Sunday Class - A story of social justice in science Article by Joseph Prabhakar ஜோசப் பிரபாகரின் சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை




தனி மரம் தோப்பாகாது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தக் கதை தனி மரம் தோப்பானது மட்டுமல்ல ஒரு பெரும் காடான கதை. அந்த தனிமரத்தின் பெயர் என்ன? அவர் பெயர் எஸ்.வி.எம் சத்யநாராயணா. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர்.

Sunday Class - A story of social justice in science Article by Joseph Prabhakar ஜோசப் பிரபாகரின் சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை

இந்த மனிதர் சத்தமில்லாமல் ஒரு கல்விப் புரட்சியை செய்து இருக்கிறார். ஆம். மிகக்கடினம் என்று சொல்லப்படுகிற முதுகலை, இளங்கலை இயற்பியல் சார்ந்த பாடங்களை முதுகலை, இளங்கலை இயற்பியல் முடித்த ஏழை மாணவர்களுக்கு, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இருபத்து ஐந்து வருடங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறார். இந்த வகுப்பு சண்டே கிளாஸ் (Sunday class) என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது. அதாவது ஞாயிறு இயற்பியல் வகுப்பு. 1996-ஆம் வருடம் சத்ய நாராயணா அவர்கள் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் முனைவர் (பி.எச்.டி) மாணவராக இருந்த போது சென்னை பல்கலைக்கழகத்தின் நியுக்ளியர் பிசிக்ஸ் துறையில் உள்ள ஒரு கருத்தரங்க அறையில் (seminar hall) இந்த வகுப்பை ஆரம்பித்தார். இன்றும் அதே செமினார் ஹாலில் இவ்வகுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. 1996 ஆம் வருடம் சத்ய நாராயணாவுக்கு வயது 25. இன்று அவருக்கு வயது ஐம்பது. இதை வகுப்பு என்று சொல்வதை விட ஒரு அறிவியல் இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும். சண்டே கிளாசைப்பற்றி கடந்த காலங்களில் ஆங்கில இந்து பத்திரிக்கை, புதிய தலைமுறை கல்வி, அவுட்லுக் போன்ற பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வந்திருக்கிறது.

பேராசிரியர். சத்ய நாராயாணா ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தின் உப்பளப்பாடு என்ற கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை அந்த ஊரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டராக வேலை பார்த்தவர். சத்ய நாராயாணா தனது இளங்கலை இயற்பியலை அருகில் உள்ள கல்லூரியில் படித்து விட்டு முதுகலை இயற்பியல் மைசூரில் உள்ள ஒருங்கிணைந்த அறிவியல் – கல்வியியல்(Regional institute of Education) கல்லூரியில் படித்து முடித்தார். முனைவர் பட்ட படிப்பிற்கு அவர் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ஏன் இப்படியொரு வகுப்பு ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றியது?

இந்தியாவை பொறுத்த வரை IIT(Indian Institute of Technology), IMSc(Institute of Mathematical Sciences ), IISc(Indian Institute of Science), TIFR(Tata Institute of Fundamental research), IISER (Indian Institute of Science education and Research) போன்ற அறிவியல் உயர்கல்வி நிறுவனங்களில் மாதம் ரூ.32,000/ உதவித்தொகையோடு முனைவர் பட்ட ஆராய்ச்சி படிக்க வேண்டும் என்றால் முதுகலை இயற்பியல் படித்த முடித்த பிறகு நெட்(NET) தேர்வோ அல்லது கேட்(GATE) தேர்வோ தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் தமிழக மாணவர்கள் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது. ஒவ்வொரு வருடமும் ஒட்டு மொத்த தமிழகத்திலிருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். இதற்கு காரணம் பெரும்பாலான கல்லூரிகளில் பி.எஸ்.சி அல்லது எம்.எஸ்.சி இயற்பியல் பட்டப்படிப்பில் வெறுமனே கோட்பாடுகளை மட்டுமே சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் நெட்,கேட் தேர்வுகள் முழுக்க முழுக்க கோட்பாடுகளை பயன்படுத்தி கணக்குகளை தீர்க்கும் முறையில் வினாக்கள் கேட்கப்படும். மனப்பாட முறையில் படித்த மாணவர்களுக்கு இம்மாதிரியான கணக்குகளை தீர்ப்பது, இம்மாதிரியான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது.

இந்தச்சூழலில் 1993 ஆம் வருடம் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் சத்ய நாராயாணா அவர்கள் பி.எச்.டி மாணவராக சேர்ந்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வருடா வருடம் கோடை காலத்தில் கிராமத்து சூழலில் எம்.எஸ்.சி இயற்பியல் முதல் வருடம் படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல் முகாம் ஒன்று நடத்துவார்கள். இதன் பெயர் STIP (summer training program in Physics). இதன் நோக்கம் வசதி வாய்ப்பற்ற சூழலில் படித்த மாணவர்களுக்கு இயற்பியலில் இருக்கும் பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகளையும், விஞ்ஞானிகளையும் அறிமுகப்படுத்துவார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் நடக்கும். இதில் அப்போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்த சத்ய நாராயாணா அவர்களும் பாடம் நடத்துவார். இவரின் பாடம் நடத்தும் திறன், இயற்பியல் கணக்குகளைத் தீர்க்கும் திறனைக் கண்டு 1996 ஆம் வருடம் STIP பயிற்சிக்கு வந்த மாணவர்கள், சத்ய நாராயணாவை சென்னையில் தொடர்ந்து இயற்பியல் வகுப்பு எடுக்க கேட்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இவ்வகுப்பு அண்ணா பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வந்திருக்கிறது. ஒரு சில மாதங்களுக்குப்பிறகு சில காரணங்களால் இவ்வகுப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொடர முடியா சூழ்நிலை வந்த போது அந்நேரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் நியூக்ளியர் பிசிக்ஸ் துறையின் தலைவர் பி.ஆர்.எஸ். சுப்பிரமணியம் அத்துறையின் இருக்கும் செமினார் ஹாலில் சண்டே கிளாசை எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார். இப்படித்தான் இந்த சண்டே கிளாஸ் பயணம் ஆரம்பமானது. அந்த STIP இல் கலந்து கொண்டு சத்ய நாராயணாவை சென்னைக்கு அழைத்த அன்றைய STIP மாணவர்களில் ஒருவரான சுதாகர் இன்று IIT மெட்ராசில் இயற்பியல் துறை பேராசிரியர்.

1996 க்கு பிறகு நியுக்ளியர் பிசிக்ஸ் துறைக்கு பல்வேறு துறைத்தலைவர்கள் மாறிவிட்டார்கள். ஆனால் யார் துறைத் தலைவராக வந்தாலும் சண்டே கிளாசுக்கு செமினார் ஹாலை மனமுவந்து அளித்தார்கள். இந்த வகையில் 25 வருடம் இந்த வகுப்பு தொடர்ச்சியாக நடைபெற இந்தத்துறையின் பெருந்தன்மையும் மிக முக்கிய காரணம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை இந்த வகுப்பு நடக்கும். காலையில் ஒரு சிறிய தேநீர் இடைவேளை. மதியம் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை. மூன்று மணி போல் இன்னொரு தேநீர் இடைவேளை. இந்த சண்டே கிளாசில் எல்லாதரப்பட்ட மாணவர்களும் வந்து படித்தார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகள் குறிப்பாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள். பெரும்பாலும் அவர்கள் ஏழை மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள். தன்னந்தனி ஆளாக பாடம் நடத்தி வந்தார். மாரத்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது இயற்பியல் மாரத்தான். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்துவது எவ்வளவு கடினமானது. அதுவும் கடினமான அடிப்படை இயற்பியல் கோட்பாடுகளை, அதைச் சார்ந்த கணக்கீடுகளை நடத்துவார். கிட்டத்தட்ட பல வருடங்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்

1996 முதல் இன்று வரை எண்ணற்ற மாணவர்கள் இந்த வகுப்பில் இயற்பியல் கற்று இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்களில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களிலும், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் பேராசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சண்டே கிளாசின் முதல் பேட்ச் 1996 இலிருந்து 2001 வரை சொல்லலாம். 1996 லிருந்து 1997 வரை படித்த சுதாகர் சந்திரன் இன்று ஐ.ஐ.டி சென்னையில் இயற்பியல் பேராசிரியர். 1998 லிருந்து 2000 வரை பயின்ற தங்க துரை இன்று பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ராமச்சந்திரன் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் மூத்த விஞ்ஞானி. மேலே குறிப்பிட்ட அனைவருமே நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். 1999 லிருந்து 2000 வரை படித்த பொன்முருகன் இன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர். அவர் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை இயற்பியல் படித்தவர். அக்கல்லூரியிலிருந்து நெட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவர். ரஞ்சித் ராமதுரை இன்று ஐ.ஐ.டி ஹைதாராபாத்தில் பேராசிரியர். சித்ரா மற்றும் பிரபு இருவரும் இன்று சென்னையில் அறிவியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கே நாம் இன்னொரு எதார்த்தத்தை உணர வேண்டும். இன்று தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் எம்.எஸ்சி இயற்பியல் படித்து முடித்து வெளிவரும் மாணவர் இந்த தேர்வை எழுதி வெற்றி கொள்வது என்பது மிகக்கடினம். இந்த தேர்வை வெற்றி கொள்ள வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 60 அல்லது 70 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்து டெல்லியோ அல்லது ஹைதராபாத்தோ சென்று கோச்சிங் எடுக்க வேண்டும். ஏழை மாணவர்களால் இவ்வளவு செலவு செய்து கோச்சிங் சென்டருக்கு செல்ல முடியாது. இந்த தேர்வை வெற்றி கொள்ள இயற்பியல் கோட்பாடுகளை பயன்படுத்தி கணக்குகளை தீர்க்கும் திறன் (problem solving skills) நன்றாக இருக்க வேண்டும். சண்டே கிளாஸ் மிக அற்புதமாக இந்தத் திறனை வளர்க்கிறது.

2002 லிருந்து 2007 வரை அடுத்த தலைமுறை மாணவர்கள் சண்டே கிளாஸில் பங்கு பெற்றார்கள். விஜயகுமார் இன்று டி.ஆர்.டி.ஓ வில் விஞ்ஞானி. இந்த விஜய குமார் தனது திருமணத்தில் பேராசிரியர் சத்ய நாராயாணா அவர்களின் கையால் தாலி எடுத்துக்கொடுக்கச் சொல்லி திருமணம் செய்தார். ஞாயிறு மட்டுமே இயற்பியல் சொல்லிக்கொடுக்கும் ஒரு ஆசிரியர் எந்த அளவிற்கு ஒவ்வொரு மாணவனின் மனதிலும் இடம்பிடித்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாராணம். . விஜயகுமார் மட்டுமல்ல இன்னும் சில பேரும் இதே போல் பேராசிரியர்.சத்ய நாராயாணா அவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க தங்களது திருமணத்தை செய்தார்கள். இன்னும் சிலபேர் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை பேராசிரியர். சத்ய நாராயாணா அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். பேராசிரியர்.சத்ய நாராயாணா அவர்கள் வகுப்பறையைத்தாண்டி ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் அவர்கள் சுக துக்கங்களிலும் பங்கெடுக்கும் குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார்

அன்ன லஷ்மி இன்று கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானி. தேவ சங்கர் இன்று பொன்னேரி கல்லூரியில் இயற்பியல் உதவி பேராசிரியர். கமல பாரதி என்பவர் RRCAT (Raja Ramanna Centre for advanced technology) இந்தூரில் மூத்த ஆராய்ச்சியாளர். ப்ரீத்தி மெகர் IISc இல் முனைவர் பட்டம் முடித்துவிட்டு திருவாரூர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருக்கிறார். எஸ்.அய்யப்பன் கல்பாக்கம் இந்திரா காந்தி அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் முனைவர் பட்டம் முடித்து விட்டு இன்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர். சங்கர் சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் உதவிப்பேராசிரியர். நெய்னா முகமது உடுமலைப் பேட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர். பஷீருதீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர். நாராயணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானி. முரளி தொடர்ச்சியாக இரண்டு முறை நெட் தேர்வை பாஸ் செய்தவர். இன்று ஆந்திரா மாநிலம் கர்நூலில் உள்ள மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர். ஒரு வேளை சண்டே கிளாஸ் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இது எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது. இம்மாதிரியான உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களுக்குள் மாணவர்கள் செல்ல சண்டே கிளாஸ் பாதை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

மற்ற வகுப்புக்கும் இந்த சண்டே கிளாசுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இந்த வகுப்பில் சிலபஸ் முடிக்க வேண்டும், தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற நடைமுறை இல்லை. இயற்பியலை ஒருவன் நேசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வகுப்புகள் நடக்கின்றன. பேராசிரியர். சத்யாவின் இயற்பியல் வகுப்பை ஒரு தடவை கவனித்தால் போதும். இயற்பியலை வெறுப்பவர்கள் கூட இயற்பியலை காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவுக்கு கவர்ந்திழுக்கும். உங்களை வசியம் செய்து விடும். அவர் கரும்பலகையில் எழுதும் அழகை பார்த்துகொண்டே இருக்கலாம். எழுத்தோவியம் அது.Sunday Class - A story of social justice in science Article by Joseph Prabhakar ஜோசப் பிரபாகரின் சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை

சண்டே கிளாஸின் மிக அடிப்படையான சிறப்பு என்ன? சண்டே கிளாஸ் உள்ளே நுழையும் ஒவ்வொரு மாணவரையும் அவரவர் நிலையிலேயே அப்படியே ஏற்றுக்கொள்கிறது. சண்டே கிளாஸ் எந்த மாணவரையும் தகுதியின் அடிப்படையிலோ, திறமையின் அடிப்படையிலோ நடத்துவதில்லை. சமூக நீதி என்பது இதுதான். இயற்பியல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம். ஒரு சில மாணவர்கள் ஓரளவு இயற்பியல் தெரிந்து கொண்டு இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வருவார்கள். பெரும்பாலோனார் மிக அடிப்படை நிலையிலேயே இருப்பார்கள். அவர்கள் கிட்டத்தட்ட அரிச்சுவடியிலிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இப்படி ஆரம்ப நிலையில் இருக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்டால் பயந்து மறுபடியும் வகுப்புக்கு வரமாட்டார்கள். அதனால் அவர்கள் போக்கிலேயே கற்றுக்கொள்ள அனுமதிப்பதில் பேரா.

சத்யா தெளிவாக இருப்பார். எக்காரணம் கொண்டும் அப்படி வரும் மாணவர்களை தனக்கு ஒன்றும் தெரிய வில்லையே என்ற உணர்வுக்கு தள்ள மாட்டார். இப்படிப்பட்ட மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு ஆறு மாதத்தில் அனைவரின் முன்னிலையில் கூச்சமில்லாமல் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். கல்வி முறையின் முக்கிய நோக்கமே கேள்வி கேட்கும் உணர்வை தூண்டுவதுதான். இன்று எத்தனை கல்வி நிலையங்களில் கேள்வி கேட்பதை தூண்டுகிறார்கள்?. ஆனால் சண்டே கிளாஸ் இதை நூறு சதவிகிதம் முழுமையாக செய்கிறது.

உண்மையில் இன்று இந்தியா முழுவதும் பெரிய பெரிய உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் தகுதி திறமை என்ற பெயரில் அடித்தட்டு மாணவர்களை ஒதுக்குகிறார்கள். ஒரு கல்விக் கூடத்தின் நோக்கமே மாணவர்களை தகுதியும் திறமையும் வளர்த்து விடுவதுதான். ஆனால் இந்நிறுவனங்களுக்குள் நுழையவே தகுதியும், திறமையும் வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அநீதி. ஆனால் சண்டே கிளாஸ் இப்படி தகுதி திறமை இல்லாதவர்கள் என்று சொல்லப்பட்ட மாணவர்கள் அனைவரையும் தன் நேசக்கரத்தால் வாரியணைத்து அவர்களை இயற்பியலில் சிறந்த ஆராய்ச்சியாளராகவோ அல்லது பேராசிரியர்களாகவோ மாற்றுகிறது. தகுதி திறமை இல்லை என்று சொல்லப்படும் மாணவர்களை உள்ளே விட்டால் கல்வி நிறுவனத்தின் தரம் போய்விடும் என்ற கருத்து தவறு என்று சண்டே கிளாஸ் நிரூபித்திருக்கிறது.

சண்டே கிளாஸ் என்பது வெறுமனே ஒரு கோச்சிங் வகுப்பல்ல. இயற்பியல் கோட்பாடு, அதை நடைமுறையில் பயன்படுத்தும் வழிகள் மற்றும் இயற்பியல் கணக்குகளை தீர்க்கும் முறைகள் (problem solving techniques) என அனைத்தையும் விரிவாக சொல்லிக்கொடுக்கும் வகுப்பு. கோச்சிங் வகுப்பில் படித்து நெட் தேர்வு வெற்றி பெற்ற மாணவருக்கும், சண்டே கிளாசில் படித்து நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவருக்கும் நிறைய வித்தியாசத்தை நீங்கள் காணலாம். உலகப்புகழ்பெற்ற கல்வியாளர் பாவ்லோ ஃபிரேயரே இன்றைக்கு இருக்கும் கல்வி முறை வங்கிக்கல்வி முறை என்று கூறுகிறார். காரணம் இக்கல்வி முறை மாணவனை ஒரு காலி பாத்திரமாகவும் அதில் ஆசிரியர் கல்வி சார்ந்த அறிவை கொட்டுகிற முறையாக இருக்கிறது. பெரும்பாலும் மனப்பாட கல்வி முறையாக இருக்கிறது. மாணவர்களின் உள்ளார்ந்த தன்மைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதற்கு மாற்றாக “பகுப்பாய்வு உணர்வை வளர்க்கக்கூடிய கல்வி முறையை” முன்மொழிந்தார். சண்டே கிளாஸ் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

சமீபத்தில் சண்டே வகுப்பில் படித்து இன்று ஆராய்ச்சி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் பணியாற்றும் முன்னாள் மாணவர்களிடம் கூகுள் பார்ம் மூலமாக தகவல் திரட்டப்பட்டது. 122 சண்டே வகுப்பு முன்னாள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். அந்த தகவல் திரட்டலில் மூலம் நாம் அறிந்து கொண்டது இந்த 122 மாணவர்களில் 61% மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். அது மட்டுமில்லாமல் இம்மாணவர்களில் 47.5 % பேர் கிராமத்தை சேர்ந்தவர்கள். 21.3% புற நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் 31.1% பேர் நகர்புற பகுதியை சேர்ந்தவர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக நடக்கும் ஒரு இயற்பியல் வகுப்பினால் எவ்வளவு பெரிய சமூக மாற்றம்.

உண்மையில் ஒரு வகுப்பறை எப்படி இருக்க வேண்டும், ஒரு கல்வி அமைப்பு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு சண்டே கிளாஸ் ஒரு முன்னுதாரணம். சண்டே வகுப்பில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். இன்று இவர்கள் இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையோடும், சுய மரியாதையோடும் பணியாற்றுகிறார்கள் என்பதை பார்க்கும் போது இதை விட சமூக நீதி செயல்பாடு வேறென்ன இருக்க முடியும்!!!

இந்திய சமூகத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம் என எந்த களத்தை எடுத்துக்கொண்டாலும் எந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவ படுத்துகிறோம் என்பது மிக முக்கியமானது. அதே போல் அறிவியல் துறையிலும் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவ படுத்துவது (inclusiveness and representation) மிக மிக முக்கியமானது. உண்மையில் மற்ற துறைகளில் நடந்த மாற்றம் அறிவியல் துறையில் மிகப் பெரிய அளவில் நடக்க வில்லை. ஆனால் சண்டே கிளாஸ் அதை மிக திறம்பட செய்தது. இதைத்தான் மேலே பார்த்த புள்ளி விவரம் கூறுகிறது.

2003 ஆம் வருடம் பேரா. சத்யநாராயணா அவர்கள் பி.டி.எப் ஆராய்ச்சிக்காக (பி.டி.எப் -இயற்பியலில் முனைவர் பட்டம் முடித்து அதற்கு அடுத்த கட்ட ஆராய்ச்சி படிப்பு.) ஜெர்மனி சென்ற போது கூட அவரது மாணவர்கள் அன்னலஷ்மி, பொன்முருகன் மற்றும் கல்பாக்கம் விஞ்ஞானி பாலாஜி மூவரும் சண்டே கிளாசை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் அவர் ஜெர்மனியில் இருந்த நேரத்தில் ஒவ்வொரு ஞாயிறும் 5 மணிக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து போன் செய்து அன்னலஷ்மி மற்றும் பொன்முருகன் இருவரிடமும் அன்றைய சண்டே கிளாஸ் எப்படி நடந்தது என்று விசாரிப்பாராம். அந்த அளவுக்கு இந்த வகுப்பு தடைபடாமல் நடந்து வந்துள்ளது.

சில ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கைந்து மாணவர்கள்தான் வகுப்புக்கு வருவார்கள். அப்படியிருந்தாலும் கூட இந்த நாலைந்து பேருக்காக கல்பாக்கத்திலிருந்து சென்னைக்கு வந்து சண்டே கிளாஸ் எடுத்து விட்டு செல்வார் பேராசிரியர். சத்யா. சில வருடங்களில் ஜனவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரும். அன்றைக்கும் சண்டே கிளாஸ் நடக்கும். பேராசிரியர்.சத்யா நாராயாணா வருவார். மாணவர்களும் வருவார்கள். அப்படி என்றால் இந்த வகுப்பை பேரா.சத்யா எவ்வளவு நேசிக்கிறார் அதே போல் மாணவர்கள் சண்டே கிளாசை எவ்வளவு விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

2008 ஆம் ஆண்டு வாக்கில் சண்டே கிளாஸ் பற்றி கேள்விப்பட்ட இந்தியக் கணிதவியல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பேராசிரியர்கள் ஜி.ராஜசேகரன் மற்றும் ஐ.ஐ.டி கான்பூரில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பேராசிரியர் எச்.எஸ்.மணி இருவரும் சண்டே கிளாசிற்கு வந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்கள்.Sunday Class - A story of social justice in science Article by Joseph Prabhakar ஜோசப் பிரபாகரின் சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை

 

சண்டே கிளாசுக்கு இவர்களின் பங்களிப்பு மகத்தானது. இருவருமே 80 வயதை தாண்டியவர்கள். இவர்கள் இருவரும் நோபல் பரிசு அறிஞர்களான சர்.சி.வி ராமன், சந்திர சேகரிடம் கல்வி கற்றவர்கள். இந்திய அளவில் புகழ்பெற்றவர்கள். சண்டே கிளாசுக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை மற்றும் பின்தங்கிய சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதை பார்த்ததும் தங்களது தள்ளாத வயதிலும் பல வருடங்கள் வந்து வகுப்பு எடுத்தார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் பேரா. ராஜ சேகரன் குவாண்டம் இயற்பியல் வகுப்பு எடுப்பார். அதற்கு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எச்.எஸ். மணி கணித இயற்பியல் அல்லது மின்காந்தவியல், சார்பியல் கோட்பாடு என ஏதாவது ஒரு பாடம் எடுப்பார். உலக அளவில் பிரசித்தி பெற்ற இயற்பியல் புத்தகங்களிலிருந்து கணக்குகளை நடத்துவார்கள். சண்டே கிளாஸ் பற்றி பேராசிரியர்.ராஜசேகரன் தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஐ.ஐ.டி யில் இளங்கலை அல்லது முதுகலை இயற்பியல் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இவ்விரு பேராசிரியர்களின் வகுப்பு ஒரு வரப்பிரசாதம்.

2009 க்கு பிறகு அடுத்து தலைமுறை மாணவர்கள் ஜோசப் பிரபாகர், ஐயப்பன், ராஜ்மோகன், திருசெந்தில், ஏழு மலை, சண்முகப்பிரியன், என பெரிய பட்டாளம் சண்டே கிளாசுக்கு வர ஆரம்பித்தது. ராஜ் மோகன் திண்டுக்கல்லிலிருந்து வாரா வாரம் சனிக்கிழமை இரவு ரயிலேறி அடுத்த நாள் காலை சென்னை வந்து அன்று முழுவதும் சண்டே கிளாஸ் கவனித்து விட்டு அன்று மாலை மறுபடியும் ரயிலேறி அடுத்த நாள் காலை திண்டுக்கல் செல்வார். இன்று ராஜ் மோகன் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைகழகத்தில் இயற்பியல் உதவி பேராசிரியர். ஜோசப் பிரபாகர், சண்முகப்பிரியன் இருவரும் இன்று லயோலா கல்லூரியில் இயற்பியல் உதவி பேராசிரியர்கள். திருசெந்தில் நியுட்ரினோ ஆய்வகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார்.

ஐயப்பன் திருவண்ணாமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தவர். இன்று கோட்பாடு இயற்பியலில் பி.எச்.டி முடித்து மொகாலியில் உள்ள IISER உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.டி.எப் முடித்து இப்போது தரமணியில் உள்ள இந்திய கணித அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்(IMSc) பி.டி.எப் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். கோட்பாட்டு இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒரு முதல் தலைமுறை மாணவர்கள் நுழைவதென்பது மிகபெரிய சவால். ஆனால் சண்டே கிளாசின் வந்து படித்த மாணவர்கள் கோட்பாட்டு இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் பி.எச்.டி மாணவராகவோ அல்லது பேராசிரியர்களாகவோ இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சண்டே கிளாஸ் செய்த மாற்றம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை கொண்டுவந்தது. அதில் 11 மற்றும் 12 இயற்பியல் பாடப்புத்தகத்தின் உருவாக்கத்தில் சண்டே கிளாஸின் மாணவர்களான ஜோசப் பிரபாகர் மற்றும் நெய்னா முகமது இருவரும் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்கள். இது சண்டே கிளாசின் வெற்றி. ஒரு வகையில் சொல்லப்போனால் பள்ளிகளில் இயற்பியல் கல்வியின் தரத்தை உயர்த்த சண்டே கிளாஸ் மறைமுகமாக உதவியிருக்கிறது.

2012 க்கு பிறகு அய்யப்பன், அபுதாகிர், கிருத்திகா, மிருணாளினி, சுபஸ்ரீ, ரித்தீஷ் போன்ற அடுத்த தலைமுறை மாணவர்கள் சண்டே கிளாசில் பங்கெடுக்க ஆரம்பித்தார்கள். ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் அனைவருமே நெட், கேட் தேர்வில் தேர்ச்சி செய்து விட்டார்கள். கள்ளக்குறிச்சியை சொந்த ஊராகக்கொண்ட கொண்ட அய்யப்பன் மிக ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர். இன்று திருச்சி அருகே இருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர். அபுதாகிர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பி.எச்.டி முடித்து தேனி அருகில் இருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர். மிருணாளினி கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எச்.டி மாணவி. சுபஸ்ரீ இந்திய கணித அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் பி.எச்.டி மாணவி. கிருத்திகா இந்திய விமானத்துறையில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

ரித்தீஷ் முதுகலை மெட்டிரியல் சயின்ஸ் படித்தவர் ஆனால் சண்டே கிளாஸ் பங்கு பெற ஆரம்பித்தவர் இன்று இயற்பியலில் பி.எச்.டி படித்துக்கொண்டிருக்கிறார். இப்படி எண்ணற்ற மாணவர்களில் வாழ்க்கையை சண்டே கிளாசும், பேராசிரியர். சத்யாவும் மாற்றியிருக்கிறார்கள். இது ஒரு சத்தமில்லா கல்வி புரட்சி. ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனம் செய்ய வேண்டிய மாற்றத்தை ஒற்றை ஆளாக செய்து இருக்கிறார்.

2014 க்கு பிறகு மேற்கு வங்காளத்தில் உள்ள சாகா இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் பணி புரிந்து ஒய்வு பெற்ற பேராசிரியர். கமலேஷ்கர் சண்டே கிளாசில் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். அதே போல் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற கே.பி.என் மூர்த்தியும் இங்கே சில காலம் வகுப்பு எடுத்திருக்கிறார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற புகழ் வாய்ந்த பேராசிரியர். எ.கே.கபூர் அவர்களும் சில காலம் இங்கே பாடம் நடத்தியிருக்கிறார் இப்படி இந்தியாவின் மிகச்சிறந்த இயற்பியல் அறிஞர்கள் தங்களது ஓய்வு காலத்தில் இந்த சண்டே வகுப்பில் இயற்பியல் கற்றுக்கொடுத்தனர்.

சண்டே கிளாஸ் சிறந்த இயற்பியல் மாணவர்களை மட்டும் உருவாக்க வில்லை. சிறந்த இயற்பியல் ஆசிரியர்களையும் உருவாக்கியிருக்கிறது. சண்டே கிளாசின் பயின்று இன்று கல்லூரி பேராசிரியராக இருப்பவர்கள் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் நிறைய உரை நிகழ்த்துகிறார்கள். நெய்னா முகமது, பஷீர், தேவ சங்கர், ஜோசப் பிரபாகர், ராஜ் மோகன் என பல பேரை இதற்கு உதாராணமாக கூறலாம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பயின்று பிறகு சண்டே கிளாஸ் வந்த ஷிர்த்திகாந்த பிரசாத் தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் அதிகாரி. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் நாகர் கோவில் சென்று அங்கு ஒரு கல்லூரியில் இலவசமாக இயற்பியல் கற்றுக்கொடுக்கிறார். சண்டே கிளாஸ் ஒரு மாணவன் மனதில் ஏற்படுத்தும் மாற்றம் இதுதான்.

பேராசிரியர். சத்யாவின் கற்பிக்கும் செயல்பாடு சண்டே கிளாசோடு மற்றும் நிற்கவில்லை. இந்த கால் நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில், கேரளாவில் உள்ள எத்தனையோ கல்லூரிகள், பல்கலைக்கழகங்ளில் உரை ஆற்றியிருக்கிறார். அவரின் உரையைக்கண்டு வியந்த மாணவர்கள் பிற்காலத்தில் சண்டே கிளாசுக்கு வந்த கதைகளும் உண்டு.

.கடந்த டிசம்பர் 12 அன்று இந்த சண்டே கிளாஸின் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி சண்டே கிளாஸ் ஆரம்பித்த இருபத்தைந்தாம் வருட வெள்ளி விழாவை கொண்டாடினார்கள். கோவிட் விதிமுறைகளால் இந்நிகழ்வு ஆன்லைன்-ஆப்லைன் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளி மாநிலத்தில், வெளி ஊர்களில் இருக்கும் மாணவர்கள் ஆன்லைனில் கலந்து கொண்டார்கள். ஆப்-லைன் நிகழ்வு நியூக்ளியர் பிசிக்ஸ் துறையின் அதே செமினார் ஹாலில் நடந்தது.

Sunday Class - A story of social justice in science Article by Joseph Prabhakar ஜோசப் பிரபாகரின் சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை

Sunday Class - A story of social justice in science Article by Joseph Prabhakar ஜோசப் பிரபாகரின் சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை

இந்நிகழ்வை ஆன்லைனில் நேரலையாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் ராஜசேகரன் மற்றும் எச்.எஸ்.மணி இருவரும் ஆன்லைனில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். பேராசிரியர். கமலேஷ்கர் நேரடியாக கலந்து கொண்டார். இந்த கொண்டாட்டத்தில் 1996 ஆம் வருட சண்டே கிளாஸ் மாணவர்களிலிருந்து இன்றைய தேதி வரை இந்த வகுப்பால் பயனடைந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றார்கள். தங்கள் வாழ்க்கையை மாற்றிய பேராசிரியர். சத்யாவுக்கு தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். நியூக்ளியர் பிசிக்ஸ் துறைத்தலைவர் பேராசிரியர். சத்யாவுக்கு இத்துறையின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கினார்.

பேராசிரியர்.சத்யா அன்றைய தினம் “25 வருட பயணம்” என்ற தலைப்பில் மிக அருமையான உரையை வழங்கினார். இந்த வகுப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது, என்னென்ன சோதனைகளை எல்லாம் கடந்து வந்தது, அதில் நான் என்ன கற்றுக்கொண்டேன் என பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இரண்டு கருத்துக்கள் மிக முக்கியமானது. ஒன்று “ஒரு ஆசிரியரின் மிக முக்கியமான நோக்கம் ஒரு மாணவன் மனதில் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் (ready to learn) மனநிலையை உருவாக்குவதுதான். ஏனென்றால் ஒரு ஆசிரியரால் மாணவனுக்கு தேவையான அனைத்தையும் நடத்தி விட முடியாது. அதற்கு கால வரம்பு, நெருக்கடி காரணமாக இருக்கலாம். அல்லது மாணவனுக்கு தேவையான அனைத்து பாடங்களும் ஆசிரியருக்கு தெரியாமல் இருக்கலாம். இப்படி பல்வேறு நடைமுறை வரம்புகள் இருக்கின்றன. ஆனால் மாணவன் மனதில் கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் மனநிலையை ஒரு ஆசிரியர் உருவாக்கி விட்டால் அவனுக்கு தேவையானதை அவனே தேடிக் கற்றுக்கொள்வான்”

Sunday Class - A story of social justice in science Article by Joseph Prabhakar ஜோசப் பிரபாகரின் சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை

இரண்டாவது “சண்டே வகுப்புக்கு வரும் மாணவனின் சுதந்திரத்தை மதிப்பது. அதாவது வகுப்பில் சண்டே கிளாஸில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது ஒரு மாணவனை எழுப்பி கேள்வி கேட்டால் பதில் சொன்னாலும் அவன் விருப்பம். பதில் சொல்ல வில்லை என்றாலும் அது அவன் விருப்பம் அல்லது அவன் சுதந்திரம். பதில் சொல்லவில்லை என்பதற்காக அவனை கடிந்து கொள்வதோ அல்லது மொத்த வகுப்பையும் திட்டுவதோ கூடாது. பதில் சொல்லாமல் இருப்பதும் அவனது சுதந்திரம். இதை நான் சண்டே கிளாஸில் கடைபிடித்தேன்” என்று கூறினார். இது மிக முக்கியமானது. ஏனென்றால் சண்டே கிளாசுக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் ஏற்கெனவே கூறியது போல பின்தங்கிய சமூகங்களிலிருந்து வருபவர்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள். நிறைய மாணவர்களுக்கு ஆங்கில மொழிச் சிக்கலும் இருக்கும். இயற்பியலும் ஆழமாக புரிதலும் இருக்காது. இதற்கு காரணம் நமது நாட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி அமைப்பு முறை. வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி வாய்ப்புகள், உயர்தர பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி ஏழை மாணவர்களுக்கு அல்லது சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைத்ததோ அரசுப்பள்ளிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள்தான்.

இப்படிப்பட்ட பின்புலத்திலிருந்து வரும் மாணவர்களை கேள்வி கேட்டு அவர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக்காட்டினால் தொடர்ந்து வகுப்புக்கு வரமாட்டார்கள். அவர்களை தக்க வைக்க வேண்டும் என்றால் அவர்களை மிக சவுகரியமாக உணர வைக்க வேண்டும். உளவியல் ரீதியாக இது மிக மிக முக்கியமானது. அதைத்தான் பேராசிரியர். சத்யா இந்த சண்டே கிளாசில் செய்தார். பேராசிரியர். சத்யாவுக்கு அந்த சமூகப்புரிதல் இருந்தது. வெறும் கல்லாய் வந்த மாணவர்களை பட்டை தீட்டி வைரங்களாக ஜொலிக்க வைத்தார். சண்டே கிளாஸின் சாதனையை வெறும் தனிமனிதர்களை முன்னேற்றிய கதையாக மட்டுமே சுருக்கி பார்க்க முடியாது. காலம்காலமாக கல்வியில் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்களை இந்தியாவின் உயரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் உட்காரவைத்த சமூக நீதி செயல்பாடாக பார்க்க வேண்டும்.

இச்சூழ்நிலையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? சண்டே கிளாஸ் போன்ற ஒரு செயல்பாடு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவை. கற்பித்தலில் ஆர்வம் கொண்ட பேராசிரியர்களை அடையாளம் கண்டு அருகே இருக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ சண்டே வகுப்பை போன்று அங்கங்கே அரசாங்கமே ஆரம்பிக்க வேண்டும். IAS, IPS போன்ற தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பயிற்சி மையம் நடத்துவது போல அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கும் பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்க வேண்டும். அறிவியல் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் வருடத்துக்கு மூன்று நான்கு மாணவர்கள் நெட் தேர்வோ அல்லது கேட் தேர்வோ வெற்றி பெறுகிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் இன்னமும் கூட மொத்த மாநிலத்துக்கும் வருடத்துக்கு பத்து பேர் கூட இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது இல்லை. நாடு முழுவதும் இருக்கும் 27க்கும் மேற்பட்ட அறிவியல் உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்களுக்குள் ஆராய்ச்சி மாணவராக செல்ல இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மிக முக்கியம். தனிமனிதராக பேராசிரியர். சத்யா செய்ததை அரசு விரிவு படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு சென்றால் இன்னும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயன் தரும். அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் என்பது அரசியல், பொருளாதார துறையில் மட்டுமல்ல அறிவியல் துறையில் முழுமையாக வரவேண்டும். அதுவே உண்மையான சமத்துவம்.

கொரானாவுக்கு முன்பு வரை சண்டே கிளாஸ் தவறாமல் நடந்து வந்தது. முழு ஊரடங்கு இருந்த நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் மதியம் வரை பேராசிரியர்.சத்யா சண்டே கிளாசை எடுத்து வந்தார். தற்போது மறுபடியும் பழையபடி சூழ்நிலை சரியானதும் (2022 ஜனவரி மாதம் அல்லது பிப்ரவரி மாதம்) சண்டே கிளாஸ் தனது பயணத்தை அதே செமினார் ஹாலில் ஆரம்பிக்கப்போகிறது. பேராசிரியர்.சத்யா அடுத்த தலைமுறை மாணவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

கட்டுரையாளர் ஜோசப் பிரபாகர், பேராசிரியர் சத்யா நாராயணாவின் மாணவர், சண்டே வகுப்பில் மாணவராக இருந்து பிறகு சண்டே வகுப்பில் ஆசிரியராகவும் தனது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இக்கட்டுரை குறித்த கருத்துகளை தெரிவிக்க: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “சண்டே கிளாஸ் – அறிவியலில் ஒரு சமூக நீதியின் கதை – ஜோசப் பிரபாகர்”
  1. அறிதலை புரிந்து

    ஆர்வத்தை தூண்டி

    இயல்பதை உணர்ந்து

    ஈகைக் கொண்டு

    உள்ளதை விளக்கி

    ஊக்கத்தை பெருக்கி

    எண்ணியது முடிய

    ஏற்றத்தாழ்வு களைந்து

    ஐயமது நீங்க

    ஒரு நாள் கற்பிக்கும்

    ஓதும் முறையறிந்து

    ஒளடதம் போலாகி

    அஃதை அழிக்கும்

    அறிவியல்

    ஆசான்

    இயற்பியல்

    ஈர்ப்பு விசை….

    உம்

    ஊர்ப்பிணிப் போக்கும்

    எளிய முறை

    ஏட்டு முறையல்லா

    ஐயவியளவு ஐயமின்றி

    ஒன்றிக்கற்கும்

    ஓசைப் பெருக்கி

    அஃகு அகற்றி

    கற்பிக்கும்

    வித்தையை

    யானும்

    நின் வழி

    நின்று

    கற்றுணர்வேன்.

    நன்றி

  2. “தகுதி திறமை இல்லை என்று சொல்லப்படும் மாணவர்களை உள்ளே விட்டால் கல்வி நிறுவனத்தின் தரம் போய்விடும் என்ற கருத்து தவறு என்று சண்டே கிளாஸ் நிரூபித்திருக்கிறது.”

    தகுதி திறமை இல்லை என்று சொல்லப்படும் மாணவர்களை உள்ளே விட்டால் கல்வி நிறுவனத்தின் தரம் போய்விடும் என்பதை
    யாரும் என் மூளையில் செயற்கையாக பதிவு செய்ய நினைத்தால் கூட ஏற்றுக்கொள்ளாது. உண்மையை பார்த்துவிட்டோம். கூடவே பயணிக்காது, தூர இருந்து பார்த்தது வருத்தம் தான் சார்.
    சத்தியநாராயணா அவர்கள் என்ன சொல்லவது, அற்ப காரணங்களுக்காக தள்ளிவிட்டு செல்பவர்களை (என்னையும் சேர்த்து) வெட்கித் தலை குனிய வைத்து விட்டார். காலம் ஓடி விட்டது. நன்றி ஜோசப் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *