முதலாளித்துவ சமூகஅமைப்புமுறையானது லாபநோக்கில் இயங்கும் உற்பத்தியமைப்பு முறையின் மீது கட்டப்பட்ட சமூக அமைப்பு முறையாகும். முதலாளித்துவம் தோன்றிய காலத்திலேயே அது தடையில்லா வாணிபத்தைப் பற்றி பேசிவருகிறது. மூலதன நூலில் தடையில்லா வாணிபத்தை வலியுறுத்துவர்களின் வாதங்களை மாரக்ஸ் ஆங்காங்கே எடுத்துககூறி பொருத்தமாக அதை மறுத்துரைக்கிறார். இன்றைக்கும் கூட Government has no business in business என்ற கவர்ச்சிகரமான வாசகத்துடன் அன்றைய தடையில்லா வாணிப கழகத்தினர் முன்வைத்த கருத்துக்களை கூறி வருகின்றனர்.
எல்லாவற்றிற்கும் சந்தையே தீர்வு கொடுக்கும் என்பதே இவர்களின் தாரக மந்திரம். எனினும் அவ்வப்போது ஏற்படும் பொருளாதார நெருக்கடியும் அது தோற்றுவிக்கும் சமுக நெருக்கடியும் பெரும்பாலான நேரங்களில் மேலும் மேலும் வலதுசாரி சாய்வில் முடிந்திருக்கிறது. இன்றைக்கு கொரானா தொற்று தோற்றுவித்திருக்கும் நெருக்கடியானது தடையில்லா வாணிபக் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
எது எப்படியிருப்பினும் எந்த ஒரு அம்சத்தையும் துல்லியமாக அளவிட்டு அதன் அடிப்படையில் வியாக்யானம் கொடுக்கும் அறிவியல் அணுகுமுறையை முதலாளித்துவம் பயன்படுத்தினாலும் அவ்வப்போது அது ஆய்வுசெய்து திரட்டியிருக்கும் புள்ளிவிபரங்களே அதற்கு எதிராக இருப்பதை காண்கிறோம்.
கொரானா தொற்று தோன்றியதும் வாட்ஸ்அப்பில் வரும் ஏராளமான Memesல் ஒன்று இந்தாண்டு ஜனவரி மாதம் ஐந்து முக்கியமான சோதிடர்களை அழைத்து இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்று ஒரு நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி நடத்தியிருக்கிறது. சொல்லி வைத்தாற்போல அனைவரும் இந்த ஆண்டு ஆகா ஓகோ என்று இருக்கும் என்று அவரவர் சோதிடப் புலமையை சனி, சுக்கிரன், ராகு, கேது என்று கூறி பேசியிருக்கிறார்கள். “நீங்களெல்லாம் எங்கே போனீர்கள்“ என்பதே அந்த Memesன் தலைப்பு, அதே போல் இன்னொரு சம்பவத்தை நாம் குறிப்பிடலாம்.
குளோபல் ஹெல்த் செக்யுரிட்டி இண்டெக்ஸ் என்றொரு அளவு கோலை அமெரிக்காவில உள்ள மூன்று அமைப்புகள் உருவாக்கியிருக்கிறார்கள். அவை Nuclear Threat Initiative (NTI), Johns Hopkins Center for Health Security (JHU), The Economist Intelligence Unit (EIU). கொரானா தொற்று போன்று உலகந்தழுவிய ஒரு உயிரியல் தாக்குதல் நடைபெற்றால் அதைச் சந்திக்கும் தயார் நிலையில் எந்த மட்டத்தில் ஒவவொரு நாடும் இருக்கிறது என்பதே இந்த குளோபல் ஹெல்த் செக்யூரிட்டி இண்டெக்ஸ் (GHS). இவர்களின் மதிப்பிட்டின்படி இதுபோன்ற உயிரியல் பேரிடர்களை சந்திக்கும் வல்லமையில் அமெரிக்க முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த மதிப்பீட்டின் நம்பகத்தன்மை எப்படியிருக்கிறது என்று இப்பொழுது நிரூபணமாகிவிட்டது. இதற்கும் நமது சோதிடர்கள் கூற்றும் என்ன வித்தியாசம்? இவர்கள் அறிவில் பூர்வமாக கணக்கிட்டு அறிவித்திருக்கிறார்கள் (சோதிடர்களைக் கேட்டால் நாங்களும அறிவில் பூர்வமாகத்தானே சொல்கிறோம் என்பார்கள் அது வேறு விஷயம்) முதலாளித்துவ கருத்தியலை முன்னெடுத்துச் செல்லும போது அறிவியலை அவர்கள் பயன்படுத்துவது அறிவியல் தடம்புரள்வதற்கே வழிகோலுகிறது. தற்போது GHS என்ன சொல்கிறது என்று பார்ப்போம்,
சீனா 51வது இடத்திலும் இந்தியா 57வது இடத்திலும் இருக்கிறது. 2019ம் ஆண்டின் முழு அறிக்கையைப் பெற https://www.ghsindex.org/wp-content/uploads/2020/04/2019-Global-Health-Security-Index.pdf
இன்றைக்கு கொரானா பரவல் மற்றும் உயிரிழப்பு சம்பந்தமான புள்ளிவிபரங்கள் உலக சுகாதார நிறுவனததின் (WHO) இணையதளத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டு அரசு நிர்வாகக் கொள்கையும் நாம் ஆய்வு செய்வோம். தடையில்லா வாணிபக் கொள்கையே அரசின் கொள்கையாக இருக்கும் அரசை ஒரு முனையிலும், எல்லா அம்சங்களிலும் வலுவான அரசு தலையீடு இருக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றும் அரசை இன்னொரு முனையிலும் வைத்து, ஒவ்வொரு நாட்டு அரசும் இந்த இரண்டுக்கும் நடுவில் எந்தப் புள்ளியில் இருக்கிறது என்பதை கண்டறியலாம்.
ஒவ்வொரு நாடு இருக்கும் புள்ளிக்கும் அந்தநாடு இதுபோன்ற உயிரியல் பேரிடர்களை எப்படி சந்தித்திருக்கிறது என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரத்தைக் கொண்டு கணக்கிட்டால் இவர்கள் வெளியிட்ட GHS தலைகீழாக மாறிப்போகும் வாய்ப்பு இருக்கிறது. இதை முதன்மைப் பணியாக எடுத்து இந்த GHS எப்படி தவறாக இருக்கிறது என்பதை தரவுகளுடன் எழுதுவதற்கு நமது குழுமத்தில் யாராவது முன்வந்தால் அது மூலதனம் கற்பதை முழுமையடையச் செய்யும் என்று நம்புகிறேன்.
GHSஐ வைத்து எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை இன்றைக்கு நான் வாசித்தேன். https://www.visualcapitalist.com/global-pandemic-preparedness ranked/ கட்டுரை ஆசிரியர் எந்த நாடும் உயிரியல் பேரிடரை சந்திக்கும தயார் நிலையில் இல்லை என்று கூறி முடித்திருக்கிறார்.
– விஜயன்