na ka thuraivan by kavithaigal ந க துறைவன் - கவிதைகள்
na ka thuraivan by kavithaigal ந க துறைவன் - கவிதைகள்

ந க துறைவன் – கவிதைகள்

செம்பருத்திப் பூப் பறிக்க வந்தவள்
அவனைப் பார்த்தவுடன்
தலை கவிழ்ந்து விலகி நின்றாள்
மெல்ல தயங்கியபடி
பூ கொஞ்சம் பறிச்சிக்கவா என்று கேட்டாள்
உம்… உம்…பறிச்சிட்டு போ என்றான்
அவள் புன்னகையோடு பறித்தாள்
செடி அசைந்தது
மடி நிறைய பூ…!!

கைகளிலிருந்து பொருள் நழுவியது
கவனக் குறைவால்
அதற்காக வருத்தப்பட்டு
மனம் நொந்தான்
தவறி நழுவுவது ஏதேச்சையானது
நாமாக தவற விட்டால்
அது தவறு
அஃதொரு மனப் பதட்டம்
ஏதேனும் பிரச்சினை என்றால்
நண்பன் கூட
நம்மை விட்டு நழுவிப் போகிறான்

வண்ணத்துப்பூச்சியே
நீ தேடுவது
உனக்குக் கிடைத்து விடுகிறது
நான் தேடுவது
எனக்கு இன்னும் கிடைத்தபாடில்லை
நீ அதிர்ஷ்டசாலி
எனக்கும் என்றேனும்
ஒரு நாள்
கிடைக்காமலா போகும்?
கிடைக்கும்
அதற்காகக் காத்திருப்பேன்
காத்திருப்பதிலும்
இருக்கத்தானே செய்கிறது
தனியொரு சுகம்.

அடுத்தவரை ஏளனமாக
நினைத்துப் பேசுவோர் ஏராளம் உண்டு
அது அவர்களுக்கே உரிய குணம்
அதைப் பற்றிக் கவலைப்படாதே

நீ உன்பாட்டிற்கு உன் வழியில் போ
அறிவுரை வழங்கினார்
அவனும் சரி சரி என்று தலையசைத்து
பாதையில் நடந்தான்
வேகமாய் பைக்கில் வந்தவன்
ஏண்டா வீட்லே சொல்லிட்டு வந்தியா?
ரோடு பாத்து நடந்து போ என்றான்
வெட்கத்தில் தலை கவிழ்ந்து மீண்டும்
நடந்தான்

நூல் பொம்மையாக இருக்க வேண்டாம்
பிளாஸ்டிக் பொம்மையாக இருக்க வேண்டாம்
பீங்கான் பொம்மையாக இருக்க வேண்டாம்
கல் பொம்மையாக இருக்க வேண்டாம்
மண் பொம்மையாக இருக்க வேண்டாம்
எளிதில் கரையும்
உப்பு பொம்மையாக இருக்க வேண்டும்
நான்.

ந க துறைவன். வேலூர் – 632 009
செல் எண்: 9442234822
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *