Santhathipizhai Book written By Pon kumar Bookreview By M. Anandhan நூல் அறிமுகம்: பொன்.குமாரின் சந்ததிப்பிழை புதுக்கவிதைகளில் அரவாணிகள் - மு.ஆனந்தன்

நூல் அறிமுகம்: பொன்.குமாரின் சந்ததிப்பிழை புதுக்கவிதைகளில் அரவாணிகள் – மு.ஆனந்தன்




பொன்.குமார் அவர்கள் எழுதிய “சந்ததிப்பிழை” என்ற நூல் திருநங்கையர்களைப் பாடிய புதுக்கவிதைகளை அடையாளப்படுத்தும் நூலாக வந்துள்ளது. இது தமிழ் இலக்கிய வெளியில் புதிய முயற்சி. தேவையான முயற்சியும் கூட. அதற்காகவே பொன்.குமார் அவர்களுக்கு ஆயிரம் ஆவாராம் பூக்களை அன்பின் வெளிப்பாடாக அளிக்கிறேன். மாறிய பாலினம் குறித்து கவிதை வடிப்பதே வரவேற்க வேண்டிய அம்சம். அதிலும் அப்படி எழுதப்பட்ட கவிதைகளையெல்லாம் தேடிச் சேகரித்து, தொகுத்து அதன் மீது உரையாடலும் நடத்தியிருக்கிறார். எவ்வளவு முக்கியமான முன்னெடுப்பு.

க.நா.சு, மீரா, இன்குலாப், அப்துல்ரகுமான் என நாடறிந்த கவிகள் தொடங்கி நாம் இதுவரை அறிந்திராத கவிகள் வரை யாரெல்லாம் தங்கள் கவிதைகளில் திருநங்கைகளின் வலிகளைப் பதிவு செய்துள்ளார்களோ அவர்களது அந்தக் கவிதைகளையெல்லாம் அள்ளியெடுத்து தேக்குமர இலையில் பொதிந்து நமக்குத் தருகிறார். திருநங்கையர் கவிதை என்றாலே நமக்கு நா.காமராசன் அவர்களின் கவிதைதான் ஞாபகம் வரும். ஆனால் இந்நூலை வாசிக்கும் போது “இவர்களும் இப்படி எழுதியுள்ளார்களா” என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

உதாரணத்திற்கு கவிஞர் இன்குலாப் அவர்களின் ஒரு கவிதையைச் சொல்கிறேன்.

நானு ஆணுன்னு இல்லாம
பெண்ணுன்னு இல்லாம
அரவாணியா பொறந்தேனுட்டு
அண்ணந்தம்பி ஒதச்சாங்க
வீட்ட விட்டு வெளியே வந்த என்ன
ஊரே தொரத்தி அடிக்குதே
ஆணா இருந்திருந்தா
அம்பெடுப்பேன்
வில்லெடுப்பேன்
ஐவரோடு பங்கெடுப்பேன்.
பெண்ணாக இருந்திருந்தா
பூலோகம் ஆண்டிருப்பேன்
ஆணும் இல்லை பெண்ணும் இல்லை
அவல நிலை பாரும்மா..

ஒரு திருநங்கையின் குரலாக ஒலிக்கும் அற்புதமான கவிதை. இப்படியான ஏராளமான கவிதைகளை இந்த நூலில் அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் பொன்.குமார் அவர்கள். தமிழ் இலக்கிய வெளியில் திருநங்கையர் வகைமையை மட்டுமே முழுக்கப் பேசும் முதல் கவிதை நூல் “கூவாகம்”. ந.சிவகுரு மற்றும் பால சாகதன் ஆகிய இருவரின் கூட்டுத் தொகுப்பு இது. இந்த நூலை சிறப்பாக அறிமுகப் படுத்தியுள்ளார். அதிலிருந்து பல கவிதைகளை இந்நூலில் உலவிவிட்டுள்ளார். ஒரு கவிதையை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பெற்ற டிப்ளமோ
கற்ற நடனம்
எழுதிய கவிதைகள்
எல்லாம்…
ஒற்றை வார்த்தையில்
பொசுங்கிப்போனது
பொட்டை….

அரவாணிகளுக்கு குரல் கொடுக்கும் கவிஞர் ஆண்டாள் பிரிய தர்ஷிணி என்ற அத்தியாயத்தில், அவர்களுடைய “நானும் இன்னொரு நானும்” என்ற தொகுப்பிலிருக்கும் கவிதைகளை ஆய்வு செய்துள்ளார்.

பிரசவம்
செத்துப் பிழைப்பது
அரவாணி நிர்வாணம்
செத்துப் பிழைப்பது..

திருநங்கையர் ஆணுறுப்பு நீக்கத்தின் துன்பத்தை கச்சிதமாகச் சொல்லியுள்ளார் கவிஞர் ஆண்டாள் பிரிய தர்ஷிணி.. சங்க இலக்கியப் பாடல்களில் இலக்கணங்களில் இடம்பெற்றுள்ள மாறிய பாலினர் குறித்த சொல்லாடல்கள் அடையாளங்களையும் விவாதிக்கிறார்.

திருநங்கை சகோதரி கல்கி அவர்கள் எழுதிய “குறி அறுத்தேன்” என்ற கவிதை நூலைக் குறித்து விரிவாக பேசுகிறார். இது ஒரு திருநங்கை தன் வலியைப் பாடும் முதல் கவிதை நூலாகும். இதிலிருந்து பல கவிதைகளை கையாண்டுள்ளார். இந்தத் தொகுப்பை நான் ஏற்கனவே வாசித்துவிட்டு அதிலிருந்து மீண்டுவர இயலாமல் பல நாட்கள் தவித்தேன்.

உங்களின் ஆணாதிக்க குறியை
அறுத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் யார் என்பதை
அப்போது நீங்கள் அறிவீர்கள்
பிறகு சொல்லுங்கள்
நான் பெண்ணில்லை என்று..

இப்படியாக அந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும் வாசகனை மிரட்டுகிற கவிதையாக இருந்தது. அதனை இந்த நூலில் பொன்.குமார் சரியாக பயன்படுத்தியுள்ளார். நூல் முழுவதும் ஏராளமான கவிஞர்கள் எழுதிய ஏராளமான திருநங்கையர் கவிதைகள். அனைத்தையும் ஒரே நூலில் வாசிப்பது புதுவித மனக்கிளர்ச்சியை அளிக்கிறது. திருநங்கையரைப் பாடிய கவிதைகளைத் தொகுத்தது போலவே சிறுகதைகளையும் தொகுத்து வருகிறார்.

இந்த நூல் திருநர் இலக்கியத்தின் புதிய முகம். பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம். ஆய்வுக்கான கையேடு. எழுத்தாளர் பொன்.குமார் அவர்களுக்கு மனதில் பூக்கும் ஓராயிரம் ஆவாராம் பூக்களையும் செடியில் பூக்கும் பல்லாயிரம் வாழ்த்துகளையும் பரிசளிக்கிறேன்.

ப்ரியங்களுடன் – மு.ஆனந்தன்

நூல் – சந்திப்பிழை
ஆசிரியர் – பொன்.குமார் – 9003344742
வெளியீடு –நளம் பதிப்பகம்
பக்கங்கள் – 120
விலை – ரூ 120/-

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *