அண்மையில் 20 இந்திய வீரர்களின் துயர மரணங்களுக்கு வழிவகுத்த லடாக்கில் ஏற்பட்ட மோதல்கள், சீனா குறித்த நமது அரசாங்கத்தின் கொள்கை மீது புதிய பார்வையைத் தூண்டியுள்ளது. அந்த உறவின் ராணுவம், உத்தி மற்றும் பொருளாதாரம் குறித்த அம்சங்களை, அந்தந்த துறைகளில் அதிகம் தகுதி வாய்ந்த மற்றவர்களிடமே நான் விட்டு விடுகிறேன். வரலாற்றாசிரியராக இங்கே எழுதுகின்ற போது, சீனா குறித்த கொள்கைகளைப் பொறுத்தவரை, நமது முதல் பிரதமர் மற்றும் தற்போதைய பிரதமர் ஆகிய இருவருக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து கவனத்தை ஈர்க்கவே விரும்புகிறேன்.
அரசியல் சித்தாந்தத்தைப் பொறுத்தவரை, ஜவஹர்லால் நேரு மற்றும் நரேந்திர மோடி இருவரும் இருவேறு துருவங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நேருவிடம் இருந்த ஹிந்து – முஸ்லீம் நல்லிணக்கத்திற்கான உறுதிப்பாடு அல்லது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் மீதான ஆர்வம் போன்றவை மோடியிடம் இருக்கவில்லை. தனது விமர்சகர்களிடம் மோடியின் அணுகுமுறை, நேரு எப்போதும் கொண்டிருந்த அணுகுமுறைக்கு மாறாக மிகவும் உரசல்தன்மை கொண்டது.
இன்னும், அவர்களைப் பிரித்து வைக்கின்ற இதுபோன்ற அனைத்திற்கும் மாறாக, மிகப்பெரிய மற்றும் ஆற்றல் மிக்க நமது அண்டை நாட்டை கையாண்ட விதத்தில், நேருவும், மோடியும் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார்கள். நம்முடைய முதல் பிரதமரைப் போலவே, கம்யூனிச சீனாவின் உயர்மட்டத் தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொள்வதன் வழியாக, இரு நாடுகளின் மக்களிடையே ஒற்றுமைக்கான ஆழமான பிணைப்பு உருவாகும் என்ற நம்பிக்கையில் தற்போதைய பிரதமரும் செயல்பட்டுள்ளார்.
1954ஆம் ஆண்டில் சீனாவுக்குச் சென்றிருந்த ஜவஹர்லால் நேரு மாசேதுங் மற்றும் சூஎன்லாய் ஆகியோருடன் கலந்துரையாடினார். நேருவைப் போற்றுகின்ற வகையில், பத்து லட்சம் மக்களை அவரது விருந்தோம்புநர்கள் பெய்ஜிங்கின் தெருக்களுக்கு கொண்டு வந்திருந்தனர். அதுவே ’சீனர்களிடமிருந்து மிகப்பெரிய அளவிலான உணர்ச்சிபூர்வமான ஆதரவை நான் உணர்ந்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்’ என்று நேருவை நண்பர் ஒருவருக்கு எழுதத் தூண்டியது.
இந்தியா திரும்பிய போது, கல்கத்தா மைதானத்தில் பெரிய பொதுக் கூட்டமொன்றில் நேரு உரையாற்றினார். சீன மக்கள் போரை விரும்பவில்லை என்று அங்கே கூடியிருந்த பார்வையாளர்களிடம் கூறிய அவர், தங்கள் நாட்டை ஒன்றிணைத்து வறுமையிலிருந்து விடுபடுவதில் அவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பதாகத் தெரிவித்தார். சீனாவில் தனக்குக் கிடைத்த வலிமைமிக்க வரவேற்பு பற்றி பேசிய அவர், ’நான் ஏதோ சிறப்புத் திறன் கொண்ட ஜவஹர்லால் என்பதால் அல்ல, இந்தியப் பிரதமராக நான் இருப்பதாலேயே தங்கள் இதயங்களில் அன்பு கொண்ட சீன மக்கள் என்னை மிகப் பெரிதாக மதித்தார்கள். இதன் மூலம் அவர்கள் நட்புறவைப் பராமரிக்க விரும்புகிறார்கள்’ என்றார்.
இந்த உரையை நமது தற்போதைய பிரதமர் படித்திருக்கவோ அல்லது கேள்விப்பட்டிருக்கவோ வாய்ப்பில்லை. ஆயினும், 2018 ஏப்ரலில் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு, வூஹானில் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் அதே போன்ற உணர்வுகள் வெளிப்படையாக எதிரொலித்தன. அங்கே சீன அதிபரிடம் ’முறைசாரா உச்சிமாநாட்டின் மூலம் மிகவும் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் தனிப்பட்ட முறையில் அதற்கு பெரிய அளவில் நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள். பெய்ஜிங்கிற்கு வெளியே நீங்கள் எனக்கு இரண்டு முறை சீனாவில் விருந்தளித்திருப்பது, இந்தியா மீதான உங்கள் பாசத்தின் அடையாளமாக இருக்கிறது. இரண்டு முறை தலைநகரிலிருந்து வெளியே வந்து நீங்கள் வரவேற்றுள்ள இந்தியாவின் முதல் பிரதமர் நான் என்பதில் இந்திய மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்’ என்று மோடி அப்போது கூறினார். இரு நாடுகளுக்கிடையேயான உடைக்க முடியாத பிணைப்பு குறித்த பாடல் வரிகளைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளின் கலாச்சாரமும் ஆற்றங்கரையில் எவ்வாறு அமைந்துள்ளன, இந்த 2000 ஆண்டுகளில் இந்தியாவும் சீனாவும் 1600 ஆண்டுகளாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரங்களாக எவ்வாறு செயல்பட்டு வந்துள்ளன என்பது குறித்து மோடி பேசினார்.
வூஹானில் நடந்த சந்திப்பிற்கு முன்னதாக, 2014 செப்டம்பரில் அகமதாபாத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றிருந்தது. அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் விசேஷமாக அமைக்கப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து அந்த இரண்டு தலைவர்களும் உரையாடினர். அடுத்த மே மாதம், இந்தியாவின் பிரதமராக மோடி தனது முதல் சீனா பயணத்தை மேற்கொண்டார். அங்கே ஷாங்காயில் நிகழ்த்திய உரையில், ஜி ஜின்பிங்குடனான தனது நட்பைப் பற்றி ’இத்தகைய உறவு, நெருக்கம் மற்றும் தோழமை ஆகியவற்றுடன் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்திருப்பது, உலகளாவிய உறவுகள் குறித்த பாரம்பரியமான பேச்சுக்களை விட ’கூடுதல் ஒன்றாக’ மிகச் சிறந்ததாக இருக்கிறது. இந்த ‘கூடுதல் ஒன்றான’ நட்பைப் புரிந்துகொண்டு பாராட்டுவதற்கு பலருக்கும் அதிக நேரம் எடுக்கும்’ என்று அவர் பெருமையாகக் கூறினார்.
ஜியுடன் மோடியின் மிகச் சமீபத்திய ‘உச்சிமாநாடு’ சந்திப்பு 2019 அக்டோபரில் மகாபலிபுரத்தில் நடைபெற்றது. அந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் இணையதளத்தில், ”ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறை நினைவுச்சின்னங்கள் மற்றும் சிற்பங்களின் பின்னணியில் இளநீரைப் பருகிய இந்திய மற்றும் சீனத் தலைவர்கள் இந்திய-சீனா உறவுகள் குறித்த புதிய கட்டத்திற்கான நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டனர், இந்த சந்திப்பு இரண்டு பக்க வெற்றிக்கான ஒத்துழைப்பு, ஒருவருக்கொருவரான முக்கிய நலன்கள் மற்றும் விழைவுகளைப் பற்றிய அதிக நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றால் குறிக்கப்பட்டதாக இருந்தது. மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுத் தளத்தில் உள்ள நினைவுச்சின்னங்களைச் சுற்றி தனது கெளரவ விருந்தினரை அழைத்துச் சென்றது, அதன்பிறகு அழகிய கடற்கரை கோவிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இரவு உணவு அருந்தியது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான நெருக்கம் புத்தம்புதிதாகப் பிரகாசித்தது’ என்பது போன்று சில தகவல்களுடன், இரு தலைவர்களுடைய படத்தொகுப்பு வெளியிடப்பட்டிருந்தது. பிரதமரின் தனிப்பட்ட இணையதளத்திலும் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது, அந்தக் கட்டுரையில், ’இரு தலைவர்களுக்கிடையிலான இந்த சந்திப்பு இந்திய-சீனா உறவுகளுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும். நம்முடைய தேச மக்களுக்கும், உலக மக்களுக்கும் இது பயனளிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருந்த ஆறு ஆண்டுகளில், அவரும் ஜி ஜின்பிங்கும் 18 தடவைகளுக்கு குறையாமல் சந்தித்திருக்கிறார்கள். ’வூஹான் ஸ்பிரிட்’ மற்றும் ’சென்னை கனெக்ட்’ ஆகிய நிகழ்வுகள், நேருவின் ’இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள்’ (ஹிந்தி-சினி பாய் பாய்) என்ற முழக்கத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகவே இருந்தன. இந்தியப் பிரதமரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் நண்பர்களாக இருக்க முடியும் என்றால், அந்த இரு நாடுகளின் மக்களும் அவ்வாறுதானே இருப்பார்கள். அப்படித்தான் ஒரு வாதம் ஓடியது. தனக்கு முன்னால் ஜவஹர்லால் நேரு செய்திருந்ததை, அதாவது சீனர்களின் நோக்கங்களில் இருந்த நற்குணம் குறித்த தனது அப்பாவித்தனமான நம்பிக்கை முற்றிலும் தவறாக இருக்கிறது என்பதை நரேந்திர மோடி இப்போது தாமதமாக கண்டுபிடித்திருக்கிறார்.
1959 செப்டம்பரில் சீன மற்றும் இந்திய துருப்புக்களுக்கு இடையே எல்லையில் மோதல்கள் ஏற்பட்டபோது, நேருவின் தோல்வியுற்ற சீனக் கொள்கை குறித்து, முக்கிய ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான தீன்தயாள் உபாத்யாயா தொடர் கட்டுரைகளை எழுதினார். ’நெருக்கடிகள் எப்போது நெருக்கடியாக இல்லை என்பது அவருக்கு [நேரு] மட்டுமே தெரியும்’ என்று உபாத்யயா கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘நெருப்பின்றி புகையை எவ்வாறு வெளியிடுவது, பெரும் காட்டுத்தீயை வெற்று வார்த்தைகளால் எவ்வாறு அணைப்பது என்று நேருவுக்கு மட்டுமே தெரியும்’ என்றும் கேலியாக எழுதியிருந்தார். ’தற்போதைய நிலைமை பிரதமரின் மனநிறைவின் விளைவே ஆகும். உண்மையில் நிலைமை தீவிரமாக மாறும் வரை, அவர் எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்குத் தயக்கம் காட்டியதாகவே தெரிகிறது’ என்பதே அந்த ஜனசங்கத் தலைவரின் கருத்தாக இருந்தது. நேருவின் சீனக் கொள்கைகள் ஏன் தோல்வியடைந்தன என்பது குறித்து ’அது வெறுமனே அறியாமையால் ஏற்பட்டதா? அது கோழைத்தனத்தல் ஏற்பட்டதா? அல்லது தேசியவாதத்தைப் பலவீனப்படுத்துகின்ற ராணுவ பலவீனம், கருத்தியல் தெளிவின்மை ஆகியவற்றால் தூண்டப்பட்ட தேசிய கொள்கையால் ஏற்பட்டதா’ (இந்த மேற்கோள்கள் 1959 செப்டம்பர் 7, 14, மற்றும் 21 நாளிட்ட ஆர்கனைசர் பத்திரிக்கையில் வெளியான உபாத்யாயாவின் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன) என்று உபாத்யாயா கேள்விகளை எழுப்பியிருந்தார்.
தீன்தயாள் உபாத்யாயாவை நரேந்திர மோடி போற்றி வருவது மிகத் தெளிவாக அனைவரும் அறிந்ததே. உபாத்யாயா இப்போது உயிருடன் இருந்திருந்தால், இந்திய பிராந்தியத்திற்குள் சீனப் படைகள் நுழைந்ததைப் பற்றியும், இந்திய வீரர்கள் மரணமடைந்தது பற்றியும் அவர் என்ன எழுதியிருப்பார் என்ற கேள்வி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. பிரதமரின் அறியாமை, மனநிறைவு அல்லது கோழைத்தனம், அல்லது அவற்றிற்குப் பதிலாக ராணுவ பலவீனம் மற்றும் கருத்தியல் தெளிவின்மை ஆகியவற்றை அவர் இப்போதும் காரணமாகச் சொல்லியிருப்பாரா?
உண்மையில், இந்த கட்டுரையில் உள்ள மேற்கோள்கள் காட்டுவதைப் போல், ஜவஹர்லால் நேரு செய்ததை விட மிக அதிகமாக வெளியுறவுக் கொள்கையை தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடி கையாண்டுள்ளார். சீன மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான பிணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் போது, பாகு போன்ற உணர்ச்சிபூர்வமான சொற்களில், ஜி ஜின்பிங்கைப் பற்றி மோடி பேசிய வகையில், மாவோவைப் பற்றி நேரு ஒருபோதும் பேசியதில்லை. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், 2018ஆம் ஆண்டில் வூஹானில் நமது பிரதமரின் சொற்பொழிவிற்குப் பதிலளிக்கும் விதமாக, ’பிரதமர் மோடியை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வசந்த காலம் சந்திப்பதற்கான நல்ல நேரம்’ என்று சீன அதிபர் அதிரடியாகப் பதிலளித்திருந்தார். ஆம் உண்மைதான். சீனாவில் இந்திய அரசியல்வாதி ஒருவரைச் சந்திப்பதற்கு வசந்த காலம் ஒரு நல்ல நேரம்தான். ஆனாலும் இந்தியாவிற்குள் நுழைந்து சில பிரதேசங்களைப் பறித்துக் கொள்வதற்கு கோடைகாலம் அதனினும் சிறந்த நேரமாகவே இருக்கிறது.
1959இல் எல்லையில் ஏற்பட்ட மோதல்கள் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் முழுமையான போர் ஒன்றிற்கு வழிவகுத்தன. அதுபோன்று இப்போது நடப்பதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், அது அற்ப ஆறுதலாகவே இருக்ககூடும். ஆற்றல் மிக்க மற்றும் கணிக்க முடியாத நமது அண்டை நாட்டுடன் அதிகரித்து வருகின்ற பதட்டங்கள், இந்தியக் குடியரசின் வரலாற்றில், மிக மோசமான நேரத்தில் ஏற்பட்டுள்ளன. நமது பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. மேலும் பொருளாதாரம் மீட்கப்படுவதை இந்த தொற்றுநோய் நிச்சயம் தடுக்கும். தவறான வகையில் உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தம் நமது சமூக இழையை மிகவும் பலவீனமாக்கியுள்ள அதே நேரத்தில், நமது நீண்டகால நட்பு நாடான வங்கதேசத்தையும் தேவையில்லாமல் புண்படுத்தியுள்ளது. மற்றொரு பழைய நட்பு நாடான நேபாளத்துடனான நமது உறவுகள் கடந்த காலங்களைவிட மிகமோசமாக இருக்கின்றன. நீண்டகால எதிரியான பாகிஸ்தான், கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து தனது வேலைகளைக் காட்டி வருகிறது.
பிரதமரின் கொள்கைகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று அரசாங்கமும் ஆளும் கட்சியும் பிரதமரைத் தவறாக முன்னிறுத்த முற்படுகின்ற இன்றைய அரசியல் கலாச்சாரத்தால், இந்த சிக்கல்களைச் சமாளிப்பதற்கான நமது திறன், உண்மையில் இந்த சிக்கல்களைப் புரிந்து கொள்கின்ற திறன்கூட தடுத்து நிறுத்தப்படுகின்றன. தீன்தயாள் உபாத்யாயா போன்ற ஒருவரை தேச விரோதி என்று கேலி செய்வதை நேரு ஒருபோதும் கருதியிருக்க மாட்டார். கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்களுக்கு பல வாரங்களுக்கு முன்னரே லடாக்கில் சீன ஊடுருவல் நடந்திருப்பது பற்றி முன்னரே எச்சரித்த விருதுகள் பெற்ற அனுபவம்மிக்க ராணுவ வீரர்களை வலதுசாரி ட்ரோல்களும், ‘கோடி மீடியாக்களும்’ காட்டுமிராண்டித்தனமாக தாக்கின.
நமது ராணுவ வீரர்களின் துயர மரணங்கள் நிச்சயமாக நமது சீனக் கொள்கையை மீளமைத்துக் கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது நாடு இருக்கும் குழப்பத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய மீளமைப்பு ஒரு நாட்டுடன் நமக்கிருக்கும் உறவுகளுக்கு அப்பாலும் செல்வதாக இருக்க வேண்டும். நமது பொருளாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை என்று அனைத்தையும் நாம் புதிதாகப் பார்க்க வேண்டும். அவையனைத்தும் பிரதமரின் தனிப்பட்ட உள்ளுணர்வுகளால் அல்லாது, களத்தில் உள்ள உண்மையான யதார்த்தங்களால் உயிர்ப்பூட்டப்பட வேண்டும்.
நன்றி: என்டிடிவி இணைய இதழ், 2020 ஜூன் 22
தமிழில்: தா.சந்திரகுரு