அவர் ஒரு மாணவர். அவர் ஒரு உணவு விற்பனை செய்பவர். அவர் ஒரு விஞ்ஞானி. மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருமே போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஏனென்றால் இவர்கள் மற்ற பிறரைப்போலக் கடந்த குளிர்கால மாதத்தில் நடந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பங்கு பெற்றவர்கள். அதன் பின் பிப்ரவரி வாக்கில் நடந்த கலவரத்திற்கு இவர்கள் பின்னணியாக இருந்து நரேந்திர மோடி அரசினை தூக்கி எறிவதற்காகச் சதி செய்து இந்தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் என்று போலிசார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களைப் போன்று சுமார் 70 பேர் இந்த போலீசாரின் விசாரணை வலையில் பிடிக்கப்பட்டனர்.
குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடந்த போது இளைஞர்கள் பங்கு பெற்றதில் உத்வேகம் ஏற்பட்ட தினேஷ் அப்ரோல் என்ற விஞ்ஞானி இளைஞர்கள் சமூகப் பார்வையற்றவர்கள் என்றோ தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறை உள்ளவர்கள் மட்டுமே என்றோ யாரும் சொல்ல முடியாது எனப் பெருமைப்பட்டார்.
தற்போது 67 வயது கொண்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான தினேஷ் அப்ரோல் இது போன்று எழுபதுகளில் எமர்ஜென்சிக்கு எதிராக மக்களுடன் போராடிய இளைஞர்களில் ஒருவராய் இருந்ததாகப் பெருமையடைகிறார். அப்பொழுது ஆராய்ச்சி மாணவனாக இருந்த போது காங்கிரஸ் அரசின் எமர்ஜென்சிக்கு எதிராகப் போராடி அதைத் தொடர்ந்து பல்வேறு சமூக இயக்கங்களில் பங்கு பெற்று வருகிறார். இவர் டெல்லி அறிவியல் இயக்கத்திலும் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கத்திலும் தேசிய அளவில் செயல்பட்டு வருகிறார்
இளைஞர்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மிகவும் வலிமையாகக் கூர்மையாக எதிர்வினையாற்றுவதும் போராடுவதும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிலையங்களில் பயின்று வரும் இளைஞர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கிளம்பியிருக்கும் போராட்டமாக இருக்கிறது என்கிறார்.
தனது சமகால விஞ்ஞானிகளிடம் இது போன்று போராடும் இளைஞர்களோடு நாம் இந்த நாடு குறித்து உரையாடக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு எந்த வித பாகுபாடின்றி எல்லோருக்குமான நல் எதிர்காலத்தை உருவாக்க முடியுமென்று கூறலாம் என்கிறார்.
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இஸ்லாமியப் பெண்கள் இளைஞர்கள் முதியவர்கள் என எந்தவித எதிர்பார்ப்புமின்றி தாங்களாகவே பங்குபெற்று இருக்கின்றனர். மேலும் இந்தப் போராட்டங்கள் மூலம் ஒரு மதச்சார்பின்மை இந்தியாவை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகிறது என்றும் இந்தப் போராட்டங்கள் அனைத்துமே மதச்சார்பின்மை, அமைதி, ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு என்றும் இதனை மேலும் கட்டமைக்க வேண்டும் என்றும் நம்பிக்கை கொள்கிறார்.
இந்தப் போராட்டங்கள் மக்கள் அறிவியல் இயக்கங்களின் நோக்கங்களுக்கேற்ப ஒத்திசைவு கொண்டதென்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் இதன் மூலம் ஒரு பன்முகப் பண்பாட்டு இந்தியாவை வளர்த்தெடுக்க முடியும் என்கிறார். அறிவியலும் கணிதமும் திறந்த பண்பாட்டுப் பரிமாற்றத்தின் மூலமே வளர்ந்திருக்கிறது என்பதை மக்கள் அறிவியல் இயக்கங்களின் தத்துவமாக இருக்கிறது. பன்முகமும் ஜனநாயக உணர்வுகளுமே இந்திய ஜனநாயகத்தையும் ஒற்றுமையும் உயிரோட்டமாக வைத்திருக்குமென்கிறார்.
டிசம்பர் 28 அப்ரோல் டெல்லி போராட்ட ஆதரவு வாட்ஸ் அப் குழுவில் இணைந்தார். இந்தக் குழுவை சினிமாத் தயாரிப்பாளர் சபா தவன், ராகுல் ராய் உருவாக்கி இருந்தனர். அப்ரோல் இந்தக் குழுவின் முதல் சில நபர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். இந்தக் குழுவே டெல்லி கலவரத்திற்குச் சதி செய்தது என்று போலீசாரால் தீர்மானித்திருந்தனர்.
ஆனால் பல போராட்டக் கூட்டங்களில் சென்று நேரடியாகவே உரையாடிய அப்ரோல் இதை மறுக்கிறார் மக்கள் போராட்டங்களைத் தானாகவே நடத்துகின்றர். எங்களுடைய பங்கு என்பது ஆதரவு மட்டுமே என்கிறார். இந்த குழுவின் நோக்கமே ஆங்காங்கு சென்று ஆதரவு உரையாடல் நடத்துவது குறித்த தகவல்களைக் கொடுப்பது மட்டுமே.
ஜனவரியில் போராட்டச் சூழல் மிகவும் தீவிரமாக மாறுகிறது. டெல்லி அசெம்பிளி தேர்தல் காலம். பீஜேபீ கட்சி போராட்டக்காரர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடும் பேச்சை ஆரம்பித்து விட்டனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராக கலவரத்தையும் தூண்டி விடுகின்றனர். இது அப்ரோல் குழுவினருக்குக் கவலையை அளித்தது. தங்கள் குழு ஜனநாயகப் போராட்டத்தை உயிரோட்டமாகத் தக்க வைப்பதற்கே செயல்பட்டதென்றும் கலவரத்தைத் தூண்டுவதற்கான சதியை பீஜேபீயினர் தான் செய்தனர் என்கிறார்.
ஜூலை மாதம் இந்த போராட்ட ஆதரவுக் குழுவினரின் உறுப்பினர்களை விசாரணைக்கு அழைத்தது போல் அப்ரோலையும் டெல்லி சிறப்புப் போலீஸ் குழு அழைத்து விசாரணை செய்தனர். அப்ரோல் குழுவினர் கிழக்கு டெல்லியில் ரோட்டை மூடியதாகவும் அதன் மூலம் கலவரத்தை உருவாக்க முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டினர். தாங்கள் ரோட்டைத் தடுக்கவில்லையென்றும் ஆனால் இது நடந்தது பற்றி வருத்தப்பட்டதாகவும் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
அப்ரோல் போலீசாரை நோக்கி நீங்கள் அங்கிருந்திருக்க வேண்டும் எனக் கூறினார். ஆனால் போலீஸ் ஆபீசரோ இல்லை.. இல்லை.. நீங்கள் தான் ரோட்டை மறைத்து இருக்கிறீர்கள். அமைச்சர்கள் போன்ற பலமிக்கோர் திட்டமிட்டுச் செய்கிறார்கள். எங்களால் உரையாடவும் பேசவும் மட்டுமே முடியும். அவர்கள் மக்களிடம் சென்று உரையாடினார்களா.. பேசினார்களா எனத் திருப்பிக் கேட்டார்.
இது போன்ற விசாரணையில் பிறரிடம் மிரட்டலாகவும் தூண்டி விடுவது போலாகவும் போலீசார் விசாரணை செய்தாலும் தன்னை 45 நிமிட விசாரணைக்குப் பின் விட்டு விட்டதாகக் கூறினார்.
நீங்கள் மிகவும் பலவீனமானவர்கயைும் குற்றம் செய்தவர்களையும் நீங்கள் மிரட்டலாம் ஆனால் நாங்கள் மிக பலமிக்க சிந்தனை கொண்டவர்கள் என்றும் எங்களது கடமைக்காக எந்த விலையையும் கொடுப்போம் என்கிறார்.
போலீசார்கள் கலவரம் நடக்க அனுமதித்து விட்டு போராட்டங்களைச் சட்டத்திற்கு எதிரானதாகவும் குற்றமெனவும் கூறியது மட்டுமல்லாமல் மக்களின் குரலைக் குற்றச் செயலாக முன் நிறுத்துகின்றர் என்கிறார்.
அரசும் போலீசும் எங்களின் குரலை நசுக்கி விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது. ஏனென்றால் நாங்கள் சிந்தனையாளர்கள். அவர்கள் எங்கள் மீது பயத்தை உருவாக்குகின்றனர். நாங்கள் என்னவென்று பார்த்துவிடுவது எனத் தயாராக இருக்கிறோம்.
பொ. இராஜ மாணிக்கம்
ஸ்கோரலில் Rubin D’Souza எழுதியதைத் தழுவியது.
நன்றி: ஸ்கோரோல் இணைய இதழ்