடம் இருந்த புகழ்பெற்ற கூட்டணி அமைப்பைத் தகர்த்து, அவர் ஒரு தேசியத் தொகுதியை 1971ஆம் ஆண்டில் உருவாக்கினார். எதிர்ப்பாளர்கள் அவரைப் பாராட்ட, ஆதரவாளர்கள் அவரது கால்களில் விழுந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அமைப்பின் பலத்த ஆதாரமாக இருந்து வந்த பிராந்திய அளவிலான மேல்தட்டினர் அதற்குப் பிறகு பொருத்தமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பலதரப்பட்ட நலன்களுக்கான கூட்டணி என்பதிலிருந்து, தர்பார் என்று சொல்லும் அளவிற்கு கட்சி மாற்றப்பட்டது.
இதேபோன்ற ஒன்றே மோடி குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற போதும் நடந்தது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டர்களைக் கொண்ட ஹிந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ், தலைவர் என்பவர் கூட்டத்திற்கு அடிபணிந்தவராக இருக்க வேண்டும் என்றே நம்பி வந்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே மோடியிடமிருந்த தலைவர் சார்ந்த அரசியலை அந்த அமைப்பு ஏற்றுக் கொண்டது. ஜீன்ஸ் அணிந்த நவீன இளம் பெண்கள், ஆண்களைக் கொண்ட இணை ஆதரவு அமைப்பை மோடி உருவாக்கினார். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த பிறகு இந்தியாவிற்குத் திரும்பி வந்தவர்கள். கட்சியின் வல்லமைமிக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவை நிர்வகித்த அவர்கள் பொதுக்கருத்தில் ஏற்படும் ஊசலாட்டங்களுடன் தொடர்பில் இருந்து வந்தனர். மோடி, அவரது அரசியலின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் அவர்கள் தடை செய்தனர்.பாரம்பரியம் மட்டுமல்லாது நவீனத்துவ உலகையும் சுற்றி வருபவராக இருப்பதால் பிரதமர் வாக்காளர்களைக் கவர்கிறார் என்று ஜாஃப்ரெலோட் கருதுகிறார். உண்மையில் இந்த விவரம் கவனிக்கத்தக்கது. அயோத்தி கோவிலின் துவக்க விழா, லுடியன்ஸ் தில்லியை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற விழாக்களில் மோடி எவ்வளவு எளிதாக விரிவான மதச் சடங்குகளுக்குத் தலைமை தாங்கினார் என்பதை நினைவு கூர்ந்து பாருங்கள். அவர் அதே அளவிற்கு ஸ்மார்ட் போன் துவங்கி சமூக ஊடகங்கள், விண்வெளி, சந்திரன் வரையிலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். சமூக ஊடகங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட முதல் அரசியல்வாதியாக அவரே இருக்கிறார். ஆர்வமுள்ள, ஆனால் அதிருப்தியுடனிருந்த கோபமான இளைஞர்கள், யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று இருபிரிவினரை அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குழுக்களாக அடையாளம் கண்டு அணுகிய முதல் அரசியல்வாதியாகவும் அவரே இருந்தார். தாராளமயமாக்கப்பட்ட இந்தியா வழங்கியிருந்த பலன்கள் தங்களுக்குத் தொடர்ந்து கிடைக்காமல் போனதால் கண்டு கொள்ளப்படாதவர்களாக தங்களை உணர்ந்தவர்களாக அந்த இரு பிரிவினரும் இருந்தனர்.மோடியின் திட்டம் மிகுந்த பேராசை கொண்டது. ஒன்றுபட்ட ஹிந்து தேசம் என்ற அவரது கனவுத் திட்டத்திற்கு சாதிப் பிளவுகள் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றை நடுநிலையாக்க முயன்றார். அவரது அரசியலின் இந்தப் பரிமாணமே ஜனரஞ்சகம் என்ற வில்லில் ‘தேசியவாத ஜனரஞ்சகம்’ என்ற புதியதொரு நாணை ஏற்றியது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். பெரும்பாலும் ஜனரஞ்சகவாதிகள் நிறுவனங்களை ஊழல் நிறைந்தவை, செயல்படாதவை என்று தாக்கி, ஊடகங்கள், குடிமை சமூக அமைப்புகள் போன்ற இடைநிலை நிறுவனங்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டு, நேரடியாக மக்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே அதிகாரத்திற்கு வந்திருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோர், தங்களுக்குச் ‘சொந்தமில்லை’ என்று கருதப்படுகிற சமூகப் பிரிவினருக்கு எதிராக பெரும்பான்மையினரின் கருத்தை அவர்கள் ஒன்று திரட்டுகிறார்கள். மோடி இத்துடன் ஹிந்து தேசத்தை உருவாக்குவது என்ற ஜனரஞ்சகத்திற்கான நான்காவது பரிமாணத்தையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் என்ற கருத்தை ஜாஃப்ரெலோட் முன்வைக்கிறார். அதன் விளைவாக சிறுபான்மையினர் அவர்களுக்கான இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், இனரீதியான ஜனநாயகம் நாட்டில் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.இறுதியாக, மக்கள்நலன் அரசு என்பதையும் மோடி அரசு கைவிட்டிருக்கிறது. ஆய்வறிஞர்கள் அந்த மாற்றை ‘தொழில்முனைவு அரசு’ என்பதாகக் குறிப்பிடுகின்றனர். வேலைக்காக மக்கள் அரசை எதிர்பார்க்கக் கூடாது; பக்கோடா விற்க வேண்டி வந்தாலும், தங்களைத் தாங்களே அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே அதன் சாராம்சம். முதலாவது ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் சமூக உரிமைகளை மக்களுக்கு வழங்குகின்ற பல கொள்கைகளை இயற்றித் தந்தது. தற்போதைய ஆட்சியிலோ கட்டுப்படியாகாத விலையில் இருக்கின்ற எரிவாயு சிலிண்டர்கள் இல்லாமல் எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்குதல், தண்ணீர் பற்றாக்குறையால் பயன்பாட்டில் இல்லாத பொதுக்கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்தல், சில வீடுகளை வழங்குதல் என்று சில சலுகைகள் மட்டுமே ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவையனைத்தும் குடிமக்களுக்கு அவர்களுடைய சமூக உரிமைகளாக வழங்கப்படவில்லை. மாறாக அவை சமூகக் கொள்கையாக அல்லது பிரதமரின் பரிசாக மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏழைகளின் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்ற பெயரிலேயே அவையனைத்தும் நடந்து வருகின்றன.
மொத்தத்தில் அரசியல் விளையாட்டின் விதிகள் அனைத்தையும் மோடி மாற்றி எழுதியிருப்பதாக ஜாஃப்ரெலோட் கூறுகிறார். இந்திய அரசியல் எப்போதுமே தேர்தல் போட்டிகள் மற்றும் நிறுவனங்களால் மையவாத நிலைக்கே தள்ளப்படும் என்றிருந்த நம்பிக்கைக்கு மோடி சவால் விடுத்தார். இந்தியாவின் எதிர்காலம் இனிமேல் கூட்டணி அரசியல் சார்ந்தே உள்ளது என்ற கருதுகோளை மக்களவையில் தனிப்பெரும்பான்மையைப் பெற்ற பாஜகவின் திறன் நிராகரித்தது.
மோடி ஆட்சியைக் கைப்பற்றியது பாஜகவிற்குப் பலன் அளித்ததா என்பது இன்னும் விடை காணப்படாத கேள்வியாகவே உள்ளது; அது குறித்த தெளிவு இன்னும் கிடைக்கவில்லை. 2020ஆம் ஆண்டில் பொதுமுடக்கத்தை அறிவித்த பிறகு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து தங்கள் கிராமங்களை நோக்கி நடக்கத் தொடங்கினர். சுமைகளைத் தலையில் சுமந்து கொண்டு, ரத்தம் வடியும் கால்கள், தண்ணீரின்றி வறண்டு போன தொண்டைகளோடு இருந்ததைத் தவிர ‘ஆத்மநிர்பார் பாரத்’ சேவைக்கான இடைவிடாத உழைப்பில் வேறு எதையும் அவர்களால் காட்ட முடியவில்லை.2021ஆம் ஆண்டின் கோடைக்காலம் மேலும் பல சோகங்களைத் தந்தது ஆக்சிஜன் பற்றாக்குறையால் வாடிய தலைநகரின் தெருக்களில் மக்கள் ஆக்சிஜனுக்காக மூச்சுத் திணறி இறந்தனர்; தகன அறைகளும், புதைப்பதற்கான குழிகளும் பல நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், பல குடும்பங்களால் தங்கள் அன்புக்குரியவருக்கு கண்ணியமான இறுதிச் சடங்கைக்கூட நடத்த முடியவில்லை; சிறு குழந்தைகள் அனாதைகளாகினர். ஒட்டுமொத்த குடும்பங்களும் சீரழிக்கப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு தெருவையும் துயரம் சூழ்ந்து கொண்டிருந்தது. சம்பவ இடத்தில் அரசாங்கத்திற்கான சிறுதடயமும் காணப்படவில்லை. தன்னைக் குறித்த சுய-பிரதிநிதித்துவம் அரசாங்கத்திடம் இருந்த போதிலும், வறுமை, சமத்துவமின்மை, பற்றாக்குறை போன்றவற்றால் லட்சக்கணக்கான இந்தியர்கள் தவிக்க நேர்ந்தது என்று ஜாஃப்ரெலோட் சுட்டிக் காட்டுகிறார். தற்போதைய அரசாங்கத்தால் புலம்பெயர்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பெருத்த ஆரவாரத்துடன் துவக்கி வைக்கப்பட்ட போதிலும், உண்மையில் அந்த தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்றித் தரப்படவில்லை.
அதிகாரத்தின் உச்சமட்டத்தைக் கைப்பற்றி, அதை தனக்கென்று ஏகபோகமாக ஆக்கிக் கொண்டு, புதிய லுடியன்ஸ் தில்லி மேல்தட்டினரின் ஆட்சியைத் துவக்கி வைத்திருக்கும் அரசியல்வாதி ஒருவரின் கதையை ஜாஃப்ரெலோட் நமக்கு இந்தப் புத்தகத்தின் வழியாக கூறுகிறார். அவர் அதை மிகவும் அருமையாகச் செய்திருக்கிறார். சில சமயங்களில் வாசகர் முக்கியமானவற்றைத் தவற விடாத அளவுக்கு அவருடைய ஆய்வு முழுமையானதாக இருக்கிறது. காரணிகள் x, y அல்லது z ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து நம்மால் அடிக்கடி ஆச்சரியப்பட முடிகிறது என்றாலும் இந்த புத்தகம் நல்ல வாசிப்பிற்கானதாக இருக்கிறது. அந்த காரணிகளுக்கு இடையேயான தொடர்பை நாமே எப்போதும் உருவாக்கிக் கொள்ள முடியும்.
இந்த மதிப்பாய்வை முடிப்பதற்கு முன்பாக இரண்டு சிறிய விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ஹிந்தி சொற்களை மொழிபெயர்ப்பதற்கு முன்பாக ஆசிரியர் யாரிடமாவது ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நாற்பத்தி மூன்றாம் பக்கத்தில் முஸ்லீம்களை வேறுமாதிரி காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற முழக்கம் ‘ஹம் பாஞ்ச் ஹமாரே பச்சீஸ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அந்த பச்சீஸ் என்பது ஐம்பது அல்ல, அது இருபத்தைந்து. அறுபதாம் பக்கத்தில் இந்தியர்கள் காலா நாயக் அல்லது கருப்பு ஹீரோவின் பாலிவுட் படத்தை விரும்புகிறார்கள் என்று ஜாஃப்ரெலோட் எழுதுகிறார். சரியான சொல் கல்நாயக். 1993ஆம் ஆண்டு அதே பெயரில் சஞ்சய்தத் வில்லத்தனம் கொண்ட ஹீரோவாக நடித்த திரைப்படம். மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் கரண் தாப்பர் புத்தகத்தின் நூற்றியேழாவது பக்கத்தில் கிரண் தாப்பர் என்று இடம் பெற்றிருக்கிறார்.
இரண்டாவதாக குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான இயக்கம் பற்றி ஜாஃப்ரெலோட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவர் அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை. குடிமை சமூக அமைப்புகள் மீதான அடக்குமுறைகள் இருந்த போதிலும், 2019 டிசம்பர் மத்தியிலிருந்து 2020 பிப்ரவரி தொடக்கம் வரையிலும் யாரும் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வை நாம் கண்டோம். பாரபட்சமான அந்தச் சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரிலும் ஒன்றுகூடி நாடு முழுவதும் ஊர்வலங்களை நடத்தினர். அவர்களிடமிருந்த ஒரே ஆயுதமாக அரசியலமைப்புச் சட்டம் இருந்தது. அரசியலமைப்புச் சட்டமும் அதன் முகப்புரையும் சட்ட ஆவணம் என்பதிலிருந்து அரசியல் ஆவணமாக அப்போது மாறியிருந்தது.2020ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஓராண்டிற்கும் மேலாக நாடு முழுவதிலிருந்து திரண்டு வந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டனர். அவசர அவசரமாக விவசாயத்தை பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக அவர்கள் போராடினர். இவை மோடி இந்தியா குறித்த அதிருப்தியால் தூண்டப்பட்ட இரண்டு நிகழ்வுகள் மட்டுமாகவே இருக்கின்றன.எந்த அளவிற்கு ஒரு தலைவர் வசீகரமானவராக இருந்தாலும், அதனால் எந்தவொரு ஆட்சியும் கேள்விக்குள்ளாகாமல் இருக்கப் போவதில்லை. ஜாஃப்ரெலோட் சுட்டிக்காட்டுவதைப் போல் வசீகரம் என்பது தார்மீகரீதியாக நடுநிலையானது. ஹிந்து தேசியவாதத்தின் ஒருங்கிணைப்பு குறித்த பாடத்தை சமகால இந்தியா நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ‘மதத்தை நம்பிக்கை’யாக அல்லது ‘மதத்தை அரசியலாக’ என்று எத்தனை குடிமக்கள் வேறுபடுத்திப் பார்த்திருக்கிறார்கள் என்பதையும் அது நமக்குச் சொல்லியிருக்கிறது. அதனால்தான் 2019ஆம் ஆண்டில் அறுபத்தியிரண்டு சதவிகித குடிமக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.அரசியல் வரலாறு என்பது அதிகாரத்தின் கதையாக மட்டுமே இருப்பதில்லை. அது அதிகாரத்திற்கு எதிரானதொரு கதையாகவும், மேலாதிக்க அமைப்புகளுக்கிடையிலான போட்டியாகவும் இருக்கிறது. ஒருவேளை கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்டின் மற்றொரு புத்தகத்திற்கான மற்றுமொரு கதையாக அது இருக்கக்கூடும். https://thewire.in/books/christophe-jaffrelot-modis-india-review நன்றி: வயர் இணைய இதழ் தமிழில்: தா.சந்திரகுரு
தனது அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று அறிவித்தார். கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் அவசரமாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் பற்றியே அவர் தன்னுடைய அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சட்டங்களைத் திரும்பப் பெறுவதை அறிவித்த தன்னுடைய உரையில் ‘அவர்கள் [தங்களுடைய] வீடுகள், வயல்வெளிகள் மற்றும் [தங்களுடைய] குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல வேண்டும். நாம் மீண்டும் புதிதாகத் தொடங்குவோம்’ என்று விவசாயிகளிடம் அவர் கூறியிருந்தார். விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட சட்டங்களை எதிர்த்து ஓராண்டாகப் போராடிய விவசாயிகளை எதிர்மறையாகப் பாதிக்கின்ற சட்டங்களை தன்னுடைய அரசாங்கம் இயற்றியதைப் பற்றி எந்தக் கட்டத்திலும் மோடி ஒப்புக் கொண்டிருக்கவில்லை. விவசாயத்தை தனியார்மயமாக்குகின்ற கொள்கைகளை மோடி கைவிடவ் போவதில்லை; மாறாக அவர் வெவ்வேறு தொகுப்புகளின் மூலம் தனியார்மயத்திற்கே திரும்புவார் என்றே தோன்றுகிறது. தன்னுடைய உரையில் ‘எங்களுடைய அரசு விவசாயிகளின் நலனுக்காகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அதைச் செய்யும்’ என்றே அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெற்றியில் மகிழ்ச்சி
ஆனால் ‘விவசாயிகளின் நலனுக்காக’ பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மோடியின் அரசாங்கம் வேலை செய்து வருகிறது என்ற எண்ணம் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. விவசாயிகள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் உணர்வை அறிந்து கொள்வதற்காக, முக்கியமான விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (ஏஐகேஎஸ்) தேசியத் தலைவரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்கேஎம்) தலைவருமான அசோக் தவாலேவிடம் நேர்காணலை நடத்தினேன். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக மோடி அளித்திருக்கும் வாக்குறுதி ‘போதுமானதாக இல்லாமலும், மிகவும் தாமதத்துடனும்’ இருப்பதாக தவாலே கூறினார். வலுவான குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பிற கோரிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றை (வேளாண் சட்டங்களை ரத்து செய்தல்) மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பதால் மோடி அளித்திருக்கும் வாக்குறுதி போதுமானதாக இருக்கவில்லை; ஓராண்டு நீடித்த போராட்டம் ஏற்படுத்திய தனிமைப்படுத்தல், அரசாங்க அடக்குமுறைகள் காரணமாக எழுநூறு விவசாயிகள் தங்கள் உயிர்களை இழக்க நேரிட்ட பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது வாக்குறுதி மிகவும் தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது.
‘கடந்த ஏழு ஆண்டுகால ஆட்சியில் மிகவும் அவமானகரமான முறையில் மோடி இவ்வாறு கீழிறங்கி வந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்’ என்று கூறிய தவாலே ‘முதலாவதாக 2015ஆம் ஆண்டில் நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக ‘2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை’ திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது’ என்றார். இந்திய விவசாயத்தை மிகப்பெரிய பெருநிறுவனங்களிடம் வழங்குவதற்கான திட்டத்தை 2014ஆம் ஆண்டு தான் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே மோடி முன்வைத்து வந்திருக்கிறார். அப்போதிருந்தே அவருடன் போராடி வந்த விவசாயிகள் இன்றைக்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நவம்பர் 19 அன்று வெளியான மோடியின் அறிவிப்பிற்குப் பிறகும் விவசாயிகள் தங்கள் போராட்ட முகாமை விட்டு வெளியேறவில்லை. ‘வேளாண் சட்டங்கள் உண்மையில் [பாராளுமன்றம் மூலம்] ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இருப்பார்கள்’ என்று தவாலே கூறினார். மேலும் ‘விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அவர்கள் அங்கேயே இருப்பார்கள். போரில் பாதி வெற்றியை அடைந்திருப்பது குறித்து நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்த போதிலும் போராட்டத்தின் மற்ற நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் காண வேண்டும் என்ற உறுதியும் விவசாயிகளிடம் இருக்கிறது’ என்றார்.
மோடி ஏன் சரணடைந்தார்
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மோடி முடிவு செய்ததன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக தவாலே கூறினார். இந்தியத் தலைநகரான தில்லி எல்லையில் அமைந்திருக்கும் மூன்று முக்கிய மாநிலங்களில் (பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம்) வரப் போகின்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களுடன் தொடர்புடையதாக முதலாவது காரணம் இருக்கிறது. சமீபத்திய மாதங்களில் ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் போது தனக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதை பாஜக கண்டிருக்கிறது. அந்த இடைத் தேர்தல்களில் பாஜக அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவில்லை. வட இந்தியாவில் தேர்தல் நடந்திருக்கும் அல்லது நடக்கவிருக்கும் ஆறு மாநிலங்கள் தில்லிக்கு அருகாமையில் உள்ள மாநிலங்களாகும். மேலும் தில்லியின் எல்லையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகள் பலரின் சொந்த மாநிலங்களாகவும் அவை இருக்கின்றன. போராட்டங்கள் தொடருமானால் விவசாயிகள், தொழிலாள வர்க்கம் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் தங்களுடைய கட்சி மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று பாஜகவில் உள்ள தலைவர்கள் கருதினர்.
விவசாயிகளின் உண்மையான போராட்டம், உறுதியைக் காட்டிலும் கவனத்தில் கொள்வதற்கு முக்கியமானவை வேறு எதுவுமில்லை என்று கூறிய தவாலே, எடுத்துக்காட்டாக செப்டம்பர் 5 அன்று கிசான் மகாபஞ்சாயத்திற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிட்டார். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற அந்த மகாபஞ்சாயத்தில் விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒன்பது பேர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அமிர்தசரஸ் புறநகர்ப் பகுதியில் 2021 அக்டோபர் 6 அன்று கூடிய விவசாயிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து முழக்கங்களை எழுப்பினர்.
மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்த அந்தக் கூட்டத்தின் தொனி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கவில்லை. அது பாஜக அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்பதையே தெளிவுடன் காட்டியது. விவசாயிகள் போராட்டத்தின் அடிப்படைப் பார்வை மோடியின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவா அரசியல் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானதாக மதச்சார்பற்ற, சோசலிச இந்தியாவிற்காகப் போராடுவதாகவே இருந்தது.
போராட்டத்தின் வேகம் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. செப்டம்பர் 27 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி இந்தியா முழுவதும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்தது. அது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் போது நடைபெற்ற மூன்றாவது வேலைநிறுத்தமாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், நடைபெற்ற மூன்று வேலை நிறுத்தங்களில் மிகவும் வெற்றிகரமானதாக அந்த வேலைநிறுத்தம் அமைந்தது என்று தவாலே கூறினார்.
மத வேறுபாடுகளைப் பயன்படுத்தி விவசாயிகளைப் பிளவுபடுத்துவதில் தோல்வியுற்ற பாஜக அரசுக்கு எதிராக ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 18 அன்று விவசாயிகள் நாடு முழுவதும் ரயில் தடங்களை (ரயில் ரோகோ) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அறிவித்த போதிலும், விவசாயிகள் கிளர்ச்சியின் முதல் ஆண்டு தினமான நவம்பர் 26 வெள்ளிக்கிழமையன்று தில்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் தங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் மற்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
திங்களன்று விவசாயிகளிடம் மோடி சரணடைந்த பிறகு, உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் மிகப்பெரிய கிசான் மகாபஞ்சாயத்தில் ஒன்றுகூடிய விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் போராட்டத்தைத் தொடர்வது என்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். ‘வெற்றி குறித்த மனநிலையும், போராட்டத்தைத் தொடர்வது என்ற உறுதிப்பாடும் அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொண்டது’ என்று தவாலே கூறினார்.
தீர்க்கப்படாதிருக்கின்ற பிரச்சனைகள்
1995 மற்றும் 2018க்கு இடையிலான காலத்தில் நான்கு லட்சம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 2014ஆம் ஆண்டு மோடி பதவியேற்றதில் இருந்து ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தவாலே தெரிவித்தார். அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் விவசாயிகள் சார்பாக தலையீடு போன்றவற்றை நீக்கியது, பருவநிலை பேரழிவு ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றால் இந்தியாவில் உருவாகியுள்ள வேளாண் நெருக்கடியுடன் நேரடியாகத் தொடர்புடையவையாகவே விவசாயிகளின் தற்கொலைகள் இருந்துள்ளன. விவசாயிகள் தேசிய ஆணையத்திற்குத் தலைமை தாங்குமாறு புகழ்பெற்ற அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனை இந்திய அரசாங்கம் 2004ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. 2006வாக்கில் முக்கியமான பரிந்துரைகளின் நீண்ட பட்டியலுடன் அந்த ஆணையம் தயாரித்துக் கொடுத்த ஐந்து முக்கிய அறிக்கைகளில் இருந்த பரிந்துரைகள் எதுவுமே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து, வலுப்படுத்த வேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் ஒன்று. விவசாயிகளின் நிலைமையை அரசாங்கங்களின் வெற்று அலங்கார வார்த்தைகள் சற்றும் மேம்படுத்தவில்லை; விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளதாகவே சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை விவசாயிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விளைபொருளின் விலைக்கான உதவி, கடன் தள்ளுபடி, மின்சார விலையுயர்வைத் திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல், மானிய விலையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். ‘இந்தப் பிரச்சனைகளே விவசாய நெருக்கடி மற்றும் விவசாயிகளின் பெரும் கடன் சுமைக்கு அடிகோலுகின்றன. விவசாயிகளின் தற்கொலை, விவசாய நிலங்களின் விற்பனை போன்ற நெருக்கடிகளுக்கும் அவையே வழிவகுத்துக் கொடுக்கின்றன’ என்கிறார் தவாலே. ‘நமக்கான உணவை விவசாயிகள் பயிரிட்டுத் தர வேண்டுமென்றால், விவசாயிகளுக்குத் தேவையான உணவு அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று தவாலே கூறினார். இது இந்திய விவசாயிகளுக்கான கோரிக்கை முழக்கமாக மட்டும் இருக்கவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள விவசாயிகளின் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இந்திய விவசாயிகள் தொடர்ந்து போராடுவார்கள்.
பல்வேறு காரணங்களுக்காக நரேந்திர மோடியுடன் 2007ஆம் ஆண்டு நடத்திய நேர்காணல் கரண் தாப்பரின் மனதில் நிலைத்து நிற்கின்ற ஆயிரக்கணக்கான நேர்காணல்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த நேர்காணல் இன்னும் முடிவடையாத கதையாகவே தொடர்கிறது. தொடர்ந்து இப்போதும் அது செய்தியாகிக் கொண்டேதான் இருக்கிறது. நேர்காணல் நடந்த நேரத்தில். நேர்காணலுக்கு முன்பாக, அதற்குப் பின்பு என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு பகுதி இங்கே:
நரேந்திர மோடி அரசு என்னைப் பற்றி பெரிதாக நினைத்திருக்கவில்லை என்பது ஒன்றும் ரகசியம் இல்லை. நான் நட்புடன் பழகி வந்த வித்தியாசமான அமைச்சர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது குறித்து எனக்குச் சந்தேகமில்லை என்றாலும் – அருண் ஜேட்லி மிகமுக்கியமான எடுத்துக்காட்டு – நான் அவ்வாறு நன்றாகப் பழகி வந்தவர்களில் பெரும்பாலானோர் மோடி பிரதமரான ஓராண்டிற்குள்ளாகவே என்னைத் தவிர்ப்பதற்கான காரணங்களை, சாக்குப்போக்குகளை கண்டுபிடித்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த போதும், 2014க்குப் பிறகு முதல் ஓராண்டு வரையிலும்கூட எனக்கு நேர்காணலை அளித்து வந்த ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், எம்.வெங்கையா நாயுடு போன்றவர்கள் திடீரென்று தங்கள் கதவுகளை மூடிக் கொள்ளத் துவங்கினர். நேர்காணலுக்கு ஒத்துக் கொண்டு நேர்காணலைப் பதிவு செய்வதற்கான நாளை நிர்ணயம் செய்யும் அளவிற்குச் சென்றிருந்த நிர்மலா சீதாராமன் போன்ற சிலரும் கடைசி நேரத்தில் விளக்கம் எதுவும் சொல்லாமலேயே அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டனர்.
பாஜக செய்தித் தொடர்பாளர்கள் என்னுடைய தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புகளை நிராகரிக்கத் தொடங்கியபோது, நான் ஒரு தனிமனிதன் என்பது முதலில் எனக்குத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வேறு வேலைகளில் அவர்கள் மூழ்கியிருப்பதாகவே நான் கருதினேன். இருப்பினும் மீண்டும் மீண்டும் அது தொடர்ந்த போது, சாம்பித் பத்ராவிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டேன். என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கும் முன்பாக மெல்லிய குரலில், தன்னுடைய சங்கடத்தை வெளிப்படுத்துகின்ற விதத்தில், என்னிடம் ஒரு ரகசியத்தைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் கேட்டார். அவர் கேட்ட உத்தரவாதத்தை அளித்த போது, அனைத்து பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கும் நான் நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அடுத்து அமைச்சர்கள்… நேர்காணலுக்கு எப்போதும் தயாராக இருந்தவர்கள், சவாலான உரையாடலை அனுபவித்தவர்கள் இப்போது என்னுடைய அழைப்புகளை ஏற்க மறுக்கின்ற தொலைபேசி எண்களாக மாறி விட்டனர். அவர்களுடைய செயலாளர்களிடமும் ‘மன்னிக்கவும். அவர் பிஸியாக இருக்கிறார்’ என்ற ஒரேயொரு பதில்தான் எஞ்சியிருந்தது
பிரகாஷ் ஜவடேகர் மட்டுமே எனது நிகழ்ச்சியில் தோன்றுவதற்கு என்னால் ஒப்புக்கொள்ள வைக்க முடிந்த ஒருவராக இருந்தார். இல்லை என்று மறுப்பதை அல்லது பதில் சொல்லாமல் தவிர்ப்பதை அவருடைய கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், அமைச்சரவைச் சகாக்கள் ஆகியோர் வழக்கமாகக் கொண்ட பிறகும் ஜவடேகர் அதைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்து வந்தார். அவரிடமும் சில நாட்களுக்குப் பிறகு மனமாற்றம் ஏற்பட்டது. எனக்குப் போன் செய்த அவர் ‘உங்களுக்கு நேர்காணல் தரக் கூடாது என்று எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது… என்ன நடந்தது கரண்? ’ என்று கேட்டார்.
முதன்முறையாக அப்போதுதான், எனக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கிறது என்று என்னிடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டது. ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ஜவடேகர் சத்தியம் எதையும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலால் அவர் ஆச்சரியமடைந்து போயிருந்ததாகவே எனக்குத் தோன்றியது. சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அறிவுரை சொல்வதற்காக தொலைபேசியில் என்னை அழைத்த அவர் ‘தலைவரைச் சந்தித்து பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
எனக்கு நன்கு தெரியும் என்பதால், அருண் ஜெட்லிக்குத்தான் என்னுடைய முதல் அழைப்பை விடுத்தேன். நிதியமைச்சகத்தில் அவரைச் சந்திக்கச் சென்ற போது எந்தப் பிரச்சனையும் இல்லை என்று என்னிடம் உறுதியளித்த அவர், நான் கற்பனை செய்து கொள்வதாகக் கூறியதுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.
புறக்கணிப்பு அதற்குப் பிறகும் தொடர்ந்ததால் அருண் மௌனமாக இருந்துவிட்டார் என்று நினைத்த நான் மீண்டும் அவரை – இந்த முறை தொலைபேசியில் – தொடர்பு கொண்டேன். பிரச்சனை இல்லை என்று மறுப்பதை அவர் அப்போது நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக பிரச்சனை பெரிதாகப் போகிறது என்றார். நான் ‘ஆனால் அருண்… பிரச்சனை பெரிதாகப் போகிறது என்றால், ஊதுவதற்கு யாரோ இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானால் பிரச்சனையும் இருக்கிறது’ என்றேன். அருண் வெறுமனே சிரித்துக் கொண்டார். பிரச்சனை எதுவாக இருந்தாலும் அருணால் சமாளிக்க முடியாத அளவிற்கு அது பெரிதாக இருப்பதை உணர்ந்தேன். எனக்கு உதவுதற்கான அவருடைய வாய்ப்பை அல்லது எனக்கு உதவி செய்வதற்கான அவரது விருப்பத்தை நான் இன்னும் சந்தேகிக்கவில்லை என்றாலும் அவ்வாறு செய்யக் கூடிய திறன் அவரிடம் இல்லை என்பதை நான் நம்ப வேண்டியதாயிற்று.
பிரச்சனை குறித்து என்னிடம் இருந்த சந்தேகத்தை பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தீர்த்து வைத்தார். அவரிடம் 2017 ஜனவரி தொடக்கத்தில் நேர்காணல் தருமாறு கேட்டேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டது என்னைப் பொறுத்தவரை ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த நேர்காணல் ஜனவரி 16 அன்று பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட பிறகு நான் அவருக்கு நன்றி தெரிவித்த வேளையில் அவர் கூறிய பதில் என்னையும் – என்னுடைய தயாரிப்பாளர் அரவிந்த் குமாரையும் திகைக்க வைத்தது.
கொஞ்சம் சீரியஸாக சிரித்துக் கொண்டே ‘நீங்கள் எனக்கு நன்றி சொல்லலாம்… ஆனாலும் என்னுடனிருப்பவர்கள் [எனக்கு நன்றி] சொல்ல மாட்டார்கள். நான் இந்த நேர்காணலை ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நேர்காணலைக் கொடுத்தது குறித்து அவர்கள் நிச்சயம் சந்தோஷம் கொள்ளவில்லை. ஆனாலும் மக்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்’ என்றார்.
அப்போதுதான் நான் அமித்ஷாவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்தேன். தொடர்ச்சியாக பல கடிதங்களை எழுதி, பலமுறை தொலைபேசியில் அழைத்த பிறகு 2017ஆம் ஆண்டு ஹோலிக்கு மறுநாள் அவர் என்னைச் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டார். அந்தச் சந்திப்பு அக்பர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. நீண்ட நேரம் அந்தச் சந்திப்பு இருக்கவில்லை என்றாலும் என்னுடைய கருத்தைச் சொல்லவும் அவர் அதற்குப் பதிலளிப்பதற்கும் போதுமானதாகவே இருந்தது.
நான் அவரிடம் முதலில் பாஜக செய்தித் தொடர்பாளர்களும், அதற்குப் பின்னர் பாஜக அமைச்சர்களும் கடந்த ஓராண்டாக என்னுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுத்து விட்டதால் அவரைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினேன். செய்தித் தொடர்பாளர்கள் சிலர் அவ்வாறு கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ரகசியமாக என்னிடம் தெரிவித்திருப்பதாகவும், சமீபத்தில் அதையே மூத்த அமைச்சர்களும் கூறியிருப்பதாகவும் அவரிடம் சொன்னேன். நான் ஜவடேகர், அருண் ஜெட்லியுடன் பேசியதையும் அவரிடம் தெரிவித்தேன். இப்போது என்ன பிரச்சனை என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கடைசியாக அவரிடம் வந்திருக்கிறேன் என்றும், அறியாமல் யாரையாவது வருத்தப்பட வைத்திருந்தாலோ அல்லது அவ்வாறு ஏதாவது சொல்லியிருந்தாலோ மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் கூறி விட்டு, நான் என்ன செய்து விட்டேன் என்று அவரிடம் கேட்டேன்.
நான் சொன்னதை அமித்ஷா மிகவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அவரிடம் அதை விளக்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு மேல் நான் எடுத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அவருடைய வீட்டின் பெரிய வரவேற்பறையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். தோட்டத்தைப் பார்க்கும் வகையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார்; அவர் பக்கத்தில் இருந்த சோபாவில் நான் இருந்தேன். அந்த அறையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.
‘கரண்ஜி’ என்று நட்புடன் அழைத்த அவரது குரலில் குறைந்தபட்சம் தொனியில் அல்லது என்னை அழைத்தவிதத்தில் அதற்கு நேர்மாறான தடயம் எதுவும் இருக்கவில்லை. நிலைமையை நான் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிய அவர், என்னுடைய நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்குமாறு கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ எந்தவொரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்திக் கூறினார்.
இறுதியாக அந்த விஷயத்தை மேலும் விசாரித்த பிறகு இருபத்தி நான்கு மணி நேரத்தில் என்னை அழைப்பதாக அவர் உறுதியளித்தார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அது தீர்ந்து விட்டது என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் அங்கிருந்து நான் வெளியேறினேன். ஆனால் நான் மிகவும் தவறுதலாகவே அதைப் புரிந்து கொண்டிருந்தேன். அமித் ஷா என்னைத் திரும்ப அழைக்கவே இல்லை. அடுத்த ஆறு வாரங்களில் பல கடிதங்கள், ஐம்பது முறை தொலைபேசி மூலம் செய்திகளை அனுப்பியிருப்பேன் என்றாலும் அவரிடமிருந்து எனக்கு எந்தவொரு பதிலும் வந்து சேரவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
அமித் ஷா பதிலளிக்கத் தவறியது என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது. மிகவும் சாதாரணமாகப் பேசக் கூடிய அல்லது தவறான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற மனிதர் என்று அவரை நினைக்கவில்லை. ஏதோவொன்று அல்லது யாரோ அவரைத் தடுத்துள்ளனர். அப்போதுதான் உண்மையான பிரச்சனை நரேந்திர மோடியாக இருக்கலாம் என்று நான் கருத ஆரம்பித்தேன்.
எந்த அளவிற்கு அதைப் பற்றி அதிகமாக சிந்தித்தேனோ, அந்த அளவிற்கு அதை நான் உறுதியாக உணரவும் செய்தேன். என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை – குறைந்த பட்சம் அந்த நேரத்தில் இல்லை – ஆனாலும் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் திடீரென்று என்னுடைய அழைப்பை ஏற்க மறுத்தது, அமைச்சர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நேர்காணல்களை ரத்து செய்தது, ஜவடேகர், ஜெட்லியின் கருத்துக்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றுடன் இறுதியாக இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் மீண்டும் அழைக்கிறேன் என்று உறுதியளித்த அமித் ஷாவின் திடீர் மௌனம் ஆகியவற்றை வேறு எவ்வாறு விளக்குவது?
2007ஆம் ஆண்டு, குஜராத்தில் இரண்டாவது முறையாக மோடி முதலமைச்சராக பதவியேற்பதற்காக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த என்னுடைய நேர்காணலின் போது மோடி வெறுமனே மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளிநடப்பு செய்திருந்தார். 2007இல் மோடியுடன் நடத்தப்பட்ட அந்த நேர்காணல்தான் இப்போது பிரச்சனையாக இருக்கிறதா? ஒருவேளை அவ்வாறு இருக்கலாம் என்றாலும் அதற்கான காரணம் இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்குள்ளே எழுந்தது. கோத்ரா வன்முறை, அதைத் தொடர்ந்து அப்பாவி முஸ்லீம்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 2002 மார்ச் மாதம் நான் எழுதிய ‘ஞாயிறு உணர்வுகள்’ (சன்டே சென்டிமெண்ட்ஸ்) என்ற பத்தியில் அதற்கான ஆரம்பம் இருக்கலாம் என்பதை உணர எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.
எங்களுக்கிடையில் நேர்மையான உரையாடல் இருந்தால் அந்தச் சிக்கலைக் களைந்து விடலாம் என்பதால் மோடியிடம் நேரடியாகப் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவு செய்தேன். அது சாத்தியமில்லை என்பதை ஓரளவிற்கு உணர்ந்திருந்தாலும், அதுபோன்ற முயற்சி மிகச்சரியானதாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றியது. எனவே அவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோரைத் தொடர்பு கொண்டேன். தோவலைச் சந்திப்பதற்கு முன்பாக நான் மிஸ்ராவிடம் பேச வேண்டியிருந்தது. அந்த இரண்டு உரையாடல்களும் ஒரே நாளில் அதாவது 2017 மே 1 அன்று நிகழ்ந்தன.
நிருபேந்திர மிஸ்ரா அலுவலகத்திற்கு நான் அனுப்பியிருந்த செய்திக்கு பதிலளிக்கும் வகையில் அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மோடியின் அமைச்சர்கள், அவரது கட்சியினர் என்னை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக மோடியைச் சந்திக்க நான் விரும்புவதாகக் கூறினேன். மேலும் அறியாமல் பிரதமரை வருத்தப்படுத்தும் வகையில் ஏதாவது செய்திருந்தால் மன்னிப்பு கேட்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவரிடம் தெரிவித்தேன் என்றாலும் முதலில் அதற்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2007இல் செய்த அந்த நேர்காணல்தான் காரணம் என்று என்னால் நம்ப முடியவில்லை என்பதையும் அவரிடம் கூறினேன்.
மோடியிடம் பேசிவிட்டு என்னிடம் திரும்பி வருவதாக மிஸ்ரா தெரிவித்தார். சவுத் பிளாக்கில் இருந்த அஜித் தோவலை அன்றைய தினம் மாலையில் அழைத்து அதே செய்தியை திரும்பவும் கூறினேன். அவர் நிருபேந்திர மிஸ்ரா என்னிடம் திரும்ப வரும் வரை காத்திருப்பதாகக் கூறினார். மிஸ்ராவால் விஷயங்களைச் சீர்செய்ய முடியும் என்றே அவர் நம்பினார். ஆனாலும் அவரால் முடியவில்லை என்றால், நரேந்திர மோடியுடன் தான் நேரடியாகப் பேசுவதாக தோவல் கூறினார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, நிருபேந்திர மிஸ்ரா என்னை அழைத்தார். மோடியுடன் பேசியதாகவும், பிரதமரைச் சந்திப்பதில் எந்தப் பலனும் இல்லை என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் அப்போது கூறினார். மோடி குறித்து எனக்கு பாரபட்சமான கருத்துகள் இருப்பதாகவும், எனது அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் பிரதமர் கருதுவதாக கூறிய மிஸ்ரா. அதனால்தான் அமித் ஷா என்னைத் திரும்ப அழைக்கவில்லை என்றும் கூறினார். ஒருவேளை மோடியிடம் பேசிய அமித் ஷாவும் அதேபோன்ற பதிலைப் பெற்றிருந்திருக்கலாம்.
இனிமேல் சாத்தியமில்லை என்று தெரிந்த போதிலும் தோவாலை அழைத்தேன். மிஸ்ரா கூறியதை அவரிடம் சொன்னேன். மௌனமாக நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். ‘விஷயங்கள் தெளிவடையும் என்று நம்புவோம், ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்’ என்பதே அவருடைய ஒரே பதிலாக இருந்தது. ஆக இப்போது அந்தப் பிரச்சனைக்கான காரணம் எனக்குத் தெரிந்து விட்டது. நரேந்திர மோடியை நான் புண்படுத்தியிருக்கிறேன்; அதன் விளைவுதான் அது. ஆனாலும் அவரைப் புண்படுத்திய அந்தக் குற்றம் எப்போது நடந்தது என்பதுதான் எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது 2007இல் நடந்த நேர்காணலினாலா அல்லது 2002 மார்ச் மாதம் வெளியான எனது ‘ஞாயிற்றுக்கிழமை உணர்வுகள்’ என்ற பத்தியினாலா? பல ஆண்டுகளாக அது கட்டமைக்கப்பட்டு வந்திருப்பதாகலாம் என்றும், அதன் தொடக்கம் அந்தப் பத்தியுடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என்றும் நான் சந்தேகித்தேன். பிரச்சனை ஆரம்பமானது என்று நான் கருதுகின்ற இடம் சரியாக இருக்குமென்றால், அந்த நேரத்தில் நான் எழுதியதைத் திரும்பச் சொல்வதுதான் நியாயமாகும். அந்தக் கட்டுரைக்கு ‘போய்விடு மிஸ்டர் மோடி, இப்போதே போய்விடு’ என்று நான் தலைப்பு வைத்திருந்தேன். அதில் நான் கூறியிருந்தது இதுதான்:
‘நரேந்திர மோடியை எனக்கு நன்கு தெரியும் என்றே நினைக்கிறேன். அண்மைக்காலம் வரையிலும் நான் அவரை மதித்தே வந்திருக்கிறேன். அவருடைய ஆலோசனைக்கு நன்றியுள்ளவனாக இருந்திருக்கிறேன். 2000ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் தலைவருடனான (சர்சங்சாலக்) நேர்காணலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அந்த அமைப்பைப் புரிந்து கொள்வதற்கு மோடி எனக்கு உதவியதற்கு நன்றிக்கடனுடன் இருந்துள்ளேன். அந்த அமைப்பின் பலவீனங்களை அறிந்து கொள்ளும் வகையில் அவர் என்னுடைய கண்களைத் திறந்து விட்டார். அதன் மோசமான இரண்டாம்தர செயல்பாடுகளை மிகச்சரியான பாரபட்சமற்ற தன்மையுடன் அவர் எனக்கு உணர்த்திக் காட்டினார்.
ஆர்எஸ்எஸ் இப்போது பொருத்தப்பாட்டை இழந்திருப்பது பற்றி சுதர்சன்-ஜியிடம் கேள்வி கேளுங்கள். முன்பு போல அது சிறப்புடன் இருக்கவில்லை. இன்று அனைத்து விஷயங்களிலும் அது இரண்டம்தரத்துடனே இருக்கிறது’ என்று அந்த விவாதத்தை அவர் என்னிடம் ஆரம்பித்தார்.
அவரிடம் ‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’’ என்று கேட்டேன். அதுவே கடைசியாக நான் கேட்கின்ற வார்த்தையாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக மோடி ஓர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர். அந்த அமைப்பின் பாதுகாவலராகவே நான் அவரை எதிர்பார்த்தேனே அல்லாது விமர்சகராக அல்ல.
‘ஆர்எஸ்எஸ் இருபதாயிரம் பள்ளிகளையும், ஐம்பது பேப்பர்களையும் நடத்தி வருகிறது. ஆனால் அவை எதுவும் தேசிய அளவிலான தரத்தில் இல்லை. சமூகப் பணிக்கான அர்ப்பணிப்புடன் ஆர்எஸ்எஸ் உள்ளது என்றாலும் சாய்பாபா, ராதா சோமி பிரிவு, பாண்டுரங் அதவாலேயின் ஸ்வாத்யாயா குழு போன்றவற்றிற்கே அந்தத் துறையில் நல்ல பெயர் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அந்தக் கணக்கில் வராது’ என்றார்.
நான் திகைத்துப் போனேன். மோடி விமர்சித்ததால் மட்டுமே அவ்வாறு இருக்கவில்லை. ஆர்எஸ்எஸ்ஸிற்குள்ளிருந்து வந்த தாக்குதலை அவர் முன்வைத்ததாலேயே நான் திகைத்துப் போனேன். பாரம்பரியமான, தொடர்ந்து வைக்கப்படுகின்ற இடது [சாரி] விமர்சனமாக அது இருக்கவில்லை. மாறாக வலதுசாரிகளின் பெருத்த ஏமாற்றமாக அது இருந்தது. புதிதாக, வித்தியாசமாக இருந்தது.
‘ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் அவர் கலந்து கொண்ட வருகைப்பதிவு குறித்து அவரிடம் கேளுங்கள்’ என்று மோடி தொடர்ந்தார். என்னால் அவருடைய உற்சாகத்தை உணர முடிந்தது. ஒரு பத்திரிக்கையாளரைப் போலவே அவர் நடந்து கொண்டார். அது எனக்குப் பிடித்திருந்தது. மிக முக்கியமாக, நான் அவருடைய நேர்மையைப் பாராட்டினேன். அவருடைய ஆலோசனைக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன்.
‘கேரளாவைப் பாருங்கள். அங்கே மிகப்பெரிய ஆர்எஸ்எஸ் கிளை உள்ளது ஆனால் அதன் தாக்கம் அங்கே மிகக் குறைவாகவே இருக்கிறது. கம்யூனிஸ்டுகள், சர்ச் மற்றும் சுதேசி நிதி அல்லாமல் வெளிநாட்டு நிதியை சார்ந்து இருக்கும் பொருளாதாரம் என்று ஆர்எஸ்எஸ் விரும்பாத அனைத்தும் அங்கே செழித்து வளர்ந்திருக்கின்றன. அந்த அளவுக்கு அங்கே ஆர்எஸ்எஸ் பொருத்தமற்றதாக இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் சுதர்சன்-ஜியிடம் கேளுங்கள். என்னைப் போன்றவர்களிடம் உள்ள முக்கியமான பிரச்சனைகளைத் தொடுவீர்கள் என்றால் அது அருமையான நேர்காணலாக இருக்கும்’ என்றார்.
அவருடைய ஆலோசனையைப் பின்பற்ற நினைத்தேன் என்றாலும் மிகவும் முட்டாள்தனமாக என்னுடைய வழக்கமான முறையிலேயே நான் அந்த நேர்காணலைத் தொடங்கினேன். ஹிந்து ராஷ்டிரத்திற்கான ஆர்எஸ்எஸ்சின் உறுதிப்பாடு, அரசியலமைப்புச் சட்டம், பாஜகவின் கூட்டணிகள், வாஜ்பாய் அரசின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் பேசினோம். மோடியின் கேள்விகளை எழுப்புவதற்கான நேரம் இல்லாமல் போனது.
பலரும் அந்த நேர்காணலைப் பாராட்டினாலும், பத்திரிகைகள் பாராட்டிய போதிலும், அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதை நன்கு அறிந்தவனாகவே நான் இருந்தேன். அது வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். அது அசலாகக்கூட இருந்திருக்கலாம். ஒருவேளை மோடியின் கேள்விகளை ஒருங்கிணைக்கும் வழியை நான் கண்டுபிடித்திருந்தால் அது அவ்வாறாக இருந்திருக்கலாம்.
‘அந்த நேரத்தில் கேள்வி கேட்கின்ற வலிமை, சவால் விடக்கூடிய தைரியம், அரசியல் இடைவெளிகளுக்கு அப்பாலும் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரம், பெருந்தன்மை கொண்ட மனிதராகவே நான் நரேந்திர மோடியைக் கருதினேன். அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியும் என்று என்னால் நடிக்க முடியாது. அவரை நிச்சயமாக நன்கு அறிந்திருக்கவில்லை என்றாலும் அது எனக்குத் தேவையில்லை என்றே நான் உணர்ந்தேன். காண்பதை மட்டுமே நான் விரும்பினேன் – உண்மையில் ரசித்தேன். என்னைப் பொறுத்தவரை அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக நான் தவறாகப் புரிந்து கொண்டதாகவே தோன்றுகிறது. உண்மையில் அவ்வாறு சொல்வது சரியில்லை. அது நேர்மையுடன் இருக்கவில்லை. ‘தோன்றுகிறது’ என்ற வார்த்தை தவறானது என்ற சந்தேகம் அல்லது தயக்கத்தைக் குறிக்கிறது. ‘தவறு’ என்ற வார்த்தை தவிர்ப்பதை உணர்த்துவதாக இருக்கிறது. உண்மையில் நான் மிகப்பெரிய தவறு செய்திருந்தேன்.
குஜராத்தில் நடந்த வகுப்புவாத படுகொலைகளை நரேந்திர மோடி கையாண்ட விதத்தில் இருந்து வெளிப்பட்ட அவரது பிம்பம் முற்றிலும் வேறாக இருந்தது. குறுகிய மனப்பான்மை கொண்டவராக, மதவெறி கொண்டவராக, கீழ்த்தரமான மனநிலை கொண்டவராக, தன்னுடைய வரம்புகளின் கைதியாக அந்த ‘மற்ற’ மோடி இருந்தார்.
ராணுவத்தை முன்னரே அழைக்காதற்கு அவரது அனுபவமின்மை, ஒருவேளை அவரது முட்டாள்தனமான தனிப்பட்ட பெருமையே காரணம் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்வேன். நிலைமையை இன்னும் திறம்பட வித்தியாசமாகக் கையாள முடியும் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கலாம், கடினத்தன்மையைக் காட்டுகின்ற அதே வேளையில் புரிதலையும் காட்டலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அனைத்திற்கும் மேலாக, உங்களைச் சார்ந்தவர்களை, உங்கள் நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்களை ஒடுக்குவது என்பது எளிதான காரியமல்ல. துயரத்தை ஏற்படுத்துகின்ற போதிலும், அதுபோன்ற தவறுகள் மனித இயல்பு என்பதால் அவை அடிக்கடி நிகழ்கின்றன.
ஆனால் ‘ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை இருக்கும்’ என்று கூறிய போது, கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் குறிப்பிட்டு ஈசன் ஜாஃப்ரியின் கொலையை விளக்க முயன்ற போது, அகமதாபாத்தில் இறந்தவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு தொகையை கோத்ராவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான காரணத்தைக் கண்டறிந்த போது, அவர் தன்னை தார்மீகமற்ற மனிதராகவே வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு முஸ்லீமைக் காட்டிலும் கூடுதலாக ஒரு ஹிந்துவின் உயிரை மதிப்பது அல்லது படுகொலைகளைப் பற்றி பேசும் போது அவை தவிர்க்க முடியாதவை என்று பேசுவது போன்ற பேச்சுகள் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கவில்லை – உண்மையில் அவை வெறுக்கத்தக்க பேச்சுகளே…
ஒரு தலைவர் என்றே நான் அவரைப் பற்றி நினைத்திருந்தேன். குறுகிய வரம்புகளுக்கு அப்பால் உயரக் கூடிய, எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்ளக் கூடிய, பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெறுவதற்கான, பிறருக்கு வழிகாட்ட, பின்பற்ற வைக்கின்ற ஆற்றலும், அறிவும் அவரிடம் இருந்தது. ஆனால் கடந்த வாரம் நான் கண்ட அந்த மனிதர் தவறான எண்ணம், குறுகிய பழிவாங்கும் மனப்பான்மை, இரட்டை நிலை, புன்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகின்ற உயிரினமாக மட்டுமே இருந்தார். முதலாமவர் முதலமைச்சராக இருக்கத் தகுதியானவர். இரண்டாமவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்குத் தகுதியானவராகவே இருக்கிறார்’.
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியவற்றை இன்று வாசித்த போது,நடந்திருப்பவற்றின் வெளிச்சத்தில் அந்தக் கட்டுரை என் மீது குற்றத்தை எவ்வாறு ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் காண முடிந்தது. அப்பட்டமாகவும் கடுமையாகவும் நான் அவரை விமர்சித்திருந்தேன். மிகவும் காயப்படுத்தக்கூடிய இடத்தில் நான் மிகத் தெளிவாக அவரை அடித்திருந்தேன்.
அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2007ஆம் ஆண்டில் நரேந்திர மோடியுடனான எனது நேர்காணல் நடந்தது. என் நினைவுகள் சரியாக இருக்குமென்றால், அந்த நேர்காணலுக்காக அருண் ஜெட்லியிடம் நான் உதவி கேட்டிருந்தேன். அருண் ஜெட்லியின் தலையீடுதான் குஜராத் முதல்வரை நேர்காணலுக்கு ஒப்புக்கொள்ள வைத்தது என்றே நம்புகிறேன். அக்டோபர் மதியம் அகமதாபாத்தில் நேர்காணலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிகாலை விமானத்தில் நான் அங்கே சென்றேன். பல ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டிருந்த பெனாசிர் பூட்டோ கராச்சிக்குத் திரும்பிய மறுநாள் காலை அது. பெனாசிரின் ஊர்வலத்தைச் சிதறடித்த பயங்கரமான குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். விமானம் அகமதாபாத்தில் தரையிறங்கியபோது அன்றைய நாளில் திட்டமிடப்பட்டிருந்த மோடியுடனான நேர்காணலைக் காட்டிலும் கராச்சி குண்டுவெடிப்பு நிகழ்வுதான் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. காரில் ஏறியவுடன் எனது தொலைபேசி ஒலித்தது. அப்போது இன்னும் விமான நிலைய எல்லைக்குள்தான் நாங்கள் இருந்தோம். ‘கரண்-ஜி, வந்து சேர்ந்து விட்டீர்களா?’ என்னை வரவேற்கும் வகையில் நரேந்திர மோடியின் குரல் ஒலித்தது. ஊடகங்களைக் கையாளுவதில் அவர் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதற்கான முதல் அறிகுறி அது. ‘நான்கு மணிக்கு நமது நேர்காணல், ஆனாலும் கொஞ்சம் சீக்கிரமே வாருங்கள், பேசிக் கொண்டிருக்கலாம்’ என்றார். அவர் பேசிய விதம் 2002இல் நான் எழுதிய பத்தியை நரேந்திர மோடி படித்திருக்கவில்லை அல்லது மறந்து விட்டார் என்பதையே உறுதிப்படுத்தியது. என்னை அன்புடன் வரவேற்று நான் அவருடைய பழைய நண்பர் என்பதைப் போலவே என்னிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். அன்ரைய நேர்காணலில் இருந்த எந்தவொரு விஷயத்தையும் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. மாறாக எங்களுக்குள் பரிகாசம் செய்து கொண்டு சிரித்தோம், கேலி செய்தோம்.
அந்த உரையாடல்கள் என்னை நிராயுதபாணியாக்குவதற்காகவா என்று எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் இத்தகைய தந்திரத்தையே புத்திசாலி அரசியல்வாதிகள் கடைப்பிடிப்பார்கள் என்றாலும் என்னிடமிருந்த அச்சங்கள் விரைவில் மறைந்து விட்டன. அரை மணி நேரம் கழித்து கேமராக்கள் முன்பு அமர்ந்தோம். வெளிர் மஞ்சள் நிற குர்தா அணிந்திருந்த மோடியின் தலைமுடி அப்போதுதான் வெட்டப்பட்டிருந்தது.
எனது முதல் கேள்விகள் 2002ஆம் ஆண்டைப் பற்றி இருந்தன. முதலில் அந்த சங்கடமான விஷயத்தை முடித்து விட்டு மற்ற விஷயங்களுக்குப் பின்னர் செல்வதே என்னுடைய நோக்கமாக இருந்தது. அந்த விஷயத்தை எழுப்பாமல் விட்டிருந்திருந்தால் அது அவருக்கு உடந்தையாக இருந்ததாக அல்லது கோழைத்தனம் என்பதாகவே தோன்றியிருக்கும். அதே சமயம் என்னிடம் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான விருப்பமும் இருக்கவில்லை. எனவே முதலிலேயே அவற்றை எழுப்பி அதிலிருந்து விரைவாக வெளியேறுவது என்று முடிவு செய்திருந்தேன்.
‘மிஸ்டர் மோடி, உங்களைப் பற்றி பேச ஆரம்பிக்கலாம்’ என்று ஆரம்பித்தேன். ‘குஜராத்தின் முதல்வராக இருந்த ஆறு ஆண்டுகளில், குஜராத்தை சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலமாக ராஜீவ் காந்தி அறக்கட்டளை அறிவித்துள்ளது. இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நீங்கள் மிகவும் திறமையான முதல்வர் என்று இந்தியா டுடே அறிவித்திருக்கிறது. அப்படியிருந்தும், மக்கள் உங்கள் முகத்திற்கு நேராக இன்னும் உங்களை மாபெரும் கொலைகாரன் என்றே அழைக்கிறார்கள். நீங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்தப் பிம்பம் குறித்து உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா?’
அவர் சற்றும் கலங்கியதாகத் தெரியவில்லை. அவருடைய முகத்தில் எந்த உணர்ச்சியையும் என்னால் காண முடியவில்லை. அவருடைய முகபாவத்தில்கூட எந்தவொரு மாற்றமும் இல்லை. எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் அது அமைதியாகவே இருந்தது. மேலும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆங்கிலத்தை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியிருந்தது. அவரது ஆங்கில மொழிப் புலமை இப்போது கிட்டத்தட்ட சரளமாக இருந்தாலும், 2007இல் அதுபோன்று இருக்கவில்லை.
எங்கள் உரையாடல் இவ்வாறு இருந்தது:
‘மக்கள்’ என்று சொல்வது முறையல்ல என்றே நினைக்கிறேன். அதுபோன்ற வார்த்தைகளில் பேசுபவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இருக்கிறார்கள். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும் என்றே நான் எப்போதும் சொல்வேன்’.
‘அதை இரண்டு மூன்று பேரின் சதி என்று சொல்கிறீர்களா?’
‘நான் அப்படிச் சொல்லவில்லை’.
‘ஆனால் இரண்டு மூன்று பேர் என்று சொல்கிறீர்கள்’.
‘அதுதான் என்னிடம் உள்ள தகவல். அது மக்களுடைய குரல் அல்ல.’
இரண்டு மூன்று பேர்தான் அப்படிப் பேசியதாக முதலமைச்சர் சொன்னது சரியில்லை என்பதே உண்மை. இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட நீதிமன்றத்தில் துல்லியமாக இது குறித்து நீதிபதிகள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர். எனவே அது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினேன்.
‘குஜராத் அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம் என்று 2003 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் கூறியதை நான் உங்களுக்குச் சுட்டிக்காட்டலாமா? 2004 ஏப்ரலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதரவற்ற குழந்தைகளும், அப்பாவிப் பெண்களும் எரிக்கப்படும்போது மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் நவீன காலத்து நீரோவைப் போல் இருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் கூறினார். உங்களிடம் உச்சநீதிமன்றம் பிரச்சனை கொண்டிருப்பது போல் தெரிகிறது’ என்றேன்.
‘கரண், என்னிடம் ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கிறது. தயவு செய்து உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பாருங்கள். நீங்கள் சொல்வது ஏதாவது அந்தத் தீர்ப்பில் இருக்கிறதா? எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால் சந்தோஷமாக இருப்பேன்’.
‘தீர்ப்பில் எதுவும் இல்லை. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. அது ஒரு கருத்து மட்டுமே’.
‘தீர்ப்பில் அவ்வாறு இருந்தால், அதுகுறித்து உங்களுக்குப் பதில் அளிப்பதில் நிச்சயம் சந்தோஷம் அடைவேன்.’
‘அப்படியென்றால் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செய்த விமர்சனம் முக்கியமில்லை என்று சொல்கிறீர்களா?’
‘உங்களுக்கு என்னுடைய எளிய வேண்டுகோள். தயவுசெய்து நீதிமன்றத் தீர்ப்புக்குச் செல்லுங்கள். நீங்கள் மேற்கோள் காட்டிய வாக்கியத்தை அதில் கண்டுபிடியுங்கள். இந்திய மக்கள் அதை அறிந்து கொண்டால் நான் நிச்சயம் சந்தோஷப்படுவேன்’.
‘தலைமை நீதிபதியின் வெளிப்படையான கருத்து மட்டும் அவ்வாறு இருக்கவில்லை. 2004 ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்றம் 4,600க்கும் அதிகமான வழக்குகளில் 2,100-க்கும் மேற்பட்ட – நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான – வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. குஜராத்தில் மோடியின் ஆட்சி நீதியுடன் நடக்கவில்லை என்று கருதியதாலேயே அவர்கள் அவ்வாறு செய்தனர்’.
‘நான் சந்தோஷமாக இருக்கிறேன். அந்தத் தீர்ப்பின் காரணமாக மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறேன். ஏனென்றால் நீதிமன்றம்தான் இறுதியில் முடிவை எடுக்கும்’. நேர்காணலில் இருந்து முறையாக நீதிமன்றத் தீர்ப்பில் எழுதப்பட்டதற்கும், வெறுமனே நீதிமன்றத்தில் பேசப்படுகின்ற கருத்துகளுக்கும் இடையே உள்ள சட்டப்பூர்வமான வேறுபாட்டை மோடி என்னிடம் சுட்டிக்காட்டினார். இருப்பினும், தேர்தலைச் சந்திக்கும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அது நிச்சயம் உறுதியான தற்காப்பாக இருக்கப் போவதில்லை. தலைமை நீதிபதி உங்களை விமர்சித்திருப்பார் என்றால், அந்த விமர்சனம் தீர்ப்பில் எழுத்து மூலமாகச் செய்யப்பட்டதா அல்லது வாய்மொழியாகச் செய்யப்பட்டதா என்பது இங்கே முக்கியமாக இருக்காது. மிக முக்கியமாக அனைத்து பத்திரிகைகளும் தங்கள் முதல் பக்கங்களில் அந்த நீதிமன்ற விமர்சனத்தைக் கொண்டு சென்றிருந்தன. எனவே மோடி இரண்டாவது முறை தனது மறுதேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்யப் போகும்போது தன் மீதான பிம்பம் குறித்து அவர் எதிர்கொள்ளப் போகும் பிரச்சனையின் மையமாகவே அந்த விமர்சனம் இருந்தது. வார்த்தை ஜாலங்களால் அதை இல்லாமல் செய்து விட முடியாது. அதைத்தான் அவரிடம் தெரிவிக்க முயன்றேன்.
உண்மையாகச் சொல்வதென்றால் நான் மேற்கோள் காட்டியிருந்த நவீன காலத்து நீரோ என்ற நீதிமன்றத்தின் கருத்து அந்தக் கால செய்தித்தாள்களில் வெளிவந்தவாறு நீதிமன்றத்தில் வாய்மொழியாக மட்டுமே பேசப்படவில்லை என்ற உண்மை அந்த நேரத்தில் எனக்குத் தெரியாது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எழுதப்பட்ட ஒரு பகுதியாகவே அது இருந்தது என்ற விவரங்களை மோடியுடனான அந்த மூன்று நிமிட நேர்காணலைப் பார்த்த தீஸ்டா செடல்வாட் என்னிடம் தெரிவித்தார்.
ஜாஹிரா ஹபிபுல்லா ஹெச். ஷேக் எதிர் குஜராத் மாநிலம் வழக்கில், 2004 ஏப்ரல் 12 அன்று நீதிபதிகள் துரைசாமி ராஜு மற்றும் அரிஜித் பசாயத் அமர்வு வழங்கிய தீர்ப்பில் ‘பெஸ்ட் பேக்கரி மற்றும் அப்பாவி குழந்தைகளும், ஆதரவற்ற பெண்களும் எரிந்து கொண்டிருந்த போது நவீன காலத்து ’நீரோக்கள்’ வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தனர். குற்றம் இழைத்த குற்றவாளிகளை எவ்வாறு காப்பாற்றலாம் அல்லது பாதுகாக்கலாம் என்று அவர்கள் ஒருவேளை ஆலோசித்துக் கொண்டிருந்திருக்கலாம்’ என்றே எழுதப்பட்டிருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் நான் கூறியதை விட தீர்ப்பில் எழுதப்பட்டிருந்தது மிகவும் மோசமாக இருந்தது. ‘குற்றம் செய்தவர்களை எவ்வாறு காப்பாற்றுவது அல்லது பாதுகாப்பது என்பது குறித்து மோடி ஆலோசித்திருக்கலாம்’ என்றும் தீர்ப்பின் எழுத்துப் பதிப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மோடியை நேர்காணல் செய்த போது அதைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கவில்லை என்பதால் என்னுடைய கேள்வியில் நான் குறிப்பிட்டது அந்த தீர்ப்பில் இருந்ததை விட பலவீனமாகவே இருந்தது. ஆனால் அவ்வாறு நீர்த்திருந்த அந்தக் கேள்வியே அவரைத் தூண்டுவதற்குப் போதுமானதாக இருந்தது.
‘என்ன பிரச்சனை என்று சொல்கிறேன்’ என்று நான் அந்த நேர்காணலைத் தொடர்ந்தேன். ‘2002-ம் ஆண்டு குஜராத் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும், கோத்ரா என்ற பேய் இன்னும் உங்களைத் துரத்துகிறது. அந்தப் பேயை அடக்க நீங்கள் ஏன் இன்னும் எதுவும் செய்யவில்லை?’
‘அந்தப் பணியை கரண் தாப்பர் போன்ற ஊடகவியலாளர்களுக்கே நான் வழங்குகிறேன். அவர்கள் அனுபவித்து மகிழட்டும்’.
‘நான் உங்களுக்கு ஏதாவது பரிந்துரை செய்யலாமா?’
‘அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை’.
‘நடந்த கொலைகளுக்கு வருந்துவதாக உங்களால் ஏன் சொல்ல முடியவில்லை? முஸ்லீம்களைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் இன்னும் கூடுதலாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை?’
‘சொல்ல வேண்டிய அனைத்தையும் அந்த நேரத்திலேயே சொல்லி விட்டேன். என்னுடைய அறிக்கைகளை நீங்கள் கண்டுபிடித்துப் படித்துப் பாருங்கள்’.
‘இப்போது மீண்டும் சொல்லுங்களேன்’.
‘நீங்கள் பேச விரும்புகின்றவற்றை 2007இல் நான் இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை’.
‘ஆனால் அதை மீண்டும் சொல்லாமல், அந்தச் செய்தியை மக்கள் மீண்டும் கேட்க விடாமல், குஜராத்தின் நலனுக்கு முரணானதொரு பிம்பம் தொடர்வதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள். அதை மாற்றுவது உங்கள் கைகளில்தான் உள்ளது’.
இந்த உரையாடல் நீடித்த அந்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நரேந்திர மோடியின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் வெளிப்படாமலே இருந்தது. ஆனால் அவர் மகிழ்ச்சியுடன் இல்லை என்பதுவும் தெரிந்தது. உணர்வுகளைக் காட்டாமல் அவரது கண்கள் இறுக்கமாக இருந்தன. ஒருவேளை தன்னுடைய முகத்தை அமைதியாக, ஒரேபோன்று வைத்திருக்க அவர் முயற்சி செய்து கொண்டிருந்திருக்கலாம். ஆனாலும் அதற்குப் பிறகு அவரது பொறுமை அல்லது அவரது உறுதி முறிந்தது. போதும் போதும் என்று சொல்லி அந்த நேர்காணலை அவர் முடித்துக் கொண்டார். ‘நான் ஓய்வெடுக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே ஒலிவாங்கியைக் கழற்ற ஆரம்பித்தார்.
உண்மையிலேயே அவருக்குத் தாகம் இருப்பதாகவே முதலில் நான் நினைத்தேன். அவரது பக்கத்தில் இருந்த சிறிய மேஜையில் ஒரு குவளையில் தண்ணீர் இருப்பதை அவருக்குச் சுட்டிக்காட்டினேன். இருப்பினும் அது ஒரு சாக்கு என்பதையும், நிச்சயமாக அந்த நேர்காணல் முடிந்தது என்பதையும் உணர எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.
அப்போதும் கூட மோடி கோபத்தை அல்லது கேவலப்பட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அடுத்த நாள் சிஎன்என் – ஐபிஎன் (CNN-IBN) மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய அந்த மூன்று நிமிட டேப்பில் ‘அப்னி தோஸ்தி பானி ரஹே. பாஸ். நான் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் இங்கு வந்தீர்கள். நான் உங்களுக்கு நன்றியுடன் இருக்கிறேன். இந்த நேர்காணலை என்னால் செய்ய முடியாது… ஆப்கே ஐடியாஸ் ஹைன், ஆப் போல்தே ரஹியே, ஆப் கர்தே ரஹியே…தேகோ மே தோஸ்தானா சம்பந்த் பனானா சஹ்தா ஹூன் (அவை உங்கள் கருத்துக்கள், நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள்… நான் உங்களுடன் நட்புறவைப் பேணவே விரும்புகிறேன்)’ என்று மோடி கூறியவை திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தன.
உண்மையில் அந்த நிகழ்வில் வித்தியாசமானதாக இருந்தது என்னவென்றால், அதற்குப் பிறகும் நான் அவருடன் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் செலவழித்திருப்பேன். அவர் தேநீர், இனிப்புகள், குஜராத்தி டோக்லா போன்றவற்றை எனக்கு கொடுத்தார். அந்த கடினமான சூழ்நிலையில் அவரது விருந்தோம்பல் விதிவிலக்காகவே இருந்தது.
நேர்காணலைத் தொடர்வதற்கு அவரைச் சம்மதிக்க வைப்பதற்காக நான் அந்த நேரத்தைச் செலவிட்டேன். நேர்காணலை மீண்டும் செய்ய நான் முன்வந்தேன். 2002ஆம் ஆண்டு பற்றிய கேள்விகளை இறுதியில் வைக்கிறேன் என்று அவருக்கு உறுதியளித்தேன். நேர்காணலில் வேறு பல விஷயங்களை எழுப்பவிருப்பதாகக் கூறினேன். தொடக்கத்திலேயே அந்த விஷயத்திலிருந்து வெளியேறி விடுவது நல்லது என்பதாலும், கோத்ரா, முஸ்லீம் கொலைகளைத் தவிர்ப்பது இருவருக்குமே தவறாக இருந்திருக்கும் என்பதாலேயே அதிலிருந்து நேர்காணலைத் தொடங்கியதாகவும் நான் அவரிடம் கூறினேன்.
ஆனால் அந்த தர்க்கம் எதுவும் நரேந்திர மோடியிடம் வேலை செய்யவில்லை. ‘நேர்காணலை அந்த மூன்று நிமிடங்களிலேயே முடித்து விட்டால், மறுநாள் தொலைக்காட்சி சேனல் அதைத் திரும்பத் திரும்பக் காண்பிக்கும்’ என்று அவரிடம் சொன்னேன். ‘அது செய்தியாக மாறிவிடும். அநேகமாக அது ஒவ்வொரு செய்தித் தொகுப்பிலும் இடம்பெறும். மாறாக முழு நேர்காணலையும் செய்து கொடுத்தால், அது ஒரு முறை மட்டுமே ஒளிபரப்பப்படும். கூடுதலாக மீண்டும் ஒரு முறை ஒளிபரப்பப்பட்டு, பின்னர் அது அநேகமாக என்றென்றைக்கும் மறந்து போகும்’ என்றேன். ஆனால் அதுவும் அவரிடம் வேலை செய்யவில்லை.
தன்னுடைய மனநிலை மாறி விட்டது என்று மோடி சொல்லிக் கொண்டே இருந்தார். வேறொரு முறை நேர்காணலை நடத்தித் தருவதாகக் கூறிய அவர் நாம் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதை அந்த சமயத்தில் திரும்பத் திரும்பச் சொன்னார். அவர் முன்பு சொன்ன ‘தோஸ்தி பானி ரஹே’ மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லப்பட்டது.
ஒரு மணி நேரம் ஆன பிறகு, ‘நான் கிளம்ப வேண்டும் இல்லையென்றால் தில்லிக்குச் செல்லும் விமானத்தைத் தவறவிட்டு விடுவேன்’ என்றேன். அவரிடம் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்தச் சேனல் மோடியின் நேர்காணலை ஒளிபரப்பியது. உடனடியாக அது தலைப்புச் செய்தியாக மாறியது. நான் முன்னர் கூறியபடியே ஒவ்வொரு செய்தித் தொகுப்பிலும் அது இடம் பிடித்திருந்தது. நேர்காணலில் இருந்து மோடி வெளிநடப்பு செய்தது மிகப் பெரிய செய்தியாகிப் போனது. குஜராத் பிரச்சாரத்திற்கு நடுவே அது நடந்ததால், காங்கிரஸ் கட்சி மகிழ்ந்து போனது.
திங்கள்கிழமை மதியம் மோடி என்னை அழைத்தார். ‘என் தோளில் துப்பாக்கியை வைத்து நீங்கள் சுட்டிருக்கிறீர்கள்’ என்றார். இதைத்தான் நான் ஏற்கனவே கணித்திருந்தேன். வெளிநடப்பு செய்வதற்குப் பதிலாக அவர் நேர்காணலை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும் என்பதை அன்றைய தினமே நான் உணர்ந்திருந்தேன். மோடி சிரித்தார். அவர் அப்போது கூறியதை என்னால் மறக்கவே முடியாது.
‘தம்பி கரண், நான் உன்னை நேசிக்கிறேன். தில்லிக்கு வரும் போது நாம் இருவரும் ஒன்றாகச் சாப்பிடலாம்’ என்றார்.
உண்மையில் அவை வெறுமனே புத்திசாலித்தனமான பிரிவுபச்சார வார்த்தைகளாகவே இருந்தன. அதன் பிறகு நான் மோடியைச் சந்திக்கவே இல்லை. நாங்கள் பேசிக் கொள்ளவுமில்லை. எனவே சேர்ந்து சாப்பிடுவது குறித்து எந்தக் கேள்வியும் எழவில்லை.
இருப்பினும் அந்த நேர்காணலுக்குப் பிறகு அந்த விஷயம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பாஜகவுடனான எனது உறவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது மிகவும் முக்கியமானது. கட்சியின் மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் அந்தக் கதையை தனிப்பட்ட முறையில் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினர். அவர்களிடம் அதுபற்றி சொல்லி மகிழ்ந்தேன் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும். மிக முக்கியமாக அதற்குப் பிறகு அவர்கள் யாரும் நேர்காணல்களை வழங்குவதைத் தள்ளிப் போடப்படவில்லை அல்லது நேர்காணலுக்கு ஒப்புக் கொள்ளத் தயங்கவில்லை.
2007 முதல் 2015 வரை – ஏன் 2016இன் தொடக்கம் வரை அப்படித்தான் இருந்தது. நரேந்திர மோடியின் ஆட்சியின் முதல் ஆண்டு அல்லது பதினெட்டு மாதங்கள் வரையிலும்கூட என் மீதான பாஜகவின் அணுகுமுறை மாறவில்லை. எனது நிகழ்ச்சிகளில் தோன்றுவதற்கு அல்லது நேர்காணல்களை வழங்குவதற்கு கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், அமைச்சர்கள் எப்போதும் ஒப்புக் கொண்டனர். மோடியுடனான அந்த நேர்காணலே நடக்கவில்லை அல்லது மறக்கப்பட்டது என்பது போலவே இருந்தது. ஏனெனில் 2014க்குள் அதற்கு ஏழு வயதாகியிருந்தது.
அதனாலேயே அந்தத் ‘தீண்டாமை’ காலகட்டம் தொடங்கியபோது அந்த நேர்காணல்தான் அதற்கான காரணம் என்று ஏற்றுக் கொள்ள முதலில் விரும்பவில்லை. அது உண்மைதான் என்பதை உணர்ந்து கொள்ள உண்மையில் எனக்குச் சிறிது காலம் ஆனது. அதுகுறித்து எழுத்தாளரும், அரசியல்வாதியுமான பவன் வர்மா 2017 அக்டோபர் 18 அன்று எனக்கு ஆதாரம் அளித்தார். அவர் சொன்னது நிருபேந்திர மிஸ்ரா என்னிடம் ஏற்படுத்திய உணர்வை உறுதிப்படுத்தியது. பவன் சொன்ன அந்தக் கதை ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருந்தது. எனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த பவனின் பார்வை நரேந்திர மோடி புகைப்படத்தின் மீது விழுந்தது. நான் நேர்காணல் கண்டிருந்த முன்னாள் பிரதமர்கள் குழுவில் அந்தப் படமும் பிடித்திருந்தது. இருப்பினும் மோடியின் அந்தப் படம் தொலைக்காட்சித் திரையில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது, தன்னுடைய ஒலிவாங்கியைக் கழற்றி அந்த நேர்காணலை முடிக்கத் தொடங்கும் துல்லியமான தருணத்துடன் அது இருந்தது. திரையில் தெரிந்த CNN-IBN என்ற தலைப்பு அந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதில் ‘இந்த நேர்காணலைச் செய்ய முடியாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
‘அந்த நேர்காணல் குறித்து பிரசாந்த் கிஷோர் என்னிடம் என்ன சொன்னார் என்று தெரியுமா?’ என்று திடீரென்று பவன் என்னிடம் கேட்டார். ‘2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு மோடியைத் தயார்படுத்திய போது அவரை முப்பது முறை அந்த வீடியோவைப் பார்க்க வைத்தேன்’ என்று தன்னிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாகத் தெரிவித்த பவன் கடினமான கேள்விகள் அல்லது மிகவும் சங்கடமான மோசமான தருணங்களை எவ்வாறு கையாள்வது என்பதை மோடிக்கு கற்றுக் கொடுக்க பிரசாந்த் கிஷோரின் குழு அந்த நேர்காணலையே பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பிரசாந்த் கிஷோருடனான தனது உரையாடலின் கூடுதல் விவரங்களை பவன் என்னிடம் சொன்ன போது கூடுதல் ஆச்சரியம் அளிப்பதாகவே அது இருந்தது. நேர்காணல் முடிந்த பிறகு வேண்டுமென்றே ஒரு மணி நேரம் என்னை அங்கே காக்க வைத்திருந்ததாகவும், அதன் மூலம் என் மீது எந்தவொரு மோசமான உணர்வும் மோடிக்கு இல்லை என்று நம்பி நான் அவரது வீட்டை விட்டு வெளியேறுவேன் என்றும் பிரசாந்திடம் மோடி கூறியிருந்தார். தேநீர், இனிப்புகள், தோக்லா என்று அனைத்துமே என்னை நிராயுதபாணியாக்கும் உத்தியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கின்றன. மோடி என்னிடம் மிகவும் நட்புடனே இருந்தார் என்றும், நேர்காணலின் முடிவில் எந்தவித வருத்தமும் அவரிடம் இருக்கவில்லை என்றும் நான் பவனிடம் கூறியபோது, அது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று பவன் கூறினார். அது நன்கு தெரிந்தே மோடியால் கடைப்பிடிக்கப்பட்ட உத்தி.
‘இன்னும் வேறு ஏதாவது உங்களுக்குத் தெரிய வேண்டுமா?’ என்று கேட்ட பவன் ‘பிரசாந்திடம் மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் பழிவாங்குவேன் என்றும் கூறியிருக்கிறார். அதை இரண்டு மூன்று முறையாவது பிரசாந்த் திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னார். அதுவொன்றும் அப்போதைக்கு மோடி கூறிய கருத்தாக இருக்கவில்லை. அதுதான் அவரது நோக்கம். உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் என்றே பிரசாந்த் உறுதியாக நம்பினார்’ என்று மேலும் கூறினார்.
பவனை நம்பாமல் இருப்பதற்கு என்னிடம் எந்தக் காரணமும் இருக்கவில்லை. என்னைத் தவறாக வழிநடத்துவதாலோ அல்லது உண்மையைப் பூசி மெழுகுவதாலோ எதுவும் அவருக்குக் கிடைக்கப் போவதில்லை. மிக முக்கியமாக அவர் கூறியது 2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பாஜக என்னை நடத்திய விதத்தை விளக்குவதாக இருந்தது. அதனாலேயே கட்சியின் செய்தித் தொடர்பாளர்களை எனது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியது, என்னுடைய நேர்காணல்களை அமைச்சர்கள் நிராகரிக்கத் தொடங்கியது, இறுதியில் அமித் ஷா ஆரம்பத்தில் கொடுத்த உறுதிமொழிக்குப் பிறகு, திரும்ப என்னை அழைக்கவோ அல்லது எனது அழைப்புகளை ஏற்றுக் கொள்ளவோ தவறிவிட்டது போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. எனவேதான் நிருபேந்திர மிஸ்ரா பேசிய போது, என்னைச் சந்தித்து பிரச்சனைகளைத் தீர்க்க மோடி மறுத்திருக்கிறார்.
2007ஆம் ஆண்டு நேர்காணலின் போது மோடி வெளிநடப்பு செய்தது ஏன்? – கரண் தாப்பர் எழுதி ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘சாத்தானின் வழக்குறைஞர்: சொல்லப்படாத கதை’ (டெவில்ஸ் அட்வகேட்: தி அன்டோல்ட் ஸ்டோரி) என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.
https://thewire.in/books/narendra-modi-karan-thapar-interview நன்றி: வயர் இணைய இதழ் தமிழில்: தா.சந்திரகுரு