Athiyur Vijaya Book By Pa Jothi Narasimman Bookreview by Karuppu Anbarasan நூல் அறிமுகம்: பா. ஜோதி நரசிம்மனின் அத்தியூர் விஜயா - கருப்பு அன்பரசன்




தில்லியில் ஒரு பணிப் பொழுதின் இரவினில் பேருந்து ஒன்றினுள் இளம்பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்டபாலியல் கொடூரம் என்பது இந்திய நாட்டையே உலுக்கி எடுத்தது.. இந்திய மாநிலங்களின் தலைநகர் எங்கிலும் மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டது..

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஊர்வலங்கள் நடத்தப்பட்டது; சமூக வலைத்தளங்கள் தொடங்கி காட்சி ஊடகங்கள் என இந்தியா முழுவதிலும் பரவலாக பேசப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பொழுது தமிழகமே கொதித்து எழுந்தது..

அதே தில்லி மாநகர் காவல் துறையின் பெண் அதிகாரி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு திமிர் எடுத்து ஆண்களால் 57 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பொழுது பத்திரிகைகள் கூட இந்த விஷயங்களை செய்தியாகக் கூடப் பேச மறுத்தது; அவர் முஸ்லிம் என்கிற ஒரே காரணத்திற்காகவே.

இப்படி இந்தியாவெங்கிலும் பல பெண்கள் பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆதிக்க அதிகார சக்திகளால் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப் படும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட படுகொலைகள் மட்டுமே பெரிய அளவிற்கு பேசப்படுவதாக மாறுவதின்சூட்சமம் என்ன..?

இங்கு பெண்களின் பாலியல் சீண்டல் கூட.. படுகொலைகள் கூட சாதி வெறி கொண்டே.. மத துவேஷத்தோடே பார்க்கப்படுகிறது.. பேசப்படுகிறது.. நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது..

சமூக வலைத்தளங்களில் ஆன்மீகம் சமூக விஞ்ஞானம் பொருளாதார அரசியல் விஷயங்கள் என அனைத்தும் விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் பொழுதே இப்படியான நிலை என்றால் சமூக ஊடகங்கள் வளர்ச்சி பெறாத அக்காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பாலியல் சீண்டல்கள் பேச படாமலேயே அல்லது ஒரு குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பேசப்பட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்ற பொழுதும் சிலவற்றில் நீதி வழங்கப்பட்டும் பலவற்றில் நீதி மறுக்கப்படுவதும் நடந்தே வந்திருக்கிறது..

பெரும் சோகம் நிறைந்த நிஜ வரலாறுகள் நிறையவே இருக்கிறது இங்கு. சமூக வலைதளங்கள் வளர்ச்சியுற்ற இக்காலத்திலும் கூட பெண்கள்.. பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைகளாக அரியலூர் நந்தினி தொடங்கி இன்னும் பல வழக்குகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இன்னும் பல பல்வேறு மக்கள் நல அமைப்புகளும் தொடர்ந்து வழக்குகளையும் போராட்டங்களையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் இன்னும் பல அமைப்புகளும் பெரும்பாலான நேரங்களில் வாய்மூடி மவுனமாக கடந்து சென்றிருக்கிறார்கள்.. கடந்துதான் சென்று கொண்டு இருக்கிறார்கள் இன்றும்.

பெண்களுக்குள்ளும் ஆண்களுக்கு இருக்கக்கூடிய சாதித் திமிர் என்பது பல நேரங்களில் பெண்களின் பாலியல் சீண்டல்களையும் பாலியல் கொடுமைகளையும் பாலியல் கொலைகளையும் மூடி மறைத்துக் கொண்டே தான் இருக்கிறது.. எப்போதாவது பேசினாலும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் பேச மறந்து விடுகிறார்கள் அல்லது வேறு செய்திகளில் தன்னை உட்படுத்தி மடை மாற்றிக்கொள்கிறார்கள்.

ஆனால் இது ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் அத்தனை நிலைகளில் இருந்தும் ஒடுக்கப்பட்டே இருந்து வரக்கூடிய இருளர்கள், திட்டமிட்டே மலையில் இருந்து சமவெளிக்கு துரத்தி விரட்டியடிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் இவர்களின் பெண்கள் என்றாகிற போதோ செய்தியாகக் கூட பல நேரங்களில் வருவது கிடையாது.. பெரும்பாலும் அரசு அதிகாரங்களும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளும் பணம் படைத்தவர்களும் தொடர்ந்து மூடிமறைக்க செய்யவே எத்தனித்து இருக்கிறார்கள் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களையும் அநீதிகளையும்.

அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து மீறி வெளி உலகிற்கு கொண்டுவரப்பட்டதென்னவோ சிதம்பரம் பத்மினி, கம்மாபுரம் பார்வதி, அத்தியூர் விஜயா. காவல்துறையினரின் கூட்டு பலாத்காரம் என்கிற பெரும் கொடூரம் நிகழ்ந்த வாச்சாத்தி மலை மக்கள்..

இவைகள் அனைத்துமே இடதுசாரி அமைப்புகளும் குறிப்பாக மார்க்சிஸ்டுகள், மலைவாழ் மக்களின் சங்கங்களும் பழங்குடி மக்களின் பாதுகாப்பு அமைப்புகளும் முன்னின்று விடாப்பிடியாக தொடர்ந்து போராடியதன் விளைவே சமவெளி மக்களின் பேசு பொருளாக மாறியது.

வாச்சாத்தி என்கிற பெயரில் கிராமமே இல்லை என்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஒருவரின் முகமூடி கிழித்தெறியப்பட்டது மார்க்சிஸ்டுகளால். பாதிக்கப்பட்ட பலரின் மரணத்திற்குப் பிறகே அம் மக்களுக்கு நீதி வழங்கப்பட்டது நம்முடைய நீதித்துறையால்.

சொந்தமாக இடம் இல்லாதவர்கள்.. கிடக்கும் இடங்களில் வேலைக்கு செல்லக் கூடியவர்கள்.. ஊருக்கு பத்து அல்லது பன்னிரண்டு குடும்பங்கள் மட்டும்தான்.. இந்த குடும்பங்கள் அனைத்துமே அந்த கிராமத்தில் இருக்கும் நிலங்கள் எல்லாவற்றையும் தங்களின் கைகளில் வைத்திருக்கும் மற்ற ஆதிக்க சாதியை சார்ந்தவர்களின் தயவை எதிர்பார்த்து தான்..

இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இவர்களுக்காக நியாயம் கேட்க நீதி கேட்க எவரும் கிடையாது, நாதியற்றவர்கள் இவர்கள் என்கிற எண்ணத்தோடு, அவர்களின் பரம்பரையே குற்றப்பரம்பரைதான் என்று பழக்கப்படுத்தப்பட்ட அதிகாரச் சாதித் திமிர் காவல் துறையினராக இருந்துவிட்டால்! அவர்கள் தினவெடுத்து ஆடும் ஆட்டத்தின் புகலிடமாக இருளர்களின் குடிசைகளும் அதில் வாழும் எளிய மக்களும், எல்லோராலும் எல்லாக் காலத்திலும் ஒடுக்கப்பட்டு வரும் பெண்களுமே ஆவார்கள்.

சமூகத்தில் நடைபெறும் கிரிமினல் குற்றங்களின் பின்னணியை தேட வக்கில்லாமல் துப்பில்லாமல் அதை முடித்து வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, கல்வி அறிவு மறுக்கப்பட்டதால் எலி, பாம்பு பிடித்தும்; செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக உழைத்தும் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வரும் இருளர்கள் மற்றும் பழங்குடிகள் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் மிரட்டியும் அடித்தும் துன்புறுத்தியும் அவர்களின் பெண்களை பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்கியும் தாங்கள் அணிந்திருக்கும் காக்கிச்சட்டையில் நேர்மைக்கு கஞ்சி போட்டு விரைப்பாக வைத்துக்கொண்டார்கள் அம்மக்களின் உடல் அவயங்களின் இருந்து வெளியேற்றப்பட்ட ரத்தத் சூட்டினால்.

தெறித்து விழும் எளிய மனிதர்களின் குருதி சுவடுகள் ஏதும் வெளியே தெரியாமல் மிகக் கவனமாகவே பார்த்துக் கொண்டார்கள் உடன் இருக்கும் ஆதிக்க சாதி அதிகாரக் கூட்டத்தோடு கைகோர்த்து காவல்துறையினர். இவை அனைத்தையும் உடைத்தெறிந்து தெறித்து வெளியே வந்தவள் தான் அத்தியூர் விஜயா.

