ஆன்மாவின் நிழல்
ஓமை மர நிழலின்
ஒளித் துண்டுகள்
கற்றை நிலவினால்
தனை நெய்திடக் காண்கிறேன்.
சதைப்பற்று மிகுந்த
மணலின் யக்ஞம் நோக்கி வீழ்கிறது
வேண்டுதற் குறிப்புகளுடனான
பாதச் சழக்குகள்..
நிலவு கரைந்து
பாலை நிலக் குகை வாயில் வெளியில்
ஒழுகும் மழையைப் போன்றதொரு
கனாக் காண்பதை
அவ்வோமை மரங்களின்
கீற்றுகளில் காண்கிறேன்.
எனதகத்தில் வீரிட்டு அழும்
சில மர்ம சூத்திரங்களின் கடைவாயிலில்
வலிகளின் பெருநாக்கின்
எச்சில் கறைகளை
நான்…
இவ்வாறாகத் தான்
செரித்துக் கழுவேற்றி
உடற் பிண்டம் கரையேறுகிறேன்.
பாலை நிலமென்பது
ஈரமியற்றிய செஞ்சாந்துக் குழம்பெனில்
ஒரு துளி நீர்..
எனது
பெருந்தாபத்துக்குரிய ஆன்மா.
ஜே.ஜே.அனிட்டா.