கேரள ஆளுநர், ஆரிப் முகமது கான், மாநிலப் பல்கலைக் கழகங்களின் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற நிலையைத் துஷ்பிரயோகம் செய்து, தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், ஆளுநர் கேரளப் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தரை நியமனம் செய்வதற்காக, இது தொடர்பான சட்டத்தின் ஷரத்துக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஒரு பொறுக்குக்குழுவை (search committee) நியமனம் செய்திருக்கிறார். அமலில் இருந்துவரும் சட்டத்தின்படி மூன்று பேர் கொண்ட ஒரு பொறுக்குக் குழு நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் நபர்களில் ஒருவர் பல்கலைக் கழகத்தாலும், ஒருவர் வேந்தராலும், ஒருவர் பல்கலைக் கழக மான்யக்குழுவாலும் பரிந்துரைக்கப்பட வேண்டும். ஆனால் ஆளுநர் இதனைப் புறந்தள்ளிவிட்டு, பல்கலைக் கழகத்தால் பரிந்துரைக்கப்படும் நபர் இல்லாமல், இரு நபர் குழுவை அமைத்திருக்கிறார்.

முன்னதாக, ஆளுநர் கண்ணூர் பல்கலைக் கழகத்தற்கு அங்கிருந்த துணை வேந்தரை மறு நியமனம் செய்வதற்கான நியமன உத்தரவில் கையொப்பமிட்டுவிட்டு, அவ்வாறு அவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதைக் கேள்விக்கு உள்ளாக்கினார். இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், மிகவும் புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான அந்தத் துணை வேந்தரை, அவர் பொதுவெளியில் ஒரு ‘கிரிமினல்’ என்று விளித்ததாகும். தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரம் போன்ற பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் அப்பட்டமாகத் தலையிடுவது போன்றும், அங்கேயுள்ள பல்கலைக் கழகங்களின் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது போன்றும் கேரளாவின் அனுபவமும் அமைந்திருக்கிறது. மாநில ஆளுநர்களை, மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில் அம்மாநிலப் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதிலும் மாநிலப் பல்கலைக் கழகங்களின் நடவடிக்கைகளைக் கட்டளையிடுவதும் ஆர்எஸ்எஸ்/பாஜக ஒன்றிய அரசாங்கத்தின் சூழ்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியேயாகும். இவ்வாறு ஆளுநர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக, கேரள சட்டமன்றம் பல்கலைக் கழகச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவை (University Laws (Amendment) Bill)க் கொண்டுவந்து சென்ற வாரம் நிறைவேற்றியது. இந்தத் திருத்தத்தின்மூலம் பொறுக்குக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டது. இவ்வாறு புதிய நபர்கள் இருவரும் மாநில அரசாங்கத்தாலும், கேரள மாநில உயர் கல்வி கவுன்சிலின் துணைத் தலைவராலும் (vice chairperson of the Kerala State Higher Education Council) முறையே நியமனம் செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில், திமுக அரசாங்கம், இந்த ஆண்டு ஏப்ரல் மாதரத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தி நிறைவேற்றியுள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள பதின்மூன்று பல்கலைக் கழகங்களுக்கும் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்து, சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்தின் சட்டமன்றத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி அம்மாநிலத்தின் பல்கலைக் கழகங்கள் அனைத்திற்கும் மாநில முதல்வரே வேந்தராக இருப்பார். இந்தச் சட்டமுன்வடிவுகளை தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தபோதிலும், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகச் சட்டமானது அங்கே துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு அங்கேயுள்ள பொறுப்புக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று நபர்களிலிருந்து ஒருவரை நியமனம் செய்வதற்கு மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

மாநில அரசாங்கங்களின் கீழ் நடைபெறும் மாநிலப் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்படுவதே ஜனநாயகபூர்வமான கொள்கையாகும். துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கான அதிகாரம் ஆளுநர்களிடம் இருக்கக்கூடாது என்றும் இதற்கு அரசமைப்புச்சட்டம் இடம் அளிக்கவில்லை என்றும் மத்திய-மாநில உறவுகள் குறித்து விசாரணை நடத்திய நீதியரசர் மதன் மோகன் பஞ்ச்சி ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

வழக்கம்போலவே, இதற்கான திருத்தச் சட்டமுன்வடிவு கேரள சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி, மாநில அரசாங்கம் பல்கலைக் கழகத்தின் சுயாட்சியை அரித்துக்கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டி, திருத்தச் சட்டமுன்வடிவை எதிர்த்தது. ஆனால் இதே காங்கிரஸ் கட்சி, துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கி, தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் திருத்தச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டபோது அதனை ஆதரித்தது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக அது மேற்கொண்டுவரும் விரோதத்தின் காரணமாக அங்கே ஆளுநர் மூலமாக பாஜக மேற்கொண்டுவரும் நிகழ்ச்சிநிரலுக்கெல்லாம், கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சி வசதி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மாநில ஆளுநர்கள், ஒன்றிய அரசாங்கத்தின் முகவர்களாகச் செயல்படுவதென்பது மாநிலப் பல்கலைக் கழகங்களை நடத்துவதில் மட்டுமல்ல. ஒன்றிய பாஜக ஆட்சியின்கீழ், ஆளுநர்கள் மாநில சட்டமன்றங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களின் நடவடிக்கைகளை முறியடித்திடும் கருவிகளாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் இந்த ஆண்டு பட்ஜெட் அமர்வு தொடங்கும்போது சட்டமன்றத்தில் உரையாற்றவேண்டிய கொள்கை மீதான உரை (policy address)யில் கையெழுத்திடக்கூட ஆளுநர் மறுத்தார். இறுதியாக, சட்டமன்ற அமர்வு தொடங்க ஒருசில மணிகளுக்கு முன்னர்தான் அதனை அவர் செய்திட்டார்.

ஆளுநர்கள் என்போர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் கொடுத்தாக வேண்டும். பல்கலைக் கழகத் திருத்தச் சட்டமுன்வடிவு சம்பந்தமாக, ஆளுநர் கான், தான் அதனைப் படித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என். ரவி, மாநில சட்டமன்றத்தில் நிறைவற்றப்பட்டுள்ள பல்கலைக் கழகத் திருத்தச் சட்டமுன்வடிவிற்கும் மற்றும் பல சட்டமுன்வடிவுகளுக்கும் இதுவரையிலும் இசைவு (assent) அளித்து கையெழுத்திடவில்லை.

இவ்வாறு சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு இசைவு அளித்துக் கையெழுத்திடாமல் இருப்பது அரசமைப்புச்சட்ட முட்டுக்கட்டையை உருவாக்கிடும். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் மீதும், மாநிலங்களின் உரிமைகளின் மீதுமான தாக்குதல்களின் மற்றுமொரு வடிவமாகும்.

(செப்டம்பர் 7, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *