புனிதங்களுக்குப்  பின்னால்  அரக்கத்தனம்
ரட்சகர்களுக்குள்ளாக  நடமாடும்  வெறித்தனம்
ரத்தச்  சாலைகளில்  பயணிக்கின்றன
பிரார்த்தனையின் தீராமைகள்
தயவும்  கருணையும்  கெஞ்சிப்பெறுவதல்ல
இரக்கமும்  அன்பும்  மன்றாடிக் கேட்கக்கூடியதல்ல
பூக்களோ  தானியங்களோ அறுவடைக்குரியவை
ஹிட்லர்  புன்னகைத்து
நகரங்கள்  சீரழிந்தன
சாத்தானுக்கு  சிறகுகள்  முளைத்தன
பிணங்களுக்காகக்  காத்திருக்கின்றன
கழுகுகள்
ரத்தம்  குடிக்கப்  பதிவிருக்கின்றன  வல்லூறுகள்
சதை தேடி அலைகின்றன
புறாக்களே  சொந்தக்  கூட்டுக்குப்  பறந்து செல்லுங்கள்.
பொறிக்குள்  அகப்பட்டுக்  கொண்ட
எலிகளைக்  கொல்ல  அவன்  உருவாக்கிய
எந்திரம் திறக்கும்  சூட்சுமத்தை
மறந்து  போனான்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *