ஒற்றை மரம்
உச்சிவெயிலுக்குப்பயந்து
நிழலை ஒளிக்கிறது
தன் காலடியில்
சிலை நிற்கிறது
சிதையாத துக்கம்
சிதைக்க
சிலையாய்
முட்டைக்குள்ளிருந்து
வெளியேறும் குஞ்சு
நிஜத்தில் கால் வைக்கிறது
இதயம் முழுக்க கனவுகளோடு
இயற்கையின் சிரிப்பில்
மனிதனின் கற்பனைகள்
பூக்களாக…கனிகளாக…
வாழ்வெங்கும் விளையும்
ஒருத்தரின் இறப்பில்
மற்றவரின் உயிர்ப்பு
பேரமல்ல
இருப்பின் வாழ்வு
பூக்களை விளைவிப்பவனே
நீ புத்தனாகி விடமாட்டாய்
உன் மனது
கனியாவிட்டால்
கதைஞன் கஞ்சியில்லாமல் சாகிறான்
கவிஞன் ஆதரவிழந்து காலாவதியாகிறான்
விருது விருதா
கலை இலக்கியங்கள் யாவும்
விருது தேடித் திரிகிறார்கள்
வீரதீரம் கக்குகிறார்கள்
கோபுரம் ஏறித் தின்றாலும்
வெள்ளாடு கறிக்குத்தான்
சிரிப்பிற்குள்ளே நெருப்பிருக்கும்
நெஞ்சுக்குள்ளே விஷமிருக்கும்
தீண்டும் கணம் மரணம்
உதடுகள் கொண்டு வா
முத்தங்களை விளைவிப்போம்
பொங்கி எழும் காதல் வழிந்துவிடப்போகிறது
கடவுளுக்கு நூறு உருவங்கள்
மனிதனுக்கு ஆயிரம் முகங்கள்
அரூபமாய் திரிகிறது வாழ்க்கை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.