“பொழைக்கத் தெரியாத பைத்தியக்காரனுங்க, ஆளும், அவன் தலையும், துணிமணியும், வந்துட்டானுங்க, இந்த பூமிக்குங் கேடா” என்று இச்சமூகத்தின் வார்த்தைத் தெறிப்புகளை எளிதாகச் செறிக்கத் தெரிந்தவன் மிக விரைவாகக் கலைஞனாகிவிடுகிறான்.  

எல்லா திசைகளிலும் முட்டி, மோதி, திமிறி எழுந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்குள் காலம் பல கலைஞர்களைச் சின்னாபின்னமாக்கி விடுகிறது. 

அப்படி அடையாளம் தெரியாமல் மண்ணுக்குள் சென்றவர்களைவிட தினம் தினம் மனதிற்குள்ளேயே புழுங்கி வெந்து நொந்து நடைபிணமாய்ப் போனவர்கள்தான் ஏராளம். 

நீண்டகாலமாக உறங்கிக் கொண்டிருக்கும் விதை ஏதோ ஒருநாள் பெய்யும் மழையில் மண்ணைப் பிளந்துகொண்டு எட்டிப்பார்ப்பதைப் போல எங்கோ ஒரு கலைஞன் தன் உயிர்ப்பை பிடித்துவைத்திருந்து  அவ்வப்போது இச்சமூகத்திற்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறான். 

அப்படிப்பட்ட உணர்ச்சிவயமான கலைஞன் யாரும் எதிர்பாராததொரு தருணத்தில் தவிர்க்கமுடியாத கலைஞனாகக் கொண்டாடப்படவும் செய்கிறான். அதற்காக அவன் கொடுக்கும் விலையும் தியாகமும் அர்ப்பணிப்பும் மிக அதிகம். 

அப்படிக் கொடுங்காலத்தின் கரங்களில் இருந்து தப்பிப் பிழைத்த கலைஞர்கள் சிலரின்  வாழ்வைக் கொஞ்சம் தொட்டுத்தான் காட்டுவோமே என்று களம் காண முயற்சித்திருக்கிறார் “மருளாடி” நூலின் ஆசிரியர் கலைக்கோவன்.

மருளாடி நூலில் காணப்படும் பலதரப்பட்ட கலைஞர்களைப் போல தீராப் பெரும் பசியையும் கலைப் பசியையும்  தன் வாழ்நாள் எல்லாம் தன் அங்கமாகக் கொண்டவர்கள் இன்றும் ஏராளம்.

பெரும் கொடையாய்க் ‘கலை’ தாய் கொடுத்த தீராத் தாகத்தை,  வியர்வையால் குளித்துக் குதூகலிக்கும் கலைஞர்களின் படைப்புகளை இப்போது மட்டுமல்ல எப்போதுமே  மேட்டுக்குடியினருக்கு ஏளனமாகத்தான் தெரிந்திருகின்றன.

அதைவிடப் பெரும் சோகம், அந்த மகத்தான கலைஞர்கள், எல்லோருடைய கண்களுக்கும் தெரிந்தாலும் தெரியாததைப் போல காட்டிக்கொள்வதில் இச்சமூகம் போடும் வேடம் மேடையில் ஒரு தேர்ந்தெடுத்த கலைஞனால்கூட வெளிப்படுத்த முடியாததொரு நடிப்பு. 

அதனால்தான், வயிற்றுப் பசியையும் கலைப் பசியையும் ஒன்றெனக் கொண்டாடத் தெரிந்தவனின் உணர்ச்சியின் வேகமும், உள்ளக்குமுறலின் கொந்தளிப்பும் யாராலும் எதிர்கொள்ளமுடியாத அளவுக்கு மாறிவிடுகிறது. 

”எதற்கும் ஆகாத உதவாக்கரைகள்.  வேலைக்குப் போயி நாலு காசு சம்பாதிக்கத் துப்புக்கெட்டவனுங்க”, என்று குடும்பத்தில் உள்ளவர்களே வீசிச் செல்லும் வசைச்சொற்களே பெரும்பாலான கலைஞர்களின் சிறகுகளை முறித்துப் போட்டிருக்கின்றன. 

மருளாடி வாசிப்பாளர்களுக்கு வெறும் கட்டுரைத் தொகுப்பு என்ற ரீதியில் அத்தனை எளிதாகக் கடந்துவிடமுடியாது. கட்டுரைக்குள் ஊடாடும் பல வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன. 

முதல் கட்டுரை ‘தனியாவர்த்தனம்’ தோல் பாவைக் கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை மேலோட்டமாகச் சொல்வதோடு நின்றுவிடாமல், தோல் பாவைக்கூத்தின் பிரதானமான தோல் பொம்மை எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பதை விவரிக்கிறது. 

அதைவிட  நவீனம் ’கலையின் கருவை’ எவ்வாறெல்லாம் சிதைத்திருக்கிறது என்பதற்கு முத்துசந்திரன் வீட்டின் மாடியில் தனியொருவனாக எங்கோ இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் கண்டுகளிக்கும் பார்வையாளர்களுக்காக நடத்தும் கூத்தை பதிவுசெய்கிறது.  

’மருளாடி’ என்ற கட்டுரை சாமானிய மனிதனின் பார்வையிலிருந்தும், அறிவியலாளனின் பார்வையிலிருந்தும், உளவியலாளனின் பார்வையிலிருந்தும் அணுக முயற்சித்திருக்கிறது. ஆனால், மருளாடியும் கலைஞன்தான் என்ற வரிசையில் நின்று கொண்டிருப்பதுதான் சற்றே சந்தேகத்தை விதைக்கிறது. .   

சாமியாடுபவர்களை, சாமியாடி, மருளாடி, அருளாடி என்று பலபெயர்களில் அழைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, அதன் ஒரு பெயரை இந்நூலுக்குத் தலைப்பாக்கி இருக்கிறார் கலைக்கோவன். 

அன்புராஜின் வாழ்க்கையை மிகச்சுருக்கமாக “உண்மைக் கலைஞனின் ஒரு துளி அன்புராஜ்-1” கட்டுரையில் கவிதை நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் நடித்த நாடகத்தின் பெயரை கட்டுரையின் நடுவில் ஏதேனும் ஒருவரியில் சொல்லியிருக்கலாம்.

மகத்தான மனிதர்களையும் அவர்களின் வீரியத்தையும் பத்மஸ்ரீ நா.முத்துசாமி அவர்களின் கூத்துப்பட்டறையில் உருக்கி வார்க்கப்பட்ட ’ஈரோடு நாடகக் கொட்டகை’ சதீஸ் பற்றிய கட்டுரை தலைப்பிற்கேற்றார்போல் ”மரணமில்லை”

ஒரு கலைஞன் சககலைஞனின் சோகச்சுமையையும் சேர்த்தே சுமக்கப் பழகியிருக்கிறான் என்பதற்கு ’மரணமில்லை’ என்ற கட்டுரை சான்று. இன்னும் சற்றே ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம்.

‘யார் வித்வான்’ கட்டுரையின் துவக்கம் ஒரு மிருதங்கம் எப்படி உருவாகி பார்வையாளனை மயக்குகிறது என்பதைச் சொல்லிச் செல்லும் அதே வேளையில், ஒரு மிருதங்கம் உருவாகிய பிறகு நடக்கும் நுட்பமான அரசியலை ஆசிரியருக்கே உரிய தனித்துவமான மொழியில் சொல்லியிருக்கிறார்.  

இந்நூலில் காணப்படும் சில கட்டுரைகளுக்குள் நலிவடைந்த கலைஞர்களின் அடக்க முடியாத கண்ணீரும், அவற்றை மீறி அவர்கள் மீண்டு எழுந்து நிரூபிக்கும் உயிர்த்துடிப்பையும் மிக அழகாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

சில கட்டுரைகள் சிறுகதையின் சாயலில் தொடங்கி கொஞ்சம் நெளிவு சுளிவுகளுக்குள் நுழைந்து வட்டமடித்து மீண்டும் கட்டுரை வடிவத்திற்குள் பரிணமித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, “நாட்டுப்புறக் கலைஞர்கள்” மற்றும் ”தீராத் தீ” போன்ற கட்டுரைகள்.

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை சாமானிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டதோடு நின்றுவிடாமல் நிமிர்ந்து மூச்சுவிட்டுக்கொள்வதற்குள் இரண்டாம் அலை பூதாகரமாய் மேலெழும்பி வலம்வந்தது அனைவருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில் குத்துயிரும் குலை உயுருமாய் வாடிய பதினைந்து கூத்துக் கலைஞர்களுக்கு இந்நூலின் ஆசிரியர் சக ஆசிரியர்களின் துணைகொண்டு ஓடோடி (பணம் கொடுத்து) உதவியதை மிகைப்படுத்தாமல் அப்படியே பதிவு செய்கிறது “இரண்டாம அலை” என்ற கட்டுரை. 

சொல்லப்போனால், இது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரிந்த ஒரு சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வியலையும் அவர்கள்  கடந்துவரும் வெற்றியையும் ஒற்றை நூலுக்குள் பலமுயற்சிகளுக்குப் பின் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நூலில் காணப்படும் எல்லாக் கட்டுரையையும் விவரமாகச் சுட்டிக்காட்ட ஆசைதான்.  ஆனால், வாசிப்பளர்களின் யூகத்திற்காக சில கட்டுரைகளைத் தொட்டுக்காட்டாமல் விட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

இத்தனை சிறப்பான கட்டுரைத் தொகுப்பைக் கொடுக்கும் பதற்றத்தில் பக்கம் பக்கத்திற்குக் காணப்படும் எழுத்துப் பிழைகளையும், பல இடங்களில் இடரும் பத்திக் கோர்வையையும் ஆசிரியர் ஏன் தவறவிட்டார் என்று தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, உக்கிரமாக ஆடவேண்டிய ‘மருளாடி’ வாசிப்பாளர்களின் மனதிற்குள் புகுந்து ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்காமலும், நவீன யுகத்தின் நளினத்திற்கு ஏற்றார்போல்  ஆழ்ந்து செல்லாமலும் அழகியல் தன்மையோடு மிகஎளிதாக நகர்ந்து செல்வது, களப்பயணத்தில் ஏற்பட்ட களைப்பினாலா அல்லது வாசகர்கள் மீதியைத் தேடிக்கண்டுகொள்ளட்டும் என்ற எண்ணத்தினாலா? என்று யோசிக்கவைக்கிறது.

மற்றபடி, இந்த இரண்டாவது நூலான ‘மருளாடியில்’ கலைக்கோவன் அவர் இஷ்டத்திற்கு ரசிக்கும்படிதான் ஆடியிருக்கிறார்.

– வே.சங்கர்

நூலின் பெயர் : மருளாடி
ஆசிரியர் : கலைக்கோவன்
வெளியீடு : வம்சி
பக்கங்கள் : 136
விலை : ரூ.130
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *