Iyalbin Viduthi Poem By Penniyam Selvakumari இயல்பின் விடுதி கவிதை - பெண்ணியம் செல்வக்குமாரி




அந்தத் தோட்டத்தில்
எந்தப் பிறவிகளின்
நடமாட்டமும் இல்லை
அதனால் எதுவும் கணக்கிலில்லை

அங்கே ஒரு மூதிலை உதிர்கையில்
உயரம் கணக்கிடப்படுவதில்லை
காலம் காற்றாக மாறி அதன் இருப்பைப் பெயர்க்கும் போது
வலியென்பதே இல்லை
பிற இலைகளின் ஆற்றாமையும் அழுகையுந்தான்
அதன் வலி எனக் கணக்கிடப்படுகிறது

இதோ இந்த இளமிலையின் நெருக்கத்தில் பூக்கத்தொடங்கும் பூக்கள்
அவற்றின் விரிப்பில் தேனைத்தேடும் வண்டினங்கள்
எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி
அதுவாகவே வந்து
மெதுவாகவே படர்ந்து
உறிஞ்சி சுவைக்கையில்
காம்பின் காமம் மலையேறிவிடுவது உன்னதமானது என்பதாலும்
எதுவும் அங்குக் கணக்கிலில்லை

காற்றோ கிளைகளோ இலைகளோ கண்டு கொள்வதேயில்லை
நேற்றைய பொழுதில் நடந்த
பூக்களின் விரிப்பின் பேரழகும்
அதன் கூடலும்கூடக் கணக்கிலில்லை

கசங்காத காற்றும்
கலங்காத காலமும்
ஜாலம் செய்கின்ற
முப்பொழுதுகளும் கணக்கிலில்லை

அதனதன் தொழிலில்
அதனதன் விருப்பமே
வாழ்வாக இருக்கிறது

அந்தத் தோட்டத்தில் எந்தப் பிறவிகளின் நடமாட்டமுமில்லை
அது இது என்ற எந்த விருப்பங்களின் நடமாட்டமுமில்லை
எந்தச் சடங்குகளின் நடமாட்டமுமில்லை
எந்த அதிகாரத்தின் நடமாட்டமுமில்லை
எனவே எதுவும் அங்கு கணக்கிலில்லை

இது கனவாகக்கூட இருந்து தொலைக்கட்டும்
இதைத்தானே நீயும்நானும்
ஏக்கமுறுவது?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *