அவதூறு அம்புகளின்
முனை முறிக்கும் நூலாயுதம்

– மயிலைபாலு/ நூலாற்றுப்படை

சமூகம், வரலாறு, அரசியல் என்ற தளங்களைத் தொடுகின்ற நூல் என்றாலும் சுமை ஏற்றப்படாத எளிய நடை.

பெரியாரையும் பிராமணர்களையும் இணைத்துப் பார்க்கின்ற – சம காலத்தின் நெருடலான பேசுபொருள் என்றாலும் தெளிவான தரவுகளைக் கொண்டுள்ள நூல் “பெரியார் பிராமணர்களின் எதிரியா?”

இந்த நூலின் ஆசிரியர் சோழ. நாகராஜன்.

பெரியாருக்குப் பல பரிமாணங்கள் உண்டு. அவற்றில் இரண்டு விஷயங் களை மட்டுமே எடுத்துக் கொண்டு, விஷ அம்புகளாகக் கூர்தீட்டி மானுட சிந்தனையில் ஆழப் பதிக்க ஆத்திரம் கொண்டு அலைகிறது சனாதனக் கூட்டம். சில பச்சோந்திகளும் இதற்குத் துணை நிற்கின்றனர்.

அந்த விஷ அம்புகளில் ஒன்று அவர் கடவுள் நிந்தனையாளர் என்பது; மற்றொன்று பார்ப்பன விரோதி என்பது.

இவற்றை மட்டுமே ஊதி ஊதிப் பெரிதாக்கி அவரின் மெய்யான சிந்தனைகள் மறைக்கப்படுகின்றன; இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

அந்த விஷ அம்புகளை முறித்துப் போடுவதற்கான முயற்சிதான் இந்த 118 பக்க சிறு நூல்.

இது முடிந்து போன முடிவோ, தீர்வோ, தீர்ப்போ அல்ல. ஆனாலும் நோக்கத்தால் உயர்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் மூன்று இயல்களை உள்ளடக்கி தெளிவான நீரோடையாகக் கருத்துக்கள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.

பெரியாருக்கு முன் என்ற முதல் இயல் வெகு சுருக்கமாக ஒரு சமூகப் பார்வையை படிப்பவர்களுக்கு ஏற்படுத்த உதவுகிறது. ஒரு சமூகம் எங்கிருந்து எங்கே வந்து நின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும்போது தான் பெரியாரின் தேவையைப் புரிந்து கொள்ள முடியும்.

அலுப்பை ஏற்படுத்தாத ஆனால் சரியான புரிதலைத் தருகிற இந்தப் பகுதி மிக முக்கியமானது. பெரியாரின் காலம் என்ற இரண்டாவது இயல் நூலின் கருப்பொருளை அலசுகிறது.

10 சிறு சிறு தலைப்புகளில் சுருக்கமாகவும் நினைவில் பதிகின்ற வகையிலும் தரவுகளை எடுத்தாண்டிருப்பது பெரியாரின் உணர்வுகளோடு நூலாசிரியர் ஒன்றித் தோய்ந்திருப்பதைக் காட்டுகிறது.

“செய்ய வேண்டும் என்று தோன்றியதை தயங்காமல் செய்யும் தன்மை பெரியாரிடம் (வ.ராமசாமி ஐயங்கார்) காணப்படுவது போல் தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை” என்பது வ.ரா. அவர்களின் வாக்குமூலம்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், “தமிழ்நாட்டின் வருங்காலப் பெரு மைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை, தூதுவன்” என முன்னுணர்ந்து கூறியதும் நூலில் பதிவாகி இருப்பது சிறப்பு.

ராஜாஜி, கல்கி, கவியோகி சுத்தானந்த பாரதியார், எஸ் எஸ் வாசன் என்று பெரியார் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த பிராமண நண்பர்களின் கூற்றுக்கள், மதிப்பீடுகள், நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை முகஸ்துதி அல்ல. இன்னார் இவர் என்று பார்க்காமல் சமூக நன்மைக்காகப் பெரியார் ஆற்றிய அரும் பணிகளுக்கான அங்கீகாரம்.

சின்னக்குத்தூசி என்ற திராவிடவியல் கருத்தாளரான தியாகராஜன் ஊடக நண்பர்களுடன் உரையாடும்போது தனது சிந்தனை வளர்ச்சியில் பெரியாரின் பங்களிப்பை விதந்து பேசுவார்.

பெரியாரை எத்தனை தான் இழித்தும் பழித்தும் பேசினாலும் சாதி முக்கியமல்ல; ஜனத்திரளின் முற்போக்குப் பகுத்தறிவு பயணமே முக்கியம் என்பதை அறிந்து கொள்ள உதவுவது இந்தப் பகுதி: “என்னை சில பிராமணர்கள் வெறுத்து ஏசுகிறார்கள். ஆனால் ஒன்று, சிறுவயதிலேயே கணவனை இழந்தவள் என்பதால் மொட்டை அடிக்கப்பட்டு முக்காடு போடப்பட்டு அமங்கலி என வீட்டிற்குள் மூலையில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் அந்த அக்கிரகாரத்து இளம் விதவைப் பெண்கள் என் பேச்சைக் கேட்டால் என்னைப் போற்றவே செய்வார்கள்.” – வாய்மையே வெல்லும் என்பதில் தான் பெரியாருக்கு எத்தனை நம்பிக்கை!

இது போன்ற நற்கருத்துக்களை நூலில் தெளித்து வைத்திருக்கிறார் சோழ. நாகராஜன்.

“பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்களாலும் இடைவிடாத பிரச்சாரத்தாலும் முதற்கட்டமாகப் பயன்பட்ட பார்ப்பனப் பெண்கள் இந்த உண்மையை வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள். அவர்கள் பெண்ணுரிமை வரலாற்றை வேதத்தில் தொடங்கி பாரதியில் முடித்துக் கொண்டார்கள்” என்ற அருள்மொழி அவர்களின் கசப்பான அனுபவப் பகிர்வை நாம் ஒதுக்கிவிட இயலாது.

காந்தி கொலைசெய்யப்பட்டபோது, அவரைக் கொன்றவன் சித்பவன பிராமணனான நாதுராம் கோட்சே என்பது உறுதியானபோது பார்ப்பனர்களைப் பழிதீர்த்துக் கொள்ள இதுவே தருணம் என்ற எண்ணத்திற்குப் பெரியார் தீனி போட்டிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவும் அச்ச மாக உள்ளது.

பெரியாரைப் பார்ப்பன விரோதி என்று பேசுகின்றவர்களைப் பார்த்து எறியப்படும் கருத்தாயுதங்கள் இவை: “பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்தப் பார்ப்பனரை திட்டிவிடுவதாலோ அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்து விடுவதாலோ எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது” என்று குடிஅரசு இதழில் எழுதி இருக்கும் பெரியார், மதத்தின் பெயரால் உள்ள மூடநம்பிக்கை கருத்துக்களும் சாதியின் பேரால் உள்ள ஆச்சார அனுஷ்டானங்களும் மற்றும் கடவுள் சாஸ்திரம் இவைகள் பேரால் உள்ள அறியாமையிலுந்தான் இந்த மாதிரி காரியத்தைச் செய்யுமாறு அவனைச் செய்து விட்டன” என்று எழுதிவிட்டுத் தொடர்கிறார்.

“நமது சமுதாயம் இனிமேலும் சாந்தியோடு வாழ வேண்டுமானால் மதமற்ற ஒரு புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும்” என்ற சித்தாந்தத் தெளிவால் மக்கள் மனங்களை வென்றார் பெரியார். ஆவேச உணர்ச்சியை அணைத்துத் தணித்தார் பெரியார் என்பதற்கு நூலாசிரியர் அழுத்தம் தந்திருப்பது முக்கிய மானது.

“நீங்கள் நெடுநாளாய்ப் பாரபட்சம் இன்றியும் தாட்சண்யங்களுக்கு உட்படாமலும் ஜீவகாருண்யம் உள்ளவராயும் ஸ்வய நன்மையைக் கருதாமல் லோக நன்மையையே முக்கியமாகக் கருதி சுகதுக்கங்களைப் பாராமல் மானவ மானத்தைக் கவனியாமல் ஜன்மமெடுத்ததற்குப் பரோபகாரமே சாதனமென்று கருதி உங்கள் தர்மபத்தினி சமேதராய் பாடுபட்டு வருவது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கி இருக்கிறது. “ – இது பெரியாரைப் பற்றிய ஒரு கணிப்பு.

இந்த கணிப்புக்குரியவர் யார் என்றால் சிருங்கேரி சங்கராச்சாரியார். எதிராய் நிற்பவர்களும் கூட அவரை மதிக்கிறார்கள் என்றால் அவரிடம் இருந்த கொள்கை நேர்மையும், நியாயச் சிந்தனையும், அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்யும் ஜனநாயகப் பண்பும் தான் காரணமாக இருக்க முடியும். பெரியாரைத் துணைக்கோடல் என்ற மூன்றாவது இயல் நூலின் பேசுபொருளுக்கு முத்தாய்ப்பாக இருக்கிறது.

பிராமணர்களால் நடத்தப்பட்ட யுவ சங்கக் கூட்டத்தில் பெரியார் பேசுகிறார். அதே போல் “பார்ப்பனத் தோழர்களுக்கு” என்று குறிப்பிட்டு ஒரு கட்டுரையும் எழுதுகிறார். இவற்றை வாசிக்க நூலில் தரப்பட்டுள்ள வாய்ப்பு, ஒரு பிரச்சனையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான பாடமாக அமைகிறது.

சாதி ஒழிய வேண்டும், சாதிய ஏற்றத்தாழ்வற்று, எல்லோரும் ஒன்றாகி மனிதர்களாக வேண்டும் எனும் போற்றுதலுக்குரிய ஒப்புயர்வற்ற நோக்கத்தின் மறுபெயரே பெரியார் என்ற, நூலின் முடிப்பு வாசகம் மிக முக்கியமானது.

இந்த முடிவை எட்டுவதற்கு முன்வைக்கப் பட்டுள்ள வாதங்கள் கற்போருக்குக் கை விளக்குகளாக வழிகாட்டுகின்றன.

சாதிப் பெருமையும் மதமாச்சரியமும் கோலோச்சும் காலத்தில் சரியான ஒரு நூலை எழுதியுள்ள சோழ. நாகராஜன் பாராட்டுக்குரியவர்.

-மயிலை பாலு

நூல் : பெரியார் பிராமணர்களின் எதிரியா?
ஆசிரியர் : சோழ.நாகராஜன்
விலை : ரூ.₹ 120/-
பக்கம் : 118
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *