நாவலின் தலைப்பே வியப்பேற்படுத்துகிறது. பொதுவாக யூதாசின் பெயர் என்பது துரோகத்தின்
குறியீடாக 2000 ஆண்டுகளாக வரலாறு எங்கும் பயணித்து வந்திருக்க நாவலாசிரியர் நற்செய்தி
கொண்டு வந்த தேவ தூதனாக காட்சிபடுத்தியிருக்கிறார். 30 வெள்ளிக் காசிற்காக இயேசுவை
காட்டி கொடுத்ததாக தீராப்பழி சுமந்தலையும் யூதாஸ் இந்த நாவலை வாசித்திருந்தால் சற்று
ஆசுவாசம் அடைந்திருப்பார். யூதாசால் காட்டிக் கொடுக்கப்படாவிட்டாலும் தன்னைத் தானே
வெளிப்படுத்திக் கொண்டு இயேசு என்றோ மரித்திருப்பார். எல்லாம் கதாசிரியனின்
கையிலிருக்கிறது. ஒருவன் வல்லவனாவதும் வில்லனாவதும்.
நாவல் என்ன சொல்ல வருகிறது. எமஜென்சி கால அரச பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட ஒரு
புரட்சிகர போராளிக் குழுக்களை பின்னிருத்தி அதனுடாக காதல் கதையை பின்னியிருக்கிறார்
கதாசிரியர். அரூபத்தின் மொழியில் முன்பின்னாக கதை போகிறது. புரட்சியின் போர்க்களத்தில்
அரச பயங்கரவாதத்தின் வன்முறையில் காதலியை துன்புறுத்துவதை சகிக்காமல் காட்டிக் கொடுத்து
விடும் சூழ்நிலை கைதியாய் வாழ நேரிடுகிறது. காதலி காப்பாற்றப்படுவாள் என்று நம்பி சொன்ன
பொய் அவனை ஏமாற்றிவிடுகிறது. அவளை கொன்று ஏரியில் எறிந்து விடுகிறார்கள்.
காதலியை காப்பாற்ற முடியாத விரக்தியில் அவள் நினைவாக ஆறாத குற்ற உணர்ச்சியை போக்கும்
விதமாக ஏரியில் குளத்தில் கிணற்றில் விழுந்து சாகும் பிணங்களை கண்டுபிடித்து நீரில் மூழ்கி
எடுத்து வருகிறான். அங்கே துவங்குகிறது கதை 15 வயதே ஆன சிறுமியொருத்தி 35 வயதான
யூதாஸ் என்ற இளைஞனிடம் காதல் வயப்படுகிறாள். ஆனால் அந்த இளைஞன் அந்தக் காதலை
ஏற்றுக் கொள்ளவில்லை திடீர் திடீரென ஊரை விட்டு ஓடி விடுகிறான். அவன் போகுமிடமெல்லாம்
தேடித் தேடி ஒடுகிறாள். அவனுக்குள் இருக்கும் முன்னாள் காதலியின் நினைவுகள் அவனை
அக்காதலை ஏற்க விடாமல் தடுத்து விடுகிறது.
கதையில் உறுத்தலான விஷயம் என்னவென்றால் விதித் தத்துவத்தை கொண்டு வந்து சுய
சமாதானம் பேசுவது. அரச பயங்கரவாதத்தின் கைகூலியாக இருந்த காவல் துறை அதிகாரி
குடும்பத்தில் அநேக துர்மரணங்கள் நடைபெறுகிறது. அது பாவத்தின் சம்பளமாக கூறப்படுகிறது.
அப்படி பாவ புண்ணியங்கள் உண்மையெனக் கொண்டால் போராடி செத்து மடிந்த போராளிகளின்
மரணங்களை கொச்சைபடுத்துவது போலாகிவிடும்.
அக்கருத்துத்துக்களை நீக்கி இருக்கலாம்.
யூதாசின் நற்செய்தியாக நான் கருதுவது என்னவென்றால். போராட்டக்களத்தில் தோல்வியுற்றாலும்
மக்களுக்கான சேவை செய்வதில் பின்வாங்கி விடக் கூடாது என்ற கருத்தையே நாவல் சொல்கிறது
என்று எடுத்துக் கொள்கிறேன். சுவை பட நாவலை சொன்ன எழுத்தாளர் கே.ஆர். மீரா
அவர்களுக்கும், தமிழில் மொழிபெயர்த்த மோ.செந்தில்குமார் அவர்களுக்கும் வாழ்த்துகளும்
பாராட்டுகளும்.
நூலின் தகவல்
நூல் : யூதாசின் நற்செய்தி
ஆசிரியர் : கே.ஆர். மீரா
தமிழில் : மோ. செந்தில்குமார்
பக்கம் : 112
விலை : 200
பதிப்பகம் : எதிர் வெளியீடு
எழுதியவர்
செ. தமிழ்ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.