ராசா கண்ணுவின் துயரத்தை.. பார்வதியின் போராட்டத்தை.. அவர்களுக்கு துணையாக இருந்த கம்யூனிஸ்டுகளின் நேர்மையை..

காவல் துறையோடு சாதிவெறியும் நடத்திட்ட அட்டூழியத்தை திரைமொழியில் காட்சிப்படுத்தி வெளியே வந்து இருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து எழுத்தில் ஆவணமாக, நாவலாக வெளிவந்து இருக்கிறது அத்தியூர் விஜயா. நாவலை எழுத்தாளர் பத்திரிக்கையாளர் பா.ஜோதி நரசிம்மன் அவர்கள் சாதாரண எழுத்துக்களால் வலியும் துயரமுமாக பதிந்திருக்கிறார். பேசப்படாத மக்களின் வாழ்நிலையை எல்லோரும் பேசும் காலமாக இன்றைய சூழலை உருவாகியிருக்கிறது. ஜெய் பீம் திரைப்படம் அதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

எளிய மனிதர்களின் வாழ்வினை சூறையாட தமிழக காவல்துறையும் பாண்டிச்சேரி காவல்துறையும் எப்படி ஒரு சேர கைகோர்த்து இருக்கிறார்கள்.. கைகோர்க்கும் புள்ளியாக பாண்டிச்சேரி சாராயம் எப்படி இருந்தது என்பதையும்.. அத்தியூர் விஜயா எவ்வாறெல்லாம் மிரட்டப்பட்டு பாலியல் கொடூரத்திற்கு உட்படுத்தப்பட்டார் பாண்டிச்சேரி காவல்துறையினரால் என்பதனையும் அதற்குத் தமிழ்நாடு காவல்துறை ஏவல் ஆளாய் இருந்து சேவை புரிந்த அவலத்தையும் நீசத்தனத்தையும் சாதாரண வார்த்தைகளால் நம்மிடையே பேசுகிறது அத்தியூர் விஜயா நாவல். காவல் துறைக்கு ஆள் காட்டியாக இருந்த மாசி குடும்பம் எப்படி அதே காவல்துறையால் சின்னாபின்னப்படுத்தப்பட்டு சீரழிக்கப்படும் நயவஞ்சகத்தை நாவலுக்குள் பேசியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.

சம்பந்தமே இல்லை என்றாலும் திருட்டு வழக்குகளில் இருளர் குடும்பத்தின் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் காவல்துறையினரால் தொடர்புபடுத்தி வழக்கினை முடித்து வைக்கும் எண்ணம் அவர்கள் மனதில் வழிவழியாக பழக்கப்படுத்தி வந்ததற்கான சமூக சூழலையும் காரணங்களையும் நாவலுக்குள்
ஆதாரங்களோடு பதிவாக்கி இருப்பார்.

பாண்டிச்சேரி காவல்துறையினரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு சீரழிக்கப்பட்ட அத்தியூர் விஜயாவின் வழக்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வெளியானது..
விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பாக அது இருந்தது. அத்தியூர் விஜயாவின் வாழ்வினை சூறையாடிய நான்கு காவலர்களுக்கும்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்தார்.

இத்தகைய தீர்ப்பு வேண்டி அத்தியூர் விஜயாவின் இடைவிடாத மன வலிமை மிகுந்த போராட்டம்.. அவருக்கு இடையூறாக அவர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி ஆண் பெண்கள் என அனைவரும் ஒன்று திரண்டு ஏளனம் செய்ததோடு மட்டுமல்லாமல் “எங்கேயும் நடக்காததா நடந்துவிட்டது, யாருக்கும் வராத ரோஷம் இவளுக்கு எப்படி” என்கிற திமிர் தனத்தையும் எதிர்த்து; இப்படியான ஒரு தீர்ப்பிற்கு அத்தியூர் விஜயாவோடு சேர்ந்து பேராசிரியர் பிரபா கல்விமணி.. இப்படி அனைவரின் போராட்டத்தோடு ஒரு தீர்ப்பு கிடைக்கப்பெற்றது அத்தியூர் விஜயாவிற்கு.

ஆனால் அந்த தீர்ப்பு எப்படி சென்னை உயர்நீதிமன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்டு அந்த நான்கு காவலர்களும் ஜாமீனில் வெளி வந்தார்கள் என்பதுதான் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்திலும் அரசு அதிகாரத்திலும் காவல்துறையிலும் நீதித்துறையிலும் எளிய மக்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வலுவான மனநிலை கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இந்த நாவல் பேசியிருக்கிறது.

குற்றவாளிகள் மூன்றே மாதத்தில் ஜாமீனில் வெளிவர பெற்றாலும் இந்த வழக்கு நடக்கும் காலம் முதலே தனி ஒரு மனுஷியாக இருந்து இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஆதரவாக ஒரு போராளியாக எப்படி உருவானார் என்பதை இந்த நாவல் வழியாக அத்தியூர் விஜயா என்கிற போராளியை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் ஜோதி நரசிம்மன்.

ஜெய்பீம் திரைப்படத்தின் வெற்றி இந்த நாவலை கொண்டுவர ஆசிரியருக்கு உத்வேகத்தை கொடுத்திருந்தாலும் கூட அந்த வெற்றியின் களிப்பில் இந்த நாவல் பலரால் பேச படாமலேயே கிடக்கிறது. நாவலாக வெளிவந்து இருக்கக்கூடிய அத்தியூர் விஜயாவின் வாழ்வு சமூகத்தில் மாற்றம் காண வேண்டி போராடிக்கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் மன உரத்தைக் கொடுக்க கூடியதாகும்..

நாவலின் வடிவமைப்பில் இன்னும் கூடுதலாக கவனத்தை செலுத்தி இருக்கலாம்.. எழுத்தின் அளவை (font size) குறைத்திருக்கலாம்.. பக்கங்கள் குறைந்தால் என்ன..? அது ஒன்றும் வாசிப்பவருக்கு பிரச்சனையாக இருக்காது.. பக்கங்களில் பேசப்படும் நிஜம் மட்டுமே வாசிப்பவன் மனதை தொட்டுச்செல்லும் அவனை யோசிக்க செய்யும் அவனை மடைமாற்றச் செய்யும்..

நாவல் எந்தவிதமான புனைவும் இன்றி நேரடியாக விஷயங்களை பேசியிருக்கிறது.. நாவலுக்குள் உரையாடும் அனைவருமே உண்மையான கதாபாத்திரங்கள்.. எளிமையான வார்த்தைகள்.. நாவல் என்று வருகிற பொழுது அந்த கதாபாத்திரங்கள் வாழும் நிலம் சார்ந்த சூழலையும் அதன் அழகியலையும் விவரிப்பது இன்னும் சரியாக இருக்குமோ என்று எனக்கு யோசிக்க தோன்றுகிறது.

ஆனாலும் கூட ஒரு போராளியின் வாழ்வினை தமிழ்ச்சமூகம் அறிந்திட முனைப்பு காட்டி வெளியிட்ட ஆசிரியார் பா. ஜோதி நரசிம்மன் அவர்களுக்கும்; தமிழ் எழிலன் வெளியீட்டகத்திற்கும் எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நன்றி கூறுவது அவசியம் எனவே நினைக்கிறேன்.

இருவருக்கும் பேரன்பும் வாழ்த்துக்களும்.
தோழர் அத்தியூர்_விஜயா நம் மனதை உரமேற்றுவார்.
வாசியுங்கள் ஒருமுறையேனும்.

அத்தியூர்_விஜயா
பா_ஜோதி_நரசிம்மன்
தமிழ்எழிலன்_வெளியீட்டகம்
விலை.₹.150/-
பக்கம் 152.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “நூல் அறிமுகம்: பா. ஜோதி நரசிம்மனின் அத்தியூர் விஜயா – கருப்பு அன்பரசன்”
  1. வணக்கம் ஜோதி நரசிம்மன் அத்தியூர் விஜயா நூலின் ஆசிரியர் மிக சிறப்பாக ஒரு திறனாய்வு செய்தமைக்கு நன்றி எழுத்து அளவு குறைத்திருக்கலாம் என்று நீங்கள் கூறியதை நான் அறிந்தேன் இந்த புத்தகம் பழங்குடி மக்கள் படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் எழுத்து அளவு பெரிதாகப் பட்டது மற்றபடி பக்கங்களை கூட்டுவதற்காக அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *