Dheivame satchi Book By Sa Thamizhselvan Bookreview By Theni Sundar. நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் தெய்வமே சாட்சி - தேனி சுந்தர்




நூல்: தெய்வமே சாட்சி
ஆசிரியர்: ச. தமிழ்ச்செல்வன்
விலை: 150
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

சாமி கதைகளும் சவுக்கடிகளும்..!

தெய்வமே சாட்சி என்கிற தலைப்புதான் சாந்தமானதாக தெரிகிறது. உள்ளே நுழைந்ததும் சவுக்கடி காத்திருக்கிறது..

கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பது போல பெண்களை கொன்றால் பாவம் கும்பிட்டால் போச்சு என்று காலங்காலமாக கொன்றும் கும்பிட்டும் நல்லவய்ங்க மாதிரியே திரியுற ஆணாதிக்க சமூகத்திற்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு சவுக்கடி கொடுத்துக் கொடுத்து தான் நம்மை அடுத்தடுத்து கடத்தி விடுகிறார் தோழர் தமிழ்ச் செல்வன்..

நிலவறையில் அடைத்துக் கொலை, கழுத்தை வெட்டிக் கொலை, உடன்கட்டை ஏற்றிக் கொலை, எரித்துக் கொலை, வார்த்தைகளால் கொலை, தீயிட்டு தற்கொலை, கிணற்றில் விழுந்து தற்கொலை இப்படி தாய், தகப்பன், அரசன், உள்ளூர் செல்வந்தன், கணவன், கொழுந்தன், வழிப் போக்கன், ஊரார், சொந்த சாதியார் என பலராலும் கொல்லப்பட்ட, தற்கொலைக்கு தூண்டப்பட்ட பெண்கள் தான் சாமிகளாக கும்பிடப் படுகின்றனர்.

வயசான கிழவனுக்கு கட்டிக் கொடுத்து அதனால செத்து உருவான சாமி, அம்மை வந்து செத்து உருவான சாமி, சந்தேகப்பட்டு புருசன், அண்ணன், தம்பிகளால கொலை செய்யப்பட்டு உருவான சாமிகள், பஞ்சம், பசி காரணமாக செத்து உருவான சாமிகள், சாதி மாறி காதலிச்சு அதனால கொலை செய்யப்பட்டு உருவான சாமிகள் இப்படி அதற்கான காரணங்கள் ஏராளம் இருக்கின்றன.

தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, மதுரை மாவட்ட சாமிகள் தான் நிறைய இருக்கின்றன. அதில் தேனி கொஞ்சம் அதிகமா தான் இருக்கு. தோழர் சத்யமாணிக்கம் நிறைய கதைகளை தொகுத்துக் கொடுத்திருக்கிறார்..

அதில் எங்க ஊர் கூத்தனாட்சி அம்மன் கதையும் உண்டு. அதில் சில திருத்தங்களும் இருக்கு. கூத்தனாட்சியை குதுரையில உக்காந்து விரட்டி போனவன் பேரு பட்டாணி. தப்பி ஓடும் போது கூத்தனாட்சி வச்சிருந்த மோர் பூராவும் கொட்டிப் போச்சு. அந்தப் பக்கத்துல இருக்க மண்ணு கூட இன்னும் வெள்ளையா இருக்கும். கேட்டா கூத்தனாட்சி கொட்டுன மோர் தான் என்று மக்கள் சொல்வாங்க. உள்ளூர் சிறுவர்களுக்கு கூத்தனாட்சி கோயில் தான் விடுமுறை நாள் சுற்றுலா தளம். கிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் இருந்து ரொம்ப தூரத்தில் கரட்டு அடிவாரத்தில் அமைந்துள்ளது கூத்தனாட்சி கோயில்.! அந்தக் காலத்துல மக்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்.

நாங்கள் சிறு வயதில், போகும் வழியில் இருபுறமும் பெரிய பெரிய மண்பானைகள் எல்லாம் மண்ணில் புதைந்த படி தெரிவதை பார்த்து இருக்கிறோம். தொல்லியல் ஆய்வுகள் பரவலாக கவனம் பெற்றுள்ள இன்றைய சூழலில் அதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எழுகிறது. முந்தி காலத்துல காட்டு வழி போக்குவரத்து இருந்திருக்கு. இந்தப் பக்கம் கூடி ஏறி மலையைக் கடந்து அந்தப் பக்கம் ராசபாளையம் போவாங்களாம் சனங்க. போற வழியெல்லாம் அங்கங்க அந்த கருப்பு, இந்த கருப்புன்னு நிறைய சிலைகள் இருக்கும். காட்டு வழிப் பயணமில்லையா, வழித் துணைக்கு வச்சிருக்கான் மனுசன்!

குழந்தையின்மையால் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, பிள்ளை வரம் கேட்டு இராமேஸ்வரம் போகையில் இடையில் சாக நேர்ந்த பெண் தான் மலட்டம்மா சாமி ஆகிறாள்…!

கணவன் இல்லை. பஞ்சம்.. கஞ்சிக்கு வழி இல்லை. பசியால் அழுகும் தன் குழந்தைகளுக்கு ரெண்டு வாழைப்பழம் புடுங்கிக்கொடுத்த ஒரு பெண், திருடன் என்று நினைத்து தோட்டத்துக் காவலாளியால் வெட்டிக் கொல்லப் படுகிறாள். துர்க்கையம்மன்.!

மாத விடாய் காரணமாக வீட்டை விட்டு தனியே வைக்கப் பட்ட ஒரு பெண், ஊரே தீப்பிடித்து எரியும் போதும், வெளியே வந்தா கெட்டது என்று உக்காந்த படியே எரிந்து சாம்பலாகிறாள். ஒரு துண்டுச் சீலை மட்டும் மிச்சம் கிடக்கிறது. சீலைக்காரி அம்மன் கதை..!

காலில் ஒட்டியதை உதறியதால் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட மணி முத்தம்மன்..!

வீட்டு முன்பு யாரோ சில ஆண்கள் உக்காந்து பேசியதால் அண்ணன் சந்தேகத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சீனியம்மன்..!

காதலுக்காக தான் விரும்பியவனை கவர்ந்து வரச் செய்து, அவன் ஈகோவால் தற்கொலை செய்து கொண்ட பிறகு தன்னையும் மாய்த்துக் கொள்ளும் சீனி முத்து அம்மன் கொஞ்சம் வித்தியாசம் தான்..!

அறியாமையாலும் ஆத்திரத்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி பெண்கள் கொல்லப்படுவதும் கொல்லப்பட்ட பெண்கள் சம்பந்தப் பட்ட குடும்ப உறுப்பினர்களின் நினைவிலும் கனவிலும் வந்து அவர்களை அலைக்களிப்பதும் அவர்களை ஆற்றுப்படுத்த, அந்த குற்ற உணர்வில் இருந்த விடுபட ஒரு பீடம் அமைத்து, கோயில் கட்டி, அல்லது குடம், செம்புகளில் நீரை நிரப்பி வழிபடுவதும் என காலங்காலமாக தொடர்கிறது. இன்ன காலம் என்று வரையறுக்க முடியாத காலந்தொட்டு கடந்த 20,30 ஆண்டுகளுக்குள் உருவான சாமிகளும் இதில் அடக்கம்.!

“மனிதன் ஒரே ஒரு முறை தான் கடவுளைப் படைத்தான். அன்று முதல் கடவுள் மனிதர்களைப் படைக்கத் தொடங்கினார்.. ” “மனிதன் மிகப் பெரியவன். ஏனெனில் அவன் கடவுளையே படைத்தவன்..” போன்ற வரிகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை.. சாமியைப் படைத்தவன் கூடவே சில நம்பிக்கைகளையும் படைக்கிறான்…

“”அதனால தான் அந்த ஊர்ல ஆலமரம், அரச மரம், பப்பாளி மரம்னு பால் வர்ற மரமே இல்லையாம்..!

அதனால தான் அந்தக் குடும்பத்துல ஆண் வாரிசே இல்லையாம்…!

அதனால தான் அந்த ஊரு மரம் பூ பூத்தாலும் காய் காய்க்கவே செய்யாதாம்…!

அதனால தான் அந்தக் குடும்பத்துல பெண் குழந்தைகள் நிலைக்குறதில்ல..!””

என்ன காரணத்தினால் இறந்தார்களோ அது தொடர்பான சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் மனிதன் உருவாக்கிக் கொள்கிறான் என்று உள்ளூர் உதாரணங்களை சொல்லும் தோழர் ச.தமிழ்ச்செல்வன் கடுமையான வறுமையால், தன் குழந்தைகளுக்கு பாலூட்ட கூட முடியாமல் துன்புற்ற ஜென்னி மார்க்ஸ் வரலாற்றை நினைவூட்டி மார்க்ஸ் கல்லறைக்கு செல்லும் போது ரொட்டித் துண்டு வாங்கிச் செல்வதையும் பொருத்திக் காட்டியுள்ளார். பிடிமண் எடுத்து கோயில் கட்டுவதை சொல்லும் போதே ஜாலியன் வாலாபாக் பிடி மண் எடுத்து வந்து தன் கொள்கையை, அநீதிக்கு எதிரான கோபத்தை தணியாமல் பார்த்துக் கொண்ட பகத்சிங்கை சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர்..

இந்த சாமி உருவாக்கக்கங்களிலும் வழிபாட்டு, நம்பிக்கை, கருத்து உருவாக்கங்களில் அவ்வப்போதைய ஆளும் வர்க்க சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தும் என்பதை எடுத்துச் சொல்லும் தோழர் தமிழ்ச்செல்வன் ஒரு வகையில் இத்தகைய படைப்பு மனம் கொண்ட மக்களை முற்போக்கு தோசை வழியில் கொண்டு செல்லும் தந்திரங்கள் நமக்குத் தெரியவில்லையே என்று ஆதங்கப் படுகிறார்..!

உடன்கட்டை ஏறுதல் என்று காலங்காலமாக சொல்லி வருகிறோம். உண்மையில் அது உடன்கட்டை ஏற்றுதல். எங்கோ வங்கத்தில், வடக்கில் நடந்தது அல்ல.. நம்மூரிலும் காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் ஒன்றும் நியாயவான்கள் அல்ல என்பதை உரத்துச் சொல்கிறார். அதே போல ஆணவக் கொலைகளுக்கு இன்று நேற்றல்ல.. ஆயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு என்கிறார். ஆக, பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்திய சமூகம் இன்று திடீரென்று மாறி விடவில்லை. ஆண்டாண்டு காலமாக தனது சாதிய கட்டுமானத்தாலும் ஆணாதிக்க சிந்தனையாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளால், வார்த்தைகளால், சமூக உளவியலால் கேவலமான இந்த சாதனைக்கு தொடர்ந்து போராடி வந்திருக்கிறது என்பதை அறிய செய்கிறார்.

உன் நாட்டு குடிமகள் என்பதால், உன் மகள் என்பதால், உன் மனைவி என்பதால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?!

பெண் உடல் தான் குடும்ப மானம், குல மானம், சாதி மானம், மத மானம், ஊர் மானம், தேச மானம் எல்லாத்துக்கும் பொறுப்பு.. இது எப்படி சரியாக இருக்கும்..?!

ஏன் எதற்கு என்ற அறிவியல் பார்வை இல்லை. சட்டம், உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.. பிரிக்கவில்லையா பிரிந்து போகலாம்.. பிரச்சினையா நீதி கோரலாம்.. சாவு எப்படி தீர்வாக இருக்க முடியும்..?

தன்னை நிரூபிக்க பெண் தான் வழுக்குப் பாறை ஏற வேண்டுமா? தீக்குளிக்க வேண்டுமா? என்னங்கடா உங்க சட்டம் என்று எகிறி அடிக்கிறார் நூலாசிரியர்..!

ஆணானப்பட்ட அமெரிக்காவிலேயே 45% பேர் இன்னும் பேய்களை நம்புகிறார்கள்..! நாட்டுப்புற தெய்வங்களில் கிட்டத்தட்ட 80% சதவீதமானோர் அகால மரணமடைந்தவர்கள்.. கால் மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள் என ஆங்காங்கே சொல்லப்படும் புள்ளிவிபரங்கள் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைவதாய் உள்ளது.

இன்னமட்டு, பிடிசாதகமா என்பன போன்ற வார்த்தைகளை அப்படியே மக்கள் மொழியில் பயன்படுத்தி இருப்பது ரசிக்கும் படியாக இருக்கிறது..

ஒரே.. ஒரே.. என கூப்பாடு போட்டு எளிய, சிறிய, பன்முகப் பண்பாட்டு கூறுகளை அழித்தொழிக்க பார்க்கிற இந்துத்வ அரசியல் முன்னெடுப்புகளை உள்வாங்கி,
கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் பொருத்தி எதிர்காலத்திற்கு நாம் செய்ய வேண்டியவை குறித்தும் சிந்திக்க வைத்திருக்கிறார்..

ஒரு ஆணாக வெட்கப்படவும் ஒரு ஆணாதிக்க சமூகமாக குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவும் வேண்டும் நாம்..

சவுக்கடி நிச்சயம்..! அவசியம் படிங்க..!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *