இந்த கட்டுரையை படிக்கத் தொடங்கும் போது, ​​‘திஷா’ வழக்கில் சென்னகசவுலு, முகமது அரீப், நவீன் மற்றும் சிவா ஆகியோரை ஹைதராபாத் காவல்துறையினர் கொலை செய்த போது ஏற்பட்ட எதிர்வினைகள் குறித்து நீங்கள் சற்றே சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறோம். விரைவாக வழங்கப்பட்ட ‘நீதி’ என்ற வகையில் நடத்தப்பட்ட கூட்டு கொண்டாட்டங்கள் குறித்த நினைவுகளை, 2019 டிசம்பரில் நடைபெற்ற அந்த சம்பவம் உங்களிடம் நிச்சயமாக கொண்டு வரும். மலர்களைத் தூவியது, உடனடியாக நீதி வழங்குகின்ற வகையில்  இத்தகைய நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உத்வேக கூச்சல்கள், அத்தகைய காவல்துறை அதிகாரிகள் மீது நாம் கொண்ட பெருமை ஆகியவை இன்னும் நம் நினைவில் அழியாது தெளிவாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் காவலில் வைக்கப்பட்டிருந்த போது இப்போது நடைபெற்றிருக்கும் கொலைகளுக்கான நமது எதிர்விளைவுகளுக்கு மாறாக அந்த நினைவுகள் இருக்கின்றன. தந்தை, மகன் என்று இருவருக்கும் இழைக்கப்பட்ட கொடூரமான வன்முறை குறித்து பிரபலங்கள், ஊடக தளங்கள், அரசியல்வாதிகள், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பயனர்கள், பொதுமக்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். ‘சட்டத்தின் ஆட்சி’ நமது  சமூகத்தில் இல்லாததைப் பற்றி புலம்புகின்ற வேளையில், காவல்துறையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், காவல்துறை தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது போன்றவற்றை இவர்கள் அனைவரும் கூட்டாக நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து நாம் எதிர்வினையாற்றுவதில் உள்ள வேறுபாடு தனித்தன்மை கொண்டிருக்க முடியாது. இந்த வேறுபாட்டின் மையமாக எது இருக்கிறது? ஹைதராபாத்தில் அந்த நான்கு பேர் மீதும் பாலியல் பலாத்காரம், கொலை மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடலை எரித்தது என்று குற்றம் சாட்டப்பட்டதால் அது நம்மை கலகம் செய்யும் நிலைக்குத் தள்ளியதா? அந்த நான்கு நபர்கள்தான் பொறுப்பு என்று காவல்துறையினர் நம்மிடம் சொன்னபோது, உடனடி (ஆனால் சட்டவிரோதமான) நீதி கிடைக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு உண்மையில் நாம் ஏன் தயாராக இருந்தோம்?

C:\Users\Chandraguru\Pictures\sathanakulam.jpg

எந்தவொரு நீதிமன்றமும் அந்த வழக்கின் மீது கவனத்தைச் செலுத்தியிருக்கவில்லை என்ற போதிலும், தார்மீகரீதியான நமது தீர்ப்பிற்கும், காவல்துறை அதிகாரத்தின் வரம்புகளுக்கும் இடையிலான இடைவெளியை நாம் வசதியாக மழுங்கடித்து விட்டு, அவர்கள் நான்கு பேரும் செய்ததாக நாம் நம்பிய செயல்களுக்காக, அவர்கள் அனைவரும் அந்த வகையில் கொல்லப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்றே நாம் அப்போது நம்பினோம்.

வித்தியாசமான எதிர்வினை

ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோருக்கு நடந்தவற்றைப் பொறுத்தவரை, உண்மையில் எது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். விதிகளை மீறி மரணத்தை ஏற்படுத்துகின்ற வகையில், அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதாலா? அல்லது நம்மிடையே இப்போது இருக்கின்ற அதிர்ச்சி அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளதா – அதாவது பொதுமுடக்க தளர்வு கடந்த  பிறகு மேலும் சில நிமிடங்கள் தங்கள் கடையைத் திறந்து வைத்ததற்காக அவர்கள் இந்த முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தாலா? காவல்துறையினர் நடத்துகின்ற அதிகார துஷ்பிரயோகத்தில் எவற்றையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்வோம் அல்லது ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது, காவலில் இருப்பவர்கள் மீது காவல்துறையால் சுமத்தப்படும் குற்றங்கள் குறித்து நம்மிடையே இருக்கின்ற தார்மீக மதிப்பீட்டுடன் உள்ளார்ந்து இணைந்திருப்பதாகவே தோன்றுகிறது. பாலியல் குற்றவாளிகள், பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் என்று  கருத்துக்களாஈ நம் முன்பாக வைத்து, ​​அவர்களால் சொல்லப்படுகின்ற கதைகள் மீது நமக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுவதை நாம் காண்கிறோம். அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆர்வமும் நம்மிடையே இருக்கிறது. உண்மையில் அந்த கும்பல் நீதியிலிருந்து சில படிகள் தொலைவிலேயே நமது ஆர்வம் உள்ளது. காவல்துறையையும், சட்ட அமைப்பையும் மோசமான வேலைகளைச் செய்வதற்கு நாம் அனுமதிக்கிறோம். ஆனால் இந்த முறை நாம்  வித்தியாசமாக முடிவெடுத்து, அவர்களுடைய பக்கம் நாம் இருப்பதற்கு, ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். வெவ்வேறு சூழல்களில், நமது எதிர்வினைகள்  மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.

தரவுகள் 

இந்த வழக்கில் நமது எதிர்வினைகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் உரிய செயல்முறைக்கான அர்ப்பணிப்பு என்று தவறாக நினைக்காமல் இருப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சித்திரவதை மற்றும் அதற்கான பொறுப்பை நிர்ணயிப்பது குறித்த நமது பொது மற்றும் சட்ட உரையாடலின் களநிலவரங்கள் மிகவும் மாறுபட்ட சித்திரத்தையே நமக்குத் தருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், காவலில் இருக்கும் போதான மரணங்கள் (காவல்துறை மற்றும் சிறைச்சாலை) குறித்து, இந்தியாவில் ஏறத்தாழ 5,300 புகார்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு வந்துள்ளன. இந்த எண்ணிக்கை அத்தகைய மரணங்களின் உண்மையான எண்ணிக்கையில் ஒரு பகுதியே என்று நம்மால் உறுதியாகக் கூற முடியும்.

Tamil Nadu custodial deaths: NHRC issues notice to state police ...

இத்தகைய மரணங்கள் குறித்து புகாரளிப்பதே கடினமாக இருக்கின்ற நிலையில், பொறுப்பேற்பை நிர்ணயிப்பதற்கான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடுப்பது போன்ற சட்டரீதியான செயல்முறைகள் இன்னும் பல தடைகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. 2000 மற்றும் 2018க்கு இடைப்பட்ட காலத்தில், காவல்துறையின் காவலில் 1,727 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 26 காவல்துறை அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவலில் சித்திரவதை செய்வது, கொல்லப்படுவது ஆகியவை வெளிப்படையான ரகசியமாக இருக்கின்ற  இந்த நாட்டில், காவலில் நடக்கின்ற சித்திரவதைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து, சித்திரவதைக்கெதிராக வழக்குத் தொடர உதவுகின்ற உள்நாட்டுச் சட்டம் நம்மிடம் இன்னும் இல்லை என்பது குழப்பம் தருவதாகவே இருக்கிறது. இது தொடர்பாக வழக்கமாக இருந்து வருகின்ற குற்றவியல் சட்டத்தின் போதாமைகளுடனே, நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.

மழுங்கடிக்கப்படும் பிரச்சனை 

காவல்துறை காவலில் இருக்கும் போது ஒருவர் இறந்துவிட்டால், தாங்கள் அதற்கு பொறுப்பல்ல என்பதைக் காட்ட வேண்டிய பொறுப்பு காவல்துறை மீதே இருக்க வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்த போதிலும், காவல்துறையினரே மரணத்திற்கு காரணம் என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர்களே நிரூபிக்க வேண்டும் என்றே இன்னும் சட்டம் சொல்கிறது. சித்திரவதைகளுக்கான தீர்வு காண்பதில் இந்தியாவிடம் இருக்கின்ற அரசியல் அர்ப்பணிப்பு, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கத் தவறியதன் மூலம் வெளிப்படுகிறது. அதன் மூலம் அதை ஏற்றுக்கொள்ளாத 19 நாடுகளின் பட்டியலுக்குள் இந்தியா தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சித்திரவதைகளைத் தடுப்பதற்கும், பொறுப்புணர்வை சரிசெய்யவும் பல நடவடிக்கைகளை இந்திய உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது, ஆனாலும் இந்த தீர்ப்புகள் மிக அரிதாகவே பின்பற்றப்படுகின்றன. சட்டமன்றத்தின் ஆணைகளும் கூட இதே நிலைமையே எதிர்கொள்கின்றன. காவலில் வைக்கப்பட்டவர்களின் மரணம் குறித்த வழக்கமான காவல்துறை  விசாரணையைத் தவிர, தனித்த மாஜிஸ்திரேட் விசாரணையை சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இதுபோன்ற விசாரணைகள் சுமார் 20% காவலில் வைக்கப்பட்ட மரணங்களில் மட்டுமே நடந்துள்ளன என்பது நமது நிறுவன அக்கறையின்மையின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, காவலில் சித்திரவதை செய்ததற்காக காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படுகிறது.

Friends of Police involved in custodial death had no authorised ...

சித்திரவதை ஏன் பரவலாக இருக்கிறது என்ற கேள்விக்கு நேரடியான பதில்கள் கிடைப்பதில்லை. காவல்துறையை நவீனமயமாக்காமல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியிருப்பதால், அந்த அமைப்பு சித்திரவதைகளைத் தூண்டுகிறது என்பது நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கும். இருப்பினும், காவல்துறை வன்முறை விசாரணைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாமல், அதையும் மீறிச் செல்வதாகவே இருக்கிறது. ‘சமூகத்தின் சார்பாக மோசமான குற்றவாளிகளுக்கு சித்திரவதைகளைப் பயன்படுத்து கற்பிக்க வேண்டியது அவசியமாகிறது என்று காவல்துறையினரால் பெரும்பாலும் நியாயப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இங்கே ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரைக் கொன்றதில், தண்டனைகளிலிருந்து தங்களுக்கு விலக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலிருந்தே காவல்துறை இந்த அளவிற்கான வன்முறையைத் தூண்டியது போலத் தெரிகிறது. காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்து விடும் போது, அதற்கான பொறுப்பேற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்பதை அவர்கள் அறிவார்கள் என்ற சித்திரவதை குறித்த ஆழ்ந்த கவலை கொள்ள வைக்கும் அம்சத்தை அது பிரதிபலிப்பதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள், ஒரு சில காவல்துறையினரால் செய்யப்பட்டவை என்று நினைப்பது நாம் செய்யக்கூடிய மிக மோசமான செயலாக இருக்கும். இந்த வகையான வன்முறையை அதிகரித்துக் கொள்வது, பாதுகாப்பது, கொண்டாடுவது என்று நிறுவனம் சார்ந்த  பொதுக்கலாச்சாரம் இருந்து வருகிறது. அந்த கலாச்சாரத்தின் மையத்தில், அது ‘தகுதியானது’ என்று நாம் உணரும் சூழ்நிலைகளில், நாம் கும்பல் நீதியைத் தழுவுவதற்கான வாய்ப்பு அமைகிறது. பெனிக்ஸ், ஜெயராஜ் போன்றவர்களின் கொலைகளை நாம் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சந்தர்ப்பங்களில், காவல்துறையின் மிருகத்தனத்தை கொண்டாடுவது, சகித்துக் கொள்வது என்பது அதே அளவிலான குற்றங்களை செய்வதைப் போன்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெனிக்ஸ், ஜெயராஜின் ரத்தம் நம் அனைவரின் கைகளிலும் இருக்கும்.

அனுப் சுரேந்திரநாத், நீதிகா விஸ்வநாத், டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகம் 

தி ஹிந்து நாளிதழ், 2020 ஜூலை 04 

https://www.thehindu.com/opinion/op-ed/police-violence-and-how-some-lives-do-not-matter/article31984186.ece

நன்றி: தி ஹிந்து நாளிதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *