ஒரு கோப்பை தேநீரும் உலக அரசியலும்
தோழர் சற்று அமைதி கொள்ளுங்கள்
ஒரு கோப்பை தேநீர் முடிவதற்குள்
நாம் உலக அரசியலை அலசியாக வேண்டும்
தெர்மல் ஸ்கேனர்கள் வருவதற்குள்
இவ்விடம் விட்டு நாம் அகன்று விடுவது நல்லது
தொற்று எதில் தான் இல்லை கூறுங்கள் ?
ஜார்ஜ் ப்ளாய்ட் மறக்கப்பட்டார்
முழங்கால் தொற்று
அமெரிக்காவை உலுக்கிவிட்டது
சாத்தான் குளத்தில் காவல் நிலையத்தில்
பூட்ஸ் கால்களின் தொற்று
கொரோனா காலத்தில் மிக மிக மலிவாக கிடைப்பது
மனித உயிர்கள் தானே
எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்கள்
புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்
எதிரியின் பொருட்களை புறக்கணிப்போம்
முன்பே ஒப்பந்தம் போடப்பட்டவையை மட்டும் மறந்து விடுவோம்
நான்காவது கட்ட இறப்பு விகிதம் இன்னும் குறையவில்லை
இரயில் தண்டவாளங்களில் யாரும்
தப்பித் தவறியும் தலைவைத்துப் படுப்பதில்லை
அதற்குத்தான்
உடல்களைத்தாங்கும் வலுவான புடவைகளும்
கொச்சக்கயிறுகளும் இருக்கின்றன
கிருமிகள் தெளிக்கப்பட்ட சாக்கடைகள்
காணக்கிடைக்கின்றன அதிசயமாக
வாழ்க பல்லாண்டு
நடுவீதியில் சினிமா போஸ்டரை தின்னும் பசுக்களை
இப்பொழுதெல்லாம் பார்க்க முடிவதேயில்லை
கொரோனோவைப்பற்றி விழிப்புணர்வு வந்து விட்டது மக்களுக்கு
அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில் என்று புரிந்து கொண்டார்கள்
ஆனால் விதியின் விளையாட்டுத்தான் நமது தேசத்தை
ஊஞ்சல் போல ஆட்டிக்கொண்டிருக்கிறது
அடுத்த தெருவில் ஒரு இருபத்தி நான்கு வயது இளைஞன்
தன் பிறந்த நாளன்று தூக்கில் தொங்கிவிட்டான்
மனச்சோர்வு தோன்
இந்த தேசத்தின் ஆகப்பெரிய தொற்று தோழர்
தேநீர் முடிந்து விட்டது
கிளம்பலாம் தானே தோழர்
பெரியம்மாக்களின் கதை
விக்கிகொள்ளும் போது
சரியாக பெரியம்மா
ஞாபத்திற்கு வந்துவிடுவாள்
வலிக்காமல் உச்சந்தலையில் தட்டிவிட்டு
அடுக்குப்பானைக்குள்ளயிருந்து
அஞ்சுரூபாயை எடுத்தது நீ தான
என்று அதிர்ச்சியளிப்பாள்
நிற்காத விக்கலும் சட்டென்று நின்று போக
இப்படித்தான் என் ராமாயண புத்தகத்துல வச்சிருந்த
பத்து ரூபாயை காணோம் என்று ஆரம்பிப்பார் தாத்தா
சட்டென்று புரையேறிவிடும் எனக்கு
ராமாயணப்புத்தகங்கள் எங்களுக்கு பெரும் புதையலாகவும்
தாத்தாவுக்கு கடும் இழப்புக்களாவும் இருந்தன
அம்மாவின் சுருக்குப்பையில்
வெற்றிலை பாக்கோடு
கருத்துப்போய் கிடக்கும் எட்டணா
சட்டென சீடைஉருண்டைகளாக
என் டவுசர் பையில் உருண்டு கொண்டிருக்கும்
சமயத்தில் பெரியம்மாவின் முந்தானையில்
முடிந்திருக்கும்
ஒற்றை ரூபாய் நாணயம்
எங்களூர் டூரிங்டாக்கீஸ் தரை டிக்கெட்டுகளாக
என் கையில் முளைத்திருக்கும்
ஒத்தைக்கையை ஊண்டிகிட்டே சாப்பிட்டா
பெலமெல்லாம் அதுவழியா இறங்கி
தரைக்குள் போயிரும் என்பாள் பார்வதி பாட்டி
வாய்நிறைய அதக்கியிருக்கும் வெற்றிலைக்கு
எப்போதும் செக்கச் செவேலென
சிவந்தே இருக்கும் உதடுகள்
( உபயம் நானும் வெற்றிலை உரலும் )
மச்சு வீட்டுக்குள் அடுக்கியிருக்கும்
குதிரை வாலி கம்பு சோளம் கேப்பை
ஐ ஆர் எட்டு நெல் மூட்டைகள்
தும்பைபூவாய் அடைகாத்துக்கிடக்கும் பருத்தி எல்லாம்
சமயத்திற்கு ஏற்றார் போல
நாயக்கர் கடையில்
சீனிமிட்டாய்
காராச்சேவு
கல்கோணா என
பண்டமாற்று முறையில்
என் டிரவுசர்
பைக்குள் எப்டியும் இடம்பிடித்து விடும்
ஆனால் ஊரில்
மழை தண்ணியற்று விவசாயம் பொய்த்து
குடும்பங்கள் நாலாவிதமும்
கொத்தப்பருத்தியுமான காலங்களில்
முதலில் பார்வதி பாட்டி திரும்பி வராத
பெரியஊருக்குப்போனாள்
ரொம்ப நாள் சீவித்திருக்காமல்
அவளுக்கு துணைக்கு தாத்தா போனார்
வண்டிமாடு கலப்பை வயக்காடு என
ஒவ்வொன்றாய் எங்களைவிட்டுப்
போய்கொண்டிருந்த நாளில்
புள்ளை குட்டிகளை தூக்கி கொண்டு அப்பாவோடு
சித்தாள் வேலைக்கு
அம்மா டவுனுக்குப்போனாள்
என்ன ஆனாலும் பரவாயில்லை
ஊரை விட்டு வரவேமாட்டேன்
என்று அடம்பிடித்த பெரியம்மா
கடைசியில் பைத்தியமாய் போனாள்
கவிதை 3
ஒரு கோப்பை தேநீரின் விலை பத்து ரூபாய்
ஒரு குவாட்டர் மெக்டோவல் பிராந்தி நூற்றி எழுபது
இரண்டு சப்பாத்திகளின் விலை மொத்தமாய்
முப்பது ரூபாய்
அசல் ஓட்டுக்கு சுளையாய் ஆயிரம்
( பாட்டில்கள் பிரியாணி தவிர்த்து )
அதுவே நகல் என்றால் சற்றேறக்குறைய அதே
வீதியோரக் கனிகைக்கு கால அளவில்
ஐநூறிலிருந்து ஆயிரம்
முகம் வழிக்கும் ரேசர் பிளேடு ஒரு ரூபாய்
கொரோனா தொற்று இந்த தேசத்தை
பீடிப்பதற்கும் முன்னால் யாவும்
எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது
பணமதிப்பிழப்பிற்கு காலத்திற்கு பின்பு
இது மனிதமதிப்பிழப்பு காலம் போலும்
தெருவில் தூக்கி வீசப்பட்ட
உடைந்து மண்சட்டி பானைகளாக
சிதறிக்கிடக்கும் மனிதர்கள்
கூட்டி அள்ள ஆளில்லை
உங்கள் சீழ் பிடித்த கதைகளை
ஒரு முகத்தாட்சண்யத்திற்கு
ஒரு பீடிக்கட்டு
இரண்டு ரொட்டித்துண்டுகளுக்கு
கண்ணீரோடு கைகூப்பல்
ரேசன் தெய்வங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
பட்டினியால் செத்துவிட்ட ஒரு தாயை
பலவீனமாய் முத்தமிடும் ஒரு குழந்தையின்
கள்ளமற்ற நம்பிக்கைக்கு
அதிகபட்சம் ஒரு அச்சச்சோ
பசிக்கு ஈடாக நிகழும் சில கற்பிழப்புகளுக்கு
சின்னதாக இதயத்தில் ஒரு குண்டூசி வலி
உள்ளும் புறமும் மேலும் கீழும் பிதுங்கி வழியும்
மனித உடல்களை சுமந்து போகும்
ரயில்களை பார்க்கையில்
ஒரு ஊமை செந்நாயின் இயலா குரைப்பு
தண்டவாள பலிபீடங்களில்
தலைகளை நேர்ந்து கொள்ளும் போது
என்றுமில்லாத சிறு குற்ற உணர்வு
திருக்குறள் தெரிந்தவனுக்கு
( பரந்து கெடுக இவ்வுலுகியற்றியான் ஞாபகத்திற்கு வந்துவிடும் )
நாய்க்கறி தின்ன விரும்பியவன் மீது படரும் அசூசை
வருங்காலங்களில் மின்சாரமில்லாமல்
வாழப்பழகி கொள்ளுங்கள் என்றால்
சீறும் கையாலாகா கோபம்
ஒரு புடவையில் கணவன் மனைவி சகிதம்
தூக்கிட்டு தொங்கும் வட நாட்டுக்காரன் மீது
என்றுமில்லாத பச்சாதாபம்
சொந்த ஊரை விரும்பிச்செல்பவனுக்கு
ஒரு தம்ளர் கபசுர குடிநீரும்
சுவைக்க முடியாத கசப்பும்
காணொலி உரையாடலில் கணவன் சாக பதறும்
பதறும் மனைவிக்கு ஒரு துளி கண்ணீர்
முற்றிலும் மாறிப்போனது யாவும்
கொரோனாவுக்கு முன்
கொரோனாவுக்குப் பின்
முற்றிலும் மலிவு விலையில் கிடைப்பது இப்பொழுது
நடுத்தெருவில் கிடக்கும் வாழ்க்கையும்
ஒரு கோப்பை விழிப்புணர்வும் தான்
கவிதை 4
பட்டாம் பூச்சியாக படபடத்து உள்ளங்கையில் வந்து அமர்கிறது அது
விடைபெறாமலே ஒரு காத தூரம் கழன்று போய் விட்டது மனது
நெகிழ்ச்சிக்கு ஒரு மழைத்துளி கூட தலை மீது விழவில்லை என்றாலும்
உச்சி முகர்ந்து ஆசீர்வதிக்கும்
ஒரே ஒரு செம்பருத்தி இலை போதும்
ஒரு யுகத்திற்கு
தரையில் இறக்கி விட மனமின்றி
உள்ளங்கையில் ஏந்தி நிற்கிறேன்
கோவில் தூணில் அசையாது நிற்கும் யாழியானேன்
சற்று நேரத்தில்
சற்று நேரம் என்பதுயுகம் யுகங்களாகிறது
ஒரே ஒரு சருகுக்காக நின்று புறப்படும்
காலத்தைப் பார்க்கும் போது தான்
மிதக்கும் கடவுளிடம் கொஞ்சம் சிநேகம்
காட்டத் தோன்றுகிறது
தங்கேஸ்