Kannan Poems 5 கண்ணனின் கவிதைகள் 5

கண்ணனின் கவிதைகள்

இன்னொரு முகம்
************************
இளமையை உறிஞ்சியபின்
சக்கையாய்த் துப்பி விட்டு
தன்னம்பிக்கையை
பிளிறலுடன்
காலிலிட்டு நசுக்கி விட்டு
பிச்சைக்காரனாய்
திருவோடு ஏந்தவைத்து
திரும்பிப் பார்க்காவிடில்
கோழையாய் அழவிட்டு
தெருப்பெயருக்காய்
தெருநாயாய் அலையவிட்டு
பாடத்தை விட்டு விட்டுப்
பெயரை எழுத வைத்து
பிணம் தின்னும் கழுகாய்
இதயத்தைக் கிழித்து விட்டு
கண் இமைகளை
ஆணியடித்து மாட்டிவிட்டு
தடதடக்கும் வண்டியை
மூளையில் இரவெல்லாம்
ஓடவிட்டு
தாடி வளர்த்து
தன்னையே மறந்து
பித்துப்பிடிக்க வைக்கும்
இந்த இன்னொரு
முகம் தான்
எத்தனை அழகு
இக்காதலுக்கு

அழுதுகொண்டே இருக்கிறார்கள்
**************************************
யாரோ எப்போதும்
அழுதுகொண்டே
இருக்கிறார்கள்
அழுகை தொற்றுகிறது
கொட்டாவி போல
அழுகை வழிந்தோடி
அறையை நிரப்புகிறது
மருத்துவக் கடவுளை
மன்றாடி
வேண்டுகிறார்கள்
கைகள் கூப்பியபடி
கதறுகிறார்கள்
ஆனாலும் அந்த
வார்த்தைகள் வந்து சேர்கின்றன
‘எங்களால முடிஞ்சத செஞ்சிட்டம்
கூட்டிக்கிட்டுப் போய்டுங்க’
வார்த்தைகளின்
வலி தாங்காமல்
புயற்காற்றில்
வாழையாய்
ஒடிந்து மடங்கி
விழுகிறார்கள்
எத்தனையோ பார்த்த பூமி
தாங்குகிறது இவர்களையும்

பிறந்தநாள்
**************
பிறந்தநாள் பலூன் வெடித்த
அடுத்த நாள் கேட்டேன்
‘அடுத்த பிறந்தநாள் எப்ப?’
தாமதமின்றி உடனே பதில்
‘நாளைக்குக் காலையில வரும்’
வளர்ந்த பின்
வருடத்திற்கு ஒரு முறைதான்
வருகிறது பிறந்தநாள்

ஒருநாள் கூத்து
******************
திறந்திருந்த கதவினூடே
திபுதிபுவென
நுழைந்தனர்
ஒருவர் கேட்டார்
‘எத்தன ஓட்டு, நாலா?’
மற்றுமொருவர்
‘உங்க மனைவிக்கு
தூரத்து சொந்தம்’
அடுத்த நாள்
மற்றொருவர் சொன்னார்
‘உங்க மனைவிக்கு
நெருங்கிய சொந்தம்’
பிறிதொரு நாளில்
இன்னொருவர்
‘நல்ல தண்ணீர் வரலயா?’,
‘ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்’
ஒரு நாள் கூத்துக்கு
எத்தனை வேஷங்கள்
என்ன, இத்தனை சொந்தங்களை
ஒரு நாளும்
பார்த்ததில்லை

Katril Payanikkum Uthir ilai Poem By Vasanthadheepan வசந்ததீபனின் காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை

காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை – வசந்ததீபன்




காற்றில் பயணிக்கும் உதிர்இலை
****************************************
(1)
என் பாதையில் போகிறேன்
உன் இதயத்தைச் சுமந்து
மலைச் சரிவுகளில்
நெல்லிக்காய் மூடைகளை
ஏற்றிய கழுதையாய்…
சறுக்கிச் சறுக்கி நகருகிறேன்
கிணற்றில் தவறி விழுந்த
தங்க நாணயமாய் கிடக்கிறது
உன் வாலிபம்
என் தேடலுக்கு சிக்காமல்…
கூழாங்கற்கள் பாடும் பாடல்களில்
நதியின் மரணம் குறித்த
அவலச்சுவை நிரம்பிய ஏக்கங்கள்..
நத்தை ஓடுகளை உருட்டி உருட்டி
பசியைப் போக்க
முயல்கிறது சிறகு கிழிந்த காக்கை..
வளையல் சத்தம் போல
தென்னஞ் சோகைகள்
காற்றில் மோதி ஒலிக்கின்றன..
உலர்ந்த உயிரை
எந் நொடி வரை
பொடியாமல் பாதுகாத்து வைப்பேன்
நானும் காலத்திடமிருந்து ?

(2)
உன் விழிக் கணைகளால்
தாக்குண்டு
வீழ்ந்து கிடக்கிறேன்
என் திரேகம்
தீயூட்டப்பட்ட சுள்ளியாய்
சடசடக்கிறது
என் மனம்
புதைசேறில் சிக்குண்டதாய்
பரிதவிக்கிறது
துளிக் காதலை
என் இதழ்க் காட்டில்
தெளித்து விடு
வாழ்வின் குளிர்மையின் நாவுகள்
என்னைத் தீண்டட்டும்
மெளனமாய் ராகத்தை மீட்டாதே
என் ஆன்மாவின் தந்திகள்
படபடவென்று அதிர்கின்றன
நிழல் தா
நிகழ் கரைகின்றது.

(3)
குறுவாளின் நுனியில்
துளிர்க்கும் உதிரம் சொட்ட
ஊராரின் பரிகசிப்பின் சொற்கள்
எள்ளலோடு அலைகின்றன
நிர்வாணியைப் போல
என்னை நிராதரவாய்ப் பார்க்க..
கண்ணீரின் ஊற்றண்டையில்
தாகமாய் அமரும்
அந்தப் பறவையின் பெயர்
ஒருவரும் அறியமாட்டார்கள்
அதற்கு மனித முகமிருக்கிறது
அம் முகம் என் முகமென
நீ அறிவாயா ?
இறக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன
பலியாட்டின் கண்களைப்போல
மெளனமாய் உறைந்திருக்கும்
என் கணம்
அறுந்து நொடியிழையில்
தொடுக்கிக் கொண்டிருக்கிற
குடை ராட்டினமாய் நானும்!
நீயோ பாராது போகிறாயே ?

Oru Naal Iranthirunthen Poem By Pichumani பிச்சுமணியின் ஒரு நாள் நான் இறந்திருந்தேன் கவிதை

ஒரு நாள் நான் இறந்திருந்தேன் கவிதை – பிச்சுமணி




கடந்த காலத்திற்கும்
இதுவரை நிகழா காலத்திற்கும்
என்னை அவ்வப்போது
அழைத்துச் செல்லும் கனவென்னும்
டைம் மெஷின்..

ஒருநாள்
நான் இறந்த தேதிக்கு
அழைத்து சென்றது

நேற்றும் இன்றும்
என் விருப்பப்படி நடக்காத
சம்பவங்களை மாற்றியமைக்க
தினசரி என்னை அழைத்து செல்லும்
டைம் மெஷின்.

இப்போது நான் எதிர்பார்க்காத
என் இறுதிநாளுக்கு
அழைத்துச் சென்றிருக்கிறது

நான் எப்போதாவது
ஆசைப்பட்டு வருங்கால நாள்களில்
எனக்கான நாள்கள் இதுவென்று
அகமகிழ்ந்து வாழ்ந்து
நிகழ்காலக் காயங்களை
டைம் மெஷின் மூலம்
மழுங்கடித்திருக்கிறேன்.

ஆனால்
இப்போது இறுதிநாளுக்கு வந்திருக்கிறது..
நான் இறந்தது
துக்கமாக கருதாமல்
எனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
நான் சிரித்துக்கொண்டிருந்தேன்.

நான் ஆடாமல்
அசையாமல் இருக்க
கை கால்களை கட்டி வைத்திருந்தார்கள் எதையும் பார்க்காமலிருக்க
எனது கண்களையும் மூடியிருந்தார்கள்.

நான் தோல்வியடையும் போதெல்லாம்
உனக்கெல்லாம் இது தேவையா யென்று
உதாசீனபடுத்தியவர்கள்
எனக்கான ஆறுதல் வார்த்தைகளை
தேடிக் கொண்டிருந்தார்கள்

என்னைத் தேடி வந்தவர்கள்
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
மௌனமாகினர்

சிலர் கண்களில் கண்ணீர்த் துளிகள்
சிலர் கண்களில் ஏமாற்றம்
சிலர் கண்களில் எதிர்பார்ப்பு
சிலர் கண்களில் ஏளனம்
சிலர் கண்களில் சம்பிரதாயம்
சிலர் கண்களில்
சாவுக்கு வந்த கடமையுணர்வு
சிலர் கண்களில் அடுத்த நிகழ்ச்சிக்குச் செல்லும் அட்டவணை
சிலர் கண்களில் அன்றைய தேவையின் ஊதியம்

நேரம் ஆக.. ஆக..
எனது பெயர்
எல்லோரும் மறந்தும் போய்
பூத உடலனாது.

நான் இறந்திருப்பது
எனக்கு தெரியுமென
அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

Egandham Poem By Va Su Vasantha வ.சு.வசந்தாவின் ஏகாந்தம் கவிதை

ஏகாந்தம் கவிதை – வ.சு.வசந்தா




பாதையில் கிடந்த முள்
பதம் பார்த்தது எந்தன் காலை!
பக்குவமாய் அதை எடுத்து
பார்த்துப் பார்த்துப் பாதம் வைத்தேன்.

நித்திரையில் கண்டது
நிஜத்தில் அரங்கேறியது.
நேரம் காலம் பார்க்காமல்
நெடுந்தொலைவு நடந்து சென்றேன்.

எங்கே செல்வதென ஏதும் தெரியவில்லை!
எண்ணி எண்ணி மாய்ந்து விட்டேன்.
ஏழை துயர் தீர வில்லை.

கந்தல் ஆடையுடன்
கால் போன போக்கினிலே
காலமெல்லாம் நடந்திடுவேன்.
சொன்ன சொல்லை
நான் மறவேன்!

சொந்த பந்தம் ஏதுமில்லை;
சொத்து சுகம் எனக்கு வேண்டாம்.
தொந்தரவு செய்து என்னை
தொல்லைப் படுத்த வேண்டாம்!

மனத்தால் அழுகின்றேன்
பெற்றதை வெறுக்கின்றேன்!
பேதமில்லாமல்
பெருவாழ்வு வாழ்ந்து விட்டேன்.

சாதி மதம் பார்க்காமல்
சகோதரனாய் இருந்து விட்டேன்!
இப்படியே என் வாழ்வு
என்றைக்கும் தொடர்ந்துவரும்

Eththanai Pinangalai Puthaippathu Poem By Adhith Sakthivel ஆதித் சக்திவேலின் எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை

எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை – ஆதித் சக்திவேல்




குளிர் காலம்
அதற்குரிய குளிர் இல்லாவிடினும்
அது குளிர் காலம் தான்

பக்கவாட்டில் போர்த்திக்கொண்ட சிற்றுந்தின்
பின் இருக்கைகள் ஒன்றில் நான்
முன் இருக்கைகள் பல யாருமின்றிப் பயணித்தன
இன்னும் தார் அணிந்து கொள்ளா
கிராமத்துச் சாலைகள்
நிர்வாணமாய்
தம் மேடு பள்ளங்களை மறைக்க முடியாமல்

விதைக்கப்பட்ட எல்லைக் கற்களுடன்
நாற்புறமும் வயல்கள்
கான்கிரீட் விளைச்சலுக்குத் தயாரானபடி
உயர்ந்து பறந்து அதைக் கொண்டாடிய
பல வண்ணக் கொடிகள்

பனிக்கிரீடம் சூடியும்
தன்னடக்கம் காத்து
தலை சாய்ந்த புற்கள் வரப்புகளில்
அந்த அதிகாலை வேளையிலும்
சிற்றுந்தை விழுங்கிய புழுதி மூட்டம்
கடைசி நிறுத்தம் வந்ததை
மூச்சுத் திணறலோடு சொன்னது

நூற்றுக்கும் குறைவான வீடுகள்
தேவைக்கும் அதிகமான தேநீர்க்கடை ஒவ்வொன்றும்
பெயர்ப்பலகை இல்லா
அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகம்
எந்த அரசியலையும்
சூடாக்கிடும் தேநீர்க் கடையின் இருக்கைகள்
அச்சூட்டைத் தணித்திடும் சூடான தேநீர்
காலை நாளிதழ்கள் வாசிக்கக்
காத்திருந்த மேசைகள்

குக்கிராமத் தகுதிகளைத் தாண்டிய குக்கிராமம்
வாட்ஸ் அப் வரை வளர்ந்துவிட்ட தொழில் நுட்பம்
பண மதிப்பு இழப்பு ஜிஎஸ்டி யானைகளைக்
காரசாரமாகத் தடவிக் கொண்டிருந்தவர்கள்
என்னை எளிதில் அடையாளம் கண்டனர்
என் அப்பாவின் பட்டப் பெயரோடு
நண்பனின் மறைவு பற்றியும் சொன்னார் அதில் ஒருவர்

நானும் ஒரு தேநீரை வாங்கிக் குடித்த பின்
குவளையைக் கழுவிக் கவிழ்த்து வைத்தேன்
அதற்குரிய இடத்தில்
குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் நண்பன்
அவன் முகமும் ரோஜா மாலையும் வாடாமல்
நண்பனின் முகத்தை வருத்தத்தில்
வருடினேன் கண்ணாடியில்

என் கண்ணீரைத் துடைக்க
சில நேரங்களில்
கைக்குட்டை போதவில்லை
சில நேரங்களில்
அதற்குச் சாமர்த்தியம் போதவில்லை
துக்கத்தின் சுவை உப்பு எனச் சொன்னது
அதைக் கரைத்து வந்த கண்ணீர்

நண்பனை அடக்கம் செய்ய மாலை ஆனது
ஊருக்கு வெளியே
வெகு தொலைவில் தனித்து இருந்த சுடுகாட்டில்
சாதிக் கட்டுப்பாடு பிணங்களுக்கும்

“எவ்வளவு சாலைகளில் நடக்கவேண்டும் ஒரு மனிதன்
அவனை நீங்கள் மனிதன் என்று அழைப்பதற்கு?” எனத் தொடங்கும்
பாப் டிலனின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன
இரவில் நான் சிற்றுந்து ஏறுகையில்
எத்தனை (தலை)முறை நாங்கள் பயணிக்கவேண்டும்
உங்களுடன் முன் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க?

எத்தனைக் குவளைகளை நாங்கள் கழுவ வேண்டும்
உங்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த?
எத்தனைப் பிணங்களை நாங்கள் புதைக்க வேண்டும்
உங்கள் பிணங்களோடு எங்கள் பிணங்களைப் புதைக்க?
அருகிலிருந்த ஒரு சிறு நகரம் செல்லும் வரை
பின் இருக்கைகள் ஒன்றில் நான்
முன் இருக்கைகள் பல
யாருமின்றிப் பயணித்தன………..எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை – ஆதித் சக்திவேல் 

Parameshwari Poems 7 து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள் 7

து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள்




காதலின் தோன்றல்
*************************
கணமொன்றில் தோன்றும்
தீப்பொறியே காதல்..
நின்று சுற்றுமுற்றும் பார்த்து
பல நாள் சிந்தித்து
சரி வருமா வராதா
என்று யோசித்துப்பின்
இருவிரலில் ஒன்றைத் தொட்டு..
பல விளக்கங்களுக்கு ஆட்பட்டு
பல்வேறு பிரயத்தனங்களுக்கு உட்பட்டு
பற்பல சான்றுகள் சுட்டப்பட்டு
பல்கிப் பெருகிய காரணங்கள் தூண்டப்பட்டு
அதற்குப் பின்பான
தீர்க்கமான யோசிப்பில் கூறுபோடும் காதலின் வெளிப்பாடு
நிலையற்றது.
சஞ்சலத்திலேயே வாழும்..
எப்போது வேண்டுமானாலும்
தம்மை விடுவித்துக் கொள்ளும்…

வாழ்க்கையின் போக்கு
******************************
கைகட்டி
எட்டநின்று
குறுக்கிடாமல்
கவனியுங்கள்
வாழ்க்கையின்
போக்கை..
அதிசயங்கள் பல நிகழ்த்த வல்ல
வல்லமை கொண்டது வாழ்க்கை..
அதை நீங்கள் கையிலெடுத்தால்
கைவிட்டுவிடும்..
அது உங்கள் கரம்பிடித்தால்
கைதூக்கி விடும்.

நினைவலைகள்
*******************
நினைவுகளின் அலைகள்..
முத்தமிட்டன‌ நனவில்
நிழல்களின் மீப்பெரு பிம்பங்கள்
மோதுகின்றன நிஜத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
உருப்பெறுகின்றன உருவாரங்கள்
மனதின் ஆதிக்கம்
சில்லறைத்தனமான என் அசைவுகள்
காண்போர் யாவரையும் கேளிக்கிரையாக்குகிறது..
ஏதும் பொருட்படுத்தா மனம்
மௌன இரையாகிறது..
பெரும் கைகலப்பு இடுக்குகளில்
எழுதுகோல் கதறுகிறது..
விரல்கள் கசிய கவிதையாகிறது ஏதோ ஒன்று

பெண் எனும் சுமைதாங்கி
*******************************
தந்தையைக் கண்ணுக்குள் சுமந்தவள்
சகோதரனை இடுப்பில் சுமந்தாள்
காதலனை நெஞ்சில் சுமந்தவள்
அவனையே கணவனாக மடியில் சுமந்தாள்
பிள்ளையை கருவில் சுமந்தவள்
பேரப்பிள்ளைகளை இருகரங்களில் சுமந்தாள்.
சுமைகளை‌க் கூடச் சுகிக்கும்
பெண்மையின்‌ மென்மையை
பூவிதழ் போன்று இதயக் கமலத்தில் கொள்ளும்
மணாளனைக் கொண்ட மங்கையின் மனம்
தடம் மாறிய வெளிச்சமாய்
பிரகாசிக்கும் என்றும்..

மொட்டுகளின் கண்ணீர்க் கதறல்
***************************************
மனிதரை மிருகத்துடன் ஒப்பிட்டுக்
கொச்சைப்படுத்த வேண்டாம்
மிருக இனத்தை.
மனிதனின்றி மிருகம் என்றும்
பச்சிளங் தளிர்கள் மீது
காட்டாது வன்புணர்வை
ஒருபோதும்..
மனிதன் மட்டுமே
துளிரானாலும்
கொடியானாலும்
பூச்செடியானாலும்
மலர்மொட்டானாலும்
காண்பன அனைத்தையும்
வன்மநாசம் செய்கிறான்..
ஆதலால்…
மலரை கசக்கி நாசப்படுத்தும்
இப்படியான மனிதரை
இனி மிருகமென்றழைக்க வேண்டாம்..
மிருகங்கள் வெட்கப்படுகின்றன.

படைப்பின் பால் இயல்பு
*****************************
எதிர்பாலின் மீதான பற்றென்பது மனித இயல்பே…
அம்மாவிற்கு ஆண்பிள்ளையின் மீது கூடதல் பாசம்
அப்பாவிற்கு பெண்பிள்ளை மீது.
அண்ணனுக்கு தங்கை மீதும்
அக்காவிற்கு தம்பி மீது
என தனதொத்தப் பாலைக் காட்டிலும்
தமக்கெதிரான பால் மீதான ஈர்ப்பென்பது உடலின் கூறு
சுரப்பிகளின்செயல்பாடு
இயற்கையின் படைப்பு..

நம்பிக்கை வேர்
********************
துளிர் விடும் போதே
கிள்ளியெறிய முயன்றாய்…..
கிஞ்சித்தும் கலங்கவில்லை…
மௌனமாய் தனக்கான வேரை மட்டுமே
உறுதியாய்ப் பற்றி நின்றது
நம்பிக்கையாய்..
இன்றோ..
பெருமரயாய் விரவிக் கிடக்கிறது…
பூத்துக் குலுங்கும் மலர்களையும்..
கனிந்து கிடக்கும் பழங்களையும்…
வாரி வழங்கக் கரம் நீட்டுகிறது இன்முகமாய்….

Oru kiliyin Oppari Poem By Se Karthigaiselvan. ஒரு கிளியின் ஒப்பாரி கவிதை - செ.கார்த்திகைசெல்வன்

ஒரு கிளியின் ஒப்பாரி கவிதை – செ.கார்த்திகைசெல்வன்




காலம்போட்ட
கோலத்தால்
கருப்பாய் நானும்
ஆனேன்

மனிதன் எண்ணம்
மாறியதால்
நானும் வண்ணம்
மாறினேன்

நல்மாற்றமிங்கே
நிகழ்ந்திட்டால்
சுயவண்ணம் நானும்
சூடுவேன்

மகிழ்ச்சியோடே
சிறகடித்தேன்
நல் பசுமையோடே
உலா வந்தேன்

கொஞ்சிப்பேசிடும்
குரல்கொண்டேன்
குழலாய்ப் பாடிடும்
வரம்கண்டேன்

காண்பர்க்கோ நான்
பரவசம்
நித்தம் புத்துணர்ச்சியோ
என்வசம்
மங்கையும் மயக்கம்
கொண்டிடுவாள்
தங்கையாய் நினைத்துக்
கொஞ்சிடுவாள்

கவிஞனோ எனைப்
பாட்டில்வைப்பான்
கலைஞனும் கரகமாய்த்
தலையில் வைப்பான்

தினம் பழந்தின்னும்
ஜீவன் நான்
மரப்பொந்தினுள் வாழும்
மகாராணியும் நான்

கூட்டுவாழ்க்கையே
என்குடும்பம்
அங்கு நிறைந்திருக்குமே
நீங்கா இன்பம்

பசுமைவெளிகள்தானே
என் ஆதாரம்
அது பரவசங் கொள்ளுங்
கூடாரம்

யாருக்கும் இடையூறாய்
இல்லையே
நாங்களும் இயற்கை
அன்னையின்
பிள்ளையே

இப்படியிருந்தது எம்
பயணம்
சற்றே நெருங்குது
ஒரு மரணம்

பரவலாய்
வாழ்ந்த இனம் எனது
இன்று நேர்ந்த
கொடுமைசொல்ல
கண்ணீர் வருது

குற்றமேதும்
இழைத்தோமா?
எம் சுற்றம்
குறைந்து போயிற்றே

கணினியுக
மானிடரே!
எம்மின
வலியைக் கொஞ்சம்
உணர்வீரோ!

மரம்தானே எங்கள்வீடு
மனசாட்சியின்றி
அழிக்காதீர்!

மரம்தானே
எங்கள் உலகம்
மறந்தும்கூட
வெட்டாதீர்!

சுதந்திரம்தானே
எங்கள்வாழ்க்கை
கூண்டுக்குள்ளே
அடைக்காதீர்!

பசுமைதானே எம்
வாழ்வாதாரம்
இழைக்காதீர்
இனியும் சேதாரம்!

மானிடா மானிடா
திருந்திடுவாய்!
என் கண்ணீரின்
வலியை
உணர்ந்திடுவாய்!

எனக்காய் மட்டும்
அழவில்லை
உனக்கும்
சேர்த்தே
அழுகின்றேன்!

மானிடா மானிடா
திருந்திடுவாய்!
மரங்களை மீண்டும்
வளர்த்திடுவாய்

மரங்களை நீயும்
அழித்திட்டால்
மனித இனமே
அழிந்துவிடும்!

Anandha Isaiyana Azhugai Oli Poem By Adhi Sakthivel. ஆதித் சக்திவேலின் ஆனந்த இசையான அழுகை ஒலி கவிதை

ஆனந்த இசையான அழுகை ஒலி கவிதை – ஆதித் சக்திவேல்




காலம் மெதுவாகப்
பருகிக் கொண்டிருந்த அந்த இரவு
என் வாழ்க்கையின்
மிக நீண்ட ஒன்றானது
எதிர்பார்ப்பின் எச்சங்கள்
மூழ்கடித்திருந்தன என்னை

கைகளும் மனமும்
போட்டியிட்டுப் பிசைந்து கொண்டன
போர்க்கள பரபரப்பில் இயங்கிய
அந்த பிரசவ அறையின் வெளியே

தன் முழு பாரத்தையும்
இறக்கி வைத்திருந்தது அமைதி
அந்தக் காத்திருப்பு அறையில்
என்னைச் சுற்றி

ஆதியில்
பள்ளத்தாக்குகளின் புல் வெளியில்
பாலையின் மணற்பரப்புகளில்
பரவிய அதே ரத்த நெடி
உயிரை உந்தித் தள்ளிய
தாய்மை வலியின் அதே இன்பக் கதறல்
பிறப்பின் அதே சுகமான மணம்

குகைகளின்
கருங்கற்களில் முட்டி
இருட்காடுகளின்
பெருமரங்களில் பட்டு எதிரொலித்த
அதே முதல் அழுகை ஒலி
ஆனந்த இசையெனக் கசிந்தது
வாழ்வின் முடிச்சு ஒன்று
அவிழும் ஓசையின் பின்னணியில்
மூடிய கண்ணாடிக் கதவின் இடுக்குகளில்

கருவறை உலைக்களத்தின்
குறையாச் சூட்டில்
உருகா பனிக் குவியலாய்
தாய்மையில் மிதந்த
அணையா ஒளிப் பந்து ஒன்று
அசையா மேகப் பொதியென
நம்பிக்கையின் ஏராளமான சாயலுடன்
என் கைகளில் பூப்போல

முழுப் பரிமாணத்தில் நிறைந்து
பொங்கி வழிந்த நீல ஒளிச் சுடர்
அதன் கண்களில்
என் வாழ்வின்
ஒரு புதிய பாதைக்கு வெளிச்சம் ஊட்ட

கன்றிடுமோ கன்னம் – முத்தம்
ஒன்று தரின் என அஞ்சி
உச்சந்தலையில் நான் அதைத் தர
என்னை நிரப்பியது அது
இன்பத்தின் துண்டுகளாய் உடைந்து

மனைவியைப் பார்த்தேன்
மகிழ்ச்சியும் வலியும்
மாறி மாறி மையமிட்ட அவளது முகம்
சிவப்பும் வெளுப்பும் ஆனது
மாறி மாறி

நிலம் கிழித்து
மேல் வரும் முளையில்
அதே நிலம் துளைத்து
கீழ் இறங்கும் வேரில்
கவுரவம் கொண்ட விதையானாள்
தாய் என
தன் அடையாளம் மாறியதில்

என் மனமெங்கும் மகிழ்வு மழை
கண்களில் வழிந்தது அது
சில சொட்டுகளாய்த்
தன்னைச் சுருக்கி
வாழ்வின் சாரமென

Iravu Yen Azhugirathu ShortStory by Kumaraguru. இரவு ஏன் அழுகிறது? சிறுகதை - குமரகுரு

இரவு ஏன் அழுகிறது? சிறுகதை – குமரகுரு




இரவொரு மாயக் கழுதை. அது சுமக்கும் பொதி நட்சத்திரங்கள். மாயம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அது விடியலில் மாயமாய் மறைந்து விடுவதால். இரவை மறைக்கத் துவங்கிய மனிதனுக்கு மின்சாரம்தான் துருப்பு சீட்டு. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நெடும் இரவுகளில், மொட்டை மாடிகளில் மினுக்கும் உரையாடல்களின் ஓசையை இப்போதெல்லாம் எப்போதாவதுதான் நிலா கேட்கிறது.

அப்படிப்பட்ட ஒரு இரவில் தொலைக்காட்சியில் ரைம்ஸ் பார்க்காமல் நட்சத்திரங்களை இணைத்து படம் வரைவது பிடித்து போன ஒரு சிறுமியை தினமும் மொட்டை மாடியில் பார்க்கிறேன். அவள் ஆட்காட்டி விரலை ஊசியாகவும் காற்றை நூலாகவும் உருமாற்றி என்னென்னவோ வரைகிறாள். எனக்கு அது எதுவெதுவாகவோத் தெரிகிறது.

இரவு பிடிபடாத நாட்களில் உறங்கி விடுகிறது உலகம். உலகம் பிடிபடாத நாட்களில் வரவே வராத உறக்கத்தை கண்கள் சிவக்க சிவக்கப் பார்த்தபடியிருப்பதுதான் பலருக்கு வாய்த்திருக்கிறது. சில நேரங்களில் இப்படி பல நாட்களாய் உறங்காதவனின் சிவந்த விழிதான் சூரியனோ என்று கூட தோன்றும்.

இரவு விலகி பகல் நுழையும் நேரத்தில் சைக்கிளில் வந்து பால் பாக்கொட்டுகளையும் செய்தித் தாள்களையும் விநியோகித்து செல்லும் சிறுவர்களின் சைக்கிள் கேரியரில் அமர்ந்து கொண்டாட்டமாக பயணிக்கும் இரவு.

காற்று சில்லென்று வீசுமொரு டிசம்பர் மாதத்தின் இரவில் தெருவோரத்தில் பீடியைப் புகைத்தபடி நடந்து செல்லும் வயசாளியின் இருமல் ஒலி கேட்டு அமைதியாகி விடும் நாய் கூட்டமும் உண்டு. அவை அந்த இருமலை ஒரு சமிக்ஞையாக கொண்டு இரவைத் திருட வரும் எவனிடமோவிருந்து இரவைக் காப்பாற்ற கதறி, அந்த இருமலொலியில் இரவு பத்திரப்பட்டுவிட்ட சமாதானத்தில் அமைதியாகிவிடுகின்றன போல.

கடை மூடும் நேரம் சரியாக டாஸ்மாக்கில் வாங்கிய குவாட்டரை எடுத்துக் கொண்டு வாட்டர் பாக்கெட்டைப் பிதுக்கியடித்து பிளாஸ்டிக் கிளாஸைக் கழுவி, அதில் பானத்தையும் நீரையும் கலந்ததும் வரும் நிறம்தான் இரவோ?

கவலைகளற்ற நாளில் தோழனின் தோள் மீது கைப் போட்டு நடக்கும் தோழியைப் போல் இரவு குதூகலமாக நடந்து செல்கிறது. எப்படித்தான் அதனால் சற்றும் சலனமின்றி இருக்க முடியுமோத் தெரியவில்லை.

நடுநிசியில், மூடப்பட்டிருக்கும் கடை வாசலில் அமர்ந்து கொண்டு கம்பளிக்குள் நடுங்கி கொண்டிருப்பவனின் கண் முன் நிசப்தமான கண்ணாடி குடுவைக்குள் குலுங்காமல் நிற்கும் நீரைப் போல கிடந்த இரவை “வ்ர்ரூம்ம்ம்!!” என்ற ஒலியுடன் அசைத்து செல்லும் ஒரு வாகனத்தின் ஒலி தூரம் செல்ல செல்ல மறைந்ததும் மீண்டும் இரவு அதே போல் அமைதியாக அசையாமல் அப்படியே இருப்பதைக் கம்பளிக்குள் நடுங்குபவன் உணர்வதேயில்லை!!

இப்போதொரு இரவு, வெட்ட வெளியில் மல்லாந்து கிடப்பவனின் கண் முன் குப்புற படுத்திருக்கிறது. அதற்கொரு முகமுண்டு. அந்த முகம் நாமெல்லாம் நினைப்பது போல் கண் காது மூக்கு வாய் கொண்டதல்ல. இரவின் முகம் இருட்டு. அந்த இருட்டு முழுவதும் பரவியிருக்க, முழுதும் நிரம்பிய பெருநதியின் நீரோட்டமென எத்திக்கும் பரவியோடுகிறது. அந்த முகத்தில் கண்ணுக்கு புலப்படாத, மறைந்திருக்கும் இரவின் கண்களிலிருந்து லட்சோபலட்சத் துளிகள் கண்ணீராகப் பொழிகின்றன. அது யாருக்கான கண்ணீரோ? யாருடைய கண்ணீரோ?

பகலெல்லாம் சிரிப்பதைப் போல் நடிக்கும் இரவு, இரவெல்லாம் அழும் ஒலி கேட்பதைப் போல் நினைப்பவனின் மூளையில்தான் கோளாறோ? கிரிக்கெட் பூச்சிகள் இறக்கைகளை உரசத் துவங்கிவிட்டன… தவளைகள் எந்கேயென்றுத் தெரியவில்லை-அமைதியாக எங்கேயோ ஒடுங்கியிருக்கின்றன போல… ஆங்காங்கேப் பறக்கும் இரவுப்பறவைகள்… புதர்களுக்குள் மறைந்தமர்ந்திருக்கும் கொக்குகளின் கண்கள் பச்சை நிற பளிங்கு போல் மின்னுகின்றன… குளத்தங்கரையெல்லாம் நிலாவின் ஒளி வீழ்ந்து குளத்துக்குள் இல்லாத நீரைத் தேடி கொண்டிருக்கிறது… நீரை மட்டுமா காணவில்லை? குளத்தைக் காணாமல் தேடியலையும் நிலாவிற்கு எப்படித் தெரியும்? நான் படுத்திருக்கும் இந்த பூங்காவின் புல்வெளி குளத்தை மண் கொட்டித் தூர் நிரப்பி உருவாக்கப்பட்டதென்பது?

ஒருவேளை அதை நினைத்துதான் இந்த இரவு அழுகிறதோ?