thottiyin magan book reviewed by suresh isakkipaandi நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் - சுரேஷ் இசக்கிபாண்டி‌‌thottiyin magan book reviewed by suresh isakkipaandi நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் - சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

 

 

 

 

“யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்”  

ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு பணியாளராக) வேலை செய்து, அங்கு பரவிய தொற்று நோயால் உயிரை இழந்து தான் செய்த பணியை தன் மகன் சுடலைமுத்துவிற்கு கைமாற்றிவிட்டு சென்றான் இசக்கிமுத்து. காரணம் அவர்களுக்கு அந்த குலத்தொழில் தவிர வேற தொழில்களை செய்ய இந்த பொதுச் சமூகம் அனுமதிப்பதில்லை என்பது தான் இன்றளவும் நிதர்சனமான உண்மை. அப்படி ஒவ்வாத மன நிலைமையோடு அனைத்து பணக்கார, படித்த, ஜாதி இந்துக்களின் கழிவறைகளை துடைப்பம் மற்றும் வாலியால் தினந்தோறும் சுத்தம் செய்து, நாற்றம் எடுத்த இந்த வாழ்வு நமக்கு விதிக்கப்பட்டது என நம்பி வாழ்வை கடந்து வந்த தோட்டிகள் அனைவரது வாழ்வின் ஒவ்வொரு நாள் வருவாயையும் ஆளும் அரசும், அதற்கு தலைமை தாங்கும் தலைவர்களும் (நகராட்சி தலைவர்), அதற்கு கீழ் பணி செய்யும் அலுவலர்களும் (ஓவர்சீயர்) சுரண்டுவது போல அந்த நகராட்சியின் கீழ் பணியாற்றும் அத்தனை தோட்டிகளின் உழைப்பையும் வாழ்வையும் சுரண்டிக் கொண்டே இருக்கிறது. இதை தட்டிக் கேட்க, உரிமையாக சம்பள உயர்வு கேட்க நாம் ஒன்று பட வேண்டும் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் எழவே, அதை அவர்களது கூட்டத்தில் ஒருவனாக இருந்த சுடலை முத்துவை வைத்து முடிவு கட்டுகிறது ஆளும் வர்க்கம்.

இப்படி ஆளும் வர்க்கத்தோடு இணைந்து அவர்களின் அடிமையாக அவர்களின் கீழ் இருந்தால் தான் நல்ல முன்னேறிய நிலைமைக்கு நம்மால் சென்று சேர முடியும். அதனால் யார் எப்படி போனால் நமக்கு என்ன என்று சுயநல வாழ்வை தேடி பயணித்த சுடலைமுத்து. பின்னாளில் நமது குழந்தையும் இதுபோல் வாலியும், துடப்பத்தையும் தூக்க வேண்டிய நிலை வராது என்கிற கனவோடு சக தோட்டியாக வள்ளியை மணந்து வாழ்வின் ஒவ்வொரு அடியையும் மிக கவனத்தோடும் பெருங்கனவோடும் அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரும், சங்கத்தை கலைக்க உதவியதற்கு கைமாறாக உயர்த்தப்பட்ட சம்பளத்தில் ஒவ்வொரு பணத்தையும் நகராட்சி தலைவரிடம் வீடும், வயலும் வாங்க கொடுத்து வைத்தான் சுடலைமுத்து.

“இங்கு வாழ்கிற பெரும்பாலான தகப்பன்கள் அனைவரும் தனது குழந்தைகள் தன்னுடைய வேலையை செய்யக்கூடாது அவர்களுக்கான ஒரு புது வாழ்வு மண்ணிலேயே உருவாக்கி விட வேண்டும்” என்கிற எண்ண ஓட்டத்திலேயே ஓடுகிற ஒரு தகப்பனாய் இருந்த சுடலைமுத்து, தனது சக தோட்டிகளுக்கு துரோகம் இழைப்பது தனது நலனுக்கானது, தனது மகனின் எதிர்காலத்திற்கானது என்கிற எண்ணத்தில் ஒவ்வொரு நாளும் ஓடுகிறான். இதற்கிடையில் அவனுக்கு ஒரு மகன் பிறக்கிறான் அவனை அந்த சேரியிலிருந்து விலக்கி வைத்துக் வளர்ப்பது மட்டுமல்லாமல், “தான் ஒரு தோட்டி” என்பதை கூட மறைத்து ஒவ்வொரு நாளும் தான் தவமிருந்து பெற்ற மகனின் அருகில் கூட செல்லாமல் தொலைதூரத்தில் இருந்து பார்த்து சந்தோஷப்பட்டு, ஒரு நாள் புது வாழ்வு நமக்கு கிடைக்கும் என்று ஒவ்வொரு நாளையும் கவனத்தோடு கழிக்கிறான். அங்கே சேரியில் வாழ்கிற தோட்டிகளின் குழந்தைகள் போலல்லாமல் தனது குழந்தைக்கு யாரும் வைக்காத மோகன் என பெயர் வைத்து, பாராட்டி சீராட்டி ஒரு எஜமான் வீட்டில் பிள்ளை போல் வள்ளியும், சுடலைமுத்துவும் வளர்கிறார்கள். தோட்டியின் மகனுக்கு இப்படி ஒரு பெயரா என முதலியார் வக்கீல் மனைவி எள்ளி நகை ஆடும் போதும், தோட்டியின் மகனுக்கு படிக்க அனுமதி இல்லை, படிப்பு வராது என வகுப்பு ஆசிரியர் அடிக்கின்ற நிலைமையும் இந்த பொதுச் சமூகம் எப்படி எனது மகனை தோட்டி ஆக்காமல் விடும் என்ற பெரும் கவலையோடும் கடந்து செல்லும் அவர்கள் வாழ்க்கையில், கொத்துக்கொத்தாய் மக்களைக் கொன்ற காலரா நோயால் வள்ளியும் சுடலை முத்துவும் இறந்து போக,

மோகன் என்ன ஆனான் என்பதே மீதி கதை.

173 பக்கங்களை கொண்ட இந்த நாவல் படிக்க எனக்கு நீண்ட நாட்கள் ஆனது, எனினும் படித்து முடித்த பிறகு மிகப்பெரும் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது.

1947 ஆம் ஆண்டு எழுதப்பட்ட மலையாள நாவல், சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளை கடந்தும் இன்று வரையில் இந்திய சமூகத்தின் நிலைமைகளை தொடர்ந்து விளக்கிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தகழி சுந்தரப்பிள்ளை இந்த நாவலை மிக எளிய நடையில் அனைவரது மனசாட்சியை உலுக்கும் நோக்கில் உருவாக்கி இருக்கிறார். அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களையும் சுய விமர்சனத்தோடு சிந்திக்க வைத்திருக்கிறார் எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

புத்தகம்: தோட்டியின் மகன்
ஆசிரியர்: தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்: சுந்தர ராமசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *