நூல்: “இதயம் தொட்ட இலக்கியவாதிகள்“ 
ஆசிரியர்: விஜயா மு.வேலாயுதம்  
வெளியீடு: வானதி பதிப்பகம்,
23-தீனதயாளு தெரு,
தி.நகர்,
சென்னை-17.

கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் உறவுஸ் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின்போதுதான் எனக்குப் பழக்கம். எழுத்தாளர் திரு.கர்ணன் அவர்களோடு சேர்ந்து இவரிடம் அளவளாவியதாக நினைவு. அதற்குப்பின் மதுரை புத்தகக் கண்காட்சியில் “வாங்க…போய் சாப்டிட்டு வருவோம்…” என்று சர்வ சகஜமாக, மிகுந்த நெருக்கத்தோடு என் தோள் மேல் கை போட்டு அழைத்துச் சென்றபோது, அந்த அன்பில் மிகவும் மன நெருக்கமாகிப் போனேன் நான்.

மிகுந்த எளிய நிலையிலிருந்து புத்தகக் கடை திறந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு பெரிய பதிப்பகத்தையே இன்று வெற்றிகரமாக நடத்தி வரும் விஜயா பதிப்பக அதிபரான திரு.மு.வேலாயுதம் ஐயா அவர்களின் வெற்றி அவரின் கடுமையான உழைப்பினாலும், சுறுசுறுப்பான நடவடிக்கைகளாலும், எல்லோருடனுமான அன்பான அரவணைப்பினாலும் கைகூடி வந்து, பெயர் சொல்லும் அளவுக்கு அவரை இன்று உச்சியில் நிறுத்தியிருக்கிறது.

காலத்தை வென்று நின்ற எழுத்துக்குச் சொந்தக்காரர்களான, மதிப்பும் மரியாதையும் மிக்க மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புக்களைப் புத்தகமாகக் கொண்டு வந்து, அவற்றை எங்கெங்கெல்லாம் கவனம் பெறச் செய்ய வேண்டுமோ அங்கெல்லாம் கொண்டு சென்று விற்பனை செய்து, பதிப்பகம் மற்றும் விற்பனைப் தொழிலில் வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறார் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்கள்.

அவரின் அந்தப் பல்கிப் பெருகிய அனுபவங்களைத் தொடராக எழுதும்படி அமுதசுரபி ஆசிரியர் மதிப்புமிகு திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சொல்ல, புத்தகம் விற்பவனை, வெளியிடுபவனை எழுதச் சொல்கிறாரே என்ற தயக்கத்தோடேயே, அன்பு வேண்டுகோளை மறுக்க இயலாமல், மனதில் அடுக்கடுக்காகத் தோன்றிய தனது பதிப்பக அனுபவங்களை, விற்பனை செயலாக்கங்களை, இளம் பிராயம் முதல் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த ஆழமான வாசிப்பு அனுபவத்தின் பேருதவியோடு கூடிய தனது ஆவலான முயற்சிகளை, இதயம் தொட்ட இலக்கியவாதிகளுடனான தனது நட்புப் பயணத்தை உணர்வுப் பூர்வமாக, அன்போடும், பண்போடும், மதிப்பு மரியாதையோடும் பதிவு செய்து தனது முதல் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார் ஐயா அவர்கள்.

சக பதிப்பக நிறுவனங்களோடு எத்தகைய ஆழமான உறவினைக் கைக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக வானதி பதிப்பகமே இவரது இந்த அருமையான நூலை வெளியிட்டு அவரை எழுத்துலகில் உயர்த்திப் பிடித்திருக்கிறது. எனக்குள் உறக்கத்திலும் விழித்துக் கொண்டிருந்த இந்தப் படைப்பு மேதைகள் எழுத்து வடிவில் உருப்பெற்றிட முழு முதற்காரணம் அமுதசுரபி ஆசிரியர் திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்தான் என்று நன்றியோடு தெரிவிக்கிறார்.

கவியரசு கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, மு.வரதராசனார், சுஜாதா, கவிஞர் மீரா, கவிக்கோ அப்துல் ரகுமான், வ.விஜயபாஸ்கரன், ஆகிய படைப்பாளிகளோடு ஏற்பட்ட அனுபவங்களையும், வானதி திருநாவுக்கரசு, அருட்செல்வர் திரு.நா.மகாலிங்கம், பழனியப்ப செட்டியார், சக்தி வை.கோவிந்தன் ஆகிய பெருந்தகைகளோடு ஏற்பட்ட பழக்கமும் நெருக்கமும் கிடைத்த அனுபவங்களும் இப்புத்தகம் அழகாகவும், ஆழமாகவும், நெஞ்சைத் தொடும் வண்ணமும் அமைவதற்குக் கருணை செய்தது என்று மிகுந்த அடக்கத்தோடு விவரிக்கிறார்.

மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு.வரதராசனார் அவர்களின் புத்தகங்கள் எங்கே…எங்கே என்று கேட்டு, துரிதமாக விற்ற காலம் அது. வரிசையில் நின்று புத்தகங்களை வாங்கிய வாசகர்கள். 1974 ல் அகிலன் கருத்தரங்கம் பல்கலையில் நடைபெற்றபோது அதற்குச் சென்றிருந்த எங்களுக்கான உபசரிப்பு வாழ்நாளில் மறக்க முடியாதது. அதற்குப்பின் அவரது புத்தகங்களைக் கோவையில் என் விற்பனையரங்கில் அதிகம் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டினேன். திருக்குறளுக்கு அருமையாக உரை எழுதிக் குறைந்த செலவில் அதைப் பதிப்பிக்க உதவி, தமிழர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டவர் மு.வ. அவர்கள் என்று நன்றியோடும், மிகுந்த மதிப்போடும் பதிவு செய்கிறார் ஐயா அவர்கள்.

கோவையில் நடைபெற்ற நா.பா.வின் குறிஞ்சிமலர் வெளியீட்டு விழாவில் கு.அழகிரிசாமி அவர்களோடு ஏற்பட்ட பழக்கமும், அவர் காலமான போது அதே நாளில் நடிகர் அசோகனும் இறந்த செய்தி வர, பத்திரிகைகள் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட அவலத்தை வருத்தத்தோடு சொல்லிச் செல்கிறார்.

கண்ணதாசன் பொன்விழா மலர் தயாராக, அதன் வெளியீட்டு விழா கோவையில் ஏற்பாடாக, அந்த விழாவுக்கு சாண்டோ எம்.எம்.சின்னப்பாத்தேவர் வர, அவருக்குத் தன் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் என்று கண்ணதாசன் கேட்க, கவிஞரின் புத்தகங்களையெல்லாம் அடுக்கி எடுத்துப் போக, இவ்வளவு புத்தகங்களா நான் எழுதியிருக்கிறேன் என்று கவிஞர் வியக்க, இவ்வளவு புத்தகங்களையா நீங்கள் விற்பனை செய்கீறீர்கள் என்று தேவர் வியப்போடு கேட்டு, இவரது கடைக்கு விஜயம் செய்ய, குமுதத்தில் எழுதிய “இந்த வாரம் சந்தித்தேன்” தொடரில் விஜயா பதிப்பகம் பற்றியும், தன்னைப் பற்றியும் கவியரசர் கண்ணதாசன் எழுதியதை நன்றியோடு நினைவு கூறி மகிழ்வதைப் படிக்கும்போது எப்படிப்பட்ட வாய்ப்புக்களெல்லாம் கிடைத்திருக்கிறது இவருக்கு என்று நம்மைப் பொறாமைப்பட வைக்கிறது. எழுதியதை வரவு வைக்காமல், எழுதும் சுகத்திற்காகவே எழுதியவர் கவிஞர் என்று திரு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்.

கோவையில் நூல் வெளியீட்டு விழாவுக்கு ஜெயகாந்தனும், நாகேஷூம் வர, இரயிலில் தூங்கிப்போய் மேட்டுப்பாளையம் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து டாக்சி பிடித்து வந்து சேர்ந்த கதை ஸ்வாரஸ்யம். ஜெ.கே.யின் நூல்களை அன்று வெளியிட்டு வந்தது மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தார். எங்களுக்குள் கணக்குகள் உண்டே தவிர வழக்குகள் இல்லை என்று வெள்ளந்தியாக பெருமிதத்துடன் சொன்னவர் ஜெ.கே. என்பதைப் படிக்கும்போதும், அவர் மறைந்தபிறகு சில லட்சங்களை ராயல்டியாக அவரது குடும்பத்திற்கு மீனாட்சி புத்தக நிலைய முருகப்பன் வழங்கியதையும் எழுத்தாளனாய் எத்தனை மதிப்போடு வாழ்ந்து மறைந்தவர் அவர் என்று வியக்க வைக்கிறது. திரு.வை.கோவிந்தன் அவர்களின் சக்தி பத்திரிகையில் ஆரம்பத்தில் விஜயபாஸ்கரன் வேலை பார்த்ததும், பிறகு சரஸ்வதி பத்திரிகையில் ஜெ.கே. அவர்களின் முதல் கதையை அவர்தான் பிரசுரம் செய்தார் என்று ஜெயகாந்தன் பெருமிதம் பொங்கக்கூறியதையும் நினைவு கூர்கிறார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *