அஜயன் பாலா
————————–
எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் , வசனகர்த்தா, மற்றும் திரைப்பட நடிகர். மயில்வாகனன்” எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
“பை சைக்கிள் தீவ்ஸ்” எனும் திரைக்கதையையும், “மார்லன் பிராண்டோ”வையும் மொழிமாற்றம் செய்துள்ளார்.
இவர் எழுதிய “உலக சினிமா வரலாறு; மௌனயுகம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி எனும் இந்த நூலை தக்கை வே.பாபுவுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
நூலின் உள்ளே …..
மொத்தம் 24 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
1. கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி
2. நீதியின் மரணம்
3. மழைக்கால கோட்டும் மஞ்சள் நிற கைக்குட்டையும்
4. மலை வீட்டின் பாதை
5. ரோஸ்லின் மனதில் காதல் இல்லாத தோட்டம்
6. மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை
7. டினோசர் – 94 ஒர் வரலாற்றுக் கதை
8. சிம்லி
9. இரண்டாம் வெளி
10. விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்புகள்
11. ஜீன்ஸ் அணிந்த பறவைகள்
12. பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்
13.சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ
14. ரோஜா
15. கடவுளர் சபை
16. முகம்
17. தாயக்கட்டம்
18. கொலைக்கு பின் சில தத்துவ காரணங்கள்
19. தொடுவானம்
20. துரோகத்தின் நிழல்
21. தோட்டத்தில் கல்லெறிந்தவர் யாரங்கே?
22. தாண்டவராயன்
23. முருகேசன்
24. மயில்வாகனன் மற்றும் கதைகள்.
கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி
—————————— —————————–
சேகர் கடைசிப் பெட்டியில் இருக்கிறான். கடைசிப் பெட்டியில் இருப்பவனுக்கு ரயிலின் முகமான எஞ்சினை பார்க்க ஆவல். ஆனால் அவனால் பார்க்க முடிவதில்லை. ரயிலில் தனக்கும் இன்னொரு உயிருக்குமான ஒரே தொடர்பு ஊளைச் சத்தம் என எண்ணுபவன். அந்த ஊளைச் சத்தம் தான் இவனுக்கான ஆபத்தில் இருந்து காக்கும். ரயிலுக்கும் இவனுக்கும் இடையிலான சினேகம் தான் அவனுக்குச் சொத்தாக இருந்தது.
ரயில் எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் பரவெளியையும், பேரமைதியும், ரசிப்பவன். இடையில் நிற்கும் ரயில் வண்டியில் ஆடுகளும் சிறுவர்களும் ஏறுகிறார்கள். அவர்களுக்கு தன்னிடம் இருந்த ரொட்டியைத் தருவதற்காக தனது பையிலிருந்து எடுக்கிறான். கூடவே வரும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். இனம் புரியாத உணர்வு. அந்த ரொட்டியை சிறுவனிடம் நீட்டுகிறான் அவர்களோ அந்தப் பெண்ணின் சம்மதத்திற்காக பார்க்கிறார்கள். இப்படியாக நகர்கிறது சுவாரஸ்யமாய் இக்கதை.
ரயிலும், ரம்மியமான காட்சிகளும், ஊளைச் சத்தமும் , வெட்ட வெளியையும், ஆடுகளையும், சிறுவர்களையும் கதை தனது ரயிலில் அற்புதமாக பயணம் செய்ய வைக்கிறார்.
நீதியின் மரணம்
—————————–
நகராட்சி ஆணையர் மகன் ராகவன் மீது ஒரு மஞ்சள் லாரி மோதி விபத்தில் இறந்து போகிறான். நகராட்சி ஆணையர் மஞ்சள் லாரி மீது வழக்கு போடுகிறார். மஞ்சள் கலர் மற்றும் ஏதோ செய்வினை அதை தண்டிக்க போராடுகிறார்.
ஏன் அவர் மஞ்சள் லாரியை குறி வைக்கிறார் என்பதில் சுவாரஸ்யம். அதோடு மட்டுமல்லாது நீதிமன்றத்திலும் முறையீடு செய்து, வழக்கு விசாரணை செல்கிறது.
நீதிபதி என்ன தீர்ப்பு சொன்னார்? என்பதே சிறுகதை. கதை வாசிக்க வாசிக்க என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலைத் தூண்டி விடுகிறார்.
கதையின் இடையில்…..
//நீதிக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்கிறது அரேபிய பழமொழி //
//அப்போது மட்டும் அவர் கையில் ஒரு சுத்தியல் அல்லது கடப்பாறை கிடைத்து இருந்தால் அன்றே அந்த லாரிக்கு விசாரணை இல்லா மரண தண்டனை கிடைத்து இருக்கும் //
தீர்ப்பு நம்மையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விடுகிறது. இப்படிப்பட்ட கதைகளும் நிஜமாகவே நடந்து கொண்டு தான் இருக்கிறது என ஆச்சர்யப்படுத்துகிறது.
சிம்லி
———-
பசி தான் எல்லாவற்திற்கும் காரணம். இந்த ஒற்றை வரிதான் இந்தச் சிறுகதையே. திருவல்லிக்கேணி பாண்டியன் மேன்சன், அறை எண்.28 அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக்கும்போது இருந்த பசியும் அதன் கொடுமையும், இட்லிகொண்டு வந்து தரும் அந்தப் பொண்ணும், பின் டைரக்டராக ஆன பின் நடிப்பதற்காக வந்த ஐந்து பெண்களில் ஒருவர் சிம்லி என்று அடையாளம் கண்டு கொண்டு நடிக்க வைக்க தேர்வு செய்த போது எதிர்பாரா திருப்பமாக நடக்கும் அந்த நிகழ்வு மனதைப் பிசைகிறது.
வாழ்க்கையின் கடந்த கால மனிதர்களை பின்னாட்களில் எப்படியாவது அடையாளம் காட்டி விட்டேச் சென்று விடுகிறது இந்த வாழ்க்கை. ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு சம்பவத்தை ஞாபகம் செய்து விட்டேச் சென்று விடுகிறது.
இந்தக் கதையும் இளம் பிராய மேன்சன் வாழ்வையும், நகரத்து பசியையும், உழைக்கும் மக்களையும் கண் முன்னால் காட்சிப்பத்திச் செல்கிறது.
ஜீன்ஸ் அணிந்த பறவைகள்
—————————— ——————–
கடற்கரைச் சாலைக்கு வந்து கவிதை எழுதுவதற்காக வருகிறான். எதற்காக வருகிறான். என்ன நோக்கத்திற்காக கவிதை எழுதுகிறான். அவன் கவிதையின் பேனா எழுதும் சிண்ட்ரெல்லா யார்?.ஒரு கனவு என்னவெல்லாம் செய்கிறது என்பதையும் விவரிக்கிறது கவிதை.
இவன் கவிதைகள் வியாபாரிகளின் உரத்த குரலுக்கும், கடலின் பேரைச்சலுக்கும் இடையே மலர்கிறது. ஆனால் அந்த கடற்கரையில் இவன் சந்திக்க நினைத்த கனவை சந்தித்தானா?
கடைசியில் அந்த கடற்கரைச் சாலையில் என்னவாகிப் போனான் என இயல்பாய தத்ரூபமாய் கதை முடிகிறது.
முகம் இரண்டு
————————-
ஷேவ் செய்ய முகத்தைப் பார்க்கையில் தனது முகம் மாறி இருப்பதைக் கண்டு பதை பதைக்கிறான். எதற்காக அவன் முகம் மாறியது.
ஒருவேளை நேற்று இரவு தியேட்டர் சென்று படம் பார்த்து வந்ததின் விளைவுதான் நம் முகம் இப்படி இருக்கிறதா என தன்னைத் தானே கேள்வி கேட்கிறான்.
பின்னர் யோசிக்கிறான் தனக்கு எப்படி இப்படி முகம் மாறியது என்று? அந்தக் கேள்விதான் சிறு பொறியாக கதையின் கருவாக முடிகிறது.
வீரசோழன்.க.சாே. திருமாவளவன்
நூல் – கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி
ஆசிரியர் – அஜயன் பாலா
வெளியீடு – நாதன் பதிப்பகம்