அல்-ரிஃபா
கர்நாடகாவில் உள்ள பண்டார்கர் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து கொண்டு நுழைய முடியாது என்று கூறப்பட்ட போது தான் உணர்ந்ததை பத்தொன்பது வயது மாணவி அல்-ரிஃபா விவரித்திருக்கிறார்.
கர்நாடகா குண்டபுராவில் உள்ள பண்டார்கர்ஸ் கல்லூரி மாணவிகள்
கடந்த வியாழன் அன்று (2022 பிப்ரவரி 03) குண்டபுராவில் உள்ள எங்களுடைய பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நானும் எனது நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டோம். கல்லூரிப் பணியாளர் ஒருவர் நாங்கள் அணிந்துள்ள ஹிஜாப்களை கழற்ற வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் கல்லூரிக்குள் நாங்கள் அனுமதிக்கப்படுவோம் என்று அவர் எங்களிடம் கூறினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்காமல் நாங்கள் கல்லூரிக்குள்ளே நுழைந்தோம்.
அதையடுத்து எங்கள் கல்லூரி கண்காணிப்பாளர் எங்களைத் தடுத்து நிறுத்தினார். அவரும் எங்களுடைய ஹிஜாபைக் கழற்றுமாறு உத்தரவிட்டார். ஆனாலும் எங்கள் வகுப்பறை நோக்கி நாங்கள் நடந்தோம். வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே நாங்கள் விரும்பியது. துப்பட்டாவிற்குப் பொருத்தமான ஸ்கார்ஃப் தலையில் அணிந்து வரலாம் என்று எங்களுடைய கல்லூரி நாட்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், நாங்கள் வகுப்பிற்கு வந்த போது எங்களில் ஒரு சிலரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சில மாணவர்களுக்கு முந்தைய நாள் இரவிலேயே ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்த தகவல் எங்களுக்குத் தெரிவிக்கப்படாததால், வகுப்பிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்கப்பட்டோம்.
போடப்பட்ட தடை
ஒரு மணி நேரம் கடந்தது. கல்லூரிக்குள் இப்போது மதம் சார்ந்த எந்த வகை ஆடைகளும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கல்லூரி முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்குப் பிறகு, ஹிஜாப் அணிந்திருந்த எனது தோழியும், நானும் துறைத் தலைவரைச் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். எங்கள் ஹிஜாப்களைக் கழற்றுமாறு துறைத்தலைவர் சொன்னார். அந்தச் சூழ்நிலையில் தானும் ஆதரவற்ற நிலையிலேயே இருப்பதாகவும், இந்தப் பிரச்சனையில் தங்கள் தரப்பிலிருந்து எதுவும் செய்ய முடியாது என்றும் துறைத் தலைவர் எங்களிடம் கூறினார். நாங்கள் விரும்பினால் இது குறித்து முதல்வரிடம் நாங்கள் பேசலாம் என்றார்.
அதனால் நாங்கள் கல்லூரி முதல்வரிடம் சென்றோம். கல்லூரிக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தனக்கு கடிதம் வந்துள்ளதாக கூறிய கல்லூரி முதல்வர் கல்லூரி வளாகத்திற்குள் அனைத்து மத ஆடைகளையும் தடை செய்ய தாங்கள் விரும்புவதாக எங்களிடம் கூறினார். அந்தக் கடிதத்தை எங்களிடம் காட்டுங்கள் என்று கேட்டபோது, அவர் அது அரசு உத்தரவு என்று கூறினார். ஆனாலும் அவர் அந்த உத்தரவை எங்களிடம் காட்டவே இல்லை.
அது அரசு உத்தரவு என்றால், மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளின் நிலை என்ன? ஒருசில கல்லூரிகளில் மட்டுமே மதம் சார்ந்த ஆடைகளுக்கு இதுபோன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் அவரிடம் இதைப் பற்றி வெளிப்படையாகவே கேட்டேன். பதிலுக்குத் திரும்பப் பேசுகின்ற பழக்கம் எங்களிடம் இருக்கிறது என்று கூறிய அவர் எங்களை அங்கிருந்து தொலைந்து போகுமாறு சொன்னார். அதற்குப் பின்னர் நாங்கள் அவரது அலுவலகத்திலிருந்து வெளியேறினோம்.
அதைத் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தொடர்பாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. உடனே காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய விரும்புகின்ற மாணவிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார். மீண்டும் அப்போதும் முதல்வர் தான் உயர் அதிகாரிகளின் அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் எங்களிடம் கூறினார். வீட்டிற்குச் சென்று, என்ன செய்வது என்பதைப் பற்றி பெற்றோர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள பெரியவர்களிடம் பேசுமாறு எங்களுக்குப் பரிந்துரைத்த அவர் வளாகத்தில் போராட்டம் எதையும் நாங்கள் நடத்தக் கூடாது என்றார். காவல்துறையின் பாதுகாப்புடன் பஸ் நிறுத்தத்திற்கு எங்களை அனுப்பி வைத்தனர். அங்கிருந்து நாங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம்.
மறுநாள் கல்லூரிக்கு வந்த போது கல்லூரி வாசல் மூடி வைக்கப்பட்டிருந்தது. வெளியிலிருந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனாலும் எங்களை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. மாணவர்கள் சிலரும் எங்களுடன் சேர்ந்து எங்களுக்கு ஆதரவாக நின்றனர். அரை மணி நேரம் கழித்து, இரண்டு மாணவிகள், நான்கு மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி முதல்வரிடம் பேசுவதற்காக உள்ளே சென்றனர். அந்த மாணவர்களிடம் பேசிய முதல்வர் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்த பிறகும் அந்தப் பெற்றோர்களைச் சந்திக்கவே இல்லை.
அவ்வளவு நேரமும் நாங்கள் வெளியே கல்லூரி வாசலிலேயே காத்திருந்தோம். முதல்வர் வெளியே வந்து மீண்டும் ‘தான் உதவியற்றவர், அதிகாரிகளிடம் நீங்கள் செல்லலாம்’ என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் வியாழக்கிழமையிலிருந்து ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சில மாணவர்களும் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வரத் தொடங்கியிருந்தனர். காவித்துண்டுடன் வந்த அவர்களும் கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் ஹிஜாப் அணிவதைத் தடுப்பதற்கு அவர்களிடமிருந்த தீர்வு அதுதான். ஆனால் அது சரியல்ல. பல ஆண்டுகளாக ஹிஜாப் நாங்கள் அணிந்து கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஹிஜாப் அணிந்த எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் திடீரென கல்லூரி வளாகத்திற்கு இப்போது காவித்துண்டை அணிந்து வந்திருந்தனர்.
வியாழனன்று காவல்துறையினர் வந்து, கல்லூரிக்குள் நுழைய வேண்டுமானால், காவித்துண்டுகளைக் கழற்ற வேண்டுமென்று சொன்ன போது அவர்கள் அதை உடனடியாகச் செய்தார்கள். ஆனால் ஹிஜாபைக் கழற்றுவது எங்களைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதானது அல்ல. தாங்கள் விரும்புவதை அந்த மாணவர்கள் அணிந்து கொள்வதில் எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களுடைய ஹிஜாபைக் கழற்றச் சொல்லாதீர்கள். அது இல்லாமல் எங்களை நாங்கள் முழுமையாக உணர்வதில்லை.
எனக்கு பத்தொன்பது வயது ஆகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் இதை அணிந்து வருபவளாகவே இருந்திருக்கிறேன். நான் இந்தக் கல்லூரியில் ஆறு மாதங்களாகப் படித்து வருகிறேன். ஹிஜாப் அணிவது இதுவரையிலும் இங்கே ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. நாட்டில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைப் பற்றி நான் சமூக ஊடகங்களில் வாசித்திருக்கிறேன் என்றாலும் இப்போதுதான் என் வாழ்நாளில் அதை முதன்முறையாக நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு முஸ்லீம் என்று, வித்தியாசமான உடை அணிபவள் என்று அன்று உணர வைக்கப்பட்டேன். இதற்கு முன்பாக நான் இதுபோன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்த்ததே இல்லை.
வீட்டில் இருந்து எனக்கு கிடைத்த ஆதரவு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு மத்தியிலும் அவர்கள் என்னைத் தொடர்ந்து கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் என்பதே அவர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவாகும். வெள்ளிக்கிழமையன்று எனது தந்தை என்னுடன் கல்லூரிக்கு வந்திருந்தார்.
கல்லூரிப் படிப்பு, ஹிஜாப் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கல்லூரி எங்களைக் கட்டாயப்படுத்துகிறது. சமீபத்தில் இதேபோன்ற சம்பவம் உடுப்பி புகுமுக கல்லூரியில் நடந்திருந்தாலும், அதுபோன்று எங்கள் கல்லூரியில் நடக்கும் என்பதை நான் உண்மையில் எதிர்பார்த்திருக்கவே இல்லை.
காவல்துறையுடன் மாணவர்கள் காவித்துண்டு அணிந்திருப்பது மிகவும் பயங்கரமாக இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் இஸ்லாமியப் பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றார்கள். அவர்களால் கல்லூரிக்குத் தனியாகச் செல்ல முடியாது. பாதுகாப்பிற்கு ஒருவர் இருக்க வேண்டும். ஆசிரியர்களோ கல்லூரி நிர்வாகமோ எங்களுக்கு ஆதரவாக இல்லை. அவர்கள் எங்களுடன் நின்றால், நாங்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருப்போம். ஆனால் இந்தப் பிரச்சனையில் தாங்களும் ஆதரவற்றவர்களாக இருப்பதாகவே அவர்களும் நினைக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனையால் எங்கள் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களால் சரியாகச் சாப்பிட முடிவதில்லை. நான் மிகவும் மோசமாய் உணர்கிறேன். என்னுடைய உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியாது. இந்தச் சிறுவயதிலேயே இதுபோன்ற கேவலமான சூழ்நிலையை நான் எதிர்கொள்ள வேண்டியதாகி இருக்கிறது.
இருப்பினும், இவையனைத்தும் எனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தவே செய்திருக்கிறது. நிச்சயம் நான் ஹிஜாபைக் கழற்ற மாட்டேன். ஒன்றும் ஆகவில்லை என்றால் இங்கே படிப்பதை நிறுத்தக்கூட நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் நான் இங்கிருந்து அப்படியே விட்டு விட்டுச் செல்ல மாட்டேன். நிச்சயம் நான் மல்லாடுவேன், போராடுவேன்.
உமங் போதரிடம் கர்நாடகா குண்டபுராவில் உள்ள பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டுத் துறை மாணவி அல்-ரிஃபா கூறியது.
https://scroll.in/article/1016683/i-was-made-to-realise-i-am-a-muslim-a-student-shares-her-account-of-the-udupi-college-hijab-ban
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.